Saturday, December 31, 2011

நிறைவேறாத காதல்

நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண்முகில் தாவிவந்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலாவில் தேடினேன்

கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
அன்பில் அளிக்கவென்றே
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
மின்னிய வெண்ணொளியில் - அங்கே
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
துள்ளிக் கடந்து சென்றேன்

மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது
கையள்ளி நீர்தெளித்தேன்
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்
சேரமுடிய வில்லை

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - அட
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா
ஒன்றிட ஒட்டிவைத்தேன்

ஆனவகையினில் ஆகாதவேலைகள்
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென
ஏதும் புரிவ தல்லேன்
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்
தேடியலைந்து சென்றேன் - ஆயின
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை
வேடிக்கை காணாநின்றேன்

கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்
கன்னம் பழமெனவும் அவள்
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி
வேதனை பார்வைதரும்
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்
ஏனோ மனதிற் கொண்டாள் - இள
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்
வந்து அணைப்ப தெப்போ?

சிறப்பொடு வாழ்வோம்

தெரிவதும் புரிவதும் உலகோ - இல்லை
தெளிவிலை எனச்சுழல் கொளுதோ
அரியதும் அழகதும் உலகோ - இல்லை
அதனிடை பெருமிருள் வருதோ
சரியதும் பிழையதும் எதுவோ - அது
சரிநிகர் வாழ்வினில் உளதோ
எரிமலை கொளும்பெரும் பிளவோ அது
எதில்மன மிடைதனும் எழுதோ

பிறப்பதும் வாழ்வெனும் பொழுதில் - பல
பிழைகளும் பிறப்பது எதனால்?
இறப்பது எனவர முன்னே - பல
இருப்பவை அழிப்பதும் எதனால்?
சிறப்பென வாழ்ந்திட எண்ணும் - மனம்
சிரிப்பினில் இகழ்வதும் எதனால்?
நிறப்பது சிவப்பென உணர்வே - பயன்
நிரப்பிட வெறுப்பெனும் முடிவே!

தரித்திட மணிமுடி வேண்டாம் - ஒரு
தரமற்ற பெயர்தனும் வேண்டாம்
உரித்தது இவர்மனம் பொன்னோ - இலை
உருப்படி யிலைக்களி மண்ணோ
சரித்திரம் படைப்பது மிவனோ - அல்ல
சரிதிறன் உருவழித் திடவோ
விரியுல கதிலிவை வேண்டாம் - ஒரு
யியல்புறு நடுநிலை போதும்

கறந்திடும் பால்ஒரு போதும் - மடி
கொளத்திரும் பிடுசெய லில்லை
உறங்கிடும் மனம்ஒரு போதும் - ஒளி
உதயமும் கொளுமென இல்லை
மறந்தொரு தவறதும் செய்யா - உன்
மனதினில் கவனமும் கொள்ளு
இறந்திடும் நிகழ்எதிர் காலம் -இவை
இனித்திட உயர்வழி செல்லு

பறந்திடும் சிறிதொரு பறவை -அது
பார்த்திடு முலகதைப் போலே
துறவெனக் காண்மன துள்ளே - நீ
தொலைவினில் பறந்திடல் போலே
நிறமொடு வாழ்ந்திடு ஆனால் - நின்
நினைவது வெளுத்திடு மேலாய்
அறந்தனில் அக்கறை கொள்ளு - இதை
அறிந்திந்த உலகினை வெல்லு !

Friday, December 30, 2011

வேண்டாம் உலக வாழ்வு!

சிலையாகக் கல்லாகச் செங்கதிர் ஒளியாகச்
சிவந்ததோர் மாலைவிண்ணின்
அலையும்வெண் முகிலாக அதனூடு மதியாக
அடங்காத திமிரெடுத்த
மலையாகக் குயிலாக மரம்மீது துணைகூடும்
மகிழ்வான குருவியாக
இலைபூவைத் தழுமோர் இளந்தென்றற் காற்றாக
எம்மையும் படைக்காத தேன்?

நிலையாக ஒர்நேரில் நிற்கின்ற மரமாக,
நில்லாமற் தடம்புரண்டு
அலைந்தோடும் காட்டாற்று அருவியாய் அதுசேரும்
ஆழியென் றாக்கலின்றி
தொலையாத துயரோடு தோன்றிடும் பிணியாலே
தூரமென் றின்பங்கொண்டு
கொலைபாதகர் கையின் கொடும்வாளில் உயிர்போகும்
கோலமும் ஏன் படைத்தாய்?

குலையான கனியாக கூடிடும்கொத்தான
குறுவாழ்வு மலர்கள்போலும்
தலைசாய வீழ்ந்துமண் தழுவுநெற் கதிராக
தன்மானங் கூனலிட்டு
இலையென்ற துன்பங்கள் எதிர்வந்து மனதோடு
இழையவும் தளதளத்து
புலையுண்டு மதிகெட்டு பிறழ்கின்ற வாழ்வாகப்
பிறவியுந் தந்ததேனோ?

கிளை தூங்கு சிறுமந்தி யெனஓடி வீழ்ந்துமோர்
கீழ்மையில் சிந்தைவாட
வளைகின்ற முதுமையோ வாவென்று கூறிமேல்
வானத்தின் திசைகாட்டிட
நுளைகின்ற காற்றாலே நுண்துளைக் குழலூதும்
நேரிலே உடலூதியும்
விளைகின்ற உயிர்க்காற்று விதிகொள்ள வீழுமிவ்
வெற்றுடல் தந்ததேனோ?

மழைகொண்ட வான்மீதில் மறுகோடி உறையுமென்
மாதேவி சக்திதாயே !
பிழைகொண்ட வாழ்வீது பேர்மட்டு முயர்வான
பிறவியாம் மனிதமென்றே
துளைகொண்ட மேனியுந் துடிக்கின்ற வேளைகள்
துஞ்சிடுந் நெஞ்சம் வைத்து
விளைகின்ற மேனியில் விஷம் வைத்து மீந்தனை
வேண்டா மிவ்வுலக வாழ்வு!