Thursday, October 21, 2010

எழுந்து நில்லு! ஈழம் வெல்லு!

கொட்டியடி மேளம் கூவி எழுந்திடு
   தட்டடா கைகளிங்கு
பட்டவினைபோதும் பற்றியெழுந்தது
   நெஞ்சில் பெருந்தீயென்று
சுட்டவன்கொன்றவன் சுற்றித்திரிகிறான்
   வெட்டவெளியிலின்று
சொல்லு சுதந்திரம்கேட்டவன் வாழ்வதோ
   கூட்டில் குருவிஎன்று

வெட்டிக்குருதியைக் கொட்டச் சிரித்தவன்
   பட்டுத் துணியுடுத்து
கட்டிமாடிமனை காசு,பணமென
   கன்னியர் சூழ நின்று
பட்டம்பதவியைப் பார்த்திடநாமுமோ
   குட்டக்குட்டக் குனிந்து
சட்டியில் ஊற்றிய கஞ்சியை ஏந்திட 
   வெட்கமோ இல்லைச்சொல்லு

தட்டியெழுப்பிடு நீதிதேவன்தனை
   தூங்குவதேனோ என்று
கொட்டாவி விட்டுமே கூனிக்கிடந்தது
   இத்துடன் போதுமென்று
குட்டகுட்டக் குனிந்துவிட்டேனினிக்
    குப்புற வீழ்வேனென்று
எட்டஇருந்துபோதும் எமக்கொரு
   உற்றநீதி சொல்லென்று

வட்டக்குளநீரில் வாரிக்கல்லைஎறி
    சுற்றும் அலைகளங்கு
விட்டு இருந்திட நீரலை தூங்கிடும் 
    வையகம்போல இன்று
எட்டுதிசையிலும் எங்கள் நீதியெங்கே
    கத்து குழறு நின்று
சட்டக்கதவுகள் சற்றுதிறந்திடும்
   தட்டநம் கைகள் கொண்டு
 
வெஞ்சமர் விட்டால் விடிவு வருமென
    சொன்னவ ரெங்கேயின்று
கஞ்சர்கயவரை நம்பிஉலகமும்
     கைவிட்ட தெம்மையன்று
கொஞ்சிக்குலவிடும் சிங்களமும் தமிழ்
    ஒன்றாயிருங்கள் என்று
கூறியவர்தம்மை கூப்பிட்டுகேளடா
    எங்கே நடக்குதென்று
 
கன்னி உடலைக் கதறக்கிழித்தவன்
     கட்டிலில் தூங்குகிறான்
காக்கநினைத்தவன் யாக்கைவிடுத்துமே
    காற்றினில் நீந்துகிறான்
வன்னியழித்திட வந்தபடைமுழு
     மண்ணு மழிக்குமென்றோம்
வாயிலடித்து வயிற்றிலே குத்தி
     வா எம்மை காக்க என்றோம்
 
வெந்தபுண்ணில்சுடு வேலினைப் பாய்ச்சியே
     வேடிக்கை பார்த்தவரின்
வீட்டுகதவினைத் தட்டுவோம் இங்குதான்
     விட்ட பிழைகள் என்று
கந்தலுடுத்துமோர் கண்ணியம் காத்தவர்
    எங்கள் தமிழர் என்று
கட்டிய `ரை`யுடன் கோட்டுமணிந்தவர்
    சத்தியம் கெட்டாரென்று

சேற்றையள்ளி நறுஞ்சந்தணம் பூசென்று
     சொன்னவர் கையிலின்று
நாற்றமெடுத்திட மூக்கைப் பிடிக்கையில்
    நாம்விடக் கூடாதங்கு
காற்றில் எழுந்திடக் கத்திக் கதறியே
    கூத்திடு நீதிகேட்டு
ஈற்றில் வருவது எங்களீழம் என்று
     மாற்றி எழுதச்சொல்லு

No comments:

Post a Comment