Thursday, November 29, 2012

தமிழ் பேசித் தவழ்ந்தோம்

கலை கொஞ்சுந் தமிழ்மீது கடுங்கோப மேனோ
கனிமாவின் பழமென்ன கசக்கின்ற வேம்போ
தலையான புகழ்கொண்ட தமிழென்ன தாழ்வோ
தனதன்பு தாய்தன்னைத்  தாழ்வென்ப தாமோ
நிலைதாழத்  தமிழெங்கே நிரைதன்னிற் கடையோ
நினைவென்ப தொலியாகி நினைக்கூட லிகழ்வோ
மலை போல நிமிர்ந்தாளும் மறங்கொண்ட தமிழோ
மடிமீது பிறதேச மொழிகொள்ளுந் துயிலோ

கலை கொண்ட தமிழ்காண மயிலாடு மழகே
கனிகொண்ட சுவைதேனை நிகரென்னத் தகுமே
தொலைதூர ஒளிதன்னிற் திகழ்கின்ற கதிரோ
தினந் தோன்றி ஒளிதந்தும் திசைமேற்கில் விழுதோ
குலைவாழைக் கனிகண்டு கொள்ளாது ஓடிக்
கூடைக்குள் கனிஅப்பிள் கொள்ளென்ற மனமோ
சிலைபோலு மெழில்வண்ணச் சிற்பங்கள் கொண்டும்
சேர் ரப்பர் பொம்மைகாணச் சிறப்பென்ற கதையோ

கலைமேவு மழக்கென்று கடதாசி மலர்கள்
கரமேந்தி இறைபோற்றிக் கனிவோடு தொழவோ
விலையற்ற வெறுமைக்குள் வீழ்கின்ற மனமோ
வெளிநாட்டின் பொருள்மோகம் விளைத்திட்ட செயலோ
தாய் ஊட்டப் பாலுண்டு தமிழ்கேட்டுத் தூங்கி
தாலாட்டும் சந்தங்கள் தனிலின்பங் கூட்டி
வாய்பேசத் தெரியாது வாவ் வென்று அழுதும்
வருங்காலம் புரியாது வளர்ந்தோமே தமிழில்

தாய்மைக்கும் தன்னோர்மைத் தமிழ்என்னும் வீரம்
துவள்கின்ற தேயின்று யார் செய்தபாவம்
தேய்வின்றித் தமிழ்காக்கத் திறன்கொண்டு நீயும
தெளிவான வழி சென்று தமிழ் காக்க வேண்டும்
வேய்கூரை வீட்டிக்குள் விளைகின்ற  தங்கம்
விரும்பாது வெளிநாட்டில் விதி தந்த கோலம்
தூய்மைகெட் டிரந்தாலும் தமிழ் உந்தன் தாயாள்
திசை மாறித்திரும்பாதே தமிழ் பேசி உயர்வாய்!

*******

Monday, November 26, 2012

இல்லாத தொன்றில்லை


இருக்குமா இல்லையா இருப்போர்தம்மில்
இருந்ததிது வொன்றாக இருந்தபோதும்
இருப்பதோ இல்லாமை  இருந்துபார்நீ
இருப்பதிது வொன்றேயாம் இருப்போர் சொல்ல
இருப்பதோ இல்லையோ இருந்தாலென்ன
இருப்பதைக் காண்போமென் றிருந்தோர்பாதி
இருப்பதென் றில்லையா இருத்தலின்றேல்
இருப்பதும் போகுமென் றிருந்தோர் மீதி

இருப்பது இல்லாது இருக்குமொருவன்
இருந்தாலென் இல்லையென் றானலென்ன
இருப்போரை இல்லையென் றாக்குவேன்காண்
இரு பாரம் இவ்விடம் இருத்தலாகா
இரு பாரென் றிரும்பு வாள் இருகையேந்தி
இருந்திட்ட இடத்தினுள் இருக்கவந்தான்
இருப்போரும் இருந்தபோர் இல்லையென்று
இருத்திவிட இல்லாமல் இறந்துபோனார்

இருப்போரை எளிதாக இல்லையாக்க
இருபாதி யாக்கிட இன்னல் கொண்டார்
இருந்துபார்  இருபாதி ஒன்றுமில்லை
இருக்கும்சுவ டிருக்காமல் இருக்குமென்றான்
இருந்தும் உயிரில்லையென் றாகும்போது
இரும்புமனம் கொண்டாலும் இருந்தவீரம்
இருப்பாக  இருந்ததாம் இருந்ததன்றி
இருளென்னும்   தீமைதனை இல்லையாக்க

இருக்கும் வழியறியாது இருந்தார் ஆனால்
இருந்தாலென் போனாலென் றெழுந்தசிலரால்
இருக்கும் மனவலிமையை எடுத்துஆள
இருட்டில்சில ஒளிதோன்ற , ‘இல்லையாமோ
இருப்பதோ என்றனை  இருக்கு’தென்றார்
இருக்குதாம் என்றமுதல் இருப்பேயின்றி
இருந்திடக் காண்கிறார்  இருப்பதாயின்
இருக்குதொரு எதிர்காலம் இல்லையாமோ

Sunday, November 25, 2012

தமிழே நீ நதியாக ஓடு

தமிழே நீ நதியாக ஓடு - இந்தத்
தரைமீது வழிமாறித் தொலையாம லோடு
எமதாசை மனம்மீதும் ஓடு - உனை
இசைபாடித் தொழுவோரின் இதயத்தில் ஓடு
அமர்ந்தே நில் ஆற்றுப்படுக்கை - இன்னும்
அகல்வாவி குளமென்று அலைகொண்டு ஆடு
நிமிர்ந்தோடு நேராக ஓடு - நீ
நெடுந்தூரம் நடந்தாலும் புவிகண்டு வாழு

நிமிர்ந்தாலும், புவிகொண்ட மொழிகள் - பல
நினையுண்டு தலைதூக்க நெருங்கு மப்போது
துமிதூறச் செல்வங்களோடு - நீ
தொலையாது பெரிதாகு மழைகொண்டதாகு
சுமந்தோம் உன் புகழ்தன்னை ஆண்டு - பல
சொல்லவும் முடியாத பெருந்துன்பங் கொண்டு
எமதன்பின் தமிழென்று கண்டோம் - இனி
எதிர்காலம் உண்டோவென் றோரச்சம் கொண்டோம்

அழிகின்ற மொழிநூறு உண்டு - இந்த
அகிலத்தில் தொலைகின்ற மொழியோடு சேர்ந்து
வழிகண்டு தமிழ்போகின் தீது - இது
வருங்காலம் நடைபெறக் குறி கொண்டதேது
செழிக்கின்ற மரம்வேண்டும் நீரும் - நீ
திரும்பும் உன் வழியெங்கும் தமிழ்பேச வேண்டும்
தெளிவோடு ஒளிதோன்ற வேண்டும் - இதில்
தேவையெனில் புதுப்பாதை நாம்காண வேண்டும்

மொழிஎன்ப துயிருக்கு நேராம் - இந்த
மூச்சில்லை யென்றிடில் முழுவாழ்வும் போமாம்
பொழிகின்ற மழை நின்றுபோனால் - கொண்ட
பசுமைக்கு புவிமீது இடமேது கூறு
எழில்கொண்ட தமிழ்வாழ வேண்டும் - இதற்
கெமதன்பு இதயத்தில் இடம் நல்கவேண்டும்
வழிஉண்டு வகை செய்ய வல்லோம் - இந்த
வையத்தில் தமிழ்என்ற பெருமையும் கொள்ளோம்

உருள்கின்ற கல்லென்ப குன்றின் - நிலை
யுயர்நின்று விழும்போது உடன் கையிலேந்து
வருகின்ற கல்வீழும் பாதை - அது
வரவர வேகமும் பெரிதாகும் கொள்ளு
பெரும் வீழ்ச்சி கொண்டோடி அருவி - நிலை
பிறழ்வுண்டு விழமுன்புதடையொன்று போடு
தருமின்பத் தமிழ்காத்து வெல்லு - இன்றேல்
தரைவீழும் அருவிக்குப் பெயராழி யென்று

விடியாத வாழ்வு வேண்டாம்


 தேயாத வெண்ணிலா தீண்டாத தென்றலும்
துவளாத கொடிதானும் வெயிலில்
காயாத ஈரமும் கலையாதமேகமும்
கருதாத எண்ணமும் உண்டோ
பாயத நீர்நதி பரவாத வான்வெளி
பருகாத தாகமும் நன்றோ நிலை
சாயாத நேர்மையும் சரியாத வீரமும்
சரித்திரம் தமிழ்கொண்ட தன்றோ

வேயாத கூரையும் விடியாத காலையும்
வெயிலெண்ணி ஏங்காத பயிரும்
மேயாத மான்களும் மிதவாத ஓடமும்
மிகையான அழகற்ற பூவும்
தாயாகின் வன்மையும் தவளாத குழந்தையும்
தகிக்காத உச்சியின் வெயிலும்
நோயாக போனாதாய் நிற்குமோர் நெஞ்சமும்
நிலையீது கொள்ளுதல் தகுமோ

வெல்லாத வீரமும் விளைந்திடா ஆற்றலும்
வெறிகொண்ட பகைகொல்ல வெகுண்டு
கொள்ளாத நெஞ்சமும் குறிவைத்துத் தாக்கிட
கொதிக்காத உணர்வோடு தூங்கி
துள்ளாத ஆறெனத் துடிக்காத பூவிழி
தொடங்காத ஆரம்பம் போலே
நில்லாந டந்திடு நெஞ்சை உயர்த்திடு
நீகாணும் வெற்றியை எண்ணு

செல்லாத கால்களும் தெரியாத பாதையும்
திக்கற்ற விதமான போக்கும்
கல்லாக நெஞ்சமும் கடமைக்கு ஆற்றலும்
கருவற்ற கவிதைபோல் நேர்மை
அல்லாத பார்வையும் அளவற்ற பொறுமையும்
அடிமைக்கு நிகரான வாழ்வும்
இல்லாது போகவே இறைமைக்கு வேறென
எண்ணுதல் நிறுத்தி நீசெல்வாய்

கல்லாத மூடனும் கனிவற்ற காதலும்
கடலோடு சேராத நதியும்
சொல்லாத இரகசியம் தூண்டா விளக்கொளி
தொட்டேசு கம்காணாத் தேகம்
புல்லென்ற கீழ்மையும் புனல்வீழும் தாழ்மையும்
பொழுதாகின் இருள்கொண்ட வாழ்வும்
இல்லாது வீரமும் வல்லாண்மை கொண்டுநீ
இயங்கிடு சுதந்திரம் தேவை

Wednesday, November 21, 2012

ஓய்வு

அனைவருக்கும அன்பு வணக்கம். ஒரு வாரம் ஓய்வு எடுக்கலாமா  என்று எண்ணுகிறேன் கவிதைக்கு ஓய்வு. ஒருவிளையாட்டு  தயாரிக்கலாமா என எண்ணுகிறேன். முடிந்தால் செய்வேன்.
எப்படி விளையாட்டு இருக்கும்.  இதோ இதை விளையாடிப் பாருங்கள்

யார் அந்தக் கொலைகாரன் ?
http://www.mediafire.com/?2u1lt5x2189nblb








மேலும் தேவையென்றால்

http://www.tamilvimbam.com/

நீ வாராயோ?




          நீ வாராயோ


விண்ணெழில் மதி வான்வருகுது
--வீசுங் காற்றதும் வாசங் கொள்ளுது
--வண்ண மென்முகம் வாடிக் காணுது ஏன்தானோ
கண்ணிரண்டினில் நீர்வருகுது
--காவ லெண்ணிடத் தீ எழுகுது
--காட்சி கொண்டெனைக்  கனவு கொல்லுது ஏன்தானோ
எண்ணம் துஞ்சிடத் துயரெழுகுது
--ஏழை நெஞ்சினில் தீபரவுது
--என்னவளென  நீஅழைத்ததும் நான்தானோ
பெண்மை அஞ்சிடத் தலைகுனியுது
--பேச்சிழந்திட ஊர் சிரிக்குது
--பேதை என்றிவள் ஏளனமிடப் பேசாயோ

கால் நடந்திடச் சோர்வுகொள்ளுது
--காற்று வந்துடல் சேர்த்துத் தள்ளுது
--காணும் நெஞ்சிடை ஏக்கம் கொள்ளுது வாராயோ
வேல்க ளென்றிடும் விழி ஒழுகுது
--விம்மிஎந்தனின் குரல்நடுங்குது
--விடிகிற அடிவான் சிவப்பது போல்நானோ
நால்குணத்தினில் நாணம்கெட்டது
--நாஇனித்திடும் தேவைவிட்டது
--நல்லிசைக்குமென் நாட்டம் கெட்டது நான்யாரோ
பால்நிலவினில் பார்குளிருது
--பாய்ந்தலைகடல் வேகம் கொள்ளுது
--பாவை நெஞ்சினைப் பார்த்திரங்கிடல் ஆகாதோ

காக்கை குருவி சேர்ந்து கத்துது
--காளை மாடுகள் தேடிமுட்டுது
--காட்டுத்தோப்பினில் ஆந்தைகத்துது  ஏன் தானோ
பூக்கள் மொக்கினை மெல்லவிழ்க்குது
--போயிதழ்களைக் காற்றுத் தொட்டது
--பார்க்க நெஞ்சினில் வேர்த்துக் கொட்டுது பாராயோ
வாக்குத் தந்ததை நீமறக்கவும்
--வாரிகொட்டிமண் நான்கிடக்கவும்
--வாழ்க்கை என்பது ஆகிவிட்டது வீண்தானே
தீக்கு மென்னுடல் சூடுபட்டது
--தென்றல்தொட்டதில் நோவும்கொண்டது
--திங்கள் போலுடல் தேய்ந்து கெட்டது கேளாயோ

ஊர் நகைத்திட ஓரம் நிற்பதும்
--ஊமைப் பெண்ணென வார்த்தை விட்டதும்
--ஓடித் துள்ளிடும் பாவம்கெட்டதும் உன்னாலே
ஊற்று நீரணி கீழ்க்குளிக்கவும்
--உண்மை கண்டிளம் பெண்கள் வந்ததும்
--ஓடிஎன்மன எண்ணம் கண்டவர் ஒன்றாகி
வேர் பரந்திடும் ஆல் மரமென
--வேகம்பெற்றயல் ஊர் பசப்பிட
--வேடன் விட்டம்பு  தைத்தபுள்ளென வீழ்வேனோ
கார்முகிலுக்குத் தோகை என்றிடக்
--களிநடமிடும் உன் நினைவினில்
--காலிடை கொண்ட பாம்பென நான் சாவேனோ?

அழகுக்கு அழகு !

வான் நிலவென்றால் முழுமதியழகு
வரும் மழைகாட்டும் வானவில்லழகு
தேன்மலர் பூத்தால் தினம்தினம் அழகு
திரிந்திடும் தென்றல் தொடுமுணர்வழகு

மான்களும் ஓடி மருளுவ தழகு
மனமதில் காணும் மாற்றங்க ளழகு
வான்முகில் திரளும் வடிவங்கள் அழகு
வரும் இடராகின் துணிவதும் அழகு

மின்னலில் தோன்றும் மென்பயம்அழகு
மேகத்தின் இடியில் தாய்மடி அழகு
புன்னகை பெண்ணில் பொலிந்திட அழகு
பூத்தொடு மாலை  பூசையில் அழகு

பொன்முடிவேந்தன் புகழ்பெரி தழகு
புத்தொளி ஞானம் புலமைக்கு அழகு
நன்னெடு மரங்கள் நயமுறும் சோலை
இல்லையென்றீதல் இருப்போர்க் கழகு

வன்செயல் நீத்தல்  வாழ்வினில் அழகு
வறுமையைப் போக்கல் ஆள்பவர்க் கழகு
துன்பங்கள்  வாழ்வில் தொலைந்திட அழகு
தூய மனங்கள் சேர்வதும் அழகு

எண்ணங்கள் கொள்ளும் கற்பனை அழகு
இளமையில் காதற் பிரமையு மழகு
மண்ணிடை தவறை மன்னிப்ப தழகு
மனையவள் பணிந்து மகிழ்வது மழகு

புன்மையி லூறிய பொய்யனும் அரசைப்
பேயெனும் ஆட்சி பிழைசெயு மன்னன்
பெண்வதை, மண்ணில் பெருபலியிடுவோன்
புவியிடை அழிவது அழகிலும் அழகே

Saturday, November 17, 2012

தமிழைத் தவிக்க விடலாமா?



ஒன்று பட்டாலுண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கிடின் விளைவது கேடு
என்றுமெம் தமிழ்மனம்மீது - நிதம்
ஏற்படும் பிரிவினை ஏனிந்தக் கேடு
நன்றி கெட்டே பகையோடு - இவர்
நடந்திடும் உறவுகள் நாட்டிற்கு ஊறு
தொன்று தொட்டே தமிழோடு - இந்த
துயர்தரும் சரித்திரப் பலகதையுண்டு

மனமது பண்படவேண்டும் - அதில்
மலர்வது உணர் வுடல் மாளிகை போலும்
கனஎழில் வண்ணங்கள் தூங்கும் - அதில்
காட்சிகள் கற்பனைச் சரங்களும் ஆடும்
இனமொழி யுணர்வுகள் மேலும் - அதில்
இருப்பது பொன்னுடை நகைக ளுமாகும்
உனதெழில் அணிந்திடக் கூடும் - இவ்
வுலகதில் தமிழது  உயர்வென ஆகும்


உணர்வுக ளிருந்திட வேண்டும் - உன்
உதிரத்தை  உறைத்திடும் சுரம்கொள்ள வேண்டும்
தணலென மனம்கொள்ள வேண்டும் - அத்
தகிப்பினில் உதிரமும் சுடும்நிலை வேண்டும்
மணமற்ற மலர்களைப் போலே - நீ
மதியற்ற செயலினை மறந்திட வேண்டும்
குணந்தனில் தமிழ் எனும் பெருமை - உன்
குருதியில் சிவப்பெனும் நிறந்தர வேண்டும்

இழிவதில் இறப்பதுமேலாம் - நீ
இருந்திடில் உறுதிதன் மானமும்வேண்டும்
பழிஎனும் பெயரையும் தாங்கி - நாம்
பலதுறை நடப்பினும் தாய் ஒன்று ஆகும்
வழிபல போய்ப் பணம் தேடு - நீ
வருவது பகையெனில் தமிழ் எனக்கூடு
மொழியுன தறிவினில் தருமே - அது
முழுமை யிலிலையெனில் அகந்தனில்குருடே

இவன் ஒரு தமிழன் என்றுலகில் - நீ
எதுமுனை காணினும் உனதெழில் பெயரே
தவழ்திடும் பொழுதினி லிருந்து - நாம்
தரைவிடும் வரைதனும் தமிழென ஒன்றே
எவனினம் தமிழ்தனைப் பழிப்போன் - அவன்
எதிரியென் றுணர்; உன தாயவள் தன்னை
அவ மரியாதை  செய்திழுத்தே - அவன்
அழகினைகெடுத்திடும் அரக்கனைஎன்றும்

மனமது மன்னிக்கலாமோ - அவன்
மணிமுடி கொள்ளினும் மறந்திடப் போமோ
சினமது எழுந்திட வேண்டும் - அவன்
செயலினை நிறுத்திட உணர்வெழ வேண்டும்
இனமிவன் தமிழென இழிய - நீ
இளித்தவன் கரம் பற்றல் எதுவிதம்- அன்னை
தனிலன்று பால்குடித்தாயோ - இல்லை
தரம்கெட மதுவுடன் விசம் குடித்தாயோ

தமிழெனில் உயிரென எண்ணு - உன்
தாயினும் சிறந்தவள் மொழிஎன்று கொள்ளு
அமிழ்திடும் தாய்சில காலம் - உன்
அகமதில் ஒலித்திடும் தமிழ்முழுவாழ்வும்
தமிழினை மறந்தவன் இழியோன் - அவன்
தொடுமிடம் எங்கணும் விசமெனும் கொடியோன்
தமிழ்தனை விற்பவன் மூடன் - அவன்
தரணியில் புழுவிலும் இழிவெனும் தேகன்

திருந்திடு தமிழ்தனை எண்ணு - நீ
தேன்சுவைத் தமிழினை உயர்த்திட நில்லு
வருவது பெருந்தொகையென்று - உன்
வாழ்வினை எண்ணிடில் பெருதவறொன்று
தருமமும் நீதியும் வெல்லும் - அது
தருமொரு வாழ்வென தலைநிமிர் சொல்லு
அருந்தமிழ் சிதைந்திட அன்னை - அவள்
ஆருயிர் காப்பவர் யார் எமைவிட்டு....!

************************

Friday, November 16, 2012

வாழ வைத்த தெய்வம்

'செந்தமிழா' என்றகுரல், அண்டையிலே நின்றவள்யார்
சந்தணமோ செந்தணலின் தோற்றம்
சுந்தரமண் மேனியெழில் ’”சுற்றும்புவி யென்பவள் நான்
சொல்லுகவி சந்தமுடன்” என்றாள்
தந்தன வென்றாடி அதோ எந்தனுயிர் சூரியன்முன்
தாவி நிதம் நாட்டியமும் செய்வேன்
சந்தமுடன் நீகவிதை தந்திடுவாய் என்னிலிவள்
சிந்தைகவர் அங்கநயம் செய்வேன்

வந்தனம்பார் பேருலகே வாழஇடம் தந்தவளே
வாட்டமுறும் மல்லிகை போலானேன்
இந்தநிலை கொண்டவனை இன்தமிழும் சொல்வதெனில்
என்னசெய்வேன் ஏழையென நின்றேன்
உந்தன் விதிஅவ்வளவே இங்குனது பங்கிலையேல்
வந்தவழி சென்றுவிடு என்றாள்
எந்தவழி யென்றலறி அந்தரவான் நோக்கிடநான்
எங்கிருந்தோ செந்தழல்தீ கண்டேன்

வெந்துசுடும் வெம்மையின்றி அன்பொடுதீ ஒன்றெழுந்து
விண்ணிருந்து வேகமுடன்வந்து
செந்தமிழின் சேவகனே சிந்தையதில் எண்ணமென்ன
சொல்லுகவி இக்கணமே என்றாள்
விந்தையிது அன்னையெனும் விண்ணொளியே என்னுயிர்நீ
வேடிக்கையோ சொல்லிவிடு என்றேன்
மந்தமதி கொண்டனையோ மனமறியும் உண்மைநிலை
தந்திடுவாய் உன்தமிழ்தா என்றாள்

முந்தி எழும்கற்பனயோ முத்தமிழைக் கையளவே
மோகமுறக் கற்றவன்காண்  என்றேன்
தந்தனனே தானதென்ன தந்தனதான் தந்தனையேல்
தந்தனென தானதென தாகும்
தந்தனதை தானிதென தானறியா தானதெனில்
தன்னதனை தானிழித்த தாகும்
தந்திரமோ தந்தனளோ தாகமெளக் கண்டனனோர்
தங்க ஒளி கொண்டுலகில் நின்றேன்

நந்தவனம் ஒன்றதிலே நல்லெழிற்பூ பூத்தனகாண்
நதியெழவும் குளிர் நிலவும் கண்டேன்
எந்திசையில் கீதமெழ இன்னிசைகள் தாளமிட
எங்குமெழில் பரவுதலைக்  கண்டேன்
சந்தமெழப் பாடிடஎன் சிந்தைகளிகூடிட நான்
செல்லுகிறேன் அந்தரவானூடே
பந்தமெழக் காணுமிவன் பைந்தமிழின் போதைகொளப்
பாடுகிறேன் விந்தையென்னில் கண்டேன்

சந்தனமும் வாசம் அது கொண்டதென மேலும்பல
செந்தமிழில் நன்கவிதை செய்தேன்
விந்தைவெளி யெங்குமொளி வேகமெடுத் தோடுகிறேன்
விண்ணிடைநான் வீறுடனே சென்றேன்
சந்திரனில் தூங்கியிவன் சிந்தைமகிழ் வாகிடவான்
சுற்றுகிறேன் பூமியென நானும்
வந்தவளைக் கானவில்லை வட்டமுகம் சுற்றுகிறாள்
எந்தனொளித் தாய் புகழைச் சொல்வேன்

**********

( தந்தனனே தானதென்ன தந்தனதான் தந்தனையேல்
. தந்தனென தானதென தாகும்
. தந்தனதை தானிதென தானறியா தானதெனில்
. தன்னதனை தானழித்த தாகும்

இதற்குப் பொருள்கவிஎழுதும் ஆற்றலை தந்தேனல்லவா அதற்கு ஆனதென்ன நான் அளித்த ஆற்றலை வெளிபடுத்தி கவிதையாக்கி தருவாயானால் இவன் கொடுத்ததை தந்துவிட்டான் என ஆகும். அல்லாமல் நான் தந்த ஆற்றலை இதுதானென நீயறியாமல் போவாயாயின் உன் திறமையை நீயே அழித்ததாகும் என்ற பொருள் வரும் . தவறிருப்பின் சுட்டிக்காட்டவும்

Wednesday, November 14, 2012

அணையாதோ?

( அன்பு)
திங்கள்தனை முகிலணைக்கும்
  தீந்தமிழைக் கவியணைக்கும்
மங்குமிருள் இரவணைக்கும்
  மாலைதடந் தோளணைக்கும்
பொங்குகட லலையணைக்கும்
  பூவிழியை  இமையணைக்கும்
எங்குமுயிர் அன்பணைந்தால்
 இதயமகிழ் வெய்தாதோ

பொங்குமொளி பயிரணைக்கும்
    பூத்தகொடி மரமணைக்கும்
பங்கயத்தை நீரணைக்கும்
    பனித்துளியைப் புல்லணைக்கும்
செங்கரும்பின் சாறுஇனிக்கும்
   சேர்ந்தசுவை நாவணைக்கும்
பங்குகொளும்  வாழ்வுதனில்
    பண்பைமனம் அணைக்காதோ

காலையொளி புவியணைக்கக்
  கனவுவெழுந்து துயிலணைக்கும்
ஓலை மறை வெடுநிலவை
  உள்ளமதன் உணர்வணைக்கும்
சோலைவருங் காற்றலைந்து
  சொல்லாம  லுடலணைக்கும்
ஞாலமதில் அன்பெழுந்து
   நம்வாழ்வை அணைக்காதோ

( அழிவு)
கங்குல்வரப் பகலணையும்
  காற்றெழுந்து சுடரணைக்கும்
பொங்கும்சினம் அறிவணைக்கும்
   போதைகொளப் புகழணையும்
அங்கமெங்கும் நோயணைக்க
  ஆனந்தமென் உணர்வணையும்
தங்குமிந்தப் புவிவாழ்வில்
   தவிப்பென்ப தணையாதோ 

சேலையணி மாதரது
   சேல்விழிகள் நீரணைக்கும்
நாலுமறி மதிஅறிஞர்
   ஞாபகத்தை வயதணைக்கும்
மேலுமுயிர் வாழுடலை
   மோகமுடன் விதியணைக்கும்
காலமெனும் சக்கரத்தில்
   கனவெனவாழ் வணைவதுமேன்

குருட்டு உலகமடா !

வாழ ஒருவழி தேடிநின்றோம் அவர்
வஞ்சகர் என்றுரைத்தார்
சூழுந் துயர்கள்பந் தாடிநின்றோ மெங்கள்
தூய்மை அழிப்போ மென்றார்
பாழுங் கொடுமைகள் செய்தவரைப் பழி
கூறுதல் விட்டேயெமைத்
தோளில் உரங்கொண்ட தாலுலகோ கொடுந்
தீயரென்றே உரைத்தார்

பாலைக் குடித்திடப் பிள்ளைபசி கொண்ட
பாங்கொடு நாமழுதால்
நாலை ஐந்து குற்றம் நாமிழைத்தோமென
நஞ்சினைக் கொட்டுகிறார்
காலை விடிந்திடும் சேவல்கூவுமெனக்
காட்சியும்காண நின்றால்
தோலைஉரித்துக் கிடத்தியெமை மெல்லத்
தூள் அள்ளி பூசுகிறார்

சேலை வழுகவைத் தார்சின்ன மாதரைச்
சித்திர வதைசெய்து
காலை எடுத்து மிதித்து அவளுடல்
கொன்று களிப்படைவார்
சாலை வழிபெரும் சீறிடுவாகனம்
சூரப்பயணம் செய்வார்
மேலை வழி  தேசமண் சிவக்கும்
 எங்கள் மெய்யின் குருதிகொள்வார்

ஊருக்குள் வீட்டுக்குள் எங்கும் கொலை என்னும்
உத்தம போதனைகள்
யாருக்கு யார்சொல்லிக் கொண்டனரோ பெரும்
வம்சத்தில் பற்றுடையார்
பேருக்கு ஓர்தமிழ் பிள்ளைதனும் இந்த
பொன்னெழில் நாட்டிலின்றி
வேருக்குள் வெட்டித் தறிப்பதுவே இனி
வேலை நமக்கு என்றார்

யாருக்கு என்ன நடப்பதெல்லாம் ஒரு
யாகமென் றோ உலகு
கூருக்கு தீட்டிய கத்தியினால் வெட்டக்
கூசாமல் கண்டுநின்றார்
மாருக்கு குத்தியும் மண்ணில் விழுந்தழும்
மானிட ரெம்மைவிட்டுப்
போருக்குள் நீதியைக் கொன்ற கயவரை
பூவள்ளி போற்றுகிறார்

தேருக்குள்ளே நின்று வீதியைச் சுற்றிடும்
தெய்வத்தை கேட்டுநின்றோம்
பாருக்குள் தேவரின் மைந்தர்களாய் இந்த
பச்சை யிளமனதும்
நேருக்கு வன்பகை வந்து நின்றா லதை
நீறென ஆக்கும் ‘கனல்’
நீருக்குள் பூத்தகமலமதில் எரி
நெய்கொண்ட தீயின் அழல்

வாரிச் சுருட்டியும் வந்தவர்கள் ஓட
வைக்கும் திறனும் கொண்டார்
பாரின் குருட்டவை பார்க்கத் தவறிய
பாழும் செயல்க ளெல்லாம்
சூரிய னின்கதிர் போலத் தரணியில்
சுட்டெரித்தே தருமம்
நேரிய பண்புடை செய்ய முயன்றவர்
நம்மைப் பிரிந்திடினும்

வீரியம் இல்லையென்றே குனிந்தோடிட
வேளை இது இல்லைடா
காரிய மாற்றிக கருமிருள் போக்கிடக்
கண்களை நீ திறடா
சூரியன் தோன்றிடச் சுற்றுமுலகில்நம்
தேசமதை மீளடா
பாரிய மாற்றமிட்டே பகைவென்றிடப்
பார்த்தொன்று கூடிடடா

****************

தீப ஒளிகள்

ஆயிரம் ஆயிரம் தீபங்கள் ஏற்றியும்
ஆனந்த மென்ப தில்லை
போயின்னு மேற்றிடப் போகுது வாழ்வுகள்
பொன்னெழிற் தீவின் நிலை
மாயினும் மாளினும் ஏற்றிடும் தீபங்கள்
மேலும் இருக்குத் தொகை
ஆயினும் அச்சம்கொண் டாடுது தீபங்கள்
ஆவேசக்காற்றின் தொல்லை


கோவிலுமில்லைக் குளக்கரை பூவனம்
கூடிய மண்டபங்கள்
தாவி ஏறிவிளையாடிடும் மாமரம்
தானதரும இல்லம்
மேவிவளர் தென்னை வீட்டருகே வேம்பு
வீதியெல்லாம் பறித்தே
போவீரெனச் சொல்லி  நாலுபக்கவேலி
போட்டவர் பூட்டுகிறார்

தீபம் ஒளிர்வது தேக்குமரக்காடு
திங்கள் வரும்பொழுது
தூபமிடும் மலர் தூக்கி எறிந்தவர்
தெய்வமென் றன்னை தங்கை
சாபமிட்ட நிலை சற்றுவணங்கவும்
சீறுவர் கொண்டுவெம்மை
ஆபத்துடன் வாழ்வில் அன்றாடம் பூவிட
உண்டோ இன்னும் வருகை

*******************