Wednesday, September 28, 2011

வெல்ல எழு! துயர் சொல்ல எழு!

தொட்டு துணிந்தவர் வெட்டிக் களித்திடப்
பட்டுத் துடிப்பதுவோ - துளி
சொட்டக் குருதியும் பட்டநிலம்விட்டு
எட்டி நடந்திடவோ
வெட்ட வெளிதெரு வீசும் பிணங்களில்
தட்டுத் தடக்கிடவோ - இதை
விட்டுப்பெண்ணும் நெஞ்சில் குத்திக்கதறிட
எத்தனை நாளின்னுமோ

முத்தி விசர்பிடித் துச்சி மரத்தினில்
பித்தம் பிடித்தவரும் - நின்று
நித்தமும் பெண்வர பொத்தென வீழ்ந்தவர்
நெஞ்சைக் கிழிப்பதுவும்
கத்திக் குரலிட்டுக் காடுறை பேயெனச்
சித்த மிழப்பதுவும் - இவை
உத்தம புத்தனும் போதி மரத்திடை
ஓதிய போதனையோ

குட்டிப் புழுதன்னும் தொட்டவர் கையினில்
கொட்டும் மயிர்கள் குத்தும் - அவை
பட்டுக் கடித்திட ரத்தச் சிவப்பிடும்
மொத்தம்வலி எடுக்கும்
கொட்டி விஷமதைப் புற்றுக் கறையானும்
கொள்ளி எறும்பதுவும் - அதை
முட்டி விட்டால்முழு மூச்சுடனே உயிர்
விட்டும் எதிர்த்து நிற்கும்

எட்டு அடிவளர் எம்மவர் இன்றுமே
தொட்டுக் கெடுத்தவனை - புது
பட்டுவிரிப்புடன் பஞ்சணைதூங்கிட
பாதம் பிடித்திருப்பர்
கட்டிய கைகளும் காலும்பிணைத்திட
சுட்டுக் கொல்லுமவனை - உள்ள
சட்டம் நெருங்கிட விட்டுவிடாதவர்
ஒட்டி உதவிசெய்வர்

சட்டம் குருடதன் கண்ணில் கருந்துணி
கட்டிவிட்ட துலகு - கரம்
தொட்டுமே அந்தகர் சொல்லென யானையை
விட்டது போலிருக்கு
முற்று மிருட்டறை மூடிக் கருமைக்குள்
கட்டியெமை யிருத்தி - தனி
தொட்டிவர் நீதியைச் சொல்லென கேட்டிட
சுத்தம் எது இருக்கு?

புற்றில் கரம்விடு, பூக்கள் பறித்திடப்
பெற்றிடு இன்பமென்றார் - இல்லை
சுற்றி உடல்பற்றிக் கொத்தும் அரவமென்
றெத்தனை நாளுரைத்தோம்
சுற்றிக் கழுத்தினில் ஒற்றைக் கயிறிட்டுச்
தூக்கிடும்போதினிலே - இன்று
முற்றும் பிழையிது மூச்சுதிணறுது
விட்டுவிடு என்கிறார்

செத்தவர் மீண்டும் சிதை பிரித்தே உயிர்
பெற்ரிட லேதுமுண்டோ - ஒரு
கொத்திப் பிரித்துடல் கொள்ளியிட்டபின்பு
கூடென ஏதுமுண்டோ
சத்தியத்தின் கண்கள் நித்திரை அல்ல, ஓர்
நித்திரபோல் நடித்தால்
எத்தனை நேரம் எழுப்பினும் தூக்கத்தை
விட்டுஎழுந்திடுமோ

தட்டி முதுகினில் வந்து சுதந்திரம்
தந்திடும் பூமியில்லை - இவன்
சட்டமதித் தெங்கள் தாயின் நிலம்தன்னை
விட்டேகப் போவதில்லை
முற்றும் உலகிது மெல்லத் திரும்பிட
இத்தனை செய்தயடா - அட
அற்புதம் தம்பிநீ அத்தனைவீறுடன்
ஆர்ப்பரித் தின்னும் எழு

பொங்கு மனத்திடை பொங்கும் கடலென
வெஞ்சினம் கொண்டுஎழு -அன்று
பொங்கி யெழுந்த எம்பெண்களின் சாபங்கள்
போய்ப் பகை வெல்ல எழு
பொங்கி வழிந்த குருதியைப்போல் நீயும்
பொங்கியெழு! புவியோர்
பங்கு எமதீழ மண்ணில் உரிமையை
பங்கிடும் மட்டும் எழு!

No comments:

Post a Comment