Saturday, May 28, 2011

ஈழமண்ணில் ஒரு விடியல்..?

(பெரிய கவிதை. நேரம் ஒதுக்கி அமைதியாக பாருங்கள் நன்றி!)

பனி படர்ந்து புல்வெளியில்பரவி எழில்கொல்ல
பசுமைகொண்ட இலையழுது பலதுளி நீர்சிந்த
சினமெழுந்து கதிர்பனியைச் சுட்டழித்து வெல்ல
சிறகடித்துப் பறவையினம் சேதிசொல்லும் காலை
கனிசுவைக்க மாமரத்தை கிளி பறந்து சேரும்
கலகலத்த இலைமறைவில் கனிகிடந்து நாணும்
இனிபழத்தின் முகம்சிவக்க இளங்கிளியோ உண்ணும்
ஈழமண்ணின் இயற்கையான இனியதொருகாலை!

வனமதிலே கள்நிறைந்து வாசமிடும் பூக்கள்
வந்துமலர் கொஞ்சியெழும் வான்பறக்கும்பூச்சி
இனம்மகிழச் சுதந்திரத்தை எண்ணும் ஈழமாந்தர்
ஏழைகளின் கனவுபோல என்றும் அதைத் தேட
குனியும்நடை கொள்கவிகள் கொப்புதனில் தாவி
குழைஉதிரக் கலகமிடக் காணுமிளங் குயிலும்
தனியிருந்து ஒருகிளையில் துயரெழுந்து கூவ
தவழுமிளங் காற்றொலியைத் தானெடுத்து ஓடும்

எதிர்நிமிர்ந்த பெருமலையோ இசைக்குரலைக்காற்றின்
இடமிருந்து எடுத்தெறிய எதிரொலிக்கக் குயிலோ
மதிமயங்கி துணையை எண்ண,, மறையு மிருள்கண்டு
மனமகிழ்வில் கதிரவனும் அனல்பெருத்து மூளும்
நதிநடந்த விதம் நெளிந்து நெடுங்கிடந்தபாதை
நடைபயணம் கொள்ளவுமென் நேரெதிரே முன்னே
விதிசினந்த சிறுவர்சிலர் வேதனையில் கூடி
விரிஉலகம் நிறைதமிழில் மொழியுரைத்தல் கேட்டேன்

கருமைநிறம், மேனிகளில் கசங்கியதோர் உடையும்
காய்ந் துலர்ந்த உதரமிடை கடும்பசியின் சுவடும்
இருவிழிநீர் வழிந்தவைகாண் இருமருங்கும் காய
எழுந்த துயர் பூமுகங்கள் எரித்த நிலை கண்டேன்
சரிகுழலும் வாரிவிடச் சற்றும் மனம் எண்ணா
சிறுமிகளும் தேகமது செழுமை பெருந்தீமை
தருமெனவே அஞ்சினரோ தனதெழிலை நினையா
தரைவிழுந்த புழுதிபட்ட  தோர்மலராய் கண்டார்

அவர்களுடன் பலசிறுவர் அணியிருந்துபேசி
அதிசினந்து கொதியெழவும் ஆற் றொருவர் இன்றி
பவள இதழ் பனிபடர்ந்து பதைபதைத்துக் கூறும்
பலகுரலும் கேட்டு ஒரு பக்கம்நின்று பார்த்தேன்
தவளுமிளந் தமிழ்மொழியின் தடமழிக்கஎண்ணி
தவறிழைத்து இனமழிக்கும் தரணியிலே இவர்கள்
எவர் விளைத்த தவறுஇதோ ஏதிலியாய் நின்று
ஏங்கியழக் காரணம் மென்? இவ்வுலகே யன்றோ!

சிறுவர்தமை சேர்த்துப்பெரும் போரெடுத்தீர் என்று
செந்தமிழர் படையிற்குறை சொன்னவர்கள் இன்று
சிறுவருடன் மழலையரும் சிறுமியரும் கொன்று
சொல்லரிய தொகையினரைச் சிறையிலிடச் செய்தார்
உருவம்மாறி அங்கமின்றி உள்ளதெலாம்நொந்து
உயிர் பிழைக்க ஏதும்வழி இல்லைஎன்று கூறும்
சிறுமைதனை இவ்வுலகே சேர்ந்தளித்தகோலம்
சேர்ந்திவர்கள் செய்தகுற்றம் யார்கணக்கில் போகும்

(ஒரு சிறுமி)
அம்மா என்னைப் பெற்றவளே நீ அருகில்வாராயோ
அள்ளிகட்டிக் கொஞ்சிப்பேசு அன்பைத் தாராயோ
செம்மாதுளையின் முத்தே என்றே என்னைக் கூறாயோ
செந்தேன் தமிழில் சொல்லில் இனிமை சேரப் பேசாயோ
எம் மாபெரிதோர் துன்பம் கொண்டேன் இழிமை செய்தாரே
இருகண்வழியும் பெருநீரோடும் இமைகள் தழுவாயோ
வெம்மை கொண்டே இதயம்வேக விம்மிக் கேட்கின்றேன்
விடியும் வாழ்வோ விரைவில் என்றாய் விட்டேன்சென்றாயோ

மாவில் தூங்கும்கிளியைப்போலுன் மடியில்கிடந்தேனே
மலரைத்தூவி தலையிற் சூட்டி மகிழ்வைத் தந்தாயே
பாவி எங்கள் வாழ்வில்வந்தே பலியைக் கொண்டானே
பார்க்கக் கண்முன் பட்டப் பகலில் சுட்டுக் கொன்றானே
கூவி கேட்டும் தெய்வம்வாழும் கோவில் கும்பிட்டும்
கொன்றார் உயிரைக் கொல்லும் செயலில்குறைவே எழவில்லை
ஆவி உடலை விட்டுப் பதறி அலறிச் சாவென்று
அகிலம் கொண்ட அமைதிதானும் அதிலும் குறைவில்லை

(மற்றவள்)
படையும் அரசும்அழிப்பார் எம்மை பாவம் என்செய்தோம்
பகலில் இரவில் கடையில் தெருவில் பள்ளிக்கூடத்தில்
நடையாய் நடந்தே நம்மைகொன்று நாட்டைச் சிதைக்கின்றார்
நாங்களேதும் கேட்டால் உலகோ நம்மைப் பிழைஎன்றார்
தடைகள் போட்டுச் சாலை, தெருவில் தனியேபோய்விட்டால்
தலையேஇன்றி வெட்டிதுண்டாய் தரையுள் புதைக்கின்றார்
இடையே காக்கஇளைஞர் எழுந்தே எம்மைக் காத்திட்டால்
எல்லாஉலகும் ஒன்றாய் கூடி எரிகுண்டெறிகின்றார்

(சிறுவன்)
புகையும் தீயாய் எரியும் ஊரை பேசும் மொழியறியா
பிறிதோர் இனமே செய்தாரிங்கு, போனோமா நாமும்?
பகைவர்தம்மின் ஊரும் சென்றே படுத்தோர் தலைவெட்டி
பாதிஇரவில் வீட்டில் தீயைப் பற்றச் செய்தோமா?
நகைகள் திருடி நடுவீட்டினிலே நாக்குத்தொங்கத்தான்
நாமும் சிறியோர் பெற்றோர் தூக்கி நாசம்செய்தோமா?
வகைகள் தொகையும் காணாஅழிவை வாழ்வில் செய்கின்றார்
வையம்கண்டும் தொன்மைத்தமிழை வாரிப்புதை என்றார்

(இன்னொருவன்)
நாடும் உலகும் எதிராய் நின்றால் நல்லோர் என்செய்வார்
நாளும் சாகும் நம்மை காப்பாய் நாடே என்றோடி
ஆடும் வரையும் ஆடிக்கத்தி அலறித் தெருவோடி
அடர்ந்தகாடு அலைகொள்கடலும் அருகே நின்றாலும்
ஓடும் ஒழிவும் பயனோ நிலவுக்கொழித்தே பரதேசம்
நாடிச்சென்றால் விடுமோ அதுபோல் நம்மைக் கொன்றானே
வீடுமின்றி வெல்லும் திடமும் வெற்றிக் களிப்பின்றி
வீரிட்டலறி மயங்கும்வாழ்வே விதியாய் போயாச்சே !

(மற்றுமொருவன்)
ஆண்ட இனமோ மீண்டும் ஆள அடிமுன் வைத்தாலே
ஆழக் குழியைவெட்டும் உலகோ அறத்தின் எதிராமே
மீண்டும்இவரோ விட்டோர் பிழையை மீளச் செய்கின்றார்
மெல்ல பேசி உண்மைவிட்டு மிருகத்தைக் கூட்டி
நீண்டதாளில் நீதிக்கதைகள் நெடிதே எழுதித்தான்
நெஞ்சம் ஆற நெளிந்துவளையும் நீசப் பாம்பானார்
ஆண்ட இனமோ அழியும்வேகம் அடிக்கும் புயலென்றால்
அணைக்கும் உலகக் கரங்கள் ஆமையானால் பிழைப்போமா

(முதல் சிறுமி)
வேண்டாம் நம்பி விதியென் றெண்னி வீணேபோகாமல்
விரைந்து எழுவோம் வீரம்கொள்வோம் விடிவைக்காண்போமே
கூண்டில் ஏற்றிக் குற்றம் புரிந்தோர் கொள்ளும் நிலைகாண
கொள்கை கொண்டு நாமும்கூடிக் குரலைத் தருவோமே !
ஆண்ட இனமும் ஆளக்கேட்டால் அண்ணாந்தே பார்த்து
ஆளைஏய்க்கும் உலகில் நாமும் அறத்தைக் கேட்போமே
மீண்டும் எழுந்தோர் அரசு தொலைவில் மீட்கப் புறப்பட்டார்
மெல்லத் தெரியும் விடிவை விரைவில்கொள்ள புதிதாவோம்

(எல்லோரும் சேர்ந்து)

வெல்லட்டும்தமிழ்தேசம்! விளையட்டும் புதுவாழ்வு !!
செல்லட்டும் பெருங்கொடுமை! சிதறட்டும் பகைஆட்சி!!
கொல்லட்டும் துயர்,துன்பம்! கொள்ளட்டும் மனமின்பம் !!
தொல்தொட்டும் எம்பூமி திரும்பட்டும் எம்கையில்!!
சொல்லட்டும் புவி வாழ்த்து! சுதந்திரமே எம்மூச்சு!!
நில் தொட்டு நெஞ்சுறுதி நீகொண்டுஎழு வெல்வோம்

Wednesday, May 25, 2011

விரைந்து வாருங்கள்


விடைகொடுத்த மைந்தர்களே வெளியில் வாருங்கள்- நீங்கள்
விதைத்தமுளை வளரவிட்டோம் விரைந்து பாருங்கள்
தடை கொடுத்த விதியழித்தோம், தலையின் பாரங்கள் - இந்த
தரணிமீது இறக்கிவைக்கும் தருணம் பாருங்கள்
கடைஇழிந்த சிங்கமகன் கதியைப் பாருங்கள் - இனிக்
காண்பர் அவர் கைவிலங்கு கட்டிப் போடுங்கள்
படை இழைத்த துன்பம் இனிப் போகும் பாருங்கள் -எங்கள்
படகுதமிழ் ஈழம் செல்லும் பயணம் பாருங்கள்

நாளை எங்கள் விடிவுதேடி நடந்து செல்கிறோம்- ஒரு
நாடு காணத் துன்பங்களைக் கடந்து செல்கின்றோம்
வேளைஒன்று விடியுமென்று விரைந்து போகிறோம் - எங்கள்
வேதனையை தோள்சுமந்து விம்மி அழுகிறோம்
காளைகளே நெஞ்சில்உரம் கொண்ட மைந்தரே - பக்கம்
காணும் தீரக் கனல் எறித்த காரிகை களே
வாழவேண்டி வாழ்வையீந்த வண்ணப் பூக்கள்நீர்- இனி
வாசம் வீச விடியல்நேரம் வந்து சேருங்கள்

காடு காணும் நாலுகாலில் கொல்விலங்குகள்-  கூடக்
கண்ணியத்தைக் கையில் கொள்ளும் கயவராமிவர்
கேடுசெய்து பெண்மை, பிள்ளை கொன்றுவீசிய -அந்த
கீழ் நிலைத்த கேவலத்தைக் கேட்கும்காலமே
வீடு,மக்கள், வீதி,சந்தை வீழ்த்திக் குண்டினைக் - கெட்ட
விசமெடுத்த வகைகருக்கி வேகவிட்டனர்
ஆடை நீக்கி அவர் உதைத்து ஆனந்தித் ததும் - நாமும்
ஆணையிட்டு நீதிகேட்க அணி திரள்கிறோம்

ஆடு,மாடு,கோழி கூட மிச்சமில்லையே-  ஒரு
ஆலகாலநஞ்சை வீசி யாவும் கொன்றவர்
கோடுபோட்டு நோயைத் தீர்க்கும் கோவில்போன்றவை- கூட
குற்றம் செய்யும் கயவர்கண்ணில் கொலையின்பீடமே
கேடுசெய்த தீயஅரசு கொன்றபூமியில் புத்த
கோபுரங்கள் போட அத்திவாரமிட்டது
தேடுவோர்க்குதெய்வம் ஈயும், கேடு கேட்டவர் தம்மை
கேள்வி கேட்டுக் கேடுஈந்து கீழ் உதைத்திடும்

ஏவிவிட்ட பேய்கள் எங்கள் இனமழிக்கவே என்றும்
ஏழையாக நாமிருந்து ஏங்குவதாமோ?
கேவி அழும் நேரம் இனி கெட்டவர்பக்கம்- தீர்வு
கிட்டவரும், காலமினி எங்களின் பக்கம்
சாவு எங்கள் சொந்தமென்று ஆகியதெல்லாம் மாறி
சரித்தி ரத்தை எழுதுகைகள் நிறத்தை மாற்றிடும்
நீவிர் மீண்டும்பிறந்து மண்ணில் பூத்திட வேண்டும் இன்னல்
நீங்கி மீண்டும் ஈழம் தேசம் புதிதென ஆகும்

Monday, May 23, 2011

சத்தியத்தீ எழும்!


    சத்தியத்தீ ஒன்று எழும்

நெஞ்சங்கனலாய் நினைவுகள் தீயாக
செந்தணல் பூத்தது தேசம் -ஒரு
கொஞ்சம் இழந்தோமா கொட்டிக்கொடுத்துமே
கூட்டிஅள்ளி உடல் எரித்தோம்.- கொடு
நஞ்சில்கருகியே நாலுதெருவிலே
நாதியற்றுக் கிடந்தோமே -இன்னும்
மிஞ்சுதே பாவங்கள் மீதியும் உண்டென
மேலும் சிறைகளில் வாசம்!

வஞ்சகர் நெஞ்சமும் வன்மை கொண்டானது
வாழ்வது தானென்ன பேயோ -ஒரு
வெஞ்சினம் கொள்ளவிளைத்தவர் நாமதோ
வீண்பழி கொண்டுழன் றோமே! -வெறும்
பஞ்சினைத் தீயெனப் பற்றியெரிந்தது
பாலகர் பெண்டிர்கள் தேகம்-வெறும்
பிஞ்சுகள் பூக்களைப் போட்டு உதிர்த்திட
பேயாய்  அவர் கொண்டதாகம்

காந்தி வழிதனில் வந்தவர் கண்டது
கத்தியும் ரத்தமும்தானே -மன
சாந்திகொண்டே, தலைவெட்டிக் குவிக்கையில்,
சத்தியம் தூங்கியதேனோ -அட
முந்திவந்தே இவர் முற்றுமழிக்கையில்
சிந்தை தமிழ் கொண்டுபாடும் -பெரும்
வேந்தே குறுநில வித்தகன் புத்தகம்
பற்றிக் கவி கொண்டதேனோ

ஊரே எரிகையில் ரோமாபுரிமன்னன்
கையில் பிடில்கொண்டு நின்றான் -ஈழ
தேசம் எரிகையில் செந்தமிழ் மன்னனும்
செம்மொழி பாடிக் களித்தான் -இங்கு
யாரும் இரங்கிட வில்லை அமைதியில்
சுற்றிச் சுழன்றது பூமி -அடி
வேருடன்வெட்டித் தமிழினம் கொன்றிட
விண்ணில் பரந்ததுஆவி

 பச்சை விசத்தினைப் பாலில் கலந்தவர்
பண்ணிய நீசத் துரோகம் -நல்ல
இச்சகம் சொல்லியே அத்தனை பேரது
நெஞ்சைக் கிழித்தது பாவம் -ஒரு
முச்சந்தி வீடதன் முன்னேகிணத்தடி
முள்ளிவாய்கால் படுகோரம் -இவர்
நச்சுப்புகையெழ வைத்த குண்டுஅள்ளிப்
பிச்சு எறிந்தன யாவும்

பட்டுடை கொண்டு பணத்தில் புரண்டொரு
பஞ்சணையில் தூங்க நீயும். இங்கு
வெட்டுடல் கொண்டுநாம் வீதியில் வீழ்ந்துமே
ரத்தம் குளித்திடலாமோ -ஒரு
சட்டமியற்றி பின் விட்டசிங் காசனம்
வீற்றிருக்க வழிதேடி நீயும்
கட்டை அடுக்கித் தமிழ்குலத்தைச் சிதை
வைத்து எரித்திடலாமோ?

கொட்டிய குண்டுகள் வீழ்ந்து வெடித்திட
கூடி எரிந்தன தேகம் -இன்னும்
கெட்டிதனமென வெட்டி ஒழித்திடப்
பட்ட துயரதும் பாவம் - இவர்
கொட்டிய கண்ணீரும் விட்டசபதமும்
தொட்டழிக்க பொங்கிப் பெண்கள் -அவர்
குட்டிகுழந்தைகள் சத்தமிட்ட பெருங்
கூக்குரலும் உனைக் கேட்கும்

சுட்டெரிக்கும் ஒரு சத்தியத்தீ பெருஞ்
சுடர் அனல்கொண்டு மூளும் -அது
மட்டும் நீதிஉண்மை விட்டு இருந்திடும்
கெட்டவிதி கொஞ்சம்துள்ளும் -எமை
வெட்டிக் கொலைசெய்ய விட்டவிதி மீண்டும்
வந்ததிசையில் திரும்பும் -ஒரு
கெட்டசமயம் அணைந்திடவே காலம்
கேள்வி கேட்டு உனை வெல்லும்
(காலில் விலங்கிட்டு தள்ளும்)

Saturday, May 21, 2011

என்ன உலகமடா..!

கத்தும்கடலே பெருகிவிடு, கயவர் கூட்டம் அழித்துவிடு
செத்தும் காணச் சிறுமையரை தீயே பற்றி எரித்துவிடு
வித்தும் முளையும் பூவென்று வெறியர் கிள்ளி எறிகின்றார்
கொத்தும் மலராய் மேனிகளைக் கோரம் வெட்டிக் கொல்கின்றார்

சட்டம் போட்டு விதியெழுதி சரமாய்வார்த்தை தான் கோர்த்து
முட்டிமோதி விளையாடி மெல்லச் சுற்றுது பூவுலகு
வெட்டிபோடும் கைகளினை வேடிக் கையாய் விழிகண்டு
சுட்டுகொல்வோர் தோள்களினை தொட்டே தோழமை பேசுகிறார்

ஒற்றைக் கையை மேலோங்கி ஒன்றுமில்லை பாரென்று
மற்றக் கையில் வாள்தூக்கி மறைவில் எங்கள் மெய்கிழிக்க
பற்றுக் கொண்டு பார் என்று பாவிஉலகம் ஏமாற்றி
வெற்று கையை இரண்டாக்க விம்பம் வைத்துக்காட்டுதடா

வைத்துக் கட்டும் சொல்லாக வார்த்தை இரட்டை விதமாக்கி
மெத்தப்புழுகும் செயல்கண்டு மேனிதுடிக்கக் காண்கின்றேன்
சொத்தும்சுகமும் இதோஎன்றால் சுழலும் வேகக் காற்றாடி
வைத்துகொள்ளும் வேகத்தில் வானத்தேறி சுற்றுகிறார்

வெட்டிப் போடப் படமாக்கி வியந்து பார்த்த உலகமது
தொட்டில் இருந்து சுடுகாடு செல்லும்வயது மாந்தர்களைக்
கட்டிக் கொல்லும் காட்சியதை காட்டக் கண்டும் உலகமது
சட்டை செய்யாக் கண்களினை சாட்சி கருதி மூடுவதேன்

உள்நாட்டுள்ளே பேசிடுவோம் ஒருவர்வேண்டா என்கின்ற
கள்ளன் தானும் காட்சிக்காய் கடவுள்வேடம் போட்டுவர
துள்ளிக்காலில் வீழ்ந்தெம்மை சிவனே என்று கும்பிட்டு
கொள்ளிப்பேய்க்கு வாழ்வாகி கூடப்போ நீ என்கின்றார்

சொல்லும் வரையில் இராமகதை சொல்லக்கேட்டு காலையிலே
நல்லாள்சீதைக்(கு) அண்ணன்தான் ராமன் இலங்கா ஆளுகையில்
பொல்லாக் குணத்தோன் இராவணனும் உள்ளேவந்து போர்செய்தான்
கொல்லு என்றே கூத்தாடும் கூட்டம் கொண்டது உலகமடா

செல்லு வீதி ராஜமனை சிறந்த இவர்கள் அரசாங்க
கல்லுமனைகள் முன்னாலே கைகள்கோர்த்து கதறியழு
நில்லு நீதி கேட்டெழுந்து நேரே கண்முன் முகம்பார்த்து
சொல்லு, நீதி தாவென்றே சுற்றும் உலகைப் புரட்டியெடு

Thursday, May 19, 2011

முத்துத் தமிழ் இனம்!

முத்துத்தமிழ் சத்தம் இடுமினம்
வெட்டித்தலை கொத்திக் கிழியென
சட்டம்ஒரு சுற்றும் புவியிடை உளதாமோ
சொத்துக்களைத் தட்டிப் பறிதமிழ்
கற்பைக்கெடு, குத்திக் கொலையென
புத்தம்மதம் கற்கும் விதிமுறை உளதாமோ

கொத்துக்குலை மொத்தத் தமிழ்அழி
கத்திக்குரல் சத்தமிட ஒழி
மக்கட்தலை சுட்டுக் கருகென வெடிபோட்டு
சுற்றும்பெரு யந்திரப் பறவையும்
சுற்றிப்பொது பொத்து பொதுவென
கொட்டும்இடி குண்டுப் பெருமழை பொழிந்தாக

முற்றும்அழி ஒற்றைத் தமிழனும்
சற்றும் விதிபெற்றுக் குறைஉயிர்
உற்றுக்கொள வெட்டிக் குழியிடு எனவாக
கத்திக்குடி மக்கள் முழுவதும்
திக்குத்திசை விட்டுத் திரிபடும்
சிக்கல்பட நச்சுக் கலவையை எறிந்தானே

வெட்டித்தலை கொட்டக் குருதியும்
பட்டுத்தெறி ரத்தக் கறையதும்
சுட்டுக்கொலை யுற்றுக் கலிபட புவிதானும்
பட்டுக்கிட செத்துத் தொலையென
சொட்டும்மனம் இரக்கப் படவிலை
சட்டம்ஒரு முற்றும் குருடென விழிமூட

பத்தும்பல கட்டுக் கதைகளை
விட்டுப்பலர் புத்திக் கழுவிட
சுத்தம்மனம் புத்தன் மகனென உலகெண்ண
செத்தும்விழும் ரத்தப் பிணமதை
கொத்திகுடல் தின்னுங் கழுகதின்
வர்க்கம் இவன் வெட்டக் குலையென வீழ்ந்தோமே

பக்கம்இரு ரத்தக் கொலைவெறி
யுத்தப்பிரி யெத்தன் அரசது
கத்தையெனக் கட்டுப் பணமது கரமீய
மத்தம்பிடி பித்தன் கொலையிடு
வித்தைதனை மெத்தப் பழகிய
குத்துக்கொலை மன்னன் தலையிடு முடிவீழ

விட்டுத்துயில் தட்டு கதவினை
சட்டத்துறை தக்க பதிலிடும்
குற்றந்தனை சொல்லிக் கொடு,பதில் நீகேளாய்
வெட்டிக்குடல் ரத்தக் குடியனை
சட்டத்தவர் இட்டுச் சிறையிடை
குற்றந்தனை ஒத்துக் கொளும்வரை விலகாதே

கட்டித்தடி வெள்ளை கொடியுடன்
விட்டுச்சுடும் வீரக் குழலதும்
வைத்துத்தனி வெற்றுக் கரமுடன் இவர்போக
கட்டிக்கயி றிட்டு கொடுமைகள்
சுட்டுத்துடி கொள்ளக் கடும்வதை
இட்டுக்கொலை செய்யும் கயவரை விடலாமோ

வெட்டித்தமிழ் மக்கள் கொலையிட
கத்திக்கிலி பற்றிக் கதறிய
மொத்தக்குரல் விட்டு தப்பென விடுமாமோ
வட்டிச்சக மொத்தத் தொகைபெற
கத்திக்குரல் விட்டுக் கதறிட
பட்டுத்துயர் முட்டச் சிறையிடை தள்ளாயோ

சுற்றிச்சுழல் வட்டப் புவியது
சுற்றும்ஒளி உச்சிக் கதிரவன்
கற்றைஒளி புத்திப் புகழொடு தலையோனும்
ஒற்றைச்சிறு கையிற் கடைவிரல்
சற்றுத்திசை பக்கம் அசைவிட
வெற்றித்திரு மைந்தர் குமரரும் படையோடி

எட்டிக்களம் தொட்டுப் பகைவரை
முட்டிப்பெரு மின்னல் இடியெனப்
வட்டப்புயல் பட்டோர் நிலைதனை விளைத்தாரே
கட்டிப்படை சுற்றிப் பலமெடு
முத்துத்தமிழ் சொத்துக் குலமதின்
சத்துப்பெரு முற்றும் மறமெடு தமிழ்வீரன்

கத்துங்கடல் சுற்றும் பெருவெளி
மற்றும்நிலம் முற்றும் முப்படை
பெற்றுக்குல மங்கை கற்பினை அதிபேண
முத்திப்பயம் சித்தம் கொண்டுலை
பட்டுப்பல மொக்குப் பதருகள்
அச்சம்இது மிச்சம் மிலையென போர்கொண்டு

ஒற்றைக்கரம் கொண்டே உருவிய
வெட்டுக்கொலை வாளைச் செருகிட
பக்கம்அணைந் தன்பை முதலினில் பரிவாக
பெற்றுப்பல வெற்றுக் கதைகளை
விட்டுப்புறம் வெட்டத் துணிவுற
வட்டக்கதிர் தானும் மேற்கிடை மறைவானே

அச்சம்இலை சற்றுப் பொறுபொறு
சுற்றும்ஒளி மற்றத் திசைதனில்
எட்டிக்கதிர் விட்டே விடியலில் எழுந்தேகும்
திட்டமிடு துட்டர் குணமுடன்
சட்டம்எமை முற்றும் புரிந்திட
எட்டுத்திசை மெச்ச பிறந்திடும் தமிழீழம்

கடவுளின் கருணை இதுவா?

அழவென்றே ஓரினம் செய்தான்- அதை
அகிலத்தில் ஒருபக்கம் வாழென்று வைத்தான்
விழவென்று உடல் செய்து விட்டான் -அதில்
விலையற்ற உயிரையும் நிலைகொள்ளச் செய்தான்
குளமென்று வழிந்தோட செந்நீர்- அதை
கொட்டவே  செய்யென்று குணமாந்தர் செய்தான்
களவும்பொய் மொழிபேசி உலகை -அவன்
காலமெல்லாம் நன்கு ஏமாற்ற வைத்தான்

குலையாக கொத்தாக வெட்டி - இவர்
கொல்லென்று கோடரி கத்தியும் ஈந்தான்
சிலையென்று உலகோரைக்கண்டு -அவர்
சிந்தை மகிழ்ந்திட சாந்தமும் செய்தான்
நிலையென்ன இவர்வாழும் மண்ணில் -எவர்
நிமிர்ந்தாலும் உயர்ந்தாலும் நெஞ்சைக்கிழித்து
கொலை யொன்றா கண்முன்னே செய்தார்- உடல்
கொட்டிக் குவித்துமே வெட்டிக் களித்தார்

மலைபோல இவர், மக்கள் மாள -நல்
மறைவில் நின்று காட்சி படமாக்கி வைத்து
கலையென்று கண்நோக்கி நின்றார் - கண்டு
கலங்கிட வேயில்லை அதிசயம் என்றார்
தலை போன உடலோடு தாயை -அன்புத்
தங்கை பெண்மேனியை தரைபோட் டுதைத்து
இலையென்ற கோரமும் செய்து அவர்
இன்பமடைந்திடச் சற்றும் நாணாது

கரம் மீந்து கையும் குலுக்கி - அவர்
காதிலோர் ரகசியம் கனிவுடன் பேசி
வரம் ஈந்து வாழெனச் செய்யும் - இந்த
வையகமா ஏழை வாழ்ந்திடவைக்கும்
கொலை தானும்,கண்டவர் அன்றும்,- இன்றும்
கொஞ்சமும் நெஞ்சமி ரங்கிடக் காணோம்
கலைவிழா கண்காட்சியாமோ - இது
கண்கள் வியந்திட களியாட்ட விழாவோ

உள்ளத்தில் உரம்கொண்டே கேளாய் இந்த
உலகத்தின் மறுபக்கம் இருளென் றுணர்வாய்
அழுதாலும் நீரென்ப தோடி  - அது
அசையாத கல்லையும் அசைக்குமிப் பாரில்
பொழுதான போகமுன் மக்கள்  - நல்
லுயிரோடு வாழ்ந்திட எது வின்னும்வேண்டும்
முழுதாக இனம்போகமுன்னே -  பல
முள்ள இதயங்கள் உருக்கிடவேண்டும்!

Wednesday, May 18, 2011

காதல் கொண்டேன்.

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது
பார்த்த விழியிரண்டும்
கோலமிழந்துமே கூடும் துயிலதைக்
கொள்ள மறுத்தன, ஓர்
ஓலைநடுவினில் ஊதி வரும் தென்னங்
காற்றின் குளிர் கரமும்
காலைமலர் நீவி மேனி தொடபெருங்
காயமென் றாகிடுதே

காத லெனும்நோயே, ஈதறிவே னெந்தன்
காதலோ ஈழம்மெனும்
நாத மணித்திரு நாட்டின் மீதுகொண்டேன்
நானதை வேண்டிநின்றேன்
போதும் பொழுதுமோர் தூக்கமில் லைஅதை
பெற்றிடலன்றி என்னை
சாதலி ருந்துமே காத்திட பாரினில்
சற்றும் வழியொன்றில்லை

வீர வழிவந்த வேங்கையின் மைந்தரும்
வேண்டிய காதலிது
ஈர விழிகொண்ட மாதரும் வீறுடன்
எண்ணிய தாகம் இது
ஊரை அழித்தவர் உள்மனதில் கொண்ட
ஓங்கிய மோகம் இது
பாரைக் கிலிகொள்ள வைத்த தலைவனும்
பாசமெடுத்த திங்கு

நானும் எண்ணியிங்கு வாடுகிறேன் எந்தன்
நெஞ்சினில் ஆசைகொண்டேன்
ஊனும் உருகிட உள்ளம்சுதந்திர
தாகம் அதிகம் கொண்டேன்
தேனும் பாலும் உண்டு தித்திக்க வாழ்வதில்
ஏது பயனிருக்கு?
ஆனவழி ஒன்று கண்டிடவேண்டுமே
ஈழம் அமைப்பதற்கு

தாயைத் தமிழ்திரு ஈழஅன்னைதனை
தேரிலி ருத்தியொரு
வேய்குழல் மீதினில் வெள்ளிச்சரமென
வீர சுதந்திரத்தை
பாயும்புலி எனும்தீர முடன் ஓடிப்
பெற்றே விடுதலையை
தூயமலரென அள்ளி  அணிசெய்து
ஊர்வலம் வந்திடுவோம்

வெட்டும் பகைவரை வீரமெடுத்துமே
வெஞ்சினம் கொண்டு மண்ணை
விட்டுத் தலைதெறித் தோடிடச் செய்திட
வீரரே கூடியெழும்
பெட்டி படுக்கையைத்  தான்சுருட்டி யவர்
பின்னே திரும்பிவிழி
தொட்டு நம்மீழ தமிழ்நிலத்தை மாசு
செய்யா துரத்திடுவோம்

Tuesday, May 10, 2011

இருளா ஒளியா இனி வரும்..

தேனுலாவும் பூவின் இதழ்கள் தீயில் எரிகிறதே
தென்றல்மாறிக் கொன்றோர் மேனி தீண்டிக் கமழ்கிறதே
வானுலாவும் திங்கள் ஏனோ வாரா தொழிகிறதே
வையம் தன்னில் ஈழம்இருளில் வாழச்செய்வது மேன்

ஊனுலாவும் உயிரைக்கொல்ல ஓடித் தீதெழுதே
உண்மைவிட்டே ஓடிப்போக ஓங்கிப்பொய் யெழுந்தே
நானுலாவும் நல்லோர் தேசம் நலியச் செய்கிறதே
நடுவேவந்து நல்லோ ரல்லோர் நாட்டைக் கெடுத்தாரேன்

கண்கள் இரண்டும் காணச் சகியாக் காட்சிதெரிகிறதே
காலஞ் செய்யும் கோலம்எண்ணிக் கண்ணீர் சொரிகிறதே
பெண்கள், பிள்ளை, பெரியோர் உயிரும் பிரியக் காணுவதேன்?
பிறரும் அறியா ஊமை யுள்ளத் துயரம் ஆவதுமேன்

மண்ணிற் தமிழின் செம்மைகூடி மாலைக் கதிரவனும்
மறையும்போது பெருகும் மருளல் மனதுள் எழுகிறதே
எண்ணம் மயங்க இயற்கையன்னை யிவளின்பாசம் போய்
எட்டாக்கனியாய் எங்கள்தேசம் இரத்தம் சொரிகிறதே

விண்ணிற் கோலம் வெடிக்கும் பாறை விரிந்த பிரபஞ்சம்
விளைந்ததெல்லாம் வீணோ? வாழ்வும் விரயம் ஆகிறதே
தண்ணீர் வானம் தரைகள் உண்டு தமிழர் வாழ்வொன்றே
தாவும் அலையிற் படகென்றாகித் தவிக்கும்நிலையாமேன்?

சோரும் காலும் சொல்லும்மனமும் செல்லும் பாதையதில்
சீரும் வாழ்வுக் கொளியின் புள்ளி சற்றே தெரிகிறதே
யாரும் எம்மைக் காத்தல் எண்ணிக் கைகள் தருவாரோ
நாமும் வாழ்ந்து நலமும்காண வழிகள் எழுமாமே

நாலும் எண்ணி நாமென்கண்டோம் நல்லோர் தூங்கையிலே
நாகம் தேளும் நச்சுப் பாம்பும் நாட்டை ஆள்கிறதே;
காலும்பாதைக் கல்லில்முள்ளில் கண்டே இடிபட்டு
கதறிக்கேட்டும் காவல் தெய்வம் கைகள் விரிப்பதுஏன்?

Sunday, May 8, 2011

கிளிபேசும் குயில்பாடும் துயர்போகும் ( நீள் கவிதை)

1.பெண்ணின் சோகம்!

பட்ட மரம்ஒன்று பாதிக்கிளை தானுடைந்து
கட்டியவன் மாளக் களையிழந்த மாதொருத்தி
பொட்டின்றி பூவின்றி புன்னகைக்கும் இதழின்றி
நிற்பதுபோல் நெடிதுயர்ந்து நிற்கஅதன் பக்கத்தே

சுட்டெரிக்கும் சுடலை  சூழலதை அச்சமிடும்
நட்டதொருபேயாய்  நெடுமரமும் நின்றிருக்க
சட்டென்று பீதியெழச் செய்வதென ஆகுமரக்
கெட்டழிந்த கிளைநோக்கி கிளிஒன்று வந்ததுவாம்

வட்டவெயில்தான்மறையும் வானச்சிவப்புநிறம்
கொட்டியதோர் குங்குமமோ குடல்கிழித்த உதிரமதோ
வெட்கமுற்ற கன்னியவள் விளைகன்னசெஞ்சிவப்போ
திட்டமிட்டு இனமழிக்கும் தமிழீழப் பூமியதோ

என்னும் வகைதெரியா இயற்புற்ற மாலையிலே
சின்னக் கிளைநோக்கி சேர்ந்ததாம் பசுங்கிளியும்
தன்னை இருத்தியதன் தலைதிருப்ப மறுகிளையில்
கன்னங்கருவண்ண குயிலொன்று தனியிருந்து

வீசுமெழிற் காற்றினிலே வீணையெனும் குரலழிய்
மாசுடைய காதலெண்ணி மனம்விட்டுபாட்டிசைக்க
நேசமுடன் தானிருந்து நெஞ்சம் உருகிவரும்
பாசம் இழந்தகுயிற் பாட்டைக்கிளி கேட்டதடா

(குயில் பாடுகிறது)

”வாச மலரெனவே வாழ்க்கையிலே நானிருந்தேன்
பேசி எனைமயக்கி பேதைமனம் கொண்டவரே
ஆசைமுடிந்ததுவோ அன்புமனம் விட்டதுவோ
தேசம்கடந்துமேநீர் திசைகாணாச் சென்றதென்ன

பூவை எறிந்தனைஏன்? புயலடித்துவீழ்ந்தனனே
சாவை அணைத்துவிடும் சஞ்சலமும் கொண்டேனே
தேவை முடிந்தவுடன் தேடவிட்டுப் போனவரே
பாவை இவளொருத்தி பாடுதுயர் கேளாயோ

பேதை உனைநம்பிப் பெண்மைதனை ஈந்தேனே
போதை முடிந்தவுடன் போன இடம் கூறாயோ?
பாதை மறந்து எனைப் பார்க்க மனம் கூடலையோ
மாதைபிரிந்ததென்ன? மாறிமனம்வந்திலைலேல்

நாவை அறுதெறிந்து நான்சாக மாட்டேனோ?
நோவை எடுத்த உடல் நஞ்சாகி மாளாதோ?
காவிஉடல் எடுத்து கட்டையில போட்டெவரும்
மேவித் தீ மூட்டாரோ? மின்னல்வந்து வீழாதோ?

காதல் கனிந்ததென கற்பனையில் நானிருக்க
போதல் இனிதெனவே போனவரே எங்கு சென்றீர்
மோதல் இருந்திடலாம் மோகம் கலைந்திடலாம்
கூதல் கலைத்துஎன்னை கூடியபின் பிரிவதுவோ"

பக்கமிருந்தழுது பாடுங்குயில் பார்த்துமன
துக்கமெடுத்தே, தன் தோல்விதனை எண்ணிக்குரல்
விக்கித்திணறிஒரு வேதனையில் தான்துடித்து
சிக்கித் திரிந்தகுயில் சொல்லுமொழி தான்கேட்டு

திக்கற் றபேடுதனை திரும்பி மனதிரங்கி,
”மிக்க துயரெடுத்து மேதினியில் வாழ்பவளே
எக்கதியு மில்லையென இளைத்து அழுபவளே
ஏக்கம் எடுத்தகதை ஏதெனவே சொல்லாயோ?”

2. துயரின்முடிவு!

மாலை யிருள்மயக்கம் மாந்தர்வயல் தோட்டமதில்
வேலை முடித்தலைந்து வீடேகும் காட்சியுடன்
தோலை எலும்புந்தத் தோன்றும் சிலமாடுகளும்
காலை எடுத்தபசி கண்டபுல்லோ போதாமல்

நொண்டி நடந்தசைய, நோயெடுத்தோர் முதியவரும்
வண்டியி ருந்தபடி வாய்திறந்து தானிருமி
தொண்டை கனைத்தவொரு தோற்றமதும் கண்டேயக்
கெண்டை மீன் நீர்வெளியே கிடந்து துடித்ததென

வெண்ணை என உருகி வேதனையை கொட்டியதாய்,
கண்ணின் துளி உதிர்த்த கருங்குயிலோ கூறியது
”பெண்ணின் நலமறியாப் பித்தர்கள் வாழும்வரை
மண்ணில் கரைவதுவோ மாதர்விழி நீராகும்

அன்னைதிருவயிற்றில் அழகுமணிக் கருவுயிர்த்து
பின்னர் உதிக்கையிலே பிறந்தவொரு அழுகையவர்
கன்னதிருந் தொழிந்து காய்வதுதான் எப்போது?
சின்னக் குழந்தையெனில் சீராட்டிப் பாட்டிசைப்பர்

கன்னி வயதென்றால் கதைநூறு பேசிடுவார்
பின்னைவீட்டிலிவள் பேசியது பார்த்ததென்பர்
கன்னத்தொரு முத்தம் கண்டதெனப் பொய்யுரைப்பர்
சின்ன மனதெடுத்து சேதிபல கூறிடுவர்

உண்மைக் காதலுடன் ஒருவன்தனை நேசிப்பின்
பெண்மைச் சுகமறிந்து பேசாமல் போயிடுவான்
மண்ணில் எறிந்ததொரு மாதுளையின் முத்தெனவே
கண்ணீர் சுரப்பதன்றி காப்பதற்கு யாருமில்லை

எண்ணத் திருத்திமன துள்ளே குமுறியொரு
கிண்ணப்பசும்பாலில் கொட்டியதோர் துளிவிசமாய்
உண்ணவும் முடியா உமிழ்ந்திடவும் மாட்டாது
மண்ணில் கிடந்துழலும் மங்கையரில் ஒன்றானேன்

என்றிடப் பைங்கிளியோ இன்னலே இல்லாத
ஒன்றில்லை வாழ்வில் உரைதிட நீகேளாய்
தென்றல் புயலாகும் திரைகடலும் பொங்கிவரும்
கொன்றை மலர்தானும் கொழுந்துவிட்டுத் தீஎரியும்

பெண்ணே உலகமதில் பெருஞ்சக்தி கொண்டவளாம்
கண்ணீர்க் கிரையாகி காலமெலாம் துஞ்சுகிறாள்
எண்ணி வெகுண்டெழுந்தால் எரியும்,ஒருமதுரையென
கண்ணை விழிக்க ஒரு காற்றும் புயலாய் தோன்றும்

மாவுலகு சுற்றும்விசை மேலெழுந்த சூரியனாம்
காவுமிந்த அண்டவெளி காற்றில்லா சூனியமும்
ஏவி ஒரு சக்தியதன் இழுவைக்கு ஆடுதெனில்
தூவிநிலம் வீழ்சக்தி தோற்றங்களே பெண்ணவர்கள்

பெண்ணில் மறைந்துள்ள பெரும்சக்தி தானெழவே
அண்டம்சிலுசிலுத்து ஆகாயம் ஒடியாதோ
விண்ணில் சுழலுபவை விசையெடுத்துஓடாதோ
அன்னைசக்தியவள் அருங்குழந்தை நீவிர்காள்

என்றாலும் இன்னல்தனை இதயத் தடக்கியொரு
மென்மை கொழித்தவராய் மௌனஉருவெடுத்து
புன்னகை கொண்டேநற் பொறுமைதனைக் காத்திடுவீர்
மண்ணில் பெருவாழ்வும் மகிமையும் பொங்கி வரும்

சொல்லிச் சிறுகிளியும் சிறகடித்து வான்பறக்க
மெல்லத்திரும்பிதன் மீளாத் துயரடக்கி
கல்லாய் மனதெடுத்து கண்ணை துடைத்தகுயில்
இல்லத் திசைநோக்கி எழுந்து பறந்ததுவே !

Wednesday, May 4, 2011

நானும் ஒரு அரசன் !

நேரே நிமிர்ந்து நடப்பேனடா ஆனால்
நெஞ்சமோ  கூனலடா
பாரே புகழ்ந்திட ஆகுமடா ஆயின்
பாதி மடையனடா
ஊரேமனம் கொண்டு வாழ்த்திடினும்
இவனுள்ளம் சிறுமையடா
வேரே கிடக்குது வாடி யிவனொரு
வேதனைத் தோழனடா

தோல்வி யெனக் கென்றும் சொந்தமடா வெற்றி
தோள்களில் பாரமடா
கால்கள் இறங்கையில் ஓடுதடா மலை
ஏறத் தயங்குதடா
ஆலமரமென நான் வளர்ந்தால் புயல்
ஆட்டும் பின் வீழ்த்துமடா
கோலமதில் நானும் நாணலடா இனி
கொஞ்சமும் வீழேனடா

வேலைகள் செய்திடச் சோம்பலடா நானோ
வீதிக்கு ராசாவடா
மாலைதனில் மது வண்டெனவே மதி
கெட்டொரு மந்தியடா
சேலைகள் பின்னே திரிவேனடா பல
சேட்டை புரிவேனடா
தோலை உரித்திட யாரும் வந்தால் பின்னே
தோப்புக் கரணமடா

கோவில்கள் வாசலில் பக்தனடா உள்ளே
கொள்கையில் நாத்திகன்டா
சேவைபுரிந்து வணங்கிடுவேன் தரும்
சாதம் வரைக்குமடா
நாவில் நற்கீத மிசைத்திடுவேன் அந்த
நல்லிசை ஞானம்கொண்டோன்
பாவினித்தோ குரல் தந்திடுவான் உதை
போடும் பொதி சுமப்போன்

நாளுமொரு போதும் பொய்யுரையேன் நானோ
நற்குண வேந்தனடா
ஏழுதனை இது எட்டு என்பேன் அது
எண்ணத்தின் மாற்றமடா
பாழுமுலக மெனைக்குறித்து இவன்
பைத்தியம் என்குதடா
ஊரை உலகேய்த்துப் பொய்சொன்னவன் மட்டும்
ஊருக்கு ராஜாவடா!

காதை அறுத்தவன், சங்கிலியைக் கொண்ட
கள்ளன் சிறையிலடா
மாதைக் கெடுத்தவன் மங்கை தீண்டஅந்தக்
மாயவன் உள்ளேயடா
தீதை இழைத் தில்லம் தீயிட் டெரித்தவன்
நீதியின் கையிலடா
ஈது அனைத்தையும் யாரொருவன் செய்தால்
நாட்டின் அரசானடா!

மேற்குச் சூரியன்

இகமே வந்து புகுமே ஈழம், தகுமோ போரும் என்றே
அகமே வஞ்சம் கொளுமே ஆயின் முகமே மகிழ்வைத் தரவே
நகமே கொள்ளும் சதையே போலே நீயும் நானும் என்றே
சகமே வந்து உறவே கொண்டு சதியே செய்து கொல்லுமே

வருமே துன்பம் தருமே எனவே அறியா திருமே எனவே
உருவே ஒளியின் பெருவேந் தன்கை தருமோர் உறவைகண்டே
கருமை மனதோ டருகே வந்தோர் அருமை அன்பை விட்டே
எருமை ஏறும் யமனாய் ஈழம் கருகக் கொல்லும் விதியே !

எவரோ வந்தார் கரமே தந்தார் இனிதே கனிவாய் மொழியால்
தவறே கொல்லல் தலைவா என்றார் தமிழன் வலிமை கண்டார்
இவரோ உதடில் நகையும் உள்ளத் துறையும் நஞ்சும் கொண்டே
கவரும் பேச்சில் கனிந்தே அள்ளிக் கனலைக் கொட்டிக் கொன்றார்

அருளே கொண்டார் அயலே வாழும் அருமை திருமால் சயனம்
பெருமோ ருயிராய் அமுதம் கடையப் பிறந்தோர் விதியாய் வந்தே
கருவாய் உள்ளோர் கட்டிய ணைப்போர் கன்னி காப்போர் அன்னை
தருவாய் பெரிதாய் திடமும் கொண்டோர் எரிவாய் ஊட்டி மகிழ்ந்தார்

இனமே கொன்று மனதே மகிழ வனமே வாழும் மிருகத்
தனமே கொண்டே பகைவர் வந்தால் சினமே கொள்ளா அற்பத்
தனமாய் உயிரை கொள்நீ யென்று தமிழர் தானும் நில்லாக்
கனலாய் தீயும் நெஞ்சில் கொண்டு களமே புகுந்தார் தவறோ?

பொருளே கொள்ளும் நினைவே கொண்டு போடும் முதலில் உணவும்
இருளே சூழும் போதே திருடக் கொலையும் செய்யும் கயவன்
அரிதே அதுபோல் தருணம் கண்டு அழியத் தமிழர் கொன்றார்
சரியோ தருமம் தலையும் கவிழச் சற்றேன் கண்ணும் அயர்ந்தாய்

பெரிதோர் நிலைமை மாறும் பாராய் பேசும் அறமும் வெல்லும்
அரிதோர் உயர்வும் ஆகும் ஈழம் அடையும் துயரும் செல்லும்
விரிதோ ருலகில் வெளிச்சம் காணும் விடியல் இல்லைத் தூரம்
தெரிதே பாராய் உதிக்கு மொளியின் தோற்றம் மேற்கின் ஓரம்

Tuesday, May 3, 2011

ஈழம் எழில் தேசம்

பச்சை வயல் வெளிக் காற்று கதிர்களில்
பட்டு மேனி தொட்டு ஓடும்
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி
சற்றுக் குனிந்துநெல் ஆடும்
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்
ஆலோலம் பாடிப் பறக்கும்
இச்சை தருமெழில் இன்பம்நிறைமணி
ஈழமென்னும் தமிழ்த் தேசம்

மெச்சுமெழில் நெற்றி பொட்டும் வியர்வைக்கு
மேனியில் முத்துக்கள் தோன்ற
உச்சி வெயிலினில் நின்று வெட்டிக்கதிர்
ஓர மடுக்கிடும் பெண்கள்
மச்சவிழி கணை மார்பி லெறிந்திட
மையலுறு இள மைந்தர்
இச்சையுடன் கதிர்கட்டி ஏற்றிவண்டி
இன்பங்கொளும் ஈழதேசம்

கட்டைவண்டிதனில் காளை சலங்கைக்கு
கால்கள் தாளமிட ஓடும்
வட்டமடித்தோடி வள்ளென நாய்களும்
விட்டுத் துரத்திடக் காணும்
பட்டணிந்து சிறுதம்பிகள் தங்கையர்
பெற்றவர் கைபிடித் தேகும்
எட்ட இருந்திடும் கோவில் குளமென
ஈழதேசம் எழில்காணும்

நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே
நீலவிண்ணில் முகிலோடும்
தொட்டுவிட வானத்தூர முயர்கோவிற்
தொங்கு மணிநாதம் கேட்கும்
வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு
வண்ண மலர் தலையாட்டும்
பட்டுசிறகுடன் பற்பல வண்ணத்துப்
பூச்சிகள் தேனுண்ண நாடும்

எட்டிக்குதித் தலை மீதெழுந்து துள்ளும்
ஏந்திழை கண்ணென மீனும்
கொட்டிக் கிடந்தெழில் கொஞ்சும் சுனைதனில்
ஒட்டிக்குளிர்த் தென்றல் வீசும்
தொட்டது மேகமென்றே வளர்ந்தே யுயர்
தென்னைகளில் இளநீரும்
சுட்ட வெயிலுக்குத்தாகம் தணித்திடும்
சூழல்கொள் ஈழ மெம்நாடு

நீள அலை விரித்தாடும் கடலதில்
நெய்குழல் மங்கையர் போலும்
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்
அத்தனையும் மறைத்தாடும்
மூழ்கிஎழுந்திட முத்துக்கள் சிப்பியில்
மூடிவைத்த குவை தேறும்
தோள்விரி மைந்தரும்தீரமுடன் கப்பல்
தோணிகள் ஓட்டிடும் தேசம்

வாழைக் கனிகொண்டு வானரங்கள்கிளை
தாவி மரந்தனில் ஏறும்
வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு
விட்டு ஒருஅணிலோடும்
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி
கோதிகிளி யொன்று பேசும்
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா
காணென்று யாரையோ தேடும்

பூவிரி சோலைகள் பூம்பொழில் நீர்ச்சுனை
புல்விரிந்த பசும்தேசம்
தேவரின் வானுல கானது தோற்றிடும்
தீந்தமி ழீழம் எம்தேசம்
தீயெரிந் தேசுடு காடென மாறிடச்
சிங்களமே பழியாகும்
போய் விரிந்தே விதிபோடும் கணக்கது
பாதைமாறித் தெற்கும் சேரும்

காலமெனும் சுழல் சக்கரமானது
கீழும் மேலும் நிலைமாறும்
ஞாலம் சுழன்றிட நாளு மிரவுடன்
காலை பகல் என்றுஆகும்
கோலம் அவரது கொண்டது மாறியே
கூடி யழுதிட நேரும்
சீலமுடன் நம்ம தேசமமைந்திட
சேரும் வளங்களோ மீளும்