Wednesday, October 5, 2011

காலைப்பொழுதின் சுகம்


தெளிந்தது மனமும் துலங்கிடுவானும்
தென்றல்தொடுஞ் சுனையும்
கழிந்தது இரவும் கரைந்தவை இருளும்
கனவுகளெழும் துயிலும்
நெளிந்ததுஆறும் நிமிர்ந்தன மரமும்
நின்றதும் நிரையெனவும்
அழிந்தது பனி, புல்அணைத்திடும் இரவின்
அதிசுகம் கசந்திடவே

வழிந்தது மதுவும் வாசனை மலர்கள்
விரிந்திடும் இதழ்பரவும்
பொழிந்ததும் தூறல் போயின முகில்கள்
புரண்டிடும் மலையிடையும்
கொழித்திடும் பெண்கள் கூந்தலில் மலர்கள்
குவிந்தன, விழிமலரும்
பழித்தன காதல் பாங்குடை தோளில்
பலமெடு ஆடவரும்

செழித்திடவாழ்வு சிரித்தன இதயம்
சிவந்திடும் காலையிலே
குளித்தனஇன்பம் கொண்டன ஊரின்
குடிகளில் மாந்தர்களே
புளித்திடு மாவின் பிஞ்செனும் சிறுவர்
பேசிடும் வழிநடையும்
விளித்திட அறிவும் விதையிட வளரும்
வீறொடு பள்ளியிற்கே

பழுத்திடும் கனிகள் ருசித்திடும் குருவி
பாய்ந்திடு அணில்களுடன்
கழுத்திடு மணியும் கலகலஒலியில்
கடுநடை ஏறுகளும்
இழுத்திடும் வண்டி இரைந்திடுமூச்சு
ஏய்எனும் குரலொலியும்
எழுந்திடுங் காலை இசையுடன் தாளம்
இவைதரும் சுகமல்லவோ 

எழில்தரும் வாழ்வில் எழுபவைஎல்லாம்
இயற்கையின் ஒலிநாதம்
களிகொள்ளமனதில் கவிதைகள் தோன்றும்
கனிவுடன் உருவாகும்
வெளிதனில் நின்றால் விளைந்திடு தென்றல்
வருடிய சுகம்காணும்
ஒழிந்தது துயரும் உயர்ந்திட மனமும்,
என உளம் புதிதாகும்

குழிந்திடும் கண்ணும் குறைந்திடும் பார்வை
கூனிடும் முதுமையரும்
அழுந்திடு பிணியும் உழன்றிடவலியும்
அதனுடன் சிலராகும்                         
வழுந்திய குரலும் மழலையின்மனமும்
மாதரின்அரவணைப்பும்
மழுந்திய மனமும் மயங்கிய அறிவும்
மாற்றமும் ஒருவாழ்வே

No comments:

Post a Comment