Tuesday, September 6, 2011

மூவர் உயிர்காக்க தீயில் தீய்ந்தவள்!

தீதாகிப் புன்மைகொண்ட பூமியென்றே நீயும்
தீயாகிப்போக மனம் கொண்டதென்ன
நீயாகிப்போக என்ன நேர்ந்ததம்மா- உன்
நினைவெங்கும் தீஎழுந்த காரணமா
தூதாகித் தேவரிடம் சென்றனையோ -எமன்
தோன்றாது வழிநிறுத்த தொழுதனையோ
வாதாடி வெல்லவழி இல்லையென - மூவர்
வாழவென நீஉயிரை தந்ததென்ன ?

ஆளுபவன் நீதிகொடும் ஆட்சியென்று - அதை
அழித்தவளாம் கண்ணகிக்கு தங்கையம்மா
நீளுலகில் நீதிகேட்க நீயிருந்தால் - எம்
நெஞ்சினிலே இன்னுமுரம் காணுமம்மா
வாழ்வழிந்து போகஎன்ன வைத்துவோ உன்
வயதினிலே வானழைத்து கொண்டதுவோ
பாழுமுயிர் போனபின்பு வருவதில்லை - இந்தப்
பாரினிலே வீழ்ந்த உடல் எழுவதில்லை

தேவை எங்கள் விடுதலையைக் கேட்பதற்கு ஒன்று
சேருமிளம் சந்ததியின் வீரஒலி
சாவைவிடுத் தொன்றுபட்டுச் சாதிப்பதே உனைச்
சார்ந்திருக்கும் கடமையென்று கொள்மகளே
கூவியெழ நீதிகேட்க குரல் கொடுங்கள் -விட்டு
கூடியழ வைப்பதெல்லாம் கைவிடுங்கள்
வீரமுடன் நீதுடித்துப் பொங்கியெழு அந்த
வேகுமுடல் நீசர்களை வெல்லவம்மா

முப்புரங்கள் தீயிலிட்டான் முக்கண்ணவன்- அனல்
மூளத்தீயை தீவில் இட்டான் அனுமன், ஒரு
கைப்பிடித்த சிலம்புடனே கண்ணகியோ ஆளும்
காவலனின் குற்றம் கண்டு ஊரெரித்தாள்
முப்படைகள் கண்டு தமிழ்ஈழ மண்ணை- அன்று
மேதினியில் சேர்ந்தரசு மூட்டியதீ
இப்பொழுதும் எரியுதம்மா ஈழமண்ணில் அது
ஏன் எரித்துவிட்டதுவோ உன்னைவீணில்!

No comments:

Post a Comment