Sunday, June 17, 2012

இல்லாத ஒன்று


பூவிருக்கும் தென்றல்வரும் புன்னகைத்து பூவிரியும்
போது மலராசை கொள்ளும் தென்றல் நில்லாது
தாவிவரும் காற்றிணையத் தன்சுகந்தம் தந்தும் அதை
தானெடுத்து ஓடும் பூவைத் தென்றல் எண்ணாது
மேவிவரும் முகில் அணைய முழுநிலவுந் தனையிழக்கும்
மேகம் கணம் நிற்பதிலை மோகம்கொள்ளாது
நாவில் எழும்சொற்களுக்கு  நல்ல சுவை கொண்டுதரும்
நோக்கமுண்டு உள்மனதில் நெறியிருக்காது

கனி பழுக்கும் காய்மறையும் காக்கையுடன் குருவிகளும்
கண்டு உண்ணும் உண்டபின்பு அதிலிருக்காது
ஏனிதயம் கொண்ட அன்பு என்றும்,என்றும் நிலைத்திருக்கும்
எண்ணங் கொண்டு வாழ்வமைக்க இடமிருக்காது
வானிருக்கும் நீலநிறம் வாழும்வரை தான்தெரியும்
விண்ணடைய வெட்டவெளி நிறமிருக்காது
தானெடுக்கும் கரும்பினிலும் தன்மைஅடிக் கரும்பினிலே
தேனினிக்கும் மேல் நுனியில் சுவையிருக்காது

ஆவிவரும் நீர்கொதிக்க ஆனந்தமோ துள்ளும்புனல்
அத்தனையும் விதிமுடிக்கும் மீதியிராது
கோவிலிலே சிலையிருக்கக் கொள்கைஇறை நம்பிமனம்
கொண்டுஅதைக் காண்பவர்க்குக் கல்லிருக்காது
பாவிமன எண்ணமெலாம் பட்ட வாழ்வின் துன்பமதைப்
பங்குகொள்ள யாருமின்றிப் பயன் இருக்காது
தேவியவள் சக்தியெனத் தேகமதில் கூடிவிட்டால்
தோன்றும் துயர்தானும் கணம் நிலைத்திருக்காது

புல்நுனியில் தூங்கும்பனி பச்சைஇலை குளிர்ந்திருக்கப்
பட்டு இணைந் தங்கிருக்கும் பகலும் விடாது
கால் நடக்கும் பாதையிலே கவனம் வைத்தால் முள்ளிருந்தும்
கண்டபடி குத்தி நிலை கடுகடுக்காது
மேல் நிலையில் பொன்விளையும் மனங்களிலே எதுஇருக்கும்
மென்மை எனும் நிழலிருக்கும் வன்மைகொள்ளாது
போலிருக்கும் பார்வையிலே பட்டிருக்க எண்ணமுள்ளே
பூத்திருக்கும் உண்மை அதில் பொலிந்திருக்காது


************************

Sunday, June 10, 2012

கவிதை போதும்


கவிதை எண்ணக் கசக்குதே யடிகண்ணே - இந்த
கணம் நிறுத்தடி கலங்குது மனம் பெண்ணே
அவிந் துடைந்துளம் வலியெடுத்தது புண்ணே - மனம்
ஆற்றிட வென எது இருக்கடி கண்ணே
குவிஇதழிடை மதுவடித்திடும் பூவே - நானும்
குடித்ததில் மதி மயங்கிட வழி செய்யேன்
செவி இனித்திடச் சொலும் பதமினிப் போதும் - இந்த
சிறு மதிமயங் கிடகிடக்கணும் நாளும்

புதிதொரு கிண்ண மதுவெடுத்தடி சேர்ந்தே - நீயும்
புதுச்சுவை கண்டு எனைமயக்கடி தேர்ந்தே
விதி அறுக்குது துடிதுடிக்குது மெய்யே - பட்ட
விதம் சுறுக்கென இதயங் குத்திடும் முள்ளே
நதி நடக்கிற விதம் நடக்கிற அழகே - நீயும்
நடமிடும்மயில் என விரிக்கணும் மெய்யே
குதிகுதிக்கிற அழகெடுத்திடு பெண்ணே - அந்த
குளுகுளுப்பிலே துயர்பறக்கட்டும் கண்ணே

மணிஅடித்திட கதவிரண்டுமே விண்ணில் - அவை
மளமளவென திறந்திருக் கட்டும் பெண்ணே
கணி சகசய எனக் கழித்தவன் கணக்கும் - தீர
கதைமுடித்தெனை வரசொல்லும் வரை என்னே
துணியென உடல் தொலையென விட ஏகும் - வரை
துணையிருந் தெனை தொடு மறக்கணும் கண்ணே
அணி அசை அடி தளை யெனும் சுகமெல்லாம் உன்
அசைவுடலிடை எழும் அது இனிப் போதும்

Friday, June 8, 2012

திருமண வாழ்த்து


அழகான மலர்காலை கதிர்காண மலரும்வகை
அன்பினொளி கண்டு மனம் பூக்கும்
பழகாதபோதும் ஒருதுணை நாடி ஈருயிர்கள்
பாசமுடன் வாழ்வில் ஒன்றாகும்
இளகாத கடிதென்ற  இதயமும் இருவிழிகள்
இணையவே மலர்வண்டு ஆகும்
எழும்ஆசை பெரிதாகி இருகைகள் பலமாக
இணைந்தின்ப ஒளிவாழ்வு காணும்

வளமான வாழ்வெண்ணி வதுவையில் ஒருசேரும்
வகையாம் இம்மணநாளில் இன்று
பழமோ நற்சுவையோடு பிரியாத வகைபோலும்
பிறிதின்றி ஒன்றாகி வாழ்வீர்!
வளமான வாழ்வுபெற விளைகின்ற இருபறவை
வெளிவானில் ஒருசேரப் பறந்தே
இளம்வாழ்வில்  எழும்கீத இசைபாடும் மகிழ்வாக
என்றென்றும் இன்பங்கள் காண்க

தழையாகக் கொடியாக தழுவுமொரு மரமாக
துளைதென்றல் நுழையாத இணைவும்
மழைவானில் நீர்சொரிய மண்மீது  நதியோடி
மாகடலில் இணைகின்ற விதமும்
விளைவான ஒருநாளும் ஒருபோதும் குறையாது
வேண்டுவரை இன்பங்கள் பொலிய
வளைவானம் போலகன்ற வாழ்வோடும் உயர்வோடும்
வாழ்ந்திடுக, வாழ்கநீர், வாழ்வீர்

நிலையான வாழ்விலொரு பிடிவாதம் சினம் எனது
நலம் மட்டும் பெரிதென்ற எண்ணம்
தலைகொண்டகனம் வேறுதவறான சந்தேகம்
தவிடு பொடியாக்கி விடும் நெஞ்சம்
குலையாது திடமோடு கோவிலென குடும்பமது
குடிவாழ்வு பெரிதென்று எண்ணி
வலைவீசும் விதிகண்டு வழுகிவிடும் கயல்போல
வரும் இடர்கள் வென்றுநீர் வாழ்வீர்

விலையற்ற பொருளாக விட்டுத்தரும் மனப்பாங்கு
வேண்டுமதைக் கைக்கொண்டு வாழ்க
கலையோடு கொஞ்சுந் தமிழ் கதைகூறும் மழலைகளைக்
களிப்போடு பெற்று நிறைவாக
குலையோடு கொத்தாக கனி தூங்கும் மாஞ்சோலை
கொள்ளும் பல குருவிகளும்போலே
நிலையோடு உறவுகளும் நிதம்கூடி மகிழ்வுபெற
நிறைவான வாழ்த்துகளைத் தந்தோம்

வளமோங்க வடிவோங்க வார்த்தைகளில் அன்போங்க
வாசமுறும் மலர்கொண்ட சோலை
உளமோங்க எழிவண்ண உலவுங்காற் றெனஇன்ப
முடன்காதல் என்றும் குறைவின்றி
அளவற்ற நிறைசெல்வம் அகங்காண மழலைகளும்
அமுதமொழி நிறையன்பு வாழ்வு
சுழல்பூமிதனில் ஓங்க துணையோடு குறைவற்ற
தொகை நீண்ட ஆண்டுகள் வாழ்க