Tuesday, October 19, 2010

ஏன் படைத்தான் எமை?


கண் படைத்தா னேன் அழுவதற்கா
கால் படைத்தா னதைத் தொழுவதற்கா
மண் படைத்தான் கீழ் விழுவதற்கா
.மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா

விண் படைத்தான் ஒளி வருவதற்கா
வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா
கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே
கடும்புயலாய் எம்மை வருத்திடவா
 
பூக்கள் செய்தானதைப் பறித்திடவா
பூவித ழேன்கைகள் பிரித்திடவா
..பூக்கள் வைத்தான்வண்டு குடித்திடவா
போதை கொண்டேமலர் வருத்திடவா
 
பாவை கொண்டாலெழில் பலிகொள்ளவா
பருவ உடல்தினம் வதைசெய்யவா
தேவை என்றாலின்பம் துய்த்திடவா
தேடியதும் அதைத் தீயிடவா
 
நாடு என்றால்அது நரகமதா
நரபலி தானவர் அறநெறியா
தேடு என்றால்ஒரு திரவியமா
தீதுசெய்தே வரும் பாவங்களா
 
அரசன் என்றால் அவன் அறிவுளனா
.ஆளைக்கொல்லும் ஒரு எமன்மகனா
சிரசு கொய்தே அவன் சிரிப்பதற்கா
சேவை என்றாலுயிர் குடிப்பதுவா
 
இனமழித்தால் அது இறைமை என்றா
இரத்தம் பட்டே செம்மைஅடைந்திடுமா
தினம்படுபொய் சொல்லத் திறமைஎன்றா
திருகு தாளம் சன நாயகமா
 
உலகமென்றால் அது உழலுவதா
உயிர்கள் என்றால்ஆடும் ஊஞ்சல்களா
கலகமென்றால் பெருங்காவியமா
கண்களில் நீரிடல் அரசாங்கமா
 
வெட்டுகிறான் எம்மை விரட்டுகிறான்
வேடிக்கை பார்ப்பது விரிஉலகா
கட்டுகிறான் கடல் வீசுகிறான்
கையறு நிலைகொண்ட கவினுலகா
 
எத்துணைநீசரை எதிர்த்து நின்றோம்
எடுத்தடி வைத்தவர் திகைக்க வைத்தோம்
நித்திலம்மீதினில்நேர்மைவெல்ல
நெஞ்சினை முன்னே நிமிர்த்திவந்தோம்

பூக்களைக் கொய்தனர் இடியிடிக்க
புதுவிஷம் வைத்தனர் துடிதுடிக்க
தீக்களை வைத்தனர் தெருமுழுக்க
தீய்ந்தது ஈழம் தேம்பியழ

ஒருவனை எதிர்த்தது உலகமெல்லாம்
ஒருநிரைசேர்ந்தது உண்மை கொல்ல
பெருகி யதோ பேரவலமல்ல
பேய்களின் பிடியின் ஆழங்களே

இறந்தது ஈழ தமிழனல்ல
இயற்கையின் தர்மதிருவுளமே
எரிந்தது தீயில் ஊர்களல்ல
இறையவன் கோவில் வாசல்களே

No comments:

Post a Comment