Wednesday, November 9, 2011

மலையும் மழையும்

மதிநின்று விளையாடும் மலைமீதுதொடுமேகம்
மழை கொண்டு நீர்தூவுமாம்
புதிதென்ற மலைவாழை இலைதள்ள அழகான
பசுஞ்சோலை கதிர் கொள்ளுமாம்
முதிதான வளர்நீள மரம்மீது குயில்பாட
மலர்க்கூட்டம் இதழ் பூக்குமாம்
குதித்தோடிக் கிளைதூங்கி கருமந்தி மரந்தாவ
குளிர்நீரும் பூத் தூவுமாம்

அழியாத கலையோடு பெருங்கோவில் அமைந்தொன்று
அழகோடு உயர்ந்தோங்கவே
வழிமீது நடுவானில் வரும்மேகம் இடைநின்று
விடு என்று அதை மோதுமாம்
விழி காணா குளிர்காற்று வெண் பஞ்சு உடல்நீவ
வளைந்தோடி முகில் ஓடவே
எழிலான இவைநூறில் எது தானும் அழகென்று
இவன்சொல்ல இறைதேவியே

மழைவந்து நிலம்மீது உறவாடும் மணல்சேர
மண்வாசம் எழும், கண்டுமே
நுழைந்தோடு பூங்காற்று அதை யள்ளி மணம்வீசி
நனைபூவை மறந்தோடுமே
வளைந்தாடும் கொடிபூத்த வகையான மலர்த்தேனில்
விழும் தூறல் கலந்தோடவே
அழைந்தின்ப மதுஉண்ணும் இளந்தும்பி சுவையின்றி
அருந்தாம லெழுந்தோடுமே

குழல்மீது மலர்கொண்ட குறும்பார்வை தனிலன்பு
கொள்நங்கை தனை ஆடவன்
சுழல்அம்பு விழிகண்டு சிந்தும்புன் னகைபோலும்
சுடர்தானும் புவிமாதினை
மழை நின்ற பெருவானில் கருமேகமிடையாலே
மறைந்தங்கு ஒளிசிந்தவும்
மழைபோகச் சிறு தூறல் தனில்ஏழு நிறமோடி
இதுவாழ்வு உமதென்குமே

பிழையான குரு, பாடம் பயிலாத சிறுபாலன்
படுகின்ற துயராகவே
பழக்காத ஒருமாடு நடுவீதி தடுமாறிப்
பிரம்பாலே வெருண்டோடுமே
முழவோடு சிறுநாத மிசைபாடிஒருகூட்டம்
மெதுவாக நடைகொள்வதும்
அழகோடி எமதான மலைகூடும் சிறுஊரில்
அருங்காட்சி தினம் தோறுமே

1 comment:

  1. சகோதரா மரபுக்கவிதையாகவே உள்ளது. மிக நன்றாக உள்ளது வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete