Saturday, November 26, 2011

கல்லறையில் பூத்தது மலர்

வளையும் விதமேஅறியா துணிவாய் வீர்ம்கொண்டு
விதைகள் என்றே புவியில் போனாய் வீரர் அண்ணா
மழலைசிறுவர் நாமோ இறைவன் மறதிக் கிரையாய்
முதுகில் பாவச் சுமையை ஏற்றி மண்ணில் வந்தோம்
விளையும்பயிரும் மழையில்நின்றால் வளரும் உயரும்
வசந்தம் வீசும் வயலில் கதிரும் வளைந்தேஆடும்
முளையில் பயிரைபோலே நின்றோம் மேகக் கூட்டம்
முழுதும் குண்டைச் சிதறிக்கொட்ட வாழ்வைக் கண்டோம்

அழவே இல்லை அண்ணா நாங்கள் அழவேயில்லை
அழுதால் கண்ணீர ஊற்றும் விழியுள் எதுவும் இல்லை
தொழவே இல்லை இறைவன் நாமம் சொலவேயில்லை
தொழுதால் கருணை தருமோர் தெய்வம் அதுவும் இல்லை
விழவே இல்லை என்றும் நாங்கள் விழவேயில்லை
வெறுமை வெளியில் கிடந்தோம் விழவோர் இடமும் இல்லை
எழவேஇல்லை இடரைக்கண்டும் எழவேயில்லை
எழுந்தால் விடியும் ஆனால் துணையாய் எவரும் இல்லை

செழுமை மலர்கள் பூக்கும் சிரிக்கும் சிறப்பேகொள்ளும்
சிவக்கும் அடிவான் கதிரைக் கண்டு சிந்தும் எழிலும்
அழுகை ஒன்றே எங்கள் இதயத் தகமே கொள்ளும்
அழலில் இதயம் எரியும் அங்கே இருளே கவ்வும்
மெழுகும் தீயில் எரியும் உருகி முடிவில் அழியும்
மெதுவாய் பரவும் மௌனம் போலெம் மனதும் உடலும்
வழுகித் தென்றல் வானில் முகிலை உரசித் தள்ளும்
வாழ்வில் துன்பம் எம்மைத் தள்ளி உயிரைக் கொல்லும்

உலகில் கண்ணை மூடிகொண்டு உறங்கும் அண்ணா!
உன்னை நெஞ்சில் எண்ணப் பொங்கும் உணர்வுமேனோ?
நிலமும் மீட்க நின்றீர் நெஞ்சில் கனலைக் கொண்டு
நிமிரும் உடலில் புதிதோர் இனிதாம் உணர்வைக் கொண்டு
மலரின் வாசம், மதியின் குளுமை, மயக்கும் தென்றல்,
மன்னன் புகழும், மலையின் திடமும் மற்றும் எதுவோ
பலதும் உணரும் தன்மை உண்டாம் சுதந்திரத்தின்
பக்கம்நிற்போர் கென்றும் வாழ்வில் பயமே இலையாம்

எதுதான் பார்க்கும் ஆசைகொண்டேன் எடுத்துச்சொல்லும்
எதுவோ பாதை ஏறிச்செல்வேன் இடையில் ஏதும்
புதுமை உண்டோ பொன்னாய் வீசும் ஒளியும்தெரியும்
போயே இருளும் விடுமென்றார்கள் பொய்யோ சொல்லாய்
இதுதான் மண்ணின் சுதந்திரம் என்றினிதாய்வீசும்
எழிலா எங்கள் உரிமை என்னும் மலர்கள் வாசம்
பொதுவாய் காணும் வாழ்வில் புகுமோர் வழியைச் சொல்லும்
எதுவுமின்றி மெழுகாய் நாமும் அழியும் முன்னே

வீரம் வேண்டிடுவோம்

வானிருந்து பூமழைதான் தூவாதோ - மைந்தர்
வாழுமுள்ள மெங்குமொளி மின்னாதோ
மேனியெங்கும் புத்துணர்வு பொங்காதோ - கண்கள்
மின்னி யொரு வெஞ்சபதம் கொள்ளாதோ
தேனின்நிலா வான்நடந்து வந்ததென - மைந்தர்
தோன்றி எம்மில் ஒளி கொடுக்க மாட்டாரோ?
தானிருந்த மண்ணை நெஞ்சும் எண்ணாதோ - மனத்
தாகம் கொள் சுதந்திரத்தை தேடாதோ

பூங்கதவு தாள் திறந்து கொள்ளாதோ - ஒரு
பூகம்பமே தோன்றி நிலம் பிரியாதோ
தாங்கும் உரத்தோள் வலித்த மைந்தர்களும் - அவர்
தாளுடைத்து தடபடென்று வாராரோ
வேங்கையொன்று சீறி யங்கு பாயாதோ - தமிழ்
விம்மியழும் வேதனையும் தீராதோ
நீங்குதடா துன்பமென்று பாடோமோ?- உயர்
நீதிகாண ராஜநடை போடாரோ?

மானிருந்து துள்ளுவதாய் மருள்விழிகள் - கொண்ட
மாதர்களும் வீறுநடை கொள்ளாரோ?
தேனிருந்த பூக்கள்தீயும் கொட்டியதாய் - இத்
தேசம் கண்ட வீரம் மீண்டும் கொள்வாரோ?
ஏனிருந்த சேனைபடை முற்றழிய - மனம்
ஏங்கியழ இன்னல் வந்து வீழ்ந்ததுவோ?
கூனியெங்கள் குலம்விழுந்து போனதென்ன - எம்
கொள்கை சொல்லும் நாவழிந்த ஏதுவென்ன?

கோனிழந்து குடியிழந்து காணுகிறோம் - கொடும்
கோடையிடி மின்னல் பட்டுச் சாகுகிறோம்
நானிலமும் நீதிசாக விட்டதுமேன் - அதை
நாடு யாவும் சேர்ந்துமூடி வைத்ததுமேன்?
தானைபடைத் தலைவன் நெஞ்சிற் கொண்டதுமாம் - அத்
தாகம் தன்னை நாம் மறந்து போவதுவோ
ஏனய்யா இச்சோக மெங்க ளோடு இன்னும் - நாமும்
ஏங்கி ஏங்கிச் சாதல் இனி நிற்பதெப்போ ?

தூய வீரம் துணிவுதனை எங்கு விட்டோம் - இல்லை
சொந்தபுத்தி மானம் நேர்மை தவறவிட்டோம்
காயமின்னும் மாறவில்லை நோவெடுத்தோம் - இன்று
கத்திகொண்டு புண்ணில் கீறிக்கத்துகிறோம்
சாயம்தன்னும் தான்வெளுத்து போகமுன்பு - நாம்
சரித்திரத்தின் புருசர்களைச் சற்று எண்ணி
பாயும் வேங்கை யாக வில்லை பாதிதனும் - அதில்
பாதியிலும் பாதிதனும் பாய்ந்திடடா!

பச்சை வளம் பொங்கிய நல்லூர்க ளெல்லாம் - நற்
பனிபடர்ந்த புல்வளர்ந்த பூமியெல்லாம்
மிச்சமின்றித் தன்னுடமைத் தேசமென - அவன்
மெல்லமெல்ல உள்நுழைந்து கொள்ளுகிறான்
அச்சமின்றி நாமிருப்ப தாகுவதோ - ஓர்
அடிமையென்று காலமெலாம் வாழுவதோ
துச்சமென்று உயிர்விடுத்த தோழர்கள்பார் - சிறு
தூயமலர் சாத்தி வீரம் வேண்டிடுவோம்.

Thursday, November 24, 2011

தமிழர் மறம்

கடுமற முடனும் திடமெடு மனமும்
கல்லெனும் தோளுரமும்
விடுஎன அதிரும் விளைவொடு திமிறும்
வீங்கிய திடமார்பும்
கொடுமை கண்டுழற குமுறிடும் மனமும்
கூழென தீ பாயும்
சுடுஎரி மலையின் சொரிகனல் சினமும்
சூழ்வலி மைந்தர்களே!

கொடுமை செய்படையும் கூடியபோரும்
கொன்றுநம் மினமழிய்
எடுகரமீதில் இதையெனக் கொண்டு
இயல்பொடு தலைநிமிர
நெடுமுள தாகத் தமிழினில் மோகம்
நிறைதலை வரும் இவரை
தடு எனவிழியில் ஒருஇமைஅசைய
தடபுட லென மைந்தர்

கிடுகிடு எனவே களமிடை புகவும்
பொடிபடும் பகைவர்களே
நடுவினில் பகையின் வளைபெருவியூகம்
நொறுங்கிட உடைமறவர்
தொடு விரிவானின் சுடர்தரும் ஒளியும்
அதைவிடப் பெரிதெனவும்
எடுமறவீரன் எம்துடை தலைவன்
இயம்பிட வினைமுடிப்பர்

வடுவிலதமது வஞ்சியர் மேனி
வளமொடு உயிர் காப்போன்
கெடுஎனக் குதறும கீழ்மகன் சிங்கம்
தொடும்விலை உயிரெனவே
சடுகுடு ஆட்டம் புலியுடன் ஆடும்
எனமகிழ் வொடுஆடும்
கொடுமையை நீக்க குழுமியமைந்தர்
கொண்டபுகழ் கடலே

குடிபல கொல்லும் கொடியவ னரசும்
கொலையிடும் விலங்கினமும்
அடிதடிப் படையென் றொருதிரு நாமம்
இடுஎன ஈந்தணியாய்
பிடிஎவன் தமிழன் பிரிஅவ னுயிரை
பிணமெனப் புதையெனவே
கொடிதிவர் உலகை கூட்டியே எம்மை
கொன்றது இழிசெயலால்

படைவர மைந்தர் களமிடைபுகவும்
கிடுகிடு எனவெடியும்
குடைசரிந் துடையும் அரசுடை
வளவும் குழுமிய எதிரிகளும்
தொடையது நடுங்கி தொகையென வீழும்
துணைப்படை வகைஎண்ணி
உடை விழ ஓடும் பகைவரென்றாகும்
நிகழ்வினைச் சொலவழகே

Sunday, November 20, 2011

செயல்பட ஒன்று சேர்வோம்

வேலைப் பிடித்தவர் சாமிமுருகனை
வேண்டும்வரை தொழுவோம் - அவர்
காலைப்பிடித்திரு கண்களில் ஒற்றியே
காத்திட வா எழுவோம்
ஓலை பிடித்துநற் கூறும் தமிழ்மக்கள்
ஊரைப் பிடிப்பவனை - அவர்
வேலை விடுத்திட வீடு நடந்திட
வேண்டிய தாற்றிடுவோம்

கூலி கொடுத்திடக் கூடிநின் றாடித் தன்
கொள்கை பிழைத்தவரை - இனி
வேலி அமைத்தவர் வேறுபுறந்தன்னில்
வீற்றிரு என்றிடுவோம்
தோலில் சுரத்தினில் சத்துமில்லா தவர்
சுற்றி யிருக்கவைத்து - அவர்
போலி கணக்கதும் போடும்விடைகளும்
பொய்யெனக் காட்டிடுவோம்

வாடி இருப்பது நாமுமல்ல எங்கள்
வாழ்வுமல்ல எழுவோம் - இனிக்
கோடிஎனப்பல கூடிக்குரல்தந்து
கோவிலமைத் திடுவோம்
நாடித் தமிழன்னை நாற்புறம் காத்ததில்
நாட்டை வளர்த்திடுவோம் - அவர்
தேடித் திரிந்துநல் லுள்ளமெடுத்திடின்
தீங்கில்லை சேர்த்திடுவோம்

வீதிதனில் நின்று வேடிக்கை பார்த்திடும்
வேலையினி விடுவோம் - அவன்
கோதி உயிர்தன்னை கொன்று உடல்வெட்டக்
கூடிஎழுந் திடுவோம்
பாதிமனத்துடன் பையப்பைய நடை
போட்டு நகர்ந்திடிலோ - எங்கள்
நீதி நிலைத்திடும் நிம்மதி காத்திடும்
நேரம்தனை இழப்போம்

கோடிஎனக் காசு கொட்டிக் கொடுத்தாலும்
கொல்லும் உயிர்திரும்பா - அதை
தேடிநடந்தொரு ஏழு லகம் போயும்
எங்கும் பெறமுடியா
வாடி நிற்கும் பெண்ணே வாழ்வுமுழுவதும்
ஊதும்புகை அடுப்பின் - அயல்
கூடிக்கிடந்தது போதும்இனித் தமிழ்
கொள்கை தனைச் விளக்கு

சாடிப் பகைவரின் தந்திரம் சொல்லிடு
சாத்திரம் தானுரைத்து - இனி
ஓடிபிழைப்பது ஓர்வழி என்றவர்
ஊரை விட்டு அனுப்பு
பேடி இனத்தவர் பித்தரும் பொய்மையின்
பேரரும் காவலர்கள் - அவர்
தேடித்திரிவது தெற்கில் இருக்குது
திக்கினைக் காட்டிவிடு

Saturday, November 12, 2011

பூவும் வாழ்வும்

தேன்விழுந்த இலையொன்று தித்திப்பைக்கண்டது
தேடியப் பூவைக் கண்டு
வான் பார்த்தகண்களும் வடிவோடு கர்வமும்
வைத்தாயே அன்புமலரே
ஏன் கொண்டுவாசமும் இனிக்கின்ற தேனையும்
இதழ்மீது சுமந்து நின்றாய்
தான்கொண்ட செய்கையால் தாவுமவ் வண்டோடு
தரைவீழும் வாழ்வுகொண்டாய்

நானிங்கு நிற்பதோ நாள்வாரம் மாதமாம்
நலங்கொண்டு வாழும்போது
தேனிங்கு கொண்டதால் தென்றலுந் திறங்கூற
திகழ்கின்ற மேனியழகால்
தானிங்கு நாளொன்றில் தன்மையைஇழந்தாடி
தவித்துநீ வீழ்தலேனோ
வீணிங்கு வாழ்வினை விதிகையில் தந்ததேன்
விடு உந்தன் முறைமை என்றாள்

”ஒர்நாளென் றாயினும் ஒங்கு புகழென்பது
ஒருகோடி இன்பமாகும்
வேர்போலும் மறைந்திங்கே வெளிகாணா வாழ்வது
வியப்பென்று நகைத்துநின்றாள்
பேர்கொண்டு திசையெங்கும் பிறர்பேச வாழ்வது
பெரிதான போதையாகும்
ஊர்கொண்ட கோவிலில் உள்ளதோர் இறையடி
தோள் சேர்த்தல் நாமேயென்றாள்

இலையாக இருந்தென்ன, இல்லையென வாழ்வது
எவருக்கு வாழ்வுவேண்டும்
கலைகூறு நற்கவி கவிஞரும் போற்றுவர்
காணின்ப மலர்களாகும்
விலைகூறி விற்பவர் இலைதன்னைக் கொள்வரோ
இவர் வேண்டல் பூவையாகும்
இருந்தென்ன வேர்போலும் இருள்கண்டு வாழுதல்
எவருக்கு இன்னும்வேண்டும்”

”ஆனாலும் அழகிகேள், அருந்திடத் தேனையும்
எழில் கொஞ்சு மிதழும் வைத்தாய்
போனாலும் திசையெங்கும் புகழ்மாலை சூடுவாய்
பெயர்தந்து எமையேற்றினாய்
தேனாலும் வாசமும் தேகமென் பாங்கிலும்
திகழ்ந்தாலும் ஒன்று தெரிவாய்
நானாலு இலைகளும் நல்வேருமில்லையேல்
நீவாழ என்ன செய்வாய்

ஆதார மென்றுநம் அகம்மீது பொறுமையென்
றணிகொண்டு வாழுகின்றோம்
நீதாங்கும் தேனையும் நிமிர்ந்ததோர் வாழ்வுக்கு
நீர்கொண்டு ஊட்டுகின்றோம்
வேர்தாங்க வில்லையேல் விழிக்காண அழகினை
விரிகின்ற மலர் கொள்ளுமோ?
தீதாங்கு மாதவன் ஒளிவாங்கி உயிர்காத்தல்
தேவைநம் கடமையன்றோ?”

Wednesday, November 9, 2011

அன்பும் வாழ்வும்

வெள்ளை மலர்கள் வீசுந்தென்றல் விடியுங் காலைகளும்
உள்ளம் எங்கும் உண்மையன்பும்  உலகின்கண் செய்தாள்
தெள்ளத் தெளியும் நீரோடைநற் தேனாம் கனிமரங்கள்
அள்ளித் தூவும் மலர்கள் காட்டின் அமைதி அவள் செய்தாள்

துள்ளித் திரியும் மானின்ஓசை, தூங்கும் இலைதொட்டே
தள்ளும் தென்றற் காற்றின் சத்தம் தந்தே எழில் செய்தாள்
வெள்ளிக் கொலுசாய், விரையும் நதியில் விளையும் சிறுஓசை
கொள்ளை யின்பம் யார்தான் செய்தார் கோலத்திருமகளே

பள்ளித் திண்ணை குருவும் பாடம் பயிலப் பலநூல்கள்
கொள்ளத் திறனும் அறிவும் கொண்ட குணமும் குறுமுகமும்
துள்ளித்திரியும் இளமை இன்பம் தேடும் இரு விழிகள்
வெள்ளிச் சுடரும் விண்ணும்வெளியில் வியக்கும்வகை செய்தாள்

சுற்றுமுலகும் சூழும் அண்டம் சூரிய மண்டலமும்
கற்றும் அறியாக் கற்பனைக் கெட்டாக் காலச் சக்கரமும்
மற்றும் மனமும் மனதில்விரியும், மாபெரும்கற்பனையும்
சற்றும் அறியோம் சக்திஎன்றோர் சக்திதான் செய்தாள்

குற்றம், கொல்லுங் குணமும்,  குருவி, கொள்ளப் பருந்தினையும்
வற்றும் குளமாய் வாழ்வும் வற்ற, வாடும் மீன்களென
முற்றும்பாசம் அற்றோ ரும் மவர்மௌனப் பெருமூச்சும்
அற்றோர் ஏங்கும் அவலங்களென்  றகிலம்கொள வைத்தாள்

 விற்றும் வாங்கும் பொருளேயல்ல விளையும் பெருஅன்பு
கற்றுப்பெறுதல், கடனோ அல்லக் கருணை எனும் வெள்ளம்
தொற்றும் நோயாய்ப் பரவி எங்கும் தோற்றம் கொள்வதில்லை
பற்றும் பாசம் படைப்பில் அவளே பார்த்துத் தரவேண்டும்



அன்பே இல்லா உள்ளம் தன்னை அவளே செய்தாளோ
தென்றல் சீறிப் புயலாய் மாறச் சித்தம் கொண்டாளோ
நன்பெய் மழையும் நல்லோர் பயிரும் நாட்டில் வளர்வித்தாள்
வன்மைகொtண்டோர் விலங்கைச் செய்து வாழ்வும் அழித்தாளேன்

மலையும் மழையும்

மதிநின்று விளையாடும் மலைமீதுதொடுமேகம்
மழை கொண்டு நீர்தூவுமாம்
புதிதென்ற மலைவாழை இலைதள்ள அழகான
பசுஞ்சோலை கதிர் கொள்ளுமாம்
முதிதான வளர்நீள மரம்மீது குயில்பாட
மலர்க்கூட்டம் இதழ் பூக்குமாம்
குதித்தோடிக் கிளைதூங்கி கருமந்தி மரந்தாவ
குளிர்நீரும் பூத் தூவுமாம்

அழியாத கலையோடு பெருங்கோவில் அமைந்தொன்று
அழகோடு உயர்ந்தோங்கவே
வழிமீது நடுவானில் வரும்மேகம் இடைநின்று
விடு என்று அதை மோதுமாம்
விழி காணா குளிர்காற்று வெண் பஞ்சு உடல்நீவ
வளைந்தோடி முகில் ஓடவே
எழிலான இவைநூறில் எது தானும் அழகென்று
இவன்சொல்ல இறைதேவியே

மழைவந்து நிலம்மீது உறவாடும் மணல்சேர
மண்வாசம் எழும், கண்டுமே
நுழைந்தோடு பூங்காற்று அதை யள்ளி மணம்வீசி
நனைபூவை மறந்தோடுமே
வளைந்தாடும் கொடிபூத்த வகையான மலர்த்தேனில்
விழும் தூறல் கலந்தோடவே
அழைந்தின்ப மதுஉண்ணும் இளந்தும்பி சுவையின்றி
அருந்தாம லெழுந்தோடுமே

குழல்மீது மலர்கொண்ட குறும்பார்வை தனிலன்பு
கொள்நங்கை தனை ஆடவன்
சுழல்அம்பு விழிகண்டு சிந்தும்புன் னகைபோலும்
சுடர்தானும் புவிமாதினை
மழை நின்ற பெருவானில் கருமேகமிடையாலே
மறைந்தங்கு ஒளிசிந்தவும்
மழைபோகச் சிறு தூறல் தனில்ஏழு நிறமோடி
இதுவாழ்வு உமதென்குமே

பிழையான குரு, பாடம் பயிலாத சிறுபாலன்
படுகின்ற துயராகவே
பழக்காத ஒருமாடு நடுவீதி தடுமாறிப்
பிரம்பாலே வெருண்டோடுமே
முழவோடு சிறுநாத மிசைபாடிஒருகூட்டம்
மெதுவாக நடைகொள்வதும்
அழகோடி எமதான மலைகூடும் சிறுஊரில்
அருங்காட்சி தினம் தோறுமே

Friday, November 4, 2011

உன்னை நீயறிவாய் !

பொன்நகை யன்றிப் புன்னகை கொள்வாய்
போகும் பாதையிலே
பன்நகை கண்டும் பதறா துந்தன்
பாதை நீ தெளிவாய்
சின்னகை கொண்டு செல்லப்பிள்ளை
சீண்டும் போதினிலே
என்னது செய்வாய் அதுபோலின்பம்
ஏற்றே சிரித் திடுவாய்

காடும் நாடும் ஒன்றே யறிவாய்
காட்டின் விலங்கினமும்
கூடும் எண்ணம் கொள்ளும் மனிதர்
கூட்டம் காண்பாயே
தேடும் அன்பும் தீமைகொள்ளாத்
தெய்வம்போல் மனிதம்
ஊடும் உள்ளார் உண்மையறிவாய்
உன்னைக் காப்பாயே

பொய்யும் கண்பாய் பொய்மை கொண்டே
புரளும் உலகறிவாய்
எய்யும் அம்பாய் இன்னல் செய்யும்
எதையும் எதிர் கொள்வாய்
மெய்யில் தீரம்கொண்டே என்றும்
மனதில் துணிவாகி
செய்யும் செயலில் சிந்தைவைத்து
சிதறா நிறைவு செய்வாய்

மாறும் உலகில் மாற்றம் என்பது
மாறாவிதி காணாய்
மாறும்போதில் மற்றோர் உயிரை
மதிக்கும் விதி கொள்வாய்
ஊறும் ஒருவர்க் கில்லா மாற்றம்
உலகில் சரியென்றே
யாரும் சிரித்தால் நீயும் சேர்ந்து
சிரிப்பாய் சினம் விடுவாய்

மூடும் முகிலும் கூடும் இருளும்
மௌனச் சதிவலைகள்
போடும் இடியும் புயலும்சேரும்
புனலும் இழுவெள்ளம்
பாடும் பசியும் பிணியும்பலதும்
பார்த்தும் பதறாமல்
வாடும் உள்ளம் இன்றி நல்லோர்
வழியைக் கண்டிடுவாய்

விண்ணில் காணும்நட்சத்திரங்கள்
எண்ணிக் கைபோலும்
மண்ணில் காணும் விந்தைமனிதர்
மனமும் பலதாகும்
எண்ணிப்பார்த்தால் இவரின் சொல்லோ
இதழில் புன்னகையாய்
கண்ணைச் சிமிட்டும் கருமைஎண்ணம்
காணும் உளமிருக்கும்

இன்னோர் உயிரை இகழல்செய்யா
இயற்கையென மதிப்பாய்
தன்னோர் எண்ணம் தனதோர்முறைமை
தவறில்லைக் கொள்வாய்
நன்நேர் வாழ்வை கொள்வாய் நாளும்
நலனே எண்ணிடுவாய்
மின்னேர் ஒளியாய் மிளிர்வாய் உலகில்
மேன்மை கண்டிடுவாய்