Thursday, August 4, 2011

வாழ்க்கை

தேனோடும் மனம் மீதோடும் துயர்
. தானோடும் மகிழ் வேயாகும்
வானோடும் முகில் போலோடும் உளம்
. வாழ்வோடும் வழி தானோடும்
மீனோடும் கடல் மேலோடும் அலை
. போலாடும் அது தள்ளாடும்
தானோடும் அலைமீதோடும் எமைத்
. தாங்கும்ஓடம் வாழ்வாகும்

நிலவோடும் ஒளி நிலம்மூடும் அதில்
. நினைவோ டினிமைகள் குதிபோடும்
பலஓடும் முகில் அருகோடும் சில
. அதைமூடும் பொழு திருள்கூடும்
கலையோடும் மனம் தமிழோடும் சில
. காலம் மகிழ்வுடன் இருந்தாலும்
பலமோடும் பெரும் வலியோடும்
. பல துன்பம் மகிழ்வைப் பந்தாடும்

மலைபோலும் மனதிடமோடும் அதில்
. கனிவோடும் நாம் நடந்தாலும்
வலைபோடும் விதி வாழ்வோடும் பல
. வழியிற் துயர்தர விளையாடும்
சிலைபோலும் மனம் இருந்தாலும் அதிற்
. சிலநேரம் விழி வழிந்தோடும்
நிலைமாறும் துயர் தனை ஓடும்வகை
. நினைவை மாற்றிடும் நிலைவேண்டும்

விழிமூடும் வரை வழிதேடும் பெரும்
. வாழ்வில் எதுவரை உரமோடும்
எழிலாடும் மலர் இதழ்காணும் மெது
. இதயம் கொண்டிட வாழ்ந்தாலும்
வழிதோறும் பல குழிகாணும் அதில்
. வீழ்ந்தே அடிபட வலிதோன்றும்
எழிதோடும் நல்ல இயலோடும் அதை
. இல்லா வகைசெய்து எழுநீயும்

வாழ்வோடும் அது வானோடும் சுடர்
. போலாகி ஒளிவந்தாளும்
நாள்கூடும் வரை போராடும் மனம்
. பேராழித் திரை போலாடும்
வீழ்வோடும் பெருவளைவோடும் அது
. வீழ்ந்தாலும் உடன் வீறோடும்
ஆழ்வோடும் வெகுஅழகோடும் அது
. அலைந்தும் உயர்ந்திடக் கரைநாடும்

இனிதோடும் மனம் இதுபோலும் நிலை
. இருந்தும் வாழ்ந்திட வழிதேடும்
கனிதேடும் கிளி என்றாகும் படி
. கலையில் இனிமையை மனம்தேடும்
பனிமூடும் அது விழிமூடும் பின்
. படபட வென்றே இடி தோன்றும்
எமை நாடும் எதுவென்றாலும் அதை
. எதிர்கொள்ளும் மனம் இறை வேண்டும்

மீனோடும் அதுஆறோடும் அலை
. மீதோடும் அது சேர்ந்தோடும்
ஏனோடும் சிலஇளமீன்கள் அதில்
. எதிரோடும் நிலை போலோடும்
தானோடும் குளிர் தண்ணீரில் இவை
. தடுமாறும் அது இடம்மாறும்
தேனோடும் அத் திரைநீரில் அவை
. தேடிச் சுகமும் கொண்டாடும்

No comments:

Post a Comment