Saturday, December 31, 2011

சிறப்பொடு வாழ்வோம்

தெரிவதும் புரிவதும் உலகோ - இல்லை
தெளிவிலை எனச்சுழல் கொளுதோ
அரியதும் அழகதும் உலகோ - இல்லை
அதனிடை பெருமிருள் வருதோ
சரியதும் பிழையதும் எதுவோ - அது
சரிநிகர் வாழ்வினில் உளதோ
எரிமலை கொளும்பெரும் பிளவோ அது
எதில்மன மிடைதனும் எழுதோ

பிறப்பதும் வாழ்வெனும் பொழுதில் - பல
பிழைகளும் பிறப்பது எதனால்?
இறப்பது எனவர முன்னே - பல
இருப்பவை அழிப்பதும் எதனால்?
சிறப்பென வாழ்ந்திட எண்ணும் - மனம்
சிரிப்பினில் இகழ்வதும் எதனால்?
நிறப்பது சிவப்பென உணர்வே - பயன்
நிரப்பிட வெறுப்பெனும் முடிவே!

தரித்திட மணிமுடி வேண்டாம் - ஒரு
தரமற்ற பெயர்தனும் வேண்டாம்
உரித்தது இவர்மனம் பொன்னோ - இலை
உருப்படி யிலைக்களி மண்ணோ
சரித்திரம் படைப்பது மிவனோ - அல்ல
சரிதிறன் உருவழித் திடவோ
விரியுல கதிலிவை வேண்டாம் - ஒரு
யியல்புறு நடுநிலை போதும்

கறந்திடும் பால்ஒரு போதும் - மடி
கொளத்திரும் பிடுசெய லில்லை
உறங்கிடும் மனம்ஒரு போதும் - ஒளி
உதயமும் கொளுமென இல்லை
மறந்தொரு தவறதும் செய்யா - உன்
மனதினில் கவனமும் கொள்ளு
இறந்திடும் நிகழ்எதிர் காலம் -இவை
இனித்திட உயர்வழி செல்லு

பறந்திடும் சிறிதொரு பறவை -அது
பார்த்திடு முலகதைப் போலே
துறவெனக் காண்மன துள்ளே - நீ
தொலைவினில் பறந்திடல் போலே
நிறமொடு வாழ்ந்திடு ஆனால் - நின்
நினைவது வெளுத்திடு மேலாய்
அறந்தனில் அக்கறை கொள்ளு - இதை
அறிந்திந்த உலகினை வெல்லு !

No comments:

Post a Comment