Monday, October 31, 2011

மனம்( மாறாத சோகம்)

நீராழி மீதிலே அலைகள் ஆடும்
. நினைவோடு போனவை நின்றுகாணும்
பேரோடு சொந்தங்கள் பின்னால் வரும்
. புகழோடு வரவுகள் புதிதுசேரும்
தேரோடத் தெய்வமும் தீந்தமிழ்சொல்
. தமிழோடு மனம்சேர்ந்து ஆடவைத்தே
நீரோட விழிமீது வழியுஞ் செய்தாய்
. நெஞ்சிலே தீயாக நினைவு வைத்தாய்

மானாடும் மயிலாடும் மதுவில்நின்று
. மலர்மீது வண்டாடும் மகிழ்வில்என்றும்
வானோடும் கதிரேறும் வண்ண நிலவு
. வந்தோடும் பூங்காற்று வசந்தமென்று
தானோடும் மனமீதில் எண்ணமென்று
. தனியாக அதுவோடிச் செய்யுகோலம்
நானோடி சொல்வதோ யாருக்கென்று
. நடுநீரில் மீன் நின்று அழுவதென்று

பூவிரியும் புதிதாகப் பிறந்த வேளை
. புள்ளினமும் ஆர்ப்பரித் தெழுந்த காலை
தீவிரியும் கதிரோடு தினகரன்தான்
. தேய்நிலவை தள்ளியத் திசையுங் கொள்ள
காவிரியின் அலையாகக் கலகலத்து
. காற்றுமிளங் காலையில் இதயம் மீது
நீவியொரு இன்பமதை ஊட்டுமாமோ
. நீர்விழியில் கொண்டதனைக் கூட்டுமாமோ

பசும்வெளியில் புல்லாக பச்சை வண்ணம்
. பழந்தூங்கு சோலைகளும் பாரில்வைத்தான்
விசும்பியழ மனமொன்றை உள்ளேவைத்து
. விதியோடு உறவுவென்று கூட்டி வைத்தான்
பிசுசிசுத் துழலென்று செய்தான் காலம்
. பிழைத்துவிடப் பொல்லாப்புப் புரிந்துநின்றான்
நசுங்கமனம் பூவாக மனதைச் செய்து
. நடமாடும் நிழலாக நலிவை வைத்தான்

எழிலோடு பிறக்கின்ற இரவின் முடிவு
. எழுந்தாடும் அலைகொண்ட கடலின் உயர்வு
வழிமீது சொரிகின்ற மலர்கள் மென்மை
. வானேறிக் காண்கின்ற சொர்க்கம் யாவும்
பொழிகின்ற மழைகொண்ட சாரல்தூவும்
. புனல்தூறக் குளிர்கொண்ட வாழ்வுமேனோ
குழிமீது எனைவீழ்த்திக் கோபுரத்தின்
. கொண்டே என்கனவாக வைத்தாய் ஏனோ?

No comments:

Post a Comment