Tuesday, February 12, 2013

நல்லமுதம்


சொல்லத்தெரியவில்லை - இந்த
. சுந்தர ரூபபொற் சிங்காரக் கோட்டையில்
. சொர்க்க மிருக்கும்நிலை
மெல்லவிரியு மெல்லை - எந்தன்
. மேகம்மறை நிலவான மனந்தனில்
. மீண்டு மொளிக் கலவை
நல்ல மலர்கள்தனை - இந்த
. நானிலம் மீதிற்சொரி கிறதே,யெழில்
. நந்தவனத் தினிடை
செல்லப் பிறந்த இசை - அன்புச்
. சிந்தனை வானத்து தென்றலெடுத் தென்னில்
. தந்தது போதை தனை

கல்லு முருகும் கலை - இந்தக்
. கன்னித் தமிழ்நிலாக் கற்பனை விண்ணிலே
. காயுமொளிக் குளுமை
வெல்லம் குழைத்தினிமை  - அதை
. வேரிற் பழுத்த பலாவின் கனிச்சுளை
. வெட்டி குழைத்தமுதை
நல்லினித் தேன்கலந்தே - அது
. நாவிலினித்திடப் போதுமோவென்றிட
. நாலாறு கற்கண்டினை
மெல்ல இட்டுக் கலந்தே - இந்த
. மேன்மை யொளிக் கதிர் மிஞ்சும் அவைதனில்
. மென்றிடத் தந்த நிலை!

No comments:

Post a Comment