Saturday, December 31, 2011

நிறைவேறாத காதல்

நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண்முகில் தாவிவந்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலாவில் தேடினேன்

கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
அன்பில் அளிக்கவென்றே
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
மின்னிய வெண்ணொளியில் - அங்கே
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
துள்ளிக் கடந்து சென்றேன்

மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது
கையள்ளி நீர்தெளித்தேன்
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்
சேரமுடிய வில்லை

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - அட
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா
ஒன்றிட ஒட்டிவைத்தேன்

ஆனவகையினில் ஆகாதவேலைகள்
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென
ஏதும் புரிவ தல்லேன்
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்
தேடியலைந்து சென்றேன் - ஆயின
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை
வேடிக்கை காணாநின்றேன்

கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்
கன்னம் பழமெனவும் அவள்
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி
வேதனை பார்வைதரும்
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்
ஏனோ மனதிற் கொண்டாள் - இள
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்
வந்து அணைப்ப தெப்போ?

சிறப்பொடு வாழ்வோம்

தெரிவதும் புரிவதும் உலகோ - இல்லை
தெளிவிலை எனச்சுழல் கொளுதோ
அரியதும் அழகதும் உலகோ - இல்லை
அதனிடை பெருமிருள் வருதோ
சரியதும் பிழையதும் எதுவோ - அது
சரிநிகர் வாழ்வினில் உளதோ
எரிமலை கொளும்பெரும் பிளவோ அது
எதில்மன மிடைதனும் எழுதோ

பிறப்பதும் வாழ்வெனும் பொழுதில் - பல
பிழைகளும் பிறப்பது எதனால்?
இறப்பது எனவர முன்னே - பல
இருப்பவை அழிப்பதும் எதனால்?
சிறப்பென வாழ்ந்திட எண்ணும் - மனம்
சிரிப்பினில் இகழ்வதும் எதனால்?
நிறப்பது சிவப்பென உணர்வே - பயன்
நிரப்பிட வெறுப்பெனும் முடிவே!

தரித்திட மணிமுடி வேண்டாம் - ஒரு
தரமற்ற பெயர்தனும் வேண்டாம்
உரித்தது இவர்மனம் பொன்னோ - இலை
உருப்படி யிலைக்களி மண்ணோ
சரித்திரம் படைப்பது மிவனோ - அல்ல
சரிதிறன் உருவழித் திடவோ
விரியுல கதிலிவை வேண்டாம் - ஒரு
யியல்புறு நடுநிலை போதும்

கறந்திடும் பால்ஒரு போதும் - மடி
கொளத்திரும் பிடுசெய லில்லை
உறங்கிடும் மனம்ஒரு போதும் - ஒளி
உதயமும் கொளுமென இல்லை
மறந்தொரு தவறதும் செய்யா - உன்
மனதினில் கவனமும் கொள்ளு
இறந்திடும் நிகழ்எதிர் காலம் -இவை
இனித்திட உயர்வழி செல்லு

பறந்திடும் சிறிதொரு பறவை -அது
பார்த்திடு முலகதைப் போலே
துறவெனக் காண்மன துள்ளே - நீ
தொலைவினில் பறந்திடல் போலே
நிறமொடு வாழ்ந்திடு ஆனால் - நின்
நினைவது வெளுத்திடு மேலாய்
அறந்தனில் அக்கறை கொள்ளு - இதை
அறிந்திந்த உலகினை வெல்லு !

Friday, December 30, 2011

வேண்டாம் உலக வாழ்வு!

சிலையாகக் கல்லாகச் செங்கதிர் ஒளியாகச்
சிவந்ததோர் மாலைவிண்ணின்
அலையும்வெண் முகிலாக அதனூடு மதியாக
அடங்காத திமிரெடுத்த
மலையாகக் குயிலாக மரம்மீது துணைகூடும்
மகிழ்வான குருவியாக
இலைபூவைத் தழுமோர் இளந்தென்றற் காற்றாக
எம்மையும் படைக்காத தேன்?

நிலையாக ஒர்நேரில் நிற்கின்ற மரமாக,
நில்லாமற் தடம்புரண்டு
அலைந்தோடும் காட்டாற்று அருவியாய் அதுசேரும்
ஆழியென் றாக்கலின்றி
தொலையாத துயரோடு தோன்றிடும் பிணியாலே
தூரமென் றின்பங்கொண்டு
கொலைபாதகர் கையின் கொடும்வாளில் உயிர்போகும்
கோலமும் ஏன் படைத்தாய்?

குலையான கனியாக கூடிடும்கொத்தான
குறுவாழ்வு மலர்கள்போலும்
தலைசாய வீழ்ந்துமண் தழுவுநெற் கதிராக
தன்மானங் கூனலிட்டு
இலையென்ற துன்பங்கள் எதிர்வந்து மனதோடு
இழையவும் தளதளத்து
புலையுண்டு மதிகெட்டு பிறழ்கின்ற வாழ்வாகப்
பிறவியுந் தந்ததேனோ?

கிளை தூங்கு சிறுமந்தி யெனஓடி வீழ்ந்துமோர்
கீழ்மையில் சிந்தைவாட
வளைகின்ற முதுமையோ வாவென்று கூறிமேல்
வானத்தின் திசைகாட்டிட
நுளைகின்ற காற்றாலே நுண்துளைக் குழலூதும்
நேரிலே உடலூதியும்
விளைகின்ற உயிர்க்காற்று விதிகொள்ள வீழுமிவ்
வெற்றுடல் தந்ததேனோ?

மழைகொண்ட வான்மீதில் மறுகோடி உறையுமென்
மாதேவி சக்திதாயே !
பிழைகொண்ட வாழ்வீது பேர்மட்டு முயர்வான
பிறவியாம் மனிதமென்றே
துளைகொண்ட மேனியுந் துடிக்கின்ற வேளைகள்
துஞ்சிடுந் நெஞ்சம் வைத்து
விளைகின்ற மேனியில் விஷம் வைத்து மீந்தனை
வேண்டா மிவ்வுலக வாழ்வு!

Saturday, November 26, 2011

கல்லறையில் பூத்தது மலர்

வளையும் விதமேஅறியா துணிவாய் வீர்ம்கொண்டு
விதைகள் என்றே புவியில் போனாய் வீரர் அண்ணா
மழலைசிறுவர் நாமோ இறைவன் மறதிக் கிரையாய்
முதுகில் பாவச் சுமையை ஏற்றி மண்ணில் வந்தோம்
விளையும்பயிரும் மழையில்நின்றால் வளரும் உயரும்
வசந்தம் வீசும் வயலில் கதிரும் வளைந்தேஆடும்
முளையில் பயிரைபோலே நின்றோம் மேகக் கூட்டம்
முழுதும் குண்டைச் சிதறிக்கொட்ட வாழ்வைக் கண்டோம்

அழவே இல்லை அண்ணா நாங்கள் அழவேயில்லை
அழுதால் கண்ணீர ஊற்றும் விழியுள் எதுவும் இல்லை
தொழவே இல்லை இறைவன் நாமம் சொலவேயில்லை
தொழுதால் கருணை தருமோர் தெய்வம் அதுவும் இல்லை
விழவே இல்லை என்றும் நாங்கள் விழவேயில்லை
வெறுமை வெளியில் கிடந்தோம் விழவோர் இடமும் இல்லை
எழவேஇல்லை இடரைக்கண்டும் எழவேயில்லை
எழுந்தால் விடியும் ஆனால் துணையாய் எவரும் இல்லை

செழுமை மலர்கள் பூக்கும் சிரிக்கும் சிறப்பேகொள்ளும்
சிவக்கும் அடிவான் கதிரைக் கண்டு சிந்தும் எழிலும்
அழுகை ஒன்றே எங்கள் இதயத் தகமே கொள்ளும்
அழலில் இதயம் எரியும் அங்கே இருளே கவ்வும்
மெழுகும் தீயில் எரியும் உருகி முடிவில் அழியும்
மெதுவாய் பரவும் மௌனம் போலெம் மனதும் உடலும்
வழுகித் தென்றல் வானில் முகிலை உரசித் தள்ளும்
வாழ்வில் துன்பம் எம்மைத் தள்ளி உயிரைக் கொல்லும்

உலகில் கண்ணை மூடிகொண்டு உறங்கும் அண்ணா!
உன்னை நெஞ்சில் எண்ணப் பொங்கும் உணர்வுமேனோ?
நிலமும் மீட்க நின்றீர் நெஞ்சில் கனலைக் கொண்டு
நிமிரும் உடலில் புதிதோர் இனிதாம் உணர்வைக் கொண்டு
மலரின் வாசம், மதியின் குளுமை, மயக்கும் தென்றல்,
மன்னன் புகழும், மலையின் திடமும் மற்றும் எதுவோ
பலதும் உணரும் தன்மை உண்டாம் சுதந்திரத்தின்
பக்கம்நிற்போர் கென்றும் வாழ்வில் பயமே இலையாம்

எதுதான் பார்க்கும் ஆசைகொண்டேன் எடுத்துச்சொல்லும்
எதுவோ பாதை ஏறிச்செல்வேன் இடையில் ஏதும்
புதுமை உண்டோ பொன்னாய் வீசும் ஒளியும்தெரியும்
போயே இருளும் விடுமென்றார்கள் பொய்யோ சொல்லாய்
இதுதான் மண்ணின் சுதந்திரம் என்றினிதாய்வீசும்
எழிலா எங்கள் உரிமை என்னும் மலர்கள் வாசம்
பொதுவாய் காணும் வாழ்வில் புகுமோர் வழியைச் சொல்லும்
எதுவுமின்றி மெழுகாய் நாமும் அழியும் முன்னே

வீரம் வேண்டிடுவோம்

வானிருந்து பூமழைதான் தூவாதோ - மைந்தர்
வாழுமுள்ள மெங்குமொளி மின்னாதோ
மேனியெங்கும் புத்துணர்வு பொங்காதோ - கண்கள்
மின்னி யொரு வெஞ்சபதம் கொள்ளாதோ
தேனின்நிலா வான்நடந்து வந்ததென - மைந்தர்
தோன்றி எம்மில் ஒளி கொடுக்க மாட்டாரோ?
தானிருந்த மண்ணை நெஞ்சும் எண்ணாதோ - மனத்
தாகம் கொள் சுதந்திரத்தை தேடாதோ

பூங்கதவு தாள் திறந்து கொள்ளாதோ - ஒரு
பூகம்பமே தோன்றி நிலம் பிரியாதோ
தாங்கும் உரத்தோள் வலித்த மைந்தர்களும் - அவர்
தாளுடைத்து தடபடென்று வாராரோ
வேங்கையொன்று சீறி யங்கு பாயாதோ - தமிழ்
விம்மியழும் வேதனையும் தீராதோ
நீங்குதடா துன்பமென்று பாடோமோ?- உயர்
நீதிகாண ராஜநடை போடாரோ?

மானிருந்து துள்ளுவதாய் மருள்விழிகள் - கொண்ட
மாதர்களும் வீறுநடை கொள்ளாரோ?
தேனிருந்த பூக்கள்தீயும் கொட்டியதாய் - இத்
தேசம் கண்ட வீரம் மீண்டும் கொள்வாரோ?
ஏனிருந்த சேனைபடை முற்றழிய - மனம்
ஏங்கியழ இன்னல் வந்து வீழ்ந்ததுவோ?
கூனியெங்கள் குலம்விழுந்து போனதென்ன - எம்
கொள்கை சொல்லும் நாவழிந்த ஏதுவென்ன?

கோனிழந்து குடியிழந்து காணுகிறோம் - கொடும்
கோடையிடி மின்னல் பட்டுச் சாகுகிறோம்
நானிலமும் நீதிசாக விட்டதுமேன் - அதை
நாடு யாவும் சேர்ந்துமூடி வைத்ததுமேன்?
தானைபடைத் தலைவன் நெஞ்சிற் கொண்டதுமாம் - அத்
தாகம் தன்னை நாம் மறந்து போவதுவோ
ஏனய்யா இச்சோக மெங்க ளோடு இன்னும் - நாமும்
ஏங்கி ஏங்கிச் சாதல் இனி நிற்பதெப்போ ?

தூய வீரம் துணிவுதனை எங்கு விட்டோம் - இல்லை
சொந்தபுத்தி மானம் நேர்மை தவறவிட்டோம்
காயமின்னும் மாறவில்லை நோவெடுத்தோம் - இன்று
கத்திகொண்டு புண்ணில் கீறிக்கத்துகிறோம்
சாயம்தன்னும் தான்வெளுத்து போகமுன்பு - நாம்
சரித்திரத்தின் புருசர்களைச் சற்று எண்ணி
பாயும் வேங்கை யாக வில்லை பாதிதனும் - அதில்
பாதியிலும் பாதிதனும் பாய்ந்திடடா!

பச்சை வளம் பொங்கிய நல்லூர்க ளெல்லாம் - நற்
பனிபடர்ந்த புல்வளர்ந்த பூமியெல்லாம்
மிச்சமின்றித் தன்னுடமைத் தேசமென - அவன்
மெல்லமெல்ல உள்நுழைந்து கொள்ளுகிறான்
அச்சமின்றி நாமிருப்ப தாகுவதோ - ஓர்
அடிமையென்று காலமெலாம் வாழுவதோ
துச்சமென்று உயிர்விடுத்த தோழர்கள்பார் - சிறு
தூயமலர் சாத்தி வீரம் வேண்டிடுவோம்.

Thursday, November 24, 2011

தமிழர் மறம்

கடுமற முடனும் திடமெடு மனமும்
கல்லெனும் தோளுரமும்
விடுஎன அதிரும் விளைவொடு திமிறும்
வீங்கிய திடமார்பும்
கொடுமை கண்டுழற குமுறிடும் மனமும்
கூழென தீ பாயும்
சுடுஎரி மலையின் சொரிகனல் சினமும்
சூழ்வலி மைந்தர்களே!

கொடுமை செய்படையும் கூடியபோரும்
கொன்றுநம் மினமழிய்
எடுகரமீதில் இதையெனக் கொண்டு
இயல்பொடு தலைநிமிர
நெடுமுள தாகத் தமிழினில் மோகம்
நிறைதலை வரும் இவரை
தடு எனவிழியில் ஒருஇமைஅசைய
தடபுட லென மைந்தர்

கிடுகிடு எனவே களமிடை புகவும்
பொடிபடும் பகைவர்களே
நடுவினில் பகையின் வளைபெருவியூகம்
நொறுங்கிட உடைமறவர்
தொடு விரிவானின் சுடர்தரும் ஒளியும்
அதைவிடப் பெரிதெனவும்
எடுமறவீரன் எம்துடை தலைவன்
இயம்பிட வினைமுடிப்பர்

வடுவிலதமது வஞ்சியர் மேனி
வளமொடு உயிர் காப்போன்
கெடுஎனக் குதறும கீழ்மகன் சிங்கம்
தொடும்விலை உயிரெனவே
சடுகுடு ஆட்டம் புலியுடன் ஆடும்
எனமகிழ் வொடுஆடும்
கொடுமையை நீக்க குழுமியமைந்தர்
கொண்டபுகழ் கடலே

குடிபல கொல்லும் கொடியவ னரசும்
கொலையிடும் விலங்கினமும்
அடிதடிப் படையென் றொருதிரு நாமம்
இடுஎன ஈந்தணியாய்
பிடிஎவன் தமிழன் பிரிஅவ னுயிரை
பிணமெனப் புதையெனவே
கொடிதிவர் உலகை கூட்டியே எம்மை
கொன்றது இழிசெயலால்

படைவர மைந்தர் களமிடைபுகவும்
கிடுகிடு எனவெடியும்
குடைசரிந் துடையும் அரசுடை
வளவும் குழுமிய எதிரிகளும்
தொடையது நடுங்கி தொகையென வீழும்
துணைப்படை வகைஎண்ணி
உடை விழ ஓடும் பகைவரென்றாகும்
நிகழ்வினைச் சொலவழகே

Sunday, November 20, 2011

செயல்பட ஒன்று சேர்வோம்

வேலைப் பிடித்தவர் சாமிமுருகனை
வேண்டும்வரை தொழுவோம் - அவர்
காலைப்பிடித்திரு கண்களில் ஒற்றியே
காத்திட வா எழுவோம்
ஓலை பிடித்துநற் கூறும் தமிழ்மக்கள்
ஊரைப் பிடிப்பவனை - அவர்
வேலை விடுத்திட வீடு நடந்திட
வேண்டிய தாற்றிடுவோம்

கூலி கொடுத்திடக் கூடிநின் றாடித் தன்
கொள்கை பிழைத்தவரை - இனி
வேலி அமைத்தவர் வேறுபுறந்தன்னில்
வீற்றிரு என்றிடுவோம்
தோலில் சுரத்தினில் சத்துமில்லா தவர்
சுற்றி யிருக்கவைத்து - அவர்
போலி கணக்கதும் போடும்விடைகளும்
பொய்யெனக் காட்டிடுவோம்

வாடி இருப்பது நாமுமல்ல எங்கள்
வாழ்வுமல்ல எழுவோம் - இனிக்
கோடிஎனப்பல கூடிக்குரல்தந்து
கோவிலமைத் திடுவோம்
நாடித் தமிழன்னை நாற்புறம் காத்ததில்
நாட்டை வளர்த்திடுவோம் - அவர்
தேடித் திரிந்துநல் லுள்ளமெடுத்திடின்
தீங்கில்லை சேர்த்திடுவோம்

வீதிதனில் நின்று வேடிக்கை பார்த்திடும்
வேலையினி விடுவோம் - அவன்
கோதி உயிர்தன்னை கொன்று உடல்வெட்டக்
கூடிஎழுந் திடுவோம்
பாதிமனத்துடன் பையப்பைய நடை
போட்டு நகர்ந்திடிலோ - எங்கள்
நீதி நிலைத்திடும் நிம்மதி காத்திடும்
நேரம்தனை இழப்போம்

கோடிஎனக் காசு கொட்டிக் கொடுத்தாலும்
கொல்லும் உயிர்திரும்பா - அதை
தேடிநடந்தொரு ஏழு லகம் போயும்
எங்கும் பெறமுடியா
வாடி நிற்கும் பெண்ணே வாழ்வுமுழுவதும்
ஊதும்புகை அடுப்பின் - அயல்
கூடிக்கிடந்தது போதும்இனித் தமிழ்
கொள்கை தனைச் விளக்கு

சாடிப் பகைவரின் தந்திரம் சொல்லிடு
சாத்திரம் தானுரைத்து - இனி
ஓடிபிழைப்பது ஓர்வழி என்றவர்
ஊரை விட்டு அனுப்பு
பேடி இனத்தவர் பித்தரும் பொய்மையின்
பேரரும் காவலர்கள் - அவர்
தேடித்திரிவது தெற்கில் இருக்குது
திக்கினைக் காட்டிவிடு

Saturday, November 12, 2011

பூவும் வாழ்வும்

தேன்விழுந்த இலையொன்று தித்திப்பைக்கண்டது
தேடியப் பூவைக் கண்டு
வான் பார்த்தகண்களும் வடிவோடு கர்வமும்
வைத்தாயே அன்புமலரே
ஏன் கொண்டுவாசமும் இனிக்கின்ற தேனையும்
இதழ்மீது சுமந்து நின்றாய்
தான்கொண்ட செய்கையால் தாவுமவ் வண்டோடு
தரைவீழும் வாழ்வுகொண்டாய்

நானிங்கு நிற்பதோ நாள்வாரம் மாதமாம்
நலங்கொண்டு வாழும்போது
தேனிங்கு கொண்டதால் தென்றலுந் திறங்கூற
திகழ்கின்ற மேனியழகால்
தானிங்கு நாளொன்றில் தன்மையைஇழந்தாடி
தவித்துநீ வீழ்தலேனோ
வீணிங்கு வாழ்வினை விதிகையில் தந்ததேன்
விடு உந்தன் முறைமை என்றாள்

”ஒர்நாளென் றாயினும் ஒங்கு புகழென்பது
ஒருகோடி இன்பமாகும்
வேர்போலும் மறைந்திங்கே வெளிகாணா வாழ்வது
வியப்பென்று நகைத்துநின்றாள்
பேர்கொண்டு திசையெங்கும் பிறர்பேச வாழ்வது
பெரிதான போதையாகும்
ஊர்கொண்ட கோவிலில் உள்ளதோர் இறையடி
தோள் சேர்த்தல் நாமேயென்றாள்

இலையாக இருந்தென்ன, இல்லையென வாழ்வது
எவருக்கு வாழ்வுவேண்டும்
கலைகூறு நற்கவி கவிஞரும் போற்றுவர்
காணின்ப மலர்களாகும்
விலைகூறி விற்பவர் இலைதன்னைக் கொள்வரோ
இவர் வேண்டல் பூவையாகும்
இருந்தென்ன வேர்போலும் இருள்கண்டு வாழுதல்
எவருக்கு இன்னும்வேண்டும்”

”ஆனாலும் அழகிகேள், அருந்திடத் தேனையும்
எழில் கொஞ்சு மிதழும் வைத்தாய்
போனாலும் திசையெங்கும் புகழ்மாலை சூடுவாய்
பெயர்தந்து எமையேற்றினாய்
தேனாலும் வாசமும் தேகமென் பாங்கிலும்
திகழ்ந்தாலும் ஒன்று தெரிவாய்
நானாலு இலைகளும் நல்வேருமில்லையேல்
நீவாழ என்ன செய்வாய்

ஆதார மென்றுநம் அகம்மீது பொறுமையென்
றணிகொண்டு வாழுகின்றோம்
நீதாங்கும் தேனையும் நிமிர்ந்ததோர் வாழ்வுக்கு
நீர்கொண்டு ஊட்டுகின்றோம்
வேர்தாங்க வில்லையேல் விழிக்காண அழகினை
விரிகின்ற மலர் கொள்ளுமோ?
தீதாங்கு மாதவன் ஒளிவாங்கி உயிர்காத்தல்
தேவைநம் கடமையன்றோ?”

Wednesday, November 9, 2011

அன்பும் வாழ்வும்

வெள்ளை மலர்கள் வீசுந்தென்றல் விடியுங் காலைகளும்
உள்ளம் எங்கும் உண்மையன்பும்  உலகின்கண் செய்தாள்
தெள்ளத் தெளியும் நீரோடைநற் தேனாம் கனிமரங்கள்
அள்ளித் தூவும் மலர்கள் காட்டின் அமைதி அவள் செய்தாள்

துள்ளித் திரியும் மானின்ஓசை, தூங்கும் இலைதொட்டே
தள்ளும் தென்றற் காற்றின் சத்தம் தந்தே எழில் செய்தாள்
வெள்ளிக் கொலுசாய், விரையும் நதியில் விளையும் சிறுஓசை
கொள்ளை யின்பம் யார்தான் செய்தார் கோலத்திருமகளே

பள்ளித் திண்ணை குருவும் பாடம் பயிலப் பலநூல்கள்
கொள்ளத் திறனும் அறிவும் கொண்ட குணமும் குறுமுகமும்
துள்ளித்திரியும் இளமை இன்பம் தேடும் இரு விழிகள்
வெள்ளிச் சுடரும் விண்ணும்வெளியில் வியக்கும்வகை செய்தாள்

சுற்றுமுலகும் சூழும் அண்டம் சூரிய மண்டலமும்
கற்றும் அறியாக் கற்பனைக் கெட்டாக் காலச் சக்கரமும்
மற்றும் மனமும் மனதில்விரியும், மாபெரும்கற்பனையும்
சற்றும் அறியோம் சக்திஎன்றோர் சக்திதான் செய்தாள்

குற்றம், கொல்லுங் குணமும்,  குருவி, கொள்ளப் பருந்தினையும்
வற்றும் குளமாய் வாழ்வும் வற்ற, வாடும் மீன்களென
முற்றும்பாசம் அற்றோ ரும் மவர்மௌனப் பெருமூச்சும்
அற்றோர் ஏங்கும் அவலங்களென்  றகிலம்கொள வைத்தாள்

 விற்றும் வாங்கும் பொருளேயல்ல விளையும் பெருஅன்பு
கற்றுப்பெறுதல், கடனோ அல்லக் கருணை எனும் வெள்ளம்
தொற்றும் நோயாய்ப் பரவி எங்கும் தோற்றம் கொள்வதில்லை
பற்றும் பாசம் படைப்பில் அவளே பார்த்துத் தரவேண்டும்



அன்பே இல்லா உள்ளம் தன்னை அவளே செய்தாளோ
தென்றல் சீறிப் புயலாய் மாறச் சித்தம் கொண்டாளோ
நன்பெய் மழையும் நல்லோர் பயிரும் நாட்டில் வளர்வித்தாள்
வன்மைகொtண்டோர் விலங்கைச் செய்து வாழ்வும் அழித்தாளேன்

மலையும் மழையும்

மதிநின்று விளையாடும் மலைமீதுதொடுமேகம்
மழை கொண்டு நீர்தூவுமாம்
புதிதென்ற மலைவாழை இலைதள்ள அழகான
பசுஞ்சோலை கதிர் கொள்ளுமாம்
முதிதான வளர்நீள மரம்மீது குயில்பாட
மலர்க்கூட்டம் இதழ் பூக்குமாம்
குதித்தோடிக் கிளைதூங்கி கருமந்தி மரந்தாவ
குளிர்நீரும் பூத் தூவுமாம்

அழியாத கலையோடு பெருங்கோவில் அமைந்தொன்று
அழகோடு உயர்ந்தோங்கவே
வழிமீது நடுவானில் வரும்மேகம் இடைநின்று
விடு என்று அதை மோதுமாம்
விழி காணா குளிர்காற்று வெண் பஞ்சு உடல்நீவ
வளைந்தோடி முகில் ஓடவே
எழிலான இவைநூறில் எது தானும் அழகென்று
இவன்சொல்ல இறைதேவியே

மழைவந்து நிலம்மீது உறவாடும் மணல்சேர
மண்வாசம் எழும், கண்டுமே
நுழைந்தோடு பூங்காற்று அதை யள்ளி மணம்வீசி
நனைபூவை மறந்தோடுமே
வளைந்தாடும் கொடிபூத்த வகையான மலர்த்தேனில்
விழும் தூறல் கலந்தோடவே
அழைந்தின்ப மதுஉண்ணும் இளந்தும்பி சுவையின்றி
அருந்தாம லெழுந்தோடுமே

குழல்மீது மலர்கொண்ட குறும்பார்வை தனிலன்பு
கொள்நங்கை தனை ஆடவன்
சுழல்அம்பு விழிகண்டு சிந்தும்புன் னகைபோலும்
சுடர்தானும் புவிமாதினை
மழை நின்ற பெருவானில் கருமேகமிடையாலே
மறைந்தங்கு ஒளிசிந்தவும்
மழைபோகச் சிறு தூறல் தனில்ஏழு நிறமோடி
இதுவாழ்வு உமதென்குமே

பிழையான குரு, பாடம் பயிலாத சிறுபாலன்
படுகின்ற துயராகவே
பழக்காத ஒருமாடு நடுவீதி தடுமாறிப்
பிரம்பாலே வெருண்டோடுமே
முழவோடு சிறுநாத மிசைபாடிஒருகூட்டம்
மெதுவாக நடைகொள்வதும்
அழகோடி எமதான மலைகூடும் சிறுஊரில்
அருங்காட்சி தினம் தோறுமே

Friday, November 4, 2011

உன்னை நீயறிவாய் !

பொன்நகை யன்றிப் புன்னகை கொள்வாய்
போகும் பாதையிலே
பன்நகை கண்டும் பதறா துந்தன்
பாதை நீ தெளிவாய்
சின்னகை கொண்டு செல்லப்பிள்ளை
சீண்டும் போதினிலே
என்னது செய்வாய் அதுபோலின்பம்
ஏற்றே சிரித் திடுவாய்

காடும் நாடும் ஒன்றே யறிவாய்
காட்டின் விலங்கினமும்
கூடும் எண்ணம் கொள்ளும் மனிதர்
கூட்டம் காண்பாயே
தேடும் அன்பும் தீமைகொள்ளாத்
தெய்வம்போல் மனிதம்
ஊடும் உள்ளார் உண்மையறிவாய்
உன்னைக் காப்பாயே

பொய்யும் கண்பாய் பொய்மை கொண்டே
புரளும் உலகறிவாய்
எய்யும் அம்பாய் இன்னல் செய்யும்
எதையும் எதிர் கொள்வாய்
மெய்யில் தீரம்கொண்டே என்றும்
மனதில் துணிவாகி
செய்யும் செயலில் சிந்தைவைத்து
சிதறா நிறைவு செய்வாய்

மாறும் உலகில் மாற்றம் என்பது
மாறாவிதி காணாய்
மாறும்போதில் மற்றோர் உயிரை
மதிக்கும் விதி கொள்வாய்
ஊறும் ஒருவர்க் கில்லா மாற்றம்
உலகில் சரியென்றே
யாரும் சிரித்தால் நீயும் சேர்ந்து
சிரிப்பாய் சினம் விடுவாய்

மூடும் முகிலும் கூடும் இருளும்
மௌனச் சதிவலைகள்
போடும் இடியும் புயலும்சேரும்
புனலும் இழுவெள்ளம்
பாடும் பசியும் பிணியும்பலதும்
பார்த்தும் பதறாமல்
வாடும் உள்ளம் இன்றி நல்லோர்
வழியைக் கண்டிடுவாய்

விண்ணில் காணும்நட்சத்திரங்கள்
எண்ணிக் கைபோலும்
மண்ணில் காணும் விந்தைமனிதர்
மனமும் பலதாகும்
எண்ணிப்பார்த்தால் இவரின் சொல்லோ
இதழில் புன்னகையாய்
கண்ணைச் சிமிட்டும் கருமைஎண்ணம்
காணும் உளமிருக்கும்

இன்னோர் உயிரை இகழல்செய்யா
இயற்கையென மதிப்பாய்
தன்னோர் எண்ணம் தனதோர்முறைமை
தவறில்லைக் கொள்வாய்
நன்நேர் வாழ்வை கொள்வாய் நாளும்
நலனே எண்ணிடுவாய்
மின்னேர் ஒளியாய் மிளிர்வாய் உலகில்
மேன்மை கண்டிடுவாய்

Monday, October 31, 2011

சிலந்தியும் நாமும்

பாட்டெதற்குப் பாடியே பரமனவர் பட்டதனை
பாவிநான் மறக்கலாகுமோ -இன்னும்
போட்டுடைத்து ஆடிப்பெரும் பூமியில் புயலடிக்க
பூமலர்கள் தூவலாகுமோ
ஏ(ட்)டெதற்கு என்றெழுதி இதயம் கனத்துவிட
இன்னமும்  எழுதல் என்னவோ -நாளும்
நீட்டியொரு பாய்விரித்தும் நிமிர்ந்து படுத்துமனம்
நிம்மதியைக் காணலாகுமோ

நாடெதற்கு நல்லவர்கள் அற்றவர் அரசுகொள்ள
நானெதற்கு என்னலாவதேன் - உந்தன்
வீடெதற்கு என்றவனோ வெட்டியும் விறகெரிக்க
விட்டுமோடிச் செல்லலாகுமோ
ஆடவரக் காலுடைத்து அழகென்று சொல்பவரை
ஆளும் திறன் என்னலாகுமோ -இன்னும்
வேடமிட்டு சூழ்ந்துவந்து வேதனை விளைப்பவனை
வேடிக்கையென் றெண்ணலாகுமோ

தோலுரித்து வெய்யிலில் துடிக்க விரிப்பவனைத்
தோழனென்று கொள்ளலாகுமோ -அவர்
நாலுபேரைத் தூக்கவிட்டு நடுவில் படுக்கவைக்க
நாமும்சரி என்னலாவதோ
வாலிருக்க தீயைவைத்து வந்திருந்த தூதனையும்
வேடிக்கை புரிந்தவரல்லோ -அன்று
காலிருக்க ஒடியவன் கனத்த அனல்எரித்துக்
கண்டநிலம் தீயுதாமின்றோ

வேலிருக்க என்னபயம் வென்றுவிடு என்றவனும்
வீதியிலே நிற்கலாகுமோ - ஒரு
கோலிருக்கு ஆளுங்குடை கொண்டிருக்கு என்றவுடன்
கோவிலும் பறிக்கலாவதோ
ஆலிருக்கு தோரரசும் அங்கிருக்கு என்றவுடன்
அந்த இடம் சொந்தாமாகுமோ -இங்கு
வேலிருக்கு வேம்புடனே விளைந்த நிலமிருக்க
வீற்றிருக்க வந்தாராம் ஏனோ

கூழிருக்கு சோறுகஞ்சி குடித்துப் படுத்தமண்ணை
கூலிபெற்று விற்கலாகுமோ - கொண்ட
தோளிருக்கு உள்ளம் இன்னும் துடித்து உணர்விருக்க
தூங்கவென்று செல்லலாவதோ
ஆளிருத்தி வாழ்வழித்து அவலமிடப் பொறுக்க
ஆக இன்னும் ஏழையாவதோ - இன்னும்
நாளிருக்கு நமக்கில்லை நாமிருப்ப தூரமென
நாஒறுக்க ஊமையாவதோ

ஏழிருக்கு ஏழரையில் ஏறியேசனியிருக்க
எல்லாம்விதி என்று சொல்வதோ -அட
ஊழிருக்கு செய்தவினை உற்றழியகாலமிது
ஒன்றும்பயன் இல்லையென்பதோ
நூலுடன் சிலந்திவலை நாலுதரம் வீழ்ந்தெழுந்து
நெய்தகதை நீபடித்தையோ -அது
போலிருக்கு பூமிதனில் புன்மைதரும்வாழ்வு நீயும்
போயெழுந்து வாழ்வு கொள்வையோ

மனம்( மாறாத சோகம்)

நீராழி மீதிலே அலைகள் ஆடும்
. நினைவோடு போனவை நின்றுகாணும்
பேரோடு சொந்தங்கள் பின்னால் வரும்
. புகழோடு வரவுகள் புதிதுசேரும்
தேரோடத் தெய்வமும் தீந்தமிழ்சொல்
. தமிழோடு மனம்சேர்ந்து ஆடவைத்தே
நீரோட விழிமீது வழியுஞ் செய்தாய்
. நெஞ்சிலே தீயாக நினைவு வைத்தாய்

மானாடும் மயிலாடும் மதுவில்நின்று
. மலர்மீது வண்டாடும் மகிழ்வில்என்றும்
வானோடும் கதிரேறும் வண்ண நிலவு
. வந்தோடும் பூங்காற்று வசந்தமென்று
தானோடும் மனமீதில் எண்ணமென்று
. தனியாக அதுவோடிச் செய்யுகோலம்
நானோடி சொல்வதோ யாருக்கென்று
. நடுநீரில் மீன் நின்று அழுவதென்று

பூவிரியும் புதிதாகப் பிறந்த வேளை
. புள்ளினமும் ஆர்ப்பரித் தெழுந்த காலை
தீவிரியும் கதிரோடு தினகரன்தான்
. தேய்நிலவை தள்ளியத் திசையுங் கொள்ள
காவிரியின் அலையாகக் கலகலத்து
. காற்றுமிளங் காலையில் இதயம் மீது
நீவியொரு இன்பமதை ஊட்டுமாமோ
. நீர்விழியில் கொண்டதனைக் கூட்டுமாமோ

பசும்வெளியில் புல்லாக பச்சை வண்ணம்
. பழந்தூங்கு சோலைகளும் பாரில்வைத்தான்
விசும்பியழ மனமொன்றை உள்ளேவைத்து
. விதியோடு உறவுவென்று கூட்டி வைத்தான்
பிசுசிசுத் துழலென்று செய்தான் காலம்
. பிழைத்துவிடப் பொல்லாப்புப் புரிந்துநின்றான்
நசுங்கமனம் பூவாக மனதைச் செய்து
. நடமாடும் நிழலாக நலிவை வைத்தான்

எழிலோடு பிறக்கின்ற இரவின் முடிவு
. எழுந்தாடும் அலைகொண்ட கடலின் உயர்வு
வழிமீது சொரிகின்ற மலர்கள் மென்மை
. வானேறிக் காண்கின்ற சொர்க்கம் யாவும்
பொழிகின்ற மழைகொண்ட சாரல்தூவும்
. புனல்தூறக் குளிர்கொண்ட வாழ்வுமேனோ
குழிமீது எனைவீழ்த்திக் கோபுரத்தின்
. கொண்டே என்கனவாக வைத்தாய் ஏனோ?

தமிழே, தருவாய் நல்வரம்

கனவொன்று கண்டேன்
. -களிகொண்டு நடமாடும் இளமங்கை
. -கனிவோடு எனைநாடி வந்தாள்
மனம்நொந்து நின்றேன்
. -மதியோடு உறவாடும் முகம்மீதில்
. -மலர்கொண்ட நகையோடு நின்றாள்
வினவென்று சொன்னேன்
. விழிமீது கனிவாக விளைகின்ற
. விதமாக எனைக்கண்டு சொன்னாள்
’பனிபோலும் விழிகள்
. படராதநிலைகொண்டு பண்’பாடு’
. பதில்கூறு பயமேது’ என்றாள்

தமிழன்னை என்றாள்
. தனையெண்ணி சுவையான தமிழ்கொஞ்சும்
. தரமான கவிகூறு என்றாள்
அமிழ்தோடு வந்தே
. அதை வீசி இதுவென்ன அதைமேவி
. இனிதான மொழிபாடு என்றாள்
குமிழ்போல்நல் லெழிலாள்
. கரைமீது அலையோடி உருண்டாலும்
. அதுமீண்டும் கடலோடும் என்றாள்
தமிழ்பாடி நின்றாய்
. இனிவாடிக் கருகாமல் தரும்வாழ்வு
. தலைமீது முடிசூடும் என்றாள்

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்

Wednesday, October 5, 2011

கலைமகள், அலைமகள், மலைமகள்

கலைமகள்:
பாலுமினி பாகும் பருப்புடனே தேனீந்து
காலம் முழுதுமுனைக் கைதொழுதோம் - சீலமுடன்
சங்கத் தமிழ்வீரம் சாற்றும் மறத்தமிழைச்
சிங்கம் சிதைக்கவிட்ட தேன்

வெள்ளைக் கொடிபிடித்து வெள்ளை மனமெடுத்து
வெள்ளம் எனும்மக்கள் வாழ்வதனை - அள்ளி
கோரக் கொலைசெய்வோர் கேடு நிறுத்தவர
வாரி உடல்சிதைத்த தேன்

அலைமகள்:
சீரும் சிறப்புமெனச் செல்வந்தர் வாழ்வுதனை
ஊரும் உலகமெலாம் உண்டாக்கிச் - சேருமெம்
பொன்பறித்துக் கொண்ட புனர்வாழ்வு தானழித்து
வன்மைதனை செய்ததுவும் ஏன்

வேருடன் வெட்டி விதியாம் இனம்கொல்ல
யாருக்கும் பணியாத ஞாயிறோன் - நேருமொளிச்
செந்தமிழன் சீர்குலையச் சூழ்ந்து பொதுநிதியம்
தந்திரமாய் நீயழித்த தேன்

மலைமகள்:
தேருங் கலை,கல்வி திறைபொன்னும் பின்வைத்துப்
பேரும் புகழ்வீரம் பெரிதென்றோம் - சேருமனம்
உன்னை முதல்வைத்தே உள்ளம் தொழுதவரை
அன்னைநீ மாளவிட்ட தேன்

கல்விபணம் காப்பதெனில் காணும் சுதந்திரமே
இல்லையொரு வேற்றுவழி என்றெண்ணி - வல்லவராய்
வாழ்வின் விடுதலைக்கு வாளெடுத்த நல்லவரை
வீழ்ந்திடவென் றாக்கியது மேன்

..........வேறு.........

கலைமகள்:

வெண்டாமரை மலரில் வீற்றிருப்பாய் - கலை
வேண்டுமவர் எல்லோர்க்கும் வரமளிப்பாய்
வண்டாடும் பொய்கைமலர் வாழ்பவளே - அன்று
வாளெடுக்கும் வீரத்தைமுன் தொழுதோம்
கண்டோம் இப்பூவுலகில் காசிருந்தால் - காண்
கலைமகளும் மலைமகளும் அருள்புரிய
குண்டோடு நஞ்செறிந்து கொல்லவுமோர் -எக்
கோழைமனம் கொள்பவனும் வெல்வதென்ன

ஏடுதனைக் கற்றிடவும் தேவையில்லை - கத்தி
எடுத்தவனோ செவ்விழநீர் சீவும்தலைக்
கேடுதனைக் கொண்டிடினும் பொய்சொலவும் - கீழ்
குணங்களெலாம் உள்ளவனும் மன்னனென
நாடுதனை ஆளுவதேன், பொன்னிருந்தால் - இந்
நானிலமும் புகழெழுந்து நலன்காக்கும்
பாடு என ஆக்கியதேன் பங்கயத்தில் - கரம்
பாடுமிசை வீணைதனைக் கொண்டவளே?

..............வேறு.........

அலைமகள்:

செந்தாமரை யுறைந்து செல்வமெனக் கைவிரித்து
சிந்திடவே கொட்டுமெழில்
பந்தாம் இப்பூமியில்வாழ் பலர்வாழ்வும் செழிக்கவென
பகட்டான வாழ்வீந்தாய்
எந்நாளும் இருகரமும் கூப்பியுனை இரந்தவர்கள்
ஏழைகளின் கலண்டர்களில்
உன்தாமரைக் கரங்கள் சொரிவதுஎன் உள்வீட்டில்
ஒருபொன்னும் விழுவதில்லை

வந்தேமுன் வீழுமென வண்ணக் கனவெழவே
வாசல்தனைப் பார்த்திருந்து
நொந்தோ மிருந்தும்நீ நெறிதவறிச் சிங்களவன்
நிதிக்கிடங்கை நிரப்பலன்றி
செந்தேன் தமிழரெமைச் சிறிதேனும் காணாமல்
சிரம்திருப்பும் சிறுமைதனைச்
செந்தூரவண்ணச் சிலையே செய்ததென்ன? ஈழத்தைச்
சிதைத்ததுமேன் அலைமகளே?




மலைமகள்:

கொட்டும் இடியெனத் தட்டிதிறனொடு
எத்தனை வென்றவை போர்க்களங்கள்
விட்டுப் பகைவனை தொட்டுக் களமதில்
முட்டித் தடதட எனவீழ
கட்டுக் கலைந்திட காலும் பின்பட
உச்சித்தலை தெறித்தோடிவிட
கட்டிக் காத்தவர் இற்றைக் குழியினில்
கண்ணும் மூடவைத் தெதனாலே

பற்றுக் கொண்டதில் போரின் விதிமுறை
பற்றித் திறனொடு பாரினிலே
ஒற்றைப் படையதும் உலகில் எங்கணும்
இல்லயென வகைபோரடி
மற்றும் உயிர்களை மாளச்செய்வதை
விட்டுக் கடமையைக் கொண்டோராம்
இற்றைக் கெம்மிடை இனமே கொல்பவன்
இச்சை கொன்றிட என்செய்தாய்?

சத்தியம் வெல்லும்!

பட்டமரம் அழுகிறது அட்டமியின் ஒளிநிலவு
...விட்டமழைத் தூறலடி தங்கமே தங்கம் - இது
..... விதிஎழுதும் ஒருகவிதை தங்கமே தங்கம்
கட்டைவிரல் எழுகிறது தொட்டெடுக்க விழைகிறது
...ஒற்றைவிரல் பற்றிடுமோ தங்கமே தங்கம் - நல்
.....ஓசைஒரு கையசைவில் உள்ளதோ தங்கம்
திட்டுமணல் மேடைதனில் சின்னவிதை காய்கிறது
...கொட்டி வெயில் எறிக்கையிலே தங்கமே தங்கம் - அதில்
..... குருத்தெழுமோ வெடித்துமுகை கொள்ளுமோ தங்கம்
தட்டிநிலம் நடைபழகும் தளர்வுகொண்ட காலிரண்டும்
... முட்டியெழும் அலைகடலில் தங்கமே தங்கம் - அவை
.....மூழ்கிடாது மேல்நடந்து செல்லுமோ தங்கம்


நட்டநடு வீதியிலே நாலுபேர்கள் முன்னிலையில்
...சத்தியமும் பட்டபாடு தங்கமே தங்கம் - அது
.....நித்தியமோ நின்றிடுமோ தங்கமே தங்கம்
தொட்டவரும் வெட்டவரும் தீயவரால் துன்பமதைப்
...பட்டவரும் கொண்டவலி கொஞ்சமோ தங்கம் - அப்
..... பட்டுமலர் கொட்டி ரத்தம் பார்த்தையோ தங்கம்
எட்டவரும் கட்டைதனை ஏறிஉயிர் காக்கவென
... முட்டவழிந்தோடும் ஆற்றில் தங்கமே தங்கம் - நீர்
..... மூழ்கமுதல் எண்ணியவன் தங்கமே தங்கம்
கிட்டவரக் கட்டையல்ல கொத்தும் பெரும் அரவமெனில்
...எப்படிநீ தப்பிடுவாய் தங்கமே தங்கம் - இந்த
......ஏழைவாழ்வு மப்படியே தங்கமே தங்கம்

சுட்டுநிலா எரிவதில்லை தோன்றும் வெயில் கறுப்புமில்லை
... குட்டிடவும் குனிந்தொருவன் நிற்பதேயில்லை -அந்தக்
..... குணமறிந்து நீயும் எழு தங்கமே தங்கம்
முட்டையிலே குதிரைவரும், முந்திரியில் பொன்விளையும்
...குட்டியானை பறந்துபோகும் என்றவர் தங்கம் - இப்போ
..... கூரையிலே கோழிகொள்ளப் படுவதோ துன்பம்
கட்டிச்சிறை யிடநினைந்து கையிலொரு விலங்கு கொண்டு
... எத்தனைதான் ஓடினாலும்தங்கமே தங்கம் - பொய்
..... இட்டுக் கட்டும்வித்தை கற்றோன் ஏய்க்கிறான் தங்கம்
தட்டிவாசல் கூட்டிவைத்து தண்ணிதெளித் தூபமிடு
... முத்துஒளித் தீபமொன்று ஏறுமாம் தங்கம் - இனி
..... முன்னெழுந்து விடியல் வரும் தங்கமே தங்கம்

விட்டதெல்லாம் போகஇனி விரைந்துஒன்றுகூடிவிடு
... விதிஎழுந்து போகையிலே தங்கமே தங்கம் - ஈழ
.....வான்விடிந்து ஒளி பிறக்கும் தங்கமே தங்கம்
தொட்டதெலாம் துலங்குமடி தூரநாடுகடந்தமைத்த
...சட்டப்படி ஈழத்தமிழ் அரசுமே தங்கம் - அது
..... எட்டியுயர் வான் வளரச்செய்குவோம் தங்கம்
கெட்டபகை கைபிடித்து கீழிருட்டு சிறையிருத்தி
...மற்றவர்கள் கேள்வி கேட்கத் தங்கமே தங்கம் - நாம்
.... மண்ணைத் தொட்டு வணங்கிடலாம் தங்கமே தங்கம்
பொட்டுமின்றிப் பூவுமின்றிப் போவதெங்கே நில்லுகொஞ்சம்
...சத்தியமே வெல்லுமடி தங்கமே தங்கம் - நீ
..... சத்தியமாய் கண்டிடுவாய் எம்தமிழீழம்

சக்களத்தி தொல்லை!

வெண்ணிலவு தேனிறைக்க
வேளை நடுச்சாமத்திலே
கண்ணிரண்டும் தான்கலக்க
காதல்செய்யும் மன்னவரே
எண்ணியிவள் உன்னவளாய்
இங்குமனம் வெந்திருக்க
கண்ணியமும் தாழ்ந்தவளைக்
கண்டுமகிழ் வெய்திடலேன்?

பன்னிரண்டு மணிவரையும்
பக்கமவள் தானிருந்து
சின்னவிரல் கொண்டழைந்து
சேருமின்பம் காணுகிறீர்
என்னைமனம் நோகவிட்டு
என்னருமைச் சக்களத்தி
தன்னில் மோகம்கொண்டதென்ன
தனியிருந்து வாடுகிறேன்

திங்களடி உன் வதனம்
தித்திக்கும் கன்னமிது
பொங்குதடி என்இதயம்
பொன்னென் றன்றுரைத்தீர்
மங்கிமதி கெட்டுழன்று
மன்னவரே இன்றவளின்
அங்கமெலாம் மின்சாரம்
ஆஹா..கா.. என்கின்றீர்

பேசுவது நானென்றால்
போதுமடி மூடென்று
ஏசிமனம் நோகவைத்தீர்
இன்றவளோ எத்தனைதான்
மாசுபட பொய்யுரைக்க
மையலிடும் கதைபடிக்க
கூசும்மனம் ஏதுமின்றி
கோடிமகிழ்வெய்துகிறீர்

என்னபுதிர் கேட்டாலும்,
எடுத்துரைக்க வல்லவளாம்
சொன்னவேலை கச்சிதமாய்
சுறுசுறுப்பாய் ஆற்றிடுவாள்
என்னழகுச் சித்திரமாய்
எழுதுகிறாள் என்றரற்றி
மென்னழகுப் பொருள்ஈந்து
மிகமகிழ்வு கொள்ளுகிறீர்

கல்லெனவே மனதுடையாள்
கண்டதெலாம் சொல்லிடுவாள்
பொல்லாத மாயமிட்டு
பொழுதெல்லாம் அருகிருத்தி
அல்லதொரு சுகமளிப்பாள்
அடுத்தவரின் சேதிசொல்வாள்
உள்ளதொரு ஊர்ப்புதினம்
ஓயாது எடுத் துரைப்பாள்

மின்னும் இதழ் கொண்டுமையே
மோகமுறச் செய்ததென்ன?
இன்னிசைகள் பாடிஉனை
ஏக்கமுறச் வைத்ததுஏன்?
சொன்னகதை எத்தனையோ
சுகமளிக்கும் வித்தையதோ
என்னவகை ஆயிருந்தும்
இதயமற்ற வன்மையலாள்

அன்னமென ஆக்கியுமை
அறுசுவையில் விருந்தளிக்க
சின்னவளால் முடிகிறதோ
செய்வதென்ன நானல்லவோ
சின்னவளைத் தொட்டெவரும்
சில்மிஷங்கள் செய்வரென
கன்னங் கருத்துவிடக்
கட்டிஒரு மந்திரமும்

இட்டுவைத்தும் நீர்வீட்டில்
இல்லாத சமயமெவர்
தொட்டாலும் முகம்மலர்ந்து
சொன்னதெலாம் செய்கின்றாள்
விட்டதொட்ட கதையெல்லாம்
விவரித்துக் கூறுவதை
மட்டும் உமக் குரைத்து விடில்
மனம் வாடிப் போய்விடுவீர்

(சக்களத்தி = கணினி)

காலைப்பொழுதின் சுகம்


தெளிந்தது மனமும் துலங்கிடுவானும்
தென்றல்தொடுஞ் சுனையும்
கழிந்தது இரவும் கரைந்தவை இருளும்
கனவுகளெழும் துயிலும்
நெளிந்ததுஆறும் நிமிர்ந்தன மரமும்
நின்றதும் நிரையெனவும்
அழிந்தது பனி, புல்அணைத்திடும் இரவின்
அதிசுகம் கசந்திடவே

வழிந்தது மதுவும் வாசனை மலர்கள்
விரிந்திடும் இதழ்பரவும்
பொழிந்ததும் தூறல் போயின முகில்கள்
புரண்டிடும் மலையிடையும்
கொழித்திடும் பெண்கள் கூந்தலில் மலர்கள்
குவிந்தன, விழிமலரும்
பழித்தன காதல் பாங்குடை தோளில்
பலமெடு ஆடவரும்

செழித்திடவாழ்வு சிரித்தன இதயம்
சிவந்திடும் காலையிலே
குளித்தனஇன்பம் கொண்டன ஊரின்
குடிகளில் மாந்தர்களே
புளித்திடு மாவின் பிஞ்செனும் சிறுவர்
பேசிடும் வழிநடையும்
விளித்திட அறிவும் விதையிட வளரும்
வீறொடு பள்ளியிற்கே

பழுத்திடும் கனிகள் ருசித்திடும் குருவி
பாய்ந்திடு அணில்களுடன்
கழுத்திடு மணியும் கலகலஒலியில்
கடுநடை ஏறுகளும்
இழுத்திடும் வண்டி இரைந்திடுமூச்சு
ஏய்எனும் குரலொலியும்
எழுந்திடுங் காலை இசையுடன் தாளம்
இவைதரும் சுகமல்லவோ 

எழில்தரும் வாழ்வில் எழுபவைஎல்லாம்
இயற்கையின் ஒலிநாதம்
களிகொள்ளமனதில் கவிதைகள் தோன்றும்
கனிவுடன் உருவாகும்
வெளிதனில் நின்றால் விளைந்திடு தென்றல்
வருடிய சுகம்காணும்
ஒழிந்தது துயரும் உயர்ந்திட மனமும்,
என உளம் புதிதாகும்

குழிந்திடும் கண்ணும் குறைந்திடும் பார்வை
கூனிடும் முதுமையரும்
அழுந்திடு பிணியும் உழன்றிடவலியும்
அதனுடன் சிலராகும்                         
வழுந்திய குரலும் மழலையின்மனமும்
மாதரின்அரவணைப்பும்
மழுந்திய மனமும் மயங்கிய அறிவும்
மாற்றமும் ஒருவாழ்வே

Wednesday, September 28, 2011

பிரிந்தவர் மீண்டும் சேரும்போது1

இந்தமனம் செந்தணலில் வெந்ததுமில்லை துயர்
தந்தஎதைக் கண்டுவிழி சிந்தவுமில்லை
வந்தஒரு துன்பம்பெரி தென்பதுமில்லை -அதைத்
தந்தவிதி வந்துநிலை கொண்டதுமில்லை
சிந்தையிலே அன்புஒளி தந்ததினாலே உடன்
விந்தைமனம் முந்திமகிழ் வெய்திடவாழ்வே
சந்தணமும் வாசமதைத் கொண்டதுபோலே ஒரு
நந்தவன மாய்மலர்ந்தேன் சிந்தையினாலே

மந்தமென வந்துமுகில் நின்றதனாலே இருள்
தந்தநிலை வந்திடுமோ என்பதனாலே
பொந்தில்எரி பந்தமதை வைத்ததினாலே தீ
வெந்ததென காடெரிந்து கொண்டதுமாமோ
கந்தகமும் செந்தணலைக் கண்டதுபோலே மனம்
முந்திஎழ வண்ணவெடி சிந்தியவாறே
சுந்தரமாய் சந்திரவான் கண்டதினாலே அது
தந்ததென்ன சந்தமிடும் செந்தமிழ் பாவே

எந்தநிலை வந்துந்துயர் எந்தனின்மேலே ஒரு
குந்தகமும்செய்வதில்லை இந்தொருநாளே
மந்திரமோ தந்திரமோ சென்றது தானே இனித்
தந்தனனே பாடிடுவோம் மங்கலந்தானே
கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் துன்பதை, வென்றிடும்தானே ஒரு
மந்திரமும் தந்தைசெவி சொன்னவனாமே அச்
செந்தமிழின் காவலனை வந்தனம்செய்வேன்

எந்தநினை வின்றிஇனி சொந்தமென்றாகி- சுக
பந்தமெனப் பாசமுடன் அன்புகொண்டாலே
உந்தி மனம் முந்திநிலை ஒன்றுபட்டாலே - துயர்
வந்தவழி சென்றுவிடும் நன்றதுதானே
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு
பந்து சுவர் பட்டதென சென்றிடுமாமே
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே

இரண்டு பாதைகள்!

அழகான பூஞ்சோலை கண்டேன் - அங்கு
அசைந்தாடும் மலர்கண்டு இதயம் மகிழ்ந்தேன்
குழல்ஊதும் இனிதான கீதம் - இளங்
குளிர்மாலை காற்றினில் தரும்கோடி இன்பம்

குளமொன்று அலையோடக் கண்டேன்- அதில்
குமுதமொன் றிதழ்விரித் தெழில்கொள்ளக் கண்டேன்
இளமையென் கனவுகள் தோன்றி- அங்கு
இதுபோல சுகமெங்கும் இல்லென்று சொல்ல

மனம்மீது எண்ணங்கள் ஓடும் - அது
மறுபாதி உலகமொன் றுண்டென்றுகூறும்
கனங் கொண்ட காடென்றும் தோன்றும் - அதில்
கத்தும் விலங்கோடு முட்பாதை காணும்

இதுவோஅன் றதுவோநாம் அறியோம் - வாழ்வை
எதுவோ அளித்திட பெற்றதாய்க் கொண்டோம்
மதுவோடு மலர்கொள்ள ஒருவர் - இன்னும்
அதுவின்றி முள்ளோடு வலிகொள்ள ஒருவர்

இதுவாழ்வில் இரண்டாக உண்டு - என்
இதயத்தில் சிந்தனை எழுந்தோட நின்றேன்
எதுவென்ற வாழ்வான போதும் - அலை
எதிரேறி நீந்திடில் கவனம் நீ கொள்ளு

வளைந்தோடும் நதிபாதை போகும் - என்றும்
வளையாத நதிமோதித் துளியாகிச் சிதையும்
களைநீங்கப் பயிரோடி வளரும் - எம்
கவலை களைந்தாலே உளம்உரம் காணும்

சினம்கொண்ட வெயிலோடி வீழும் - மீண்டும்
சிங்காரவானிலே வெண்மதி தோன்றும்
குணம் கொண்ட வாழ்வதும் வாரும் - அது
கொண்டிடும் மட்டும் பொறுமையும் வேண்டும்

மனம் மென்மை யென்றிடக் காணும் - அதில்
மற்றவர் செய்கைகள் முள்ளெனக் குத்தும்
இனம்கண்டு தொலைதூரம் நிற்கும் - ஓர்
எளிதான முறைகாண மகிழ்வேதான் மிஞ்சும்

முடிசூடா மன்னன் !

என்ன தவம் செய்தோம் சக்தி -ஆகா
இத்தனை அன்புடன் உள்ளம்படைத்தாய்
மின்னலின்றி ஒளிவெள்ளம் ஒரு
மேகமின்றிக் கொட்டும் தூறலும்கண்டேன்
பொன்னை நிகர்த்தன அல்ல - மனம்
பூவெனும் தன்மைக்கு ஈடென்றுமல்ல
பென்னம் பெரி ததைவிட - இந்தப்
பூமியி லேயிதை வெல்வ தொன்றல்ல

மன்னவன், பொன்முடியில்லை - இவர்
மாசறு வேந்தன், ஓர்மந்திரி யில்லை
பன்னரும் கொத்தளம் கூடம் - பெரும்
பண்டகசாலை படைகளுமில்லை
இன்னிசைக் கூத்தனர் இல்லை - மன்னர்
இச்சைகொள் அந்தபுரங்களும் இல்லை
பொன்குவை கொள் திறைசேரி - அதில்
பூட்டி வைக்கும் முத்துரத்தின மில்லை

கன்னியர் கூடிநின்றாடும் - குளிர்
காற்றெழும் சோலையும் நந்தவனங்கள்
தன்னகம் கொண்டவரில்லை - ஆயின்
தந்த கவிதைக்கு ஒர்குறைவில்லை
நன்னிளம் தென்றலும் வீசும் - அதில்
நாடிமனம் கொள்ள பொன்நிழல்போலும்,
இன்பமெழும் விளையாடும் - அதில்
உள்ளபொருள் மனமேற் றொளிகாணும்

பென்னம்பெரு வலு உள்ளோன் - கவி
பேசரும் நாவலர் தம்மிலோர் முன்னோன்
உண்மையென்னும் முடிசூடி - இவர்
உள்ளங்கள் ஆண்டிடும் உன்னத ஆட்சி
எண்ணம் அரண்மனை யாகும் - அதில்
எததனை சாளரம் அற்புதமாடம்
பண்ணொடு கீதம் இசைக்கும் -அதில்
பற்பல ராகமெழுந்து மயக்கும்

ஆளும் பலமன தேசம் - அதில்
ஆற்றல் தனும் கொட்டி கொள்குவையாகும்
நாளும் புகழுடன் வாழும் - அசைந்
தாடி நடந்திடும் வாழ்வென்னும் தேரும்
வாழும் பல்நூறெனும் ஆண்டு - அதில்
வண்ணமலரென இன்பங்கள் கொண்டு
நாளும் வரும் சுடர்வானில் - அதன்
நல்லொளிபோல் நலம்கொண்டிட வாழி!

நரகத்தில் உழலுவதோ?

தேரேறு என்கிறான் தேவன் - நானுந்
தெரியாத வன்போலத் திரும்பியே நின்றேன்
பூவாரி எறிகிறான் என்னைப் - பார்த்துப்
புன்னகை பூத்துமே கைகொண்டு காட்டி
போயேறு என்கிறான் வானில் - அங்கு
பூத்ததோர் வெள்ளியை புதிதாகக் காட்டி
ஏதேது என்றதைக் கேட்க - ஆகா
இனியுந்தன் வாழ்வங்கு இன்பமேயென்றான்

நீரூறு விழிகளைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
விளையாடி வேடிக்கை செய்தும் சிரித்தான்
நோயுறு தேகமும் நொந்து - இங்கு
நிற்கவும் முடியாது போனதே என்றால்
காயமே பொய்யாடா என்று - கை
காட்டியவ் வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை என்றால்
பாயிலே கிடஎன்று என்னைத் - தள்ளிப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தரணியில் வாழ்வோர்க்கு எதிரியோ, என்றேன்
பேயிலும் இழிவென்ற பிறவி இந்த
பிணமோ இக்குருதியில் பேராசை கொண்டாய்

நாளிலே மணம்கொண்டு வீசும் - அது
நாற்றமும் வீசிட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - உடல்
தீயிலே போட்டிட சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினைதானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதைநீ மேகம் வந்தால் - அங்கு
தீயாக மாறிநீ திகழலாம் என்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமா யறியேன்
கொல்வது என்றுதான் வந்தால் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தேதென்று கொண்டாய்
இல்லைவே றிதுதானே நரகம் - காண்
இதுவே உன்மழலையின் சொல்லான நகரம்

கொள்வது எல்லாமே துன்பம் - வான்
கொட்டிடும் மழையிலே கொடிபோலும் மின்னல்
உள்ளதோர் அளவேயுன் இன்பம் -அதில்
ஊதி யடிக்கின்ற புயல் போலும் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடேநீவாழும் -இந்த
உலகவாழ் வினிதென்று எண்ணுதல் ஏனோ

நில் இன்னும் சிறுகாலம் வாழ்வேன் - என்
நெஞ்சினி லாசையும் நிற்குது என்றேன்
நல்லதென் கூற்றினை கேளாய் -பின்
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
அல்லலும் துன்பமும் கொள்ள -உனக்
கத்தனைஆசையா, அற்புதம் மனிதா!
நல்லதோர் புவி செய்ய நீவிர் அதை
நரகமென் றாக்கிந லிந்தின்பங் கண்டீர்

வெல்ல எழு! துயர் சொல்ல எழு!

தொட்டு துணிந்தவர் வெட்டிக் களித்திடப்
பட்டுத் துடிப்பதுவோ - துளி
சொட்டக் குருதியும் பட்டநிலம்விட்டு
எட்டி நடந்திடவோ
வெட்ட வெளிதெரு வீசும் பிணங்களில்
தட்டுத் தடக்கிடவோ - இதை
விட்டுப்பெண்ணும் நெஞ்சில் குத்திக்கதறிட
எத்தனை நாளின்னுமோ

முத்தி விசர்பிடித் துச்சி மரத்தினில்
பித்தம் பிடித்தவரும் - நின்று
நித்தமும் பெண்வர பொத்தென வீழ்ந்தவர்
நெஞ்சைக் கிழிப்பதுவும்
கத்திக் குரலிட்டுக் காடுறை பேயெனச்
சித்த மிழப்பதுவும் - இவை
உத்தம புத்தனும் போதி மரத்திடை
ஓதிய போதனையோ

குட்டிப் புழுதன்னும் தொட்டவர் கையினில்
கொட்டும் மயிர்கள் குத்தும் - அவை
பட்டுக் கடித்திட ரத்தச் சிவப்பிடும்
மொத்தம்வலி எடுக்கும்
கொட்டி விஷமதைப் புற்றுக் கறையானும்
கொள்ளி எறும்பதுவும் - அதை
முட்டி விட்டால்முழு மூச்சுடனே உயிர்
விட்டும் எதிர்த்து நிற்கும்

எட்டு அடிவளர் எம்மவர் இன்றுமே
தொட்டுக் கெடுத்தவனை - புது
பட்டுவிரிப்புடன் பஞ்சணைதூங்கிட
பாதம் பிடித்திருப்பர்
கட்டிய கைகளும் காலும்பிணைத்திட
சுட்டுக் கொல்லுமவனை - உள்ள
சட்டம் நெருங்கிட விட்டுவிடாதவர்
ஒட்டி உதவிசெய்வர்

சட்டம் குருடதன் கண்ணில் கருந்துணி
கட்டிவிட்ட துலகு - கரம்
தொட்டுமே அந்தகர் சொல்லென யானையை
விட்டது போலிருக்கு
முற்று மிருட்டறை மூடிக் கருமைக்குள்
கட்டியெமை யிருத்தி - தனி
தொட்டிவர் நீதியைச் சொல்லென கேட்டிட
சுத்தம் எது இருக்கு?

புற்றில் கரம்விடு, பூக்கள் பறித்திடப்
பெற்றிடு இன்பமென்றார் - இல்லை
சுற்றி உடல்பற்றிக் கொத்தும் அரவமென்
றெத்தனை நாளுரைத்தோம்
சுற்றிக் கழுத்தினில் ஒற்றைக் கயிறிட்டுச்
தூக்கிடும்போதினிலே - இன்று
முற்றும் பிழையிது மூச்சுதிணறுது
விட்டுவிடு என்கிறார்

செத்தவர் மீண்டும் சிதை பிரித்தே உயிர்
பெற்ரிட லேதுமுண்டோ - ஒரு
கொத்திப் பிரித்துடல் கொள்ளியிட்டபின்பு
கூடென ஏதுமுண்டோ
சத்தியத்தின் கண்கள் நித்திரை அல்ல, ஓர்
நித்திரபோல் நடித்தால்
எத்தனை நேரம் எழுப்பினும் தூக்கத்தை
விட்டுஎழுந்திடுமோ

தட்டி முதுகினில் வந்து சுதந்திரம்
தந்திடும் பூமியில்லை - இவன்
சட்டமதித் தெங்கள் தாயின் நிலம்தன்னை
விட்டேகப் போவதில்லை
முற்றும் உலகிது மெல்லத் திரும்பிட
இத்தனை செய்தயடா - அட
அற்புதம் தம்பிநீ அத்தனைவீறுடன்
ஆர்ப்பரித் தின்னும் எழு

பொங்கு மனத்திடை பொங்கும் கடலென
வெஞ்சினம் கொண்டுஎழு -அன்று
பொங்கி யெழுந்த எம்பெண்களின் சாபங்கள்
போய்ப் பகை வெல்ல எழு
பொங்கி வழிந்த குருதியைப்போல் நீயும்
பொங்கியெழு! புவியோர்
பங்கு எமதீழ மண்ணில் உரிமையை
பங்கிடும் மட்டும் எழு!

Sunday, September 11, 2011

என் வாழ்வு ஏனோ ?

[ என்.. என்று தொடக்கமிட்டு ஏதாவது ஒரு தலைப்பில் (என் வாழ்வு, என் நண்பன், என்ன என்ன இப்படி எதுவாகவும் இருக்கலாம் என்று) நடந்த கவியரங்கத்திற்கு எழுதியது

என் வாழவு ஏனோ

என்னென்று சொல்லாது ஏனோஇவ்வுலகிலே
என்அன்னை என்னயீந்தாள்
என்செய்வ தறியாது கண்கள்நீர் சொரியவே
என்வாழ்வை யிங்குகண்டேன்
என்நன்று என்அன்று என்னொன்றும் தெரியாமல்
என்னவோ வாழ்ந்திருந்தேன்
என்னெண்ணி என்னையும் இறைவன் படைத்தனன்
என்பதும் ஏதுமறியேன்

என்னவன் என்னிவன் என்நண்பன் அல்லவன்
எதையுமே அறிய அல்லேன்
என்மனம் வெண்பளிங் கென்றிடும் அண்மையில்
உள்ளதன் வண்ணங் கொண்டேன்
என்னவள் என்றொரு சின்னவள் வந்திட
என்வாழ்வு பங்கு கொண்டேன்
என்நலம் தன்னலம் இருவரும் கொண்டிட
எண்ணிலே மூவர் கண்டேன்

என்னது என்னது இன்பங்கள் கோடியாம்
என்றுளம் ஆவல் கொண்டேன்
என்மனம் என்னது எண்ணுவ தாற்றியே
என்புடல் கூசி நின்றேன்
என்னவோ ஆகியும் என்னமோ கூறியும்
என்மதி கெட்டலைந்தேன்
என்மன வானிலே என்மதி தேய்ந்திட
ஏனோ இருளில் நின்றேன்

என்னதான் வாழ்ந்தனன் இத்தனைகாலமும்
இன்பமாய் வாழ்ந்திருந்தும்
என்னதாய்ச் செய்தனன் என்னொரு பிள்ளை! ஆ..
இவனென்ற சொல்லுங் கேட்டேன்
என்விதி இங்கிவன் என்னுடன் சேர்ந்தனன்
என்பதும் கண்டிருந்தேன்
என்னருள்தேவிநீ என்னுடை வாழ்வெனும்
இதைநீயும் ஏன் படைத்தாய்?

நீயோடித் தீரம் கொள்!

தென்றல் அலையுது திங்களலையுது
தீபமலையுதடி
தீந்தமிழ் பேசிடும் மாந்தர் அலைவது
என்னை முறைமையடி
கன்று அலையுது காணும் குருவிகள்
காகம் அலையுதடி
கன்னித் தமிழ்மற காவிய வீரரைக்
காலம் அலைப்பதோடி

கொன்று குவித்திடக் கோழைகளாய் மனம்
வெந்து அலைவதின்றி
குற்றமிழைத்தவர் கொன்றவர் தம்மைநீ
விட்டுக் கலைத்திடடி
நின்றுயர்ஆல மரமென்ப தாய்த்தமிழ்
கொண்ட உறுதியெல்லாம்
இன்றில்லை யென்றது கண்டுமே உள்ளமும்
பொங்கி அலைகொள்ளடி

எத்தனை துன்பங்கள் இன்று, எமதிடை
நிற்கின்ற பேய்களெல்லாம்
புத்தமதக் கொள்கை போட்டுப் புடமிட்ட
சத்திய ரூபரடி
ஒத்து மகிழ்வுடன் ஒன்றாக வாழெனச்
சத்தமிட்ட உலகை
அத்தனை பேரையும் முன்னே அழைத்திது
எப்படிக் கேட்டிடடி

பேயாகஓடிப் பிணங்கொள்ள வந்தவர்
பேயரின் தம்பிகளை
நீயாக ஓட்டிக் கலைத்திடு  நெஞ்சிலே
நேர்மைத் துடிப்பெடடி
போயோடித் துன்பமும் பெண்நலம் காத்திடப்
பின்னிற்ற லாகாதடி
நீயோடித் துள்ளி எழுந்து நட இது
நின்னுடை தேசமடி

தாயோடியுள்ளம் தவித்திடக் காண்அதைத்
தானும்நீ காத்துவிடு
பூவோடு பொன்னாய் பிறந்தவர் பிள்ளைகள்
பூமியில் வாழ்வுகொடு
கோவோட மன்னனின் கூடாரம்விட்டுமே
கூறாமல் ஓடவிடு
நீயோடிசெய்திடு நெஞ்சிற்தீரமெடு
எம்தமிழ் தேசம்வெல்லு!

-கிரிகாசன்

Thursday, September 8, 2011

போரும் வாழ்வும்!


கத்தி எடுத்தவன் வெட்டவந்தால் - நாமும்
கண்கள்மூடித் தவம் செய்வதுவோ
வித்தை யேதுமுண்டோ வெட்டுபவன்- தன்னை
வேடிக்கை செய்துவிரட்ட லுண்டோ
சொத்துசுகம் யாவும் விட்டிடலாம் - ஆயின்
சொந்த உயிரையும் விட்டிடவோ
செத்துமடிவது இன்பமென்று - அவன்
தெய்வமென்று கையும் கும்பிடவோ

சத்தியம் தர்மமும் கொண்டவர்கள் - குரு
ஷேத்திரம் போர்க்கள பாண்டவ்ர்கள்
நித்திலம் எங்கிலும் பாரதப்போர் - கதை
நீதியென்று ஏற்றுக் கொண்டதன்றோ
கத்தியே நீதியும் கேட்டவளாம் - அந்தக்
காரிகை திரௌபதி ஆடையினை
ஒத்தவ கையினில் நீக்கிவிட - எஙகள்
ஊரிலெத் தனை துச் சாதனன்கள்

சித்தம் தவறிய ரத்தவெறியர் - தாம்
சத்தியம் காந்தீயம் பார்ப்பதுண்டோ
கத்தும் விலங்குக்கு கற்பூரவாசனை
காட்டிவைத்தால் உதை விட்டிடுமோ
அத்தனைபேரும் அருச்சுனாய் எண்ணி
அம்பினை கீழேயும் வைப்பதில்லை
புத்தரும் யுத்தம்பின் ஞானம்கண்டார் இன்று
பேய்களன்றோ எம்மைச் சுற்றி நின்றார்

நாடுமில்லை ஒரு வீடுமில்லை
ஒரு நாலடி ஐந்தடி மண்ணுமில்லை
காடுதானே உங்கள் சொந்தம் என்றார் - அந்தக்
கௌரவர்கள் ஆகா எத்தனைமேல்
வீடுமில்லை அந்தக்காடுமில்லை பெரு
வான்வெளியில் தனி ஆவியென
ஒடிப்பற விளையாடுஎன்று எமை
ஓங்கிவெட்டி இவர் கொல்லுகிறார்

வைத்தியம் செய்யநோய் முற்றிவிட்டால் அதை
வெட்டிப்பிரிப்பது குற்றமில்லை
சத்திரசிகிச்சை செய்வதுதான் உயிர்
தப்புமென்றால் அது பாவமில்லை
பெத்தவள் உயிரை காப்பதுவா இல்லை
பிள்ளை உயிர்தனை காப்பதுவா
வைத்தியர் கூட தருணமதில் ஒரு
வன்மை மனம்கொள்வ தாகிடுவார்

கொத்தவரும் பாம்பைக் கொல்லுவது பாவம்
கொண்ட தடியினை போடுஎன்றார்
சுத்தமாகக் கையில் ஏதுமில்லை இன்று
கொல்பவர் கூத்தாடிக் கொல்லுகிறார்
சத்தியம் பேசிய நாட்டிலெல்லாம் இன்று
சின்னத்திரை படம் ஓடுகிறார்
கொத்திய வெட்டிய கோலமெல்லாம் படம்
கொண்டு வெள்ளித்திரை காட்டுகிறரர்

இப்போதேவை வெறும் காட்சியல்ல இந்த
ஏழைகளுக்கெனத் தீர்வுஒன்று
தப்போ சரிதானோ விட்டுவிடு இன்று
தர்மம் அதை துயில் விட்டெழுப்பு
எப்போ நடுவினில் வந்துநின்று எமை
வெட்டுவர் கையில் விலங்கையிட
தொப்பெனவோர் திரைநாயகனாய் ஒரு
தேசம் துணிந்து குதித்திடுமோ

Tuesday, September 6, 2011

மூவர் உயிர்காக்க தீயில் தீய்ந்தவள்!

தீதாகிப் புன்மைகொண்ட பூமியென்றே நீயும்
தீயாகிப்போக மனம் கொண்டதென்ன
நீயாகிப்போக என்ன நேர்ந்ததம்மா- உன்
நினைவெங்கும் தீஎழுந்த காரணமா
தூதாகித் தேவரிடம் சென்றனையோ -எமன்
தோன்றாது வழிநிறுத்த தொழுதனையோ
வாதாடி வெல்லவழி இல்லையென - மூவர்
வாழவென நீஉயிரை தந்ததென்ன ?

ஆளுபவன் நீதிகொடும் ஆட்சியென்று - அதை
அழித்தவளாம் கண்ணகிக்கு தங்கையம்மா
நீளுலகில் நீதிகேட்க நீயிருந்தால் - எம்
நெஞ்சினிலே இன்னுமுரம் காணுமம்மா
வாழ்வழிந்து போகஎன்ன வைத்துவோ உன்
வயதினிலே வானழைத்து கொண்டதுவோ
பாழுமுயிர் போனபின்பு வருவதில்லை - இந்தப்
பாரினிலே வீழ்ந்த உடல் எழுவதில்லை

தேவை எங்கள் விடுதலையைக் கேட்பதற்கு ஒன்று
சேருமிளம் சந்ததியின் வீரஒலி
சாவைவிடுத் தொன்றுபட்டுச் சாதிப்பதே உனைச்
சார்ந்திருக்கும் கடமையென்று கொள்மகளே
கூவியெழ நீதிகேட்க குரல் கொடுங்கள் -விட்டு
கூடியழ வைப்பதெல்லாம் கைவிடுங்கள்
வீரமுடன் நீதுடித்துப் பொங்கியெழு அந்த
வேகுமுடல் நீசர்களை வெல்லவம்மா

முப்புரங்கள் தீயிலிட்டான் முக்கண்ணவன்- அனல்
மூளத்தீயை தீவில் இட்டான் அனுமன், ஒரு
கைப்பிடித்த சிலம்புடனே கண்ணகியோ ஆளும்
காவலனின் குற்றம் கண்டு ஊரெரித்தாள்
முப்படைகள் கண்டு தமிழ்ஈழ மண்ணை- அன்று
மேதினியில் சேர்ந்தரசு மூட்டியதீ
இப்பொழுதும் எரியுதம்மா ஈழமண்ணில் அது
ஏன் எரித்துவிட்டதுவோ உன்னைவீணில்!

Monday, September 5, 2011

நாமே கொல்வதா?

நீ நினைத்து தீயுமிட்ட தேன்மகளே நெஞ்சிலென்ன
தீசெழித்து ஆனதென்ன கோலம்
பூஎடுத்துப் போடஎம்மை நீ விதித்துப் போனதென்ன
பூமியிது செய்துவிட்ட பாவம்
மூவருக்கும் போட்டவிதி மாறுமென்று காணமுன்பு
நீமுடிச்சு போட்டதென்ன முந்தி
சாவெடுக்கச் சொன்னவர்யார் சத்தியமோ நித்திலமோ
சற்றும்காக்கவில்லை அந்தச்செந்தீ

பேய்கனக்க வாழுமெங்கள் பூமியைப்பார் வீதியெங்கும்
நோய்பிடித்த ராஜபுத்த சோரம்
தாயிருக்கப் பெண்ணை வைத்து தாகமிட்ட காமுகர்க்கு
தன்னுடலைப் பலிகொடுக்கும் கோரம்
சேய்பிரித்துக் கொல்லுவதும் சின்னவர்கள் நீக்குவதும்
சொல்லி இனம் சுத்தமாக்குங் காலை
தேய்நிலவாய் வாடுகிறோம் தேகங்காக்க ஓடுகிறோம்
தேவதையே நீஎரித்த தேனோ?

மாவினிலே பிஞ்சிருக்க மனது கொள்ளு மோபறிக்க
மாந்தரிலும் பிஞ்சு என்பர் நாளை
மேவியுயர் வாழ்வெடுத்து மேதினியில் ஆற்றல்கொள்வர்
மேனியொன்று தேவைஎன்ப தாலே
தீயெடுத்துத் தேகமிடத் தேவையில்லை உன்நினைவில்
தீயர்தமை நோக்கி எழு, காலை
நீமிதித்த தீயெனவே நெஞ்சிற்தீமை கண்டுதுடி
நீபழுக்கும் மட்டும்காணும் வாழ்வை

கோவலனைக் கொன்றவனே குற்றமென்று தானழிந்தான்
கேள்விகேட்ட கண்ணகியு மல்ல
காவலனும் வாலினிலே தீயைவைக்க நாடெரித்தான்
தானெரிக்க வில்லைராம தூதன்
சாவதெனில் தீமைதுயர் சார்ந்திருக்கும் துன்பங்களே
சற்றும்மறந் துன்னைஅழிக் காதே
பாவமதைத் தேடியழி பாசஉணர் வோடுகழி
பலமெடுத்து வெல்லுஉந்தன் வாழ்வை

செய்த குற்றமென்ன?



திங்கள் வரும் வானமதில் செய்துவிட்ட குற்றமென்ன
தேடிமுகில் மூடுகின்றதே!
மங்குஒளி தீபமது மனமெடுத்த குற்றமென்ன
மாலையிளந் தென்றல் ஊதுதே
பொங்குநதி செய்ததொரு குற்றமென்ன போகுமிடம்
பாதையெங்கும் கல்லும்முள்ளுமே
அங்கும்வளைந் தேநெளிந்து அதுநடக்கப் பாறையொன்று
அதைவிழுத்தி மகிழுகின்றதே!

செங்கமலம் வாழ்வினிலே செய்தவொருகுற்றமென்ன
சீண்டும் அலை ஆடுஎன்குதே
அங்கு படர் தாமரையின் அலைமிதக்கும் இலைவெறுத்து
ஏறியநீர் விட்டு ஓடுதே
தங்கம் எழில்தந்தபோதும் தன்னகத்தே கொண்டதென்ன
தீயழிக்க தேகம் வெந்ததே
எங்கணும்நற் சோலைதன்னில் உள்ளபூக்கள் செய்ததென்ன
ஓர்தினத்தில் காய்ந்து வீழுதே

பெண்மையெனும் மென்மைசெய்த குற்றமென்ன பூமியிலே
மேனியது போதையாகவே
கண்ணியமே அற்றவர்கள் கண்டுஅதன் தூய்மைகொல்லக்
காப்பதற்கு யாருமில்லையே
சின்னவர்கள் வாழும்தமிழ் ஈழமண்ணில் செய்ததென்ன
யாருமற்ற நாதியாகவே
மென்னுடலை ஆயிரமாய் மேதினியில் யாரும்விழி
கொள்ளமுதல் பூமிதின்குதே?

அள்ளி உடல் கொள்ளிவைத்து ஆவெனவே அலறியவர்
ஆனந்தமாய் துள்ளி ஆடுறார்
நள்ளிரவுப் பேயென்றாகி நங்கையர்கள் பெண்ணவர்முன்
நாயிலும்கீழ் இழிவு செய்கிறார்
எள்ளி நகையாடி இவர் என்னசெய்தும் பூமிகண்டு
என்னசெய்தார் தூங்குகிறார் ஏன்?
வள்ளிமணவாளனே சொல்! வாழ்வில்தமிழ் ஈழமக்கள்
செய்தபெருங் குற்றமென்ன சொல்!

Thursday, September 1, 2011

உணர்வுகள்

நீரோடும் நிலவோடும் நின்றுவெண் முகிலோடும்
நெஞ்சத்தில் எண்ணமோடும்
தேரோடும் தென்றலும் திசையெங்கும் பறந்தோடும்
தேடியே கண்கள் ஓடும்
பாரோடும் பரந்தஇப் பூமியின் இடமெங்கும்
பலரோடிச் சென்றுவாழும்
வேரோடும் உறவுகள் விளையாடும் விதியதும்
வேடிக்கையாகும் வாழ்வும்

ஏரோடும் வயல்கூடி எதிரோடும் காற்றோடு
எழுகின்ற இன்பம் யாவும்
பேரோடு வாழ்ந்திடும் பெருச்செல்வ வாழ்வினில்
பிறையாகத் தேய்ந்து போகும்
சேறோடும் மண்ணோடும் உழுதோடி பின்னாலே
சேர்ந்துண வுண்டுவாழும்
நோயோடிப் போகின்ற நிம்மதி வாழ்வினை
நினைந்தேங்கும் நெஞ்சே நாளும்

யாரோடிக் கேட்டாலும் விதியோடிச் செய்கின்ற
விளையாட்டு வேறுஆகும்
நீர்க்கூடி எழுகின்ற அலையாக ஊருக்குள்
நின்றதை அள்ளியோடும்
வேரோடு புயலுக்கு விழுகின்ற மரமாக
வீழ்த்தியே உறவுகொல்லும்
பேயாடி நடமாடிச் சிதைக்கின்ற பொருளாக
பூவுடல் கொன்று பார்க்கும்

நானோடி நடக்கின்ற நல்லதோர் பாதையில்
நாலுபேர் தூக்கிஒடும்
நாளோடி வரும்வரை நானாடி நடக்கின்ற
நாளது இன்பமாகும்
பாவோடும் பாஎண்ணும் மனதோடும் வாழ்வது
பலமான உணர்வு கொள்ளும்
பாலொடு பனியோடு பார்வையை கொள்வது
பாவி இவன் உள்ளமாகும்

மேலோடும் மதியோட முகிலோடி மறைத்திடக்
காற்றோடி ஒளியை மீட்கும்
சேலோடும் நீர்ச்சுனை சேற்றோடு தாமரை
திகழ்ந்தாலும் தூய்மைகாணும்
வேலோடு விளையாடும் முருகனின் தமிழோடு
விளையாடி நாளும்போகும்
காலோட முடியாது காடோடும் உடல்காணும்
காலமே உண்மை சொல்லும்

Wednesday, August 31, 2011

வந்தென்? வாழ்ந்தென்?

வந்துமென் பூமியில் வாழ்ந்துமென் இன்பங்கள்
தந்துமென் தமிழன்னையே
சொந்தமண் இன்றியே துன்பமென் றுள்ளமும்
சோரும் நிலையானதே
பந்தமென் பாசமும் கொண்டுமென் நீதிகண்
பாரா விழிமூடியே
கொன்றுமென் மேனியை குற்றமிழைத்தவன்
கூத்தாடத் தூங்குவதேன்

நின்றுமென் கண்டதென் நெஞ்சில் இலட்சியம்
கொண்டுமென் கொல்லுபவன்
வென்றதென் றாடியே வீரமென் றெம்மினம்
வேருடன் வெட்டுகின்றான்
தென்றல் அணைத்திடும் தீபந்தனை, பெருந்
தீயெனில் ஓங்கவைக்கும்
கொன்றவன் ஆடிக் குதித்திடக் கைதந்து
கொண்டாடும் இவ்வுலகும்

மலரும் மலர்ந்துமென் மதுவை நிறைத்துமென்
மனதில் மகிழ்வில்லையேன்
உலகம் சுழன்றுமென் னொளிவான் எழுந்துமென்
உரிமை எமக்கில்லை யேன்
பலரும் பெருந்துன்பம் பட்டுடல்கொன்றிடப்
பிரியும் உயிர்களும் தென்
னிலங்கை அரசன்கை எடுத்தொரு வாளினால்
ஈழம் சிவந்திட்ட மண்

செழித்தென் சிரித்துமென் சீர்கொண்டு வாழ்ந்துமென்
சிதைகின்ற தெமதீழ மண்
களித்தென் கண்டுமென் கனவுகள் ஆயிரம்
கடுந்துயர் கொண்டது மண்
விழித்தென் வெகுண்டுமென் வீரம் எடுத்துமென்
விலைபேசி விற்றனர் மண்
அழிந்ததென், அடடா ஆகுமோ ஈழமென்
றன்புடை தம்பியர்முன்

உளித்தன் கைகொண்டு உடைத்தனன் சிற்பியும்
உருவாக்கும் கற்சிலை காண்
அழித்தனன் கல்தனை அடித்தனன் உடைத்தனன்
அதனாலே வந்தது பொன்
னெழில்தேன் வடித்தன்ன எண்ணத்தின் அற்புதம்
எழுந்தது கற்சிலைப்பெண்
மொழிதான் இதற்கிலை மௌனத்தின் பரிசென்று
மனம்கொள்ளு செயல்,வார்த்தை பின்

பிறந்தென் வளர்ந்துமென் பேசரும் வாழ்விலே
பெருநிலை அடையினுமென்
மறந்தேன் கிடந்தனன் மயங்கும் நினைவென
மற்றெதும் எண்ணாதுமுன்
னிறங்கிடு வாழ்வினில் சுதந்திரமொன் றுதான்
இருப்பதில் சிறந்ததுஎன்
றுறங்கிடா தேடுநீ உரிமையைப் பெற்றிடு
உன் நிலம் உன்னுடை கண்

இருந்தென் நடந்துமென் இறையெண்ணிக் கைகளை
எடுத்தென் இறைஞ்சியு மென்
வருந்தென் றல்தானுமெம் வாழ்வென்ற தாயினோர்
வீசும்புய லென்று எண்
பருந்துமென் பாம்புமென் படும்சண்டை யாவுமமுன்
பாதையில் வரும் தடை காண்
வருந்தேல் எழுந்துநில் வாழ்வில் சுதந்திரம்
வரும்வரை போராடு, வெல்!

Friday, August 26, 2011

நடநட விடியல்வரை..!


படபட தடதட எனவரும் இடர்களும்
விடுபட உயிர்பெறவே
கடகட குடுகுடு எனநட தடைகளும்
பொடிபட உடைபடவே
கொடுகொடு பிடிபிடி எனத்துயர் தருபவர்
பகைவரும் எமைவிடவே
நடநட கிடுகிடு எனசெய லெடுகரம்
இணைந்திடு ஒருபடவே

கடகட எனஎழு கனதுள செயவென
திடமுடன் எடுநடையே
இட இட முடிஉன திருகர மிடுசெயல்
முடிவுற எமதுயர்வே
சட சடவெனப்பகை தொடவரில் கொதியுறும்
அனலென எமதிடையே
மடமட எனஎரி மறமுடன் தருமமும்
பெருநெருப் பெனஎழவே

தொடைகடகடவென நடுங்கிய நிலைவிடு
மடைவெள்ளம் உடைபடவே
விடுவிடு எனவரும் அலையென நடைஎடு
எதிரிகள் விடைபெறவே
தொடுதொடு குடையென வளையினும் தொலைவினில்
உளவிரி விண்அருகே
மடுமடு என அல்ல மலையென நிமிர்வரும்
கொடுமைகள் தறிகெடவே

தடுதடு வருமவர் தமிழரை நெருங்கிட
துடிதுடி உனதுடலே
எடுஎடு கொடுகொடு எதிரிகள்நடைபிழன்
றுடைபட விழகுழியே
மடமைகொள் ளவரிடம் எதுவென்ன பகர்வதில்
ஒருபய னெதுவில்லையே
அடிதர வருமவர் அதைவிட உடனிடு
அதைவிட ஒருசெயலே

Wednesday, August 24, 2011

இயற்கையில் கொலைஞர்

கனிந்து களித்தனகாண் காய்நிறைந்த சோலைமரம்
குனிந்து களித்தனநீர் கொள்கழனி விளைகதிர்கள்
பனித்து களித்தனநற் பச்சைவெளிப் புற்தரைகள்
மனிதர் தலையெடுத்து மகிழ்ந்தனவாம் மன்னர்படை

மணந்து களித்தனமென் மலரிதழோ வாசம் அதை
கொணர்ந்து கொடுத்தின்பம் கொண்டதிளம் பூங்காற்று
வணங்கிக் களித்தனஎம் வாழ்குடிகள் தெய்வம் எனில்
பிணங்கள் கிழித்தின்பம் பெற்றனவாம் எதிரிபடை

விளைந்து களித்தனநல் வயலோடு பெருந்தோட்டம்
வளைந்து களித்தனவான் வில்லெடுத்த ஏழுநிறம்
நுழைந்து களித்தனபெண் நெஞ்சமதில் அன்பர்முகம்
களைந்து களித்தனராம் காதகர் நற்பெண்டிர்உடை

பொழிந்த மழைகுளித்து பூமரங்கள் சிலிர்த்தன,வான்
எழுந்த ஒளிகுளித்து இளம்பயிர்கள் வளர்ந்தன,எம்
அழிந்த உடல் கிழித்து ஆறாகிக் குருதிதனும்
வழிந்த கடல் குளித்து வாழ்ந்தனராம் எங்கள்பகை

எட்டநின் றாடியது இன்னிசைக்குப் பாம்பு, மரத்
தொட்ட இலைஆடியது தென்றல்வர, வானமுகில்
விட்டு மழைதூறல்விழ வண்ணமயில் ஆடத் தலை
வெட்டிமகிழ்ந் ஆடினராம் வீதியிலே எமையெதிரி

கொட்டியடி முரசமதைக் கொண்டபகை தீரவெனக்
கட்டியெம தீழமதைக் காத்திடுவோம் நாளுமென
எட்டிநட இன்தமிழின் ஏற்றமதைக் கண்டுவிடு
சட்டமதைக் கொண்டுபகை தள்ளிச்சிறை பூட்டிவிடு!

Tuesday, August 23, 2011

என்ன? என்ன? என்னடா?


நேர்மையென்ப தென்ன என்ன, நீதி என்பதென்னடா?
போர்புரிந்து மென்ன என்ன, போர்விதிகள் எங்கடா
பாரிழைத்த தென்ன என்ன, பார்த்து நீதி கேளடா!
ஊரழிக்க மன்னன் என்ன, எமன் விடுத்த தூதனா?

கோலமிட்டு மென்ன என்ன, கோவில்கட்டி என்னடா?
ஆலமிட்ட கண்டன் என்ன, அசுரனைஅ ழிப்பரோ?
காலமிட்ட தென்ன என்ன, கன்னியர்க்கு மேனிதான்
கால்மிதித்துக் கொல்லு என்று காலதேவன் சட்டமா?

காலைப்பூ மலர்ந்த தென்ன, காய் வெயிலும் கொல்லவா?
பாலையில் விழுந்த நீரைப் போலஈழம் செல்லவா?
சேலையை இழந்த பெண்கள் சீரழித்தல் கண்டுமா?
மூலையிற் படுத்துறங்க மேனிஎன்ன கல்லோடா?

வீறுகொண் டெழுந்து நில்லு வெல்லவென்று துள்ளடா
ஆறுபோ லெழுந்துஓடு அன்னைபூமி வெல்லடா
நீறுகொள்ள மேனிகொன்று நித்தம்தீ கொளுத்துவோர்
கூறுபோட முன்பிடித்துக் கூட்டில்தள்ளிப் பூட்டடா  

வாழையுங் கனிந்துவந்து வாயில் சேருமென்றடா
நாளைஎண்ணி நீஇருப்ப தாகுமாமோ கூறடா
வேளையில் பழுக்குமென்று விட்டுகாத் திருக்கவே
ஏழைஅஞ் சுகம் பறந்த இலகுபஞ்சை எண்ணடா

பொன்னிழைத்த தட்டிலில்நாடும் புன்னகைத்து மெல்லவே
நன்மைசெய்து நாமளித்தோம் நாடுஉங்க ளானதே
என்றுருக்க உள்ளங்கொண்டு ஈழமீவ ரென்பதை
இன்னும்நம்பி அண்டைநாட்டை எண்ணிக்காத் திருப்பியோ

முன்னெடுத்த கால்களோடு மெல்லஉண்மை கண்டுநீ
தன்நிகர்த்த தாருமற்ற தன்மைகொண்டாய் நம்புநீ
உன்னெடுப்பில் நீதகர்த்த போர்களங்கள் எத்தனை?
நின்னைநீயே நம்பு வாழ்வில் நீதிஒன்று காணடா !

Thursday, August 4, 2011

வாழ்க்கை

தேனோடும் மனம் மீதோடும் துயர்
. தானோடும் மகிழ் வேயாகும்
வானோடும் முகில் போலோடும் உளம்
. வாழ்வோடும் வழி தானோடும்
மீனோடும் கடல் மேலோடும் அலை
. போலாடும் அது தள்ளாடும்
தானோடும் அலைமீதோடும் எமைத்
. தாங்கும்ஓடம் வாழ்வாகும்

நிலவோடும் ஒளி நிலம்மூடும் அதில்
. நினைவோ டினிமைகள் குதிபோடும்
பலஓடும் முகில் அருகோடும் சில
. அதைமூடும் பொழு திருள்கூடும்
கலையோடும் மனம் தமிழோடும் சில
. காலம் மகிழ்வுடன் இருந்தாலும்
பலமோடும் பெரும் வலியோடும்
. பல துன்பம் மகிழ்வைப் பந்தாடும்

மலைபோலும் மனதிடமோடும் அதில்
. கனிவோடும் நாம் நடந்தாலும்
வலைபோடும் விதி வாழ்வோடும் பல
. வழியிற் துயர்தர விளையாடும்
சிலைபோலும் மனம் இருந்தாலும் அதிற்
. சிலநேரம் விழி வழிந்தோடும்
நிலைமாறும் துயர் தனை ஓடும்வகை
. நினைவை மாற்றிடும் நிலைவேண்டும்

விழிமூடும் வரை வழிதேடும் பெரும்
. வாழ்வில் எதுவரை உரமோடும்
எழிலாடும் மலர் இதழ்காணும் மெது
. இதயம் கொண்டிட வாழ்ந்தாலும்
வழிதோறும் பல குழிகாணும் அதில்
. வீழ்ந்தே அடிபட வலிதோன்றும்
எழிதோடும் நல்ல இயலோடும் அதை
. இல்லா வகைசெய்து எழுநீயும்

வாழ்வோடும் அது வானோடும் சுடர்
. போலாகி ஒளிவந்தாளும்
நாள்கூடும் வரை போராடும் மனம்
. பேராழித் திரை போலாடும்
வீழ்வோடும் பெருவளைவோடும் அது
. வீழ்ந்தாலும் உடன் வீறோடும்
ஆழ்வோடும் வெகுஅழகோடும் அது
. அலைந்தும் உயர்ந்திடக் கரைநாடும்

இனிதோடும் மனம் இதுபோலும் நிலை
. இருந்தும் வாழ்ந்திட வழிதேடும்
கனிதேடும் கிளி என்றாகும் படி
. கலையில் இனிமையை மனம்தேடும்
பனிமூடும் அது விழிமூடும் பின்
. படபட வென்றே இடி தோன்றும்
எமை நாடும் எதுவென்றாலும் அதை
. எதிர்கொள்ளும் மனம் இறை வேண்டும்

மீனோடும் அதுஆறோடும் அலை
. மீதோடும் அது சேர்ந்தோடும்
ஏனோடும் சிலஇளமீன்கள் அதில்
. எதிரோடும் நிலை போலோடும்
தானோடும் குளிர் தண்ணீரில் இவை
. தடுமாறும் அது இடம்மாறும்
தேனோடும் அத் திரைநீரில் அவை
. தேடிச் சுகமும் கொண்டாடும்

வசந்தம் வீசும் காலை.!

இனிதொரு நாளில் எழுகதி ரொனும் இலங்கிடு குவிவானம்
பனிதரு காலை பசும்விரி புல்லில் படகுளிர் மெய்காணும்
தனியிவன் பாதம் தரைபட மலராய் தருவது கிளர்வாகும்
புனிதமும் போற்றி இருளினை ஓட்டி எழுகதிர் ஒளிவீசும்

மனிதரின் வாழ்வும் மகிழ்வினைத் தேடும் மனதொடு விரைந்தோடும்
தனியிடம் போகும் பாதையில் எங்கும் தவறுகள் உருவாகும்
மனதினி லின்றி மகிழ்ந்திட வென்று மறுபடி மனம் வாடும்
கனவினில் காணும் வர்ணங்கள் யாவும் காலையில் மறந்தாகும்

தமிழது கண்டு தாகமென் றாகி தருவது எதுவேனும்
அமுதமென் றெண்ண அதுசுவை மாறின் தமிழது எனையேசும்
குமிழிடு குளிர்நீர் குமிழிக ளென்றும் கடுதியில் பெரிதாகும்
அமைதி என்றாலும் அளவினில்மாற அது உடைந்தழிவாகும்

புவனமும் காண இயற்கை யென்றெண்ணி பகலினில் நிலவோடும்
தவறென மீண்டும் இரவினில் வந்தே தண்ணொளி தனைவீசும்
அவசரம் வாழ்வில் எழுவதுஎன்றும் மனிதரின் மனமாகும்
நவமுகம்கொண்டு நாம்சிரித்தால் நல் மலர்களை மரம்தூவும்

பசுந்தரை மீது பனி வருமோடி பகலவன் அதை வெல்லும்
வசந்தமும் ஓடி வரும்மன தெங்கும் மலர் மணம் நிறைவாகும்
கசந்திடு மனமும் கனிவுற எண்ணக் கனவுகள் விரிந்தாடும்
இசைந்திட மனமும் இன்பமொன் றேதான் எண்ணியே உறவாடும்

Monday, August 1, 2011

காண்பது பொய்யா?

ஆழவெளி விண்ணோடை அழகுத் தோற்றம்
அதனூடே  வெடித்தோடும் ஒளியின் சீற்றம்
கோளமெனச் சுழல்கின்ற குண்டுக் கற்கள்
குலைந்தோடும் தீநாக்கு குழம்பின் வீச்சு
தாழமுக்கக் குளிர்தணலைத் தணியாத் தன்மை
தாமிவைகள் விழிகொண்டும் தெரியக் காணேன்
ஏழையிவன் அறியாதோர் அதிசயங்கள்
இருப்பனவோ, பொய்யோ யான் ஏதும் அறியேன்

 
நீலவிண் பொய்யென்றால் நிலவும் பொய்க்கும்
நீள்நதியும் குளிரோடை நீந்தும் மீனும்
காலமெழும் தேன்கனிகள் கடலும் பொய்க்கும்
கதிரெழுந்து வீழுமதன் காட்சி பொய்க்கும்
ஆலமரம் அதனூடே அணையும் பட்சி
அலைந்து வரும் தென்றலதும் அழகுப்பூக்கள்
கோலமயில், கூவுங்கருங் குயிலும் பொய்யே
குவலயமும் பொய்யேஎன் கூற்றும் பொய்யே

வாழுகிறோம் மெய்கொண்டு வந்தோம் மண்ணில்!
வாசமெழும் மலர்க்கண்டு கொண்டோம் இன்பம்!
வீழுகிறோம் எழுகின்றோம் வீசும் காற்றில்
வாசமது கொண்டோம் பின் வாழ்வும் கண்டோம்
நாளும்பொழு தாகவரும் நம்மைக் காக்கும்
நாணலிடை தொட்டசையும் நல்லோர் தென்றல்
ஆழவிடும் மூச்சின்றிப் பொய்க்கு மாயின்
அத்தனையும் பொய்த்து விடும் அகிலமன்றோ?

அலையாடும் தூரத்தே அணில்கள் ஓடும்
அழகுமயில் துளிவீழ அசைந்து ஆடும்
தலையாடும் இளங்காற்றில் தருக்கள் ஆடும்
தானாடி சலசலக்கும், தொலை தூரத்தில்
நிலவோடும் நிற்காது நெருங்கி மேகம்
நிலமோடும் அதனோடு நிதமும் ஓடும்
கலைகொண்டு காண்கின்றேன் காணுமிவை எக்
காலமும் பொய்யாவதிலைக் காணல் மெய்யே!

Thursday, July 28, 2011

தீயின்றி சுட்ட தேகம்

செந்தணல் கொண்டு தீமூட்டாதே திரும்பிப் பாரம்மா
. .சிங்களமன்னன் எங்களை இன்று செய்வதுபோலம்மா
எந்தழல் கொண்டு எரித்தாலும் அது இயற்கையில் தவறம்மா
. .எரியும் உடலில் சந்தணம்பூசு இரங்கிடு இறையம்மா
கந்தகம்கொண்டு எரித்தானாம் அந்தக் காதகன் செயலம்மா
. .கைளில் அந்தப் பாதகம் வேண்டாம் கைகளைக் கழுவம்மா
வந்ததுபோதும் நின்றதுகாணும் வாழ்வினில் என்றம்மா
. .வைத்த கணக்கில் குற்றமிருக்கு வார்த்தையைக் கேளம்மா

சந்திரன்கூட செங்கதிரோனும் சுற்றுகி றாரம்மா
. .சுந்தரவானில் விண்சிறுமீனும் எத்தனை நாளம்மா
வந்தவர்போவார் வாழ்விதுவென்று வைத்தது எமதம்மா
. .வாழ்வெனக்ககூறி வதைப்பதுதானே வையக விதியம்மா
பந்தெனவந்து பட்டதும் ஓடும் பாவப் பிறவியம்மா
. .பனிபோல் தோன்றி பகலுள் காயும் பாசக் கனவம்மா
இந்தொரு வாழ்வில் நிரந்தரம் இல்லை ஏனோ கூறம்மா
. .இருப்பதும் போவது வருவது இயல்பே என்றதுமேனம்மா

பூக்களின் வாழ்வு போதுமே நாமும் புதுவான் தாரகையாய்
. பொன்னொளிவானில் என்றுமே வாழும் புதுநிலை தாஅம்மா
ஈக்களின்வாயில் தேனினை காட்டி ஏய்த்தது போதும்மா
. இனித்ததுவாழ்வு என்றுநினைத்தோம் இதுவே தவறம்மா
தூக்கமும் இரவும் தந்தது யாவும் துயரத்தின் பிறப்பம்மா
. தோலினுள் தசையும் குருதியும் கொள்ளத்தோன்றுது அழிவம்மா
தீக்குள் எரியாத் தேகமும் ஒளியில் தோலும் தசை கொள்ளும்
. தொட்டால் உணராத் தேகம் செய்தால் துயரம் இல்லையம்மா !

Wednesday, July 27, 2011

என்னைத் தீயென வாட்டாதே!

(காய்ச்சல் வந்து உடல் கொதிக்கும்போது எப்படி எண்ணத்தோன்றும்?)

புண்ணாகிப் போனதே மேனி - என்ன
பொல்லாத காலமோ சொல்லடி தேவி
கண்ணான பட்டதோ மேனி - யாரும்
காணாத எழிலோடு கனவிலே தோன்றி
மண்ணாளும் வேந்தனின் ஜோதி - கொண்ட
மாசறு மேனியன் ஆனேனோ ஓடி
எண்ணாது பொய்சொல்லி மாற்றி -இங்கு 
எவர் செய்ததோ துயர் இப்படி வாட்டிக்

கொள்ளுதே தேகமும் கோடி - துன்பம்
கொண்டவன் ஆகிட மெய்நொந்து பாதி
உள்ளுரம் போனதே வீதி - விண்ணில்
உலவியே தேய்ந்ததோர் நிலவென்று மாறிக்
கள்ளமும் கொள்ளுதே ஆ..நீ, - என்னைக்
காத்திட பின்னிற்ப தேன்சக்தி தேவி
எள்ளிவன் என்றெண்ணி கிள்ளி - எங்கும்
எறியாது ’அவசியம் வாழ்`வென்று  கொள்நீ

பாதாள பைரவன் கட்டி - என்னைப்
பாம்பொடு குழியிட்டு பண்ணுமோர் துன்பம்
வேதாளம் இரண்டுகை பற்றி - உடல்
வேகிடத் தீயினில் விட்டதோர் துன்பம்
போதாது என்றிடப் பல்லை - நீட்டி
பெரிதுடல் கரியெனும்  பேய்போலும் பெண்கள்
காதோடு ஆவெனக் கத்தி - கரம்
கொண்டதோர் ஈட்டியை உடலெங்கும் குத்தி

கொதியெண்ணை குளிப்பாட்டி மேனி - எங்கும்
கொதித்திடக் கும்மாளம் இட்டுமே சுற்றி
கதியற்ற என்னையும் சீண்டி - எங்கும்
காணாத சுகம்கொண்டு ஆடுறார் தேவி
மதிகெட்டு வீழ்ந்தனே பாவி - இந்த
மலைபோலும் துன்பமும் மாற்றடிதேவி
புதிதென்று பூமியில் பூத்த - நல்ல
பூவாக மீண்டும்நான் பொலிவுறச்செய் நீ !

தள்ளாத போதிலும் பாடித் - தாயே
தமிழ்மீது பற்றினைக் கொண்டவன், ஆற்றின்
வெள்ளமென் றாகவேநீந்தி - நீ
விளையாடி மகிழஇன் தமிழ் கொண்டு ஊற்றி
அள்ளவே குன்றாநல் லமுதம் - ஈயும்
அரும்பெரும் சுரபியென் ஆகுவேன் -  காற்றை
உள்ளிடும் மூச்சினைக் காத்தால் - இந்த
உலகதன் பாரமும் பெரிதோ நீ யோசி

Monday, July 25, 2011

அனுபவம் -நீயே கற்றிட வேணுமடா !

நிலவுகாயுது தனிமையிலே அந்த நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே அந்த நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர என்றும் உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் அதன் உரிமைக்கு யார் பொறுப்போ?

கனவு பலவிதம் காண்பதெல்லாம் அதுகற்பனையாம் மனமே
கடிதமலர்களில் வாசமில்லை அவை காகிதமானதுவே
மனமும் வானத்தில் பறந்துவிடும் ஒரு மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் அதை மறந்திடு விரைவினிலே

தீயில் கைகளை வைக்கமுன்பு அதை தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு அந்த தீயது வெறும் ஜடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே அந்தகுலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் இது குடிசையின் வெறும்தரையே

காய்ந்த மலர்பின்பு மலர்வதில்லை மனம்காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் புதுகனவெழும் துளிர்த்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு அந்த திங்களும் முழுமையிலே
தேனில் இனிய நல்லொளிபரவ அது தினம்வலம் வருமுலகே

சேர்ந்த உறவுகளோடுதினம் நீ சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் இலை சிந்திய நீருறவு
நேர்ந்த அனுபவம் பள்ளியிலே எந்த நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா இந்த நிஜமெனும் வாழ்க்கையதே!

வானத்தொலைவிலே நீயிருந்தாலென்ன? வண்ணஒளிவருதே
கான நெடுமரக் கூடலிலே நான் காணும் பெரி தொளியே
நானுமிருப்பது காட்டுக்குளே எனைநாடியும் விலங்குகளே
ஊனைவிரும்பியே சூழ்கையிலே உனைக் காக்கவும் முடியலையே

Sunday, July 24, 2011

எங்கள் தாய்த் திருநாடு - ஈழம் (சிறுவர் பாடல்)


ஈழத் தமிழ் திருநாடு -அது
எங்கள் அழகிய தாய்திருநாடு
வானிற் பறந்தங்கு சென்றேன் -நானும்
ஆகா என்னவொரு அற்புதம்கண்டேன்

மாமாவின் வீ டதன்பக்கம் -பல
மாமரம் உண்டு மரக்கிளை தன்னில்
தாவும் குரங்குகள் போலே - தொற்றித்
தூங்கிக் கிளைமீது துள்ளிக் களித்தோம்
தென்னை இளங்காய் பறித்து - நல்ல
தேனில் இனியிள நீரும் குடித்தோம்
புன்னைமர நிழல்மீது - கூடிப்
போயிருந்தே பலபாடல் படித்தோம்

வாழைமரம் பலஉண்டு – அதில்
வந்தகுலைதனில் தேன்கனி உண்டோம்
ஆழக் கிணறதன் பக்கம் – சென்று
அள்ளித் தண்ணிரூற்றி ஆனந்தமானோம்
கோழி அடைத்த தோர்கூடு -அதில்
குஞ்சு பத்துப்பலஉண்டெனக் கண்டேன்
பொத்திப் பிடிக்கவோர் குஞ்சை -கோழி
கொத்தவர அதை விட்டோடிப் போனேன்

மாட்டு வண்டிதனில் ஏறி - எங்கள்
மாரியம்மன் கோவில் பொங்கிப் படைத்தோம்
மேட்டுவழி கல்லுவீதி -அதன்
மீது கடகட என்று குதித்து
ஆடிக் குலுக்கியே ஓடும் - வண்டி
அத்தனை பேரும்  குலுக்கிச் சிரித்தோம்
சுட்ட வடையுடன் பொங்கல் செய்து
வைத்து வணங்கிப்பின் உண்டு களித்தோம்

வேலி முளைத்த கொடியில் -காலை
வேளை குண்டுமணி தேடி எடுத்தோம்
வாயில் நெல்லிக்கனி வைத்து உண்ண
வந்த கசப்பினை நீருண் டினித்தோம்
போலி நாத சுரம் செய்து இலை
பூவரசு கொண்டு பீப்பிஎன் றூதி
நாலோ ஐந்து குரும்பட்டி - கொண்டு
நல்லொரு தேரும் செய்து இழுத்தோம்

பச்சை வயல்காடு சென்றோம் – அங்கு
பார்த்து விளைந்த கதிரினைத் தொட்டோம்
இச்சை யுடன் வரம்பேறி - அதில்
ஏறி விழுந்துடை நீரில் நனைத்தோம்
’சோ’ என்றடித்திடும் காற்றும் அங்கு
சுற்றி பறந்தன பட்சிகள்யாவும்
முச்சந்திப் பிள்ளையார் கோவில் - கண்டு
முன்னே நின்றுபோடத் தோப்புக்கரணம்

டண் என்றொலித்தது கோவில்-மணி
தானும் இடியென எண்ணிக் கலங்கி
விண்ணில் பறந்தனபட்சி - அவை
வட்டமடித்துப்பின் வந்த நற்காட்சி
எண்ணற்ற மாடுகள் கூட்டம் -அவை
எங்களை போல் அம்மா என்றிடக் கத்தும்
அண்மையிலே ஒரு நாயும் - அதை
அச்சம்கொண்டும் துரத்திப் பின்ஓடும்

தாமரைப் பொய்கையும் கண்டோம்- குளிர்
தண்ணீரில் நீந்தி மலர் கொய்துகொண்டோம்
போரடித்தே வைத்த வைக்கோல் -அதன்
மேலேபடுத்து நம்மேனி கடித்தோம்
ஆயிரம் இன்பங்கள் உண்டு -அவை
அத்தனையும் எங்கள் தாய்திருநாடு
பாவி எதிரிபுகுந்தான் - எப்போ
ஈழம் அமைத்துநாம் எம்வளம் மீட்போம்?

Thursday, July 21, 2011

எனக்கு மட்டும் ஏன்?

நீராடும் போது குளம் சேறானதேன்?
நிலவென்று நானிருக்க நெருப்பானதேன்?
போராடு எனவாழ்வு புதிர்நிறைத்ததேன்?
பூகம்பம் ஒன்றெழுந்து பொலிவழிந்ததேன்?

தேரோடும்வீதியெங்கும் செடிமுளைத்ததேன்?
திசைமாறிப் புரவிகளும் தேரிழுத்ததேன்?
வேரோடு வீழு என்று விதி வகுத்ததேன்?
வீழென்று புயலடித்து வெறுமை தந்ததேன்?

ஆற்றோரம் மலர்மீது அனலடித்ததேன்?
ஆற்றாது அவைகருகி அழிந்து போவதேன்?
சேற்றோடு வெள்ளம் ஊரைச் சேர்ந்தழிப்பதேன்?
சிறுகுடிசை சரிந்து கொடுஞ் சேதி வந்ததேன்?

காற்றோடு கனவுகளும் கலைந்து போனதேன்?
கண்ணீரும் வற்றும்வரை கலங்கி அழுவதேன்?
நேற்றோடு இருந்தவாழ்வு நிலை குலைந்ததேன்?
நினைவோடு துயரெழுந்து நிறைவு கொண்டதேன்?

சிலையெண்ணிக் கல்செதுக்கச் சிதறி உடைவதேன்?
சித்திரமும் தீட்டவர்ணம் சிந்தி யழிவதேன்?
கலையென்று நடனமிடக் கால் வழுக்குதேன்?
கவியென்று தமிழெழுதக் கைவலிப்ப தேன்?

மலையென்று நம்பிவர மண்குவியல் காண்
மன்னவனென் றெண்ண வெறும் மனிதனிவன்தான்
இலையென்று ஆனபின்னே உயிரெதற்குத் தான்
இல்லையிரு சக்தியவள் என்னருகில் தான்!

Sunday, July 3, 2011

குடைவானம் கூப்பிடுதூரம் 1


காதலிளங் கன்னியவர் கண்ணசைவைக் காட்டிவிடக்
காளையர்க்கு மாமலையும் கடுகாம்!
மாதர்களின் புன்னகையில் மேகமும்வ ளைத்திடுவர்
மின்னலெனப் பாயுஞ்சக்தி வீச்சாம்!
நாதஒலி ஓமெனுமோங் காரயிசை கேட்கும்விரி
வானிடையே காணுமிறை தேவி
யாதுமவ ளானவளின் பார்வைதனை நீபெறவே
வானம்வரும் கூப்பிடுமோர் தூரம்

ஒதுமறை வேதஒலி வானெழுமோர் காலைதனில்
உள்ளமதில் தேவஇசை பாடி
மாதினையோர் பாகனருள் மூடிவிழி நாமும்தொழ
மேன்மையுறும் வாழ்வதனைப் போல
ஏதும்மனந் தான்முயல எட்டுவது கிட்டாதென்
றெண்ணிமனம் சோர்ந்தநிலை மாறி
யாதுமென தாகுமென வீரமனம் கொள்ளுகுடை
வானம்வரும் கூப்பிடவே ஓடி


நிலவெழுந்து  புவிதழுவும் நேரமதில் ஓரிரவு
நின்றிருந்தேன் வான்விரிப்பின் கீழே
பலதுயரம் பட்டதிலே பால்நிலவின் குளுமைபெறப்
பார்த்திருந்தேன் குவிமணலின் மேலே
உலவிவருந் தென்றல்தொட ஒளிவிழியால் தாரகைகள்
உலகமதைக் கண்சிமிட்டிக் காணும்
அலைகடலின் மீன்களென ஆயிரங்கள் கோடியென
அழகொளிர விண்மீன்கள் தோன்றும்


நேர்தெரியுந் தாரகைகள் நிர்மலவான் வீதியிலே
நிற்கும்விதம் கற்பனையைத் தூண்ட
போரெடுத்துப் பூமிகொள்ளப் பால்தெருவின் வாசிகள்தீப்
பந்தங்களைக் கொண்டதுபோற் கண்டேன்
தேரோட்டி மகன்தீண்டத் தேவி யவள் இடைமணிகள்
திமிறிநிலம் விழுந்தவிதம் போலும்
காரிகையர்  ஊர்முழுதுங் கார்த்திகையின் தீபஒளி
ஏற்றியதாய் வானிருக்கக்  கண்டேன்


ஒருகணமென் திகிலடையும் உள்ளமதி லோர்நினைவு
உருளுமிந்த புவிமடியில் நின்றே
பெருவிரியும் வானிடையில் புரண்டுருள ஓடுகிறேன்
புவியிழுத்த தாலுலகில் நின்றேன்
கருமையினுட் சுழல்புவியுங் கதியெடுத்த வேகமிடை
காந்தவிசை வலுவிழந்து போனால்
உருண்டகன்ற விண்ணிடையில் உதிருமொரு பூவெனவே
உலகிதைவிட் டுச்சி வானில் வீழ்வேன்


பொதுவிலெந்த பொருளுமின்றி பூமிவெறும் கல்லெனவே
பெரியதொரு வெடிவெடித்துப் போகும்
இதுவுமொரு அதிசயமே இயற்கையதன் தருமகுணம்
எமையிருத்தி உயிர்கொடுத்த தாகும்
புதுமைசிலர் பூமியையே பங்குவைத்து எல்லையிட்டு
பொருளெனவோர் விலைபேசி விற்பர்
இதைவிடப்பே ரரசுகளோ இதுஎமது பூமிஎன்று
எளியவரை இனமழியக் கொல்வர்


முதுமைவரை ஆடுமவர் முடிவுதனில் ஆவதென்ன
மோனஇருள் சூனியத்தில் தூக்கம்
கொதிகுழம்பு சீறுமொரு கோடிஒளிச் சூரியன்கள்
கூட்டமதில் ஆவிகலந் தேகும்
இதுவிருக்க ஒருபுறமாய், உண்மையில்நா மிருப்பதெது
இத்தரையிற்  பாதமுள்ள போதும்
பொதுவினி லெம் மீதியுடல் பூமியுடன் வான்வழியே
பெரியதொரு வட்டமிட்டு ஓடும்

கடுகதியில் விரையுமொரு புகையிரதம் உலகமெனில்
காசுகொடா பயணிகளே நாமும்
நடுவழியில் இறங்குமொரு நாள்வரவும் எவரறியா
நழுவுமொரு விதிமுடியும் யாவும்
தொடுவதிவர் பாதம்நிலம், தேகமெதில் வான்வெளியில்
திரிவரிவர் கதிரவனைச் சுற்றி
விடுஒருசந் தேகமிலை விரல்தொடுமிவ் வானமதே
விரிந்ததெனில் கூப்பிடுமோர் தூரம்


உச்சிவானக் குடைவிரித்தும் உள்ளேநீல வண்ணமிட்டு
உண்மையிலே வைத்தவரை அறியேன்
நிச்சயமாம் பூமிதனை நம்முயிர்க்கு வாழ்வளித்து
நித்திரைக்கு தொட்டிலென ஆட்டி
அச்சினிலே தான்சுழன்று ஆடிப்புவி பாயுமொளி
ஆதவனைச் சுற்றிவரச் செய்தார்
உச்சகடு வேகமதில் ஓடுகிறோம் வான்வழியே
உடல்தொடுவான் கூப்பிடுமோர் தூரம்


ஆழவெளி விண்பரவி ஓடுகின்ற சீற்றமுடன்
ஓங்கியெரி வான்சுடர்கள் மோதி
வீழவெடித் தாயிரமாய் வேகமுடன் வான்சிதற
வீதியெங்குந் தூசெனவே மாறும்
வாழுமெங்கள் வையகமும் வண்ணபுயல் தீபறந்து
வந்துடலை வேகவைக்கு மென்றோ
சூழுங்குடை தான்விரித்துச் சுற்றிவளி வட்டமிட்டுச்
சுந்தரவாழ் வீந்தனளோ சக்தி!

(கவியரங்கம் ஒன்றிற்கு எழுதியதன் ஒரு பகுதி )

Friday, June 17, 2011

ஆனந்தக் கூத்தாடு !

கூட்டி லடைத்திடும் கொல்லும் விலங்கினம்
நாட்டினை ஆள வைத்தாய்
நாட்டி லிருத்திட வேண்டிய மக்களை
நன்கு சிறையி லிட்டாய்
ஏட்டி லெழுதிடக் கூசும் கொலைகளை
ஏனோ எம்மேல் விதித்தாய்
வாட்டி வதைப்பதென் றாலிவர் தாமென்று
வாழ்வி லெழுதி விட்டாய்

ஓட்டிக் களைத்துமண் மீது விழுந்திவர்
உள்ளம் தவிப்ப தெல்லாம்
கூட்டிக் கைகள்தட்டிக் கொண்டாட வோஇந்த
கோல மெமக் களித்தாய்
போட்டி போட்டாயிரம் ஆயிர மாய்வந்து
புண்பட மேனி செய்தாய்
காட்டிப் படம்செய்து காணக்கொ லைசெய்ய
கன்னிய ரும்கொ டுத்தாய்

ஊட்டி வளர்த்தவர் ஓர்விரல் வாயினில்
இட்ட சிறுவ ரெல்லாம்
நாட்டின் எதிர்கால மன்னர் களென்றுமே
நாமும் நினைத் திருந்தோம்
சூட்டில் சிதறிடச் சுக்கு நூறாகிட
சொல்லி இன மழித்தே
மூட்டி எரிதீயில் முன்னே வைத்தேயவர்
முற்றும் கருகச் செய்தாய்

ஆட்டிப் படைத்திடும் ஆண்டவ னேஇதற்
காமொரு தீர்வில் லையா
போட்டி யிட்டேபல நாடுகள்சேர்ந் தெமை 
பொல்லா வதை யிடவா
வேட்டை யிட்டேவெறி நாய்களைபோ லெமை
வீழ்த்திக் கடித்த வர்க்கே
நாட்டை யும்நம்தமிழ் தேசத்தையும் தந்து
நல்ல வர மளித்தாய்

கேட்டு மிரங்காது எம்மைய ழிக்கஏன்
இத்தனை கோபம் கொண்டாய்
போட்டுப் புரட்டியு டல்கொத்திக் கொன்றிடப்
புல்லருக் கெல்லா மீந்தாய்
கூட்டுச் சதிசெய்து கொள்கையி லொப்பந்தம்
கொண்டது முண்டோ சொல்லு
ஆட்டு சுழன்றோடி ஆனந்தக் கூத்தாடு
அள்ளிடக் கொஞ்சம் என்று

Tuesday, June 7, 2011

அன்றும் இன்றும்

அன்று

நீலவான நெற்றி நீறென மேகத்தை
நீள இழுத்துக் கிடந்தது
காலக்குமரனும் கால்நடந்த வழி
காற்றி லழிந்திட போனது
சேலை முகிலணி கீழடி வானிலே
சென்றன புள்ளின மானது
மாலையல்ல அது மாதவம் செய்தவர்
மங்கிய பொன்னொளிநாளது

ஆலைகளில் தங்கள் வேலைமுடிந்தவர்
ஆனந்தித்து வீடுசென்றனர்
காலைமுதல் இல்ல வேலைமுடித்திட்ட
காரிகைகள் எழில்கொண்டனர்
சாலையோரம் விழிவைத்துத் தமதவர்
சற்று பொழுதினில் வந்திடும்
மாலைத் தனிமையை காதல்மொழிகொண்டு
மாற்றும் துணைவரைக் காத்தனர்

போதை யெடுத்திடும் இன்கவிபாடியே
பேதையர் நாட்டியமாடினர்
மாதை அழகிலும் மல்லிகை வாசமும்
மற்றவர் கண்டுளம் ஏங்கினர்
காதை இனித்தமிழ் கீதமடைந்திடக்
காணப்பொறுக்காது சின்னவர்
பாதை தனில் பெருங் கூச்சலிட்டோடிடப்
பற்றி இழுத்தனர் பெற்றவர்

காகம் பலகூடி நீர்நிலையோரத்தில்
கங்கை நீராடிக் களித்தன
போகும் நிறமெனப் பார்த்தனவோஎனப்
போயொரு சின்னவன் கண்டனன்
தேகம் சிலிர்த்து தெளித்தன நீரினை
துள்ளிப்பறந்த பறவைகள்.
தீமைகளற்று சிறந்தது அன்றைய
தீந்தமிழீழமென் தேசமே



இன்று

தேரைச்சிறிதொரு சின்னச் செடிக்கீந்த
தேசத்தின் மன்னன் தமிழ்வழி
பாரை வணங்கியே அஞ்சியும் கெஞ்சியும்
பாவம் பழியில்கிடந்தது
போரைநடத்திய வீரமும் தீரமும்
பற்றிய தீயினில் நீரென
ஊரை அழித்திடும் தீயெழ ரத்தமும்
ஊற்றி அணைத்துக் கிடந்தது

மார்பில் அடித்துக் கதறிய மங்கையர்
மானம் அழியக் கிடந்தனர்
போர்வை கிழித்தெழு பேய்களோ சிங்களம்
புத்தநீதி விட்டுக்கொன்றனர்
வேர்வைவிழ வயற் பக்க முழுதவர்
வீதிகளிற் பிணமாகிட
கூர்கொடும் வாளினைக் கையிற்பிடித்தவர்
கொன்று குவித்து விரைந்தனர்

கோவில்களின் மணியோசை இறப்பவர்க்
கூதும் சங்கின் ஒலியாயின
ஆவி பறந்தது நீர்கொதித்து அல்ல
ஆட்கள் உடல்செத்துப் போயின
பாவிகள் வெட்டிட ஆடிஅடங்கின
பாவையர் பூவுடல் பார்த்துமே
கூவிக்கதறியே ஓடினர் சின்னவர்
கூட்டிவர யாரு மில்லையே

மாலை மலர்ந்திட தென்றலில்வந்தது
மக்கள் இறந்தமெய் வாசமும்
வேலைமுடித்தவன் கைகளில் ஊறிய
வெட்ட வழிந்ததோர் ரத்தமும்
பாலைவனமென ஊருமழிந்தது
பாலையில் நீர்வற்றிப்போனதாய்
காலை நிலமூன்றி கொல்லப்பகை அழக்
கண்ணீரற்று ஈழம் நின்றது





Wednesday, June 1, 2011

மே 18

வெட்டுதோ மின்னல் வீழ்ந்ததோ வானம்
வெடிவெடித் தெங்கணும் அதிர
முட்டுதே புகையும் மூளுதே தீயும்
மேகமே வீழ்ந்திடத் தோன்றி
தட்டியே சிதறித் தடதட வென்றே
தாவுதே துண்டுகள் அய்யோ
சுட்டுமே தீயிற் துடித்ததே உடல்கள்
சூழ்பெருந்தீ எரித்திடவே!

கொட்டிட வானிற் குண்டுகள் நூறாய்
குடிசைகள் வீடுகள் கூரை
பட்டுமே சிதறிப் பறந்தன உள்ளே
படுத்தவர் எழுந்துமே பதறிச்
சட்டென ஓடித் தப்புவோம் என்று
சற்றொரு கணமதில் எண்ண
விட்டதோ குண்டு விஷமெனப் பரவி
விழுத்தியே உடல்கருக் கியதே!

தந்தையும் தாயும் பிள்ளையும் சேர்ந்து
தழுவிக் கிடந்தனர் செத்து
அந்தநாள் பூமி கண்டதோர் பிஞ்சும்
அழுதிட எரிந்ததீ பற்றி
வெந்திடும் தீயால் வேகிடும் தேகம்
விளைதிட்ட ஓலங்கள் கோரம்
முந்தையர் முதியோர் மங்கையர் பாலர்
மரணித்த விதமோபயங் கரம்

வந்ததும் புரியா வாழ்வதும் அறியா
வசந்தங்கள் தேடிய பூக்கள்
கந்தகம் தூவி கருகியே முறுகி
கால்கை துடித்திடச் செத்தார்
எந்தநல் லிதயம் இறைவனைத் தொழுதும்
எரிந்திடும் தீவிட்ட தில்லை
செந்தமிழ் பேசிச் சிரித்தவர் மேனி
சிங்களம் கொன்றிடத் தீய்ந்தார்

பச்சைம ரங்கள் படுத்திடும் வீடு
பதுங்கிய குழிகளே சிதையாய்
இச்சைகொள் மாந்தர் இருத்தியும் நிறுத்தி
எரிந்திடக் கொள்ளியும் வைத்து
துச்சமாய் எண்ணித் துடித்துடல் அலற
தீயெனும் குண்டுகள் போட்டு
மிச்சமே யின்றி முழுஊ ரழித்து
மூடிஓர் சுடுகாடு செய்தார்

வந்திடும் உலகம் வாழ்வினைக் காக்க
என்றவர் நம்பிய போதும்
சுந்தர தேசம் சுழல்புவி யாவும்
செத்துநீ போஎன விட்டார்
மந்தைகள் நாமோ மனிதமே இல்லை
மரம்செடி கொடிகளை விடவும்
எந்தவோர் வகையில் இழிந்தவர் சொல்லு
இதையும்போய் யாரிடம் கேட்போம்

செந்தமிழ் ஈழம் சிறியதோர் பூமி
சிவந்திட இரத்தமாய் ஆறு
கொந்தளித் தோட குற்றுயிர் ஆகிக்
குரலின்றி கிடந்துமே அழுது
கந்தனே நல்லூர், கதிர்காம வேலா
காத்திடு என்னைநீ யென்று
நொந்துமே சோர்ந்து நீள்கரம் கூப்ப
நினைந்துமே அறிவழிந் திட்டார்

சிந்தியே கண்ணீர் தேகமும் பதற
சேர்ந்துமே அலறிடக் கேட்டும்
வந்தவர் யாரோ வாளெடுத்தங்கே
வெட்டியே மீந்தவர் கொன்றார்
எந்தவோர் தெய்வம் இரங்கவேயில்லை
ஏனய்யா கந்தனே கூறு
சந்தண மேனிகள் செந்தணல் தின்றிட
சென்றது எங்கு நீசொல்லு

காற்றின் புலம்பல்!


தேடுகிறேன் காணவில்லை தேன்மலரே நீயெங்கும்
வாடும் தமிழனுக்கோர் வழிஒன்று கண்டதுண்டோ
கேடும் துயரங்களும் கெட்டுமனம் சோரஉயிர்
ஆடுமொரு ஊஞ்சலென ஆவிஉலைந் தோடுகிறான்

வெள்ளை நிறமல்லிகையே விதி என்பதிவ் வழியே
அள்ளிப் புயலெனெவே அடித்தோடக் கண்டனையோ
நள்ளிரவில் கொல்லுவதும் நாடுபெருந் தீயெரியக்
கொள்ளிவைத்துக் கொல்விதியை கண்டீரேல் சொல்லிவிடு

கூவி இசைத் தேன் படிக்கும் கோகிலமே இவ்வழியில்
காவியுயிர் தோள்சுமந்து காலன்வரக் கண்டனையோ
ஆவி,உடல் தான்பிரித்தே அள்ளுமுயிர் கொஞ்சமில்லை
சாவு இனிப்போதுமென்று சற்றே நிறுத்திவிடு

கார்இருளின் நேர்முகிலே கனத்தோர் மழைபொழிய
நீர்அருவி ஆறெனவே நீபோகும் மண்ணதிலோ
ஊரை அழித்தவனால் உதிரமது பெருகி நதி
ஆறாகி ஓடவைத்தோன் அழிய இடிவீழ்த்தாயோ

வட்டச்சு னைநடுவில் வந்த’அலை’ காலுதைக்க
பட்டதுயர் தான்மறந்து பங்கயமே ஆடுகிறாய்
தொட்டபகை காலுதைக்கத் தூயதமிழ்த் தம்பிசிலர்
விட்டமொழிக் காடுவது விந்தைஉனைக் கற்றதிலோ

ஊரின்எழில் பார்த்துலவும் ஓடுங்கரு வான்முகிலே
நீரைப்பொழிய முன்னே நின்றுபதில் சொல்லிடுவாய்
ஊரை உறவுகளை உத்தமரைக் காக்கவெனப்
போரைநடத் தியவர் போனவழி கண்டதுண்டோ

காற்றின் சுதந்திரமும் காணுமதன் விடுதலையும்
பேற்றில் பெரும்பேறாய் பேசிடுவர் எனையெண்ணி
நேற்றோ பூந்தென்றலென  நீதிக்காய் நின்றவர்கள்
சீற்றப்புய லாகிப்பின் சென்றதிசை கண்டவர் யார்?

பூவே, விரிவானே, போகும்முகில், புள்ளினமே
நாவே நறுந்தமிழை நல்லிசைப்போர் கொன்றுஒரு
சாவே பிடியென்று சுற்றும்புவி தந்திடினும்
போ,வீறு கொண்டிவரோ புத்தீழம் செய்திடுவர்!

Saturday, May 28, 2011

ஈழமண்ணில் ஒரு விடியல்..?

(பெரிய கவிதை. நேரம் ஒதுக்கி அமைதியாக பாருங்கள் நன்றி!)

பனி படர்ந்து புல்வெளியில்பரவி எழில்கொல்ல
பசுமைகொண்ட இலையழுது பலதுளி நீர்சிந்த
சினமெழுந்து கதிர்பனியைச் சுட்டழித்து வெல்ல
சிறகடித்துப் பறவையினம் சேதிசொல்லும் காலை
கனிசுவைக்க மாமரத்தை கிளி பறந்து சேரும்
கலகலத்த இலைமறைவில் கனிகிடந்து நாணும்
இனிபழத்தின் முகம்சிவக்க இளங்கிளியோ உண்ணும்
ஈழமண்ணின் இயற்கையான இனியதொருகாலை!

வனமதிலே கள்நிறைந்து வாசமிடும் பூக்கள்
வந்துமலர் கொஞ்சியெழும் வான்பறக்கும்பூச்சி
இனம்மகிழச் சுதந்திரத்தை எண்ணும் ஈழமாந்தர்
ஏழைகளின் கனவுபோல என்றும் அதைத் தேட
குனியும்நடை கொள்கவிகள் கொப்புதனில் தாவி
குழைஉதிரக் கலகமிடக் காணுமிளங் குயிலும்
தனியிருந்து ஒருகிளையில் துயரெழுந்து கூவ
தவழுமிளங் காற்றொலியைத் தானெடுத்து ஓடும்

எதிர்நிமிர்ந்த பெருமலையோ இசைக்குரலைக்காற்றின்
இடமிருந்து எடுத்தெறிய எதிரொலிக்கக் குயிலோ
மதிமயங்கி துணையை எண்ண,, மறையு மிருள்கண்டு
மனமகிழ்வில் கதிரவனும் அனல்பெருத்து மூளும்
நதிநடந்த விதம் நெளிந்து நெடுங்கிடந்தபாதை
நடைபயணம் கொள்ளவுமென் நேரெதிரே முன்னே
விதிசினந்த சிறுவர்சிலர் வேதனையில் கூடி
விரிஉலகம் நிறைதமிழில் மொழியுரைத்தல் கேட்டேன்

கருமைநிறம், மேனிகளில் கசங்கியதோர் உடையும்
காய்ந் துலர்ந்த உதரமிடை கடும்பசியின் சுவடும்
இருவிழிநீர் வழிந்தவைகாண் இருமருங்கும் காய
எழுந்த துயர் பூமுகங்கள் எரித்த நிலை கண்டேன்
சரிகுழலும் வாரிவிடச் சற்றும் மனம் எண்ணா
சிறுமிகளும் தேகமது செழுமை பெருந்தீமை
தருமெனவே அஞ்சினரோ தனதெழிலை நினையா
தரைவிழுந்த புழுதிபட்ட  தோர்மலராய் கண்டார்

அவர்களுடன் பலசிறுவர் அணியிருந்துபேசி
அதிசினந்து கொதியெழவும் ஆற் றொருவர் இன்றி
பவள இதழ் பனிபடர்ந்து பதைபதைத்துக் கூறும்
பலகுரலும் கேட்டு ஒரு பக்கம்நின்று பார்த்தேன்
தவளுமிளந் தமிழ்மொழியின் தடமழிக்கஎண்ணி
தவறிழைத்து இனமழிக்கும் தரணியிலே இவர்கள்
எவர் விளைத்த தவறுஇதோ ஏதிலியாய் நின்று
ஏங்கியழக் காரணம் மென்? இவ்வுலகே யன்றோ!

சிறுவர்தமை சேர்த்துப்பெரும் போரெடுத்தீர் என்று
செந்தமிழர் படையிற்குறை சொன்னவர்கள் இன்று
சிறுவருடன் மழலையரும் சிறுமியரும் கொன்று
சொல்லரிய தொகையினரைச் சிறையிலிடச் செய்தார்
உருவம்மாறி அங்கமின்றி உள்ளதெலாம்நொந்து
உயிர் பிழைக்க ஏதும்வழி இல்லைஎன்று கூறும்
சிறுமைதனை இவ்வுலகே சேர்ந்தளித்தகோலம்
சேர்ந்திவர்கள் செய்தகுற்றம் யார்கணக்கில் போகும்

(ஒரு சிறுமி)
அம்மா என்னைப் பெற்றவளே நீ அருகில்வாராயோ
அள்ளிகட்டிக் கொஞ்சிப்பேசு அன்பைத் தாராயோ
செம்மாதுளையின் முத்தே என்றே என்னைக் கூறாயோ
செந்தேன் தமிழில் சொல்லில் இனிமை சேரப் பேசாயோ
எம் மாபெரிதோர் துன்பம் கொண்டேன் இழிமை செய்தாரே
இருகண்வழியும் பெருநீரோடும் இமைகள் தழுவாயோ
வெம்மை கொண்டே இதயம்வேக விம்மிக் கேட்கின்றேன்
விடியும் வாழ்வோ விரைவில் என்றாய் விட்டேன்சென்றாயோ

மாவில் தூங்கும்கிளியைப்போலுன் மடியில்கிடந்தேனே
மலரைத்தூவி தலையிற் சூட்டி மகிழ்வைத் தந்தாயே
பாவி எங்கள் வாழ்வில்வந்தே பலியைக் கொண்டானே
பார்க்கக் கண்முன் பட்டப் பகலில் சுட்டுக் கொன்றானே
கூவி கேட்டும் தெய்வம்வாழும் கோவில் கும்பிட்டும்
கொன்றார் உயிரைக் கொல்லும் செயலில்குறைவே எழவில்லை
ஆவி உடலை விட்டுப் பதறி அலறிச் சாவென்று
அகிலம் கொண்ட அமைதிதானும் அதிலும் குறைவில்லை

(மற்றவள்)
படையும் அரசும்அழிப்பார் எம்மை பாவம் என்செய்தோம்
பகலில் இரவில் கடையில் தெருவில் பள்ளிக்கூடத்தில்
நடையாய் நடந்தே நம்மைகொன்று நாட்டைச் சிதைக்கின்றார்
நாங்களேதும் கேட்டால் உலகோ நம்மைப் பிழைஎன்றார்
தடைகள் போட்டுச் சாலை, தெருவில் தனியேபோய்விட்டால்
தலையேஇன்றி வெட்டிதுண்டாய் தரையுள் புதைக்கின்றார்
இடையே காக்கஇளைஞர் எழுந்தே எம்மைக் காத்திட்டால்
எல்லாஉலகும் ஒன்றாய் கூடி எரிகுண்டெறிகின்றார்

(சிறுவன்)
புகையும் தீயாய் எரியும் ஊரை பேசும் மொழியறியா
பிறிதோர் இனமே செய்தாரிங்கு, போனோமா நாமும்?
பகைவர்தம்மின் ஊரும் சென்றே படுத்தோர் தலைவெட்டி
பாதிஇரவில் வீட்டில் தீயைப் பற்றச் செய்தோமா?
நகைகள் திருடி நடுவீட்டினிலே நாக்குத்தொங்கத்தான்
நாமும் சிறியோர் பெற்றோர் தூக்கி நாசம்செய்தோமா?
வகைகள் தொகையும் காணாஅழிவை வாழ்வில் செய்கின்றார்
வையம்கண்டும் தொன்மைத்தமிழை வாரிப்புதை என்றார்

(இன்னொருவன்)
நாடும் உலகும் எதிராய் நின்றால் நல்லோர் என்செய்வார்
நாளும் சாகும் நம்மை காப்பாய் நாடே என்றோடி
ஆடும் வரையும் ஆடிக்கத்தி அலறித் தெருவோடி
அடர்ந்தகாடு அலைகொள்கடலும் அருகே நின்றாலும்
ஓடும் ஒழிவும் பயனோ நிலவுக்கொழித்தே பரதேசம்
நாடிச்சென்றால் விடுமோ அதுபோல் நம்மைக் கொன்றானே
வீடுமின்றி வெல்லும் திடமும் வெற்றிக் களிப்பின்றி
வீரிட்டலறி மயங்கும்வாழ்வே விதியாய் போயாச்சே !

(மற்றுமொருவன்)
ஆண்ட இனமோ மீண்டும் ஆள அடிமுன் வைத்தாலே
ஆழக் குழியைவெட்டும் உலகோ அறத்தின் எதிராமே
மீண்டும்இவரோ விட்டோர் பிழையை மீளச் செய்கின்றார்
மெல்ல பேசி உண்மைவிட்டு மிருகத்தைக் கூட்டி
நீண்டதாளில் நீதிக்கதைகள் நெடிதே எழுதித்தான்
நெஞ்சம் ஆற நெளிந்துவளையும் நீசப் பாம்பானார்
ஆண்ட இனமோ அழியும்வேகம் அடிக்கும் புயலென்றால்
அணைக்கும் உலகக் கரங்கள் ஆமையானால் பிழைப்போமா

(முதல் சிறுமி)
வேண்டாம் நம்பி விதியென் றெண்னி வீணேபோகாமல்
விரைந்து எழுவோம் வீரம்கொள்வோம் விடிவைக்காண்போமே
கூண்டில் ஏற்றிக் குற்றம் புரிந்தோர் கொள்ளும் நிலைகாண
கொள்கை கொண்டு நாமும்கூடிக் குரலைத் தருவோமே !
ஆண்ட இனமும் ஆளக்கேட்டால் அண்ணாந்தே பார்த்து
ஆளைஏய்க்கும் உலகில் நாமும் அறத்தைக் கேட்போமே
மீண்டும் எழுந்தோர் அரசு தொலைவில் மீட்கப் புறப்பட்டார்
மெல்லத் தெரியும் விடிவை விரைவில்கொள்ள புதிதாவோம்

(எல்லோரும் சேர்ந்து)

வெல்லட்டும்தமிழ்தேசம்! விளையட்டும் புதுவாழ்வு !!
செல்லட்டும் பெருங்கொடுமை! சிதறட்டும் பகைஆட்சி!!
கொல்லட்டும் துயர்,துன்பம்! கொள்ளட்டும் மனமின்பம் !!
தொல்தொட்டும் எம்பூமி திரும்பட்டும் எம்கையில்!!
சொல்லட்டும் புவி வாழ்த்து! சுதந்திரமே எம்மூச்சு!!
நில் தொட்டு நெஞ்சுறுதி நீகொண்டுஎழு வெல்வோம்

Wednesday, May 25, 2011

விரைந்து வாருங்கள்


விடைகொடுத்த மைந்தர்களே வெளியில் வாருங்கள்- நீங்கள்
விதைத்தமுளை வளரவிட்டோம் விரைந்து பாருங்கள்
தடை கொடுத்த விதியழித்தோம், தலையின் பாரங்கள் - இந்த
தரணிமீது இறக்கிவைக்கும் தருணம் பாருங்கள்
கடைஇழிந்த சிங்கமகன் கதியைப் பாருங்கள் - இனிக்
காண்பர் அவர் கைவிலங்கு கட்டிப் போடுங்கள்
படை இழைத்த துன்பம் இனிப் போகும் பாருங்கள் -எங்கள்
படகுதமிழ் ஈழம் செல்லும் பயணம் பாருங்கள்

நாளை எங்கள் விடிவுதேடி நடந்து செல்கிறோம்- ஒரு
நாடு காணத் துன்பங்களைக் கடந்து செல்கின்றோம்
வேளைஒன்று விடியுமென்று விரைந்து போகிறோம் - எங்கள்
வேதனையை தோள்சுமந்து விம்மி அழுகிறோம்
காளைகளே நெஞ்சில்உரம் கொண்ட மைந்தரே - பக்கம்
காணும் தீரக் கனல் எறித்த காரிகை களே
வாழவேண்டி வாழ்வையீந்த வண்ணப் பூக்கள்நீர்- இனி
வாசம் வீச விடியல்நேரம் வந்து சேருங்கள்

காடு காணும் நாலுகாலில் கொல்விலங்குகள்-  கூடக்
கண்ணியத்தைக் கையில் கொள்ளும் கயவராமிவர்
கேடுசெய்து பெண்மை, பிள்ளை கொன்றுவீசிய -அந்த
கீழ் நிலைத்த கேவலத்தைக் கேட்கும்காலமே
வீடு,மக்கள், வீதி,சந்தை வீழ்த்திக் குண்டினைக் - கெட்ட
விசமெடுத்த வகைகருக்கி வேகவிட்டனர்
ஆடை நீக்கி அவர் உதைத்து ஆனந்தித் ததும் - நாமும்
ஆணையிட்டு நீதிகேட்க அணி திரள்கிறோம்

ஆடு,மாடு,கோழி கூட மிச்சமில்லையே-  ஒரு
ஆலகாலநஞ்சை வீசி யாவும் கொன்றவர்
கோடுபோட்டு நோயைத் தீர்க்கும் கோவில்போன்றவை- கூட
குற்றம் செய்யும் கயவர்கண்ணில் கொலையின்பீடமே
கேடுசெய்த தீயஅரசு கொன்றபூமியில் புத்த
கோபுரங்கள் போட அத்திவாரமிட்டது
தேடுவோர்க்குதெய்வம் ஈயும், கேடு கேட்டவர் தம்மை
கேள்வி கேட்டுக் கேடுஈந்து கீழ் உதைத்திடும்

ஏவிவிட்ட பேய்கள் எங்கள் இனமழிக்கவே என்றும்
ஏழையாக நாமிருந்து ஏங்குவதாமோ?
கேவி அழும் நேரம் இனி கெட்டவர்பக்கம்- தீர்வு
கிட்டவரும், காலமினி எங்களின் பக்கம்
சாவு எங்கள் சொந்தமென்று ஆகியதெல்லாம் மாறி
சரித்தி ரத்தை எழுதுகைகள் நிறத்தை மாற்றிடும்
நீவிர் மீண்டும்பிறந்து மண்ணில் பூத்திட வேண்டும் இன்னல்
நீங்கி மீண்டும் ஈழம் தேசம் புதிதென ஆகும்

Monday, May 23, 2011

சத்தியத்தீ எழும்!


    சத்தியத்தீ ஒன்று எழும்

நெஞ்சங்கனலாய் நினைவுகள் தீயாக
செந்தணல் பூத்தது தேசம் -ஒரு
கொஞ்சம் இழந்தோமா கொட்டிக்கொடுத்துமே
கூட்டிஅள்ளி உடல் எரித்தோம்.- கொடு
நஞ்சில்கருகியே நாலுதெருவிலே
நாதியற்றுக் கிடந்தோமே -இன்னும்
மிஞ்சுதே பாவங்கள் மீதியும் உண்டென
மேலும் சிறைகளில் வாசம்!

வஞ்சகர் நெஞ்சமும் வன்மை கொண்டானது
வாழ்வது தானென்ன பேயோ -ஒரு
வெஞ்சினம் கொள்ளவிளைத்தவர் நாமதோ
வீண்பழி கொண்டுழன் றோமே! -வெறும்
பஞ்சினைத் தீயெனப் பற்றியெரிந்தது
பாலகர் பெண்டிர்கள் தேகம்-வெறும்
பிஞ்சுகள் பூக்களைப் போட்டு உதிர்த்திட
பேயாய்  அவர் கொண்டதாகம்

காந்தி வழிதனில் வந்தவர் கண்டது
கத்தியும் ரத்தமும்தானே -மன
சாந்திகொண்டே, தலைவெட்டிக் குவிக்கையில்,
சத்தியம் தூங்கியதேனோ -அட
முந்திவந்தே இவர் முற்றுமழிக்கையில்
சிந்தை தமிழ் கொண்டுபாடும் -பெரும்
வேந்தே குறுநில வித்தகன் புத்தகம்
பற்றிக் கவி கொண்டதேனோ

ஊரே எரிகையில் ரோமாபுரிமன்னன்
கையில் பிடில்கொண்டு நின்றான் -ஈழ
தேசம் எரிகையில் செந்தமிழ் மன்னனும்
செம்மொழி பாடிக் களித்தான் -இங்கு
யாரும் இரங்கிட வில்லை அமைதியில்
சுற்றிச் சுழன்றது பூமி -அடி
வேருடன்வெட்டித் தமிழினம் கொன்றிட
விண்ணில் பரந்ததுஆவி

 பச்சை விசத்தினைப் பாலில் கலந்தவர்
பண்ணிய நீசத் துரோகம் -நல்ல
இச்சகம் சொல்லியே அத்தனை பேரது
நெஞ்சைக் கிழித்தது பாவம் -ஒரு
முச்சந்தி வீடதன் முன்னேகிணத்தடி
முள்ளிவாய்கால் படுகோரம் -இவர்
நச்சுப்புகையெழ வைத்த குண்டுஅள்ளிப்
பிச்சு எறிந்தன யாவும்

பட்டுடை கொண்டு பணத்தில் புரண்டொரு
பஞ்சணையில் தூங்க நீயும். இங்கு
வெட்டுடல் கொண்டுநாம் வீதியில் வீழ்ந்துமே
ரத்தம் குளித்திடலாமோ -ஒரு
சட்டமியற்றி பின் விட்டசிங் காசனம்
வீற்றிருக்க வழிதேடி நீயும்
கட்டை அடுக்கித் தமிழ்குலத்தைச் சிதை
வைத்து எரித்திடலாமோ?

கொட்டிய குண்டுகள் வீழ்ந்து வெடித்திட
கூடி எரிந்தன தேகம் -இன்னும்
கெட்டிதனமென வெட்டி ஒழித்திடப்
பட்ட துயரதும் பாவம் - இவர்
கொட்டிய கண்ணீரும் விட்டசபதமும்
தொட்டழிக்க பொங்கிப் பெண்கள் -அவர்
குட்டிகுழந்தைகள் சத்தமிட்ட பெருங்
கூக்குரலும் உனைக் கேட்கும்

சுட்டெரிக்கும் ஒரு சத்தியத்தீ பெருஞ்
சுடர் அனல்கொண்டு மூளும் -அது
மட்டும் நீதிஉண்மை விட்டு இருந்திடும்
கெட்டவிதி கொஞ்சம்துள்ளும் -எமை
வெட்டிக் கொலைசெய்ய விட்டவிதி மீண்டும்
வந்ததிசையில் திரும்பும் -ஒரு
கெட்டசமயம் அணைந்திடவே காலம்
கேள்வி கேட்டு உனை வெல்லும்
(காலில் விலங்கிட்டு தள்ளும்)

Saturday, May 21, 2011

என்ன உலகமடா..!

கத்தும்கடலே பெருகிவிடு, கயவர் கூட்டம் அழித்துவிடு
செத்தும் காணச் சிறுமையரை தீயே பற்றி எரித்துவிடு
வித்தும் முளையும் பூவென்று வெறியர் கிள்ளி எறிகின்றார்
கொத்தும் மலராய் மேனிகளைக் கோரம் வெட்டிக் கொல்கின்றார்

சட்டம் போட்டு விதியெழுதி சரமாய்வார்த்தை தான் கோர்த்து
முட்டிமோதி விளையாடி மெல்லச் சுற்றுது பூவுலகு
வெட்டிபோடும் கைகளினை வேடிக் கையாய் விழிகண்டு
சுட்டுகொல்வோர் தோள்களினை தொட்டே தோழமை பேசுகிறார்

ஒற்றைக் கையை மேலோங்கி ஒன்றுமில்லை பாரென்று
மற்றக் கையில் வாள்தூக்கி மறைவில் எங்கள் மெய்கிழிக்க
பற்றுக் கொண்டு பார் என்று பாவிஉலகம் ஏமாற்றி
வெற்று கையை இரண்டாக்க விம்பம் வைத்துக்காட்டுதடா

வைத்துக் கட்டும் சொல்லாக வார்த்தை இரட்டை விதமாக்கி
மெத்தப்புழுகும் செயல்கண்டு மேனிதுடிக்கக் காண்கின்றேன்
சொத்தும்சுகமும் இதோஎன்றால் சுழலும் வேகக் காற்றாடி
வைத்துகொள்ளும் வேகத்தில் வானத்தேறி சுற்றுகிறார்

வெட்டிப் போடப் படமாக்கி வியந்து பார்த்த உலகமது
தொட்டில் இருந்து சுடுகாடு செல்லும்வயது மாந்தர்களைக்
கட்டிக் கொல்லும் காட்சியதை காட்டக் கண்டும் உலகமது
சட்டை செய்யாக் கண்களினை சாட்சி கருதி மூடுவதேன்

உள்நாட்டுள்ளே பேசிடுவோம் ஒருவர்வேண்டா என்கின்ற
கள்ளன் தானும் காட்சிக்காய் கடவுள்வேடம் போட்டுவர
துள்ளிக்காலில் வீழ்ந்தெம்மை சிவனே என்று கும்பிட்டு
கொள்ளிப்பேய்க்கு வாழ்வாகி கூடப்போ நீ என்கின்றார்

சொல்லும் வரையில் இராமகதை சொல்லக்கேட்டு காலையிலே
நல்லாள்சீதைக்(கு) அண்ணன்தான் ராமன் இலங்கா ஆளுகையில்
பொல்லாக் குணத்தோன் இராவணனும் உள்ளேவந்து போர்செய்தான்
கொல்லு என்றே கூத்தாடும் கூட்டம் கொண்டது உலகமடா

செல்லு வீதி ராஜமனை சிறந்த இவர்கள் அரசாங்க
கல்லுமனைகள் முன்னாலே கைகள்கோர்த்து கதறியழு
நில்லு நீதி கேட்டெழுந்து நேரே கண்முன் முகம்பார்த்து
சொல்லு, நீதி தாவென்றே சுற்றும் உலகைப் புரட்டியெடு

Thursday, May 19, 2011

முத்துத் தமிழ் இனம்!

முத்துத்தமிழ் சத்தம் இடுமினம்
வெட்டித்தலை கொத்திக் கிழியென
சட்டம்ஒரு சுற்றும் புவியிடை உளதாமோ
சொத்துக்களைத் தட்டிப் பறிதமிழ்
கற்பைக்கெடு, குத்திக் கொலையென
புத்தம்மதம் கற்கும் விதிமுறை உளதாமோ

கொத்துக்குலை மொத்தத் தமிழ்அழி
கத்திக்குரல் சத்தமிட ஒழி
மக்கட்தலை சுட்டுக் கருகென வெடிபோட்டு
சுற்றும்பெரு யந்திரப் பறவையும்
சுற்றிப்பொது பொத்து பொதுவென
கொட்டும்இடி குண்டுப் பெருமழை பொழிந்தாக

முற்றும்அழி ஒற்றைத் தமிழனும்
சற்றும் விதிபெற்றுக் குறைஉயிர்
உற்றுக்கொள வெட்டிக் குழியிடு எனவாக
கத்திக்குடி மக்கள் முழுவதும்
திக்குத்திசை விட்டுத் திரிபடும்
சிக்கல்பட நச்சுக் கலவையை எறிந்தானே

வெட்டித்தலை கொட்டக் குருதியும்
பட்டுத்தெறி ரத்தக் கறையதும்
சுட்டுக்கொலை யுற்றுக் கலிபட புவிதானும்
பட்டுக்கிட செத்துத் தொலையென
சொட்டும்மனம் இரக்கப் படவிலை
சட்டம்ஒரு முற்றும் குருடென விழிமூட

பத்தும்பல கட்டுக் கதைகளை
விட்டுப்பலர் புத்திக் கழுவிட
சுத்தம்மனம் புத்தன் மகனென உலகெண்ண
செத்தும்விழும் ரத்தப் பிணமதை
கொத்திகுடல் தின்னுங் கழுகதின்
வர்க்கம் இவன் வெட்டக் குலையென வீழ்ந்தோமே

பக்கம்இரு ரத்தக் கொலைவெறி
யுத்தப்பிரி யெத்தன் அரசது
கத்தையெனக் கட்டுப் பணமது கரமீய
மத்தம்பிடி பித்தன் கொலையிடு
வித்தைதனை மெத்தப் பழகிய
குத்துக்கொலை மன்னன் தலையிடு முடிவீழ

விட்டுத்துயில் தட்டு கதவினை
சட்டத்துறை தக்க பதிலிடும்
குற்றந்தனை சொல்லிக் கொடு,பதில் நீகேளாய்
வெட்டிக்குடல் ரத்தக் குடியனை
சட்டத்தவர் இட்டுச் சிறையிடை
குற்றந்தனை ஒத்துக் கொளும்வரை விலகாதே

கட்டித்தடி வெள்ளை கொடியுடன்
விட்டுச்சுடும் வீரக் குழலதும்
வைத்துத்தனி வெற்றுக் கரமுடன் இவர்போக
கட்டிக்கயி றிட்டு கொடுமைகள்
சுட்டுத்துடி கொள்ளக் கடும்வதை
இட்டுக்கொலை செய்யும் கயவரை விடலாமோ

வெட்டித்தமிழ் மக்கள் கொலையிட
கத்திக்கிலி பற்றிக் கதறிய
மொத்தக்குரல் விட்டு தப்பென விடுமாமோ
வட்டிச்சக மொத்தத் தொகைபெற
கத்திக்குரல் விட்டுக் கதறிட
பட்டுத்துயர் முட்டச் சிறையிடை தள்ளாயோ

சுற்றிச்சுழல் வட்டப் புவியது
சுற்றும்ஒளி உச்சிக் கதிரவன்
கற்றைஒளி புத்திப் புகழொடு தலையோனும்
ஒற்றைச்சிறு கையிற் கடைவிரல்
சற்றுத்திசை பக்கம் அசைவிட
வெற்றித்திரு மைந்தர் குமரரும் படையோடி

எட்டிக்களம் தொட்டுப் பகைவரை
முட்டிப்பெரு மின்னல் இடியெனப்
வட்டப்புயல் பட்டோர் நிலைதனை விளைத்தாரே
கட்டிப்படை சுற்றிப் பலமெடு
முத்துத்தமிழ் சொத்துக் குலமதின்
சத்துப்பெரு முற்றும் மறமெடு தமிழ்வீரன்

கத்துங்கடல் சுற்றும் பெருவெளி
மற்றும்நிலம் முற்றும் முப்படை
பெற்றுக்குல மங்கை கற்பினை அதிபேண
முத்திப்பயம் சித்தம் கொண்டுலை
பட்டுப்பல மொக்குப் பதருகள்
அச்சம்இது மிச்சம் மிலையென போர்கொண்டு

ஒற்றைக்கரம் கொண்டே உருவிய
வெட்டுக்கொலை வாளைச் செருகிட
பக்கம்அணைந் தன்பை முதலினில் பரிவாக
பெற்றுப்பல வெற்றுக் கதைகளை
விட்டுப்புறம் வெட்டத் துணிவுற
வட்டக்கதிர் தானும் மேற்கிடை மறைவானே

அச்சம்இலை சற்றுப் பொறுபொறு
சுற்றும்ஒளி மற்றத் திசைதனில்
எட்டிக்கதிர் விட்டே விடியலில் எழுந்தேகும்
திட்டமிடு துட்டர் குணமுடன்
சட்டம்எமை முற்றும் புரிந்திட
எட்டுத்திசை மெச்ச பிறந்திடும் தமிழீழம்

கடவுளின் கருணை இதுவா?

அழவென்றே ஓரினம் செய்தான்- அதை
அகிலத்தில் ஒருபக்கம் வாழென்று வைத்தான்
விழவென்று உடல் செய்து விட்டான் -அதில்
விலையற்ற உயிரையும் நிலைகொள்ளச் செய்தான்
குளமென்று வழிந்தோட செந்நீர்- அதை
கொட்டவே  செய்யென்று குணமாந்தர் செய்தான்
களவும்பொய் மொழிபேசி உலகை -அவன்
காலமெல்லாம் நன்கு ஏமாற்ற வைத்தான்

குலையாக கொத்தாக வெட்டி - இவர்
கொல்லென்று கோடரி கத்தியும் ஈந்தான்
சிலையென்று உலகோரைக்கண்டு -அவர்
சிந்தை மகிழ்ந்திட சாந்தமும் செய்தான்
நிலையென்ன இவர்வாழும் மண்ணில் -எவர்
நிமிர்ந்தாலும் உயர்ந்தாலும் நெஞ்சைக்கிழித்து
கொலை யொன்றா கண்முன்னே செய்தார்- உடல்
கொட்டிக் குவித்துமே வெட்டிக் களித்தார்

மலைபோல இவர், மக்கள் மாள -நல்
மறைவில் நின்று காட்சி படமாக்கி வைத்து
கலையென்று கண்நோக்கி நின்றார் - கண்டு
கலங்கிட வேயில்லை அதிசயம் என்றார்
தலை போன உடலோடு தாயை -அன்புத்
தங்கை பெண்மேனியை தரைபோட் டுதைத்து
இலையென்ற கோரமும் செய்து அவர்
இன்பமடைந்திடச் சற்றும் நாணாது

கரம் மீந்து கையும் குலுக்கி - அவர்
காதிலோர் ரகசியம் கனிவுடன் பேசி
வரம் ஈந்து வாழெனச் செய்யும் - இந்த
வையகமா ஏழை வாழ்ந்திடவைக்கும்
கொலை தானும்,கண்டவர் அன்றும்,- இன்றும்
கொஞ்சமும் நெஞ்சமி ரங்கிடக் காணோம்
கலைவிழா கண்காட்சியாமோ - இது
கண்கள் வியந்திட களியாட்ட விழாவோ

உள்ளத்தில் உரம்கொண்டே கேளாய் இந்த
உலகத்தின் மறுபக்கம் இருளென் றுணர்வாய்
அழுதாலும் நீரென்ப தோடி  - அது
அசையாத கல்லையும் அசைக்குமிப் பாரில்
பொழுதான போகமுன் மக்கள்  - நல்
லுயிரோடு வாழ்ந்திட எது வின்னும்வேண்டும்
முழுதாக இனம்போகமுன்னே -  பல
முள்ள இதயங்கள் உருக்கிடவேண்டும்!