Sunday, January 29, 2012

துயிலும் இல்லங்கள்


தோள்தந்து துணிவோடு தேசமதைக் காத்த
   தீரர்களின் கல்லறைகள் தொலைந்த இடம்காணீர்
நீள்மரங்கள் நிரைநின்று நிலைகுலைந்து ஆடும்
   நிழல்கண்ட குருவியதி லிருந்துமெல விசும்பும்
வாழ்வென்று பூத்தமலர் வாடியிதழ் சோரும்
   வான்நடந்த முகிலிரங்கி சோகமழை தூறும்
பாழ்என்று மண்ணை யள்ளிப் படர்காற்றும் கண்ணில்
   பட்டுவிட வீசியபின் சாபமிட்டு ஓடும்

வேகஇடி மின்னலென வேகம்கொண்டவீரர்
  விதைத்த இடம் அழித்தவனை எண்ணிமனந்தன்னில்
ஏகமென இயற்கையதும் கொன்றவரை மீண்டும்
  கொல்லுமொரு வேதனையை கூடிநின்று பேசும்
தேகமதைப் பெற்றவரும் சேர்ந்து பிறந்தன்பு
   சோதரரும் பிள்ளைகளும் சொல்லியழ நாச
மாகயவர் உழுதநிலம் விதை முளைக்க வென்றோ
  மக்கள் தினம் அழுதநீரில் வேர்முளைக்கு மென்றோ?

தீரமெனும் செடிவளர்ந்து தினம் பூக்கும் வாசம்
  திறனெடுத்து உருவமைக்கும் தீந்தமிழின்தேசம்
கோரமுகக் கயவரவர் குலைநடுங்கி ஓட
  குடிமக்கள் துணிவெடுத்து குலம்காத்து வாழ
ஈரமழை யன்புபொழிந் தின்பவெள்ள மோட
   ஈழநிலம் இறைமையுடன் எமதென்றே ஆக
யார்தமிழர் பிளவில்லாது ஒன்றுஎன ஆகும்
 உறுதி தனைப் பெற்றோமா, எங்கள் வாழ்வு காக்க?


பன்னிரண்டாம் ஆண்டு- 2012

பன்னிரண்டு கண்ணிருந்தும் பார்க்கவில்லை வேலா - எம்
கண்ணிரண்டும் நீர்வழிந்தும் காக்கவில்லை சீலா!
முன்னிருந்த ஆண்டும் எந்த மூச்சுமில்லை  போக -  இப் 
பன்னிரண்டு பூத்த தெங்கள் பாவம் நீக்கிப் போமோ?

மண்புரண்டு ஓலமிட்டு  மானம்விட்டு வீதி - பல
எண்கடந்து கூடி நின்று ஏக்கமுற்று வேண்டி
விண் ணெழுந்த கூச்சலிட்டும் வீணென்றாக மேனி -தான்
துண்டிரண்டு ஆக்கவிட்ட  துயர்நிறைந்த ஆண்டு!

கண் நிறைந்த வாணமின்னல் கண்டுபூமி துள்ளும் - நல்
வெண் நுரைத்த பானமுண்டு வேடிக்கையும் செய்யும்
மண்ணிழந்து மாந்தர் வீடு மக்கள் யாவும் ஈந்தும் - எமை
விண் பறந்து ஆவியென்று விட்டு கண்டு மகிழும்

பன்னிரண்டென் றாண்டுதன்னும் பார்வை தந்து எங்கள்  இருள்
கண்ணிரண்டில் கொண்ட வாழ்வு காக்கவேண்டும் வேல
மண்ணிருந்த ஆட்சி, மன்னன், மக்கள் மானவாழ்வு -  இனும்
பொன்திரண்ட பூமிதந்து  போகவேண்டும் வேலா!

Friday, January 27, 2012

வாழத் துடிக்கும் மனம்!

ஆழக் கடல்மகளும் ஆவென்று துள்ளியெழுந்
தார்ப்பரித் தோலமிட்டாள்
நீளக் கருவானில் நீந்துமதி வெகுண்டோடி
நிழல்மேகம்கண்டுபுகுந்தாள்
வேழப் பிளிறலென விண்ணூதிச் சுழல்காற்று
வேகமிட்டோடும் வழியே
வாழவென் றாவலெழ வழிதேடி யலைகிறாள்
வாழ்க்கையின் ஓரமொருத்தி

காளையும் வலிந்துவெஞ் சமரென்னும் விதிகொண்டு
காணது தொலைந்து போக
வேளைமுடிந்ததிவன் விட்டனன் இம்மையென
வெம்பிஊர் அழுதபோதும்
நாளையோர் நாள் வருவ னென்று வழிபார்த்திவளும்
நம்பியொரு வாழ்வு வேண்டி
வாழை யடிவாழையென வம்சம் பெருக்கிவிட
வாழ்வெண்ணித் காத்திருந்தாள்

வீழத் பெருகுமழை வீறுகொண் டிறைத்திட்ட
வெள்ளமோ பெருகி ஓடி
ஆழநீர் நிலைநோக்கி அதுசெல்லும் பாதையிடை
அடங்காது திசையும் மாறி
வாழவென் றிட்ட மனை வாரியிழுத் தழித்ததும்
வயல்மேடு காணிதோட்டம்
பாழாய் சிதைத்தோடும் பாதையிலே தேடுமிவள்
பசுஞ் சோலை காணுவாளோ

மேலைச் சிவந்தவெளி மேகங்க ளூடுஒளி
மேவுகதிர் மறைந்துபோக
சோலைத் தருவுலுக்கி சுற்றுமொரு சூறையதில்
சிதைந்துகிளை ஒடிந்துவீழ
பாலையில் மணல்பற்றி பலங்கொண்ட காற்றூதி
பாவியவள் கண்கள்நோக
காலத்  தடம்புரள கவிழ் என்றுவீழ்த்து சதி
கண்டுமிவள் ஏங்கிநின்றாள்

மூளப் பெருத்தவலி முன்மூச்சு வாங்கயிவள்
முகத்தி  னடையாளம் கெட
நாளம் பெருநாடி நடுங்கிமனம் பதைத்தேங்க
நஞ்சுண்ட கன்றுபோலே
வாழைப் பெருந்தோட்டம் வேழம் அழித்துவிட
வீழ்ந்த பல பச்சைமரம் போல்
ஈழமும்  காணவதி லோர்வாழ்வு தேடியெதிர்
காலமென் றேங்குகின்றாள்

நாதமென் சங்கூதி நங்கையிவள் மானிடமே
நீதிஉயிர் வாழ்வதெனுமோ
வாதம்பி றக்குமோ வாழவோர்  சம உரிமை
வையத்தி லுள்ளதென்றே
பேத உணர் வோடுபகை பேசுமிஞ் ஞாலமும்
பேதையிவள் பாவமென்று
மீதமுள கல்நெஞ்சில் மெல்ல நீர்கசியுமோ
மீண்டுமிவள் வாழவிடுமோ

Thursday, January 26, 2012

துயர் கொண்ட சிறுமி


நீல விழிகளும் நீர்விழி யாகிட
நேர்ந்தது ஏதடியோ - சிறு
கோல முகமின்று கொள்ளுஞ் சிரிப்பினைக்
கொள்ளை கொண்டாரெவரோ
மேலை வானவெளி மேகம் வந்தேயுனை
மெல்ல மறைத்ததுவோ - இது
கால மென்ன உந்தன் கண்கள் பொழிந்திடக்
கார்த்திகை மார்கழியோ

தாளமிடு முந்தன் தாமரைப் பாதங்கள்
தாமத மாவதென்ன - ஒளி
சூழமலர்விழி சொட்டும் மகிழ்வெனும
சோதிகுறைந் ததென்ன
நாளும் பொழுதுமுன் நாவில்நடமிடும்
நல்லமுத மழலை - இன்று
பேழையில் மூடிய பொன்னகைபோல் எழில்
பொத்திக் கிடப்பதென்ன

பூமரக் கூடலில் போகு முணர்வினில்
புன்னகைக்கும் இனிமை - எழிற்
தாமரைப் பூவிரி தண்ணலை நீரிடை
துள்ளும்கயற் செழுமை
மாமரச் சோலையில் தூங்குங் கனியுண்ணும்
மாங்கிளி பேச்சினிமை இவை
நீமறந் தேநெளிந் தாடுமுட லின்று
நிற்பது வும்புதுமை!

கூவுங் குயிலதும் கொத்துங் கிளியதும்
கோபுரத்தின் அழகும் - துள்ளித்
தாவும் புள்ளிமானுந் தண்மைதருஞ் சுனை
தங்கும் குளிர்மைதனும்
ஆவும் இளங்கன்றின் அன்புமனமுங் கொண்
டாக்கிய தேனொளியே - மரம்
தூவும்மலர்களைத் தென்றல் கரம்கொண்டு
துள்ளிநீ ஓடிடவே

தேடி உலகினிற் தீமை களைக்கண்டு
தேர்ந்திடு நல்லறிவு - அங்கு
ஓடி வருந்தென்றல் உன்னரு கிற்புய
லாகும் நிமிர்ந்து நில்லு
கூடிவ ரும்பல கூட்டமுட னன்பு
கொண்டிடு சேர்ந்து செல்லு - அதில்
மூடி மறைந்தொரு மூடன் தீமைசெய
முன்வரக் கூடுமெண்ணு

நூறு மலர்களில் யாவுமொரு வண்ணம்
நேர்ந்த தில்லை மனதில் - துயர்
ஆறு, உலகையுன் அன்புமொழி கொண்டு
ஆளமுடியும் நில்லு
தேறு எதுவுன்னை வாட்டுது எண்ணங்கள்
தேனெனமாற்றிவிடு - மணம்
நாறும் மலர்தொட்டு நாளும்வீசு தென்றல்
நானெனத் துள்ளிஎழு

பேறு யிதுபெரி தானது பூமியில்
பெண்ணென நீபிறந்து - பல
மாறுதல் செய்திடும் மாபெரும் சக்தியின்
மற்றொரு தோற்றமிது
வேறு திசைகளில் ஓடும் மனங்களில்
வேற்றுமை பண்புணர்ந்து  - புத்தி
கூறு நல்லோர் உணர் வோடுவாழ்வி
லின்பம் தேடு உலகைவெல்லு!

Wednesday, January 25, 2012

காலைக் காட்சி


காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று விரட்டிச்செல்ல

காரிருள்சூழ் புவிமூடிக் கிடந்திடக்
காணரும் பேரெழில் போய்மறைய
பேரொளி கீழடி வானில் சினங்கொண்டு
பித்து பிடித்திருள் ஓட்டவர
ஊரெழுந் தோடிப் பயிர்வளர்க்கும் ஒரு
உத்தம வாழ்வின் இனிமைகளைப்
பாருழுதே வயல் பண்படுத்தும் ஒரு
பாமரன் பாடி உழுதுகொண்டான்

(அவன் பாடுவது)

திங்களொளி பட்டுத் தீய்வதுண்டோ -அவர்
தேகம்புண்ணாகித் தவிப்பதுண்டோ
தங்கமதைத் தணலென்பதுவோ - அதை
தள்ளி வைத்துச் சுடும் என்பதுவோ
பங்கய நீரிடை காணுமுக பிம்பம்
பாவிகள் வெட்டத் துண்டா வதுண்டோ
தெங்கினடிநின்று தென்றல் சுகம்தர
தின்னும்பாலும் கள்ளென் றாகிடுமோ

முல்லை மலர்தனை முள்ளென்பரோ - அதை
மண்ணிலெறிவதும் மாண்புடைத்தோ
இல்லை ஈதே வானில் ஒடும்முகில் பெருந்
தீயை மழையெனக் கொட்டிடுமோ
கல்லில் காணுவது கற்பனையாம் அதில்
காணும் மனங்களில் கொள்ளுருவம்
எல்லைவகுத்துண்மை எண்ணிவிடில் பின்பு
உள்ளம் மகிழ்ந்திட இன்பமன்றோ

ஆணும்பெண்ணோ இவர் வாழ்வினிலே -நிறை
வாகமிச்சம் முதியோர் பருவம்
காணும் கனவுகள் போன இளமையின்
கண்ட சுவைகளை நெஞ்சில்கொளும்
வானரமாய் கிளைமீதும் மரம் தனில்
தாவியதும் குயில் பாடியதாய்
ஆன வகையொரு இன்பம் அதைநினைந்
ஆடுவதும் மன ஆனந்தமே

காலைப் பறவைகள் கோல இசையிட்டு
காற்றிலெழுந்து பறந்திடவும்
ஓலைஊடே வந்து ஒங்கியசூரியன்
உள்ளே புகுந்த தகதகிப்பும்
சேலையணிமாதர் சுந்தர ஆடவர்
வேலைசெய்து ஆடிப் பாடுவதும்
சோலை மலர்கள் நிறைந்ததெனும் இளங்
கால எண்ணம் இன்பம் ஆகிறதே!
......................
வெண்மலர்பூத்திட வீணைஒலிஎழ
வெய்யவன் உச்சியில் ஏறிவர
தண்ணலை ஓடும் குளத்திடையே நடுத்
தாமரை மீது தவளைதுள்ள
கண்ணுடையாள் சிறு கோவிலிலே எரி
கற்பூரவாசனை காற்றிலெழ
மண்ணுழுதோன மனைகஞ்சியுடன் வர
மாமகிழ்வாகி நடையெடுத்தான்

தமிழின் சுவை!

தமிழ்சொல்ல உளமெந்தன் மகிழ்வாகுதே!
தமிழ்காண விழியெங்கும் ஒளிகூடுதே !
தமிழ் கேட்டு மனம்நின்று கூத்தாடுதே !
தமிழுக்கு எது ஈடு இவையாகுமோ?

(வேறு)

செந்தமிழின் சுகம் தென்றலதோ சுவை
செங்கரும்பின் அடியோ?
பைந்தமிழும் பனிகொள் குளிரோ பசும்
புல் வெளியின் அழகோ?
அந்தரவான் எழும் சந்திரனோ அதன்
சுந்தரத் தேனொளியோ ?
அந்தமிலாப் பெருஅண்டமதில் தமிழ்
எந்தளவு பெரிதோ?

வெந்திடவும் அனல் தொட்டதிலே மின்னும்
பொன்னின் மிளிர்விதுவோ ?
வந்தமழை தந்த வானிடையே வில்லின்
வண்ண வடிவங்களோ?
நங்கையவள் நட மென்பதெலாம் தமிழ்
நல்கு முயிர்த்துடிப்போ?
பொங்கிடுமோ அலை போலிதுவோ தமிழ்
பேச உணர்வெழுமோ !

சங்கிதுவோ ஒலிதந்திடுமே அதன்
சாரும் வெண்மை இயல்போ?
பங்கயமோ பனி தங்கியதோ அதன்
பட்டிதழ் மென்னியல்போ?
தெங்கினிடை இளங்காய் நடுவே கொண்ட
தித்திக்கும் நீரிதுவோ?
வெங்கதிரோன் உச்சிவேளை சுட நின்ற
வேங்கை மரநிழலோ?

கங்கையவள் முடிகொண்டவனோ அன்பு
கொண்டு வளர்த்ததமிழ்
செங்கனலின் விழி கண்டும் பிழைசொன்ன
சங்கப் புலவன் தமிழ்
இங்கு மனமதில் என்று மினித்திடும்
இன்ப முடைத்த தமிழ்
மங்குவதோ? அது கொள்ளும் துயர்எனில்
எங்கள் கரம் கொடுப்போம்

எங்கு மிணை யில்லை செந்தமிழே என
சங்கே முழங்கிவிடு
பொங்கிவரும் பகைஎந்த விதமெனக்
கண்டதைக் காத்துவிடு
மங்கை குலமவர் மானமெனத் தமிழ்
கொண்ட துயர் துடைத்து
செங்குலமே இந்த தங்கத்தமிழ் தன்னை
எங்கும் வளர்த்துவிடு!

Sunday, January 8, 2012

தமிழே இனிதாம் !



தமிழே இனிதாம் தமிழேஅழகாம்
தமிழே பெருநிதியாம்
தமிழே யுன்னைப் பாடப் பாடத்
தருமே மிக மகிழ்வாம்
தமிழே இதமாம் தமிழே சுகமாம்
தமிழே பல நினைவாம்
தமிழின் தாகம் பருகத் தண்மை
தருமே மனமுழுதாம்

அலையே கடலில்புரளும் அதுபோல்
அகிலம் முழுவதிலும்
கலையே கொண்டு தமிழே புரள்வாய்
கவிதை ஊற்றாவாய்
சிலையே அசையாநிற்கும் நிலைஏன்,
சிந்தைகொள் தமிழின்
நிலையே நினதில் பெரிதும் அழகால்
நினவை இழந்தாயோ?

மலையே நீயும் உயர்விற் பெரிதாய்
மனதில் கர்வமுறாய்
இலையே தமிழுக் கிணைநீ என்றே
இன்று மலைத்தாயோ
தொலைவும் காணாத் தொன்மைத் தமிழின்
தோற்றம் காணுகையில்
அலையும் வானச் சுடரும் நிலவும்
அதன்பின் அணியாமோ?

பொங்கும்தமிழோ புதுமை நதியின்
புனலாய் குதிபோட
தங்கும் எண்ணம் சற்று மின்றித்
தளளவென் றோடும்
எங்கும் தண்மை இன்பம் பரவ
இசையென் றொலிகூட்டும்
சங்கம்வளரின் பத்தெள் தமிழே
சரிநிகர் எதுவுண்டோ?

வெங்கண் கொண்டே வினைகள் செய்வோர்
விளைதுன் பந்தானும்
மங்கும் வகையில் மலையின்அருவி
மடிபோற் தமிழ்பொங்கும்
கங்குல்வானிற் கதிரோன் போலக்
கண்முன் ஒளிவெள்ளம்
எங்கும் பொங்கப் பிரவா கிக்கும்
இனிமைத் தமிழ் என்பேன்

கவியின்பம்



கவிஎன்ப தினிதாம் கவியெங்க ளுயிராம்
கவி எமது வாழ்வுக்குப் பொருளாம்
கவிஎங்க ளுணவாம் கவியெங்கள் கனவாம்
கவியோ நம்உணர்வுகாண் விழியாம்
கவிஎங்கள் சிறகாம் கவிஎங்க ளிறையாம்
கவிஎங்கள் குறைவற்ற நிதியாம்
கவிஎங்கள் மதுவாம் கவியின்ப மழையாம்
கவிஎங்கள் தமிழன்னை எழிலாம்!

கவிஎங்கள் கலையாம் கவிஎங்கள் துதியாம்
கவியின்பம் பொலிகின்ற நதியாம்
கவிஎங்கள் தேராம் கலையென்னும் உலகின்
கவினின்ப சுவையூறும் அமுதாம்
கவிமென்மை மலராம் கவிவீசுங் காற்றாம்
கவிஎங்கள் உயிர்கொண்ட மூச்சாம்
கவி எங்கள் துகிலாம் கவிசொல்லும்வகையில்
கவிந்திடும் சுகம்கூறின் பெரிதாம்

அவிழ்கின்ற மலரும் அதுதரும் மணமும்
அகிலத்தில் இருள் மாலைவேளை
கவிந்திடும் இன்பம் காண்பது போல்நற்
கவி தரும்சுகம் மிகப் பெரிதாம்
செவிகாணும் இன்பம் தேனெனச் சொல்லின்
குவிவான வில்லதன் வண்ணம்
தவிக்கின்ற சுனையின் தாமரை இதயம்
தாங்கியே பலஇன்பம் காணும்

என் அன்னை, என்தேசம், என்கனவு

என்னோர் எழில்! நிலவோ ஏறிவான் வீதியிலே
மின்னும் தனதொளியை மேதினியி லூற்றுங்கால்
தன்னந் தனிநடந்து தங்கநில வொளிகுளித்து
முன்னே என்பாதையில் மேற்குவழி நடந்தேன்

வெண்மை நிலவொளியின் வீச்சினில் முன்னிருந்த
கண்முன் னெழில்தோற்றம் கைவரைந்த ஓவியமாய்
எண்ணக் கனவுகளில் எழுகின்ற மாயமெனும்
வண்ணம் கலந்திருக்க வழியில் அவள்கண்டேன்

 மண்ணோடு தூசுபட மைவிழிகள் கோபமுற
விண்ணோ டெறித்தநிலா வீசுமொளி மின்னலிலே
பெண்ணின் திடமிழந்து பேசற்கரியவளாய்
திண்மை யிழந்து,வரும் தென்றல் உடல்சரிக்க

நின்றாள் துயர்பெருத்த நீள்விழிகள் நீர்சொரிய
தென்றல் தொடுந்தேகம் தீயெனவே வேகிவிட
கன்னம் எழில்சிதையக் கண்ணீரும் காய்ந்திருக்க
என்னோர் துயரடைந்தாள் ஏதறியேன் என்றதனால்

” பெண்ணே பெருந்தகையே பெயரேது நானறியேன்
கண்ணீர் வழிவதுமென் காரணமும் தானறியேன்
மண்ணில்பெருவாழ்வு மாதுகொண்ட தாய்வதன
வண்ணம் தெரியுதம்மா வந்ததிங்கு ஏதெ”ன்றேன்

நெஞ்சம் அழுதுகொள நிர்க்கதியாய் ஏந்திழையோ
கொஞ்சம் எனதுகுரல் கொடுத்த மனத்துணிவில்
”வஞ்சம் இழைத்தாரே வாழ்விலோர் தீதுதனை
நஞ்சின் நெஞ்சத்திரு நாட்டின் கொடியவர்கள்!

”எந்தன் பெயரீழம் இன்பமுடன் தேன்தமிழைச்
சொந்தம் கொண்டே நிலத்தை சுற்றிவர மைந்தரவர்
வந்தோர் பகையறுத்து வாழ்வுதர வீரமுடன்
செந்தேன் தமிழ்வளர்த்து சீருடனே ஆண்டிருந்தேன்

பூவிரியப் புள்ளினங்கள் பொன்வானில் நீந்திவர
தாவிவிழுந் தோடும்நதி தமிழ்வாழ்த்தி இசைபாட
வாவிதனில் நீரோடி வட்டஅலைப் பூமலர
பூமிதனில் ஈழமெனும் பொன்நாட்டுக் கன்னையிவள்

என்னோர் அழகுடனே ஏற்றமுடன் நானிருக்க
வன்மை கொண்டேயுலகு வாழ்வை அழித்ததையோ
இன்னும் உயிர்களைந்து இதுபோதா ஊரழித்து
பொன்போலும் பூமிதனை பேய்வாழச் செய்தார்கள்

கொஞ்சங் குரல்நடுங்க கோதையுடல் தான்துடித்து
பஞ்சாம் முகில்நடுவே பாயுமிடி மின்னல்பட
நஞ்சின் கொடுமைகொண்ட நாகமொன்று தீண்டியதாய்
நெஞ்சம் துடிதுடித்து நினைவழிய மேலுரைத்தாள்

அந்தோ படுந்துயரம் அத்தனையும் என்சொல்வேன்
நிந்தை புரிந்தவரோ நெஞ்சழவே கேடுசெய்தார்
இந்தோர் நிலையடைய இன்னலிட்ட எத்தர்தனை
வந்தே விரட்டிவிடு வாய்மை நிலைநாட்டிவிடு      .

எங்கே உலகநீதி எங்கே உரிமையென்று,
செங்கோல் பிடித்தவர்கள் செய்வதென்ன கேட்டுவிடு
பொங்கும் தமிழ்க்குரலை பேச்சை நெரித்தழித்து
சங்கை எடுத்தூதி சாவைஎமக் கீந்ததென்ன

பொன்னால் மணிமுடியும் பெற்றதோர் வாழ்வும்
தன்நேர் நிகரற்ற தமிழ்வாழும் தேசமென
மின்னேர் விளைபுயலின் வேகமெடு மைந்தர்களும்
முன்னே துணையிருக்க முத்தமிழின்மூச்செடுத்து

பன்நூற் கலைவளங்கள்; பண்ணிசைகள் நற்றமிழாம்
முன்னோர் செய்காவியங்கள் மூத்தோர் பழங்கலைகள்
என்னை மகிழ்வுசெய்ய எத்தனையோர் இன்பமுடன்
மன்னர் மணிமுடிகொள் மாவீர ஆட்சிகண்டோம்

அணிகொள் அழகோடு அறத்தின் வழிநடந்தோம்
பிணிகொள் அரசுசில போரென்று நீதிகொன்றார்
பணியா உளஉரமும் பாதையிலே நேர்நடையும்
துணிவோ டுயர்மறமும் துள்ளிவரும் போர்முடித்து

குனியா துணர்வுபொங்க கொள்கைவழி நீதியுடன்
தனியாய்அரசுகண்ட தாயின்நிலை இன்றறிவாய்
இனியேன் மௌனமடா இன்னலிடும் பாதகரை
தனியோர் இனமழிக்க தட்டிப்பதில் கேட்டிடடா

ஈழமகள் கண்களிலே எழுந்தோடும் நீராறு
ஆழமன துன்பமதை ஆற்றாமை தான்விளக்க
வீழுமீர் பூங்கரங்கள் வீரமகள் கால்கள்தனும்
பாழும் பகைபிணைத்து பாடுபெருந் துன்பமிட்டார்

கேழாயென் சின்னவனே கீழாம்நிலை யடைந்தோம்
நாளுமவர் திட்டமிட்டே நாட்டின் குடிகொன்றார்
மாளுமிந்த மக்களுயிர் மகனேநீ காத்திடடா
வாழுமிக் காலமதில் வாசல்வரை தள்ளிவைத்தார்

நாளைஎமை வீதியிலே நாட்டோரம் ஆழ்கடலில்
சூழைதனில் தள்ளியெமை சுற்றிவரத் தீயிடுவார்
மாளமுழு தாயெரித்து மண்ணதனை கொண்டிடுவார்
வாழவென நீஎழுந்து வையகத்தை கேட்டுவிடு

இல்லையெனில் நீயறிவாய் எமதழகுத் தமிழ்த்தேசம்
வல்லோர் அரசுகளின் வாயிலுண வாகிவிடும்
மெல்லத் தமிழழியும் மேதினியில் என்பதனை
பொல்லாப் பெரும்புழுகாய் பூமியிலே ஆக்கிவிடு

துள்ளியெழு உன்னுயிரும் துடிக்கத் துணிவுடனே
தெள்ளுதமிழ் வெல்லுமொரு திக்கைக் கருத்திலெடு
கள்ளினிமை பூமென்மை காற்றின் சுகம்யாவும்
உள்ளதமிழ் வாழஇனி உன்கடமை ஆற்றிவிடு

மங்கும் மதியொளியில் மங்கையவள் சொல்லிவிட
எங்கோ இருந்தெழுந்த  இடியோடு புயலெனவே
பொங்கும் பெருஞ்சுழலோ பூவையவள் முன்னுருள
தங்கஒளி தானுருக்க தலைமறைந்து போயினளாம்

****

இன்பக் கனவுகள்

கனியோடு சுவைசேர்ந்த இன்பம் -  நற்
  கலையோடு எழில்காணும் வண்ணம்
பனியோடு குளிர்சேரும் தன்மை -  எனப்
  படைத்தானே இறைவன், ஏனென்னை
தனியாக மனம் ஒன்று வைத்தே -  அதில்
     தாங்காத சுமை ஏற்றிவிட்டு
இனிஓடி விளையாடு என்றே -  இந்த  
    உலகத்தின் எனை வாழ விட்டான்

வரியாகப் பலகோடு வைத்து -  அதில்
  வளைவாகக் கீறல்கள் போட்டு
புரியாத கோலங்கள் என்று -  ஏன்
   புனைந்தானோ மனிதமும் அன்று
புரியாத வாழ்வென்று தந்தும்  = அதில்
  புதிதாகத் துன்பங்கள் என்றும்
பெரிதாக இல்லாத இன்பம் - அப்
  பிறை சூடும் இறைதந்த சொந்தம்

மனிதா நீ ஏனிங்கு வந்தாய்  - உன்
  மனமென்னும் விதி கொண்டபோக்கில்
கனியாகும் வாழ்வென்று நின்று = அக்
  காலத்தின் அடிபட்டு வீழ்வாய்
இனிதான காட்சிகள் என்றும் - உன்
  இருவிழி கண்டதோ ரின்பம்
தனியாகி நிழல் போகும்போது -  அது
  தண்ணீரில் முகம் காணல் போலும்

பலகோடி வருடங்கள் ஆகி -  இப்
  பறந்தோடும் பந்தெனும் பூமி
தலைசுற்றித் தள்ளாடும் போது - எம்
  தவறோ இத்தரை கண்டவாழ்வு
நலம்விட்டு கிலிகொள்ளும் வாழ்வில் - ஓர்
 நடைபாதை முடிவாகக் காடு
பலம்கொண்ட வரை மட்டும் ஓட்டம்-  அவன்
  பறித்திட நின்றிடும் ஆட்டம்

புலனோடு எழுகின்ற ஆசை - வெறும்
  புவிமீது மனம் கொண்ட வேட்கை
சிலநேரம் மகிழ்வென்று ஆடி - கண்ட
  சுகம்யாவும் வெறுமையென் றாகும்
 மலர்மேனி தொட்டிட்ட இன்பம் -  நல்ல
  மதுவென்று கண்டதோ ருள்ளம்
பலமோடு சுகம் கண்ட பாசம் - இவை
  பனிமேடை கனல்கொண்ட தாகும்

Saturday, January 7, 2012

பார் அதி சின்னக் குழந்தை

(2009வது ஆண்டி ல் எழுதிய கவிதை)

சின்னஞ் சிறுமலரே - செல்லமே
   செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
   ஓடி வழிவதுஏன்
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
  கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
   உன்நிலை என்னசொல்வேன் 

ஓடி வருகையிலே - பின்னால்
    ஆமி துரத்துகிறான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
    அடித்துக் கொல்லுகிறான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
    வானிற் பறந்துவந்து
ஆயிரம் நூறெனவே - குண்டு,
    அள்ளியே போடுகின்றான்

உச்சிதனில் வீழும் - குண்டில்
   உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடியுதடி - ஊரே
   சுட்டகா டாகுதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
   நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
  செத்ததுடன் புதைத்தார்

கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
   கட்டி யணைத்து அன்பை
தந்தவள் மேனியினைக் - கொன்று
    தணலில் வீசிவிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
  பெண்ணே உன்தந்தையுடல்
சன்னம் துளைக்கச் செய்து - வீதி
   சாலையிலே எறிந்தார்


அள்ளி அணைத்திடவே - சொந்தம்
   யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
   மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
   உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
   கூடம் எதுவுமில்லை

என்ன கொடுமைஇது - என்று
   ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
   ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - வாழ்வில்
    ஆயிரம் கொண்டவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
    வாழ்வு மழிந்ததடி

பிள்ளைக் கனியமுததே - உன்போல்
  பேசும்பொற் சித்திரங்கள்
முள்ளி வாய்க் காலினிலே - பூத்து
   மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
   அன்பு சிறுவர்களும்
கொள்ளி வைத்தேமுடித்தார் - கோரம்
    எல்லை கடந்ததடி

இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
   என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
  மோசமிழைத்து விட்டாய்
ஈழத்தமிழ் வயிற்றில் - ஏனோ
   ஊன்றிக் கருவெடுத்தாய்
எங்கள் மண்ணில்மலர்ந்தாய் இதற்கு
  மன்னிப்பே இல்லையடி

சொல்லும் மழைலைஎல்லாம் - மறந்து
   சித்திரமே அழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
    மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்மிதியா - நடந்து
    சோர்ந்த நல்சித்திரமே
நல்லவர் தூங்கவில்லை - மீண்டும்
    நாடு எண்ணி எழுந்தார்

தூர ஒளி யெழுந்து- உன்னை
  தேடிவரும் அமுதே
வீரமெடுத்து அறம் மீண்டும்
  மெல்ல  வரும் முன்னே
யாரும் இல்லைஉனக்கு என்ற
 அச்சம் இனி வேண்டாம்
பாரில் பரந்ததமிழ் அமைக்கும்
 கொள்கை சிறக்குமடி

Friday, January 6, 2012

ஒற்றுமை ???


திரையும் திரையெழு கடலும் கடலிடை
தினமும் எழுகதி ரொளியும்,
தரையும் தரைதொடு அலையும் அலைபுனல்
தரவிண் பொழிமழை முகிலும்
இரையும் அதனுடை ஒலியும் இடியொடு
முழங்கு விரிசுழல் புயலும்
விரையும் பெருகிடப் புகும்நீர் இயற்கையின்
விளைவே எனில் உயிர்கொல்லும்

மரபும் மரபுடை மொழியும் மொழிசொலும்
மனிதர் அவருடை மனமும்
கரவும் கயமைகொள் உறவும் உயிரினைக்
கருதா இறைமைகொள் ளரசும்
பரவும் பெரிதெனும் உலகும் உலகிடை
பலதோர் குடிகளும் அவர்தம்
தரமும் தயவுடை இயல்பும் தாழ்ந்திடுந்
தருணம் வர உயிர்கொல்லும்

உதிரம் பெருகிடு நிலையும் நிலைதனை
உருவாக் கிடுமொரு சிலரும்
அதிரும் சடபட வெடியும் வெடியுற
அவலம் தொடரழு குரலும்
உதிரும் பலதர உடலும் அழிவுற
உலகம் விழிகொள்ளும் மௌனம்
எதிலும் அவர்தனி நலமும் நலம்பெற
விழையும் செயல் உயிர்கொல்லும்

மயிரும் இழந்திட உயிரும் விடுமான்
மனதை யுடைமா தமிழன்
பயிரும் பயிரிட விளையும் அதனுடை
பயனால் தனதெழில் மனையும்
உயிரும் பரிவுடை குணமும் பலமுறு
உடலு மதுகொளும் திடமும்
வயிரம் எனும்வெகு திறனும் மதியுற
வாழ்ந்திட ஏதுயிர் கொல்லும்?

வண்டிக்காரனின் பாட்டு

கிராமத்தில் ஒரு மாட்டுவண்டிப் பயணம்


கேளடா தம்பிநீ கேளடா -நீயும்
கேட்டிடப் பாட்டொன்று பாடவா
ஆளடா பூமியில் வாழடா ஒரு
ஆன வழிவரு மாமோடா
************
கேளு தம்பிநீயும் கேளடா

கீழத்திசையிலே சூரியன் வந்தது
கோவில்தெருவிலே ஊர்வலம்போனது
ஆழக்கடலிடை கப்பலும்போகுது
ஆனந்தமாகவே பிற்பொழு தோடுது
கேளு தம்பிநீயும் கேளடா

வாழைமரத்திலே தேன்கனிவந்தது
வானம் பொழிந்திடப் பூமி நனைந்தது
காளை வயலினைச் சுற்றி உழுகுது
காற்றில் ஒருபட்டம் மேலே பறக்குது
கேளு தம்பிநீயும் கேளடா

ஏழை வயிற்றிலே என்றும் பசிக்குது
ஏய்ப்பவர் கூட்டமோ ஏறி மிதிக்குது
நாளை விடிந்திடும் வாழ்வெனக் கூறுது
நம்பி இருந்திடக் கண்களும் போகுது!
கேளு தம்பிநீயும் கேளடா

பாழும் பணம் ஒருபக்கமா யோடுது
பட்டினிதான்ஏழை சொத்தென ஆகுது
வாழும்விதி நல்ல உள்ளங்கள்கொல்லுது
வாட்டி வதைத்திடப் பொய்மையும் வெல்லுது
கேளு தம்பிநீயும் கேளடா

உண்மை உரைப்பவர் உள்ளே கிடக்கிறார்
ஓயாது பொய்யிட்டோர் உத்தமராகிறார்
திண்மையற்ற மனம் தேசம்நிறையுது
தேடியும் நீதியைக் காணத் தவறுது
--கேளு தம்பிநீயும் கேளடா

கள்ளர் கரங்களில் சாவிஇருக்குது
கண்ட கதவெல்லாம் அஞ்சித் திறக்குது
உள்ள நகைபணம் ஓடிமறையுது
உண்மை அறிந்தவர் ஊமையென்றாகுது
கேளு தம்பிநீயும் கேளடா

வெள்ளம் கூடவந்து வீட்டைப் பிரிக்குது
வேண்டா மென்று சொல்ல வேதனைகூடுது
பள்ளம் குழியெங்கும் சேறு நிரம்புது
பக்கம்நடந்திடப் பாடாய் விழுத்துது
கேளு தம்பிநீயும் கேளடா

மன்னரும் மக்களை மாக்கள் என்றுள்ளியோ
மாந்தர் குடியிடை வேட்டை நடத்துறார்
நன்னரும் பொற்குவை நாட்டில் எடுக்கிறார்
நாடுஅழிய நமக்கென்ன என்கிறார்
கேளு தம்பிநீயும் கேளடா

பன்னீரும் வெண்ணுடை பாலும் பழம் வெல்லப்
பாகும் கலந்திடு பஞ்சாமிர்தம்வேண்டாம்
பன்னெடு நாளென அன்னைமண் மடியில்
பாதிவிழிமூடி ஆறித்துயில்கொள்ள

ஆவிகள் போக்கிட ஆணை கொடுப்பவர்
அன்புவழி தன்னின் அர்த்தம்புரிவரோ
பாவிகள் தேவைக்கு ஆடுபலிகொள்ளும்
பாவம் நிறுத்திடப் பண்பு திரும்புமோ
கேளு தம்பிநீயும் கேளடா

கூவிஅழுதிடுங் கூக்குரல் போய்விடக்
கும்பிடும் தெய்வங்கள் கொண்ட இதயமும்
தாவிடுமந்தியை தள்ளிவெளிவிட்டு
தங்கமெனும் மனம் தாரணிகாணுமோ

நாமும் வளர்ந்திட நாடுவளர்த்திடும்
நல்லறிவு கொண்டோர் கையினில் கோல்கொடு
யாவும் தமதென எண்ணும் அரசனின்
வாளுமுறங்கட்டும் வாழ்வு பிழைக்கட்டும்

Tuesday, January 3, 2012

உறுதிகொள் மனமே !

துள்ளுங் கயல்போல் துடித்தேநெஞ்சந்
தோல்வியில் வீழ்ந்தாலும் - அதை
அள்ளி அணைத்திடக் கைகளிருந்திடின்
ஆனந்த மாமன்றோ!
வெள்ளி முளைத்திடும் வேளை கயிற்றொடு
வாசலில்வந்தாலும் - விதி
தள்ளி நிறுத்திடத் தர்மம் இணைந்திடில்
தருமே சுகமன்றோ!

பல்லி ’இசுக்’கெனப் போகும் வழிக்கொரு
பாதகஞ் சொன்னாலும் - அது
இல்லையெனத் துணி வோடு நடந்திடு
உலகம் உனதன்றோ
சொல்லி வழித்தடை போட மனத்திடை
சோர்வே எழுந்தாலும் - நீ
அல்லி குளத்திடை போல மலர்ந்திடு
அதுவே வாழ்வன்றோ

சொல்லி எடுத்திடும் எண்கள் பிழைத்தொரு
துன்பம் நேர்ந்தாலும் - அவன்
வல்லஎழுத்திறை வைத்தகணக்கோடு
வாழ்வில் முன்னேறு!
இல்லைஎனத் தெரு வீதியில் நின்றிடும்
ஏழ்மைகிடைத்தாலும் - நீ
எல்லை வரை திடங் கொண்டு முயன்றிடு
ஏற்றம் உடைத்தாகும்

தள்ளி யிருந்தொருஆறு நடந்திடத்
தாகம் கொண்டே நீ - அது
துள்ளி நெருங்கிடும் என்று பொறுத்திடல்
இல்லா நடைகொள்ளு
கள்ளி முளைத்திடும் காடு வனம்எனக்
காலம் இருண்டாலும் - வழி
முள்ளு மிதித்து நீ வீறுநடைகொளு
முடிவில் வரும் விடிவு!

மயக்கும் மாலை வேளை!










 தோழி:
மாமரச் சோலையிலே - மடி
  மீது தலைய ணைந்து
மாமகள் நீயிருந்தாய் - மனந்
  தானும் மகிழ்வு கொண்டாய்
தாமரைப் பூவிரிய - புனல்
  தாவிக் கயல் குதிக்க
தேமதுரச் சுவையிற் - கனி
  தின்று களித்தனை காண்

சாமரை வீசிநிற்க - இன்பஞ்
  சார்ந்த மலர் முகத்தில்
சோகமிழையக் கண்டேன் - நின்
  சுந்தரமென் னுடலும்
பூமரம் போல் புயலில் - பட்டுப்
  போய் விழுமா மதுபோல்
நீமனம் மாறியதேன் - உந்தன்
  நிம்மதி போனதெங்கே?

பொன்முடி வேந்தன் வர - அவர்
  புன்னகை செய்வதெல்லாம்
நின்மனம் பேதலித்தோ - அவை
  நீசமென உரைத்தாய்
என்னடி நின்நினைவு - அன்பு
  எத்தனைஆழமென
என்மனம் தானறியும் - ஆயின்
  ஏனிந்த கோபமெலாம்

புன்னை மரத்தடியில் - எழில்
  பூக்கள் உதிர்ந்து நிற்க
பன்னெடும்வேளை அவர் - பெரும்
  பாசமுரைத்து நின்றாய்
பின்னர் அவரருகில் - நீயும்
  பேசிட ஏகும்கணம்
புன்மை மனமெடுத்தே - பல
   பொல்லா துரைத்த தென்ன?

தலைவி:
(வேறு)
என்ன நினைத்தென துள்ளம் வருந்திடும்
ஏதும் புரியவில்லை - இரு
கன்னம் வழிந்திடும் கண்களின் நீர்வரும்
காரணம் தோன்றவில்லை
இன்னும் மனதினில் சின்னவள் நானெனச்
சொல்லத் தெரியவில்லை - ஏனோ
இன்னலை கண்டதென் றின்பமிழந்திடும்
என்நிலை மாறவில்லை

பென்னம் பெரிதொரு சோலை எழில்த் தரு
பேசரும் பொன்நிழலாம் - அதில்
சின்னக் குருவிகள் சேர்ந்துமகிழ்வது
சொல்லப் பெருங் கதையாம்
மின்னி இரவினில் விண்ணொளி மீன்களை
மேனியணிந்த பெண்ணாய் - அந்தப்
பொன்னொளி வான்மதி பூத்தமரத்திடை
புள்ளியிற் கோலமிட

நீலக்கரு விண்ணில் நீந்துவெண் மேகமும்
நேசமிழை தென்றலும் - பல
கோலமிடு மிசைகூடும் கருவிகள்
கொண்டவை போல்நிதமும்
காலம் பொழுதுயர் காற்றெழும் புள்ளினம்
கூடி இசை படிக்க - பெரும்
சீலமுடன் சுவை சேர்ந்திடவே அதன்
சூழல்தனை வியந்தேன்

சோலை மலர்மணம் சொல்லித் திரிந்திடும்
சுந்தரமென் வளியும் - நல்ல
பாலை பழித்திடும் பஞ்சு வண்ணமுகில்
பக்கமணை மதியும்
ஓலை படித்தும் அறியேனடி எந்தனுள்ளம்
உவகைகொள்ள - இன்பம்
நூலை விடமிக நுண்ணியதாய் மனம்
நேரக் களித்திருந்தேன்

ஓடித் திரிந்திடும் மேகங்களில் பல
உற்ற உருவமது - கணம்
ஆடியெனைக் கொல்லும் ஆவியெனப் பகை
ஆவது போலுணர்ந்தேன்
தேடி திரிந்தென்னைத் தீண்டுவதாய் ஒரு
தீங்கெனும் எண்ணமிட - மனம்
வாடிக் கணந்தன்னில் வாழ்வு முடிவதாய்
வார்த்தை தவறிவிட்டேன்

காடு நடந்திடும் வேழம் மென முகில்
கன்னியென ஒருத்தி - அத
னூடு சிறுபிள்ளை ஓடிவரப் பெரும்
ஓங்கியெழும் அருவி
போடுஎன உயிர்போக்கும் அரக்கரும்
பூதங்கள் போற்பலவும் - விழி
மூடும்பொழுதிலும் ஊடுவர மனம்
முற்று மிழந்து விட்டேன்

கண்ட கனவு விழித் தெழுந்தேன் என்ன
காரணம் ஏதறியேன் - அதில்
கொண்டதென்ன உளங் கூறிய தென்னொரு
கோலம் புரிவதிலேன்
மண்டபமும் மலர் மாமரமும் நிழல்
தந்திட நானிருந்தேன் - அங்கு
கண்டது மோர்கன வென்ன உரைத்திடக்
காலையில் நான் மறந்தேன்

கற்பனையில் எனக்காணவைத்த தென்ன
காதலின் வேதனையோ - எனை
சிற்பமெனச் சிலையென்று நினைத்தவர்
சென்றதன் காரணமோ ?
அற்புதவேந்தன் அருகிருந்தால் இது
ஆகிடுமோஅதுவே - இந்த
சொற்புயல் தந்தெனைச் சீண்டி மகிழ்வதின்
செய்கை புரியேனடி!


தோழி

சீரும்செறிவாய் சிந்தைகொள்
சேருமன்பு பொலிவானால்
போருமூடே உண்டாகும்
புண்ணாய் மனதும் நோவாகும்
தேரும் மனதில் நல்லன்பும்
தெளிவைத் தாரும் கணமாக
நீரும் வற்றும் விழிமீது
நெஞ்சின் கருணை ஒளிகூடும்

யாரு மற்றேன் நானென்று
யாதும் எண்ணல் வேண்டாமென்
சேரும் அன்புச் செல்வமடி
சிற்றூர்தேசத் திளவரசி
பாருன் அன்பைப் புரிவாருன்
பக்கங் காணும் துயர்தானும்
நீரும்வற்றும் வெய்யோன்முன்
நேர்நிற் கும்பனி யாய்வற்றும்

தலைவி:
நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு
நெஞ்சத்தின் ஈரமும் வற்றுவதோ
காயொன்று வீசுவர் கல்லும்பட்டுக் கனி
யாகிடமுன் நிலம் வீழுவதோ
வாய்விட்டுப்பேசிட வண்ணம் கலைந்துமே
வாழ்வெட்டா தூரம் இருப்பதுவோ
போய் எட்டிதொட்டிட பொன்னொளி வானமும்
பொய்த்துவிடும் இதுஅப்படியோ

சேய் விட்டுப் போஎன்று சொல்லுவளோ தாயும்
சேராது எட்டி யிருப்பதுண்டோ
பூமொட்டு தன்னை பறிப்பதுண்டோ அது
பூத்திடும் வண்ணம்சி றப்பல்லவோ
மைதொட்டுபூசிடும் கண்களை மூடுமி
மைவிட்டு மூடா திருந்திடுமோ
பொய்சொட்டும் பேசாதோர் நீதியின்முன்ஏதும்
போய்மதி கெட்டுப் புழுகுவரோ

தெய்வத்தில் பட்டிடப்பூ எறிந்தால் வரம்
தெய்வஞ் சினந்து மறுப்பதுண்டோ
எய்அம்பி னோடுவில் லேந்திய வேடனும்
மெய்யன்பினால் வென்ற ஈசனல்லோ
தெய்யெனப் பாடிக் குதித்திடினு மவர்
தேருங்கலை தனும் பார்வையிலே
நெய்விட்ட தீபமென் றேஒளிர்ந்தால் அதை
நீர்விட்டு பார்ப்பது நேசமென்றோ?

அந்தவேளை தலைவன் திடீரென தோன்றுகிறான்.

தலைவன்:
கண்களில்நீருடன் பொன்முகம் ஆனதென்
காண்பதென்ன மனம்வேதனையோ
வெண்பனி போய்விடும் இன்பமென்காலையில்
வந்ததுயாது இளம்புயலோ
தண்ணொளி வீசிடும்சூரியனின்கதிர்
தானும் மலர்முகம் சுட்டதுண்டோ
விண்நிறை மாயஇருள்கலைந்தால் பின்னர்
வேறெது காலை புதிதல்லவோ

பூக்கும் மலர்களைக் காண்புது நெல்வயல்
புன்னகைக்கும் கதிர் புள்ளினம்காண்
தீக்குள் எரிந்திடும் வீறினைப்பார் எங்கள்
தேகம் படைத்தவர் கோவிலைக்காண்
மாக்கள் மனிதன்மரம் செடிகாண் இந்த
மாபெரும் மண்ணும் மதிவெயில் காண்
ஆக்கும் கடவுளின் நோக்கமும்பார் இனி
அன்புகொண்டே என்றும் வாழ்வினைக் காண்!

.

Monday, January 2, 2012

தவறுகள் வருத்தும் கணந்தன்னில்


தெரியவில்லை அழகுமுல்லை தேன்மலர்த் தோற்றம்- நேர்
விரியவில்லை உரியவாறு விழிகளின் மாற்றம்
திரிவதில்லை இளைய தென்றல் இருப்பினும் வாசம்- கொண்டு
உரியமுல்லை மணமிதுவென் றெவரிடம் கூறும்

உரியதுள்ள எதுவென்றானஉண்மைகள்தானும் - நல்ல
திரியுமுள்ள எரியும்வல்ல தீபமென்றாகும்
பெரியதுள்ள குன்றில்வைக்க இருளதுபோகும் அந்த
எரியவைத்த தீபமென்று எம்முகம் காட்டும்

பெரியசொல்லை வரிகளுள்ள கவிதையில் தானும் - நல்ல
பிரியமுள்ள வகையில் சொல்லும் கவிதைகள் யாவும்
உரியநல்ல சுவரில் தீட்டும் ஓவியம் போலும் - கண்ணில்
தெரியும்போதுமனதை கொள்ளை கொண்டிடத்தோன்றும்

சொரிவதில்லை மதுவுமில்லை காகிதப் பூவும் - ஆயின்
எறிவதற்கு முடிவதில்லை எழுத்துக்கள் காணும்
அரியதென்று அதனில் தோன்றும் அன்பினைத்தானும் - கூறும்
பரிவுகொண்ட வரிகள் வாசப் பூவெனக்காணும்

கரியுமில்லை களங்கமில்லை காண்மதிமீதில் - என்ற
வரியும் சொல்லி வைத்தபின்னும் வான்மதி தேயும்
பெரிய துன்பம் போலுமந்த பாசங்கள் கூடும் -  வானில்
திரிவதென்ன தனிமைகொண்டு உருகிட நானும்

சரிவதெல்லை சரியதில்லை என்கிறபோதும் - ஒரு
சரிவினெல்லை காணல்என்றும் சரியில்லை ஆகும்
எரியும்கல்லை எறிவதில்லை என்கிற போது - அதை
விரியும்கைகள் எறிதல்போலும் விளைந்திட நாணும்

விரியவில்லை சரியவில்லை வெண்ணொளி வானம் - அங்கு
தெரியுமெல்லை முடிவுமல்ல ஒன்றெனக்காணும்
புரியுமந்த உறவும் என்றும் பொய்யென ஆகும் - தூரம்
தெரியும் பாதை செல்லச்செல்லப் பிரிந்திடக் காணும்

நரியுமில்லைக் காகமில்லை நம்மதுவாழ்வும் - கொண்ட
குறியும் வீழத் தவறுசெய்யின் குற்றமும் கொள்ளும்
சரியுமில்லை தவறுமில்லை இடையினில்வாழும் வெறும்
கருவியில்லை காணுமுள்ளம், கரும்பினில் சாறும்

பிழிவதில்லை பெருமைகொண்டு உள்ளவர்யாவும் - அவர்
விழியினுள்ளே கருமைகொண்ட கண்மணிதானும்
பழியும்சொல்லி விடுவதில்லை பாலென விழியும் காணும்
தெளிவுகொள்ள உதவும் வில்லை கருமை யென்றாலும்

கரியுமல்லை கனியுமில்லை காலமென்றாகும் -நல்ல
கருப்புமில்லை இனிப்புமில்லை கண்டிடும் வாழ்வும்
பெரியதல்ல பிழைகள் என்றும் வாழ்வதில் நேரும் பின்னர்
தெரிய உள்ளம் வருந்துமாயின் திருந்திய தாகும்