Friday, January 18, 2013

வண்ண மழை

ஒற்றைத் தாளில் கப்பல்செய்து ஓடும்நீரில் விட்டவன்
உற்றதா முள்ளாசை கண்டு ஓங்கியோர் புறத்தினில்
பெற்றவள் விடுத்தகிள்ளு பாவியெந்தன்மேனியில்
உற்றதோர் கடுத்தநோவு எண்ணியோ நீஆண்டவா

சொற்றுணை எனத்தொடங்கி சோதியாம் நல்வானவன்
உற்றதாம் சிறப்பையெண்ணி ஓதியுன்னைப் போற்றிட
கற்றுனைத் துதித்தல்கண்டு காகிதம் மறுப்பினும்
உற்ற அன்பினாலே வண்ணம் ஊற்றும் மேக மாக்கினாய்

முற்றமும் பொழிந்தநீரில் மேகம் வண்ணம் பற்பல
அற்புதம் நிறத்திலூற்றும் ஆனவிந்தை காண்கிறேன்
நெற்பயிர் விளைச்சலோடு நீண்டபுல் முளைத்திடும்
புற்தரை விரிப்பிலெங்கும் பெய்யும் வண்ண மானதே

நெஞ்சிலே கடுங்குரோத நீசரெங்கள் நாட்டினில்
கொஞ்சியே குலாவும் அன்னை கொண்ட மஞ்சள் குங்குமம்
வெஞ்சினத் தினாலே மேனி வெட்டிமண் புதைத்திட
கெஞ்சியும் அழித்தபாவம் மஞ்சள் நீரைக்கொட்டுதோ

அஞ்சியே துடித்தபோது ஆணவத்தி லோடவர்
வஞ்சியர் வளர்ந்த பிள்ளை வாலிபத்து மேனிகள்
நஞ்சிலே இழைத்த குண்டு நீலமாக்கி கொன்றதை
பஞ்சுமேகம் கண்டு நீலம் பெய்மழைக்கு தந்ததோ

கண்கள்தோண்டி கைமுறித்துக் காலுடைத்துக் கொன்றிட
மண்ணிலே சொரிந்த ரத்தம் மேலெழுந்து கொண்டதால்
விண்ணிடை கருத்தமேகம் வையகத்தில் கொட்டவும்
தண்மை கொள்மழை சிவந்த தானவண்ணம் கொண்டதோ

அச்சமின்றி உச்சிமீது வானின் ஊர்தி கொட்டினும்
துச்சமாய் மதித்துவாழ்சு தந்திரத்தை வேண்டியோர்
பச்சைமேனி கள்கிழித்துப் பாவம் செய்த காதகர்
இச்சகத்தில் வாழ்அநீதி எண்ணிப் பச்சை கொட்டுதோ

என்னவெண்ணி வான்மழைக்கு இந்தவண்ணம் வந்ததோ
அன்னைபூமி விட்டுச்சற்று அந்தப்பக்கம் கொட்டுதே
இன்னலைத் தரும்நிலைக்கு இட்டஎச் சரிக்கையோ
மின்னல் வானம் மெச்சியின்பம் மஞ்சள் நீலமானதோ

No comments:

Post a Comment