Thursday, December 13, 2012

முடியாத தொடர்



நிலைமாறி ஒருநாளும் எதிர்காலம் பின்னாலே
நிகழ்காலம் வருவதில்லை
தலைமாறி எழுஞ்சூர்யன் தடுமாறி மேற்கென்ற
தானுதய மாவதில்லை
வலைமாறி நீர்பற்றி மீன்நழுவி ஓடவிடும்
வழமைக்கு ஆவதில்லை
தலைசீவி கொலையாக்கும் தரம்கெட்ட மனிதகுலம்
தவறியும் திருந்தவில்லை

இலை மாறி அழகோடு இதழ்கொண்டு வாசமெழ
இனிதேனை சுரப்பதில்லை
கலைமாறிக் கவின்பாடும கனிபோலும் செந்தமிழின்
காண்சுவை கசப்பதில்லை
அலைமாறி கரைதோன்றி ஆழநடு கடல்நோக்கி
அசைந்தோடி அழிவதில்லை
புலைகீறிக் கொல்லென்ற பொதுவானகொள்கைதனை
பகைவர்கை விட்டதில்லை

சிலைமாறி உயிர்கொண்டு சிற்பிகை உளிநொந்து
செயல்கொண்டு அழுவதில்லை
மலைமீது வருங்காற்று மலர்வாசம் கொண்டோடி
மூச்சாக மறுப்பதில்லை
விலை என்று கருவாடு விளைபொன்னின் அருகோடு
விற்கச்சம மாவதில்லை
தலை கொண்டு உயிர்வாங்க தமிழ்கொன்று மகிழ்வாக
தயக்கமோ தீயர்க்கில்லை

பலம்கொண்டு தமிழ்வாழ பலநாடும் எதிர்வந்த
பரிதாபம் நேர்மையில்லை
நலம்கொண்டு உயிர்காக்க நாளன்று கொண்டநிலை
நானிலம் புரிந்ததில்லை
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் புறமென்று தமிழ்தன்னை
பிரிந்தின்று வாழ்வுமில்லை
நிலமென்ப தொருநாளில் நிம்மதியைக் காணும்வரை
நித்திரை முழுமையில்லை

Tuesday, December 11, 2012

மாறாத துயர்


கதிர்கள் நடமாடக் குருவி இசைபாடக்
கழனி எழில் காணுது
எதிரில் இளவானின் ஒளியைத் தரமேக
இடையில் வெயில் ஓடுது
புதரின் அயலோடு போகும்வழி தன்னில்
பயந்து முயலோடுது
விதமென் றுயிரஞ்சி விரைந்து வழிகாணும்
விடிவை மனம் தேடுது

மதியவெயில் கூடி மந்தி விளையாடி
மரத்தில் கிளை தாவுது
விதியும் பிழையாகி விடிவின் நெடுந்தூரம்
விரிந்து தொலையாகுது
பதிய வளைதென்னை பரவுமிளங் காற்றில்
பணிந்து தலையாட்டுது
புதிய அலைதோன்றிப் புரண்டு நதியோடப்
பொங்கி மனமேங்குது

எதிலும் குறையாத புகழின் மகன்போல
எழுந்து மலை நின்றது
முகிலும் நேரோடி இணைய மனம்கொண்டு
மலையின் மடிதூங்குது
அகிலம் தனைஆக்கி அனைத்து முயிர்வாழ
அவனும் படைத்தானன்று
பதிலுக்கிவை துணித்து எனது உனதுவெனப்
பரமன் சிரித்தானங்கு

உயிரைக் கொடுத்தேனும் உரிமை யுடன்வாழ
எளியோர் மனமேங்குது
பயிரை விதைத்தோனே பருவம்வரக் கொள்ளும்
பயனை விதி மாற்றுது
வயிறைப் பசியுண்ண விலங்கு உடல்கொள்ள
வாழ்வில் உயிர்போகுது
கயிறை எறி மாயன் கருதும் நொடிமட்டும்
காணும் துயரோ இது

Saturday, December 8, 2012

இரங்காயோ எம்மில்.!

தெய்வத் திருவுருவே தேனூற்றே உயிர்களிவை
உய்யத் திருவருளும் ஈயாயோ பொன்னடிகள்
கையிற் தொடவிழுந்து காலமெலாம் அழுதிடினும்
எய்யும் ஒருஅம்பாய் எம்மிதயம் துளைப்பதென்ன?


மெய்யைக் கிழித்தங்கு மேனியதன் குருதி யொரு
பெய்யும் பொழிமழையாய் பீறிடவே கொட்ட நிலம்
மையத்திடை படுத்தி மாடுகளை உதைப்பதென
வையத்திடை செய்யும் வதையிருந்து காவாயோ

செய்யாப் பெருங் கொடுமை சேறாக்கி தாழ்வெண்ணி
நையப் புடைத் தெம்மை நாடகன்று ஓடவைக்க
குய்யக் கூவென்றுநாம் குரல் அலறி நீர் சொரிந்தும்
கையைக் கொடுத்தெம்மை காவாது நிற்பதென்ன

அய்ய நின்அரைமேனி அணைந்தவளும் உன்னழகில்
மையலிட் டெம்மை மறந்தனளோ மாதேவி
நெய்யை பெறுவிழிகொள் நீலத்திருமேனி யளே
பொய்யைப் பெருவாழ்வுக் கீந்தெம்மைக் காவாதேன்

தொய்யத் தமிழ் தன்னும் தூயஒளிச் சுடர்மாயக்
கொய்சிரசும் கொல்லென்று குலம்தமிழைக் குபபையிலே
துய்யத் துடித்தலறத் துவம்சம்செய் பகை கண்டும்
வெயில் எழப் புல்நுனியின் வீழ்பனியென் றாக்காதேன்

(வேறு)

வையத்தே ஆயிரம் கோடியெனப் பல
வாழும் இனங்களைச் செய்தவரே
தையத்தை என்று நடமிடவும் தமிழ்த்
தாய் தந்தமேனியைக் கேட்பதென்ன
பொய்யைத்தான் கூறி யினமழிக்கும் அந்தப்
புல்லனும் இரத்த வெறி பிடித்துக்
கையைத்தான் காலை இழுத்துவெட்டிச் சுகம்
காணப் பொறுத்தனை, காத்திடவா!

தெய்வந்தான் காத்திடு மென்பவரையொரு
தேவதை வந்துமே காக்கவில்லை
எய்யத்தான் பூங்கணை கொண்டுமதன்இவர்
மெய்யைத்தான் தீயெழச் செய்வரென
அய்யோதான் என்றே அழுதவளும் அவன்
ஆவிபிரித்திட ஆளனுப்பி
மெய்யைத்தான் தீயெழச் செய்வதென்ன இனி
மீளத்தான் எம்மைநீ காப்பதெப்போ

Thursday, December 6, 2012

நம்பியெழு நடக்கும்

அழுதிடுங்கள்  ஒருதடவை ஆவெனக்கதறி
  அடுத்து வருங் காலமதில் அதுவிருக்காது
விழுந்திடுங்கள் மேனிதொட்டு வேதனைகூடி
   விரும்பிடினும் விழுவதினி வேண்டிவராது
மெழுகெனவே உருகிடினும் மின்னொளிபோயும்
    மேற்கில்மறை ஆதவன்கீழ் மீளவருங்காண்
எழுமதனின் ஒளிபரவ முழுதிருளோடும்
   ஏற்றமுறும் வாழ்வமையும்   இன்பமுண்டாகும்

கழுகுயரப் பறந்திடினும் காலமெப்போதும்
 காற்றினிலே வாழ்ந்திடுமா கீழ்வர வேண்டும்
பழுதுகொண்ட சக்கரத்தைப் பூட்டியதேரும்
  பயணமதில் பாதிவழி போகையில்வீழும்
தொழுதல் விடு துடித்தெழுவாய் துன்பமுமெங்கள்
  துணைநடந்த நிழலில்லையே தொலைத்திடப் போகும்
எழுந்தவரும் நடப்பவரும் விழுந்திடும்நேரம்
  விழுந்தவர்நாம் எழுந்து இனி நடந்திடும்காலம்

வியர்வைமட்டும் விழுந்திருக்க, வெள்ளையில்மாடு
  விரட்டிவயல் உழுதவாழ்வு வீணெனப்போயும்
உயர் உழுவை நிலமுருண்டு ஓடும்வண்டிகள்
   ஓசையிட கதிரறுக்கும் உன்னதம் காண்போம்
துயர்விடுத்த குருவிகளும் துணையுடன்கூடித்  
  தொலைவில்நுனிக் கிளையிருந்து தொங்கிஆடிடும்
வயிறெடுத்த பசியுடனே வாழ்ந்த வாழ்வெல்லாம்
  வரண்டுவிட வசதிசெழித் தோங்கிடும் நாடும்

நரியிருக்க நாய்கள்குரைத் தோடிடச்சுற்றி
 நர்த்தனமென் றாடிடும்பேய் நடுநிசி வந்து
எரியவைத்த வீடுகளில் இருந்திடும் கரியை
 எடுத்துடலில் பூசியபின் எண்ணெயும் ஊற்றி
புரிந்த வதம் வெறிபிடித்த பொழுது களெல்லாம்
  பிணமடுக்கிப் பார்த்தழுத பாவங்கள் நீங்க
தெரியவென வரைபடத்தில் தோன்றிடும் நாடும்
  தீந்தமிழர் பெருநகரம் தேனொளி கொள்ளும்

புரியடுத்து புறப்படுநீ பொழுதுகள் விடியும்
 புன்னகையை மட்டுஎடு புன்மைகள் துன்பம்
வரிந்தடுக்கி வைத்துவிலை விற்றிடவேண்டும்
  வாங்கவெனப் பெரியமகா  வம்சங்கள் கேட்கும்
சரிகொடுத்து விட்டிடுவோம் சரித்திரம் மாற்றிச்
  சாவுகளும் நின்றுவிடச் சுதந்திரம் வாங்கப்
பெரிதெடுத்த கடமைமுடி புத்தொளி யேற்றிப்
  புனிதமண்ணில் பிறந்தவர்க்குப் புன்னகை ஈவோம்

Tuesday, December 4, 2012

ஒருதலை ராகம் (நகைச்சுவையாக..)



செந்தேன் கருத்தவிழி சித்திரமோ அற்புதமாய்
சேர்ந்தழகு கொள்ளை கொள்ளுதே
வெந்தேனோ என்மனதுள் விண்ணதிரப் புவிசுழல
வெள்ளிமலை தீவெடிப்பதேன்
வந்தாளோ வஞ்சியிவள் வாசமெழப் பூமுடித்து
வானமகள்  ரம்பை மேனகை
சொந்தமென் றானவளோ சுந்தரியோ கண்டுளமும்
சின்னதாகப் பூவிரிப்பதேன்

அந்தோ நிலாவொளியில் ஆளவென வந்தவளோ
அல்லியெனக் காணுகின்றவள்
சிந்தோமெனச் சிறிதோர் புன்னகையை பூட்டிவைத்து
சிந்தை கொளக் கண்டுபோற்றினேன்
நந்த வனத்தினிடை நான் பறித்த பூக்களெலாம்
நாட்பொழுதில் வாடுகின்றதே
இந்தா இவள்மலர்ந்த புன்னகையோ என்மனத்தில்
இல்லை வாட்டமென்று காண்பதேன்

என்தேன் இளம்மனத்தில் இன்னிசைக்கும் ராகமெலாம்,
எப்படிதான் வந்துசேர்ந்ததோ
சந்தேன் வளைமதியும் சந்தமெழும் பாதநடை
சஞ்சலத்தைத் தந்திருப்பதேன்
மந்தி மரக்கிளையின் முன்னேறித் தாவுதென
மாவிலங்கு போலவந்தனன்
அந்தோ விழித்திருக்க ஆரணங்கைச் சேருகிறான்
அதிசயித்து விழிசிவக்கிறேன்

மந்த மனம்மயங்கி மாதவளோர் புன்னகையை
மதிபிழன்று அள்ளிவீசிட
வந்தோனவ் விண்ணிலெழும் வானமகள் தேவதையின்
வண்ணக்கரம் பற்றி நிற்கிறான்
என்தேகம் சூடெழவும் இப்படியும் விட்டிடவோ
என்மனதின் ராஜகுமாரி
முந்திநடை நடந்து மோகினியை முன்மறித்து
மோசமிது என்செயலென்றேன்

வந்தீர் என்னோடுபிற வாயினுமென்  சோதரனே
வாழ்விலெனைக் காத்திட வந்தீர்
பந்திஉணவுமிட்டு பார்த்திருக்க ஊரவர்முன்
பாவையிவள் தோளிணைவார் காண்
தந்தை நின்சொல் மதிப்பார் தாமிதனைகூறியெமை
தானிணையத் தா வரமென்றாள்
அந்தோ அதைவிடவோர் ஆனந்தமென் வாழ்விலுண்டோ
அகமிருந்த மெய்யிழந்தேன் நான்

வாழ வழி காண்போம்

தித்திக்கும் தித்திக்கும்  தீந்தமிழ் சந்தங்கள்
சித்தத்தி லூறிடத் தித்திக்குமே
எத்திக்கு மேகினும் இன்பத் தமிழ்ஒலி
சத்தத்தி லுள்ளம் மகிழ்ந்திடுமே
புத்திக்கும் சந்தங்கள் போதைதருமுடல்
ரத்தத்தில் புத்துணர் வூட்டிடவும்
கத்திக் கும்மாளமிட் டேமனமெங்கணும்
காற்றென வானிற் பறந்திடுமே

விக்கித்து விக்கித்து வீணாக வாழ்வினில்
வேதனை கண்டுமனம் சினந்து
பக்கத்தில்காணுநற் பாதை விடுத்துள்ளப்
பார்வை கெட்டுக்குரு டாதலின்றி
துக்கித்து துக்கித்து துன்மென்றாகிடத்
தோல்வி யென்றே மனம் தேய்தல்விட்டு
சுத்திக்கும் அன்பெனும் சொல்லை மனத்தெடு
சேர்ந்திடு வோம்நல் மனங்களொடு

நற்கதி லோகங்கள் நட்டநடுவெளி
நாட்டிய மாட்டிக் களிப்பவளும்
கற்பிக்கும் போதனை காலத்தின் கட்டளை
காத்து மதிகொண்டு வாழ்ந்திடுவோம்
சிற்பமெனப் பொழிந் தற்ற உணர்வுகள்
சொற்ப மகிழ்விற் படைத்திடினும்
அற்ப பிறவியின் ஆழம் வரைகண்டு
ஆற்றல் புரிந்ததை காத்திடுவோம்

நர்த்திக்கும் நாதன் நடனம்விரும்புவோன்
நாடியெம் தீமை யழித்திடுவோம்
வற்றும் குளத்திடை வாழும் மீனாகிய
வாட்டம் போகமழை வேண்டிடுவோம்
முட்புதர் தோன்றியெம் முன்னேசெல்லும்வழி
மூடிபரந்திட்ட போதினிலும்
நற்புரிவோடுயர் ஞான மளித்தனள்
நம்முளத்தீ கொண்டெரித்திடுவோம்

சொற்பதம் கொண்டுநல் சுந்தரகீதங்கள்
சொல்லித் தமிழிற் கிறங்கிடுவோம்
நற்பெரு நாத நவரச முத்தமிழ்
நாவிற் பொழிபவள் நாம்தொழுவோம்
முற்று மினித்திடா வாழ்வு உலகத்தில்
மூச்சைஅடக்கிடும் காலம்வரை
அற்புததேவதை அன்புத் தமிழ்சொல்லி
ஆனந்த மிட்டவளைத் தொழுவோம்
*********************

Sunday, December 2, 2012

வாழிய தேவி



இந்தமேகம் இடியிடித்தால் எழுவது நாதம்
இடையிடையே இதயமதில் இன்கவி மின்னும்
வந்தமழை வழிவதென்ன வார்த்தைகளாகும்
வாரியன்புத் தூறல்கொட்டிச் சோவென வீழும்
அந்தரவான்  கொட்டுமழை ஆறிட மௌனம்
அகத்திடையின் கவிதைவிழைந் தாற்றிடும் சாந்தம்
சந்தமெழுங் கவிதை வெள்ளம் சலசல ஓட்டம்
சாலையோரம் தேங்குநீரில் துளிகளின் தாளம்

மெத்தையெனும் மேகங்களின் மௌன ஊர்வலம்
மேலெழுந்து வான்பறக்கும் பட்சிகள் கூட்டம்
முத்தமிட நீள்மலையை மேகமும் தேடும்
முற்றிணைவில் நதிபிறந்து கிளுகிளுத்தோடும்
சத்தமிடும் குயிலினிசை சுனையலை தாளம்
சாரல்மழை தேகம்தொடச் சலசல த்தாடும்
அத்தனைநீள் தருவினிலை அழகிய ஆட்டம்
ஆகுமின்பம் தமிழிசைக்க அற்பமென்றாகும்

நிந்தனைகள் இல்லையிங்கு நித்தமும் ராகம்
நீலவிண்ணில் காயுமொளி நினைவெழு மோகம்
சுந்தர விண்மீன் மறைத்து சென்றிடும் மேகம்,
சொல்ல வருங் கவிதையின்பின் சக்தியி னூற்றும்
மந்திரங்கள் அல்லத் தமிழ் மாற்றிடும் உள்ளம்
மதுவழியும் பூவிருந்து மாந்திடும் வண்டும்
எந்தவிதம் போகுமென்ற இயல்புடன் நாளும்
இன்கவிதை யுண்பவரும் எடுத்திடக் காணும்

முத்தொளி வெண்சூரியனும் முழுமதிபொன்னும்
மோகமிட மாலைசெய்து தாரகை கூட்டி
சத்தியத் தாய் நீலவிண்ணென் னாடையும் பூண்டு
சாகரத்தின் ஓசையிலே சிரிப்பதைக் கண்டோம்
கொத்துமலர்ச் சோலைதொடும் தென்றலின்வாசம்
கூட்டியதாய் சந்தணமும் கொள்ளொரு மேனி
வைத்தவளிவ் வண்ணத்தமிழ் வாழ்வதிலின்பம்
வாய்த்திடவே தந்தவளாம் வாழிய வாழி!

**********************