Thursday, September 1, 2011

உணர்வுகள்

நீரோடும் நிலவோடும் நின்றுவெண் முகிலோடும்
நெஞ்சத்தில் எண்ணமோடும்
தேரோடும் தென்றலும் திசையெங்கும் பறந்தோடும்
தேடியே கண்கள் ஓடும்
பாரோடும் பரந்தஇப் பூமியின் இடமெங்கும்
பலரோடிச் சென்றுவாழும்
வேரோடும் உறவுகள் விளையாடும் விதியதும்
வேடிக்கையாகும் வாழ்வும்

ஏரோடும் வயல்கூடி எதிரோடும் காற்றோடு
எழுகின்ற இன்பம் யாவும்
பேரோடு வாழ்ந்திடும் பெருச்செல்வ வாழ்வினில்
பிறையாகத் தேய்ந்து போகும்
சேறோடும் மண்ணோடும் உழுதோடி பின்னாலே
சேர்ந்துண வுண்டுவாழும்
நோயோடிப் போகின்ற நிம்மதி வாழ்வினை
நினைந்தேங்கும் நெஞ்சே நாளும்

யாரோடிக் கேட்டாலும் விதியோடிச் செய்கின்ற
விளையாட்டு வேறுஆகும்
நீர்க்கூடி எழுகின்ற அலையாக ஊருக்குள்
நின்றதை அள்ளியோடும்
வேரோடு புயலுக்கு விழுகின்ற மரமாக
வீழ்த்தியே உறவுகொல்லும்
பேயாடி நடமாடிச் சிதைக்கின்ற பொருளாக
பூவுடல் கொன்று பார்க்கும்

நானோடி நடக்கின்ற நல்லதோர் பாதையில்
நாலுபேர் தூக்கிஒடும்
நாளோடி வரும்வரை நானாடி நடக்கின்ற
நாளது இன்பமாகும்
பாவோடும் பாஎண்ணும் மனதோடும் வாழ்வது
பலமான உணர்வு கொள்ளும்
பாலொடு பனியோடு பார்வையை கொள்வது
பாவி இவன் உள்ளமாகும்

மேலோடும் மதியோட முகிலோடி மறைத்திடக்
காற்றோடி ஒளியை மீட்கும்
சேலோடும் நீர்ச்சுனை சேற்றோடு தாமரை
திகழ்ந்தாலும் தூய்மைகாணும்
வேலோடு விளையாடும் முருகனின் தமிழோடு
விளையாடி நாளும்போகும்
காலோட முடியாது காடோடும் உடல்காணும்
காலமே உண்மை சொல்லும்

No comments:

Post a Comment