Tuesday, April 24, 2012

எனக்கு நானே ராஜா!

(இயற்கை காகிதப்பூவை பார்த்து கேட்கிறது)
கலை வண்ண தாளின் பூவே
. கதிர் காணும் வானம்பார்த்துக்
. கற்பனை இன்பங் கொண்டாயோ?
அலைந்தோடும் வண்டும்தேனை
. அருந்தாமல் போகும்வாழ்வு
. அதிலென்ன இன்பம் காண்பாய்சொல்?
குலையென்றும் கொத்தாய் பூக்கள்
. குவிந்தாடும் போதே தொட்டு
. குளிர் கொண்ட காற்றும் ஓடுதுகாண்
நிலை கொண்டதென்னே நீயோ
. நிறந்தானே வாசமில்லை
. நிமிர்ந்தாடும் இன்பம் ஏதுசொல்?

(காகிதப்பூ)
மகிழ்ந்தாடும் பூக்கள் வாழ்வு
. மணந்தாலும் வண்டின்தொல்லை
. மனங்கூசத் துன்பம் ஆகிவிடும்
நிகழ்வான திங்கே இல்லை
. நெருங்காது ஊதும் வண்டு
. நிதம் ஏய்க்கும் வேலை இல்லை காண்
அகல்வானின் வெம்மை எந்தன்
. முகம்மீது கொள்ளும் இன்பம்
. அதுபோதும் என்றும் என்வாழ்வில்!
இகம்மீதில் காணும் இன்பம்
. ஏகாந்தம் ஒன்றே உண்மை
. இதுபோதும் என்னை விட்டுவிடு

(இயற்கை)
படர்ந்தாடும் கொடியின் பூவும்
. பிறந்தாகும் பயனைக்கோவில்
. புகுந்தோடி வாழ்வில் கொண்டதுபார்
நடந்தாடும் மங்கை கூந்தல்
. இணைந்தாடி நன்மைசெய்து
. நாள்தோறும் இன்பம் பெற்றதுகாண்
அடர்தோங்கும் பூவின் தோட்டம்
. அழகென்னே பல்சேர்வண்ணம்
. இணைந்தங்கு இன்பம் கொள்ளுவதாம்
இடம்மாறி உள்ளோர்பூவே
. இவையாவும் இல்லாவாழ்வும்
. எதைகொண்டு நன்மை சேர்க்குதுசொல்

(காகிதப்பூ)
தொட்டாலுங் குத்தும் முள்ளும்
. தோதற்ற மணமும் சிந்தை
. தூங்கிடச் செய்யும் வாசமதும்
கட்டெழில் மங்கை கூந்தல்
. கறுப்பதைத் தூய்மை செய்தும்
. காண்பதில் மாயை கொண்டிடவும்
எட்டாத இறைவன் கோவில்
. ஏகினும் தாயின் அன்பை
. இழந்தேகும் வாழ்வும் வேண்டிலேன்
மொட்டாக முகிழ்ந்தாலும்பின்
. முடிவென்ப தொருநாள் ஆகி
. மண்மீதுவீழல் இல்லை காண்!

Saturday, April 21, 2012

உயர்வு வேண்டும்

இரண்டாவது மூன்றாவது அடிகள்
1.----------------------------------------------
2. தனன தானனன தனன தானனன
3. தனன தானனன தனன தானனன
4. ------------------------------------------------------------


அன்பு மனம் வேண்டும் சக்தி - இந்த
அகிலம் வாழுயிர்கள் கருணையோடு தினம்
பகிரும் வார்த்தைசுகம் தருமென் றானதொரு
அன்பு மனம் வேண்டும் சக்தி

இன்பம் பெறவேண்டும் சக்தி - இந்த
இகமெல்லா முனது விழிகொள் பார்வைதனில்
முகமெல்லா மலர இதயமான பெரும்
இன்பம் பெறவேண்டும்

உண்மை மொழி வேண்டும் சக்தி - நல்
உயர்வு காணும் மன நினைவு கூடி எது
பயமி லாதபடி துணிவென் றாகிச் சொலும்
உண்மை மொழி வேண்டும் சக்தி

மென்மை உளம்வேண்டும் சக்தி - பலர்
மிருகமாகிப் பிற உயிர்கள் வேதனையை
பெருகுமா யியல்பு தரும் குரோதமின்றி
மென்மை உளம்வேண்டும் சக்தி

பரிவு இறைமை தா சக்தி - இப்
புரள்விநோத வெளி சுழலுங் கோள்கள்பல
உரசிடாம லிடை பெறும்நி தானமெனும்
உரிமை இறைமை தா சக்தி

உள்ளம் உயர்வுபெற சக்தி - இந்த
உலகமான மறுதிசையி லோடிடினும்
கலகமேது மின்றி உயர்வு காணும்வகை
கொள்ளும் நிலைமை தா சக்தி

அறமும் நீதியுடன் துணிவு - பெரும்,
அளவிலா துயிர்கள் மனித வாழ்வில் வரும்
பிளவினாலே உடல் பிணமென் றாக்கும்செயல்
நிறைவு பெற வேண்டும் தாயே!
**********************

Saturday, April 14, 2012

வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி


வெண்ணிலவு ஒளியெறிக்கும் வேளையொரு மாலையிலே
வீணையொலி கீதமெழப் பார்த்தேன்
கண்ணெதிரில் கால்சலங்கை கலகலத்த ஓசையெழக்
கன்னியவள் நடனமிடக் கண்டேன்
பெண்ணவளோ பேசரிய பொன்னெழில் பூம்பாவையவள்
பேரெனவோ கேட்க மனங்கொண்டேன்
அண்மையிலே சென்றவளைக் காண அதோ அவளிலையோர்
அழகிய மான் துள்ளி ஓடக் கண்டேன்

பொன்னென மான்துள்ளுமெழில் கண்கவர்கொள் மோகமிடப்
பின்நடந்து செல்ல மனம்கொண்டேன்
அன்னநடை போல்நடந்து அங்குதுள்ளி இங்குதுள்ளி
அது நடந்தபாதை கண்டு சென்றேன்
முன்னொரு புல்மேடை வெளி புள்ளிவைத்தபொன்னெழில்மான்
மெல்ல அதை தொட்டிட வென் றேக
மின்னியது நீல ஒளி கண்ணிரண்டும் கூசஅதில்
மான் மறையப் பூவிருக்கக் கண்டேன்

வண்ணமலர் நீலமெனும் வட்டஇதழ் கொள்ளுமெழில்
விந்தை தனைக் கொள்ள ஆசை கொண்டு
திண்ணமுடன் அருகணைந்து  கையெடுத்தேன் என்னவிது
தளதளக்கும் நீரலைகள் கண்டேன்
மண்மறைய அலையெழவும் பொய்கையெனும் தோற்றமுற
மெல்லெனமுன் விரியுமெழில் காட்சி
தண்ணொளியில் மென்மலர்கள் ஓன்று பல ஆயிரமாம்
தாரகையாய் வானிலெழக் கண்டேன்

வானிடையே பொன்னிழகு வார்த்ததெனப்  புன்சிரிப்பாய்
வந்து செலும் வெண்முகில்கள் மீது
தானிவளும் ஓடிவந்து தங்க நிலா மீதிருந்து
தமிழ்மகனே, கவிதை சொல்லு என்றாள்
தேனினித்த கனியிடையே தின்னும்சுவை நீயெடுத்து
தந்திடு நீ தமிழ்குழைத்து என்றாள்
மானெனவும் மலரெனவும் மங்கை தமிழானவள் வெண்
மதியிடையே நிழலென வென்றானாள்

நானிருந்து எழுதுகிறேன் நல்ல தமிழ் கோத்தெடுத்து
நூலில் மலர்மாலை யென்று சொல்லை
மீனெழுந்த வில்லெடுத்த வேங்கை கொடி மன்னர்களும்
மேவி வளர்த்தார் மூவண் தமிழை
நானெழுதி என்னசெய்ய நல்லதமிழ் செய்வர்முன்னே
நாவுழறி பாடுகின்றேன் தாயே
கூனெழுந்து குழிவிழுந்து கோலெடுக்கும் வயதினிலே
குறைஇருப்பின் குற்றம் மெனைக் காப்பாய்

புயல் அழித்தபின்!

( மன்னவன் )
புயலடித்த தேசம் இப்பூக்கள் வீழ்ந்துகாணும் - ஆ..
  கலங்கடித்த காயம் ஏன் காணுதிந்தநாடும்
மயிலெடுத்த பாதம் பொன்மலர் துடித்ததாயும் - ஓர்
    மழையடித்து ஓயும் அதில் மண் இழுத்து ஓடும்
ஒயிலெடுத்த சிலையும் தான் உடைய வென்றுவீழும் அது
   உயிரெடுத்தகனவும் பார் உண்மையற்றதாகும்
கையிலெடுத்த குழலில் ஏன் காணவில்லைஓசை - இனி
   எது எடுப்பதென்று நான் ஏங்குகிறேன் கூறாய்

( பாடகன் தோழன்)

தண்ணிலவு எழுந்ததுகாண் நிர்மலவானம் - இனி
 தரணியெங்கும் பொங்குமின்ப இன்னிசைகானம்
வெண்மலரைத் தூவி மகிழ்வெய்திடவேண்டும் இங்கு
  விளையாடிப் பூவழைந்து வேண்டிட இன்பம்
எண்ணமுதல் புயல்திரும்பி கடலிடை போகும் -இனி
  இளம்மனதாய் குதித்திட எம்தேசமும்மீளும்
திண்ணமுடன் கற்பனைகள தீந்தமிழ்கூறும் - அந்த
   திறமையினில் அமுதகவி தேர்ந்திடவேண்டும்

மன்னவனும் மனம்மயங்க புன்னகை செய்யும் சில
 மந்திரங்கள் கேட்குது நல் மாலைகள் தோளும்
பன்நெடுகக் காலடியில் போடுக பூவும் - அப்
  பனிமலரின் மென்மைபாதம்  கண்டிடவேண்டும்
உன்னதமாய் வானுறக்கம் கண்டது வேந்தே- இனி
  உள்ளதெல்லாம் இனிமை கொண்ட கற்கண்டுதேனே
மென்னரும்பு மலர்நிறைந்து தோன்றுது காட்சி -அல்ல
    மேக மிடை தாரகைகள் மின்னிடு மாட்சி

குறிஞ்சிமகள் கொய்தமலர்


இது ஒரு வித்தியாசமானது!
இங்கே உள்ளபாடலில் ஒருபெண் சமபந்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறதா?
இல்லையே!
ஒரு ஆடவன் மட்டும்தான் முழுக் கவிதையிலுமே உண்டு (முதலடி விலக்கு)
எப்படி? இரண்டு சிறு தட்டச்சு தவறுகள் ( வேண்டுமென்றே விட்ட பிழைகளைத் தவிர-!
( னி -நி ஆகவும் நீ - னீயாகவும்) மிகுதி பிரித்து வாசிப்பதில் உண்டு
விளக்கம் கீழே உண்டு.


         
 குறிஞ்சிமகள் கொய்தமலர் (பிழை)


மிஞ்சுமலை கூந்தல்எழில் கொண்டவள் அன்னநடையில்
கொஞ்சுமுகில் சென்று உறை குறிஞ்சி நிலத்தாள் வான்
பஞ்சுமுகில் கீழ்நிலத்தில் பன்மலர்கள்கொய்ய வெண்ணி
அஞ்சிநடந் தேகையிலே வந்தொருவன் மையெடுத்த

ஒளிவிழியும் பட்டுவிட உருவழியும் எனும்கொடுமை
யெழுகுணங் கொள்ளாதவனும் எப்படியோ கண்டுவிட
ஒழிவுமறை வற்றுவிட்ட உயர்மலர்கள் வனத்திடையே
அழகுமலர் கூட்டமிடை இதுவுமொரு மலரெனவே

கட்டழகுப் பூவை, எழில்கொண்டவளை பூங்கொடியை
தொட்டெடுத்த லின்றி திரும்பேன் எனத் துணிந்து
விட்டுமினிச் செல்லேன்ஆ வேண்டும் நீ என்றரற்றி
கிட்டே நெருங்கி ஆ கெட்டதே இக்கணம் மனமே

எட்டி யிருந்தவளைக் கொடியிடையில் தொட்டுவிட
விட்டகணம் பட்டதுவோ தொட்டதுவோ நானறியேன்
கெட்டு நிலைதான் தவறக் கொடிமலராய் துவண்டுவிழ
தொட்டெடுத்து மேனிசப்த மற்றவகை தூக்கிவிட்டு

நெட்டுயர்ந்த பூங்கொடியோ நிலகுலைந்துமவன் குலையா
எட்டித் தருவதிலே இணைத்து விட மலரிதழ் மேல்
தொட்டகையும் விலகவென சத்தமிட்டு திடுமெனவே
பட்டவிரலால் நொந்தோ பாதியிலே எழுந்தே நீ

விட்டுப்பிரிந்தோட   விலகியதோ மீண்டும்கை
எட்டுமோ இனியென்று எண்ணியிடை மனம்மாறி
தொட்டெடுக்க மீண்டும் துவண்டுவிழும் போஎன்றே
விட்டேன் பிழைத்தாய் எனச் சொல்லி வழிநடந்தான்

        




 விளக்கம்:

  குறிஞ்சிநில மன்னன் கொய்தமலர் (சரி)


1. /கொண்டவள் அன்னநடையில்/ - கொண்டவளன்ன நடையில்
கூந்தல் கொண்ட பெண்போல அழகாக வானில் நடந்தமுகில் என்று கொள்ளலாமா

2. /குறிஞ்சி நிலத்தாள் வான்/
குறிஞ்சி நிலத்தாள்வான் .- ஆளுபவன் (குறிஞ்சி நில மன்னன் என்று
கொள்ளலாமா?)

3. /வந்தொருவன் மையெடுத்த/ - வந்தொரு வன்மை யெடுத்த -
4. /குணம் கொள்ளாதவனும்/ -  குணம்கொள் ஆதவனும்
5. /எழில்கொண்டவளை பூங்கொடியை/ - எழில்கொண்ட வளை(ந்த)பூங்கொடியை
6. /எட்டி யிருந்தவளை கொடியிடையில் தொட்டுவிட/-
மீண்டும் அதேதான்  -பூ ஒன்றைப் பறிப்பதற்காக கொடியை வளைக்கின்றான்

தொட்டெடுத்து மேனி சப்த மற்றவகை -
இங்கேதான் தட்டச்சு தவறு னி - நி ஆகவேண்டும்
7. (தொட்டெடுத்துமே  நிசப்த மற்றவகை)

8. எட்டித் ’தரு’வதிலே - எட்டி மரத்தின்மேல் கொடியைமீண்டும் இணைத்து
பாதியிலே எழுந்தே நீ - இங்கேயும் நீ - னீ யாக வேண்டும்
(மதுவுண்ட பாதியிலே எழுந் தேனீ)

9. இங்கே மன்னன் அஞ்சிநடந்தான் -இருக்கமுடியாது ஆனால் இருக்கலாம்
ஒளிவிழியும் பட்டுவிட உருவழியும்  (மலர்கள்)


10. அவ்வளவுதான்  மீண்டும் ஒருமுறை.....பாருங்கள்
மன்னனும் மலரும்தான் -பெண்ணிங்கு இல்லை

பாலைவனம் சோலை யாகுமா?

ஆண்டவரே  எமை மீட்கவென - பல
ஆண்டுகள் முன் பிறந்தீர்
வேண்டிநின்றோர் தம் பாவங்களை - உங்கள்
இரத்ததினால் துடைத்தீர்
மாண்டு அழும் இந்த ஏழைகளை - நீர்
மறுபடி காக்கவென
மீண்டும் பிறந்திந்தப் பூமியிலே எமை
மீட்டிட வாரீரோ

ஆண்டுபல பெரும் மேடுபள்ளம் - என
அலைந்தே நிலையழிந்தோம்
வேண்டுமென நல்வாழ்வையெண்ணி - விடி
வெள்ளியின் திசைநடந்தோம்
மீண்டுமொரு நல்வாழ்வு இதோ - எனும்
வேளையிற் பலமிழந்தோம்
நீண்டு செல்லும் இத்துன்பங்களை - நீர்
நிறுத்திட வாரீரோ

தேடுகிறோம் பசும்புல்வெளிகள் - எம்
தேவையை நீர் உணர்வீர்
வாடுகிறோம் வலிதானிழந்தோம்   எம்
வாசலில் பேயினங்கள்
நாடிழந்தோம் நம் இனமிழந்தோம் - நாம்
இருப்பது இருட்டறையில்
தேடுகிறோம் ஒளிவாழ்வுபெற - அருள்
தேவனே மீட்பீரோ

எத்தனை சிலுவைகள் சுமந்துவிட்டோம் - எம்
பாவங்கள் தீரவில்லை
எத்தனை கடல்களும் கடந்துவந்தோம் - எம்
தாகங்கள் தீரவில்லை
எத்தனை மலைகளும் ஏறிவந்தோம் - எம்
பாதங்கள் நோவெழுந்தே
எத்துணை வலிதனை பட்டுவிட்டோம் - எமைக்
காத்திட  வாரீரோ

பாலகனே உமை வேண்டுகிறோம் - எம்
பாவங்கள் நீக்கிவிடும்
காலமெலாம் நாம் கண்ட துயர் - உங்கள்
கருணையினால் செழிக்கும்,
மேலலுகின் அருள்தேவமைந்தா - நாம்
மீண்டும் பிறப்பவராய்
ஞாலமதில் நல் வாழ்வுபெற - எமை
ஆ..சீர்வதித் தருளும்

சிலுவையி னின்று மறுபடியும் - நீர்
ஜீவனம் பெற்றிருந்தீர்
வலுவிழந்தோம் இனி உயிர்த்துஎழ - நல்
வார்த்தையைக் கூறிவிடும்
மேலுகில் அந்த மூவுலகில்   -ஒளி
ஞானமுடன் திகழ்வீர்
பாலைவனம் போல் எங்கள் நிலம் - பசுஞ்
சோலை யென்றாக்கிடுவீர்

Wednesday, April 11, 2012

நானா? கவிதையா? யார் சொன்னது?

       


மலையும் கதிரும் மதியும் மரமும்
மாபெருங் கோபுரமும்
அலையுங் கடலும் அதன்மேல் முகிலும்
அருவி ,சுனையாவும்
நிலையில் பெரிதாம் உலகம் என்னும்
நிலையற் றுருள்பந்து
அலையும் அண்டம் செய்தால் அவளே
அனைத்தும் பெரிதாவாள்

கலையும் கவிதைச் சுகமும் பொருளும்
காணும் கற்பனையும்
அலையும் மனதில் அகமும் நினைவும்
ஆக்கும் அவளேதான்
தலையும் உடலும் தந்தாள் சக்தி
தமிழை தானீந்து
இலையென் றோனிவ் வறிவிற் கிளையோன்
இவனைச் சொல்லென்றாள்

கவிதை எதுவும் எனதே யல்ல
கருணை விழிகொண்டாள்
புவியைக் கொண்டாள் புனலைச் செய்தாள்
பூகம்பம்செய்வாள்
அவிழும் பூவும் அனலும் காற்றும்
அழகும் செய்பவளே
குவியும் வார்த்தைக் கோலம் இட்டாள்
கேள்விப் பதிலாவள்

நானும் பொய்யே நாளும் பொய்யே
நாடும் நானிலமும்
வானும் முகிலும் வண்ணங் கொண்டே
விடியும் அடிவானும்
தானும் சிவந்தே எழுமோர்கதிரும்
தண்ணொளி நிலவோடு
ஊனும் உயிரும் பொய்யே இதிலே
இவனாம், என்செய்வேன்?


தாயே சக்தி தமிழைத் தந்தாய்
தானே பதிலாவாய்
வாயிற் குரலும் வார்த்தைப் பொருளும்
வரையும் ஓவியமும்
கோயிற் சிலையும் குலவும் மழலை
குழந்தை மனம்யாவும்
நீயே தந்தாய் அன்னை இங்கே
நீயே பதிலாவாய்

Sunday, April 8, 2012

வாழ்வோடு....!


மானோடும் மயிலாடும் மரத்தோடு பூ ஆடும்
தானோடும் பூங்காற்று தண்ணீரில் அலையோடும்
வானொடும் முகிலோடும் வழிபார்த்து நதியோடும்
ஏனோடும் புவிதானும் இரவோடும் பகலோடும்

தேனோடும் பூவோடும் தினங்காணும் ஒளியோடும்
தானோடி நாளோடும் தகித்தவெயில் மேற்கோடும்
வானோடி மலையோடி வரம்போடும் வயலோடி
இனியோடல் போதுமென இலங்குகதிர் கடலாடும்

பணமோடிப் பெரிதாகிக் குணமோடிப் பொலியாமல்
மனமோடிச் சிதைகின்ற மகிழ்வோடிப் போம்வாழ்வில்
கனவோடும் காண்வாழ்வு கண்முன்னே ஓடவென
வினைகூட்டிச் செயலாக்க விளையாமல் ஓடுவதோ

சினமோடிச் சிந்தைகொள் கனமோடிக் களிகூட
மனமோடி மகிழ்வெய்த ஒருகோடி ஓடாமல்
வினைகூடிச் செய்விதியை விட்டோடச்செய்தேநீ   
உனைகூடும் நிம்மதியை ஓடிபோய் ஏற்காயோ?

இரவோடும் இருளோடும் படகோடும் கடலோடும்
கரையோடி மீளவென கரம்ஓடம் வலித்தோட்டும்
திரையோடும் திக்கதென தெரியாதே இருள்மூடும்
கரையோடு சுழன்றுதிசை காட்டுமொளி பெரிதாகும்

எதுகூடிச் செய்குவதோ அதுகூடிச் செயலற்றா
மதுகூடிப் பெருகுதென மனங்கூடி நிற்பவரை
இதுகோடிபெறுமெனவே மொழிகூட்டிச் செவியோதி
அதுபோலும் சுழல்விளக்கம் ஆகிவழி காட்டுவதால்

பனிமூடும் புகைமூடும் படர்காற்று அதை ஊதும்
கனிமூடும் இலையாடும் காற்றான ததைஊதும்
தனிமேகம் மதிமூட அதைமீண்டும் காற்றூதும்
மனமோகம் தனைஊத மகிழ்வுநிலா ஒளிராதோ!

.........................

போருக்கு வந்த புயல்

   
வெட்டியடிமின்னல் தட்டுமிடி சுற்றி
 வீழும் மழைத்துளிகள் -உயர்
வட்டமுகில் விண்ணைத் தொட்டுங் கருமுகம்
   விந்தை மகிழ்ச்சி இல்லை
எட்டுத் திக்கும்நிறை முற்றும் பெருமழை
  கொட்டிக் குளம்நிரப்ப - புயல்
பட்டிதொட்டிஎங்கும் பட்டப் பகல்வந்து
    பாடு  படுத்துதப்பா

மேகம்கறுத்தொரு கோபமுடன் ஒரு
  மூடர்படை நடத்தி -பெரு
மோகமெடுத் திந்த பூமியுடன் போரை
  மூள விளைக்குதப்பா
வேகமெடுத்து நல் கூரைகள் பிய்த்திங்கு
 வீசி யெறியு தப்பா - எமை
நோக எதிர்த்துடல் தள்ளிப்பலங்கண்டு
  நேரே பகைக்குதப்பா

கொட்டுது பேய்மழை கூச்சலிட்டுக் குடை
  கொண்டவர் கைபறித்து -  அதை
எட்ட எறியுது ஈர மழை பற்றி
   எத்தியும் ஓடுதப்பா
பட்டு மரங்களில் கொப்புடைத்தே யதை
   பாதையில் போடுதப்பா - பெரு
நட்டம் விளைத்தொரு குட்டிச்சுவரென
   நாட்டினை ஆக்குதப்பா

கட்டுடைத்து வெள்ளம் கூட்டிவந்து வீடு
   கொண்ட பொருள் சிதைத்து - கதிர்
வெட்டி யெடுத்திட விட்டநெல்லுவயல்
  வேண்டுமென்றே அழித்து
மட்டமென எமை தட்டிச் சிரித்திட
 மன்னித்து விட்டிடவோ - ஒரு
சட்டமிட்டு இதன் செய்கைதனை எவர்
  சற்றுக் குறைத்திடுவார் -

தொட்டு இழுக்குது கெட்டபுயல் சேரத்
 திட்டுது பேய்முழக்கம் - அதில்
வெட்டும் மின்னல் பயங்கொள்ள வைத்து மன
  வீரம் தனையழித்து
கொட்டுமழை கொண்டு கூதலிட்டு உடல்
  கூனிக் குறுக வைத்து - அட
நெட்ட நெடுவழிப் பாதையிலே எனை
  நிற்க விழுத்துதப்பா

கர்ஜனையோ கவிமேற் பிழையோ இது
காலத்தின் கோலமதோ - என்ன
அர்ச்சனையோ அட ஆவேசமோ எந்தன்
  ஆவி பறித்திடவோ
ஊர்ச்சனமோ எங்கோ உள்ளேஒதுங்கிட
  உள்ளத் துறுதியுடன் - நானும்
நேர்ச்செல்லென இங்கு நின்றதனாலெனை
    நேரப்பழி கொள்ளுதோ

இடி, மின்னல் , மழை!

தடதட வான் இடியெழுஞ் சத்தம்
.   தலையினில் விழுதென அச்சம்
கிடகிட வென முழவுகள் தட்டும்
.  கேளொலி நடுங்கிட வைக்கும்
படபட மழை கூரையில் தட்டும்
.  பழகிய இசைதனைக் கொட்டும்
மடமட மரம் முறிகிற சத்தம்
.   மரம்விழக் குருவிகள் கத்தும்

கடகட வென விருகரம் கொட்டும்
.  கதவுடை சாளரம் தட்டும்
விடுஎனப் புகுவளி தரு முத்தம்
.  வெறுப்புடை பதி தொடுங் கூச்சம்
கொடுமையின் பரிசெனத் தரை தட்டும்
.  குவலயம் புயலிடை சிக்கும்
கடும்பயம் உளம்தனை முழு தள்ளும்
.     கதியுடன் இருதயம் துள்ளும்

முடையுடை குடி மகனழத் திட்டும்
.  முதலுடை யவனிடி மின்னல்
தடையிடப் பெருகிடும் மழை வெள்ளம்
.   தமிழ்நிலம் கொளுமர சொக்கும்
விடைகொடு வாவென விண் கேட்கும்
.   விளை புயல்ஊ எனக் கத்தும்
படையுடை பகை அரசனின் யுத்தம்
.    பவனியில் பலியிடும் சத்தம்,


தருவது பெரும் பிரளயம் போலும்
.  தருமம்கொள் பழிதனும் சூழும்
வருவது எதுவெனில் இலைஅச்சம்
.  வான்புவி தனுமிலை மிச்சம்
பெருகுது புவியினில் புகுவெள்ளம்
.  பிரி நிலம் காலிடை எனினும்
கருகலில் விடிவெழ உயிர் சத்தம்
..  காணுமோ விடப் பெரிதென்னும்.
*****************

Friday, April 6, 2012

தாயின் மடியில் தவழும் பெண்ணே!

   

வெண்மதி உலவும் வானெழிலோ - ஒரு
வீணையின் இன்னிசை தானோ
தண்பொழி லாடுந் தாமரையோ - நீ
தரும்மொழி இனிதாம் தேனோ
பெண்ணெனப் பாரினில் வந்தவளே - நீ
பிறை வளர் முழுமதி யாமோ
விண்வெளி வானிடை இருந்தாளும் - அவள்
வீரசக்தி யவள்கூறோ?

பண்ணிசைபோல் நீயழுதாலும் - அதில்
படுவது மனமது துயரே !
கண்களில் நீர்துளி எழுந்தாலும் - உளம்
காணுது இன்னலும் கனியே
நுண்மதி மீதினில் இருந்தாளும் - என்
நெஞ்சமதின் உயிர் நீயே
புண்ணென உள்ளமும் நோகுதடி - விழி
பொழிவது நீரெனில் மானே !

கண்மணி கறுத்தே இருந்தாலும் - அது
காண்பது ஒளியின் பிம்பம்
மண்கறுத் தே சேறானாலும் - அதில்
மலர்வது எழில்சேர் கமலம்
விண்நில விற்குறை தேய்ந்தாலும் - அது
வீசிடும் ஒளியைச்  சிதறும்
பெண்ணவளே நீ கண்ணுறங்கு - ஊர்
பேசிடும் உன்புகழ் நாளும்

வெண்பருத் தி முகம் அழுதாலே - அதில்
விளைவது செந்நிற வானம்
கண்விழித்தே யரு கிருந்தாலும் - உளம்
காப்பதிலே சுகங் காணும்
செண்பகப் பூவென மணங்காணும் -  உன்
சிரிப்பினில் கவலைகள் ஓடும்
தண்ணிலவே நீதரை வந்தாய் - என்
துயர்களுந் தொலைவென ஆகும்

எண்கழித்தே பின் வகுத்தாலும் - எம்
இருவரின் உயிர்களும் ஒன்றே
மண்செழித்தே வளர் பயிர்போலும் - தினம்
மளமள என வளர் கண்ணே
கண்வழிந்தே நீர் சொரிந்தாலும் - அது
களிப்பினின் எனும் நிலையொன்றே
வண்ணமயில் எனும் வடிவழகே - தனி
வசந்தமென் றாகட்டும் வாழ்வே

தண்ணெழில் சோலையுள் நடந்தாலும் -அது
தருஞ்சுகம் உனைவிடப் பெரிதோ
பெண்ணவள் நாணிடுங் குணந்தானும் - பெறும்
பேரெழில் இனி வருமன்றோ
வெண்மணல் ஆழியின் கரைமீது - தினம்
வீழ்ந்திடும் அலைகளைப் போன்று
எண்ணம் மகிழ்ந்திடு என்மகளே - உனை
ஒருநாள் போற்றிடும் உலகு!

Tuesday, April 3, 2012

தினம் சக்தி வேண்டி


சுத்த சக்தி வித்து முன்றன்
சித்தமுள் விதைத்திடில்
சித்தி காணும் நீயெழுந்து
செல்லுமெந்த பாதையும்
இத்தரை தனில் எடுத்துன்
ஈர்கரங்கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும்
ஏதுபங்க மில்லையாம்

சத்தியத்தின் தேவதைக்குச்
சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி
நிச்ச யித்த தாகிடும்
வைத்துள் அன்பு வார்த்தை கூறு
வாழ்வி லேற்றம் கண்டிட
வித்தை யாம்செ யல்திறன்கள்
வெற்றி வாகை சூடுமே

அண்டசரா  சரங்கள்கட்டி
ஆளு மந்தச் சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற
மாசிலா வெண் ஜோதியை
கொண்டிருத்தி நின்னகத்தே
கொள்ள இன்பம் ஒன்றதே
கண்டிருக்கும் வாழ்வுஎன்றும்
காலகால மாகவே

சுற்றி யோடும் எத்திசைக்கும்
செல்லு மிந்த பூமியைப்
பற்றி ஓர்விசைக்குள் வைத்துப்
பார்ப்ப திந்தச் சக்தியாம்
வெற்றி யாகும் உள்ளிரத்தம்
வீறு கொண்டு சுற்றிட
உற்றதான சக்திவேண்டி
உள்மனத்தில் எண்ணிடில்

நித்த மும்நல் சக்தி யேற்றி
நாளும் மின்கலத் தினை
வைத்தி யங்கச் செய்வ தாக
வாழு மிந்த தேகமும்
புத்தொளி கிழக் கெழுந்த
போது நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்
சக்தி யென்று கேட்டிடு

முன்னை யுன்றன் அன்னை பெற்ற
அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கும்
அன்னை அன்னை யர்க்கொரு
தன்நிகர்த்த லேதுமற்ற
தாயும் சக்தி தந்திடேல்
என்னதான் நடக்கும் வையம்
ஏதுன் கண்கள் காணுமோ?

Monday, April 2, 2012

பொன்னுலகம்


கண்டதும் விண்டதும் கண்டவர் கொண்டதும்
ஒன்றும் புரியவில்லை - இந்த
அண்டமும் பேரிடி மண்டலம் கண்டிடும்
ஆழ இருண்ட நிலை
கொண்டது நஞ்சதும் துண்டது இரண்டெனக்
கொன்றவன் எங்கள் பகை - இதில்
சண்டையும் நன்மையை தந்திடுமென்றிட
சாய்ந்து விழுந்த நிலை

தண்டமும் தந்தனர் கண்டமோ சாத்திரம்
தப்ப வழி சொல்லலை - உள
நொண்டியர் எம்மினம் முற்று மழிப்பதே
நாட்டில் வகுத்த கொள்கை
வண்டதும் ஓடியும் செண்டில் மதுவினை
கண்டதும் வந்தமரும் -அது
உண்டெனநல் வளம் பங்கிடவந்தன
ஓடிப் பன் நாடுகளும்

பெண்டிரும் பிள்ளையும் இரண்டு திசையினில்
சென்றவர் மீளவில்லை - இதைத்
தண்டனை தந்திடும் சட்டம் கண்கள் கொண்டும்
தாமதைக் காண்பதில்லை
தண்டமும் குற்றமும் தந்திடும் நாடுகள்
தம்மை நினைப்பதில்லை   -  அவை                      
கண்டதும், வந்ததும் எங்கள் நிலைகொண்டு
கண்ணை விழிப்பதில்லை

பண்டைதினம் முதல் கொண்டஎம்மண்ணிலே
கண்டவன் வந்திருக்க -  அட
நண்டென நம்மையே நாமே இழுத்திட
நாடு அழிந்து விட
குண்டரும் காடையர் கொன்றிடக் கைகளும்
கட்டியும் சுட்டொழிக்க அட
இந்த உலகமும் கொண்டாடுதாம் ஆகா,
இன்ப உலகிதென்று .

(மனித உரிமைகள் தின கொண்டாட்டம் நடைப்பெற்ற நாளில் எழுதியது)