Wednesday, September 28, 2011

இரண்டு பாதைகள்!

அழகான பூஞ்சோலை கண்டேன் - அங்கு
அசைந்தாடும் மலர்கண்டு இதயம் மகிழ்ந்தேன்
குழல்ஊதும் இனிதான கீதம் - இளங்
குளிர்மாலை காற்றினில் தரும்கோடி இன்பம்

குளமொன்று அலையோடக் கண்டேன்- அதில்
குமுதமொன் றிதழ்விரித் தெழில்கொள்ளக் கண்டேன்
இளமையென் கனவுகள் தோன்றி- அங்கு
இதுபோல சுகமெங்கும் இல்லென்று சொல்ல

மனம்மீது எண்ணங்கள் ஓடும் - அது
மறுபாதி உலகமொன் றுண்டென்றுகூறும்
கனங் கொண்ட காடென்றும் தோன்றும் - அதில்
கத்தும் விலங்கோடு முட்பாதை காணும்

இதுவோஅன் றதுவோநாம் அறியோம் - வாழ்வை
எதுவோ அளித்திட பெற்றதாய்க் கொண்டோம்
மதுவோடு மலர்கொள்ள ஒருவர் - இன்னும்
அதுவின்றி முள்ளோடு வலிகொள்ள ஒருவர்

இதுவாழ்வில் இரண்டாக உண்டு - என்
இதயத்தில் சிந்தனை எழுந்தோட நின்றேன்
எதுவென்ற வாழ்வான போதும் - அலை
எதிரேறி நீந்திடில் கவனம் நீ கொள்ளு

வளைந்தோடும் நதிபாதை போகும் - என்றும்
வளையாத நதிமோதித் துளியாகிச் சிதையும்
களைநீங்கப் பயிரோடி வளரும் - எம்
கவலை களைந்தாலே உளம்உரம் காணும்

சினம்கொண்ட வெயிலோடி வீழும் - மீண்டும்
சிங்காரவானிலே வெண்மதி தோன்றும்
குணம் கொண்ட வாழ்வதும் வாரும் - அது
கொண்டிடும் மட்டும் பொறுமையும் வேண்டும்

மனம் மென்மை யென்றிடக் காணும் - அதில்
மற்றவர் செய்கைகள் முள்ளெனக் குத்தும்
இனம்கண்டு தொலைதூரம் நிற்கும் - ஓர்
எளிதான முறைகாண மகிழ்வேதான் மிஞ்சும்

No comments:

Post a Comment