Monday, October 11, 2010

கவிபாட மறவேன்!

நானெழுந்து நடந்தாலுந் தமிழன்னை
      தாள்பணிந்தே நடப்பேன்
 கூன்விழுந்து கிடந்தாலும் இன்பத்தமிழ்க்
     கொஞ்சுகவி படிப்பேன்
வானெழுந்த வெயில்போயும் காலையிலே
      வந்து விடுவதைப்போல்
போனதுபோ லிருப்பேன் பின்னால்வந்து
    போற்றித் தமிழ்படிப்பேன்

தேனொழுகும் கனிக்காய் பெற்றவரைச்
        சுற்றிய ஐங்கரன்போல்
நானிலம் சுற்றுவதாய் சொல்லியிங்கே
       நல்லோரைச் சுற்றிடுவேன்
வானுறை தெய்வவலம் செய்யவெண்ணி
      கோவிலைத்தான் சுழல்வேன்
தேன்மலரைச் சுழன்றாடும் வண்டெனவே
      தீந்தமிழ் சுற்றிநிற்பேன்

மீனெழுந்து துள்ளும்மேலே மீண்டுமது
      நீரினில் தானேவிழும்
மின்னலிடு மேகம்செல்லும் மழைமீண்டும்
      மெல்லத் திரும்பிவரும்
என்னமன மெடுத்தாயினும் இன்தமிழ்
      சொல்லமறந் தொருகால்
மென்தமிழில் பணிசெய்ய மறந்திந்த
     மேனி கிடந்திடுமோ

கற்றிடுவேன் தமிழ்ச்சொல்லை எடுத்தெங்கு
       வைப்பதென அறிய
சொற்றமிழைக் கட்டும் வித்தகனாயொரு
      சுந்தரப் பாட்டிசைக்க
பெற்றவளை விட்டுப்போவ துவோபுத்தி
      கெட்டு மறுகுவனோ
சற்றும்அயரேன் சத்தம்செய்யே னென்று
     கத்திக்கத்திச் சொல்லுவேன்

No comments:

Post a Comment