Monday, September 5, 2011

செய்த குற்றமென்ன?



திங்கள் வரும் வானமதில் செய்துவிட்ட குற்றமென்ன
தேடிமுகில் மூடுகின்றதே!
மங்குஒளி தீபமது மனமெடுத்த குற்றமென்ன
மாலையிளந் தென்றல் ஊதுதே
பொங்குநதி செய்ததொரு குற்றமென்ன போகுமிடம்
பாதையெங்கும் கல்லும்முள்ளுமே
அங்கும்வளைந் தேநெளிந்து அதுநடக்கப் பாறையொன்று
அதைவிழுத்தி மகிழுகின்றதே!

செங்கமலம் வாழ்வினிலே செய்தவொருகுற்றமென்ன
சீண்டும் அலை ஆடுஎன்குதே
அங்கு படர் தாமரையின் அலைமிதக்கும் இலைவெறுத்து
ஏறியநீர் விட்டு ஓடுதே
தங்கம் எழில்தந்தபோதும் தன்னகத்தே கொண்டதென்ன
தீயழிக்க தேகம் வெந்ததே
எங்கணும்நற் சோலைதன்னில் உள்ளபூக்கள் செய்ததென்ன
ஓர்தினத்தில் காய்ந்து வீழுதே

பெண்மையெனும் மென்மைசெய்த குற்றமென்ன பூமியிலே
மேனியது போதையாகவே
கண்ணியமே அற்றவர்கள் கண்டுஅதன் தூய்மைகொல்லக்
காப்பதற்கு யாருமில்லையே
சின்னவர்கள் வாழும்தமிழ் ஈழமண்ணில் செய்ததென்ன
யாருமற்ற நாதியாகவே
மென்னுடலை ஆயிரமாய் மேதினியில் யாரும்விழி
கொள்ளமுதல் பூமிதின்குதே?

அள்ளி உடல் கொள்ளிவைத்து ஆவெனவே அலறியவர்
ஆனந்தமாய் துள்ளி ஆடுறார்
நள்ளிரவுப் பேயென்றாகி நங்கையர்கள் பெண்ணவர்முன்
நாயிலும்கீழ் இழிவு செய்கிறார்
எள்ளி நகையாடி இவர் என்னசெய்தும் பூமிகண்டு
என்னசெய்தார் தூங்குகிறார் ஏன்?
வள்ளிமணவாளனே சொல்! வாழ்வில்தமிழ் ஈழமக்கள்
செய்தபெருங் குற்றமென்ன சொல்!

No comments:

Post a Comment