உன்னை நினத்து உருகிநின்றோம் -என்றும்
உன்னைக் கரங்கள் தொழுது நின்றோம்
தென்னை நிறை திருக்கேதீஸ்வரம் -கோவில்
தன்னில் உறையு மெம தீசனே
எம்மைப் படைத்தனை ஏன் இறைவா -நீயும்
எட்டி உதைத்து மிதித்திடவோ
அம்மை உமைமீது கோபம்கொண்டால் - சினந்
தாடிமிதித் தெம்மில் கூத்திடவோ
செம்மை மொழிஎன்று கூறுகிறார் -பலர்
சொல்லரும் பழமை பேசுகிறார்
உண்மையெனில் வயதாகிவிட்ட மொழி
ஏன் இனியென்று வெறுத்தனையோ
சிங்களப் பேச்சில் மயங்கினையோ -நல்ல
செந்தமிழ் பேசிச் சலித்தனையோ
தங்கிலீசு பேச இல்லையென -உனக்
கெம்தமி ழீழம் கசந்ததுவோ
காத்தல் படைத்தல் அழித்தலென -அவை
காணும் தொழில் இவை மூன்றினிலும்
காப்பவன்தானும் படைப்பவனும் -நல்ல
கண்ணுறங்க நீ விழித்தனையோ
ஆடுவது சுடுகாடு என்றார் -உந்தன்
அன்புமீறித் தமிழ்ஈழம் வந்து
ஆடவென்று சுடுகாடு செய்து -பின்னை
அங்குநடமிட்டு தூங்கினையோ
அன்றொருவன் பெரு வேள்விசெய்து அதில்
ஆக்கி ஒருபுலி ஏவிவிட்டான்
கொன்று உடுத்ததில் கண்டசுகம் -நின்று
இன்று அதைச்செய்யத் தூண்டியதோ
பாதி மேனிதனைப் பார்வதி -அம்மைக்கு
பாகமளித் தவா,ஈசுவரா
நீதியோ நம்மையும் பாதிப்பாதி -என
நீசர் கிழித்திடக் காணுவது
செங்குருதி பட்டுச் செம்மையாக -இங்கு
செந்தமிழ் என்றொரு பேர் வந்ததோ
பொங்கி குருதி வழிகையிலே -இது
பொங்குதமிழ் ஆகிப் போனதுவோ
சங்ககாலம் சொல்கதைக ளெல்லாம் -ஏது
சாய்ந்து வீரமைந்தர் தூங்கவென
பைந்தமிழ் அன்னைஅருகிருந்து -இசை
பாடிக் கண்வளர்த்த பாட்டுகளோ
செல்லமகன் வீழ்ந்தபோர்முனையில் -உடன்
சென்றுமுதுகினில் வேல்விழுந்து
கொல்ல விழுந்தவன் ஆகிவிடில் உண்ணக்
கொண்ட இடமினி இல்லையென்று
மங்கை ஒருத்தியும் சென்றாளென -ஒரு
மாண்புமிகு கதை கூறிவைத்தார்
எங்கள் மைந்தர்எதிர் நிற்கையிலே அந்த
எத்தர்பெரு நஞ்சுவைத் தழித்தார்
வஞ்சகம் செய்தவர் அன்னையொருவ-ளாம்
நெஞ்சினில் கொண்டது நஞ்சல்லவோ
நஞ்சு கொண்டவரை வாழவைத்தாய் நீயும்
நஞ்சுண்ட தால் எழும் நேசமதோ
புண்ணைக் கிளறிய வேதனையில் -நாமும்
கொன்றிடக் கொல்லக்கத றுகின்றோம்
கண்ணைத் திறதிருக் கேதீஸ்வரம் தன்னில்
காணும் எமதருட் காவலனே!