Thursday, January 24, 2013

சிரிப்பொலி (புதிது)


வானெழுந்த வெயில் சிரிக்கும் .  வண்ணமலர் புன்னகைக்கும்
.  வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைவயற் கதிர்சிரிக்கும்   சிற்றோடை கிளுகிளுக்கும்
.  சேர்ந்துவளர் செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானகத்துப் புள்ளினங்கள் .  காற்றொலியில் கூச்சலிடும்
.  காட்டினிலே வண்டுமலர் கண்டு சிரிக்கும்
மானமிழந் தோனைஉயர் .  மாபுகழோன் கேலிசெய்ய
.  மாறும்விதி மாற்றிவிட்டு வீழ்ந்து சிரிக்கும்

தேன்குடித்து மந்தியினம் .  துள்ளி இளித்தாடிவிழும்
.  துயருறுவோன் வாழ்வுகண்டு துறவி சிரிப்பான்
போனவனைக் காட்டினிலே . போட்டெரித்து மீண்டவனும்
, போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்
மான்விழியில் மைந்தர்குலம் .  மருள்வுகண்டு சிரித்திருக்க
.  மங்கையவள் மனதிலென்ன எண்ணி நகைப்பாள்
கூன்விழுந்த பாட்டிமனம் .  குமரியெழில் பார்திளமை                                  
.  கொண்டதிமிர் எண்ணி நிலைகண்டு சிரிப்பாள்

நீரோடும் நதி குதித்து . நெளிந்து மெல வளைந்துசெல்ல
.  நளினமுடன் கரைஅலைகள் நாளும் சிரிக்கும்
பேரோடு பூமியிலே .  பேரரிய வீரமிட்டோன்
.  பெண்மொழிக்கு தோற்றுவிடப் பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே .  ஒருவனாகத் தனித்திருக்க
.  உண்மைவழி நின்றிடினும்  உலகம் சிரிக்கும்
யாரோடிச் சென்றிடினும் .  வாழ்வோடி முந்த அதைப்
.  போராட எண்ண விதி புன்னகை பூக்கும்

தானோடிச் சுற்றுலகு .  தாங்கும்சிறு மானிடனோ
.  தன்னுடைமை பூமிஎன தரணி சிரிக்கும்
வீணாகத் உயிரெடுத்து .  வீதியிலே சாகுமினம்
  வெறிபிடித்த நிலைமை கண்டு பேய்கள் சிரிக்கும்
தானமிடும் குணமகனைத் .  தரமறுப்போன் கேலிசெய்ய
.  தாவணிப்பெண் இருவர்கூடச் சிரிப்பொலி கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவரும் .  விதியறிந்து நகைபுரிய
.  தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்

கண்டதும் காணாததும்

ஒன்று சேர்!
(ஒருவன்)
தேனூற்றும் மலர் கண்டேன் திங்கள் கண்டேன்
தினந்தோறும் வாசமிடும் தென்றல் கொண்டேன்
வானேறும் வெயில் கண்டேன் வானில்தூரம்
வளைந்தோடும் பறவைகளின் கூட்டம்கண்டேன்
தானூற்றி வீழ்ந்தருவி தெறிக்கக் கண்டேன்
தரைமீது விளையாடும் மானைக் கண்டேன்
பூநாற்றம் கொண்ட மலர்ச் சோலையெங்கும்
புதுமை யெழில் பொன்நிலவில் மின்னக் கண்டேன்

(இன்னொருவன்)
பன்சிலிர்த்த உணர்வோங்கும் மனங்கள் காணேன்
பனிதூங்கும் குளிர்வண்ணப் பேச்சைக் காணேன்
தென்னைதொடு இளங்காற்றின் சுகத்தைக்காணேன்
தித்திக்கும் செங்கரும்பில் இனிப்பைக் காணேன்
என்னசுகம் இதுவோஎன் றேங்கக் காணேன்
இசைக்கு மோர் இருள் வண்ணக் குயிலைக் காணேன்
அன்னஅசை செந்தமிழின் அழைக்கு மோசை
அடடா அங்கில்லை முழு நிசப்தங் கண்டேன்

(மூன்றாமவன்)
மின்னுகின்ற விண்மீன்கள் துடிப்பைக்கண்டேன்
மேகமெலாம் கலைந்தோடி அஞ்சக் கண்டேன்
செந்தணலும் நீர்பட்டு தணியக் கண்டேன்
சேதிசொலும் முரசங்கள் உறங்கக் கண்டேன்
சந்தமின்றி சொற்கவிதை சரங்கள் போலும்
சற்றுமிழையா மனிதர்வாழ்வைக் கண்டேன்
மன்னர் பரி வாரங்களும் மறையக் கண்டேன்
மாதவளின் புன்னகையில் துயரைக் கண்டேன்

(பொது)
சொன்னநிலை மாற்றிடவே சிந்தை கொள்வீர்
சோதிபலங் கொண்டுகிழக் கெழுதல் காண்பீர்
பொன்னிறத்து கதிர் வயலில் பொலியக்காண்பீர்
புதுவெள்ளம் பிரவகித்துப் புரளக் காண்பீர்
தென்னைமர இளங்கிளிகள்  சோலையெங்கும்
தாவியெழுந் தோடிமகிழ்வாடக் காணீர்
என்னவென மாந்தர் மனம் வியந்தேயின்பம்
ஏற்றமுறும் வாழ்வுதனை எடுக்கக் காண்பீர்

விண்ணிறைந்து தாரகைகள் விழிக்கக் காண்பீர்
வெண்ணிலவு முழுவட்டம் விளங்கக் காண்பீர்
கண்ணெதிரில் பொன்மணிகள் குவிதல் காண்பீர்
கனவிலன்றி பகைபணிந்து போகக் காண்பீர்
பெண்கள் மலர் தூவிஎழில் போற்றக் காண்பீர்
பெரும் உயர்வில் கொடிஒன்று பறக்கக் காண்பீர்
மண்ணிலெழில் நல்வளங்கள் மீளக் காண்பீர்
மாசற்ற வாழ்வு கொள்ள மாந்தர் சேர்வீர் !

வாழ் வும் தமிழும்


கடித்தேன் இனித்தேன் கனிகள் சுவைத்தேன்
கனிந்தேன் உள்ளம் களிப்புற்றேன்
படித்தேன் பலதும் பழத்தேன் தமிழைப்
பருகும் கள்ளுண் வண்டானேன்
குடித்தேன் கவிதை குளித்தேன் தமிழாம்
குலவும் தென்றல் குளிர்மேவத்
துடித்தேன் இதயம் தொலைத்தேன் தமிழின்
தொன்மை படைப்பில் இழந்திட்டேன்

அடித்தேன் அழித்தேன் எனவேஇல்லா
அழகிற் தென்னை அருகில்தேன்
வடித்தே ஒளிரும் வண்ணநிலாவின்
வகையாய் பிறைபோல் வளர்ந்திட்டேன்
வெடித்தேன் முகிழ்ந்தேன் மலர்ந்தேன் என்னும்
விடியல் பூவில் விளையும்தேன்
விடத்தேன் சுவைதான் எடுத்தேன் இயல்போ
எனத்தான் வியந்தேன் இணைந்திட்டேன்

குடித்தேன் குடமாய் கவிதை யின்பம்
கொள்ளா தேனோ சலிப்பற்றேன்
அடித்தேன் இனிப்பாம் கரும்பில் காணும்
அருந்தேன் தமிழும் அதையொத்தேன்
குடித்தேன் பழமை குடைந்தேன் தமிழில்
குவித்தேன் இன்பங் கொண்டேன்காண்
நெடிதென் வாழ்வில் நிகழ்வும் கடிதென்
நேரும் வரையும் நிலைத்திட்டேன்

கடந்தேன் வாழ்வில் தடைகள் பலதும்
களித்தேன் என்றும் சொல்லற்றேன்
நடந்தேன் பாதைநலிந்தேன் விழுந்தேன்
நாளும் துயரைச் சந்தித்தேன்
அழுதேன் தொழுதேன் இறைவா என்றேன்
அரைதேன் நிலவைஅணிந்தோன் கை
எடுத்தோன் மழுவை இழிந்தேன் என்னை
இழந்தேன் உயிரும் எனவாகா

செடித்தேன் மலராய் சிரித்தேன் நெகிழ்ந்தேன்
சிவந்தேன் இதழும் விரித்தேனாய்
கொடுத்தேன் வாழ்வில் கொள்ளையின்பம்
கொள்ளா செய்தாய் கொடுஎன்றேன்
அலைந்தேன் ஆழி அலைகள் எனவே
அவலம்கொண்டேன் ஆனாலும்
நிலைத்தேன் நினைத்தேன் நிகழும்துன்பம்
நிகழா சக்தி காவென்றேன்

குலைந்தே கொள்ளா தேனோ அண்டம்
கோடி எழுந்தீச் சூரியனும்
விழுந்தே அணையாதென்னே விந்தை
விளைத்தார் யாரோ விளைவெண்ணி
எழுந்தேன் சக்தி என்றே நாளும்
எண்ணித்தான் கால் எடுத்திட்டேன்
கலைந்தே துன்பம் கவிதைபாடும்
கலையும் கொண்டே காண்கின்றேன்

Saturday, January 19, 2013

கண்ணீர்

நான் என்பதேனிங்கு வந்துது - இந்த
நாளில் ஏன் பூமியைக் கண்டது
தானே எதை யெண்ணி வாடுது - அது
தண்ணீரில் மீனென ஆகுது
வானெண்ணி நீரிடை துள்ளுது - அலை
வாரிக் கரையினில் போடுது
தானோ அலை விட்டுப்போகுது - மீனும்
தண்ணீரை எண்ணித் தவிக்குது

வானரமாய் உள்ளம் ஆகுதோ - அது
வாலைவிட்டு ஆப் பிழுத்ததோ
கூனென்பதா யுள்ளம் நோகுமோ - அது
கொள்கையில் கொப்புகள் தாவுமோ
தேனெனத் தின்னப் பிடிக்குதோ - இல்லை
தின்னத் திகட்டிக் கசக்குமோ
ஏன் இன்று எட்டாப்பழமிதோ - வாழ்வு
இப்படியும் புளிக்குமோ

வான்நிறைந்த விண்ணின் மீன்களாம் -அவை
வந்து ஜொலித்திடக் காத்திட
கானக மின்மினி யாவதேன் - அதைக்
கண்ட மனம் ஏங்கலாவதேன்
மானின் விழிகொண்டு காணவா - உளம்
மல்லிகையாய் வாடிப் போகவா
தானெனத் தந்தன ஆடவா - இல்லை
தந்ததை மீண்டும் கொண்டோடுமா

மேன்மையில் என்னைப் படுத்துமோ - இல்லை
மேனியைத் தள்ளி கிடத்துமோ
ஊனுடையுள்ள உணர்வுகள் - என்னை
ஊர்வலம் கொண்டு நடத்துமோ
வானவில்லின் நிறம்கொள்ளுமோ - அன்றி
வாசலில் குப்புற வீழ்த்துமோ
ஆனவிதி சொல்வதென்னடா - அந்த
ஆனை மிதிக்குமோர் புல்லடா

வீணென்ப தெல்லை கடக்குது - அது
வீழ்த்திட மண்ணிடை தேயுது
காணெனக் கூறிக் கலங்குது - அதன்
காட்சியெல்லாம் கண் மறைக்குது
பெண்ணெனின் பேயும் இரங்குமோ - விலை
பேசிப் பொய்தன்னையும் விற்குமோ
பூணும் பொன்னாடையும் போகட்டும் - மீண்டும்
புன்னகை யைஇதழ் காணட்டும்

Friday, January 18, 2013

வண்ண மழை

ஒற்றைத் தாளில் கப்பல்செய்து ஓடும்நீரில் விட்டவன்
உற்றதா முள்ளாசை கண்டு ஓங்கியோர் புறத்தினில்
பெற்றவள் விடுத்தகிள்ளு பாவியெந்தன்மேனியில்
உற்றதோர் கடுத்தநோவு எண்ணியோ நீஆண்டவா

சொற்றுணை எனத்தொடங்கி சோதியாம் நல்வானவன்
உற்றதாம் சிறப்பையெண்ணி ஓதியுன்னைப் போற்றிட
கற்றுனைத் துதித்தல்கண்டு காகிதம் மறுப்பினும்
உற்ற அன்பினாலே வண்ணம் ஊற்றும் மேக மாக்கினாய்

முற்றமும் பொழிந்தநீரில் மேகம் வண்ணம் பற்பல
அற்புதம் நிறத்திலூற்றும் ஆனவிந்தை காண்கிறேன்
நெற்பயிர் விளைச்சலோடு நீண்டபுல் முளைத்திடும்
புற்தரை விரிப்பிலெங்கும் பெய்யும் வண்ண மானதே

நெஞ்சிலே கடுங்குரோத நீசரெங்கள் நாட்டினில்
கொஞ்சியே குலாவும் அன்னை கொண்ட மஞ்சள் குங்குமம்
வெஞ்சினத் தினாலே மேனி வெட்டிமண் புதைத்திட
கெஞ்சியும் அழித்தபாவம் மஞ்சள் நீரைக்கொட்டுதோ

அஞ்சியே துடித்தபோது ஆணவத்தி லோடவர்
வஞ்சியர் வளர்ந்த பிள்ளை வாலிபத்து மேனிகள்
நஞ்சிலே இழைத்த குண்டு நீலமாக்கி கொன்றதை
பஞ்சுமேகம் கண்டு நீலம் பெய்மழைக்கு தந்ததோ

கண்கள்தோண்டி கைமுறித்துக் காலுடைத்துக் கொன்றிட
மண்ணிலே சொரிந்த ரத்தம் மேலெழுந்து கொண்டதால்
விண்ணிடை கருத்தமேகம் வையகத்தில் கொட்டவும்
தண்மை கொள்மழை சிவந்த தானவண்ணம் கொண்டதோ

அச்சமின்றி உச்சிமீது வானின் ஊர்தி கொட்டினும்
துச்சமாய் மதித்துவாழ்சு தந்திரத்தை வேண்டியோர்
பச்சைமேனி கள்கிழித்துப் பாவம் செய்த காதகர்
இச்சகத்தில் வாழ்அநீதி எண்ணிப் பச்சை கொட்டுதோ

என்னவெண்ணி வான்மழைக்கு இந்தவண்ணம் வந்ததோ
அன்னைபூமி விட்டுச்சற்று அந்தப்பக்கம் கொட்டுதே
இன்னலைத் தரும்நிலைக்கு இட்டஎச் சரிக்கையோ
மின்னல் வானம் மெச்சியின்பம் மஞ்சள் நீலமானதோ

Wednesday, January 16, 2013

இயற்கையி லுள்ளம்

எழில் கொஞ்சும் இசையொன்று  எழுகின்றதே
இதுகாவின் குயில் பாடுமொலி யல்லவே
பொழிலாடும் அலையென்றே உணர்வாகுதே
புரியாத மழையொன்று பொழிகின்றதோ
தழலான உளவெம்மை தணிகின்றதே
தரைமீது நிலவொன்று தவழ்கின்றதோ
அழகோபொன் னொளியாஅல் லதுதாரகை
அதுமின்னும்  இய்ல்பாக மனம்கொள்வதேன்

நெளிந்தாடும் அலைகொண்ட நீரோட்டமோ
நிகழ்வான வில்லொன்றின் நிறமூட்டமோ
குளித்தாடும் மலர்கொண்ட குளிர்தேக்கமோ
குவிந்தாலும் பனிகொண்ட  நிறவெண்மையோ
அளித்தாலும் குறையாத அமுதானதோ
அருஞ்செல்வம் குவிகின்ற திறைசேரியோ.
தெளிந்தோடு முகிலற்ற பகல் வானமோ
தினம் தேய்ந்து வளர்திங்கள் முழுதானதோ

ஒளிவானின் வழிதோன்று மொருகாலையில்
உருகாத பனிதன்னும் நிறை காற்றினில்
அழியாத மெருகோடு அருகாமையில்
அழகான மயிலென்று விரிதோகையில்
பொழிகின்ற முகில்கண்டு நடம் கொள்ளுதோ
பொதுவாக  வலம்போகும் தெருவீதியில்
நெளிகின்ற நளினத்தின் அசைகாற்றுமே
நிகழ்வுக்கு இவள் கொண்ட அசைகற்குமே

வலை கொண்ட மீனென்றால் விழிதுஞ்சுமே
வளர்கின்ற பிறை யென்னில் வெகுதூரமே
அலைந்தோடும் நதியென்றால் விழும்பாவமே
அனல் வீசும் ஒளிர்வென்னில் சுடும்நோகுமே
மலைமீது எழும்காற்றின் குளிரானதே
மனம் போதை யுறச்செய்யு தெனில்போர்வையும்
நிலைகொள்ளச் செயும்பாவம் இவனல்லவோ
நெடும்வானில் முகில்மூடும் நிலவல்லவோ

காக்கையரே காக்கையரே


காலையிலே கண்விழிக்கக் காரிருளும் போகமுன்னே
கா..காவெனக் கரையும் கருங் காகமே
சோலையிலே பூமலர்ந்து தூவும்பனி  நீர்வழிந்து
சொல்லு நலம் உள்ளனவோ சேதியென்?
மேலைத்தெரு கோவிலடி மேட்டு வயல்காடுழுது
மாலையி`லே வீடுவந்த மாந்தரும்
ஓலையிலே கூரையென உள்ளசிறு குடிசையிலே
உள்ளனரோ இல்லனரோ கண்டுசொல்

கூவும் வெளிர் சங்கொலியில் கொட்டும்மொரு முரசொலிக்கக்
கொல்ல வந்தபகை நடந்த தறிவையோ
ஏவுகின்ற தொன்றெனவே எத்தர்பகை கூடிவந்து
எல்லை பற்றி நின்றனராம் உண்மையோ
சாவுவரும் மேனிவிழும் சத்திரங்கள் வீடுடையும்
சந்தணப் பொன்மேனி புவி தின்றிடும்
காவுகொண்ட வாழ்விழந்து கண்டவரை போதுமென்றோம்
காணுகின்ற சேதி நெஞ்சு வேகுதே

மாதர்தமைச் சீரழித்து மானபங்கம் செய்தழித்து
மங்கையரின் மேனிதொட்டு ஆடுறார்
மீதமுள்ள பூமியெலாம் மேன்மைகுலச் செந்தமிழர்
மேவியெங்கும் வாழ்ந்தும்ஒன்றும் காணனே
சாதமென்று வேகவைக்க சற்றுநேரம் போகவதில்
சோறு வெந்து அத்தனையும் ஒன்றெனும்
பேதம்கொண்டு பூவுலகில் பெண்ணிழிமை செய்தவரின்
பார்த்த வரை உள்ளம் வேக வில்லையேன்

வாழும் வழி நாமறியோம் வந்துலகில் தோற்றியதென்
வாயழுது  உணர்விழிந்து வாழ்வதா
பாழுமிந்தப் பூமிதனில் பைந்தமிழின் தொன்மையுமென்
பார்த்துயிரைக் காக்க மறந்துள்ளதேன்
ஆள ஒருநாடு விடு அழகியஊர் தேவையில்லை
ஆக மனைகுடிசைதனும் போகட்டும்
சூழுலகில் வாழ்தமிழும் சோதரிகள் இழிமைகொள்ளச்
சோர்ந்துலகில் காணுவதேன் கேட்டுவா

நிலை மாறும்

காடுமலை யெங்கும் ஓடும்நதிக்கொரு
காரணம் தேவையில்லை - அது
தேடும்பொருளெது தேவை கடல் ஏனோ
துள்ளி அலையும்நிலை
நீடுவெளி நீலவானத்திலே நிலா
தேயும் வளரும் தொல்லை - அதை
ஓடுமுகில் மறைத் தாலுமுள்ளே நின்றும்
ஓங்கு மொளிசெறிவை

கேடு கெட்டே அல்லல் கொண்டா லன்புதனும்
கெட்டுஅழிவதில்லை அதைக்
கோடு கிழித்தெவர் கூட்டில் அடைப்பினும்
கொள்ளன்பு தேய்வதில்லை
வீடுஇருக்கையில் வெட்ட வெளிவைத்த
வெள்ளியிற் செய்தசிலை என்ன
பாடுபட்டும் உள்ளம் பாசம் கொழிக்கையில்
 பாரம் எடுப்பதில்லை

நாடுசெழித்திட நாலும்தெரிந்தவர்
நல்லர சோச்சுகையில் - அங்கு
வாடுமுயிர்களாய்  வாழ்வுமுண்டோ அவர்
வாசம் உலர்வதில்லை
மூடுமந் திரங்கள் தேவையில்லை  இந்த
மோட்சம் இறைவன்கொடை -அதைப்
போடுஎன வீசிப் புன்னகைத்தால் அதைப்
போல மடைமையில்லை

ஆடும்வரை யாடும் அப்பன் நடமிட
ஆகிடும் வாழ்வழிவைப் - படும்
பாடு கொண்டும் விழி பார்க்கும்வேளை
சார்த்த பாரதிபோலுருவை
ஊடு நிறுத்தியே ஆடவைத்தவிதி
உண்மை மறைத்த நிலை ஒரு
பீடு கொள்ள முகில் போர்த்தநிலவெனப் 
போனது போல்நிலைமை

ஏடுஎடுத்தவன் என்னஎழுதியும்
இட்ட விதியின் வேலை - அது
சாடுஎனச் சொல்லி சோகம் பொழியினும்,
சேரும்மனதில் சுவை
சூடுகொண்டேகாலைதோன்று வெயில்வரச்
சூழுமிருள் மனதை - விட்டு
ஓடும்வகை செய்யும் உள்ளம் கொண்டதெல்லாம்
ஒரிரவென்ற நிலை

Saturday, January 12, 2013

வேண்டுதல்

தாம்தோம் தத்தோம் தத்தித்தோம்
தாவிடு வானரம் ஒத்திட்டேன்
தீம்தோம் தித்தோம் திக்கெட்டும்
தீமைகளால் மனம் பொய்த்திட்டேன்
பாம்பைப் போலும் கொத்திட்டேன்
பாலதில் நஞ்சும் சொட்டிட்டேன்
வேம்பின் காயை வெட்டித்தான்
விருந்தில் தேனுள் வைத்திட்டேன்

மாயக் கற்பனை கொண்டிட்டேன்
மாலைகள் பிய்த்தும் வீசிட்டேன்
தேயும் நிலவாய் தேய்ந்திட்டேன்
தீயில் விரலைச் சுட்டிட்டேன்
ஆய கலைகள் கற்றிட்டேன்
ஆனால் ஏட்டைத் தீயிட்டேன்
போயோர்  முத்தை சேற்றிட்டேன்
புறமும்பேசிப் பொய்யிட்டேன்

வேண்டும் வரையில் வெட்கித்தேன்
விடியல் அறியா தூங்கிட்டேன்
ஆண்டே இன்பம் தேர்ந்தக்கால்
அழிவே எண்ணிக் காத்திட்டேன்
அன்பில் உன்னை தண்டித்தேன்
அதனா லுள்ளம் சோர்ந்திட்டேன்
வெண்தண் இறையே நொந்திட்டேன்
விளையாடித்தான் வாழ்ந்திட்டேன்

காலைமலரைப் பிய்த்திட்டேன்
கானம் பாடக் கத்திட்டேன்
பாலில் உப்பைக் கொட்டிடேன்
பாமரன் வாக்கைப் பழியிட்டேன்
வேலை இன்றி சுற்றிட்டேன்
வீட்டில் மனைய வைதிட்டேன்
தோலில் கரியைப் பூசிட்டேன்
தெள்ளென் நீரில் தோய்ந்திட்டேன்

இறைவா என்னை மன்னிப்பீர்
இகமும் வாழ்வில் இன்பத்தை
குறையா தருவாய் கொண்டேன்நான்
கோபம் சினமென் றாகாமல்
மறையா துலகின் மன்னிப்பை
மலராம் உதயச் சூரியனாய்
உறையா துள்ளம் உருகித்தா
ஒர்நாள் பொழுதில் மலராதோ

பாவம் நீக்கப் பூசித்தேன்
பரமே சிவனே போற்றிட்டேன்
ஏவல் செய்தேன் இவன்மீது
இறையே சக்தி இரங்காயோ
தூவல்மழையில் நின்றிட்டேன்
தேகம் குளிர ஆடிட்டேன்
ஆவது ஏது அன்புள்ளம்
அணையா தீபம் காப்பாயோ

தமிழன் வீரம்

  
கடலலையும் ஓங்கியெழும்   காண் தமிழின் வீரம்
குடல்பிசைய வயிறலறும்  கொடும் பகையும் ஓடும்
திடமுடனே தமிழர் எழும்  தீரம்பெரு வானம்
தடையுடைத்துப் பாயப்பகை  தீபடும் பஞ்சாகும்
விடநினைந்து பயமெழுந்து  விரைந்து பகையோடும்
விரும்பிவிடு தலைநடந்தோர் வெற்றிவாகை சூடும்
புடமுமிட்ட தமிழர்மறம்  புனிதமெனக் காணும்
புரட்டும் பழிபொய் புனைந்த பகை யெதிர்த்த தமிழர்

கால்கள் நடை கொள்ளஒலி  கருமுகிலின் உறுமல்
காரிருளில் மின்னல் தரும்  கைசுழல்வாள் கூர்கள்
வீல் எனவேஅழும்குழந்தை  வீறு கொண்டு நிமிரும்
வெள்ளிநிலா முற்றமதில்  வீழ்ந்து நிலம் கொஞ்சும்
பால்குடித்த தமிழ்மழலை  பயமிழந்து தீரம்
பருகியவன் போலெழுந்து  பார்த்தெதையோ உறுமும்
மேல் பறந்த புள்ளினங்கள்  மேதினியில் வீரம்
மேன்மை கொள்ளும் செந்தமிழர்  மண்ணி தென்று பாடும்

வீதியெல்லாம் தோரணங்கள்  வெற்றிதனைக் கூறும்
விடியலிலே வந்தவர்கள்  வேகம்தனைக் காற்றும்
பாதிதனும் தானறியாப்  பண்புதனைப் பாடும்
பனியெழுந்து புகழ்பரந்த  விதம் பரந்து தோற்கும்
மோதிவரும் மேகமெல்லாம்  முகம் கறுத்து  கோணி
மின்னல் இடி விட்டுத் தமிழ்  மண்ணில் மழை தூவும்
சேதி கேட்டுப் பூமரத்தில்  சிறுகுரங்கு தாவி
சிலுசிலுத்த மலருதிர்த்து  செந்தமிழைப் போற்றும்

ஆக இவைகொண்டதெல்லாம்  அறம்மிகுந்த காலம்
அன்னைபூமி நேர்மை திறன்  அகமெடுத்த நேரம்
போக யிவை நஞ்செழுந்து  போட்டவைகள் யாவும்
பச்சைமஞ்சள் செந்நிறத்தில்  பெய்மழைகள் ஆகும்
தேகமதில் தீரமுள்ளோர்   தலையெடுத்த வீரம்
தேவையில்லைக் கோழைகளும்  தீமைசெய்து வெல்லும்
பாகமிது காலமெனப்  பச்சை வண்ணப் பூமி
பார்த்திருக்க செந்நிறத்தில் பாவமழை தூவும்

சக்தியின் வேண்டுதல்


 வேண்டும் வேண்டும் வரம்வேண்டும் - உயிர்
வீணையில் நாதம் எழவேண்டும்
ஆண்டும் ஆண்டும் பலவேண்டும் தமிழ்
ஆண்டே பலமுறும் நிலைவேண்டும்

மீண்டும் மீண்டும் பெருவாழ்வாய் - இம்
மேதினி வாழ்வில் பலங்கொண்டே
தாண்டும் தாண்டும் உரம் வேண்டும் என்
தலைவி நீயதைத் தரவேண்டும்

நீண்டும் நீண்டும் மகிழ்வோடு - நான்
நெஞ்சம் கனிவாய் தமிழ்பாடி
தூண்டும் தூண்டும் உணர்வோடு - கவி
தூவும் மலர்கள் தொகை வேண்டும்

பூண்டும் பூண்டும் பலவேடம் - இப்
பொழுதில் புவியில் கூத்தாடி
தோண்டும் தோண்டும் இன்பங்கள் - பெருந்
தொகையாம் எனவே பெறவேண்டும்

தீண்டும் தீண்டும் பொருள் யாவும் - அடை
தேனாய் வழியச் சுவைகொண்டு
நாண்டும் நாண்டும் தொகை வேண்டும் - என
நாளும் கேட்டும் குரல்வேண்டும்

மாண்டும் மாண்டும் புவிமீதில் - உயிர்
மீண்டும் பிறக்கும் செயலாகக்
கூண்டும் கூண்டிற் கிளியாகும் - இக்
கோலம் மாறும் வரம்வேண்டும்

மூண்டும் மூண்டும் பெருந்தீயாய் - பகை
மோசம் செய்தும் ஒருதீவில்
யாண்டும் யாண்டும் செய் தீமை - தனை
யாவும் நீக்கும் வரம்வேண்டும்

சீண்டும் சீண்டும் சினம் மேவி- என்
சிந்தை கெட்டுச் சிதறாமல்
வேண்டும் வேண்டும் நின்பாதம் - தலை
வைத்தே தூங்கும் மகிழ்வோடும்

டாண்டும் டாண்டும் எனவோடிப் - பெரும்
அண்டம் பாய்ந்து சுழல்கோள் கொள்
நீண்டும் பெருத்த உயர்வானின் - பொருள்
நீயே என்னுள் வரவேண்டும்

**********************

ஆற்றாமை (தலைவி)



உள்ளம் கலங்குதடி தோழி - மன
ஓசை அழிந்த திந்த நாழி
கள்ளம் ஏதறியேன் மோதல் - தனைக்
காலம் வளர்த்தடி கேள்நீ
வெள்ளம் வரும்பொழுதுமேனோ - அதன்
வேகம் புரியவில்லைத் தோழி
அள்ளும் போதுமதை யறியேன் -விதி
ஆழிகலந்திடவே தெளிந்தேன்


துள்ளும் இளமையடி குற்றம் - என்னை
தேடு துணை எனவே பற்றும்
எள்ளிநகைப்பதென்ன இன்று - அதன்
எண்ணம் அறிவளில்லை என்றும்
கிள்ளிச் சிவக்கும் இருகன்னம் - அதில்
கொட்டும் துளிகள் இதழ்கொள்ளும்
மெல்லச் சுவைக்குதடி உவர்ப்பு - இனி
மேலோ எனதுநிலை தவிப்பு

தள்ளும் நினைவுகளும் சென்றே - எனைத்
தனிமை நிலையில் விடவேண்டும்
வெள்ளி முளைக்கு வரைவிடடி - கதிர்
வேகமெடுத்து வரும் உதயம்
புள்ளின்இனங்க ளெழுமோசை - இளம்
பூக்கள் மலரும் அதிலோடி
கள்ளைச் சுவைக்கும் கருவண்டு - இவை
காணச் சகிக்கவில்லை தோழி

எள்ளி நகைப் பதுண்டோ தோழி - என
தெண்ணம் விளைத்த செயல் மீறி
கொள்ளியெனச் சுடுதே தோழி - இந்தக்
குற்றம் எதுவிலகுக்கும் சொல்நீ
பள்ளிச் சிறுமியென ஆனேன் - வெறும்
பாதி மெலிந்து உடல்நொந்தேன்
அள்ளிகொடுப்பரென வந்தால் - அவர்
அன்பைத் தெரியவில்லைத் தோழி

கள்ளிச் செடியிருக்கு தோழி - அதை
காலம் அளித்த கொடை போநீ
நள்ளி ராவில் வரும் தென்றல் - ஒரு
நஞ்சாய் மனதிழைந்து ஓடி
உள்ளம் அழித்ததடி தோழி - இந்த
உலகில் இருப்பின் இவள்பாவி
வள்ளம் திசை திரும்பி ஓடின் - அதன்
வாழ்வும் நிலைப்பதுண்டோ பார்நீ

*********

எங்கே சுதந்திரம்?


காலை புலர்ந்திடக் காட்சி  விரியுது
காணும் புவியொளி ஞானப்பெண்ணே
ஞால முழுதிலும் நன்மை பரந்தின்ப
நாளும் விடியுமோ சொல்லுபெண்ணே
கோலஞ் சிவந்திடக் கீழ்த்திசை வானிடை
கூடிப் பறந்திடும் புள்ளி னங்கள்
கால காலமெனக் கொள்ளும் சுதந்திரம்
கையில் கிடைக்குமோ சின்னப்பெண்ணே

ஆலமர நிழல் ஆடிவருந் தென்றல்
அல்லிசெந் தாமரை நீர்க்குளத்தின்
சீலமொடு மேவு சிற்றலை நீர், கயல்
சேரடிவானத்து வெண்முகில்கள்
நீலவானவெளி நீந்திடும் போததில்
நித்திய இன்ப சுதந்திரத்தை
சாலச் சிறந்துடன் கொள்வது போற்றமிழ்
சற்றும் கொள்ளாதேனோ ஞானப்பெண்ணே

கோலமும் தீயவர் கொள்கை பரந்தது
கூறடி ஏனிது செல்லபெண்ணே
தூலமென்றே துயர் தூரப் பறந்திடத்
தோன்றும் விடிவெங்கே கூறுபெண்ணே
ஆலமென் றாகிய வாழ்வு சிறக்குமோ
அச்சமின்றி உயிர் சின்னபெண்ணே
மூலவிதி கெட்டு வாழும்நிலையற்று
முன்னே சுதந்திரம் கொள்வதெப்போ

வாசலில் வஞ்சகம்வந்து இருப்பதோ
வாழ்வின் கனவுகள் நீரெழுத்தோ
மோசமென்றே நிலை முற்றும் எழுந்தது
மூடு கதவினைச் செல்லபெண்ணே
தேசம் இருளுறத் தெய்வம் மறந்தது                                                                           
தேவையென் னாவது  கூறுபெண்ணே
வாச மெழுமன அன்பினை காவவும்
வீசுந்தென்றல் வரவேண்டும் பெண்ணே

காகங் கரையுது சேதி வருகுது
காணத் திடமெடு சின்னப் பெண்ணே
மேகம் குவிந்திட மின்னலிடியெழும்
மேனி நடுங்கிட ஆக்கும்பெண்ணே
பூகம்பமா யுந்தன் வாழ்வு பொழிந்திடும்
தீமழை காணவும் நெஞ்சு நொந்தே
தேசம் நினைந்துள்ளம் தீயின் விரலிட்ட
தாகப் படும்பாடு சொல்லுபெண்ணே

பூவிதழ் காணவும் பொன்னெனும் காலையில்
‘புத்துணர் வாகிடும் நாள்மலர்ந்தே
நாவில் சுதந்திர கீதமிசைத்திட
நாட்டில் குழுமிய மாந்த ரூடே
கோவில் தெய்வமெழக் கொண்டகுடிமனை
கூடித் திரண்டவர் அச்சம்விட்டே
தாவிக் குழந்தைகள் சத்தமிட அன்புத்
தாய்நில பூமடி கொள்வதெப்போ?

***********

புகழ்

உளமலர் விரிந்தொளி பெறுகுது பெறுகுது
உவமையும் எதுவில்லையே
தளம்பிடுங் குளஅலை தவித்திடு மழகுடன்
திகழ்வது மனவுணர்வே
மளமள வெனவரு மழையெனும் புகழ்மொழி
மகிழ்வினைத் தரசுகமே
விழவிழ மலர்களில்  வழிநெடு நடையிடும்
விதமெனச் சிலிர்த்திடுமே

குளஅலை களில்முகம் தெரிந்திடும் வகைமனம்
குதித்திடும் புகழ்ச்சியிலே
நிழலது முகில்வர நிலமிடை அழிந்திடும்
நிலை யெனப் புகழ் கெடுமே
இளமன திடை வரும் நினவுகள் பலஎழும்
இவையெது கனவுகளோ
அழவென வருவது தொகைதொகை மகிழ்வென
அடைவது சிறிதல்லவோ

புகழ் தரும்  உணர்வுகள்  பெரிதுவ கையுமெழ
புரிவது புதுச் சுகமே  
நிகழ்வது சரியெனில் நெறியெழும் புகழ்பெரு
நெருப்பென எழும் மகிழ்வே
பகலவன் ஒளியென பரவிடும் இருள்மறை
பனிவிடும் புல்லெனவே
அகமிடை -இருளற அதியுயர் தகவுற
அடைவது பெருமகிழ்வே

மழைதரு முகிலென மனமதில் கனமெழ
மதுவென இனித்திடிலும்
உளதினி மையில்பொலி வுறமதி யுதவிட
உருவெடு திறன் பெரிதே
துளையிடு குழலிடை  நுழைவளி இசைஇடும்
நிகரெனும்  இன்னிசையோ
வளர்ம்தி முகமதில் வரும்மகிழ் வுறப்புகழ்
தனையெடு மருந்தெனவே

****************

Monday, January 7, 2013

மரணம் கொடியதா?

காணப் பிறந்திட்டோம்
.  கானகத்தை கடல்நீரைக்
.  கடுமழையும் கண்டுணர்ந்தோம்
பேணச் சிறந்தவராய்
.  பிள்ளையென நாள்வளர்ந்து
.  பேதமை கொண்டுலகிணைந்தோம்
பூணப் பொன்னணிகலனும்
. புத்தாடை ரத்தினங்கள்
. புதுவாசம் தரும் மலர்கள்
வீணென் றுடுத்தியதில்
. விளைவென்ன கண்டோமோர்
. விதிவந்து கொள்ளப் போமாம்

வாழப் பிறந்தழுதோம்
.  வாழ்ந்தழுதோம் வாழ்விழந்து
.  வீழமுன் கூடியழுதோம்
ஆழக் கொடும்வாழ்வில்
. ஆசைகொண்டு மன்பிற்காய்
. ஆறாது ஏங்கியழுதோம்
கூழைக் குடித்தழுதோம்
. கோலப் பொற்கிண்ணத்தில்
.  கொண்டமது வுண்டு அழுதோம்
நாளில் நேற்றழுதோம்
. இன்றழுதோம் நாளையினி
. நாம் படுக்க யார் அழுவார்காண்

எய்த உடல் எமதல்ல
.  இருக்குமுயிர் காற்றாகும்
.  எல்லாமே இரவல்வாங்கி
பொய்யில் உடல்போர்த்து
.  பூவும் துகில்கொண்டு
.  புனல்சொரியும் துளைமறைத்து
தெய்யத்தோ மென்றாடி
.  திக்கெட்டும் தொலையோடித்
.  திரிந்திடத் தெய்வமிடையில்
பொய்யைக் கொள் மெய்யைத்தா
. பூவுலகே என்றிடவும்
. மெய்வீழப் பொய்விட்டோடும்

செயல்போகச் சிந்தைகெடச்
.  சுடுமுடலும் எமதல்ல
.  சொந்தமே யல்ல அல்ல
வியப்பேநா மென்றாலென்
.  விழிகண்டு மொழிபேசி
.  விளைந்த உணர்வொன்றே நாமும்
பயத்தோடு இச்சை,சுகம்
.  பசி நாணம். பெருங்கோபம்
.  பட்டதுயர் இவையே மிச்சம்
மயக்கமிடுங் கனவுணர்வும்
.  மழைவானின் வில்லாகி
.  மறைய நிஜம் சூனியமன்றோ!

Friday, January 4, 2013

புத்தாண்டே புரிவாயா?


கடுமன மிடையெழு கருணையி னொளி
  குறைவுறக் கயமையில் கரமெடு பழி
விடுநின துயிரெனத் தரைவிழப் பொறி
  விளைவுறச் செயுமனம் விரைந்துநீ ஒழி
படுநிலமிடை எனப் பறித்துயிர் வெளி
   பறமுகி லொடுஎனப் புரிபவர் இனி
தடுநில மிடைமலர் தரணியில் ஒளி
   தகைமிகு வழமுற வருடமே அளி

விடமுள அரவமென் றுருபெறச் சிலர்
  விடுதலை எனிலெது விரைதுடி யுடல்
படவலி யுறச்சிதை பிரியதை யழி
  கடதுன துலகமும் கரம்விடு தனி
நடயினி விடுதலை நரகமே வழி
  நவஉல கமுமெம துமைநமன் வழி
இடமது பெறவிடின் இலகெனும் வழி
 எனுங் கயவரைஒழி அவரொழி ஒழி

”தரு”வதும் நிலைகொள்ள இடமுள்ள புவி
  தமிழெனில் இலையிடம் தவறிடு அழி
எருவெனப் புதையிடு வெனக்கொளும் வெறி
  இதமென உலவிடும் இவர்மன மழி
கருவொடு தறிதமிழ் கருகிடு மினி
  கடமையு முனதென சொலுமொரு விதி
மருகிட புதுவழி புதிதெனும் ஒளி
  மறுபடி உயிர்கொள்ள` வருடமே அளி

இருபதி னருகினி லிதனரை வர
  இழைந்திடு சிவனவர் விழிதொகை சக
தருவிடை வருடமும் தணல்பிரி வெடி 
  தெருவினில் பெரிதெனும் படபட ஒலி
இருளுற இரவெனில் பன்னிரண்டு மணி
   இதனிடை வரும்புது வருடமு மினி
தருமமும் தழைவுறத் தமிழ் பெரும் ஒளி
  தருமெழில் விழுமியம் பெறவழி புரி

**************