Wednesday, September 28, 2011

முடிசூடா மன்னன் !

என்ன தவம் செய்தோம் சக்தி -ஆகா
இத்தனை அன்புடன் உள்ளம்படைத்தாய்
மின்னலின்றி ஒளிவெள்ளம் ஒரு
மேகமின்றிக் கொட்டும் தூறலும்கண்டேன்
பொன்னை நிகர்த்தன அல்ல - மனம்
பூவெனும் தன்மைக்கு ஈடென்றுமல்ல
பென்னம் பெரி ததைவிட - இந்தப்
பூமியி லேயிதை வெல்வ தொன்றல்ல

மன்னவன், பொன்முடியில்லை - இவர்
மாசறு வேந்தன், ஓர்மந்திரி யில்லை
பன்னரும் கொத்தளம் கூடம் - பெரும்
பண்டகசாலை படைகளுமில்லை
இன்னிசைக் கூத்தனர் இல்லை - மன்னர்
இச்சைகொள் அந்தபுரங்களும் இல்லை
பொன்குவை கொள் திறைசேரி - அதில்
பூட்டி வைக்கும் முத்துரத்தின மில்லை

கன்னியர் கூடிநின்றாடும் - குளிர்
காற்றெழும் சோலையும் நந்தவனங்கள்
தன்னகம் கொண்டவரில்லை - ஆயின்
தந்த கவிதைக்கு ஒர்குறைவில்லை
நன்னிளம் தென்றலும் வீசும் - அதில்
நாடிமனம் கொள்ள பொன்நிழல்போலும்,
இன்பமெழும் விளையாடும் - அதில்
உள்ளபொருள் மனமேற் றொளிகாணும்

பென்னம்பெரு வலு உள்ளோன் - கவி
பேசரும் நாவலர் தம்மிலோர் முன்னோன்
உண்மையென்னும் முடிசூடி - இவர்
உள்ளங்கள் ஆண்டிடும் உன்னத ஆட்சி
எண்ணம் அரண்மனை யாகும் - அதில்
எததனை சாளரம் அற்புதமாடம்
பண்ணொடு கீதம் இசைக்கும் -அதில்
பற்பல ராகமெழுந்து மயக்கும்

ஆளும் பலமன தேசம் - அதில்
ஆற்றல் தனும் கொட்டி கொள்குவையாகும்
நாளும் புகழுடன் வாழும் - அசைந்
தாடி நடந்திடும் வாழ்வென்னும் தேரும்
வாழும் பல்நூறெனும் ஆண்டு - அதில்
வண்ணமலரென இன்பங்கள் கொண்டு
நாளும் வரும் சுடர்வானில் - அதன்
நல்லொளிபோல் நலம்கொண்டிட வாழி!

No comments:

Post a Comment