Sunday, July 24, 2011

எங்கள் தாய்த் திருநாடு - ஈழம் (சிறுவர் பாடல்)


ஈழத் தமிழ் திருநாடு -அது
எங்கள் அழகிய தாய்திருநாடு
வானிற் பறந்தங்கு சென்றேன் -நானும்
ஆகா என்னவொரு அற்புதம்கண்டேன்

மாமாவின் வீ டதன்பக்கம் -பல
மாமரம் உண்டு மரக்கிளை தன்னில்
தாவும் குரங்குகள் போலே - தொற்றித்
தூங்கிக் கிளைமீது துள்ளிக் களித்தோம்
தென்னை இளங்காய் பறித்து - நல்ல
தேனில் இனியிள நீரும் குடித்தோம்
புன்னைமர நிழல்மீது - கூடிப்
போயிருந்தே பலபாடல் படித்தோம்

வாழைமரம் பலஉண்டு – அதில்
வந்தகுலைதனில் தேன்கனி உண்டோம்
ஆழக் கிணறதன் பக்கம் – சென்று
அள்ளித் தண்ணிரூற்றி ஆனந்தமானோம்
கோழி அடைத்த தோர்கூடு -அதில்
குஞ்சு பத்துப்பலஉண்டெனக் கண்டேன்
பொத்திப் பிடிக்கவோர் குஞ்சை -கோழி
கொத்தவர அதை விட்டோடிப் போனேன்

மாட்டு வண்டிதனில் ஏறி - எங்கள்
மாரியம்மன் கோவில் பொங்கிப் படைத்தோம்
மேட்டுவழி கல்லுவீதி -அதன்
மீது கடகட என்று குதித்து
ஆடிக் குலுக்கியே ஓடும் - வண்டி
அத்தனை பேரும்  குலுக்கிச் சிரித்தோம்
சுட்ட வடையுடன் பொங்கல் செய்து
வைத்து வணங்கிப்பின் உண்டு களித்தோம்

வேலி முளைத்த கொடியில் -காலை
வேளை குண்டுமணி தேடி எடுத்தோம்
வாயில் நெல்லிக்கனி வைத்து உண்ண
வந்த கசப்பினை நீருண் டினித்தோம்
போலி நாத சுரம் செய்து இலை
பூவரசு கொண்டு பீப்பிஎன் றூதி
நாலோ ஐந்து குரும்பட்டி - கொண்டு
நல்லொரு தேரும் செய்து இழுத்தோம்

பச்சை வயல்காடு சென்றோம் – அங்கு
பார்த்து விளைந்த கதிரினைத் தொட்டோம்
இச்சை யுடன் வரம்பேறி - அதில்
ஏறி விழுந்துடை நீரில் நனைத்தோம்
’சோ’ என்றடித்திடும் காற்றும் அங்கு
சுற்றி பறந்தன பட்சிகள்யாவும்
முச்சந்திப் பிள்ளையார் கோவில் - கண்டு
முன்னே நின்றுபோடத் தோப்புக்கரணம்

டண் என்றொலித்தது கோவில்-மணி
தானும் இடியென எண்ணிக் கலங்கி
விண்ணில் பறந்தனபட்சி - அவை
வட்டமடித்துப்பின் வந்த நற்காட்சி
எண்ணற்ற மாடுகள் கூட்டம் -அவை
எங்களை போல் அம்மா என்றிடக் கத்தும்
அண்மையிலே ஒரு நாயும் - அதை
அச்சம்கொண்டும் துரத்திப் பின்ஓடும்

தாமரைப் பொய்கையும் கண்டோம்- குளிர்
தண்ணீரில் நீந்தி மலர் கொய்துகொண்டோம்
போரடித்தே வைத்த வைக்கோல் -அதன்
மேலேபடுத்து நம்மேனி கடித்தோம்
ஆயிரம் இன்பங்கள் உண்டு -அவை
அத்தனையும் எங்கள் தாய்திருநாடு
பாவி எதிரிபுகுந்தான் - எப்போ
ஈழம் அமைத்துநாம் எம்வளம் மீட்போம்?

No comments:

Post a Comment