Wednesday, November 9, 2011

அன்பும் வாழ்வும்

வெள்ளை மலர்கள் வீசுந்தென்றல் விடியுங் காலைகளும்
உள்ளம் எங்கும் உண்மையன்பும்  உலகின்கண் செய்தாள்
தெள்ளத் தெளியும் நீரோடைநற் தேனாம் கனிமரங்கள்
அள்ளித் தூவும் மலர்கள் காட்டின் அமைதி அவள் செய்தாள்

துள்ளித் திரியும் மானின்ஓசை, தூங்கும் இலைதொட்டே
தள்ளும் தென்றற் காற்றின் சத்தம் தந்தே எழில் செய்தாள்
வெள்ளிக் கொலுசாய், விரையும் நதியில் விளையும் சிறுஓசை
கொள்ளை யின்பம் யார்தான் செய்தார் கோலத்திருமகளே

பள்ளித் திண்ணை குருவும் பாடம் பயிலப் பலநூல்கள்
கொள்ளத் திறனும் அறிவும் கொண்ட குணமும் குறுமுகமும்
துள்ளித்திரியும் இளமை இன்பம் தேடும் இரு விழிகள்
வெள்ளிச் சுடரும் விண்ணும்வெளியில் வியக்கும்வகை செய்தாள்

சுற்றுமுலகும் சூழும் அண்டம் சூரிய மண்டலமும்
கற்றும் அறியாக் கற்பனைக் கெட்டாக் காலச் சக்கரமும்
மற்றும் மனமும் மனதில்விரியும், மாபெரும்கற்பனையும்
சற்றும் அறியோம் சக்திஎன்றோர் சக்திதான் செய்தாள்

குற்றம், கொல்லுங் குணமும்,  குருவி, கொள்ளப் பருந்தினையும்
வற்றும் குளமாய் வாழ்வும் வற்ற, வாடும் மீன்களென
முற்றும்பாசம் அற்றோ ரும் மவர்மௌனப் பெருமூச்சும்
அற்றோர் ஏங்கும் அவலங்களென்  றகிலம்கொள வைத்தாள்

 விற்றும் வாங்கும் பொருளேயல்ல விளையும் பெருஅன்பு
கற்றுப்பெறுதல், கடனோ அல்லக் கருணை எனும் வெள்ளம்
தொற்றும் நோயாய்ப் பரவி எங்கும் தோற்றம் கொள்வதில்லை
பற்றும் பாசம் படைப்பில் அவளே பார்த்துத் தரவேண்டும்



அன்பே இல்லா உள்ளம் தன்னை அவளே செய்தாளோ
தென்றல் சீறிப் புயலாய் மாறச் சித்தம் கொண்டாளோ
நன்பெய் மழையும் நல்லோர் பயிரும் நாட்டில் வளர்வித்தாள்
வன்மைகொtண்டோர் விலங்கைச் செய்து வாழ்வும் அழித்தாளேன்

No comments:

Post a Comment