Monday, October 31, 2011

சிலந்தியும் நாமும்

பாட்டெதற்குப் பாடியே பரமனவர் பட்டதனை
பாவிநான் மறக்கலாகுமோ -இன்னும்
போட்டுடைத்து ஆடிப்பெரும் பூமியில் புயலடிக்க
பூமலர்கள் தூவலாகுமோ
ஏ(ட்)டெதற்கு என்றெழுதி இதயம் கனத்துவிட
இன்னமும்  எழுதல் என்னவோ -நாளும்
நீட்டியொரு பாய்விரித்தும் நிமிர்ந்து படுத்துமனம்
நிம்மதியைக் காணலாகுமோ

நாடெதற்கு நல்லவர்கள் அற்றவர் அரசுகொள்ள
நானெதற்கு என்னலாவதேன் - உந்தன்
வீடெதற்கு என்றவனோ வெட்டியும் விறகெரிக்க
விட்டுமோடிச் செல்லலாகுமோ
ஆடவரக் காலுடைத்து அழகென்று சொல்பவரை
ஆளும் திறன் என்னலாகுமோ -இன்னும்
வேடமிட்டு சூழ்ந்துவந்து வேதனை விளைப்பவனை
வேடிக்கையென் றெண்ணலாகுமோ

தோலுரித்து வெய்யிலில் துடிக்க விரிப்பவனைத்
தோழனென்று கொள்ளலாகுமோ -அவர்
நாலுபேரைத் தூக்கவிட்டு நடுவில் படுக்கவைக்க
நாமும்சரி என்னலாவதோ
வாலிருக்க தீயைவைத்து வந்திருந்த தூதனையும்
வேடிக்கை புரிந்தவரல்லோ -அன்று
காலிருக்க ஒடியவன் கனத்த அனல்எரித்துக்
கண்டநிலம் தீயுதாமின்றோ

வேலிருக்க என்னபயம் வென்றுவிடு என்றவனும்
வீதியிலே நிற்கலாகுமோ - ஒரு
கோலிருக்கு ஆளுங்குடை கொண்டிருக்கு என்றவுடன்
கோவிலும் பறிக்கலாவதோ
ஆலிருக்கு தோரரசும் அங்கிருக்கு என்றவுடன்
அந்த இடம் சொந்தாமாகுமோ -இங்கு
வேலிருக்கு வேம்புடனே விளைந்த நிலமிருக்க
வீற்றிருக்க வந்தாராம் ஏனோ

கூழிருக்கு சோறுகஞ்சி குடித்துப் படுத்தமண்ணை
கூலிபெற்று விற்கலாகுமோ - கொண்ட
தோளிருக்கு உள்ளம் இன்னும் துடித்து உணர்விருக்க
தூங்கவென்று செல்லலாவதோ
ஆளிருத்தி வாழ்வழித்து அவலமிடப் பொறுக்க
ஆக இன்னும் ஏழையாவதோ - இன்னும்
நாளிருக்கு நமக்கில்லை நாமிருப்ப தூரமென
நாஒறுக்க ஊமையாவதோ

ஏழிருக்கு ஏழரையில் ஏறியேசனியிருக்க
எல்லாம்விதி என்று சொல்வதோ -அட
ஊழிருக்கு செய்தவினை உற்றழியகாலமிது
ஒன்றும்பயன் இல்லையென்பதோ
நூலுடன் சிலந்திவலை நாலுதரம் வீழ்ந்தெழுந்து
நெய்தகதை நீபடித்தையோ -அது
போலிருக்கு பூமிதனில் புன்மைதரும்வாழ்வு நீயும்
போயெழுந்து வாழ்வு கொள்வையோ

No comments:

Post a Comment