Thursday, January 24, 2013

வாழ் வும் தமிழும்


கடித்தேன் இனித்தேன் கனிகள் சுவைத்தேன்
கனிந்தேன் உள்ளம் களிப்புற்றேன்
படித்தேன் பலதும் பழத்தேன் தமிழைப்
பருகும் கள்ளுண் வண்டானேன்
குடித்தேன் கவிதை குளித்தேன் தமிழாம்
குலவும் தென்றல் குளிர்மேவத்
துடித்தேன் இதயம் தொலைத்தேன் தமிழின்
தொன்மை படைப்பில் இழந்திட்டேன்

அடித்தேன் அழித்தேன் எனவேஇல்லா
அழகிற் தென்னை அருகில்தேன்
வடித்தே ஒளிரும் வண்ணநிலாவின்
வகையாய் பிறைபோல் வளர்ந்திட்டேன்
வெடித்தேன் முகிழ்ந்தேன் மலர்ந்தேன் என்னும்
விடியல் பூவில் விளையும்தேன்
விடத்தேன் சுவைதான் எடுத்தேன் இயல்போ
எனத்தான் வியந்தேன் இணைந்திட்டேன்

குடித்தேன் குடமாய் கவிதை யின்பம்
கொள்ளா தேனோ சலிப்பற்றேன்
அடித்தேன் இனிப்பாம் கரும்பில் காணும்
அருந்தேன் தமிழும் அதையொத்தேன்
குடித்தேன் பழமை குடைந்தேன் தமிழில்
குவித்தேன் இன்பங் கொண்டேன்காண்
நெடிதென் வாழ்வில் நிகழ்வும் கடிதென்
நேரும் வரையும் நிலைத்திட்டேன்

கடந்தேன் வாழ்வில் தடைகள் பலதும்
களித்தேன் என்றும் சொல்லற்றேன்
நடந்தேன் பாதைநலிந்தேன் விழுந்தேன்
நாளும் துயரைச் சந்தித்தேன்
அழுதேன் தொழுதேன் இறைவா என்றேன்
அரைதேன் நிலவைஅணிந்தோன் கை
எடுத்தோன் மழுவை இழிந்தேன் என்னை
இழந்தேன் உயிரும் எனவாகா

செடித்தேன் மலராய் சிரித்தேன் நெகிழ்ந்தேன்
சிவந்தேன் இதழும் விரித்தேனாய்
கொடுத்தேன் வாழ்வில் கொள்ளையின்பம்
கொள்ளா செய்தாய் கொடுஎன்றேன்
அலைந்தேன் ஆழி அலைகள் எனவே
அவலம்கொண்டேன் ஆனாலும்
நிலைத்தேன் நினைத்தேன் நிகழும்துன்பம்
நிகழா சக்தி காவென்றேன்

குலைந்தே கொள்ளா தேனோ அண்டம்
கோடி எழுந்தீச் சூரியனும்
விழுந்தே அணையாதென்னே விந்தை
விளைத்தார் யாரோ விளைவெண்ணி
எழுந்தேன் சக்தி என்றே நாளும்
எண்ணித்தான் கால் எடுத்திட்டேன்
கலைந்தே துன்பம் கவிதைபாடும்
கலையும் கொண்டே காண்கின்றேன்

No comments:

Post a Comment