Thursday, July 21, 2011

எனக்கு மட்டும் ஏன்?

நீராடும் போது குளம் சேறானதேன்?
நிலவென்று நானிருக்க நெருப்பானதேன்?
போராடு எனவாழ்வு புதிர்நிறைத்ததேன்?
பூகம்பம் ஒன்றெழுந்து பொலிவழிந்ததேன்?

தேரோடும்வீதியெங்கும் செடிமுளைத்ததேன்?
திசைமாறிப் புரவிகளும் தேரிழுத்ததேன்?
வேரோடு வீழு என்று விதி வகுத்ததேன்?
வீழென்று புயலடித்து வெறுமை தந்ததேன்?

ஆற்றோரம் மலர்மீது அனலடித்ததேன்?
ஆற்றாது அவைகருகி அழிந்து போவதேன்?
சேற்றோடு வெள்ளம் ஊரைச் சேர்ந்தழிப்பதேன்?
சிறுகுடிசை சரிந்து கொடுஞ் சேதி வந்ததேன்?

காற்றோடு கனவுகளும் கலைந்து போனதேன்?
கண்ணீரும் வற்றும்வரை கலங்கி அழுவதேன்?
நேற்றோடு இருந்தவாழ்வு நிலை குலைந்ததேன்?
நினைவோடு துயரெழுந்து நிறைவு கொண்டதேன்?

சிலையெண்ணிக் கல்செதுக்கச் சிதறி உடைவதேன்?
சித்திரமும் தீட்டவர்ணம் சிந்தி யழிவதேன்?
கலையென்று நடனமிடக் கால் வழுக்குதேன்?
கவியென்று தமிழெழுதக் கைவலிப்ப தேன்?

மலையென்று நம்பிவர மண்குவியல் காண்
மன்னவனென் றெண்ண வெறும் மனிதனிவன்தான்
இலையென்று ஆனபின்னே உயிரெதற்குத் தான்
இல்லையிரு சக்தியவள் என்னருகில் தான்!

No comments:

Post a Comment