Wednesday, October 31, 2012

உயிர் தமிழுக்கு...



கவிக்கு உயிர் ஈவேன் கண்டதுண்டமாய் ஆக்கி
புவிக்குள் எனைப் புதைத்துப் பூமலர வைத்தாலும்
தவித்தே அலைதென்றல் தனில் ஓசைமீட்டியொரு
கவியாய் உயிர்கொண்டு  காற்றில் இழைந் தோடிடுவேன்

மடித்தே எனதுடலை  மாகடலில் எறிந்திடினும்
அடித்தே எழும் அலையில் ஆவென்று பாட்டிசைப்பேன்
துடித்தே உடல்நடுங்கத் தீயிடையே எறிந்திடினும்
படித்துப் பெருங்கவிதை பாட்டெழுதித் தீய்ந்திடுவேன்

வெடித்துச் சிதறவொரு வானிருந்து போடும்பொதி
அடுத்தென் அருகிலிடி ஆகாயம் வீழ்ந்ததென
பொடித்தே உடல் சிதறப் பூகம்பமாய் வெடித்தும்
நொடிக்குள் கவிபாடி நிம்மதியாய் செத்திடுவேன்

செழித்த சோலையிலே சிங்காரக் குருவிகளும்
களித்து குலவ அதைக் கண்டு கவிபாடிடுவேன்
குளித்தே எழும்குளத்தில் குமுதமுடன் அல்லிமலர்
விளித்துகிடப்பதனை விரும்பக் கவிசெய்வேன்

நெளிந்தே சிறுநாணல் நிலத்தை வணங்கிடினும்
தெளிந்த உரமெடுத்துத்  தேக்குமரம் நின்றிடினும்
புளித்த மா தருவும் பின்னாலே   ஆலமரம்
அளிக்கும் எழில்கண்டு ஆடியேநான் பாடிடுவேன்

தோகை மயில் விரிக்க துவானம் நீர்தெளிக்க
நாகம் படமெடுக்க  நாரைகொளத் தவமிருக்க
பூகை யேந்தியொரு பெண்ணொருத்தி மலர்சூட
ஆகா அ\ழகென்றே ஆனந்தப்பாட்டிசைப்பேன்

வடித்துக் கொடுப்பதவள் வாரித் தெளிப்பதிவன்
குடித்துக் களிப்ப மனம் கூடிக்கிடப்ப துளம்
துடித்துக் கிளம்பி உயிர் தேகம் அடங்கும்வரை
நடித்துக் கவிகூற நாட்டியங்கள் ஆடிடுவேன்

தேனைக் கவிவடிக்கத் தென்றலதி லேறியுயர்
வானை க்கடந்தோடி வானவரின் நிலமேகி
சேனை படைஎதிர்த்து சிரம் கொள்ளவந்திடினும்
ஞானபழம் தருவாள் நாடிவரம் வென்றிடுவேன்

ஓடைமலர் பூக்கும் ஒளிவெள்ளம் பூமிகொளும்
ஆடை விரித்த அலை அசைவதிலே அழகூறும்
கூடை மலர் கவிதை கொண்டுலகின் சக்தியவள்
ஏடு எழுதவைத்தாள் இறையவளைப் போற்றிடுவேன்

Sunday, October 28, 2012

இயற்கை, வாழ்க்கை, கயமை, கவலை



(இயற்கை)
                       கிராமம்

பூக்காடும் புள்ளினங்கள் போம்வானமும்
பொழுதோடிக் கதிர் வீழும் பொன்மாலையும்
தேக்கோடு பெருஞ்சோலை சில்வண்டினம்
சிறுமந்தி விளையாடும் மூங்கில்வனம்
தீக்காடோ என்றஞ்சச் செம் பூக்களும்
சிதறும்பின் சேர்ந்தோடும் மந்தைகளும்
நீக்காத திரைமூடும் முகிலோவியம்
நின்றாலும் நடைபோடும் இளஞ்சூரியன்

பூக்காது முகை தூங்கும் அயல்தாமரை
புனலாடக் குதிபோடும் நிரையாயலை
தேக்காது தேன்ஈயும் மலர்கொள்வனம்
திகழன்பு மாதர்கள் தெரு ஊர்வலம்
போக்காக நடைபோடப் பொழுதோடிடும்
பூங்காற்று வயலோரம் பாடுங்குயில்
நாக்கோடு சுவைகூட்டக் நறுந்தேனடை
நாள்தோறும் கண்முன்னே பேரின்பமே


(வாழ்க்கை)
                     நகரம்

மூக்காலே புகைதள்ளும் பெரும்வண்டிகள்
முன்னாலே நெடுஞ்சாலை மிதிவண்டியும்
சாக்காலே நிறைமூட்டை இழுமாடுகள்
சரிந்தும்கீ ழுருளாத பெருவண்டியும்
போக்காலே குறுக்கோடும் ஒருஜன்மமும்
போறேன்னு சொன்னாச்சா எனும் கூச்சலும்
நோய்க்காக விரைவண்டி கூப்பாடிட
நிறைகின்ற வாழ்வோடு மரத்தினடி

தீக்காயும் வெயிலுக்கு திருமண்டபம்
தின்றாறித் துயில்கொள்ள திருமஞ்சனம்
நோக்காயம் படுமேனி கொண்டோமிந்த
நிலமைக்கு விதியென்ற உழைப்பாளிகள்
ஆ..காணும் இடமெங்கும் நிறைந்தாரென்ன
அநியாயம் ஏமாற்றம் அதிகாரமும்
நாக்காலே பொய்சொல்லும் நடிப்போரினால்
ஞாலத்தில் உருவான நடையானதே!

(கயமை)
                     வறுமை,செல்வம்

ஆக்காத சோறெண்ணி அடுப்போடுநல்
ஆனந்த சயனத்தில் ஒருபூனையும்
வேக்காடு இல்லாத வெறும்பானையும்
விரதத்தை தினங்காணும் சிறுபிள்ளைகள்
நீக்காத வறுமைக்கு நீருண்டுவாழ்
நலிந்தாலும் எலும்பொடு நடைகொண்டவர்
போக்காத ஏழ்மைக்கு பதில்சொல்பவர்
போகத்தின் மாயைக்குள் சிக்குண்டிட

தூக்காக பணமூட்டை தொலைதேசமும்
தெரியாமல் மறைக்கின்ற செல்வந்தர்கள்
வாக்காக பலநூறு மொழிகூறிப்பின்
வந்தேறும் அரசாட்சி வாழ்வென்றபின்
நோக்காக தன்பாடு நிறை கண்டிடும்
நீதிக்கு கண்கட்டு நெறியாளர்கள்
காக்காது கைவிட்ட மாந்தர்களே
கடிதென்ற வாழ்வுக்கு கதியாவரே

(கவலை)
                   இளைய சமுதாயம்

நன்நூல்கள் தமிழ்கூறி நயம்பேசிடும்
நன்மாடம்  பூஞ்சோலை நிகழ்மண்டபம்
புன்னகைச் சிறுவர்கள் பெண்கூடியே
பந்தாடும் மகிழ்வெங்கே; பரிதாபமாய்
எந்நேரம் கணனிக்கு இரையானதோர்
இடும் சத்தம் சுடுமோசை எதிராட்களும்
வன்மைக்கு துணையாகும் விளையாட்டுகள்
வளர்பிஞ்சு மனங்கொல்லும் கொடுநஞ்சுகள்

எண்கற்றல் எழுத்தோடு இறைபக்தியும்
இல்லாது புயல்போன்று எதுஎண்ணினும்
கண்ணுக்குமுன்காணும் கடுவேகமும்
கைகெட்டா தாயின்கொள் கடுங்கோபமும்
பெண்ணுக்கு ஆண் நேரென் நிகர்வாழ்வென்று
பிழைசெய்யும், சிலபோக்கும் மென்மைகெட
தண்மைக்கு சூடேங்கும் மனமானது
தருமோ நல்லெதிர்கால வாழ்வென்பது

***********

Saturday, October 27, 2012

ஒருநாள் ராஜா 2


தேவஎழிற் பூவையர்கள் தீந்தமிழ் பாட
தென்திசையின் காற்றுவந்து தேகம்தொட்டிட
கூவியொரு சங்கொலித்து கொள்புகழ்போற்ற
கொற்றவனென் பக்கமொரு கோதையும்காண
தேவிமலர் சூடியயல் தென்ற லென்றாக
தேன்நிறைந்த கிண்ணமதை தேவதை சேர்க்க
யாவு மினி தென்றொருவர் ஆளுமை போற்ற
யௌவனத்து பெண்சுழன்று நாட்டியமாட

மேவியெழு வான்சுடர்போல் வீர மார்பதை
மென்னிதழ்கொள் கன்னியர்பூங் கைகள் தொட்டிட
மாவிருந்து வீழ்ந்தகனி மாதர் கன்னமும்
மையிதழ்கள் பேசியெனை மகிழ்வினில் ஆழ்த்த
நாவினித்த கனிபிளந்து நங்கையர் ஊட்ட
நடையமைந்த ராஜகளை நற்புகழ் சேர்க்க
தேவர்களும் பூஎறிந்து என்பெய்ர்கூற
தோன்றுசுகம் இன்பமன்றோ இன்பமேயன்றோ

பால்நிலவில் மாடமதில் பைங்கிளியாட
பனியெழுந்து குளிர்நடுக்கி போர்வையைத் தேட
வேல்விழியாள் மான் பயந்து வெகுண்டது போலும்
விளங்க பெருந்தீ எழுப்பி வெம்மையில் காய
நால்திசையும் போர்முரசு சங்கொலி கேட்க
நாடு கொள்ள வந்தவனும் நடுவினில் தோன்ற
கால் நடக்க கைஉருவி வாளினைத்தேட
காலைவெயில் சுட்டது நான் கண்களை விழித்தேன்

மென்மையில் வலிமை

( தலைவியின் பிரிவுத்துயர்)

பொன்னெழில் கொண்டது வானம் - அங்கு
போவன பஞ்செனும் மேகம்
என்னழ கென்பது யாவும் - அங்கு
ஏகும் முகிலெனக் காணும்
தன்னிலை விட்டவை ஓடும் - எனைத்
தன்னந்தனி யென்ற  தாயும்
மன்னவன் நீசெய்யும் மாயம் - இதில்
மாறுவ தில்லைச் செய்காயம்

தென்கடல் சுற்றியே வீசும் - அந்த
தென்றலும் என் பகையாகும்
புன்மை செய்தே மனம்நோகும் - வரை
பூந்தளிர் தேகம் தொட்டோடும்
சந்திரனும் முந்த நாளும் - மன
சஞ்சலத்தில் வந்து கண்டும்
இந்தளவோ என்று காயும் - எந்தன்
ஏக்கம் கண்டே உடல்தேயும்

மந்திகள் மாவினி லேறும் - இவள்
மங்கையைக் கண்டு கூத்தாடும்
வந்தானோ என்றுபல் காட்டும் - மனம்
வானரம் தானென்று வையும்
அந்தியில் சிற்றலை யாடும் - குளம்
யாவும் மலர்ந்த செம்பூவும்
விந்தை குளிர்ந்தும் செவ்வானம் - வெயில்
விட்டும் எனையெண்ணி வாடும்

பந்தியில் உண்டிடும் வேளை - பயன்
பட்ட இலை கருவேம்பை
நிந்தை செய்தே தள்ளி வீசும் - தன்மை
நேர்ந்தே யெனை எறிந்தாலும்
வந்திடுவர் என வாசம் =  தரும்
வண்ண மலர் தெம்பு கூறும்
அந்தோ மதுகொண்ட வண்டோ - பொய்
யாமெனப் பூவை விட்டோடும்

வெண்பனி போல்நெஞ்சு காணும் - விழி
வந்து சொரிந்திடும் நீரும்
எண்ண எண்ணக் கொள்ளும் துன்பம் - அந்த
ஏகாந்தமே யெனைக் கொல்லும்
கண்ணிரண்டும் இருளாகும் - அதில்
காவிய நாயகர்போலும்
அண்ணளவில் நீயும் நானும் - கண்ட
அந்தநாளின் நிழல் தோன்றும்

செங்களமோ எனவானும் - ரத்தம்
சிந்தியதோ வெனக் காணும்
பங்கயம் பூமுகம் தானும் - அது
பட்டது போற் சிவப்பாகும்
குங்குமம் கொள்ளெனத் தானும் - இவள்
கொண்ட மனஎண்ணம்யாவும்
பங்கம் விளைந்து புண்ணாகும் - கத்தி
பட்டதில்லை இரத்தம் சிந்தும்

தெங்கு வளர்ந் துயர்ந்தாலும் - அது
திங்கள் தொடஎண்ணினாலும்
அங்கு முகில்வந்துமூடும் - மதி
ஆகத்தொலைவு என்றாகும்
மங்கு மொளிகொண்ட வானில் - என்ன
மந்திரங்கள் போட்டபோதும்
தொங்கு மதி உயர்வாகும் - தொட்டு
கொள்ளு மெண்ணம் கனவாகும்

தங்கம்சுடச் சுட மின்னும் - உந்தன்
தாமதமும் என்ன செய்யும்
பொங்கும் கடலலை துள்ளும் - அந்தப்
போதை கொண்டே காணும் உள்ளம்
எங்கும் கடற்கரை காணும் - அங்கு
ஏக்க மிழந்தலை மீளும்
இங்கும் இவள் நெஞ்சினோரம் - இனி
இல்லை யெனும் உரம் காணும்

Thursday, October 25, 2012

புரியாத சக்தி (தேவி)

கண்கொள்ளக் காட்சி தந்தாள்
. காலைக்குக் கதிரைத் தந்தாள்
.. கனிந்திடும் காய்கள் பூவில் தேன் தந்தாள்
எண்ணுக்குள் கூட்டல் வைத்தாள்
. இணைவதில் மீட்டல் வைத்தாள்
..  இதயத்தில் அன்பை வைத்து இதம்செய்தாள்
பெண்ணுக்குள்  உயிரை வைத்தும்
. பிறப்பென்று வேரைஊன்றி
.  பிரிந்திடும் இயல்பை வைத்துப் புதிர்போட்டு
மண்ணுக்காய் ஆசைகொண்டு
. மானிடம் பகைத்து நின்றால்
.. மாதரின் மெய்யைத்தீண்ட ஏன்செய்தாள்

உண்ணென்றே அன்னம் இட்டாள்
. உலவென்று வானம் வைத்தாள்
..  உறங்கிட இரவைத் தந்தும் உளம்மீது
பண்ணோடு இசையும் தந்தாள்
. பாட்டுக்கு நடமும் செய்தாள்
..  பாரென்று இன்பம் எல்லாம் படைத்திட்டாள்
வெண்நீல மேகமெங்கும்
. விளையாடிச் சுற்றும் மதியை
..  விளக்கென்று வைத்துப் பகலுக் கெதிர்தந்து
கண்மூடித் தூங்கச் செய்து
. கருமைக்குள் கலகம் இட்டு
..  காணாத துன்பம்கொள்ளக் கதை செய்தாள்

தண்ணென்ற ஒடைநீரில்
. தாமரை தொட்டேஓடும்
..  தவிக்கின்ற காற்றில் மூச்சை உயிராக்கி
கண்ணீரில் வாழச் செய்ய
. களிப்புக்கோர் எல்லைபோடக்
.. காலத்தில் காணும்தீமை கொள்ளென்று
அண்மைக்குத்  துணையைத் தந்து
. அறிவுக்கும் இருளைகாட்டி
..  ஆக்கத்தில் பசியைத் தானும் பெரிதாக்கி
வண்ணத்தில் ஏனோ மின்னா
. வாழ்வுக்குப் புரியா தென்றோர்
..  வார்த்தைக்குப் பொல்லா தொன்றை ஏன் வைத்தாள்?

புண்ணுக்கு மருந்து மாவாள்
. புலமைக்குக் கவிதையாவாள்
..  போக்கிற்கு பாதைகாட்டிப் போவென்பாள்
வெண்ணெய்க்குள் நெய்யாய் நின்று
. விளக்கிடை ஒளியென் றாவாள்
..  விண்ணுக்குள் நின்றே காணா விளைவாகி
அண்டத்துள் சீறிக்காணும்
. அனலுகுள் வெம்மையாவாள்
.  அம்மையர்க்  கழகைத் தந்தே ஆளென்றாள்
திண்ணத்தில் நேர்மைகொண்டாள்
. திறனுக்குத் தாய்மை செயதாள்
..  தீண்டக்கை தொட்டாற் சிதைவும் ஏன்செய்தாள்


Tuesday, October 23, 2012

முத்தேவியர்க்கும்...!


வீணை கரமெடுத்து வெள்ளைமலர் இருந்து
வேண்டும் கலைகள் தரும் வாணியம்மா -நல்ல
ஆணை பிறக்கவென அன்பிலுனை யழைத்தோம்
ஆகும் வரமெமக்கு தாருமம்மா - புவி
காணும் உயிர்களுக்கு கல்வி உயர்வுதந்து
காக்கும் குணம்மிகவே செய்யுமம்மா -இனி
வீணிற் கலகம் செய்து வீம்பில் உடலழித்து
வெள்ளை மணல் சிவக்க வேண்டாமம்மா

ஞாலம் முழுதும் பொன்னை நாடிச் சொரிந்து ஒரு
நாளில் உயர்வு பெறசெய்யு மம்மா -இன்று
காலம் முழுதும் சிலர் காவல் அதற்கிருக்கக்
கந்தை யுடுத்தவரும் காண்பதென்ன - ஒரு
கோலம் இதுவுமென்ன கொண்டோர் உயரிருந்து
கொட்டும்குவை நதியென் றோடிப் பெருங் - கடல்
போலும் வறுமைகொண்டு பிள்ளை பசியிலழும்
பள்ளம் நிரம்ப வழி காட்டுமம்மா

வாளைக் கரம்பிடித்து வந்தோர் வலியரெனில்
வீரம்,அறம் இணைய வேண்டுமம்மா - வெறும்
கோழை மனத்தினொடு கொள்கை சிறந்திருக்கக்
குற்றம் கொடுமை தீரம் கொள்வதுண்டோ - கருந்
தேளை அரவமென்னில் தீண்டும் விடம் கொடுத்து
தப்பும் முயல்களுக்கு கால் படைத்தாய் - இனி
நாளை உலகமதில் நல்லோர் துணிந்துஎழ
நாசம் விளைப்ப ரச்சம் கொள்ள வைப்பாய்

குற்றம் புரிந்தவர்கள் கோலைப் பிடிப்பதெல்லாம்
முற்றும் தடுங்கள், மூன்று தேவியரே - நன்கு
கற்றுத் தெளிந்தவர்கள் காட்டும்வழி நடப்பர்
பெற்றும் வெற்றி முடி சூடவேண்டும் - இனிப்
பற்றும் உயிர்களிடை பாசம் உடையவனே
கொற்றம், குடைவிரித்துக் குந்தவேண்டும்  இவை
சற்றும்  இழந்தமூடன் முற்றம் நிறைந்தகுவை
பொற்கல், பணம் குவித்தல் நிற்கவேண்டும்

***********************

Friday, October 19, 2012

நவராத்திரிபாட ல் 2

        கருணை காட்டு
              
அடிமனதிலெழும் கவலை
.  அதையறிவ துனதுநிலை
.  ஆற்றிவிடு சக்திதேவி
துடித் துளமும் துயருறவும்
.  தொலைவிலிருந் தெமையறிவ
.  திலைஎனவும் மறுப்பதா நீ
விடிவுகொள இவரெமது
.  விளைவிலெழும் புதல்வரென
.  விரும்பி எமக்கன்பை யருளி
முடிவையெடு இருகரமும்
.  முகை மலரென் றிணையவுனை
.  மனமுவந்து கேட்டோம் தேவி

தினம் நடந்த திங்கள்முகம்
.  தனையிழந்து குறுகுதென
.  தமிழ் சுவைத்து வாழ்ந்த இனமும்
தனமிழந்து தரமழிந்து
.  தமிழ் குலைந்து தமையிழந்து
.  தவிக்கும்வகை காண்பாய் சக்தி
மனமழிந்து வாழ்விழந்து
.  மதிபிழன்று மானிடத்தின்
.  மகிமைதனும் இழந்தே தேவி
கனமிழந்து வாடுமெமைக்
.  காப்பதற்கு வேண்டுமுடன்
.  கருணை கொண்டு காண்பாய் சக்தி

நகையிழந்த சிறுவர்முகம்
.  முகையழிந்த மலர்க்கொடியும்
.  சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
.  புனலிழந்த பொய்கையென
.  வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
.  பழியெழுந்த விதமெதுவோ
.  குகையொழித்த இருளும்போலே
மிகையழிய மேதினியில்
.  அகமகிழ இருப்பதென்ன
.  தொகையழியு முன்னர் காப்பாய்

Thursday, October 18, 2012

தளர்வுறும் மனம் தள்ளு

                   தளர்வுறும் மனம் தள்ளு


பெண்:

தேனைத்தான் தந்தேனே காசைத்தான் தாவென்று
தேன்மலர் கேட்டதுண்டோ
வானைத்தான் தந்தேபின் வீசத்தென் றல்தன்னை
வாடகை வான் கேட்குமோ
ஏனத்தான் இப்பூமி எல்லோர்க்கும் ஆனாலும்
இருக்கத்தான் இடமில்லையே
ஊனைத்தா உயிரைத்தா உனதில்லை ஓடிப்போ
உரிமைக்கு நாமென்பதேன்

வாழத்தான் எழுந்தோமே வாளைத்தான் கொண்டெம்மை
வீழத்தான் கொன்றார்களே
நாளைதான் நமக்கென்று நம்பித்தான் இருந்தோமே
நலியத்தான் செய்தார்களே
ஏழைதான் என்றே எம் இயல்பைத்தான் மீறி இவ்
வுலகுந்தான் எதிர் வந்ததே
சூழத்தான் நின்றெம்மை சுற்றித்தான் படைகொண்டு
சொல்லித்தான் கொன்றார்களேன்

உள்ளந்தான் எண்ணித்தான் உரமும்தான் கொண்டாலும்
தன்னைத்தான் புரியாமலே
அள்ளத்தான் குறையாத அன்பைத்தான் கொள்ளாமல்
அறிவற்ற நினைவாகியே
பள்ளந்தான் முடிவென்று பாயுந்தண் ணீராகிப்
பலமாந்தர் நிலைகெட்டுமே
கள்ளந்தான் கொண்டோரைக் காலத்தின் கோலத்தில்
காணும்  இந்நிலையானதேன்

ஆண்:

எண்ணந்தான் தளராதே இன்னும்தான் துணிவுண்டு
எழவுந்தான் உரமுண்டடி
கண்ணைத்தான் போலும்நாம் காத்திட்ட மண்போக
கொள்ளத்தான் திறன்கொள்ளடி
பெண்ணைத்தான் கொன்றாலும் பிள்ளைதான் தின்றாலும்
பிறந்திட்ட தமிழ் எண்ணடி
விண்ணைத்தான் வெளிச்சம் செய் வெயிலும்தான் மேலேறும்
விடியும் வாழ்வுனை நம்படி

நவராத்திரி பாடல் 1

வீரத்தின் தேவி வெற்றியின் ஊற்றே
வேண்டுவ தீந்துவிடு
சாரமும் கெட்டுத் தளர்ந்தவருண்டு
சக்தியை ஊற்றிக் கொடு
தூரத்தில் தோன்றும் சூரியன்மீது
சொல்லொணாச் சக்தி வைத்தாய்
பாரத்தைக் கொண்டு பற்றினோம் கையைப்
பணிந்தனம் சக்திகொடு

ஆற்றுக்குவேகம் அனலுக்குதீய்ப்பு
அடித்திடும் புயற் துடிப்பு
சீற்றத்துக் காழி  செழிப்பதில் பூக்கள்
சிறப்பென நீ படைத்தாய்
வீற்றிருக்குமுன் வெள்ளிமலைபோல் 
வீறுடன் நாம் நிமிர
போற்றுகின்றோமெம் புன்மையழித்துப்
பூமியில் மாற்றவிடு

சேற்றுக்குள் பூத்தால் செந்தாமரைப்பூ
சீ யென்று தள்ளுவதோ
காற்றுக்கு எம்மேல் கடுஞ்சினமேவி
கணமேனும் நின்றிடுமோ
மாற்றுக்கு ஏதும் வழியில்லையோ எம்
மனதுக்கு மகிழ் வெல்லையோ
நூற்றுக்கு ஒன்றாய்  நாம்வாழல்விட்டு
நிலைதனில் கெடுவதுவோ

கொட்டலாம் மேகம் குமுறலாம் ஆழி
கூரைகள் பிய்த்தெறிந்தே
பட்டதைச் சூறை பாதி முறித்தே
பலமென்று காட்டிடலாம்
வெட்டலாம் மின்னல் வீழலாம் தாரை
வெள்ளமாய் நீர் கொட்டலாம்
விட்டெலாம் நீங்கும் விதமிவை வாழ்வில்
வந்திடத் தேறுவமோ

Sunday, October 14, 2012

யாரங்கே..!

 நீரினுட் கல்லை எறிந்த பின்னும் - குள
நீரலை தோன்றிடக் காணவில்லை
வாரியிறைத்து மழை பொழிந்தும் -வெள்ளம்
வந்து நிலமோடக் காணவில்லை
போரில் முரசமும் கொட்டியது - எந்தப்
போரிடு வீரனும் காணவில்லை
தேரினில் தெய்வமும் ஏறி நிற்க-  எந்தத்
திக்கிலும் சக்கரம் சுற்றவில்லை

பாரியும் தேடியலைந்து விட்டான் பாவம்
பார்வையில் முல்லைகொடி யுமில்லை
கூரிய அம்புகள் விட்டிருந்தும் - அது
குத்தும் இலக்குகள் ஏதுமில்லை
வேரின் அடியிற் பழுத்த பலா - அதை
வேண்டிக் கவர்ந்திட யாருமில்லை
பாரில் இருள்ஓடிக் காலை வந்தும் - சுடர்
பற்றி யெரிந்திடக் காணவில்லை

ஓடித்திரிந்தே உழைத்தவனும் - வாழ்வில்
ஒன்றுமே செய்யா திருந்தவனும்
ஆடிக் களித்து மகிழ்ந்தவனும் - ஏதும்
ஆகட்டுமென்றே யிருந்தவனும்
கூடிக் கலந்தங்கு வாழ்ந்தவனும்  - எந்த
கூட்டமும் இன்றித் தனித்தவனும்
தேடிடும் ஞானியும் மூடனவன் - இவர்
சேர்ந்து கிடக்குமிப் பூமியிலே

வாடிக்கிடக்குது  தோட்டமொன்று - அங்கு
வண்ண மலர்களோ ஆயிரமாம்
மூடிக் கிடக்குது மேகமொன்று வானம்
முற்றும், மழையின்றிச் சூனியமாம்
ஒடித்திரிந்திவர் வேண்டி நின்றும் அந்த
ஒற்றைக் கண்மட்டும் திறக்கின்றதே
நாடி அருள் செய்வதார் இறையே இங்கு
நாமுள்ளம் வேண்டு மாதி சிவனா

ஓடித்திறக்குது  வாசலொன்று - அங்கு
உள்ளே வருவது நீதியொன்றா
தேடியெடுப்பது ஏடுதானா - அல்ல
தீட்டிய கூருடை வாளினையா
நாடி வருவது நன்மைகளா - அல்ல
நாலு முழக்கொடி காலன்சொத்தா
ஓடித்திரிவது உண்மைகளா - இல்லை
ஒசையற்ற காலச் சக்கரமா?

*******************

Tuesday, October 9, 2012

ஒருநாள் ராஜா !

கோட்டையில் மன்னன்சிங் காசனம் - அதில்
கொற்றவன் நான் சுற்றிப் பாவையர்
பாட்டிசைத்து நடமாடிட - என்
பக்கத்தில் சாமரை வீசுவோர்
தேட்டம் நிறை திறைசேரியில் -முட்ட
தேங்கிக் கிடந்த பொற்காசுகள்
நாட்டில் மக்கள்முன்னே வீசிட - இங்கே
 நாளும் பொழுதும் கும்மாளமே

மஞ்சள் நிறவெயில் மாலையில் - இனி
மாங்கனிச் சாறினை உண்டபின்
கொஞ்சும் மலர்க் காவின் ஊஞ்சலில் -பல
கூடுமிள மங்கை நாணத்தில்
மிஞ்சி நகைசிந்தல் போலவே -ஞான்
மன்னன் வீசிய பொற்காசுகள்
பஞ்சில் மெதுவிளங் காற்றினில் - நிலம்
பட்டெழுந்தஒலி இன்பமே !

(வேறு)

எத்தனை எத்தனை வீரமுடன் அதில்
ஏறி அமர்ந்திருந்தேன்
புத்தம்புதுவொளி வீசிய கண்களில்
பொற்கதிரோன் ஒளிர
முத்தெனக் காணும் மணிச் சரங்கள்மின்னி
மோகனமாய்த் திகழ
சத்தமிட் டாடிடும்  நங்கையர் கள்குதி
தாங்கி நிலம்அதிர

வித்தைகள்போல் மனமேடையில் இன்பத்தின்
வேகம்துடிதுடிக்க
முத்தமிடும் இளங்காற்று வந்தே அங்கு
மெய்தனைத் தொட்டிழைய
நித்தம் அழகிய மாலையிலே இங்கு
நின்றிடும் ஏழைகளின்
சித்தம் மகிழ்ந்திட அள்ளி எறிகின்றேன்
செம் பொன்னிற் காசுகளை

பொத்தெனக் கீழே விழுந்து விடச்சில
சத்தம் கிளுகிளுக்க
 கத்திக் குடிமக்கள் பொத்திப் பிடித்திடக்
கண்டு மன மகிழ்வால்
கொத்து மலர்களின் தோரணங்களூடே
சுந்தர வீரனென
எத்தனை தான்இறு மாப்புடன் கண்டனன்
இன்பக் கனவினிலே

*********************

Wednesday, October 3, 2012

வாழப் பழகிவிடு


நீரின்றி வெம்மையில் காயும்பஞ்சு அந்த
நீலவான் மேல்மிதந் தோடிவரும்
நேரின்றி எண்ணிடும் எந்தநெஞ்சும் என்றும்
நிம்மதி குன்றிட வாடி நிற்கும்
வேரின்றிப் பட்டிட எஞ்சும் மரம் வெட்டி
வீழ்த்துவதாய் மண்ணில் வீழ்ந்துவிடும்
யாரின்றி நீகொள்ளும் இந்த துயர் கண்ணில்
ஆறென நீர் வழிந்தோட வைக்கும்

தேரின்றிக் கோவிலில் நிற்கும் தெய்வம் என்ன
செய்யினும் பேரெழில் கொண்டிடுமோ
கூரின்றிக் வீரனும் கொண்ட வாளால்அவன்
கீர்த்தியுடன் வெற்றி மாளுமன்றோ
பாரின்று வாடிடும் உந்தனுள்ளம் வாழ்க்கைப்
பாதையில் கல்லுகள் காணுவதோ
கூர்எழில் கொண்டிட வேண்டின் வாழ்வில் சில
குற்றங்கள் மன்னித்தல் வேண்டுமன்றோ

மஞ்சள் நிலவோடும் நீல விண்ணும் ஒரு
மா மலை மீதுறை வெண்முகிலும்
கொஞ்சுங் கிளிகளின் ஆரவாரம்  வாசக்
கொத்து மலர்களின் கொள்ளையெழில்
அஞ்சும் சிறு பிள்ளை போல்வெகுளும்  அந்த
ஆற்றங்கரை மான்களின் கூட்டமெல்லாம்
கெஞ்சு மிருவிழி கொள்வதென்ன ஆகா
கோடிகோடி இன்பம் கொள் சுகமே!

தீரம்கொண்டே நீ எழுந்திடடா மனம்
தேறு உறுதியைக் கொண்டிடடா
ஓரம் நடந்திடல் விட்டுக் கண்ணே நீயும்
உண்மை தனை எதிர் கொண்டிடடா
பாரம் இறக்கிவை உள்ளம் இரு நீண்ட
பட்டுச் சிறகுகள் கொண்டதென்றே
தூரம் பறந்திடு துள்ளி யெழு வானில்
துன்பம் மறந்தின்பம் கொண்டுநில்லாய்

சொல்லும் பலகதை சுற்றும் பூமி அது
சொர்க்கம் தடுத்திடும் முள்ளுவேலி
கல்லும் பெருவிஷ தேளரவம்   எங்கும்
காணும் வாழ்வு செல்லும் வீதிவழி
வல்ல மனமெனில் வாழ்ந்துகொள்ளும் இள
வஞ்சியே எண்ணு எந்நாளும் இதை
சொல்லமுடிந்தது யானும் இந்தப் புவி
சொந்தமிலை வாழ்வு செல்லும்வரை

Monday, October 1, 2012

விதி தானோ!

கிட்டும் கவலைகள் வெட்டித்தறி யவை
கட்டிக் கடலிடை எறி நீயும்
பட்டுத் துடியிடர் விட்டுப் போனது
வட்டப் புவியிடை எனநாளும்
கட்டிக் குலவிடு கையில் தினமெடு
காணும் மகிழ்வினை விட்டோடி
எட்டுதிக்கிலும் இருளைக் கண்டனன்
எனநீ வீணே அலையாதே

தட்டிக் கதவினில், கொட்டக் கூரையைப்
பிய்த்துத் தருவது நிஜமல்ல
சுட்டுக்கொள்ளென  வட்டப் பரிதியில்
பட்டுப் பொசுங்குதல் வாழ்வாகும்
கொட்டும் மழையுடன் சட்டச் சடவென
வெட்டும் மின்னலும் இடிபோல
இட்டுத் தடைகளை இடரைச் செய்வது
இந்தப் புவியுடை வாழ்வாகும்

பட்டுத் தெளியெது விட்டுபோனவை
பகலின் வானச் சந்திரனாய்
எட்டும் வகையில என்றேதள்ளிடு
எதிரே கொண்டது இன்பமென
கிட்டும் வாழ்வினில் கட்டுப்பாடுடன்
கொண்டது வரையில் போதுமென
தொட்டுத் துணிவுடன் விட்டுக் கொள்கையில்
துவளா வாழ்வுடன் நடைபோடு

நெட்டைச் சிறகுடை பட்சிக்கூட்டமும்
நீள்விரி வானில் நெடிதோடிக்
கட்டைப் புல்வெளி காட்டுப் புதரெனக்
குட்டை குளங்கள் கடந்தேகி
வெட்டக் குனிந்திடும் விளையுங் கதிருள
வயலைக் கண்டே வாழ்வு பெறும்
முட்டும் வலியுடை முடியா வாழ்விலும்
மட்டும் விதிகளை மீறாதே

நட்டுக்கழனியில் பச்சை நெல்லினை
நாளும் புனலுற   வழிசெய்து
இட்டும் உரமதை இருகண் பார்த்திட
எதுவும்  இடைபுகுந் தழியாது
வெட்டிப் பதரிட வீசுங் காற்றிடை
விதமும்  பிரித்து விற்றாலும்
கட்டிப் பலமனை காசும பணமென
காரில் திரிந்திட வாழ்ந்தானோ

எட்டிப் பறித்திடும் இயல்பைக் கொண்டது
இருளின் வண்ணக் காக்கை யென
தட்டிப் பறித்திடு தன்னலப் பித்தரும்
தம்முடை வாழ்வில் முன்னேறி
சட்டை பையினுள் மொத்தக் காசுடன்
சார்ந்தோர் தம்மை ஏமாற்றி
விட்டுக் காசினை வட்டிக்கென பலர்
வாழும் வாழ்வும் விதிதானே