Wednesday, September 28, 2011

நரகத்தில் உழலுவதோ?

தேரேறு என்கிறான் தேவன் - நானுந்
தெரியாத வன்போலத் திரும்பியே நின்றேன்
பூவாரி எறிகிறான் என்னைப் - பார்த்துப்
புன்னகை பூத்துமே கைகொண்டு காட்டி
போயேறு என்கிறான் வானில் - அங்கு
பூத்ததோர் வெள்ளியை புதிதாகக் காட்டி
ஏதேது என்றதைக் கேட்க - ஆகா
இனியுந்தன் வாழ்வங்கு இன்பமேயென்றான்

நீரூறு விழிகளைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
விளையாடி வேடிக்கை செய்தும் சிரித்தான்
நோயுறு தேகமும் நொந்து - இங்கு
நிற்கவும் முடியாது போனதே என்றால்
காயமே பொய்யாடா என்று - கை
காட்டியவ் வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை என்றால்
பாயிலே கிடஎன்று என்னைத் - தள்ளிப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தரணியில் வாழ்வோர்க்கு எதிரியோ, என்றேன்
பேயிலும் இழிவென்ற பிறவி இந்த
பிணமோ இக்குருதியில் பேராசை கொண்டாய்

நாளிலே மணம்கொண்டு வீசும் - அது
நாற்றமும் வீசிட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - உடல்
தீயிலே போட்டிட சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினைதானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதைநீ மேகம் வந்தால் - அங்கு
தீயாக மாறிநீ திகழலாம் என்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமா யறியேன்
கொல்வது என்றுதான் வந்தால் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தேதென்று கொண்டாய்
இல்லைவே றிதுதானே நரகம் - காண்
இதுவே உன்மழலையின் சொல்லான நகரம்

கொள்வது எல்லாமே துன்பம் - வான்
கொட்டிடும் மழையிலே கொடிபோலும் மின்னல்
உள்ளதோர் அளவேயுன் இன்பம் -அதில்
ஊதி யடிக்கின்ற புயல் போலும் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடேநீவாழும் -இந்த
உலகவாழ் வினிதென்று எண்ணுதல் ஏனோ

நில் இன்னும் சிறுகாலம் வாழ்வேன் - என்
நெஞ்சினி லாசையும் நிற்குது என்றேன்
நல்லதென் கூற்றினை கேளாய் -பின்
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
அல்லலும் துன்பமும் கொள்ள -உனக்
கத்தனைஆசையா, அற்புதம் மனிதா!
நல்லதோர் புவி செய்ய நீவிர் அதை
நரகமென் றாக்கிந லிந்தின்பங் கண்டீர்

No comments:

Post a Comment