Monday, September 5, 2011

நாமே கொல்வதா?

நீ நினைத்து தீயுமிட்ட தேன்மகளே நெஞ்சிலென்ன
தீசெழித்து ஆனதென்ன கோலம்
பூஎடுத்துப் போடஎம்மை நீ விதித்துப் போனதென்ன
பூமியிது செய்துவிட்ட பாவம்
மூவருக்கும் போட்டவிதி மாறுமென்று காணமுன்பு
நீமுடிச்சு போட்டதென்ன முந்தி
சாவெடுக்கச் சொன்னவர்யார் சத்தியமோ நித்திலமோ
சற்றும்காக்கவில்லை அந்தச்செந்தீ

பேய்கனக்க வாழுமெங்கள் பூமியைப்பார் வீதியெங்கும்
நோய்பிடித்த ராஜபுத்த சோரம்
தாயிருக்கப் பெண்ணை வைத்து தாகமிட்ட காமுகர்க்கு
தன்னுடலைப் பலிகொடுக்கும் கோரம்
சேய்பிரித்துக் கொல்லுவதும் சின்னவர்கள் நீக்குவதும்
சொல்லி இனம் சுத்தமாக்குங் காலை
தேய்நிலவாய் வாடுகிறோம் தேகங்காக்க ஓடுகிறோம்
தேவதையே நீஎரித்த தேனோ?

மாவினிலே பிஞ்சிருக்க மனது கொள்ளு மோபறிக்க
மாந்தரிலும் பிஞ்சு என்பர் நாளை
மேவியுயர் வாழ்வெடுத்து மேதினியில் ஆற்றல்கொள்வர்
மேனியொன்று தேவைஎன்ப தாலே
தீயெடுத்துத் தேகமிடத் தேவையில்லை உன்நினைவில்
தீயர்தமை நோக்கி எழு, காலை
நீமிதித்த தீயெனவே நெஞ்சிற்தீமை கண்டுதுடி
நீபழுக்கும் மட்டும்காணும் வாழ்வை

கோவலனைக் கொன்றவனே குற்றமென்று தானழிந்தான்
கேள்விகேட்ட கண்ணகியு மல்ல
காவலனும் வாலினிலே தீயைவைக்க நாடெரித்தான்
தானெரிக்க வில்லைராம தூதன்
சாவதெனில் தீமைதுயர் சார்ந்திருக்கும் துன்பங்களே
சற்றும்மறந் துன்னைஅழிக் காதே
பாவமதைத் தேடியழி பாசஉணர் வோடுகழி
பலமெடுத்து வெல்லுஉந்தன் வாழ்வை

No comments:

Post a Comment