Thursday, December 16, 2010

அழுவதும் ஏனம்மா?

கண்ணே கனியமுதே கனிமலரே வாடுவதேன்
வண்ணமுகம் சோர்ந்து வாயழுது கதறுவதேன்
பொன்னே நீயழுதால் பூக்கள்மனம் நோகுமடி
தண்ணீர் அலையடித்து தாங்காமல் ஆடுமடி

வாடுவதென் மலரென்றால் வையகமேஇருளாதோ
ஓடிஎரி வெயிலோனும் ஓங்குமலைஒளியானோ
பாடுவது குயிலென்றால் பைந்தமிழும் உருகாதோ
பனியுருகிக் குளிரெடுத்து படர்காற்றும் வீசாதோ

தேடுவது எதுவென்று திங்கள் வந்து கூறாதோ
தென்திசையின் காற்றெழுந்து சேதிசொல்லி ஓடாதோ
நாடுவது என்னவென்று நல்வார்த்தை கூறாயோ
நல்லதொரு வழிபிறந்து நானிலமும் வாழ்த்தாதோ

ஏடுவரும் கவிதனிலே இழைவதென்ன? எழுமுகிலே
ஓடுதொடு வெண்ணிலவை ஊறுங் கண்ணீர் துடைக்க
காடுவழிப் பாதையிலே காணும்முள் குத்தியதோ
பேடன்னம் சோர்ந்துநடை பிழைப்பதென்ன பேசாயோ

தேவரருள் கூடட்டும் திங்கள்மனம் பூக்கட்டும்
பாவமங்கு போகட்டும் பனித்தவிழி சிரிக்கட்டும்
பூமலர்ந்து பொங்கட்டும் புதியநதி துள்ளட்டும்
தாவுமயில் தோகைதனை தான்விரித்து ஆடட்டும்

இருள்மறைந்து ஒளிரட்டும் இன்பகீதம் இசைக்கட்டும்
கருமைதீயி லெரியட்டும் கனவுகளும் பலிக்கட்டும்
ஒருமை ஓங்கி உள்ளமதில் உற்ற அன்பு பெருகட்டும்
பரிதிபோல் ஒளிபிறந்து பாசவாழ்வு ஜொலிகட்டும்

Wednesday, December 15, 2010

அன்னையின் கண்ணீர்

வீசியகாற்று மொருகணம்நின்றுபின்
   வீசிவிரைந்து சென்றான்
வாசமெழும்மலர் தானும்மலர்ந்திடும்
   வண்ணம் மறந்துநின்றாள்
மேவியேவானில் எழுந்தவெய்யோன்
    கணம்வீசு மொளிமறந்தான்
தாவும்கடல்அலை கூடமறந்தொரு
     நாழிஉறைந் திருந்தாள்

பாடும்பறவைகள் கீதம்நிறுத்திஓர்
     சோகம்தன்னில் இழைய
வாடும்முளம்கொண்டு கோலமயில்தன்
     தோகைசுருட்டி வைக்க
ஏனென்றுஎண்ணி இங்குமங்கும்பார்க்க
     பேரிடிமின்ன லுடன்
வானிடிந்துதலை வீழ்ந்ததெனபெரும்
    கோலமெதிரில் கண்டேன்

பூசும்சந்தணமென் மேனியிலேவெறும்
     புழுதிபோர்த் திருக்க
பாசமொளிர்விழி மீதினிலேபெரும்
     நீர்வழிந்தோடி நிற்க
பேசும்செந்தமிழ்சொல் வாயினிலேஐயோ
      போதுமே துன்பமென
கூவித்துடித்தெங்கள் ஈழஅன்னைபடு
     வேதனையில் கிடந்தாள்

பாவிகள்செய்த கோலமதைகண்ணால் பார்க்க முடியவில்லை
தூய் தமிழ்மற வீரர்கள் பெற்றவள்மேனி துவண்டிருக்க
தாயவள் தங்க சிலம்பிடும் கால்களில் சங்கிலி கோர்த்து வைத்தே
பூவெனும் கைகள் பிணைத்தே விலங்கிட்டுப் பின்னிகிடந்தன காண்

பேயில் இழிந்த பிறவிகள் செய்ததோர் கோரம்கொடுமையினால்
வாழும்சுதந்திரம் தானிழந்து தலைவைக்கும் முடி இழந்து
நாவிற் துடித்துப் பதறுங் குரலெடுத்தாஆ..என் திருமகனே
பாவிகள்செய்யும் கொடுமைகள் எல்லையை மீறிய தென்றழுதாள்

நீதிஇழந்தோம் நினைவிழந்தோம் கொண்டநிம்மதி தானிழந்தோம்
பாதிமனிதஉயிர் இழந்தோம்எல்லை காத்தபடைஇழந்தோம்
தேசமிழந்தோம் திறையிழந்தோம் திக்குநாலு மிழந்தவராய்
வாழும்உரிமையும் வார்த்தையுமின்றி வஞ்சனையில் அழிந்தோம்

ஓவென்றழுதிட்டஈழ அன்னைமீண்டும் ஓர்பெருமூச்சு விட்டு
மாபெரும்வீர மைந்தர்கள்போயினர் மண்ணுள் விதையெனவே
மாவுலகும் ஒரு சேர எழுந்தொரு சாவினை புன்னகைத்து
தேனில்விஷமிட்டு தந்தார்சுதந்திர வாழ்வென்னும் எம்பசிக்கு

ஆவனசெய்தென்னை மீட்டிடாஎன்று அன்னைதுடித்துநின்றாள்
வேதனையில் மனமுள்ளேஅழுதிடத் தாயே தமிழன்னையே
மோசமிழைத்தவர் நான்கு திசையும் நிறைந்தனர் நம்மீழமோ
தேசமெங்கும் மொழிமாறித் திரிந்து சிங்ஈழம் என்றானதம்மா

பேர் பொறித்த தமிழ்வீதிப் பலகைகள் மாறிமொழி சொல்லுதே
தேரிருக்கும் திருக்கோவிலுக்குள் புத்தசாமி குடி போனதே
ஆலமரத்தடி ஆனைமுகத்தானும் அர்த்த நடு ராத்திரி
போதிமரத்தை பிடுங்கிநட்டுவைத்து போனஇடம் அறியோம்

தத்திநடக்கும் குழந்தை மணல் வீடு கட்டக் குழிபறித்தால்
புத்த சின்னமொன்று உள்ளேயிருக்குது தொன்மைபழமை என்றார்
கட்டியொரு கோவில் நட்டுமரம் அரசத்தனையும் புரிந்தே
அத்தைபாட்டி பூட்டன் சொத்துஎமதென்று பச்சைப்பொய் கூறுகிறார்

மெல்லத்தமிழ் இனி சாகுமென்றார் ஈழ மண்ணில்நடக்கிறதே
வெல்லத்திறனை யிழந்துவிட்டோம் எனவேதனையில் அழுதேன்
இல்லை மறந்திடு என்றும் அறம் வெல்லும் நீதி தழைத்து நிற்கும்
கல்லென உள்ளத்துறுதிகொள்ளு செய்யும்காரிய மாற்றிவிடு

நல்லன என்றும் நடந்துவரும் நல்லஅல்லனபாய்ந்துவரும்
செல்வதும்தீது சீறி மறைந்திட நீதிநிலைத்து நிற்கும்
கொல்லவல்ல தமிழ், கூட்டி உலகத்தின்முன்னே எனை நிறுத்து
நல்லவர் காதில் நடந்ததைக் கூறுநம் நாடு பிழைத்துவிடும்.

எல்லாம் சிவன்செயல் என்றுநினைத்து உன்கண்களயர்ந்து நின்றால்
வல்லவிதி நம்மை ஏய்த்துவிடும் இன்றே துள்ளி எழுந்திரடா
சொல்லு உலகமுன் நீதி எங்கேயென்று கைகள் உயர்த்து கத்து
எல்லைகடந்திடுமுன்னே எனதுயிர் வெல்ல வழிசெய் என்றாள்.

Tuesday, December 14, 2010

ஈழ அன்னை சீற்றம் கொண்டாள் (இது கனவா?)

என்னதொரு சத்தம் கேட்டுக் கண்விழிக்கின்றேன்
இதயமது படபடக்க துயில் கலைகின்றேன்
பின்னிலவு சாளரத்தின் உள் நுழைந்ததன்
பொன்னொளியை என்னருகே பிய்த்து வைத்ததும்
வெண்ணொளியில் பெண்ணொருத்தி வெளியினிலாட
வேல்விழியாள் அழகுரூப சுந்தரிதன்னை
தண்ணொளியில் துள்ளியாடும் தோற்றமும்கண்டே
தங்கமகள் யாரறியத் தாவி எழுந்தேன்

எட்டிநடைபோட்டுமுற்றம் ஏகியபோது
இளையவளோ கண்டுமௌனம் இழையவிருந்தாள்
தட்டியொரு தாளமிட்டு தென்றல் இசைக்க
தளிர்மலராள் கொடியசையும் தன்மையிலாடும்
வட்டமெனும் தோகைவிரித்தாடு மயிலாய்
வான்நிலவில் மின்னும் எழில் தன்னில் மறந்தேன்
கிட்டவந்து ஆடுமவள் கோலம்காணவே
கேள்வியின்றி யாரிவளோ காண விழைந்தேன்

சுற்றி யெங்கும் பூமலர்கள் சுந்தரவாசம்
சுழலும்விரி தென்றல்கொண்டு சென்றிடும் வேகம்
சற்று ஒளி சிதறக் கீழை சரிவெடு வானில்
சார்ந்துறைந்த நீள்படர்வெண் முகிலதின்கோலம்
வெற்று நீலக்கருமையூடு விரைகின்ற பறவை
விடியல்வேளை கண்டுமகிழ் வானது பொங்க
பொற்சிலையாள் பெண்ணிவளோ பொங்கிஆடிடும்
புதுமையேது என்றவளைப் பேசவிழைந்தேன்

தேன் மொழியாம் தேகமிசை தேர்ந்தவள் காணும்
தேர் அசையும் இடையில்வளை யாபதிபூண்டும்
நான்அகங்கள் நூறும் இன்னும்நாற்புற நூறும்
நல்மணிமே கலையுடனே நங்கையில்காணும்
பொன்னணிகள் கண்டிவளோ பூந்தமிழ்தேகம்
பொலிந்தவளாம் என்னபெயர் என்று வியந்தேன்
பின்னும் சடை கன்னங்கரு கூந்தல் விரித்த
பெண்ணவளோ அன்னைதமிழ் ஈழம் நானென்றாள்

வற்றிவாடிக் கண்கள் நீரும் வழிந்ததுபோலும்
வெண்ணிலாவை ஒத்தமுகம் இருண்டதுபோலும்
சுற்றி நின்ற தேகம் நோகச் செய்ததுபோலும்
சுந்தரியோ வாடி ஏதோ சொல்ல விழைந்தாள்
கற்றபாடம் போதும்அன்பு கண்ணிய மெல்லாம்
கடையிலென்னவிலை என்றோதும் இவ்புவிமீதில்
பெற்றபிள்ளை தாயை அப்பன் விட்டொழிந்தோமே
பேசரிய பொற்குலத்தைப் பாழடித்தோமே

நேர்மை பார்த்த நெஞ்சைக்கீறி நஞ்சுபோடவும்
நினைவிழந்து துடிதுடிக்க படமெடுக்கவும்
கூர்மை கொண்டகத்தியாலே குத்திஆடியும்
கொல்பவரைப் பாவமென்று கொல்ல அஞ்சினோம்
பார்வைதன்னில் குருடரென்று பாவிஎண்ணியே
பாலகரைத் தானும்விட்டு வைக்கவில்லையே
வார்த்தை பொங்க துடிதுடித்து வஞ்சியானவள்
வந்தகீத போர்ப்பறைக்குத் துள்ளிஆடினாள்


பகுதி 2

கொட்டிய மேளமும் சத்தமெழுந்திட
கோதைசுழன் றெழவே - ஒரு
வட்டம டித்துயிர் பட்டகொடுந்துயர்
வாடித் துடித்தலற...
தட்டிந டஞ்செயும் பொற்திரு பாதங்கள்
தாங்கி அனலெரிய - சினம்
சொட்டிச் சிவப்பென ரத்தங் கசிந்திட
சுற்றிநடம் பயின்றாள்...

விழிகள் தீயிட மொழிசொல்தேவதை
வேகு மனத்துடனே - பெரு
ஒளிகள் பொறிபடநிலமும் தடதட
வென்று அதிர்ந்திடவே...
மழைகொள் இடியென மனதும் துடித்திட
மங்கை குதித்தனள்காண் - கால்
தளதள வென்று சதங்கை கலீரிட
தாவி நடம் பயின்றாள்...

வீறொடு கோபமும் வீரமெ ழுந்திட
வேகச்சுழல் புயலாய் - பெரும்
நீறுஎ ரித்திட நேரும் விழிக்கனல்
நிலையொடு கொடும்பார்வை...
ஆறுகு தித்திடும் ஆகமணிக்கொடி
ஆடிச் சினத்திடவே - கொடும்
ஊறு விளைத்திட சீறும்புலிக்கெனும்
கோபமெடுத்திருந்தாள் ...

சித்தம் கொதித்தவள் செய்யு நடந்தனை
சுற்றி நின் றாடுகையில் - குரல்
கத்தி அழிந்துமே செத்திடு மோலங்கள்
காதினில் கேட்டதடா..
ரத்த வெறியெடு தீயகொடுஞ்செயல்
புத்தரைப் போற்றுபவர் - உடல்
குத்திஅழித்திடக் கொன்றிடு மெம்மவர்
கூக்குரல் நெடிதெழுவே

வைத்தநெ ருப்பினில் வெந்த இரும்பினை
வார்த்தது காதிலென - நெடும்
கத்தி எடுத்துக் கிழித்துபோல் நெஞ்சு
பட்ட பெரும்துயரோ..
பித்துப் பிடித்தவள் போல நின்றாடிட
ரத்தினச் செவ்விழியாள் - அவள்
வைத்தஅடி தனை வைத்தபடி ஒரு
கற்சிலையாய் உறைந்தாள்

சுற்றிஎ ழும்பிய தூசிஅடங்கிட
முத்தெனும் தேசமகள் - அவள்
முற்றிப் பெருத்தது இத்தருணம் இனி
முன்னே எழுந்திடென்றாள்...
சற்றுத் தயங்கிட என்னையழைத்தனள்
என்று மயங்கிவிட - தனல்
சுற்றிஅடர் பெருஞ்சூரியக் குஞ்செனச்
சோதி விரிந்ததடா..

இத்தனைகால மிழைத்த கொடுஞ்செயல்
அத்தனையும் பொறுத்தேன் - மனம்
செத்தவனாய்க் கிடந்தேன் தமிழா இனி
விட்டு எழுந்துவிடு...
புத்தனின் வம்சம் புரிந்திடுமத்தனை
குற்றம் கொலைநிறுத்த - ஒரு
சத்தியம் நீதி அறம் தனைமீளவும்
சற்று எழுப்பிவிடு..

கெட்டது பூமியும் கேடுபெருத்தது
கள்ளரும் காடையரும் - உயிர்
விட்டதுபோதும் விரைந்திடு எம்மினம்
வேகுது வெந்தணலில்...
கட்டிஉணர்வினை மற்ற இனம்தனை
காத்து இருந்ததெல்லாம் . அறம்
வெட்டிஅழித்திட பக்கதுணை இனி
வேண்டாம்விட்டுவிடு...

வல்லவன் மட்டு மெனப்புவி கொள்வது
வைத்த கொடும்வழக்கு - அவன்
நல்லவ னாகி நலிந்து சரிந்தது
நம்பிழை தான்உணரு..
கொல்லுமிக் கூட்ட மழித்திடு கூடிடு
சொல்லு தமிழ்மகற்கு - மறம்
இல்லையெனும்குறை தீர எழுந்திடு
ஏறிடுஆதவனே..

என்ன வியப்பொரு கண்ணைப் பறித்திடு
மின்னல் ஒளிக்குழம்பு - புகழ்
மன்னன் அவன் ஒளியூடு எழுந்தொரு
மாமலையாய் நடந்தான்..
பின்னை இருந்ததுபோதும் இனிப்பகை
வென்று முடித்து விடு - எழில்
அன்னை தமிழ் இவள்மண்ணின் உரித்திவள்
ஆணையிட்டேன் தொடர்வாய்..

சொன்ன கணத்தினில் மன்னன்கரம்தனில்
சின்னது விரலசைய - பெரும்
மின்னிவெடித்தொரு மேகமுடைந்தது
போலமுழக்கமுடன்..
என்னவியப்பது எழுந்துவிரைந்தது
இன்னொரு போர்செறிவு - படை
பின்னிஉடைத்தது பகைவர்நிலத்தினில்
புகைய பெரும் நெருப்பு...

வண்ண மத்தாப்புகள் வானில் பொழிந்தன
வாரி மழையெனவே - பெரும்
விண்ணு மதிர்ந்திட வேகமெடுத்தொரு
போரும் நடந்ததுவே..
கண்ணை விழித்தவள் என்னைக் குறித்துமே
கனவினை விட்டெழுந்து - கவின்
மண்ணினை மக்களை காத்திடு என்றனள்
மங்கை, விழித்தெழுந்தேன்..

Sunday, December 12, 2010

வரம் தராத வசந்தங்கள்

நெய்யூறும் விழிகொண்டு நெஞ்சக்கருமைதனில்
பொய்யூறும் பேச்சாலே புதுவண்ணஒளியேற்றி
ஓய்யாரம் கொள்ளுமுன் ஒடிந்தஇடை நளினம்
தெய்யென்று ஆடத்தான் தேவிமயக்கினையே

தேகம் அழைந்துகுளிர் தென்றல்வரும் பொய்கையிலே
ஏகம் நனைந்துடலை ஏற்றமிட மஞ்சள் வெயில்
தாகம் கொடுத்துமனம் தான் மறக்கச்செய்தவளே
மோகம் எடுக்கவைத்த முழுநிலவே எங்குசென்றாய்

பாவி எனைவிடுத்து பகல்நிலவாய் ஆனதென்ன
நீவி மனம்கிளர்ந்து நெஞ்சுரைத்த மெய்மாறி
தேவி நீசென்றதெங்கே தென்றல்தனும் அறியாதோ
கூவிவிழித் துன்னைக் கூப்பிடவும் கேளாதோ

வற்றும் குளத்தின் ஒரு வண்ணமலர் போலிருந்து
குற்றுயிரில் வாடுதெனக் கோகிலமே வாடுகின்றேன்
இற்றைவரை நீயும் எழுந்தருள வில்லையடீ
சற்றும் இரங்கிவரம் தாராத வசந்தம் நீ!

உனையிழந்த வாழ்வில் உடல்நீவும் தென்றலதும்
சுனை யெழுந்த நீரலையும் செவ்வான இளங் கதிரும்
தனை இழந்த பூவுமதிற் தாவும் சிறுவண்டினமும்
புனை கவியும் யாவுமொரு புண்ணாக நோகுதடீ

சொட்டும் மகிழ்வில்லை சூழ்நிறைசேர் இன்பங்கள்
கொட்டும் நச்சரவக் கொடுமையெனக் தோன்றுதடீ
வட்டவிழிக் கண்மலரே வானமதில் ஏறியிவன்
கிட்டஅடி வைத்துன்னை கட்டிவிடத் தோன்றுதடீ

பூவைக் பார்த்தழுதேன் புதுமலரைத் தாவென்றேன்
தாவும் காற்றிடமும் தலைமகளின் இடங்கேட்டேன்
பாவைமறைந்த இடம் பார்த்தவர் யார் எனக்கேட்டு
சாவை பிரித்த நிலம் தனில்வீழ்ந்து அழுதெழுதேன்

வந்திடெனக் கேட்டென்ன வரவில்லை யென்னுயிரே
எந்தநா ளிளகி மனம் எழுந்தருளி என்குடிசை
வந்திடுவாய்? எண்ணிஉயிர் வாழுமுடல் தான் நீங்கி
வெந்திடவும் செய்வாயோ வரம் தாரா வசந்தமே

வாழ்வில்நீயில்லாத வசந்தங்கள் உண்டோடி?
பாழும் துயர்வாழ்வில் பார்த்தநிலை போதுமடி
மீளும் நினவுகளில் மீண்டும் உனைகேட்டும்
வாழும் உலகெனக்கு வரம் தராத வசந்தங்களே

பெண்ணென்று எண்ணி...!

    1. பெண்ணொன்று கண்டேன் பகுதி 1
வெயிலடித்த வேதனையில் உடல்நொந்தே புவியாள்
இருளெடுத்து துகிலெனவே இடையுடுத்து தூங்க
அதையெடுத்துப் பார்க்கவென ஆசைகொண்ட நிலவன்
இருளுடையை ஒளிக்கரத்தால் எடுத்தொதுக்க எண்ண
                                                                                             ( தொடர...)

வீரம் விளைந்தவரே!

வீரம் எடுத்து விளைந்தவரே உங்கள்
தாகம்தணிக்க முடியலையே
பாரம் சுமக்கப் பிறந்தவரே இன்னும்’
பாவம் அழித்து முடியலையே
கோரம் நிறுத்த உதித்தவரே எங்கள்
கோலம் சிறக்க முடியலையே
ஈரம் துடைக்க விளைந்தவரே கண்ணில்
இரத்தம் வழியுது தாங்கலையே

விண்ணும் அதிரிட மின்னல் பொடிபட
சங்குமுழங்கிட செங்களமே
கண்ணும் எரிந்திடகாலும் வலித்திட
காடுவயல் நடைகொண்டதுமே
மண்ணும் பறந்திட மாண்டுஎதிரிகள்
மாமலையென்று குவிந்துவிழ
பண்ணுமுயர் பெருவீரம் விளைத்தனை
பாதியில் வீட்டுநீர் சென்றதெங்கே?

பேய்கள் துரத்திட ஓடுகின்றோம் காலும்
பின்னிவலியெழ காட்டினிலே
மாய இருள்வந்து மூடவிழி களும்
மங்கிச் செல்லும்வழி காணாமலே
பாய்ந்து குதறிடும்கோர விலங்குகள்
பக்க இருந்து பலிஎடுத்தும்
காயம் கிழித்துடல் நோகக் கதறினோம்
காக்க எவரையும் காணலையே

எம்மினம் காத்திட்ட உத்தமரே நம்மை
ஏங்கவிட்டு இடைசென்றவரே
செம்மனக் காவல்கொள் சிற்பிகளே தமிழ்
சேவகம் செய்திட்ட மாவீரரே
வெம்மை மிகுந்தது வேண்டும் உதவிகள்
வீரம் விளைந்திட வேண்டுமையா
நம்மில் உறுதியைத்தாரும் அதற்கென
நாடிவந்து எம்மில் சேருமையா

ஆண்ட மைந்தரே மீண்டும் ஆளுவோம்!

காற்றினி லாடிடும் தீபங்கள் கண்டேஎம் கண்கள் அழுகின்றது
தேற்றவும் வார்த்தை யில்லாதொரு நெஞ்சமும் தீயாய் எரிகிறது
நேற்றிருந்த பெருவாழ்வு சிதைந்தொரு நிர்மலம் ஆனதிங்கு
தோற்ற அறமும் நல் வாய்மையும் நீதியும் எங்குதான் போனதின்று?

கல்லறை சுற்றியே அன்னையரும் தங்கை கட்டியவள் மனைவி
வல்லவீரர் தம்மின் சொந்த உறவுகள்  வந்து விழுந் தழவே
வெல்ல வந்த விதி வேடிக்கை ஆக்கியே வீரர்தமை எதிர்த்து
கொல்ல விளைந்ததும் குற்றம் புரிந்ததும் கூடிஅழித்ததென்ன?

மண்ணைத் தொடுபவன் கையை எடுத்திட மைந்தர் குழுமிநின்றீர்
பெண்ணைத் தொடவரும் பித்தனைக் கண்டதும் பீதிகொண்டோட வைத்தீர்
எண்ண முதலெழுந் தோடிஇடர்களைந் தெத்தனை வண்ணமிட்டீர்
என்ன நடந்தது, ஏன்இது ஆனது,  யாரிடம் நீதி கேட்போம்?

மின்னு மொளிர்தேவ லோகமுறைந்திடு மாதி சிவனிடமா?
கன்ன மறைந்திடில் காட்டுகன்னம் என்ற தேவமகனிடமா?
பின்னிச் சுழன்றிடும் பூமியைக் காத்திடும் ஆதிசக்தியிடமா?
இன்னும் எவர் உண்டு என்னநடந்தது எங்குபோய் கேட்பதிது?

நீதி நேர்மையெனச் சொன்னவரோ அவர்நெஞ்சில் துரோகமிட்டு
ஓதி விடுத்த தோர் பேயெனவே மாறி ஓரவஞ்சம் புரிந்தார்
ஆவி துடித்தது அத்தனைமேனியும் ஆவெனவே அலறி
பீதிபிடித்துக் கதறித் துடிக்கையில் பித்தம் பிடித் தழித்தார்

காத்தவர் தம்மையும் காவல்புரி தோட்டக் காய்கனி பூவழித்தே
நீத்த வெறும் சாம்பல் காடுசுடலைக்கு நேர்நிக ராக்கி வைத்தார்
வேர்த்த மனதுடன் வெம்மைகொண்டே இங்கு வேண்டுகிறோம் விதியே
நேத்து நடந்தது மாற்றி நமக்கொரு நீதி கொடுத்திடுவாய்!

வெந்தழல் வீசிடும்மைந்தர் கனவுகள் வேண்டும்விடியல்பெற
சந்தனம்பூசிச் செழித்த உடல்தன்னின் சுந்தரஜோதி தன்னும்
வந்து எமதுடல் பற்றிஎழுந்தொரு வீரம் செறிய வேண்டும்
சிந்து படித்தொரு செந்தமிழின் பகை வென்று முடிக்கவேண்டும்

கண்ணிமை மூடித்  திறக்கமுன்னே கதிர் கண்டபனி யெனவே
மண்ணின் பெரும்பகை எண்ணியொழித்திட்ட மைந்தர்வலிமைகொண்டே
தண்ணிலவின் ஒளி மின்னுமிரவினில் தாயுட னன்னமுண்டு
அண்ணனும் தங்கையும் ஆழ்கடலின்யுத்தம் அள்ளியவீரம் தன்னும்

அத்தனையும் கொண்டு சொத்துப் பரம்பரை அன்னியர்கையிருந்து
மொத்தம் பறித்துமே ஈழமண்ணி லெங்கள் முத்திரை குத்திடுவோம்
நித்திய மைந்தரின் பாதைதன்னி லீழ நாட்டின் அரசமைத்து
பத்துத்தலைமுறை ஆண்டுகளித்திட உற்ற வழி வகுப்போம்

Thursday, December 9, 2010

நீதிக்கு முன் நிறுத்து!

ஓடித்திரிந்தவளும் உறங்கிடினும் உலகமதின்
மூடிக்கிடந்தவிழி மெல்லத்திறந்துவிட்டாள்
வாடிகிடந்துமிவள் வாழ்வழித்துவிட்டவரை
தேடிச்சிறையனுப்ப திடம் கொண்டெழுவாயோ.

பாடிபறந்தகுயில் பாட்டிசைத்து சோலைதனில்
கூடிகழித்திருக்க குரல்வளை நெரித்தவரை
தேடிப்பிடித்துலகில் தீயருக்கு விலங்கிட்டு
ஆடிகடன்முடிக்க ஆணையிட்டு நீ எழுவாய்!

பூஞ்சரமாய் விடுதலையை போற்றிமனமெழுவே
ஏன்சிரித்து வாழ்ந்தவளை இத்தனை கொடுமைசெய்தார்
தேன்சுவைத்த வாழ்வுதனை தேவமகளாம் இவளை
ஊனழித்து சிதைத்தவரை உள்ளேஅனுப்ப எழு!

வெட்டியவன் கைளினை விளங்காமல் போகஅவன்
கட்டிலில்படுக்க வைத்து கண்ணிரண்டு பொய்த்துவலி
பட்டுபெருந்துன்பம் பாவியவன் கதறியழும்
மட்டும் மனம்ஆறாது மகனே துடித்திடடா!

காதகப் பேய்களங்கு கடித்துக் குதறுவதாய்
மாதரைப் பிள்ளைகளை மதத்து வெறிபிடித்து
சேதமழித்துஅவரைச் செத்துவிடசெய்பவரை
நீதிக்கு முன்நிறுத்தி நெஞ்சம் அமைதிகொள்ளு!

Saturday, December 4, 2010

விடுதலை வேலியில் கதியால் போடு!

அடித்தீர் கடிக்கவரும் அரவந்தன்னை
    ஆவென்று அலறியது உலகப்பந்து
கடித்தே உடல்நஞ்சாய்க் கருகிவீழ
    கண்டும் கண்மூடிகிடந்ததன்று
துடித்தீர் நிலைகண்டு சோர்ந்தபோது
   சூரியனும் ஒளிதந்து உறுதியாச்சு
முடித்தார் பகல்தானும் இரவென்றாக
  முகில்மூடி ஈழமண் இருளுமாச்சு

கடுந்தோள் வலிகொண்டு களமுமாடி
   காற்றின் வலிகொண்டு தினமும்ஓடி
கொடுந்தேள் விளையாடும் காடுறங்கி
   கும்மிருட்டுவேளையில் குளிரும்தாங்கி
படுந்துன்பம் பட்டுயிரும் பாதிகெட்டு
    பாயில்லாத் தரைமீது படுத்துறங்கி
சுடும்படையும் சுடுவனையும் வழியிற்கண்டு
     சுழன்றுபகை முடித்து நிலங் காத்தீரன்றோ

பெற்ற துன்பம் பேசரிய கொடுமை என்றால்
   பிறந்திட்டவீரம் ஓர் பெருமையன்றோ
உற்ற துயர் அத்தைனையுமுடனே போகும்
   உரிமைபோர் ஓரடிமுன் வைக்கத்தானே
கற்றவரும் மற்றவரும் போற்றும் வண்ணம்
    கண்ணியமும் காத்தரசு கண்டீரன்றோ
விற்றவரெம் மினத்திடையே விலையாய்போக
    வீடிழந்து நாடிழந்து விரயம் ஆனோம்

புற்றிலெழும் ஈசலெனப்புறப்பட்டேஓர்
     பொழுதில்பலர் தலைசீவிப் பொட்டும்வைத்து
வெற்றி எனவந்தவரே வீரம் கண்டு
    விஷமாக சேலைகட்டி வீரங்கொன்றார்
சுற்றிவரும் வானத்தில்  கெட்டிக்காரச்
   சுடும்பறவை வட்டமிட்டு முட்டைபோட
பற்றிஎரி  தீவெடித்துப் பலதும் போக
   பாரெங்கும் கிலிஎடுத்துப் பாவம் கொண்டார்

எத்தனைதான் போனாலும் இறவாவீரம்
  இட்டபெருங்கனவெனும் லட்சியமாம்
வைத்ததனை எடுத்திடுவர் வினைகள் செய்தோர்
    வாங்காமல் போகவிட மாட்டோமன்றோ
சத்தியமும்வென்றிடட்டும் வெல்லவைப்போம்
   சாவினையும் தந்தவரோ மரணத்தேவி
கைத்தலமும் பற்றிடக் காண்போம் நீதிக்
   கரங்களிள் தொங்கிடவும் செய்வோம்பாரீர்

நித்திரையே கொண்டாலும் மைந்தர்கேளீர்
  நினைவெல்லாம் சுதந்திரத்தீயே கொண்டோம்
இத்தரையும் மீட்டிடுவோம் இன்பம் காண்போம்
   எடுத்த அடிமுன்வைத்து எல்லைபோட்டு
புத்தரும் கந்தவேள் சேர்ந்துவாழப்
   புறப்பட்ட கதைக்கொரு முடிவுகாண்போம்
வித்தகரே உம் வீரம் கொண்டே நாமும்
  விடுதலையாம் வேலிதனில் கதியால் நடுவோம்
.      

படையில்லாத ஊர் வேண்டும்!

இலைமீது தழுவி குளிரோடு இழைந்து
முகம்மீது படர்ந்தோடும் காற்றே - உன்னை
அலையாது நில்லு எனக்கூறி வேலி
தடைபோட்டு மறித்தாரும் இல்லை

கரைமீது மோதும் அலையாரே சொல்லீர்
கடல்மீது ஒருவேலி கட்டி
உருளாதே என்று ஒருநீதி கண்டு
தடுத்தாரும் எங்கணுமில்லை

மலைமீ தொழிந்து மறுநாளில் வந்து
உலகோட சுழன்றோடும் நிலவே
கருவானில் யாரும் கரம்நீட்டி உன்னை
சிறை போட்டு கொண்டதோ சொல்லு

ஒருபாவம் அறியா தமிழான என்னை
ஓடாதே என்று கால்கட்டி
பெருவேலி யிட்டு கடுங்காவல் செய்து
சிறையாக்கி வைத்ததேன் சொல்லு

விரிவானில் காற்றில் விரைந்தோடும் குருவி
எனவாகிப் பறந்தோட வேண்டும்
முகிலாகி வானில் மிகிழ்வோடு நீந்தும்
முழுதான சுதந்திரம் வேண்டும்

குழலூதி மலரில் குறுந்தேனை யுண்டு
புவிமிது உலவிடும் வண்டும்
கனிதேடி ஓடி மரந்தாவும் அணிலும்
காண்கின்ற அகிலமே வேண்டும்

ஒருநாடு வேண்டும் அதில்நாங்கள் மீண்டும்
குதித்தாடும் சுதந்திரம் வேண்டும்
தெருவீதி யெங்கும் செறிவான படைகள்
நிற்காத ஊரொன்று வேண்டும்

வயலோரம் சென்று கதிர்நீவி நின்று
பயமின்றி மகிழ்தாட வேண்டும்
இரவாகி வந்தும் எழிலான மங்கை
தனியாக அகம் திரும்பவேண்டும்

தருவார்கள் என்று தனிஈழ அரசு
அமைகின்ற திசைநோக்கி நின்றோம்
பெருவாழ்வு மீண்டும் வரும்ஆசை கொண்டு
விடியாதோ என் ஏங்கி நின்றோம்

உலைபோன அரிசி சோறாகி எங்கள்
இலைமீது விழுகின்ற வரையில்
உடலோடு ஒன்றாய் உயிர்சேர்ந்து நின்று
பிணமாகா விதிஒன்று வேண்டும்