Thursday, July 28, 2011

தீயின்றி சுட்ட தேகம்

செந்தணல் கொண்டு தீமூட்டாதே திரும்பிப் பாரம்மா
. .சிங்களமன்னன் எங்களை இன்று செய்வதுபோலம்மா
எந்தழல் கொண்டு எரித்தாலும் அது இயற்கையில் தவறம்மா
. .எரியும் உடலில் சந்தணம்பூசு இரங்கிடு இறையம்மா
கந்தகம்கொண்டு எரித்தானாம் அந்தக் காதகன் செயலம்மா
. .கைளில் அந்தப் பாதகம் வேண்டாம் கைகளைக் கழுவம்மா
வந்ததுபோதும் நின்றதுகாணும் வாழ்வினில் என்றம்மா
. .வைத்த கணக்கில் குற்றமிருக்கு வார்த்தையைக் கேளம்மா

சந்திரன்கூட செங்கதிரோனும் சுற்றுகி றாரம்மா
. .சுந்தரவானில் விண்சிறுமீனும் எத்தனை நாளம்மா
வந்தவர்போவார் வாழ்விதுவென்று வைத்தது எமதம்மா
. .வாழ்வெனக்ககூறி வதைப்பதுதானே வையக விதியம்மா
பந்தெனவந்து பட்டதும் ஓடும் பாவப் பிறவியம்மா
. .பனிபோல் தோன்றி பகலுள் காயும் பாசக் கனவம்மா
இந்தொரு வாழ்வில் நிரந்தரம் இல்லை ஏனோ கூறம்மா
. .இருப்பதும் போவது வருவது இயல்பே என்றதுமேனம்மா

பூக்களின் வாழ்வு போதுமே நாமும் புதுவான் தாரகையாய்
. பொன்னொளிவானில் என்றுமே வாழும் புதுநிலை தாஅம்மா
ஈக்களின்வாயில் தேனினை காட்டி ஏய்த்தது போதும்மா
. இனித்ததுவாழ்வு என்றுநினைத்தோம் இதுவே தவறம்மா
தூக்கமும் இரவும் தந்தது யாவும் துயரத்தின் பிறப்பம்மா
. தோலினுள் தசையும் குருதியும் கொள்ளத்தோன்றுது அழிவம்மா
தீக்குள் எரியாத் தேகமும் ஒளியில் தோலும் தசை கொள்ளும்
. தொட்டால் உணராத் தேகம் செய்தால் துயரம் இல்லையம்மா !

No comments:

Post a Comment