Friday, November 4, 2011

உன்னை நீயறிவாய் !

பொன்நகை யன்றிப் புன்னகை கொள்வாய்
போகும் பாதையிலே
பன்நகை கண்டும் பதறா துந்தன்
பாதை நீ தெளிவாய்
சின்னகை கொண்டு செல்லப்பிள்ளை
சீண்டும் போதினிலே
என்னது செய்வாய் அதுபோலின்பம்
ஏற்றே சிரித் திடுவாய்

காடும் நாடும் ஒன்றே யறிவாய்
காட்டின் விலங்கினமும்
கூடும் எண்ணம் கொள்ளும் மனிதர்
கூட்டம் காண்பாயே
தேடும் அன்பும் தீமைகொள்ளாத்
தெய்வம்போல் மனிதம்
ஊடும் உள்ளார் உண்மையறிவாய்
உன்னைக் காப்பாயே

பொய்யும் கண்பாய் பொய்மை கொண்டே
புரளும் உலகறிவாய்
எய்யும் அம்பாய் இன்னல் செய்யும்
எதையும் எதிர் கொள்வாய்
மெய்யில் தீரம்கொண்டே என்றும்
மனதில் துணிவாகி
செய்யும் செயலில் சிந்தைவைத்து
சிதறா நிறைவு செய்வாய்

மாறும் உலகில் மாற்றம் என்பது
மாறாவிதி காணாய்
மாறும்போதில் மற்றோர் உயிரை
மதிக்கும் விதி கொள்வாய்
ஊறும் ஒருவர்க் கில்லா மாற்றம்
உலகில் சரியென்றே
யாரும் சிரித்தால் நீயும் சேர்ந்து
சிரிப்பாய் சினம் விடுவாய்

மூடும் முகிலும் கூடும் இருளும்
மௌனச் சதிவலைகள்
போடும் இடியும் புயலும்சேரும்
புனலும் இழுவெள்ளம்
பாடும் பசியும் பிணியும்பலதும்
பார்த்தும் பதறாமல்
வாடும் உள்ளம் இன்றி நல்லோர்
வழியைக் கண்டிடுவாய்

விண்ணில் காணும்நட்சத்திரங்கள்
எண்ணிக் கைபோலும்
மண்ணில் காணும் விந்தைமனிதர்
மனமும் பலதாகும்
எண்ணிப்பார்த்தால் இவரின் சொல்லோ
இதழில் புன்னகையாய்
கண்ணைச் சிமிட்டும் கருமைஎண்ணம்
காணும் உளமிருக்கும்

இன்னோர் உயிரை இகழல்செய்யா
இயற்கையென மதிப்பாய்
தன்னோர் எண்ணம் தனதோர்முறைமை
தவறில்லைக் கொள்வாய்
நன்நேர் வாழ்வை கொள்வாய் நாளும்
நலனே எண்ணிடுவாய்
மின்னேர் ஒளியாய் மிளிர்வாய் உலகில்
மேன்மை கண்டிடுவாய்

No comments:

Post a Comment