Thursday, September 8, 2011

போரும் வாழ்வும்!


கத்தி எடுத்தவன் வெட்டவந்தால் - நாமும்
கண்கள்மூடித் தவம் செய்வதுவோ
வித்தை யேதுமுண்டோ வெட்டுபவன்- தன்னை
வேடிக்கை செய்துவிரட்ட லுண்டோ
சொத்துசுகம் யாவும் விட்டிடலாம் - ஆயின்
சொந்த உயிரையும் விட்டிடவோ
செத்துமடிவது இன்பமென்று - அவன்
தெய்வமென்று கையும் கும்பிடவோ

சத்தியம் தர்மமும் கொண்டவர்கள் - குரு
ஷேத்திரம் போர்க்கள பாண்டவ்ர்கள்
நித்திலம் எங்கிலும் பாரதப்போர் - கதை
நீதியென்று ஏற்றுக் கொண்டதன்றோ
கத்தியே நீதியும் கேட்டவளாம் - அந்தக்
காரிகை திரௌபதி ஆடையினை
ஒத்தவ கையினில் நீக்கிவிட - எஙகள்
ஊரிலெத் தனை துச் சாதனன்கள்

சித்தம் தவறிய ரத்தவெறியர் - தாம்
சத்தியம் காந்தீயம் பார்ப்பதுண்டோ
கத்தும் விலங்குக்கு கற்பூரவாசனை
காட்டிவைத்தால் உதை விட்டிடுமோ
அத்தனைபேரும் அருச்சுனாய் எண்ணி
அம்பினை கீழேயும் வைப்பதில்லை
புத்தரும் யுத்தம்பின் ஞானம்கண்டார் இன்று
பேய்களன்றோ எம்மைச் சுற்றி நின்றார்

நாடுமில்லை ஒரு வீடுமில்லை
ஒரு நாலடி ஐந்தடி மண்ணுமில்லை
காடுதானே உங்கள் சொந்தம் என்றார் - அந்தக்
கௌரவர்கள் ஆகா எத்தனைமேல்
வீடுமில்லை அந்தக்காடுமில்லை பெரு
வான்வெளியில் தனி ஆவியென
ஒடிப்பற விளையாடுஎன்று எமை
ஓங்கிவெட்டி இவர் கொல்லுகிறார்

வைத்தியம் செய்யநோய் முற்றிவிட்டால் அதை
வெட்டிப்பிரிப்பது குற்றமில்லை
சத்திரசிகிச்சை செய்வதுதான் உயிர்
தப்புமென்றால் அது பாவமில்லை
பெத்தவள் உயிரை காப்பதுவா இல்லை
பிள்ளை உயிர்தனை காப்பதுவா
வைத்தியர் கூட தருணமதில் ஒரு
வன்மை மனம்கொள்வ தாகிடுவார்

கொத்தவரும் பாம்பைக் கொல்லுவது பாவம்
கொண்ட தடியினை போடுஎன்றார்
சுத்தமாகக் கையில் ஏதுமில்லை இன்று
கொல்பவர் கூத்தாடிக் கொல்லுகிறார்
சத்தியம் பேசிய நாட்டிலெல்லாம் இன்று
சின்னத்திரை படம் ஓடுகிறார்
கொத்திய வெட்டிய கோலமெல்லாம் படம்
கொண்டு வெள்ளித்திரை காட்டுகிறரர்

இப்போதேவை வெறும் காட்சியல்ல இந்த
ஏழைகளுக்கெனத் தீர்வுஒன்று
தப்போ சரிதானோ விட்டுவிடு இன்று
தர்மம் அதை துயில் விட்டெழுப்பு
எப்போ நடுவினில் வந்துநின்று எமை
வெட்டுவர் கையில் விலங்கையிட
தொப்பெனவோர் திரைநாயகனாய் ஒரு
தேசம் துணிந்து குதித்திடுமோ

No comments:

Post a Comment