Thursday, December 13, 2012

முடியாத தொடர்



நிலைமாறி ஒருநாளும் எதிர்காலம் பின்னாலே
நிகழ்காலம் வருவதில்லை
தலைமாறி எழுஞ்சூர்யன் தடுமாறி மேற்கென்ற
தானுதய மாவதில்லை
வலைமாறி நீர்பற்றி மீன்நழுவி ஓடவிடும்
வழமைக்கு ஆவதில்லை
தலைசீவி கொலையாக்கும் தரம்கெட்ட மனிதகுலம்
தவறியும் திருந்தவில்லை

இலை மாறி அழகோடு இதழ்கொண்டு வாசமெழ
இனிதேனை சுரப்பதில்லை
கலைமாறிக் கவின்பாடும கனிபோலும் செந்தமிழின்
காண்சுவை கசப்பதில்லை
அலைமாறி கரைதோன்றி ஆழநடு கடல்நோக்கி
அசைந்தோடி அழிவதில்லை
புலைகீறிக் கொல்லென்ற பொதுவானகொள்கைதனை
பகைவர்கை விட்டதில்லை

சிலைமாறி உயிர்கொண்டு சிற்பிகை உளிநொந்து
செயல்கொண்டு அழுவதில்லை
மலைமீது வருங்காற்று மலர்வாசம் கொண்டோடி
மூச்சாக மறுப்பதில்லை
விலை என்று கருவாடு விளைபொன்னின் அருகோடு
விற்கச்சம மாவதில்லை
தலை கொண்டு உயிர்வாங்க தமிழ்கொன்று மகிழ்வாக
தயக்கமோ தீயர்க்கில்லை

பலம்கொண்டு தமிழ்வாழ பலநாடும் எதிர்வந்த
பரிதாபம் நேர்மையில்லை
நலம்கொண்டு உயிர்காக்க நாளன்று கொண்டநிலை
நானிலம் புரிந்ததில்லை
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் புறமென்று தமிழ்தன்னை
பிரிந்தின்று வாழ்வுமில்லை
நிலமென்ப தொருநாளில் நிம்மதியைக் காணும்வரை
நித்திரை முழுமையில்லை

Tuesday, December 11, 2012

மாறாத துயர்


கதிர்கள் நடமாடக் குருவி இசைபாடக்
கழனி எழில் காணுது
எதிரில் இளவானின் ஒளியைத் தரமேக
இடையில் வெயில் ஓடுது
புதரின் அயலோடு போகும்வழி தன்னில்
பயந்து முயலோடுது
விதமென் றுயிரஞ்சி விரைந்து வழிகாணும்
விடிவை மனம் தேடுது

மதியவெயில் கூடி மந்தி விளையாடி
மரத்தில் கிளை தாவுது
விதியும் பிழையாகி விடிவின் நெடுந்தூரம்
விரிந்து தொலையாகுது
பதிய வளைதென்னை பரவுமிளங் காற்றில்
பணிந்து தலையாட்டுது
புதிய அலைதோன்றிப் புரண்டு நதியோடப்
பொங்கி மனமேங்குது

எதிலும் குறையாத புகழின் மகன்போல
எழுந்து மலை நின்றது
முகிலும் நேரோடி இணைய மனம்கொண்டு
மலையின் மடிதூங்குது
அகிலம் தனைஆக்கி அனைத்து முயிர்வாழ
அவனும் படைத்தானன்று
பதிலுக்கிவை துணித்து எனது உனதுவெனப்
பரமன் சிரித்தானங்கு

உயிரைக் கொடுத்தேனும் உரிமை யுடன்வாழ
எளியோர் மனமேங்குது
பயிரை விதைத்தோனே பருவம்வரக் கொள்ளும்
பயனை விதி மாற்றுது
வயிறைப் பசியுண்ண விலங்கு உடல்கொள்ள
வாழ்வில் உயிர்போகுது
கயிறை எறி மாயன் கருதும் நொடிமட்டும்
காணும் துயரோ இது

Saturday, December 8, 2012

இரங்காயோ எம்மில்.!

தெய்வத் திருவுருவே தேனூற்றே உயிர்களிவை
உய்யத் திருவருளும் ஈயாயோ பொன்னடிகள்
கையிற் தொடவிழுந்து காலமெலாம் அழுதிடினும்
எய்யும் ஒருஅம்பாய் எம்மிதயம் துளைப்பதென்ன?


மெய்யைக் கிழித்தங்கு மேனியதன் குருதி யொரு
பெய்யும் பொழிமழையாய் பீறிடவே கொட்ட நிலம்
மையத்திடை படுத்தி மாடுகளை உதைப்பதென
வையத்திடை செய்யும் வதையிருந்து காவாயோ

செய்யாப் பெருங் கொடுமை சேறாக்கி தாழ்வெண்ணி
நையப் புடைத் தெம்மை நாடகன்று ஓடவைக்க
குய்யக் கூவென்றுநாம் குரல் அலறி நீர் சொரிந்தும்
கையைக் கொடுத்தெம்மை காவாது நிற்பதென்ன

அய்ய நின்அரைமேனி அணைந்தவளும் உன்னழகில்
மையலிட் டெம்மை மறந்தனளோ மாதேவி
நெய்யை பெறுவிழிகொள் நீலத்திருமேனி யளே
பொய்யைப் பெருவாழ்வுக் கீந்தெம்மைக் காவாதேன்

தொய்யத் தமிழ் தன்னும் தூயஒளிச் சுடர்மாயக்
கொய்சிரசும் கொல்லென்று குலம்தமிழைக் குபபையிலே
துய்யத் துடித்தலறத் துவம்சம்செய் பகை கண்டும்
வெயில் எழப் புல்நுனியின் வீழ்பனியென் றாக்காதேன்

(வேறு)

வையத்தே ஆயிரம் கோடியெனப் பல
வாழும் இனங்களைச் செய்தவரே
தையத்தை என்று நடமிடவும் தமிழ்த்
தாய் தந்தமேனியைக் கேட்பதென்ன
பொய்யைத்தான் கூறி யினமழிக்கும் அந்தப்
புல்லனும் இரத்த வெறி பிடித்துக்
கையைத்தான் காலை இழுத்துவெட்டிச் சுகம்
காணப் பொறுத்தனை, காத்திடவா!

தெய்வந்தான் காத்திடு மென்பவரையொரு
தேவதை வந்துமே காக்கவில்லை
எய்யத்தான் பூங்கணை கொண்டுமதன்இவர்
மெய்யைத்தான் தீயெழச் செய்வரென
அய்யோதான் என்றே அழுதவளும் அவன்
ஆவிபிரித்திட ஆளனுப்பி
மெய்யைத்தான் தீயெழச் செய்வதென்ன இனி
மீளத்தான் எம்மைநீ காப்பதெப்போ

Thursday, December 6, 2012

நம்பியெழு நடக்கும்

அழுதிடுங்கள்  ஒருதடவை ஆவெனக்கதறி
  அடுத்து வருங் காலமதில் அதுவிருக்காது
விழுந்திடுங்கள் மேனிதொட்டு வேதனைகூடி
   விரும்பிடினும் விழுவதினி வேண்டிவராது
மெழுகெனவே உருகிடினும் மின்னொளிபோயும்
    மேற்கில்மறை ஆதவன்கீழ் மீளவருங்காண்
எழுமதனின் ஒளிபரவ முழுதிருளோடும்
   ஏற்றமுறும் வாழ்வமையும்   இன்பமுண்டாகும்

கழுகுயரப் பறந்திடினும் காலமெப்போதும்
 காற்றினிலே வாழ்ந்திடுமா கீழ்வர வேண்டும்
பழுதுகொண்ட சக்கரத்தைப் பூட்டியதேரும்
  பயணமதில் பாதிவழி போகையில்வீழும்
தொழுதல் விடு துடித்தெழுவாய் துன்பமுமெங்கள்
  துணைநடந்த நிழலில்லையே தொலைத்திடப் போகும்
எழுந்தவரும் நடப்பவரும் விழுந்திடும்நேரம்
  விழுந்தவர்நாம் எழுந்து இனி நடந்திடும்காலம்

வியர்வைமட்டும் விழுந்திருக்க, வெள்ளையில்மாடு
  விரட்டிவயல் உழுதவாழ்வு வீணெனப்போயும்
உயர் உழுவை நிலமுருண்டு ஓடும்வண்டிகள்
   ஓசையிட கதிரறுக்கும் உன்னதம் காண்போம்
துயர்விடுத்த குருவிகளும் துணையுடன்கூடித்  
  தொலைவில்நுனிக் கிளையிருந்து தொங்கிஆடிடும்
வயிறெடுத்த பசியுடனே வாழ்ந்த வாழ்வெல்லாம்
  வரண்டுவிட வசதிசெழித் தோங்கிடும் நாடும்

நரியிருக்க நாய்கள்குரைத் தோடிடச்சுற்றி
 நர்த்தனமென் றாடிடும்பேய் நடுநிசி வந்து
எரியவைத்த வீடுகளில் இருந்திடும் கரியை
 எடுத்துடலில் பூசியபின் எண்ணெயும் ஊற்றி
புரிந்த வதம் வெறிபிடித்த பொழுது களெல்லாம்
  பிணமடுக்கிப் பார்த்தழுத பாவங்கள் நீங்க
தெரியவென வரைபடத்தில் தோன்றிடும் நாடும்
  தீந்தமிழர் பெருநகரம் தேனொளி கொள்ளும்

புரியடுத்து புறப்படுநீ பொழுதுகள் விடியும்
 புன்னகையை மட்டுஎடு புன்மைகள் துன்பம்
வரிந்தடுக்கி வைத்துவிலை விற்றிடவேண்டும்
  வாங்கவெனப் பெரியமகா  வம்சங்கள் கேட்கும்
சரிகொடுத்து விட்டிடுவோம் சரித்திரம் மாற்றிச்
  சாவுகளும் நின்றுவிடச் சுதந்திரம் வாங்கப்
பெரிதெடுத்த கடமைமுடி புத்தொளி யேற்றிப்
  புனிதமண்ணில் பிறந்தவர்க்குப் புன்னகை ஈவோம்

Tuesday, December 4, 2012

ஒருதலை ராகம் (நகைச்சுவையாக..)



செந்தேன் கருத்தவிழி சித்திரமோ அற்புதமாய்
சேர்ந்தழகு கொள்ளை கொள்ளுதே
வெந்தேனோ என்மனதுள் விண்ணதிரப் புவிசுழல
வெள்ளிமலை தீவெடிப்பதேன்
வந்தாளோ வஞ்சியிவள் வாசமெழப் பூமுடித்து
வானமகள்  ரம்பை மேனகை
சொந்தமென் றானவளோ சுந்தரியோ கண்டுளமும்
சின்னதாகப் பூவிரிப்பதேன்

அந்தோ நிலாவொளியில் ஆளவென வந்தவளோ
அல்லியெனக் காணுகின்றவள்
சிந்தோமெனச் சிறிதோர் புன்னகையை பூட்டிவைத்து
சிந்தை கொளக் கண்டுபோற்றினேன்
நந்த வனத்தினிடை நான் பறித்த பூக்களெலாம்
நாட்பொழுதில் வாடுகின்றதே
இந்தா இவள்மலர்ந்த புன்னகையோ என்மனத்தில்
இல்லை வாட்டமென்று காண்பதேன்

என்தேன் இளம்மனத்தில் இன்னிசைக்கும் ராகமெலாம்,
எப்படிதான் வந்துசேர்ந்ததோ
சந்தேன் வளைமதியும் சந்தமெழும் பாதநடை
சஞ்சலத்தைத் தந்திருப்பதேன்
மந்தி மரக்கிளையின் முன்னேறித் தாவுதென
மாவிலங்கு போலவந்தனன்
அந்தோ விழித்திருக்க ஆரணங்கைச் சேருகிறான்
அதிசயித்து விழிசிவக்கிறேன்

மந்த மனம்மயங்கி மாதவளோர் புன்னகையை
மதிபிழன்று அள்ளிவீசிட
வந்தோனவ் விண்ணிலெழும் வானமகள் தேவதையின்
வண்ணக்கரம் பற்றி நிற்கிறான்
என்தேகம் சூடெழவும் இப்படியும் விட்டிடவோ
என்மனதின் ராஜகுமாரி
முந்திநடை நடந்து மோகினியை முன்மறித்து
மோசமிது என்செயலென்றேன்

வந்தீர் என்னோடுபிற வாயினுமென்  சோதரனே
வாழ்விலெனைக் காத்திட வந்தீர்
பந்திஉணவுமிட்டு பார்த்திருக்க ஊரவர்முன்
பாவையிவள் தோளிணைவார் காண்
தந்தை நின்சொல் மதிப்பார் தாமிதனைகூறியெமை
தானிணையத் தா வரமென்றாள்
அந்தோ அதைவிடவோர் ஆனந்தமென் வாழ்விலுண்டோ
அகமிருந்த மெய்யிழந்தேன் நான்

வாழ வழி காண்போம்

தித்திக்கும் தித்திக்கும்  தீந்தமிழ் சந்தங்கள்
சித்தத்தி லூறிடத் தித்திக்குமே
எத்திக்கு மேகினும் இன்பத் தமிழ்ஒலி
சத்தத்தி லுள்ளம் மகிழ்ந்திடுமே
புத்திக்கும் சந்தங்கள் போதைதருமுடல்
ரத்தத்தில் புத்துணர் வூட்டிடவும்
கத்திக் கும்மாளமிட் டேமனமெங்கணும்
காற்றென வானிற் பறந்திடுமே

விக்கித்து விக்கித்து வீணாக வாழ்வினில்
வேதனை கண்டுமனம் சினந்து
பக்கத்தில்காணுநற் பாதை விடுத்துள்ளப்
பார்வை கெட்டுக்குரு டாதலின்றி
துக்கித்து துக்கித்து துன்மென்றாகிடத்
தோல்வி யென்றே மனம் தேய்தல்விட்டு
சுத்திக்கும் அன்பெனும் சொல்லை மனத்தெடு
சேர்ந்திடு வோம்நல் மனங்களொடு

நற்கதி லோகங்கள் நட்டநடுவெளி
நாட்டிய மாட்டிக் களிப்பவளும்
கற்பிக்கும் போதனை காலத்தின் கட்டளை
காத்து மதிகொண்டு வாழ்ந்திடுவோம்
சிற்பமெனப் பொழிந் தற்ற உணர்வுகள்
சொற்ப மகிழ்விற் படைத்திடினும்
அற்ப பிறவியின் ஆழம் வரைகண்டு
ஆற்றல் புரிந்ததை காத்திடுவோம்

நர்த்திக்கும் நாதன் நடனம்விரும்புவோன்
நாடியெம் தீமை யழித்திடுவோம்
வற்றும் குளத்திடை வாழும் மீனாகிய
வாட்டம் போகமழை வேண்டிடுவோம்
முட்புதர் தோன்றியெம் முன்னேசெல்லும்வழி
மூடிபரந்திட்ட போதினிலும்
நற்புரிவோடுயர் ஞான மளித்தனள்
நம்முளத்தீ கொண்டெரித்திடுவோம்

சொற்பதம் கொண்டுநல் சுந்தரகீதங்கள்
சொல்லித் தமிழிற் கிறங்கிடுவோம்
நற்பெரு நாத நவரச முத்தமிழ்
நாவிற் பொழிபவள் நாம்தொழுவோம்
முற்று மினித்திடா வாழ்வு உலகத்தில்
மூச்சைஅடக்கிடும் காலம்வரை
அற்புததேவதை அன்புத் தமிழ்சொல்லி
ஆனந்த மிட்டவளைத் தொழுவோம்
*********************

Sunday, December 2, 2012

வாழிய தேவி



இந்தமேகம் இடியிடித்தால் எழுவது நாதம்
இடையிடையே இதயமதில் இன்கவி மின்னும்
வந்தமழை வழிவதென்ன வார்த்தைகளாகும்
வாரியன்புத் தூறல்கொட்டிச் சோவென வீழும்
அந்தரவான்  கொட்டுமழை ஆறிட மௌனம்
அகத்திடையின் கவிதைவிழைந் தாற்றிடும் சாந்தம்
சந்தமெழுங் கவிதை வெள்ளம் சலசல ஓட்டம்
சாலையோரம் தேங்குநீரில் துளிகளின் தாளம்

மெத்தையெனும் மேகங்களின் மௌன ஊர்வலம்
மேலெழுந்து வான்பறக்கும் பட்சிகள் கூட்டம்
முத்தமிட நீள்மலையை மேகமும் தேடும்
முற்றிணைவில் நதிபிறந்து கிளுகிளுத்தோடும்
சத்தமிடும் குயிலினிசை சுனையலை தாளம்
சாரல்மழை தேகம்தொடச் சலசல த்தாடும்
அத்தனைநீள் தருவினிலை அழகிய ஆட்டம்
ஆகுமின்பம் தமிழிசைக்க அற்பமென்றாகும்

நிந்தனைகள் இல்லையிங்கு நித்தமும் ராகம்
நீலவிண்ணில் காயுமொளி நினைவெழு மோகம்
சுந்தர விண்மீன் மறைத்து சென்றிடும் மேகம்,
சொல்ல வருங் கவிதையின்பின் சக்தியி னூற்றும்
மந்திரங்கள் அல்லத் தமிழ் மாற்றிடும் உள்ளம்
மதுவழியும் பூவிருந்து மாந்திடும் வண்டும்
எந்தவிதம் போகுமென்ற இயல்புடன் நாளும்
இன்கவிதை யுண்பவரும் எடுத்திடக் காணும்

முத்தொளி வெண்சூரியனும் முழுமதிபொன்னும்
மோகமிட மாலைசெய்து தாரகை கூட்டி
சத்தியத் தாய் நீலவிண்ணென் னாடையும் பூண்டு
சாகரத்தின் ஓசையிலே சிரிப்பதைக் கண்டோம்
கொத்துமலர்ச் சோலைதொடும் தென்றலின்வாசம்
கூட்டியதாய் சந்தணமும் கொள்ளொரு மேனி
வைத்தவளிவ் வண்ணத்தமிழ் வாழ்வதிலின்பம்
வாய்த்திடவே தந்தவளாம் வாழிய வாழி!

**********************

Thursday, November 29, 2012

தமிழ் பேசித் தவழ்ந்தோம்

கலை கொஞ்சுந் தமிழ்மீது கடுங்கோப மேனோ
கனிமாவின் பழமென்ன கசக்கின்ற வேம்போ
தலையான புகழ்கொண்ட தமிழென்ன தாழ்வோ
தனதன்பு தாய்தன்னைத்  தாழ்வென்ப தாமோ
நிலைதாழத்  தமிழெங்கே நிரைதன்னிற் கடையோ
நினைவென்ப தொலியாகி நினைக்கூட லிகழ்வோ
மலை போல நிமிர்ந்தாளும் மறங்கொண்ட தமிழோ
மடிமீது பிறதேச மொழிகொள்ளுந் துயிலோ

கலை கொண்ட தமிழ்காண மயிலாடு மழகே
கனிகொண்ட சுவைதேனை நிகரென்னத் தகுமே
தொலைதூர ஒளிதன்னிற் திகழ்கின்ற கதிரோ
தினந் தோன்றி ஒளிதந்தும் திசைமேற்கில் விழுதோ
குலைவாழைக் கனிகண்டு கொள்ளாது ஓடிக்
கூடைக்குள் கனிஅப்பிள் கொள்ளென்ற மனமோ
சிலைபோலு மெழில்வண்ணச் சிற்பங்கள் கொண்டும்
சேர் ரப்பர் பொம்மைகாணச் சிறப்பென்ற கதையோ

கலைமேவு மழக்கென்று கடதாசி மலர்கள்
கரமேந்தி இறைபோற்றிக் கனிவோடு தொழவோ
விலையற்ற வெறுமைக்குள் வீழ்கின்ற மனமோ
வெளிநாட்டின் பொருள்மோகம் விளைத்திட்ட செயலோ
தாய் ஊட்டப் பாலுண்டு தமிழ்கேட்டுத் தூங்கி
தாலாட்டும் சந்தங்கள் தனிலின்பங் கூட்டி
வாய்பேசத் தெரியாது வாவ் வென்று அழுதும்
வருங்காலம் புரியாது வளர்ந்தோமே தமிழில்

தாய்மைக்கும் தன்னோர்மைத் தமிழ்என்னும் வீரம்
துவள்கின்ற தேயின்று யார் செய்தபாவம்
தேய்வின்றித் தமிழ்காக்கத் திறன்கொண்டு நீயும
தெளிவான வழி சென்று தமிழ் காக்க வேண்டும்
வேய்கூரை வீட்டிக்குள் விளைகின்ற  தங்கம்
விரும்பாது வெளிநாட்டில் விதி தந்த கோலம்
தூய்மைகெட் டிரந்தாலும் தமிழ் உந்தன் தாயாள்
திசை மாறித்திரும்பாதே தமிழ் பேசி உயர்வாய்!

*******

Monday, November 26, 2012

இல்லாத தொன்றில்லை


இருக்குமா இல்லையா இருப்போர்தம்மில்
இருந்ததிது வொன்றாக இருந்தபோதும்
இருப்பதோ இல்லாமை  இருந்துபார்நீ
இருப்பதிது வொன்றேயாம் இருப்போர் சொல்ல
இருப்பதோ இல்லையோ இருந்தாலென்ன
இருப்பதைக் காண்போமென் றிருந்தோர்பாதி
இருப்பதென் றில்லையா இருத்தலின்றேல்
இருப்பதும் போகுமென் றிருந்தோர் மீதி

இருப்பது இல்லாது இருக்குமொருவன்
இருந்தாலென் இல்லையென் றானலென்ன
இருப்போரை இல்லையென் றாக்குவேன்காண்
இரு பாரம் இவ்விடம் இருத்தலாகா
இரு பாரென் றிரும்பு வாள் இருகையேந்தி
இருந்திட்ட இடத்தினுள் இருக்கவந்தான்
இருப்போரும் இருந்தபோர் இல்லையென்று
இருத்திவிட இல்லாமல் இறந்துபோனார்

இருப்போரை எளிதாக இல்லையாக்க
இருபாதி யாக்கிட இன்னல் கொண்டார்
இருந்துபார்  இருபாதி ஒன்றுமில்லை
இருக்கும்சுவ டிருக்காமல் இருக்குமென்றான்
இருந்தும் உயிரில்லையென் றாகும்போது
இரும்புமனம் கொண்டாலும் இருந்தவீரம்
இருப்பாக  இருந்ததாம் இருந்ததன்றி
இருளென்னும்   தீமைதனை இல்லையாக்க

இருக்கும் வழியறியாது இருந்தார் ஆனால்
இருந்தாலென் போனாலென் றெழுந்தசிலரால்
இருக்கும் மனவலிமையை எடுத்துஆள
இருட்டில்சில ஒளிதோன்ற , ‘இல்லையாமோ
இருப்பதோ என்றனை  இருக்கு’தென்றார்
இருக்குதாம் என்றமுதல் இருப்பேயின்றி
இருந்திடக் காண்கிறார்  இருப்பதாயின்
இருக்குதொரு எதிர்காலம் இல்லையாமோ

Sunday, November 25, 2012

தமிழே நீ நதியாக ஓடு

தமிழே நீ நதியாக ஓடு - இந்தத்
தரைமீது வழிமாறித் தொலையாம லோடு
எமதாசை மனம்மீதும் ஓடு - உனை
இசைபாடித் தொழுவோரின் இதயத்தில் ஓடு
அமர்ந்தே நில் ஆற்றுப்படுக்கை - இன்னும்
அகல்வாவி குளமென்று அலைகொண்டு ஆடு
நிமிர்ந்தோடு நேராக ஓடு - நீ
நெடுந்தூரம் நடந்தாலும் புவிகண்டு வாழு

நிமிர்ந்தாலும், புவிகொண்ட மொழிகள் - பல
நினையுண்டு தலைதூக்க நெருங்கு மப்போது
துமிதூறச் செல்வங்களோடு - நீ
தொலையாது பெரிதாகு மழைகொண்டதாகு
சுமந்தோம் உன் புகழ்தன்னை ஆண்டு - பல
சொல்லவும் முடியாத பெருந்துன்பங் கொண்டு
எமதன்பின் தமிழென்று கண்டோம் - இனி
எதிர்காலம் உண்டோவென் றோரச்சம் கொண்டோம்

அழிகின்ற மொழிநூறு உண்டு - இந்த
அகிலத்தில் தொலைகின்ற மொழியோடு சேர்ந்து
வழிகண்டு தமிழ்போகின் தீது - இது
வருங்காலம் நடைபெறக் குறி கொண்டதேது
செழிக்கின்ற மரம்வேண்டும் நீரும் - நீ
திரும்பும் உன் வழியெங்கும் தமிழ்பேச வேண்டும்
தெளிவோடு ஒளிதோன்ற வேண்டும் - இதில்
தேவையெனில் புதுப்பாதை நாம்காண வேண்டும்

மொழிஎன்ப துயிருக்கு நேராம் - இந்த
மூச்சில்லை யென்றிடில் முழுவாழ்வும் போமாம்
பொழிகின்ற மழை நின்றுபோனால் - கொண்ட
பசுமைக்கு புவிமீது இடமேது கூறு
எழில்கொண்ட தமிழ்வாழ வேண்டும் - இதற்
கெமதன்பு இதயத்தில் இடம் நல்கவேண்டும்
வழிஉண்டு வகை செய்ய வல்லோம் - இந்த
வையத்தில் தமிழ்என்ற பெருமையும் கொள்ளோம்

உருள்கின்ற கல்லென்ப குன்றின் - நிலை
யுயர்நின்று விழும்போது உடன் கையிலேந்து
வருகின்ற கல்வீழும் பாதை - அது
வரவர வேகமும் பெரிதாகும் கொள்ளு
பெரும் வீழ்ச்சி கொண்டோடி அருவி - நிலை
பிறழ்வுண்டு விழமுன்புதடையொன்று போடு
தருமின்பத் தமிழ்காத்து வெல்லு - இன்றேல்
தரைவீழும் அருவிக்குப் பெயராழி யென்று

விடியாத வாழ்வு வேண்டாம்


 தேயாத வெண்ணிலா தீண்டாத தென்றலும்
துவளாத கொடிதானும் வெயிலில்
காயாத ஈரமும் கலையாதமேகமும்
கருதாத எண்ணமும் உண்டோ
பாயத நீர்நதி பரவாத வான்வெளி
பருகாத தாகமும் நன்றோ நிலை
சாயாத நேர்மையும் சரியாத வீரமும்
சரித்திரம் தமிழ்கொண்ட தன்றோ

வேயாத கூரையும் விடியாத காலையும்
வெயிலெண்ணி ஏங்காத பயிரும்
மேயாத மான்களும் மிதவாத ஓடமும்
மிகையான அழகற்ற பூவும்
தாயாகின் வன்மையும் தவளாத குழந்தையும்
தகிக்காத உச்சியின் வெயிலும்
நோயாக போனாதாய் நிற்குமோர் நெஞ்சமும்
நிலையீது கொள்ளுதல் தகுமோ

வெல்லாத வீரமும் விளைந்திடா ஆற்றலும்
வெறிகொண்ட பகைகொல்ல வெகுண்டு
கொள்ளாத நெஞ்சமும் குறிவைத்துத் தாக்கிட
கொதிக்காத உணர்வோடு தூங்கி
துள்ளாத ஆறெனத் துடிக்காத பூவிழி
தொடங்காத ஆரம்பம் போலே
நில்லாந டந்திடு நெஞ்சை உயர்த்திடு
நீகாணும் வெற்றியை எண்ணு

செல்லாத கால்களும் தெரியாத பாதையும்
திக்கற்ற விதமான போக்கும்
கல்லாக நெஞ்சமும் கடமைக்கு ஆற்றலும்
கருவற்ற கவிதைபோல் நேர்மை
அல்லாத பார்வையும் அளவற்ற பொறுமையும்
அடிமைக்கு நிகரான வாழ்வும்
இல்லாது போகவே இறைமைக்கு வேறென
எண்ணுதல் நிறுத்தி நீசெல்வாய்

கல்லாத மூடனும் கனிவற்ற காதலும்
கடலோடு சேராத நதியும்
சொல்லாத இரகசியம் தூண்டா விளக்கொளி
தொட்டேசு கம்காணாத் தேகம்
புல்லென்ற கீழ்மையும் புனல்வீழும் தாழ்மையும்
பொழுதாகின் இருள்கொண்ட வாழ்வும்
இல்லாது வீரமும் வல்லாண்மை கொண்டுநீ
இயங்கிடு சுதந்திரம் தேவை

Wednesday, November 21, 2012

ஓய்வு

அனைவருக்கும அன்பு வணக்கம். ஒரு வாரம் ஓய்வு எடுக்கலாமா  என்று எண்ணுகிறேன் கவிதைக்கு ஓய்வு. ஒருவிளையாட்டு  தயாரிக்கலாமா என எண்ணுகிறேன். முடிந்தால் செய்வேன்.
எப்படி விளையாட்டு இருக்கும்.  இதோ இதை விளையாடிப் பாருங்கள்

யார் அந்தக் கொலைகாரன் ?
http://www.mediafire.com/?2u1lt5x2189nblb








மேலும் தேவையென்றால்

http://www.tamilvimbam.com/

நீ வாராயோ?




          நீ வாராயோ


விண்ணெழில் மதி வான்வருகுது
--வீசுங் காற்றதும் வாசங் கொள்ளுது
--வண்ண மென்முகம் வாடிக் காணுது ஏன்தானோ
கண்ணிரண்டினில் நீர்வருகுது
--காவ லெண்ணிடத் தீ எழுகுது
--காட்சி கொண்டெனைக்  கனவு கொல்லுது ஏன்தானோ
எண்ணம் துஞ்சிடத் துயரெழுகுது
--ஏழை நெஞ்சினில் தீபரவுது
--என்னவளென  நீஅழைத்ததும் நான்தானோ
பெண்மை அஞ்சிடத் தலைகுனியுது
--பேச்சிழந்திட ஊர் சிரிக்குது
--பேதை என்றிவள் ஏளனமிடப் பேசாயோ

கால் நடந்திடச் சோர்வுகொள்ளுது
--காற்று வந்துடல் சேர்த்துத் தள்ளுது
--காணும் நெஞ்சிடை ஏக்கம் கொள்ளுது வாராயோ
வேல்க ளென்றிடும் விழி ஒழுகுது
--விம்மிஎந்தனின் குரல்நடுங்குது
--விடிகிற அடிவான் சிவப்பது போல்நானோ
நால்குணத்தினில் நாணம்கெட்டது
--நாஇனித்திடும் தேவைவிட்டது
--நல்லிசைக்குமென் நாட்டம் கெட்டது நான்யாரோ
பால்நிலவினில் பார்குளிருது
--பாய்ந்தலைகடல் வேகம் கொள்ளுது
--பாவை நெஞ்சினைப் பார்த்திரங்கிடல் ஆகாதோ

காக்கை குருவி சேர்ந்து கத்துது
--காளை மாடுகள் தேடிமுட்டுது
--காட்டுத்தோப்பினில் ஆந்தைகத்துது  ஏன் தானோ
பூக்கள் மொக்கினை மெல்லவிழ்க்குது
--போயிதழ்களைக் காற்றுத் தொட்டது
--பார்க்க நெஞ்சினில் வேர்த்துக் கொட்டுது பாராயோ
வாக்குத் தந்ததை நீமறக்கவும்
--வாரிகொட்டிமண் நான்கிடக்கவும்
--வாழ்க்கை என்பது ஆகிவிட்டது வீண்தானே
தீக்கு மென்னுடல் சூடுபட்டது
--தென்றல்தொட்டதில் நோவும்கொண்டது
--திங்கள் போலுடல் தேய்ந்து கெட்டது கேளாயோ

ஊர் நகைத்திட ஓரம் நிற்பதும்
--ஊமைப் பெண்ணென வார்த்தை விட்டதும்
--ஓடித் துள்ளிடும் பாவம்கெட்டதும் உன்னாலே
ஊற்று நீரணி கீழ்க்குளிக்கவும்
--உண்மை கண்டிளம் பெண்கள் வந்ததும்
--ஓடிஎன்மன எண்ணம் கண்டவர் ஒன்றாகி
வேர் பரந்திடும் ஆல் மரமென
--வேகம்பெற்றயல் ஊர் பசப்பிட
--வேடன் விட்டம்பு  தைத்தபுள்ளென வீழ்வேனோ
கார்முகிலுக்குத் தோகை என்றிடக்
--களிநடமிடும் உன் நினைவினில்
--காலிடை கொண்ட பாம்பென நான் சாவேனோ?

அழகுக்கு அழகு !

வான் நிலவென்றால் முழுமதியழகு
வரும் மழைகாட்டும் வானவில்லழகு
தேன்மலர் பூத்தால் தினம்தினம் அழகு
திரிந்திடும் தென்றல் தொடுமுணர்வழகு

மான்களும் ஓடி மருளுவ தழகு
மனமதில் காணும் மாற்றங்க ளழகு
வான்முகில் திரளும் வடிவங்கள் அழகு
வரும் இடராகின் துணிவதும் அழகு

மின்னலில் தோன்றும் மென்பயம்அழகு
மேகத்தின் இடியில் தாய்மடி அழகு
புன்னகை பெண்ணில் பொலிந்திட அழகு
பூத்தொடு மாலை  பூசையில் அழகு

பொன்முடிவேந்தன் புகழ்பெரி தழகு
புத்தொளி ஞானம் புலமைக்கு அழகு
நன்னெடு மரங்கள் நயமுறும் சோலை
இல்லையென்றீதல் இருப்போர்க் கழகு

வன்செயல் நீத்தல்  வாழ்வினில் அழகு
வறுமையைப் போக்கல் ஆள்பவர்க் கழகு
துன்பங்கள்  வாழ்வில் தொலைந்திட அழகு
தூய மனங்கள் சேர்வதும் அழகு

எண்ணங்கள் கொள்ளும் கற்பனை அழகு
இளமையில் காதற் பிரமையு மழகு
மண்ணிடை தவறை மன்னிப்ப தழகு
மனையவள் பணிந்து மகிழ்வது மழகு

புன்மையி லூறிய பொய்யனும் அரசைப்
பேயெனும் ஆட்சி பிழைசெயு மன்னன்
பெண்வதை, மண்ணில் பெருபலியிடுவோன்
புவியிடை அழிவது அழகிலும் அழகே

Saturday, November 17, 2012

தமிழைத் தவிக்க விடலாமா?



ஒன்று பட்டாலுண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கிடின் விளைவது கேடு
என்றுமெம் தமிழ்மனம்மீது - நிதம்
ஏற்படும் பிரிவினை ஏனிந்தக் கேடு
நன்றி கெட்டே பகையோடு - இவர்
நடந்திடும் உறவுகள் நாட்டிற்கு ஊறு
தொன்று தொட்டே தமிழோடு - இந்த
துயர்தரும் சரித்திரப் பலகதையுண்டு

மனமது பண்படவேண்டும் - அதில்
மலர்வது உணர் வுடல் மாளிகை போலும்
கனஎழில் வண்ணங்கள் தூங்கும் - அதில்
காட்சிகள் கற்பனைச் சரங்களும் ஆடும்
இனமொழி யுணர்வுகள் மேலும் - அதில்
இருப்பது பொன்னுடை நகைக ளுமாகும்
உனதெழில் அணிந்திடக் கூடும் - இவ்
வுலகதில் தமிழது  உயர்வென ஆகும்


உணர்வுக ளிருந்திட வேண்டும் - உன்
உதிரத்தை  உறைத்திடும் சுரம்கொள்ள வேண்டும்
தணலென மனம்கொள்ள வேண்டும் - அத்
தகிப்பினில் உதிரமும் சுடும்நிலை வேண்டும்
மணமற்ற மலர்களைப் போலே - நீ
மதியற்ற செயலினை மறந்திட வேண்டும்
குணந்தனில் தமிழ் எனும் பெருமை - உன்
குருதியில் சிவப்பெனும் நிறந்தர வேண்டும்

இழிவதில் இறப்பதுமேலாம் - நீ
இருந்திடில் உறுதிதன் மானமும்வேண்டும்
பழிஎனும் பெயரையும் தாங்கி - நாம்
பலதுறை நடப்பினும் தாய் ஒன்று ஆகும்
வழிபல போய்ப் பணம் தேடு - நீ
வருவது பகையெனில் தமிழ் எனக்கூடு
மொழியுன தறிவினில் தருமே - அது
முழுமை யிலிலையெனில் அகந்தனில்குருடே

இவன் ஒரு தமிழன் என்றுலகில் - நீ
எதுமுனை காணினும் உனதெழில் பெயரே
தவழ்திடும் பொழுதினி லிருந்து - நாம்
தரைவிடும் வரைதனும் தமிழென ஒன்றே
எவனினம் தமிழ்தனைப் பழிப்போன் - அவன்
எதிரியென் றுணர்; உன தாயவள் தன்னை
அவ மரியாதை  செய்திழுத்தே - அவன்
அழகினைகெடுத்திடும் அரக்கனைஎன்றும்

மனமது மன்னிக்கலாமோ - அவன்
மணிமுடி கொள்ளினும் மறந்திடப் போமோ
சினமது எழுந்திட வேண்டும் - அவன்
செயலினை நிறுத்திட உணர்வெழ வேண்டும்
இனமிவன் தமிழென இழிய - நீ
இளித்தவன் கரம் பற்றல் எதுவிதம்- அன்னை
தனிலன்று பால்குடித்தாயோ - இல்லை
தரம்கெட மதுவுடன் விசம் குடித்தாயோ

தமிழெனில் உயிரென எண்ணு - உன்
தாயினும் சிறந்தவள் மொழிஎன்று கொள்ளு
அமிழ்திடும் தாய்சில காலம் - உன்
அகமதில் ஒலித்திடும் தமிழ்முழுவாழ்வும்
தமிழினை மறந்தவன் இழியோன் - அவன்
தொடுமிடம் எங்கணும் விசமெனும் கொடியோன்
தமிழ்தனை விற்பவன் மூடன் - அவன்
தரணியில் புழுவிலும் இழிவெனும் தேகன்

திருந்திடு தமிழ்தனை எண்ணு - நீ
தேன்சுவைத் தமிழினை உயர்த்திட நில்லு
வருவது பெருந்தொகையென்று - உன்
வாழ்வினை எண்ணிடில் பெருதவறொன்று
தருமமும் நீதியும் வெல்லும் - அது
தருமொரு வாழ்வென தலைநிமிர் சொல்லு
அருந்தமிழ் சிதைந்திட அன்னை - அவள்
ஆருயிர் காப்பவர் யார் எமைவிட்டு....!

************************

Friday, November 16, 2012

வாழ வைத்த தெய்வம்

'செந்தமிழா' என்றகுரல், அண்டையிலே நின்றவள்யார்
சந்தணமோ செந்தணலின் தோற்றம்
சுந்தரமண் மேனியெழில் ’”சுற்றும்புவி யென்பவள் நான்
சொல்லுகவி சந்தமுடன்” என்றாள்
தந்தன வென்றாடி அதோ எந்தனுயிர் சூரியன்முன்
தாவி நிதம் நாட்டியமும் செய்வேன்
சந்தமுடன் நீகவிதை தந்திடுவாய் என்னிலிவள்
சிந்தைகவர் அங்கநயம் செய்வேன்

வந்தனம்பார் பேருலகே வாழஇடம் தந்தவளே
வாட்டமுறும் மல்லிகை போலானேன்
இந்தநிலை கொண்டவனை இன்தமிழும் சொல்வதெனில்
என்னசெய்வேன் ஏழையென நின்றேன்
உந்தன் விதிஅவ்வளவே இங்குனது பங்கிலையேல்
வந்தவழி சென்றுவிடு என்றாள்
எந்தவழி யென்றலறி அந்தரவான் நோக்கிடநான்
எங்கிருந்தோ செந்தழல்தீ கண்டேன்

வெந்துசுடும் வெம்மையின்றி அன்பொடுதீ ஒன்றெழுந்து
விண்ணிருந்து வேகமுடன்வந்து
செந்தமிழின் சேவகனே சிந்தையதில் எண்ணமென்ன
சொல்லுகவி இக்கணமே என்றாள்
விந்தையிது அன்னையெனும் விண்ணொளியே என்னுயிர்நீ
வேடிக்கையோ சொல்லிவிடு என்றேன்
மந்தமதி கொண்டனையோ மனமறியும் உண்மைநிலை
தந்திடுவாய் உன்தமிழ்தா என்றாள்

முந்தி எழும்கற்பனயோ முத்தமிழைக் கையளவே
மோகமுறக் கற்றவன்காண்  என்றேன்
தந்தனனே தானதென்ன தந்தனதான் தந்தனையேல்
தந்தனென தானதென தாகும்
தந்தனதை தானிதென தானறியா தானதெனில்
தன்னதனை தானிழித்த தாகும்
தந்திரமோ தந்தனளோ தாகமெளக் கண்டனனோர்
தங்க ஒளி கொண்டுலகில் நின்றேன்

நந்தவனம் ஒன்றதிலே நல்லெழிற்பூ பூத்தனகாண்
நதியெழவும் குளிர் நிலவும் கண்டேன்
எந்திசையில் கீதமெழ இன்னிசைகள் தாளமிட
எங்குமெழில் பரவுதலைக்  கண்டேன்
சந்தமெழப் பாடிடஎன் சிந்தைகளிகூடிட நான்
செல்லுகிறேன் அந்தரவானூடே
பந்தமெழக் காணுமிவன் பைந்தமிழின் போதைகொளப்
பாடுகிறேன் விந்தையென்னில் கண்டேன்

சந்தனமும் வாசம் அது கொண்டதென மேலும்பல
செந்தமிழில் நன்கவிதை செய்தேன்
விந்தைவெளி யெங்குமொளி வேகமெடுத் தோடுகிறேன்
விண்ணிடைநான் வீறுடனே சென்றேன்
சந்திரனில் தூங்கியிவன் சிந்தைமகிழ் வாகிடவான்
சுற்றுகிறேன் பூமியென நானும்
வந்தவளைக் கானவில்லை வட்டமுகம் சுற்றுகிறாள்
எந்தனொளித் தாய் புகழைச் சொல்வேன்

**********

( தந்தனனே தானதென்ன தந்தனதான் தந்தனையேல்
. தந்தனென தானதென தாகும்
. தந்தனதை தானிதென தானறியா தானதெனில்
. தன்னதனை தானழித்த தாகும்

இதற்குப் பொருள்கவிஎழுதும் ஆற்றலை தந்தேனல்லவா அதற்கு ஆனதென்ன நான் அளித்த ஆற்றலை வெளிபடுத்தி கவிதையாக்கி தருவாயானால் இவன் கொடுத்ததை தந்துவிட்டான் என ஆகும். அல்லாமல் நான் தந்த ஆற்றலை இதுதானென நீயறியாமல் போவாயாயின் உன் திறமையை நீயே அழித்ததாகும் என்ற பொருள் வரும் . தவறிருப்பின் சுட்டிக்காட்டவும்

Wednesday, November 14, 2012

அணையாதோ?

( அன்பு)
திங்கள்தனை முகிலணைக்கும்
  தீந்தமிழைக் கவியணைக்கும்
மங்குமிருள் இரவணைக்கும்
  மாலைதடந் தோளணைக்கும்
பொங்குகட லலையணைக்கும்
  பூவிழியை  இமையணைக்கும்
எங்குமுயிர் அன்பணைந்தால்
 இதயமகிழ் வெய்தாதோ

பொங்குமொளி பயிரணைக்கும்
    பூத்தகொடி மரமணைக்கும்
பங்கயத்தை நீரணைக்கும்
    பனித்துளியைப் புல்லணைக்கும்
செங்கரும்பின் சாறுஇனிக்கும்
   சேர்ந்தசுவை நாவணைக்கும்
பங்குகொளும்  வாழ்வுதனில்
    பண்பைமனம் அணைக்காதோ

காலையொளி புவியணைக்கக்
  கனவுவெழுந்து துயிலணைக்கும்
ஓலை மறை வெடுநிலவை
  உள்ளமதன் உணர்வணைக்கும்
சோலைவருங் காற்றலைந்து
  சொல்லாம  லுடலணைக்கும்
ஞாலமதில் அன்பெழுந்து
   நம்வாழ்வை அணைக்காதோ

( அழிவு)
கங்குல்வரப் பகலணையும்
  காற்றெழுந்து சுடரணைக்கும்
பொங்கும்சினம் அறிவணைக்கும்
   போதைகொளப் புகழணையும்
அங்கமெங்கும் நோயணைக்க
  ஆனந்தமென் உணர்வணையும்
தங்குமிந்தப் புவிவாழ்வில்
   தவிப்பென்ப தணையாதோ 

சேலையணி மாதரது
   சேல்விழிகள் நீரணைக்கும்
நாலுமறி மதிஅறிஞர்
   ஞாபகத்தை வயதணைக்கும்
மேலுமுயிர் வாழுடலை
   மோகமுடன் விதியணைக்கும்
காலமெனும் சக்கரத்தில்
   கனவெனவாழ் வணைவதுமேன்

குருட்டு உலகமடா !

வாழ ஒருவழி தேடிநின்றோம் அவர்
வஞ்சகர் என்றுரைத்தார்
சூழுந் துயர்கள்பந் தாடிநின்றோ மெங்கள்
தூய்மை அழிப்போ மென்றார்
பாழுங் கொடுமைகள் செய்தவரைப் பழி
கூறுதல் விட்டேயெமைத்
தோளில் உரங்கொண்ட தாலுலகோ கொடுந்
தீயரென்றே உரைத்தார்

பாலைக் குடித்திடப் பிள்ளைபசி கொண்ட
பாங்கொடு நாமழுதால்
நாலை ஐந்து குற்றம் நாமிழைத்தோமென
நஞ்சினைக் கொட்டுகிறார்
காலை விடிந்திடும் சேவல்கூவுமெனக்
காட்சியும்காண நின்றால்
தோலைஉரித்துக் கிடத்தியெமை மெல்லத்
தூள் அள்ளி பூசுகிறார்

சேலை வழுகவைத் தார்சின்ன மாதரைச்
சித்திர வதைசெய்து
காலை எடுத்து மிதித்து அவளுடல்
கொன்று களிப்படைவார்
சாலை வழிபெரும் சீறிடுவாகனம்
சூரப்பயணம் செய்வார்
மேலை வழி  தேசமண் சிவக்கும்
 எங்கள் மெய்யின் குருதிகொள்வார்

ஊருக்குள் வீட்டுக்குள் எங்கும் கொலை என்னும்
உத்தம போதனைகள்
யாருக்கு யார்சொல்லிக் கொண்டனரோ பெரும்
வம்சத்தில் பற்றுடையார்
பேருக்கு ஓர்தமிழ் பிள்ளைதனும் இந்த
பொன்னெழில் நாட்டிலின்றி
வேருக்குள் வெட்டித் தறிப்பதுவே இனி
வேலை நமக்கு என்றார்

யாருக்கு என்ன நடப்பதெல்லாம் ஒரு
யாகமென் றோ உலகு
கூருக்கு தீட்டிய கத்தியினால் வெட்டக்
கூசாமல் கண்டுநின்றார்
மாருக்கு குத்தியும் மண்ணில் விழுந்தழும்
மானிட ரெம்மைவிட்டுப்
போருக்குள் நீதியைக் கொன்ற கயவரை
பூவள்ளி போற்றுகிறார்

தேருக்குள்ளே நின்று வீதியைச் சுற்றிடும்
தெய்வத்தை கேட்டுநின்றோம்
பாருக்குள் தேவரின் மைந்தர்களாய் இந்த
பச்சை யிளமனதும்
நேருக்கு வன்பகை வந்து நின்றா லதை
நீறென ஆக்கும் ‘கனல்’
நீருக்குள் பூத்தகமலமதில் எரி
நெய்கொண்ட தீயின் அழல்

வாரிச் சுருட்டியும் வந்தவர்கள் ஓட
வைக்கும் திறனும் கொண்டார்
பாரின் குருட்டவை பார்க்கத் தவறிய
பாழும் செயல்க ளெல்லாம்
சூரிய னின்கதிர் போலத் தரணியில்
சுட்டெரித்தே தருமம்
நேரிய பண்புடை செய்ய முயன்றவர்
நம்மைப் பிரிந்திடினும்

வீரியம் இல்லையென்றே குனிந்தோடிட
வேளை இது இல்லைடா
காரிய மாற்றிக கருமிருள் போக்கிடக்
கண்களை நீ திறடா
சூரியன் தோன்றிடச் சுற்றுமுலகில்நம்
தேசமதை மீளடா
பாரிய மாற்றமிட்டே பகைவென்றிடப்
பார்த்தொன்று கூடிடடா

****************

தீப ஒளிகள்

ஆயிரம் ஆயிரம் தீபங்கள் ஏற்றியும்
ஆனந்த மென்ப தில்லை
போயின்னு மேற்றிடப் போகுது வாழ்வுகள்
பொன்னெழிற் தீவின் நிலை
மாயினும் மாளினும் ஏற்றிடும் தீபங்கள்
மேலும் இருக்குத் தொகை
ஆயினும் அச்சம்கொண் டாடுது தீபங்கள்
ஆவேசக்காற்றின் தொல்லை


கோவிலுமில்லைக் குளக்கரை பூவனம்
கூடிய மண்டபங்கள்
தாவி ஏறிவிளையாடிடும் மாமரம்
தானதரும இல்லம்
மேவிவளர் தென்னை வீட்டருகே வேம்பு
வீதியெல்லாம் பறித்தே
போவீரெனச் சொல்லி  நாலுபக்கவேலி
போட்டவர் பூட்டுகிறார்

தீபம் ஒளிர்வது தேக்குமரக்காடு
திங்கள் வரும்பொழுது
தூபமிடும் மலர் தூக்கி எறிந்தவர்
தெய்வமென் றன்னை தங்கை
சாபமிட்ட நிலை சற்றுவணங்கவும்
சீறுவர் கொண்டுவெம்மை
ஆபத்துடன் வாழ்வில் அன்றாடம் பூவிட
உண்டோ இன்னும் வருகை

*******************

Wednesday, October 31, 2012

உயிர் தமிழுக்கு...



கவிக்கு உயிர் ஈவேன் கண்டதுண்டமாய் ஆக்கி
புவிக்குள் எனைப் புதைத்துப் பூமலர வைத்தாலும்
தவித்தே அலைதென்றல் தனில் ஓசைமீட்டியொரு
கவியாய் உயிர்கொண்டு  காற்றில் இழைந் தோடிடுவேன்

மடித்தே எனதுடலை  மாகடலில் எறிந்திடினும்
அடித்தே எழும் அலையில் ஆவென்று பாட்டிசைப்பேன்
துடித்தே உடல்நடுங்கத் தீயிடையே எறிந்திடினும்
படித்துப் பெருங்கவிதை பாட்டெழுதித் தீய்ந்திடுவேன்

வெடித்துச் சிதறவொரு வானிருந்து போடும்பொதி
அடுத்தென் அருகிலிடி ஆகாயம் வீழ்ந்ததென
பொடித்தே உடல் சிதறப் பூகம்பமாய் வெடித்தும்
நொடிக்குள் கவிபாடி நிம்மதியாய் செத்திடுவேன்

செழித்த சோலையிலே சிங்காரக் குருவிகளும்
களித்து குலவ அதைக் கண்டு கவிபாடிடுவேன்
குளித்தே எழும்குளத்தில் குமுதமுடன் அல்லிமலர்
விளித்துகிடப்பதனை விரும்பக் கவிசெய்வேன்

நெளிந்தே சிறுநாணல் நிலத்தை வணங்கிடினும்
தெளிந்த உரமெடுத்துத்  தேக்குமரம் நின்றிடினும்
புளித்த மா தருவும் பின்னாலே   ஆலமரம்
அளிக்கும் எழில்கண்டு ஆடியேநான் பாடிடுவேன்

தோகை மயில் விரிக்க துவானம் நீர்தெளிக்க
நாகம் படமெடுக்க  நாரைகொளத் தவமிருக்க
பூகை யேந்தியொரு பெண்ணொருத்தி மலர்சூட
ஆகா அ\ழகென்றே ஆனந்தப்பாட்டிசைப்பேன்

வடித்துக் கொடுப்பதவள் வாரித் தெளிப்பதிவன்
குடித்துக் களிப்ப மனம் கூடிக்கிடப்ப துளம்
துடித்துக் கிளம்பி உயிர் தேகம் அடங்கும்வரை
நடித்துக் கவிகூற நாட்டியங்கள் ஆடிடுவேன்

தேனைக் கவிவடிக்கத் தென்றலதி லேறியுயர்
வானை க்கடந்தோடி வானவரின் நிலமேகி
சேனை படைஎதிர்த்து சிரம் கொள்ளவந்திடினும்
ஞானபழம் தருவாள் நாடிவரம் வென்றிடுவேன்

ஓடைமலர் பூக்கும் ஒளிவெள்ளம் பூமிகொளும்
ஆடை விரித்த அலை அசைவதிலே அழகூறும்
கூடை மலர் கவிதை கொண்டுலகின் சக்தியவள்
ஏடு எழுதவைத்தாள் இறையவளைப் போற்றிடுவேன்

Sunday, October 28, 2012

இயற்கை, வாழ்க்கை, கயமை, கவலை



(இயற்கை)
                       கிராமம்

பூக்காடும் புள்ளினங்கள் போம்வானமும்
பொழுதோடிக் கதிர் வீழும் பொன்மாலையும்
தேக்கோடு பெருஞ்சோலை சில்வண்டினம்
சிறுமந்தி விளையாடும் மூங்கில்வனம்
தீக்காடோ என்றஞ்சச் செம் பூக்களும்
சிதறும்பின் சேர்ந்தோடும் மந்தைகளும்
நீக்காத திரைமூடும் முகிலோவியம்
நின்றாலும் நடைபோடும் இளஞ்சூரியன்

பூக்காது முகை தூங்கும் அயல்தாமரை
புனலாடக் குதிபோடும் நிரையாயலை
தேக்காது தேன்ஈயும் மலர்கொள்வனம்
திகழன்பு மாதர்கள் தெரு ஊர்வலம்
போக்காக நடைபோடப் பொழுதோடிடும்
பூங்காற்று வயலோரம் பாடுங்குயில்
நாக்கோடு சுவைகூட்டக் நறுந்தேனடை
நாள்தோறும் கண்முன்னே பேரின்பமே


(வாழ்க்கை)
                     நகரம்

மூக்காலே புகைதள்ளும் பெரும்வண்டிகள்
முன்னாலே நெடுஞ்சாலை மிதிவண்டியும்
சாக்காலே நிறைமூட்டை இழுமாடுகள்
சரிந்தும்கீ ழுருளாத பெருவண்டியும்
போக்காலே குறுக்கோடும் ஒருஜன்மமும்
போறேன்னு சொன்னாச்சா எனும் கூச்சலும்
நோய்க்காக விரைவண்டி கூப்பாடிட
நிறைகின்ற வாழ்வோடு மரத்தினடி

தீக்காயும் வெயிலுக்கு திருமண்டபம்
தின்றாறித் துயில்கொள்ள திருமஞ்சனம்
நோக்காயம் படுமேனி கொண்டோமிந்த
நிலமைக்கு விதியென்ற உழைப்பாளிகள்
ஆ..காணும் இடமெங்கும் நிறைந்தாரென்ன
அநியாயம் ஏமாற்றம் அதிகாரமும்
நாக்காலே பொய்சொல்லும் நடிப்போரினால்
ஞாலத்தில் உருவான நடையானதே!

(கயமை)
                     வறுமை,செல்வம்

ஆக்காத சோறெண்ணி அடுப்போடுநல்
ஆனந்த சயனத்தில் ஒருபூனையும்
வேக்காடு இல்லாத வெறும்பானையும்
விரதத்தை தினங்காணும் சிறுபிள்ளைகள்
நீக்காத வறுமைக்கு நீருண்டுவாழ்
நலிந்தாலும் எலும்பொடு நடைகொண்டவர்
போக்காத ஏழ்மைக்கு பதில்சொல்பவர்
போகத்தின் மாயைக்குள் சிக்குண்டிட

தூக்காக பணமூட்டை தொலைதேசமும்
தெரியாமல் மறைக்கின்ற செல்வந்தர்கள்
வாக்காக பலநூறு மொழிகூறிப்பின்
வந்தேறும் அரசாட்சி வாழ்வென்றபின்
நோக்காக தன்பாடு நிறை கண்டிடும்
நீதிக்கு கண்கட்டு நெறியாளர்கள்
காக்காது கைவிட்ட மாந்தர்களே
கடிதென்ற வாழ்வுக்கு கதியாவரே

(கவலை)
                   இளைய சமுதாயம்

நன்நூல்கள் தமிழ்கூறி நயம்பேசிடும்
நன்மாடம்  பூஞ்சோலை நிகழ்மண்டபம்
புன்னகைச் சிறுவர்கள் பெண்கூடியே
பந்தாடும் மகிழ்வெங்கே; பரிதாபமாய்
எந்நேரம் கணனிக்கு இரையானதோர்
இடும் சத்தம் சுடுமோசை எதிராட்களும்
வன்மைக்கு துணையாகும் விளையாட்டுகள்
வளர்பிஞ்சு மனங்கொல்லும் கொடுநஞ்சுகள்

எண்கற்றல் எழுத்தோடு இறைபக்தியும்
இல்லாது புயல்போன்று எதுஎண்ணினும்
கண்ணுக்குமுன்காணும் கடுவேகமும்
கைகெட்டா தாயின்கொள் கடுங்கோபமும்
பெண்ணுக்கு ஆண் நேரென் நிகர்வாழ்வென்று
பிழைசெய்யும், சிலபோக்கும் மென்மைகெட
தண்மைக்கு சூடேங்கும் மனமானது
தருமோ நல்லெதிர்கால வாழ்வென்பது

***********

Saturday, October 27, 2012

ஒருநாள் ராஜா 2


தேவஎழிற் பூவையர்கள் தீந்தமிழ் பாட
தென்திசையின் காற்றுவந்து தேகம்தொட்டிட
கூவியொரு சங்கொலித்து கொள்புகழ்போற்ற
கொற்றவனென் பக்கமொரு கோதையும்காண
தேவிமலர் சூடியயல் தென்ற லென்றாக
தேன்நிறைந்த கிண்ணமதை தேவதை சேர்க்க
யாவு மினி தென்றொருவர் ஆளுமை போற்ற
யௌவனத்து பெண்சுழன்று நாட்டியமாட

மேவியெழு வான்சுடர்போல் வீர மார்பதை
மென்னிதழ்கொள் கன்னியர்பூங் கைகள் தொட்டிட
மாவிருந்து வீழ்ந்தகனி மாதர் கன்னமும்
மையிதழ்கள் பேசியெனை மகிழ்வினில் ஆழ்த்த
நாவினித்த கனிபிளந்து நங்கையர் ஊட்ட
நடையமைந்த ராஜகளை நற்புகழ் சேர்க்க
தேவர்களும் பூஎறிந்து என்பெய்ர்கூற
தோன்றுசுகம் இன்பமன்றோ இன்பமேயன்றோ

பால்நிலவில் மாடமதில் பைங்கிளியாட
பனியெழுந்து குளிர்நடுக்கி போர்வையைத் தேட
வேல்விழியாள் மான் பயந்து வெகுண்டது போலும்
விளங்க பெருந்தீ எழுப்பி வெம்மையில் காய
நால்திசையும் போர்முரசு சங்கொலி கேட்க
நாடு கொள்ள வந்தவனும் நடுவினில் தோன்ற
கால் நடக்க கைஉருவி வாளினைத்தேட
காலைவெயில் சுட்டது நான் கண்களை விழித்தேன்

மென்மையில் வலிமை

( தலைவியின் பிரிவுத்துயர்)

பொன்னெழில் கொண்டது வானம் - அங்கு
போவன பஞ்செனும் மேகம்
என்னழ கென்பது யாவும் - அங்கு
ஏகும் முகிலெனக் காணும்
தன்னிலை விட்டவை ஓடும் - எனைத்
தன்னந்தனி யென்ற  தாயும்
மன்னவன் நீசெய்யும் மாயம் - இதில்
மாறுவ தில்லைச் செய்காயம்

தென்கடல் சுற்றியே வீசும் - அந்த
தென்றலும் என் பகையாகும்
புன்மை செய்தே மனம்நோகும் - வரை
பூந்தளிர் தேகம் தொட்டோடும்
சந்திரனும் முந்த நாளும் - மன
சஞ்சலத்தில் வந்து கண்டும்
இந்தளவோ என்று காயும் - எந்தன்
ஏக்கம் கண்டே உடல்தேயும்

மந்திகள் மாவினி லேறும் - இவள்
மங்கையைக் கண்டு கூத்தாடும்
வந்தானோ என்றுபல் காட்டும் - மனம்
வானரம் தானென்று வையும்
அந்தியில் சிற்றலை யாடும் - குளம்
யாவும் மலர்ந்த செம்பூவும்
விந்தை குளிர்ந்தும் செவ்வானம் - வெயில்
விட்டும் எனையெண்ணி வாடும்

பந்தியில் உண்டிடும் வேளை - பயன்
பட்ட இலை கருவேம்பை
நிந்தை செய்தே தள்ளி வீசும் - தன்மை
நேர்ந்தே யெனை எறிந்தாலும்
வந்திடுவர் என வாசம் =  தரும்
வண்ண மலர் தெம்பு கூறும்
அந்தோ மதுகொண்ட வண்டோ - பொய்
யாமெனப் பூவை விட்டோடும்

வெண்பனி போல்நெஞ்சு காணும் - விழி
வந்து சொரிந்திடும் நீரும்
எண்ண எண்ணக் கொள்ளும் துன்பம் - அந்த
ஏகாந்தமே யெனைக் கொல்லும்
கண்ணிரண்டும் இருளாகும் - அதில்
காவிய நாயகர்போலும்
அண்ணளவில் நீயும் நானும் - கண்ட
அந்தநாளின் நிழல் தோன்றும்

செங்களமோ எனவானும் - ரத்தம்
சிந்தியதோ வெனக் காணும்
பங்கயம் பூமுகம் தானும் - அது
பட்டது போற் சிவப்பாகும்
குங்குமம் கொள்ளெனத் தானும் - இவள்
கொண்ட மனஎண்ணம்யாவும்
பங்கம் விளைந்து புண்ணாகும் - கத்தி
பட்டதில்லை இரத்தம் சிந்தும்

தெங்கு வளர்ந் துயர்ந்தாலும் - அது
திங்கள் தொடஎண்ணினாலும்
அங்கு முகில்வந்துமூடும் - மதி
ஆகத்தொலைவு என்றாகும்
மங்கு மொளிகொண்ட வானில் - என்ன
மந்திரங்கள் போட்டபோதும்
தொங்கு மதி உயர்வாகும் - தொட்டு
கொள்ளு மெண்ணம் கனவாகும்

தங்கம்சுடச் சுட மின்னும் - உந்தன்
தாமதமும் என்ன செய்யும்
பொங்கும் கடலலை துள்ளும் - அந்தப்
போதை கொண்டே காணும் உள்ளம்
எங்கும் கடற்கரை காணும் - அங்கு
ஏக்க மிழந்தலை மீளும்
இங்கும் இவள் நெஞ்சினோரம் - இனி
இல்லை யெனும் உரம் காணும்

Thursday, October 25, 2012

புரியாத சக்தி (தேவி)

கண்கொள்ளக் காட்சி தந்தாள்
. காலைக்குக் கதிரைத் தந்தாள்
.. கனிந்திடும் காய்கள் பூவில் தேன் தந்தாள்
எண்ணுக்குள் கூட்டல் வைத்தாள்
. இணைவதில் மீட்டல் வைத்தாள்
..  இதயத்தில் அன்பை வைத்து இதம்செய்தாள்
பெண்ணுக்குள்  உயிரை வைத்தும்
. பிறப்பென்று வேரைஊன்றி
.  பிரிந்திடும் இயல்பை வைத்துப் புதிர்போட்டு
மண்ணுக்காய் ஆசைகொண்டு
. மானிடம் பகைத்து நின்றால்
.. மாதரின் மெய்யைத்தீண்ட ஏன்செய்தாள்

உண்ணென்றே அன்னம் இட்டாள்
. உலவென்று வானம் வைத்தாள்
..  உறங்கிட இரவைத் தந்தும் உளம்மீது
பண்ணோடு இசையும் தந்தாள்
. பாட்டுக்கு நடமும் செய்தாள்
..  பாரென்று இன்பம் எல்லாம் படைத்திட்டாள்
வெண்நீல மேகமெங்கும்
. விளையாடிச் சுற்றும் மதியை
..  விளக்கென்று வைத்துப் பகலுக் கெதிர்தந்து
கண்மூடித் தூங்கச் செய்து
. கருமைக்குள் கலகம் இட்டு
..  காணாத துன்பம்கொள்ளக் கதை செய்தாள்

தண்ணென்ற ஒடைநீரில்
. தாமரை தொட்டேஓடும்
..  தவிக்கின்ற காற்றில் மூச்சை உயிராக்கி
கண்ணீரில் வாழச் செய்ய
. களிப்புக்கோர் எல்லைபோடக்
.. காலத்தில் காணும்தீமை கொள்ளென்று
அண்மைக்குத்  துணையைத் தந்து
. அறிவுக்கும் இருளைகாட்டி
..  ஆக்கத்தில் பசியைத் தானும் பெரிதாக்கி
வண்ணத்தில் ஏனோ மின்னா
. வாழ்வுக்குப் புரியா தென்றோர்
..  வார்த்தைக்குப் பொல்லா தொன்றை ஏன் வைத்தாள்?

புண்ணுக்கு மருந்து மாவாள்
. புலமைக்குக் கவிதையாவாள்
..  போக்கிற்கு பாதைகாட்டிப் போவென்பாள்
வெண்ணெய்க்குள் நெய்யாய் நின்று
. விளக்கிடை ஒளியென் றாவாள்
..  விண்ணுக்குள் நின்றே காணா விளைவாகி
அண்டத்துள் சீறிக்காணும்
. அனலுகுள் வெம்மையாவாள்
.  அம்மையர்க்  கழகைத் தந்தே ஆளென்றாள்
திண்ணத்தில் நேர்மைகொண்டாள்
. திறனுக்குத் தாய்மை செயதாள்
..  தீண்டக்கை தொட்டாற் சிதைவும் ஏன்செய்தாள்


Tuesday, October 23, 2012

முத்தேவியர்க்கும்...!


வீணை கரமெடுத்து வெள்ளைமலர் இருந்து
வேண்டும் கலைகள் தரும் வாணியம்மா -நல்ல
ஆணை பிறக்கவென அன்பிலுனை யழைத்தோம்
ஆகும் வரமெமக்கு தாருமம்மா - புவி
காணும் உயிர்களுக்கு கல்வி உயர்வுதந்து
காக்கும் குணம்மிகவே செய்யுமம்மா -இனி
வீணிற் கலகம் செய்து வீம்பில் உடலழித்து
வெள்ளை மணல் சிவக்க வேண்டாமம்மா

ஞாலம் முழுதும் பொன்னை நாடிச் சொரிந்து ஒரு
நாளில் உயர்வு பெறசெய்யு மம்மா -இன்று
காலம் முழுதும் சிலர் காவல் அதற்கிருக்கக்
கந்தை யுடுத்தவரும் காண்பதென்ன - ஒரு
கோலம் இதுவுமென்ன கொண்டோர் உயரிருந்து
கொட்டும்குவை நதியென் றோடிப் பெருங் - கடல்
போலும் வறுமைகொண்டு பிள்ளை பசியிலழும்
பள்ளம் நிரம்ப வழி காட்டுமம்மா

வாளைக் கரம்பிடித்து வந்தோர் வலியரெனில்
வீரம்,அறம் இணைய வேண்டுமம்மா - வெறும்
கோழை மனத்தினொடு கொள்கை சிறந்திருக்கக்
குற்றம் கொடுமை தீரம் கொள்வதுண்டோ - கருந்
தேளை அரவமென்னில் தீண்டும் விடம் கொடுத்து
தப்பும் முயல்களுக்கு கால் படைத்தாய் - இனி
நாளை உலகமதில் நல்லோர் துணிந்துஎழ
நாசம் விளைப்ப ரச்சம் கொள்ள வைப்பாய்

குற்றம் புரிந்தவர்கள் கோலைப் பிடிப்பதெல்லாம்
முற்றும் தடுங்கள், மூன்று தேவியரே - நன்கு
கற்றுத் தெளிந்தவர்கள் காட்டும்வழி நடப்பர்
பெற்றும் வெற்றி முடி சூடவேண்டும் - இனிப்
பற்றும் உயிர்களிடை பாசம் உடையவனே
கொற்றம், குடைவிரித்துக் குந்தவேண்டும்  இவை
சற்றும்  இழந்தமூடன் முற்றம் நிறைந்தகுவை
பொற்கல், பணம் குவித்தல் நிற்கவேண்டும்

***********************

Friday, October 19, 2012

நவராத்திரிபாட ல் 2

        கருணை காட்டு
              
அடிமனதிலெழும் கவலை
.  அதையறிவ துனதுநிலை
.  ஆற்றிவிடு சக்திதேவி
துடித் துளமும் துயருறவும்
.  தொலைவிலிருந் தெமையறிவ
.  திலைஎனவும் மறுப்பதா நீ
விடிவுகொள இவரெமது
.  விளைவிலெழும் புதல்வரென
.  விரும்பி எமக்கன்பை யருளி
முடிவையெடு இருகரமும்
.  முகை மலரென் றிணையவுனை
.  மனமுவந்து கேட்டோம் தேவி

தினம் நடந்த திங்கள்முகம்
.  தனையிழந்து குறுகுதென
.  தமிழ் சுவைத்து வாழ்ந்த இனமும்
தனமிழந்து தரமழிந்து
.  தமிழ் குலைந்து தமையிழந்து
.  தவிக்கும்வகை காண்பாய் சக்தி
மனமழிந்து வாழ்விழந்து
.  மதிபிழன்று மானிடத்தின்
.  மகிமைதனும் இழந்தே தேவி
கனமிழந்து வாடுமெமைக்
.  காப்பதற்கு வேண்டுமுடன்
.  கருணை கொண்டு காண்பாய் சக்தி

நகையிழந்த சிறுவர்முகம்
.  முகையழிந்த மலர்க்கொடியும்
.  சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
.  புனலிழந்த பொய்கையென
.  வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
.  பழியெழுந்த விதமெதுவோ
.  குகையொழித்த இருளும்போலே
மிகையழிய மேதினியில்
.  அகமகிழ இருப்பதென்ன
.  தொகையழியு முன்னர் காப்பாய்

Thursday, October 18, 2012

தளர்வுறும் மனம் தள்ளு

                   தளர்வுறும் மனம் தள்ளு


பெண்:

தேனைத்தான் தந்தேனே காசைத்தான் தாவென்று
தேன்மலர் கேட்டதுண்டோ
வானைத்தான் தந்தேபின் வீசத்தென் றல்தன்னை
வாடகை வான் கேட்குமோ
ஏனத்தான் இப்பூமி எல்லோர்க்கும் ஆனாலும்
இருக்கத்தான் இடமில்லையே
ஊனைத்தா உயிரைத்தா உனதில்லை ஓடிப்போ
உரிமைக்கு நாமென்பதேன்

வாழத்தான் எழுந்தோமே வாளைத்தான் கொண்டெம்மை
வீழத்தான் கொன்றார்களே
நாளைதான் நமக்கென்று நம்பித்தான் இருந்தோமே
நலியத்தான் செய்தார்களே
ஏழைதான் என்றே எம் இயல்பைத்தான் மீறி இவ்
வுலகுந்தான் எதிர் வந்ததே
சூழத்தான் நின்றெம்மை சுற்றித்தான் படைகொண்டு
சொல்லித்தான் கொன்றார்களேன்

உள்ளந்தான் எண்ணித்தான் உரமும்தான் கொண்டாலும்
தன்னைத்தான் புரியாமலே
அள்ளத்தான் குறையாத அன்பைத்தான் கொள்ளாமல்
அறிவற்ற நினைவாகியே
பள்ளந்தான் முடிவென்று பாயுந்தண் ணீராகிப்
பலமாந்தர் நிலைகெட்டுமே
கள்ளந்தான் கொண்டோரைக் காலத்தின் கோலத்தில்
காணும்  இந்நிலையானதேன்

ஆண்:

எண்ணந்தான் தளராதே இன்னும்தான் துணிவுண்டு
எழவுந்தான் உரமுண்டடி
கண்ணைத்தான் போலும்நாம் காத்திட்ட மண்போக
கொள்ளத்தான் திறன்கொள்ளடி
பெண்ணைத்தான் கொன்றாலும் பிள்ளைதான் தின்றாலும்
பிறந்திட்ட தமிழ் எண்ணடி
விண்ணைத்தான் வெளிச்சம் செய் வெயிலும்தான் மேலேறும்
விடியும் வாழ்வுனை நம்படி

நவராத்திரி பாடல் 1

வீரத்தின் தேவி வெற்றியின் ஊற்றே
வேண்டுவ தீந்துவிடு
சாரமும் கெட்டுத் தளர்ந்தவருண்டு
சக்தியை ஊற்றிக் கொடு
தூரத்தில் தோன்றும் சூரியன்மீது
சொல்லொணாச் சக்தி வைத்தாய்
பாரத்தைக் கொண்டு பற்றினோம் கையைப்
பணிந்தனம் சக்திகொடு

ஆற்றுக்குவேகம் அனலுக்குதீய்ப்பு
அடித்திடும் புயற் துடிப்பு
சீற்றத்துக் காழி  செழிப்பதில் பூக்கள்
சிறப்பென நீ படைத்தாய்
வீற்றிருக்குமுன் வெள்ளிமலைபோல் 
வீறுடன் நாம் நிமிர
போற்றுகின்றோமெம் புன்மையழித்துப்
பூமியில் மாற்றவிடு

சேற்றுக்குள் பூத்தால் செந்தாமரைப்பூ
சீ யென்று தள்ளுவதோ
காற்றுக்கு எம்மேல் கடுஞ்சினமேவி
கணமேனும் நின்றிடுமோ
மாற்றுக்கு ஏதும் வழியில்லையோ எம்
மனதுக்கு மகிழ் வெல்லையோ
நூற்றுக்கு ஒன்றாய்  நாம்வாழல்விட்டு
நிலைதனில் கெடுவதுவோ

கொட்டலாம் மேகம் குமுறலாம் ஆழி
கூரைகள் பிய்த்தெறிந்தே
பட்டதைச் சூறை பாதி முறித்தே
பலமென்று காட்டிடலாம்
வெட்டலாம் மின்னல் வீழலாம் தாரை
வெள்ளமாய் நீர் கொட்டலாம்
விட்டெலாம் நீங்கும் விதமிவை வாழ்வில்
வந்திடத் தேறுவமோ

Sunday, October 14, 2012

யாரங்கே..!

 நீரினுட் கல்லை எறிந்த பின்னும் - குள
நீரலை தோன்றிடக் காணவில்லை
வாரியிறைத்து மழை பொழிந்தும் -வெள்ளம்
வந்து நிலமோடக் காணவில்லை
போரில் முரசமும் கொட்டியது - எந்தப்
போரிடு வீரனும் காணவில்லை
தேரினில் தெய்வமும் ஏறி நிற்க-  எந்தத்
திக்கிலும் சக்கரம் சுற்றவில்லை

பாரியும் தேடியலைந்து விட்டான் பாவம்
பார்வையில் முல்லைகொடி யுமில்லை
கூரிய அம்புகள் விட்டிருந்தும் - அது
குத்தும் இலக்குகள் ஏதுமில்லை
வேரின் அடியிற் பழுத்த பலா - அதை
வேண்டிக் கவர்ந்திட யாருமில்லை
பாரில் இருள்ஓடிக் காலை வந்தும் - சுடர்
பற்றி யெரிந்திடக் காணவில்லை

ஓடித்திரிந்தே உழைத்தவனும் - வாழ்வில்
ஒன்றுமே செய்யா திருந்தவனும்
ஆடிக் களித்து மகிழ்ந்தவனும் - ஏதும்
ஆகட்டுமென்றே யிருந்தவனும்
கூடிக் கலந்தங்கு வாழ்ந்தவனும்  - எந்த
கூட்டமும் இன்றித் தனித்தவனும்
தேடிடும் ஞானியும் மூடனவன் - இவர்
சேர்ந்து கிடக்குமிப் பூமியிலே

வாடிக்கிடக்குது  தோட்டமொன்று - அங்கு
வண்ண மலர்களோ ஆயிரமாம்
மூடிக் கிடக்குது மேகமொன்று வானம்
முற்றும், மழையின்றிச் சூனியமாம்
ஒடித்திரிந்திவர் வேண்டி நின்றும் அந்த
ஒற்றைக் கண்மட்டும் திறக்கின்றதே
நாடி அருள் செய்வதார் இறையே இங்கு
நாமுள்ளம் வேண்டு மாதி சிவனா

ஓடித்திறக்குது  வாசலொன்று - அங்கு
உள்ளே வருவது நீதியொன்றா
தேடியெடுப்பது ஏடுதானா - அல்ல
தீட்டிய கூருடை வாளினையா
நாடி வருவது நன்மைகளா - அல்ல
நாலு முழக்கொடி காலன்சொத்தா
ஓடித்திரிவது உண்மைகளா - இல்லை
ஒசையற்ற காலச் சக்கரமா?

*******************

Tuesday, October 9, 2012

ஒருநாள் ராஜா !

கோட்டையில் மன்னன்சிங் காசனம் - அதில்
கொற்றவன் நான் சுற்றிப் பாவையர்
பாட்டிசைத்து நடமாடிட - என்
பக்கத்தில் சாமரை வீசுவோர்
தேட்டம் நிறை திறைசேரியில் -முட்ட
தேங்கிக் கிடந்த பொற்காசுகள்
நாட்டில் மக்கள்முன்னே வீசிட - இங்கே
 நாளும் பொழுதும் கும்மாளமே

மஞ்சள் நிறவெயில் மாலையில் - இனி
மாங்கனிச் சாறினை உண்டபின்
கொஞ்சும் மலர்க் காவின் ஊஞ்சலில் -பல
கூடுமிள மங்கை நாணத்தில்
மிஞ்சி நகைசிந்தல் போலவே -ஞான்
மன்னன் வீசிய பொற்காசுகள்
பஞ்சில் மெதுவிளங் காற்றினில் - நிலம்
பட்டெழுந்தஒலி இன்பமே !

(வேறு)

எத்தனை எத்தனை வீரமுடன் அதில்
ஏறி அமர்ந்திருந்தேன்
புத்தம்புதுவொளி வீசிய கண்களில்
பொற்கதிரோன் ஒளிர
முத்தெனக் காணும் மணிச் சரங்கள்மின்னி
மோகனமாய்த் திகழ
சத்தமிட் டாடிடும்  நங்கையர் கள்குதி
தாங்கி நிலம்அதிர

வித்தைகள்போல் மனமேடையில் இன்பத்தின்
வேகம்துடிதுடிக்க
முத்தமிடும் இளங்காற்று வந்தே அங்கு
மெய்தனைத் தொட்டிழைய
நித்தம் அழகிய மாலையிலே இங்கு
நின்றிடும் ஏழைகளின்
சித்தம் மகிழ்ந்திட அள்ளி எறிகின்றேன்
செம் பொன்னிற் காசுகளை

பொத்தெனக் கீழே விழுந்து விடச்சில
சத்தம் கிளுகிளுக்க
 கத்திக் குடிமக்கள் பொத்திப் பிடித்திடக்
கண்டு மன மகிழ்வால்
கொத்து மலர்களின் தோரணங்களூடே
சுந்தர வீரனென
எத்தனை தான்இறு மாப்புடன் கண்டனன்
இன்பக் கனவினிலே

*********************

Wednesday, October 3, 2012

வாழப் பழகிவிடு


நீரின்றி வெம்மையில் காயும்பஞ்சு அந்த
நீலவான் மேல்மிதந் தோடிவரும்
நேரின்றி எண்ணிடும் எந்தநெஞ்சும் என்றும்
நிம்மதி குன்றிட வாடி நிற்கும்
வேரின்றிப் பட்டிட எஞ்சும் மரம் வெட்டி
வீழ்த்துவதாய் மண்ணில் வீழ்ந்துவிடும்
யாரின்றி நீகொள்ளும் இந்த துயர் கண்ணில்
ஆறென நீர் வழிந்தோட வைக்கும்

தேரின்றிக் கோவிலில் நிற்கும் தெய்வம் என்ன
செய்யினும் பேரெழில் கொண்டிடுமோ
கூரின்றிக் வீரனும் கொண்ட வாளால்அவன்
கீர்த்தியுடன் வெற்றி மாளுமன்றோ
பாரின்று வாடிடும் உந்தனுள்ளம் வாழ்க்கைப்
பாதையில் கல்லுகள் காணுவதோ
கூர்எழில் கொண்டிட வேண்டின் வாழ்வில் சில
குற்றங்கள் மன்னித்தல் வேண்டுமன்றோ

மஞ்சள் நிலவோடும் நீல விண்ணும் ஒரு
மா மலை மீதுறை வெண்முகிலும்
கொஞ்சுங் கிளிகளின் ஆரவாரம்  வாசக்
கொத்து மலர்களின் கொள்ளையெழில்
அஞ்சும் சிறு பிள்ளை போல்வெகுளும்  அந்த
ஆற்றங்கரை மான்களின் கூட்டமெல்லாம்
கெஞ்சு மிருவிழி கொள்வதென்ன ஆகா
கோடிகோடி இன்பம் கொள் சுகமே!

தீரம்கொண்டே நீ எழுந்திடடா மனம்
தேறு உறுதியைக் கொண்டிடடா
ஓரம் நடந்திடல் விட்டுக் கண்ணே நீயும்
உண்மை தனை எதிர் கொண்டிடடா
பாரம் இறக்கிவை உள்ளம் இரு நீண்ட
பட்டுச் சிறகுகள் கொண்டதென்றே
தூரம் பறந்திடு துள்ளி யெழு வானில்
துன்பம் மறந்தின்பம் கொண்டுநில்லாய்

சொல்லும் பலகதை சுற்றும் பூமி அது
சொர்க்கம் தடுத்திடும் முள்ளுவேலி
கல்லும் பெருவிஷ தேளரவம்   எங்கும்
காணும் வாழ்வு செல்லும் வீதிவழி
வல்ல மனமெனில் வாழ்ந்துகொள்ளும் இள
வஞ்சியே எண்ணு எந்நாளும் இதை
சொல்லமுடிந்தது யானும் இந்தப் புவி
சொந்தமிலை வாழ்வு செல்லும்வரை

Monday, October 1, 2012

விதி தானோ!

கிட்டும் கவலைகள் வெட்டித்தறி யவை
கட்டிக் கடலிடை எறி நீயும்
பட்டுத் துடியிடர் விட்டுப் போனது
வட்டப் புவியிடை எனநாளும்
கட்டிக் குலவிடு கையில் தினமெடு
காணும் மகிழ்வினை விட்டோடி
எட்டுதிக்கிலும் இருளைக் கண்டனன்
எனநீ வீணே அலையாதே

தட்டிக் கதவினில், கொட்டக் கூரையைப்
பிய்த்துத் தருவது நிஜமல்ல
சுட்டுக்கொள்ளென  வட்டப் பரிதியில்
பட்டுப் பொசுங்குதல் வாழ்வாகும்
கொட்டும் மழையுடன் சட்டச் சடவென
வெட்டும் மின்னலும் இடிபோல
இட்டுத் தடைகளை இடரைச் செய்வது
இந்தப் புவியுடை வாழ்வாகும்

பட்டுத் தெளியெது விட்டுபோனவை
பகலின் வானச் சந்திரனாய்
எட்டும் வகையில என்றேதள்ளிடு
எதிரே கொண்டது இன்பமென
கிட்டும் வாழ்வினில் கட்டுப்பாடுடன்
கொண்டது வரையில் போதுமென
தொட்டுத் துணிவுடன் விட்டுக் கொள்கையில்
துவளா வாழ்வுடன் நடைபோடு

நெட்டைச் சிறகுடை பட்சிக்கூட்டமும்
நீள்விரி வானில் நெடிதோடிக்
கட்டைப் புல்வெளி காட்டுப் புதரெனக்
குட்டை குளங்கள் கடந்தேகி
வெட்டக் குனிந்திடும் விளையுங் கதிருள
வயலைக் கண்டே வாழ்வு பெறும்
முட்டும் வலியுடை முடியா வாழ்விலும்
மட்டும் விதிகளை மீறாதே

நட்டுக்கழனியில் பச்சை நெல்லினை
நாளும் புனலுற   வழிசெய்து
இட்டும் உரமதை இருகண் பார்த்திட
எதுவும்  இடைபுகுந் தழியாது
வெட்டிப் பதரிட வீசுங் காற்றிடை
விதமும்  பிரித்து விற்றாலும்
கட்டிப் பலமனை காசும பணமென
காரில் திரிந்திட வாழ்ந்தானோ

எட்டிப் பறித்திடும் இயல்பைக் கொண்டது
இருளின் வண்ணக் காக்கை யென
தட்டிப் பறித்திடு தன்னலப் பித்தரும்
தம்முடை வாழ்வில் முன்னேறி
சட்டை பையினுள் மொத்தக் காசுடன்
சார்ந்தோர் தம்மை ஏமாற்றி
விட்டுக் காசினை வட்டிக்கென பலர்
வாழும் வாழ்வும் விதிதானே

Sunday, September 30, 2012

கூவாத குயில்!

(மனதில் சிறுகவலை! கவிதை எழுத உள்ளம் மறுக்கிறது. அந்த உள்ளே கூவும் குயிலை நோக்கி)

கூவிக் களித்திடும் கோகிலமே உனைக்
கூட்டி லடைத்தவர் யார்
ஆவியிழந்தவன் போற்துடித்தேன் துயர்
ஆகிடச் செய்தவர் யார்
நாவிலிருக் கும்நற் தேன்மொழியை தினம்
நீயும் தர மகிழ்ந்தேன்
ஈவிரக்கம் அறியார் எவர்தான் உன்னை
இன்னல் செய்தாருளதோ

காவிவரும் இசைத் தென்றல்நிதம் இன்றோ
காணு மினிமை யில்லை
மேவி உலகினில் கேட்குமொலி  இன்று
மிச்சமெதுவு மில்லை
பா விதுவோ நறும் பூமலர்வோ எனப்
பார்த்து களித்திருந்தேன்
நாவினோத மொழி நல்கவில்லை ஏது
நாளில் நடந்ததென்ன?

தூவிக் களித்திடும் பூக்களுன்மேல் மரம்
தூவ மறுத்ததுவோ
தாவித் திரிந்திடும் மந்திகளும் கண்டு
தம்முள் நகைத்தனவோ
ஏவிவிட்டே வரும் அம்பென உள்ளமும்
ஏதும் துயர் பட்டதோ
கேவியழும் வகை திண்மை குலைந்திடக்
கூவலை ஏன்மறந்தாய்

மாவிலிருந் திளங்காலை யிற்கூவிட
மா சுகம் கொண்டிருந்தேன்
பூவிலிருந்த மதுவிது வோவென
புத்தின்பம் கொண்டிருந்தேன்
கூவுமிளங்குரல் வேண்டியே மாமரக்
கூடலை நோக்கிநின்றேன்
காவிப் பெருந்துன்பம் கொண்டனையோ
எனக் காணத் துடிப்பிலுள்ளேன்

நீதியில்லை மலர் நித்தம் மலர்ந்திடும்
நின்றிடப் பார்த்ததில்லை
பாதியிலே வருஞ்சூரியனும் விட்டுப்
பாதை விலகவில்லை
ஏதிளங் காற்றுக்கும் என்னநடப்பினும்
இல்லை யென்றாவதில்லை
வா தினம் கூவுங் குயிலே மறந்தொரு
காலமிருப்ப துண்டோ?

Saturday, September 29, 2012

அறம் சொல்ல வருவீர்!

முல்லைக் கொடிவாழத் தேர்கொடுத்த மன்னா
மீண்டும் பிறந்து வந்தே - இங்கே
கல்லில் கடிதாம் மனங்களுண்டு மென்மை
கற்றுத் தெளிய வைப்பீர் -நல்ல
சொல்லைப் புறந்தள்ளிப் பொய்யுரைத்துப் பல
செய்கையில் வஞ்சங்கொண்டும் - இங்கே
அல்லுற வைத்து ஆள்பவர்க்கோர் என்ன
அன்பென் றுணர்த்திடுவீர்

நெல்வளர் நீர்கொள்ளு நீள்வரம்போங்கியே
நல்வளம் கொள்ளுமென்றே -சிறு
சொல்லில் குடிவாழக் கோமகன் வாழுவன்
கொள்ளென்ற ஔவைப்பாட்டி - இங்கு
நல்ல அறநெறி குன்றியது வந்து
நாடு நலம் பெறவும் - சொல்லில்
அல்லுற மக்கள் ஆளும் மன்னர்தம்மின்
ஆசைக்கு எல்லையிடு

எல்லை மணியடித் தென்மகன் கொன்றனை 
ஏந்தலே என்றழுது - ஒரு
நல்லபசுக் கொண்ட வேதனையை கொண்டு
நீதி வகுத்தவரே -இங்கே
எல்லை யில்லாதுயிர் கொல்வது வேலையென்
றெத்தனை பேர்களுள்ளார் - இவர்
புல்லையுண்ணும் பசு அல்ல மனிதர்கள்
புத்தி உரைத்துவிடும்

நெல்லிக்கனிகொண்டு நீடுவாழவென
நல்வழி கொன்றைவேந்தன் -இவை
சொல்லிய பாட்டியாம் ஔவையிடம் தந்து
செந்தமிழ் வாழவைத்தார் - இந்த
வல்ல அதியமான் கொண்ட தமிழன்பை
வாருக்கள் தீங்கிழைப்போர்  - அவர்
நல்ல தமிழ்மீது அன்புகொள்ளக் காட்டி
நானிலம் மாற்றிடுவோம்

தொல்லை யிழைப்பவர் தொன்மைத் தமிழினைத்
தூய தெங்கள் வளத்தை - அது
இல்லையென தாக்கி முற்று மழித்திடும்
இற்றைப் பொழுதினிலே - வளர்
நெல்லுக் கிடையினில் நீசக் களைகளை
நின்று விளைத்திடுவோர் - தமை
இல்லை என்றாக்குவோம் எம்வழிகாட்டிய
அன்புடைத் தெய்வங்களே

வல்லதிறம் கொண்டீர் வாழ்வின் புன்மைகளை
வானின் றழித்திடுங்கள் - மன
அல்லதெனும் எண்ணம், கொள்கை யுடையோரை
அன்பு வழிக்கெடுங்கள்
சொல்லிக் கொடுங்கள் தெரிந்திடுவர் விட்டுத்
தன்சுகந் தான் பெரிதாய் - உள்ள
கல்லின் மனங்கொண்ட இவ்வுலகோரன்பு
காண ஒளிகொடுங்கள்!

Wednesday, September 26, 2012

அன்னிய மண்

ஏரிக் கரையுலவும் இங்கிலீசுக் காற்றினிலே
ஏபீசீப் பாட்டுக் கேட்குது
வேரில் நிமிர்ந்தமரம் வெள்ளை நிறப் பஞ்சுகளை
வீசிவருங் காற்றில் தள்ளுது
மாரிமழை உறைந்து மல்லிகைப்பூ போற்பனியை
மண்,மரத்தில் கொட்டக்காணுது
வாரி இறைத்தபனி வந்ததோ பா லாறு வென
வழிமுழுதும் வெண்மை கொள்ளுது

நீரில்மிதந்த கயல் நீலவிழி போற்துடித்து
நீந்தும் பனிக் குள்நடுங்குது
சேரில் சிறந்ததெனச் சின்னஞ்சிறு புள்ளினங்கள்
செல்லமாகக் கொஞ்சிப்பேசுது
ஊரிமணற் கரையில் ஓங்கியெழும் ஆழியலை
ஓவென் றெழுந்  துள்ளிவீழுது
பாரில் வளங்கொழித்த பாடெனவே வாழ்விருந்தும்
பறிகொடுத்த துயரெடுக்குது

ஊரில்சிரிக்கும் நிலா ஓடும்முகில் பின்னிருந்தே
எட்டிப்பார்த்து நாணங் கொண்டது
நேரில்தெரியுதொன்று நின்றவளின் தங்கையிதோ
நாணம்விட்டு வானில்காயுது
மேரி, சோ சாரி யென மாரிகால ஈசல்களாய்
மனிதஇனம் முணுமுணுக்குது
தூரில்ஒர் பாம்பிருந்து சீறியதாய் செல்லுமிடம்
தஸ்ப்புஷ் சென்ற பேச்சுகேட்குது

வாரியடித்த கொடும் வெய்யில் பட்ட தால்வயலில்
வைக்கோல் சுட்டுப் பியர்மணக்குது
கூரில் உயர்ந்த பெருஞ் சிலுவையினை சுமந்ததிருக்
கோவில்மணிஒசை கேட்குது
தேரின் அசைவுமிலைத் தென்றலிலைத் திங்களிலைத்
தேவதைகள் ஆடிச் செல்லுது
ஊரின் வயற்கரையில் ஓடிநடை கொண்டவளை
உள்ளமெண்ணி ஒத்துப்பார்க்குது

தோலைஉரித்ததெனத்  தோன்றுவரின் முன்னிலையில்
தேகம்சற்றுக் கூனிநிற்குது
ஆலை பெருந்தோட்ட வேலைஉழைத் துண்டிருந்தும்
அவமான உணர்வெடுக்குது
சாலை தெருக்களிலும் பந்தடிக்கும்,பிள்ளைகளும்
சரளமாயிங் லீசுபேசுது
நாலை நடந்துமிந்த நானிலத்தில் கற்றுவந்தும்
நாமொழியைக் விட்டுத்தள்ளுது

காலை விடிந்தவுடன் கண்நிறைந்த கதிரெழுந்தும்
காணுமிந்த வாழ்விருண்டது
சோலைமலர் பொலிந்தும் சுந்தரமென் வாசமில்லை
செண்டின் மணம் முந்தி வீசுது
காலை மிதித்து நடை ,கன்னித்தமிழ் சொல்லுரைத்துக்
கர்வத்தோடு நின்றமண்ணது
மூலை மடங்கியொரு மூச்சுவிட இன்னலுற்றே
மேதினியில் வாழும்வாழ்விது

Tuesday, September 25, 2012

கண்ணிழந்தோம் காத்திருப்போம்

காணக் கண்ணிழந்தோம் காலிழந்தோம் கையிழந்தோம்
நாணச் சொல்லிழந்தோம் நாடிழந்தோம் நல்லவரைப்
பேணப் பலமிழந்தோம் பேசுமொரு துணிவிழந்தோம்
கோணல் நிலை கொண்டோம் கொண்டவிதி எதனாலே?

வாழக் கதியிழந்தோம் வாழும் மனை வீடிழந்தோம்
கூழைக் குடித்த பசி கொண்டபாய் துயில் விட்டோம்
தாழக் குழிவிழுந்தோம் தலமுடியும் தரமிழந்தோம்
பாழுங் கிணற்றுள்ளே பாய்ந்தவராய்  பார்த்தழுதோம்

ஆடக் காலிழந்தோம் ஆறோடும்விழி சொரிந்தோம்
தேடத் துணிவிழந்தோம் தேடிவழி நாம்தொலைந்தோம்
பாடப் பொருளிழந்தோம் பாடுங்குரல் கெட்டழுதோம்
மாடப் பெருமனைகள் மாசபைகள் தாமிழந்தோம்

ஓடி நிலம் வீழ்ந்தோம்  உயர்விழந்தோம் உரிமையுடன்
வாடிகலங்குஎன வாய்த்த சுகம் வனப்பிழந்தோம்
நாடி யெம்கரம்நீட்ட நாடேதும் காக்குமென்று
வாடிக்கருகி விழி வழிபார்த்து வாழ்விழந்தோம்

ஓடிப் பிரிந்தழுதோம் உற்றவர்கள் உடலெரித்தோம்
பாடிப் பழக்கியநற் பண்புடையோர் பற்றிழந்தோம்
தேடித் திரட்டியதோர் செல்வமெலாம் தொலைத்துவிழி
மூடித் துயில்வதற்கும்  மீறி நிலை கெட்டழுதோம்

ஆணைப் பலர்இழந்தோம் அண்டியவர் துணையிழந்தோம்
வீணை குரலிழந்தோம் வெய்யில்பட்ட  புழுவாகி
தூணைப் பெருந் தமிழின்  சுகத்தை இழந்தும் நாம்
ஆணையிடும் விதியின் அன்புக்காய் காத்திருந்தோம்


Friday, September 21, 2012

உள்ளம் கொள்ளை கொண்டது !


மென்மலர்கள்  தூங்கும்போது மின்னல்வெட்டுது - மழை
மேகம்வந்து சோவெனவே தூறிக்கொட்டுது
புன்னகையில் காணும்மனம் பொங்கி முட்டுது -ஆழி
போகும் ஆறுபோலப் பொங்கி மண்ணைத் தொட்டது
என்நினைவில் என்னவந்து மெல்லத் தட்டுது - எண்ணம்
எத்தனையோ காலம்பின்னென் றென்னைத் தள்ளுது
அன்னைகையில் தூங்கியெழும் ஆசைபொங்குது - அவள்
அள்ளி யென்னைக் கட்டிக்கொஞ்சும் பாசம் வேண்டுது

இன்னி சைக்கும் தெய்வ ராகம் இச்சைகூட்டுது - கோவில்
ஏற்றும் தீபத்தோடு காட்சி  உள்ளே தோன்றுது
சின்னக்குருவி குஞ்சின் கொஞ்சல் கிளையில் கேட்குது - அன்று
சேர்ந்துநின்ற கோழி, குஞ்சின் மென்மை எண்ணுது
பின்னி வைத்தகூந்தல் வண்ணம் மேகம் பூசுது - போகப்
பின்னிருந்து மின்னித்தார கைகண் காட்டுது
அன்னம்  ஓடைநீரில் நீந்த லாகவெண்ணிலா - காண
அன்னை கையில் தந்த அன்ன கவளம் தோன்றுது

தென்னை பின் னிருந்து திங்கள் தேய்ந்து காயுது - அது
தென்றலுக்குக் கண்சிமிட்டித் தேனை வார்க்குது
முன்னிருந்த கோலமென்னைக் கண்டதாமது - இன்று
மேனியெங்கும் ஞாபகத்தை ஊற்றிவேகுது
வன்மையென்று வாசல்வந்த வாழ்வின் எல்லையும் - அன்று
வானிருந்து கண்டவெண்ணி லாவின் கண்ணிது
என்ன வாழ்வு இன்பமோ என்றென்னைக் கேட்குது - என்றும்
இல்லமில்லமாக வந்து  எட்டிப் பார்த்தது


சில்லென்றூதி ஓடுமிளங் காற்றில் சேர்ந்ததாய் - விதி
செல்லென் றென்னை தள்ளிச் சேற்றில் வீழ்த்த நின்றது
இல்லையென்று போனதென்ன ஏனோ என்குது - வாழ்வில்
இருந்திருக்க வேண்டுமென்று  தீயை மூட்டுது
கல்லெடுத்து என்திசைக்குக் காற்றில் போட்டது - அது
காலடியில் பூக்களாக்கிக் காலம் வென்றது
நல்லதென்று கொள்ளும் வாழ்வில் நாலும்செய்தது - அங்கு
நன்மை யென்று சக்திரூப  நாதம் கேட்குது


சின்னப்பூக்கள் கண்மலர்ந்து நின்றதோஅங்கு. - காலை
செம்மைவானச் சுடர் எழுந்த போதுளம் கொண்டு
என்நினைந்தோ வெய்யில் தன்னை வேண்டிநின்றது - சூடு
என்பதென்ன சுட்டபோது வாடி நின்றது
அந்திநேரமாகித் தென்றல் ஆடிவந்தது - நின்று
ஆடும்பூவின் வாசம்தன்னை யள்ளிச் சென்றது
செந்தணலென் றானவானம் சில்லென்றானது - கதிர்
சின்னப்பூக்கள் மீதுமஞ்சள் வண்ணம் போர்த்தது

Thursday, September 20, 2012

என்னமோ எண்ணமோ அறியேன்


 என்னமோ கேட்டு எழுந்தது  வானில்
இயற்கையின் விளையாட்டு -அது
இன்னமும்  ஏனோ தொடர்வது காண
ஏங்குது பெருமூஞ்சு
சொன்னவை ஏனோ வண்ண நிலாவாய்
சிரிக்குது எதைப் பார்த்து - அட
கண்மணி போதும் காலையில் எழலாம்
கவலையில்லைத் தூங்கு

நல்லதோர் வாழ்வும் நடிப்பதென்றாகும்
நானிலம் பெரு மேடை - அதில்
செல்பவன் எல்லாம் சீரிய நடிகர்
சிறப்பினில் குறையில்லை
அல்லவோ புவியும் ஆண்டவன்ஆடும்
அழகுக் காற்பந்து - துயர்
இல்லைநீ கண்ணே எல்லையில் வானம்
இருண்டது கண்தூங்கு

கல்லையும் எறிந்தால் காயங்கள் வருமோ
கடவுளின் திருமேனி-  அது
வில்லையும் வைத்து வீசுவதாலே
விளைவுகள்  பெறும் சக்தி
சொல்லதனாலே உரைத்திட சங்கு
சுடுவது போல் மிளிரும்-   அட
நல்லவளேநீ நித்திரைகொள்ளு
நன்மைகள் கூடிவரும்

தோட்டத்திலாடும் சுந்தரப் பூக்கள்
சொல்லியும் மலர்வதில்லை -அவை
கேட்டெதுவண்ணம் கொள்வதென்றேயக்
காற்றிடம் கேட்பதில்லை
ஏட்டினில் பூக்கும் பாட்டுக்கள் தானும்
இங்கது போலும் நிலை -  தன்
பாட்டினில் வளரும் பக்குவம் உண்டு
பார் விழி தூங்கவில்லை

வெட்டி வளர்த்தனர் ரோஜாநின்றது
வீட்டின் முற்றத்திலே - அது
மொட்டென விட்டு முகிழ்ந்தன பூக்கள்
முற்றும் பெரு அழகே
கட்டவிழ் மலரோ அற்புத அழகு
கண்டவர் போற்றும் நிலை - காண்
கட்டழகே நீ கண்ணுறங்காய் - இது
காட்டினுள் பூத்தவகை

***************

புதிர்க் கவிதை


பரவும்காற்றில் சுனையொன்றருகே
பாதம் பதிய நடை கொண்டேன்
வரவை அறியா தவளை ஒன்றும்
வடிவில் மலராய் கண்டே “பார்
அருகும்வாழ்வில் அழகின்பக்கம்
அறியாதெல்லாம் முன்வைத்து
திருவெண்முகமோ திங்கள் ஆகத்
தோன்றக் கண்டேன் திருமகளே!”

மதியோ விதியோ மலரோ அறியேன்
மனமும் வாடிக் காண்கிறேன்
மதியும் சுடருமொன்றானால் பின்
மறையும் ஒளியும் இருளென்றாள்
மதியும் சோராதிருப்பாய் பெண்ணே
மாற்றம் கொள்ளக் கேட்கின்றேன்
புதிரின் விடையைக்கூறு உன்னைப்
புதிதாய் ஆக்கி வைக்கின்றேன்

இரவியின் ஒளியில் தருவில் இருளாய்
இருந்தே கரையும் பொருளைக்காண்
உருகும் பனியின் நிறமும்கொண்டோர்
உறவுக் கெதிராம் வண்ணத்தாள்
கருதும்சொல்லில் ’காதால்’ கொள்மின்
கடிதோர் துயரை இவன்கொண்டான்
புரிந்தே துன்பம் போகசெய்தால்
புவியில் பெரிதாய் புகழ் சொல்வேன்

திறமை கொண்டாள் திரும்பிக்கண்டு
தெய்வக் கோவிற் சிலையென்றே
வருமோர் மாதம்நாளும் ஒன்றாம்
வந்தால் மறுநாள் தன்னில்கொள்
இருந்தோர் நகையை என்மேல்வீசி
இதனைக்கொள்வீர் நீர் என்றாள்
சரியாய் விடையும் பகர்ந்தாள் அவளை
சிறிதே புகழ்ந்து பார்பெண்ணே

பழமைப் புகழ்கொள் மூவர் முதல்வன்
பெயரில் சிறியோன் பெரியவனாம்
சுழலும்புவியில் ஒருதரம் சொன்னால்
சுவையாய் உண்ணப் பொருளீவான்
பழகும் வகையில் இருமுறை சொன்னால்
இனிதாய் வாழ்வுக் குயிர் தருவான்
அழகும் மெய்யை பின்னவன் சேர்த்தான்
அதிலே முன்னோன் மெய்யழித்தான்

ஆவின் கன்று அவனை அறியும்
ஆனால் பதிலும் அதுவல்ல
தாவென் றேதும்கேளா தருவான்
தருமோர் பதிலும் அதுவென்றேன்
நாவின் நுனியில் விடையைக்கொண்டேன்
நவின்றால் பயனென் நவிலென்றாள்
பூவின் தோழன் பிரித்தே கொள்ளும்
பொருளைத்தருவேன் நானென்றேன்

தாவரம் நீரில் வளரும் இவளோ
தனியே கண்ணீர் மரமாமோ
பூவரசம் பூப்போன்றே மெதுவாய்ப்
புன்னகை பூக்கக்கண்டேநான்
தாவரமென்று கேட்டால் நானும்
தர மாட்டேனோ ஏனென்றேன்
பாவின் புதிரை நீயும் சொல்லு
பார்ப்போம் எழிலார் பெண்ணென்றேன்

வேங்கை யன்ன வீரம்கொண்டும்
வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
அதையும் கொள்ளும் திருவுருவே
மதியென் றெந்தன் வதனம்கண்டீர்
மாவின் கனிபோல் கன்னங்கள்
அதிலேகாணும் இனிமை கொள்வீர்
என்னைத் தந்தேன் கொள் என்றாள்

விளைந்தாய் அழகாய் வளர்ந்தாயன்றி
வலிந்தாய் மனமும் பொலிந்தாயில்
விளைவாய் என்னக் கலந்தாய் அன்பில்
குழைந்தாய் இனிமேல் குழந்தாய் என்
எழுந்தே வானில்  இரவியும்காண
பொழுதே விடிந்துபோம் நாளில்
குளத்தின் நீரில் நாலில் ஒன்றைக்
கொண்டாள் கன்னி அஞ்சும்மான்

ஆறும் குணமும் இன்றிக் கடலில்
அலையில் கயலைக் காண்பேனாம்
மாறிக் கயலில் கடலைக் கண்டேன்
மாதே இசைந்தேன் மனதில் கொள்
எட்டும் விழியின் இறைநீர் குன்ற
தட்டும் கொண்டு வருவோம் காண்
தாவென் றுன்னை அன்னை கேட்பாள்
சரியா என்றேன் மலர்ந்திட்டாள்


********************

புதிர் கவிதை (விடையும் விளக்கமும்)



புதிருக்கு விடை


மூன்றாவது அடி

வரவை அறியாதவளை ’வடிவில் ஒன்றும்
மலராய் கண்டே’ எனப் பொருள் கொள்க



மதியும் சுடருமொன்றானால் பின்
மறையும் ஒளியும் இருளென்றாள்

சூரியனும் சந்திரனும் சேர்ந்தால் (நேர்கோட்டில்)அமாவாசை . அது போல் என்மதிமுகமும்  சிந்தனை அறிவும் சேர்ந்ததால் இருள் வந்ததோ என்று  ஒரு பொருள் படப் பேசுகிறாள்


.  முதற் கேள்வி

1. தாகம் கொண்டான். தண்ணீர் கேட்கிறான்  அவள் நீர் அள்ளிக் கொடுகிறாள்.


இரவியின் ஒளியில் தருவில் இருளாய்
இருந்தே கரையும் பொருளைக்காண்
உருகும் பனியின் நிறமும்கொண்டோர்
உறவுக் கெதிராம் வண்ணத்தாள்
//காகம்// கரையும்    


கருதும்சொல்லில் ’காதால்’ கொள்மின்
கடிதோர் துயரை இவன்கொண்டான்
புரிந்தே துன்பம் போகசெய்தால்
புவியில் பெரிதாய் புகழ் சொல்வேன்
முதல் நான்குவரியிலிம்சொல்லப்படுவது காகம்
’கா’’தா’ல் கொள்மின் என்றதால் கா எழுத்து தா வாக மாறுகிறது.அதனால் தாகம்

தாகத்துக்குக் தண்ணீர் கேட்கிறான்.

விடை

விடை
வருமோர் மாதம்நாளும் ஒன்றாம்
வந்தால் மறுநாள் தன்னில்கொள்
இருந்தோர் நகையை என்மேல்வீசி
இதனைக்கொள்வீர் நீர் என்றாள்
மாதம் நாளும் ஒன்றாம்--// திங்கள்/ மாதத்தின் பொதுபெயர் நாளுக்கும் உண்டு
வந்தால் மறுநாள்--//செவ்வாய்’//
இருந்தோர் நகை //புன்னகை// (சிவந்த வாயிலிருந்து ஒரு புனகையை வீசி

பின்னர்
இதனைக்கொள்வீர் ”நீர்” என்றாள்-- //நீர். தண்ணீர்//
***************************
இரண்டாவது புதிர்க் கேள்வி

பழமைப் புகழ்கொள் மூவர் முதல்வன்
பெயரில் சிறியோன் பெரியவனாம்
சுழலும்புவியில் ஒருதரம் சொன்னால்
சுவையாய் உண்ணப் பொருளீவான்
விடை மா (கனி ஈயும்)
பழகும் வகையில் இருமுறை சொன்னால்
இனிதாய் வாழ்வுக் குயிர் தருவான்
விடை
மாமா (மாமன் பெண்)- கன்னி

/அழகும் மெய்யை பின்னவன் சேர்த்தான்
அதிலே முன்னோன் மெய்யழித்தான்/
(கனி - கன்னி) விடை
மெய்யெழுத்து வித்தியாசம்
கன்று மா என்று கத்தும் விடையல்ல

அவள் கூற்று
வேங்கை யன்ன வீரம்கொண்டும்
வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
அதையும் கொள்ளும் திருவுருவே

வேகம் முன்னால் விழிகொள்ளும்
விதியில் காணும் பொதுவை வைத்து
இதுவும் வழக்கமாக நான்செய்வதுதான்

’விழி’ கொள்ளும்
’விதியில்’ காணும் பொது //வி//
வேகம் முன் வைத்தால் //விவேகம்//
***
விடை கூறுகிறாள்
மாவின் கனிபோல் கன்னங்கள்
அதிலேகாணும் இனிமை கொள்வீர்
என்னைத் தந்தேன் கொள் என்றாள்
அவள் என்னை என்று கன்னி யை குறிக்கிறாள்.
*****************
நாவின் நுனியில் விடையைக்கொண்டேன்
நவின்றால் பயனென் நவிலென்றாள்
பூவின் தோழன் பிரித்தே கொள்ளும்
பொருளைத்தருவேன் நானென்றேன்

பூவின் தோழன் காற்று. பிரிக்கும் பொருள் பூவிலிருந்து மணம் எடுத்துகொள்ளும். அதன்படி உன்னை மணம் செய்து கொள்வேன் என்கிறான்
***
குளத்தின் நீரில் நாலில் ஒன்றைக்
கொண்டாள் கன்னி அஞ்சும்மான்
நாலில் ஒன்று ( கால்) குளத்தில் கால்வைத்து நிற்கிறாள்

சுதந்திரம்


காற்றுவானில் ஓடி ஓடிக் கண்டதே சுதந்திரம்
ஊற்றும் மேகம் ஓடும்வானில் உள்ளதே சுதந்திரம்
ஏற்றமுற்ற ஆற்றுநீரும் ஓடும் கீழ் சுதந்திரம்
இற்றை நாளில் ஏழைகொள்ள இல்லையே சுதந்திரம்

ஆற்றில் நீந்தும் மீன்கள் துள்ளும் ஆனந்தம் சுதந்திரம்
காற்றின் போக்கில் சுற்றும்பட்டம் காண்பதும் சுதந்திரம்
ஊற்றும் மேகநீர் கலக்கும் ஒங்கும் சாகரத்தலை
ஏற்றங் கண்டு வீழ்ந்தும் ஓடி இன்பங்கொள் சுதந்திரம்

காட்டில் பூத்த தேன்மலர்கொள் கள்ளையுண்ட வண்டதும்
தோட்ட மா மரத்தில் தொங்கும் தேன்பழத்தை தின்றதும்
கூட்டி வான்பறக்கும் சின்னக் குருவி காண் சுதந்திரம்
நாட்டில் வாழும் நம்மவர்க்கு நல்கவில்லை ஏனின்னும்

பாட்டி சொன்ன பைந்தமிழ்க்கு  பாடிஆடும் நாட்டியம்
காட்டி அன்புக் கோட்டையென்று காவல்கொண்ட சொந்தமும்
தேட்டமிட்டுச் சேர்த்தபொன்னும் சொத்தும் கொள்ளை போய்விட
வீட்டின் பின்புறத்தில் ஓடிவீழ்வதோ சுதந்திரம்

தோட்ட மீது நீரிறைத்து துள்ளியோடிக் கத்தரி
நீட்டு வாழையோடு வெண்டி நீத்து பூசணிக்கென
பாட்டுபாடி காவல்காத்துப் பட்சியோட்டி வானிலே
கேட்டொலிக்க அச்சமின்றிக் காணுதல் சுதந்திரம்

சூட்டில் தேகம் விட்டொழிந்து சோர்வதோ சுதந்திரம்
பூட்டிவைத்து போட்டடிக்க ஆவதோ சுதந்திரம்
வாட்டிபெண்கள் வாய்கிழிக்க வாழ்வதோ சுதந்திரம்
ஓட்டியெம்மை பூமி மேய்க்க உள்ளதோ சுதந்திரம்

ஒன்றோடு ஒன்று !


கூட்டுக்குள்ளே வைத்துபூட்டி வளர்த்தனன் 
சிட்டுகுருவிஒன்று - தன்
பாட்டில் பறக்குது கூட்டைவிட்டு வானம்
பார்த்திடக் கண்மறைந்து
ஏட்டில் எழுதிப் படித்தறிந்தேன் அன்பு
இன்பத்தை ஊற்றுமென்று - அது
வாட்டி வதைத்திடும் என்றறிந்தேன் உள்ள
வண்ணமிழந்து இன்று

கோட்டைக் கிழித்தொரு சொல்லுரைத்தேன் அன்பு
கட்டியுள் வைக்குமென்று  - அது
போட்டிவைத் தேனென்று புன்னகைத்தே வானில்
போகுதெனை மறந்து
காட்டினுள் வாழ்ந்திடக் கற்கவில்லை யது
காணுமோ துன்பமென்று -மனம்
வாட்டிவதைத்திட நோக்குகின்றேன் எண்ணம்
வார்த்த அனல்குளித்து

நாட்டினிலே நூறு செய்தி சொல்வர் அதை
நானும் நினத்துழன்றேன் - அயற்
காட்டினிலே கள்ளர் காத்திருப்பர் வலை
கண்ணை மறைத்து வைத்து
மேட்டினிலே மழை மின்னல்வரும் அதில்
மேனி துடிக்கும் என்றார் - ஒரு
சீட்டில் எழுதியத் தெய்வத்தின் முன்றலில்
சாத்திரம் பார்க்கச்சொன்னார்

வாட்டமுடன் நானும் வட்ட விளக்கேற்றி
வார்த்தைகள் துண்டெழுதி - அங்கு
போட்டெடுத்தேன் கோவிற் தெய்வம் முன்னால்
விட்டுப்போன குருவிஎண்ணி
பாட்டினிலே வரம் கேட்டுநின்றேன் அங்கு
பக்கத்தில் ஓர்சிறுவன் -ஐய
கூட்டல்கழித்தலில் கொஞ்சம் பிழை = மனம்
கொண்ட கணக்கிதென்றான்

ஒன்றில் இரண்டையும் ஒன்றுடன் ஒன்றென
ஒன்றிடில் மூன்றெனவும் - மனம்
ஒன்றியென்னில் அவர் உள்ளிணைந்தால் துயர்
ஒன்றில்லை யென்பதையும்
ஒன்றுமில்லை என்று உள்ளவனை தரம்
ஒன்றென ஆக்குவதும் - வரும்
ஒன்றையும் மெண்ணா நடப்பவனை உல
கொன்றில்லை ஆக்குவதும்

ஒன்றெனதே தொழில் ஒன்றைவிட்டு ஒன்றை
தேடிடும் மானிட கேள் - நீ
ஒன்று பட்டால் உண்டுவாழ்வென உள்ளதை
ஒன்றும் நினைப்பதில்லை
கொன்று மகிழ்ந்திடும் கோலமெடுப்பதில்
ஒன்றும் குறைவுமில்லை - அவன்
ஒன்றுதனும் துயர் இல்லையெனில் விதி
ஒன்றை நினைப்பதில்லை

வந்த குரல்களின் சொந்தமுகமெண்ணி
வார்த்தைவந்தோர் திசையில் - ஏது
எந்தன் விழி கொள்ள அங்கெவருமில்லை
என்ன அதிசயமோ?
சொந்தநிலை யெண்ணித் துண்டிலொன்றைக் கையும்
சுற்றி வளைத்தெடுக்க - அதில்
வந்ததென்ன ’ஒன்றில் ஒன்றியிரு’ எனும்
வார்த்தை கண்டே சிலிர்த்தேன்

அஞ்சலி

இடிவிழுந்தும் தாங்குமனம்
..  எதையிழந்தும் ஓங்கும் இனம்
.. உமையிழந்து துடிதுடிக்கிறோம்
அடிவிழுந்து நொந்த தென
.. அறிவிழந்து நெஞ்சமழ
.. அகமழிந்து துயரெடுக்கிறோம்
வெடி பரந்து வானுடைந்து
.. விதியெனஎம் தலைவிழவும்
.. வலியெடுத்த சேதி யாகவே
கொடியதுன்பக் கனவிதுவோ
.. கொண்ட சேதி பொய்யிலையோ
.. கூடுமாஎன் றுடல்நடுங்கிறோம்.

மடி முழுக்க அனல் கொதித்து
.. மாபெருந்தீ கொட்டியதாய்
.. மதிமயங்கி துடிதுடிக்கிறோம்
குடி மறந்து ஊர் நடுவே
.. குரல்பரந்து அழுதுகத்தி
.. கொண்டதில்நாம் விழிசிவக்கிறோம்
நெடிதுயர்ந்த ஆலெனவே
.. நிமிர்ந்து நின்ற உரமென்னவோ
.. நிர்க்கதியென் றாகிநிற்கிறோம்
கடிதெனவே புயலெழவும்
.. கண்களில் மண் தூவியதாய்
  காரிருளில் பார்வை கெட்டுள்ளோம்

விடிவரும் என்றுளமே
..  விரும்பியநல் வாழ்வுகாக
...  வேண்டியெழ விதி முடித்ததேன்
படியளந்து கல்லிடையில்
..   பசியெடுத்த எறும்பினுக்கும்
 ..  பார்த்து நல்ல அமுதமீந்தவா
கொடியமனம்,  நல்லவரைக்
.. குவலயங்கண் வாழவிடா
.. கொண்டுசென்ற நீதியென்னவோ
மடியிருந்த பொன்னிழந்து
.. மனமழிந்து உயிர் நலிந்தோம்
.. மறந்தும் மனம் சாந்தி கொள்ளுமோ?

Wednesday, September 19, 2012

சக்தி தந்தாள்

தேனைகுழைத்தவள் தின்னுஎன்றாள் - எனைத்
 தேடிமது உண்ணு பூவிதென்றாள்
வானில் குழைத்து நல் வண்ணமிட்டாள் - இந்த
  வாழ்வில் களித்திட எண்ண மிட்டாள்
நானிக்கவி செய்தேன் என்றெழுதி - இவன்
  நாளும் புழுகிடும் வேளையெல்லாம்
வானிற் கிடந்து சிரித்திடுவாள் - அவள்
  வாழ்த்தித் தமிழ்செய்து வண்ணமிட்டேன்

மானைத் துள்ளு என மாயமிட்டாள் - அந்த
   மாலைக் கிறக்கத்தில் மையலிட்டாள்
வானின் கிழக்கிடை செம்மையிட்டாள் - காலை
  வந்து உதித்திட வெய்யில் செய்தாள்
ஊனைப் படைத்தென்னில் வாழ்வளித்தாள் - இந்த
  உள்ளமதில்  தமிழ் ஊற விட்டாள்
ஏனோ எனைக் கவி சொல்லவிட்டாள் - தமிழ்
 ஓடும் உதிரத்தில் தூவி விட்டாள்

நானெனும் போதினில் நானுமில்லை - ஒரு
 நல்ல கவிசொல்ல ஞானைமில்லை
தேனும் வழிக்கின்ற பூவிதழின் - வாசம்
  தென்றல் கொள்ளுமது சொந்தமில்லை
வீணில் வீம்பு  கொள்ளும் நெஞ்சமில்லை - இவன்
  வேண்டி அழுதிடும் தெய்வம் தன்னை
காணில் உயிர்தன்னை காலில் வைத்து - நானும்
   காணும் ஒளியுடன் கூடிடுவேன்

பிரபஞ்சப் பயணம்


கலைவான முகிலேறிக்
. காற்றூதும் வெளிதாவக்
. கனவுரதம் ஒன்றுதா தேவி !
நிலையற்ற புவிநின்று
. நீலவான்வெளி செல்லும்
. நெடும்பயணம் கொள்ளவும் செய்நீ !
தொலைவானில் வண்ணமெழும்
. தீப்புயலின் சூடுதனில்
. தொட்டபடி தூர விழுந்தேகும்
இலையென்வி நோதமெழும்
. இன்பங்கள் அதிசயங்கள்
. எழில்காணும் ஓருலா வேண்டும்

ஒரு பயணம் புதுமைபெற
. ஒருகோடி ஒளியாண்டு
. ஓடித் தனி உலகொன்று கண்டே
பெருமகிழ்வு பொலியவதில்
. பிறப்பிறப்பு இல்லாத
. பெருமைகொளும் நிலைகாண வேண்டும்.
கருவானில் எழுமதியும்
. காணுமொளி போல்வானக்
. குளுமையுடன் சூரியன்கள் வேண்டும்
பெருமலர்கள் ஆளுயரம்
. பொலியுதெனப் பூப்பூத்து
. புதுஅருவி தேன்வழிய வேண்டும்

மலர்களொளி வீச அதில்
. மத்தாப்பின் வண்ணவகை
. மணித்துகள்க ளாய்த் தெறிக்க வேண்டும்
கலகமின்றிக் கனிமொழியக்
. காணுருவம் ஒளியெனவும்
. கதைபேசிக் குலவும் வகைவேண்டும்
சில நதிகள் வாசமெழச்
. சென்றதனில் மூழ்கியுடல்
. சிலுசிலென குளுமைகொள வேண்டும்
தொலைவில்விண் மீதுபறந்
. துலவியெரி தீயருகில்
. தொட்டவிதமாய் திரும்பவேண்டும்

தெருவெங்கும் சிறுரதங்கள்
. திருமகளி னழகுடனும்
. திகழுமெழிற் தேவதைஉட் செல்ல
வருமிளைய தென்றலதில்
. வண்ணநிறப் புகையெழுந்து
. விழிகளின்முன் விளையாடவேண்டும்
பருகிடவெண்மலர்த் தேனும்
. பாவெழுதும் போதைதனும்
. பெருகுஎன கவிநூறு தந்து
உருகி மனம் வழிந்தோட
. உணர்வுதனில் தீபரவ
. உயிர்கள்மகிழ் வடையுந்தமிழ் வேண்டும்

நெளிவுகளும், வளைவுகளும்
. நீரோடை மலைகளென
. நீந்திவிண் வெளிகாண வேண்டும்
பொழியமுதத் தூறலென
. புதுவிளக்கினொளி வெள்ளம்
. புகுந்தேகும் விளையாட்டு வேண்டும்
மொழியெதுவும் பிறிதின்றி
. மதுவென்சுவைத் தமிழுடனே
. மனிதரெனும் பதுமைகளின் உலகம்
ஒளியழகுத் திருநாடும்
. உணர்வதனில் திறனோடும்
. ஒருமையுட னாயிருக்க வேண்டும்

கருவயலில் உறைகுளிரில்
. கண்கவரும் தோரணங்கள்
. காணுமொரு எழிற்கோலம் வேண்டும்
பெருகும் செறிகயமையுடன்
. நெறிதவறும் நிகழ்வுமின்றிப்
. பசுமையுணர் வானநிலை வேண்டும்
உருகி மனம் வழிந்தோட
. உயரிசையில் நடமாடும்
. உருவங்கள் உலவிவரவேண்டும்
தருணமதில் காற்றோடு
. தலைநிமிரப் படபடத்து
. தமிழன்கொடி உயர்பறக்கவேண்டும்

நீலமலை உயர்ந்தநெடு
. முச்சிதனில் நின்றண்டம்
. நிலைமைதனைப் பார்வையிட வேண்டும்
கோலமிடு வாசலெனக்
. கோளங்களும் சுற்றுமெழில்
. குழிவானை விழிகாண வேண்டும்
வாலெரியும் நட்சத்திரம்
. வளர்பிறையும் ஒளிவீச்சும்
. வடிவுற்ற அசைவும் விழிகாண
காலம்சில நாள்களென
. காணுமெழில் மனமகிழ்ந்து
. காயும் இந்த பூமிவரவேண்டும்

மேன்மை கொடு!


எத்தனை எத்தனை காலமதா யிந்த
   எத்தனும் சித்த முருகி யுனைப்
பத்தியுடன் கரம் கூப்பிநின்றேன் என்னில்
   பாசமும் கொள்ள மறுப்பதென்ன?
நித்தமும் உன்னடிபோற்றி யிவன் நிதம்
   நெஞ்சில்வைத்துப் புகழ் கூறிடினும்
சுத்தமென்னும் மனம் கொண்டிவனை வெற்றி
   சூழவென் றாக்கத்  தயக்கமென்ன ?

சித்தமெங்கு முனை யெண்ணி மகிழ்வுறச்
   சேவித்து நாவிற் புகழ்ந்துரைத்தும்
கத்தியழுது கை கும்பிடினும் உன்றன்
  காதிரண் டிலிவை கொள்வ தில்லை
புத்தி பெறப் பொருள் இன்னதென்று நீயும்
   போதனை செய்துமறி வளித்தே
உத்தமனாய் வாழச் செய்வதனால் துயர்
    ஏதுமிலாச் சுகம் ஈவதெப்போ

செத்து மடியென்று சிந்தைதனிற் கடும்
   சீற்றமுற்றே கொண்ட செய்கைதனும்
அத்தனையும் விட்டு ஆதிசக்தி யெனை
    அன்பு விழி கொண்டு கண்டுவிடு
பித்துப் பிடித்தவ னாகியுனைத் தினம்
    போற்றி மனம் கொண்டு வாழ்த்துகிறேன்
வைத்து மன்புகொண்டு வாழ்வினிலே மேன்மை
   வையகத்தில் கொள்ளச் செய்வதெப்போ

மத்தினைக் கொண்டு கடைவதன்ன உயர்
   மாபெருஞ் சக்தி மனங் கடைந்து
சித்திகொள் ளும்வரை சுற்றிநின்றே இன்பஞ்
    சேர்த்துவிடு  புகழ் செய்துவிடு
உத்தியதைத் தர வேண்டுகிறே னுள்ளே
   ஊதி எரிந்திடும் செந்தணலை
மெத்த சுடும் வகை செய்வதென்ன வலி
  மீதமெனக் கொள்ள மோகமென்ன

முத்தை மணிப் பலஇரத்தினங்கள் தமை
   மோசம் என்றே மண்ணில் வீசலென்ன
சொத்தைப் பணங் காசு பொற்குடத்தை நீயும்,
   சொத்தையெனக்  குப்பை போட்டதென்ன
எத்தகை வன்மனங் கொண்டதினால் கையை
   எத்தி எறிந்திடும் நீர்துளியாய்
புத்தம்புது வாழ்வு வேண்டுவனை உள்ளம்
    பேதலித்தே விழச் செய்வதென்ன

வித்தையது ஒன்று கண்டுவிட்டேன் உனை
    வேண்டி மனம் கொண்டு பூசிப்பதாய்
சத்தியமும் கொண்டு செந்தமிழில் பல
   சந்தமுடன்கவி செய்தளித்து
நித்தியமும் கலை போற்றித் தமிழ்ச் சுவை
    நெஞ்சில் எழத் தந்து தேன்தமிழால்
எத்திசையில் விழிகண்டினும் நின்னை
  என்திசையில் விழி கொள்ளவைப்பேன்

Tuesday, September 18, 2012

நான் காண வேண்டும்..!

கலைவான முகிலோடிக்
.  காற்றூதும் வெளிதாண்டிக்
.  கடந்து நான் பறந்திடவேண்டும்
வலைபோலும் விளைந்தாடும்
.  வானத்துச் சோதிக்குள்
.  வகையென்ன புரிந்தாக வேண்டும்
நிலையான தவையேது
.  நிலையற்ற பொருளேது
.  நிகழ்வான நான்காண வேண்டும்
தொலைவான மதிகண்டு
.  தூரத்துச் சுடர்தாண்டித்
.  தொலந்தின்னும் முடிவேக வேண்டும்

குலைந்தோடும் அனல்வாகு
.  குளிர்ந்துபின் புவிபோலும்
.  குடம்செய்யும் தொழில்தானும் கல்லில்
சிலைசெய்யும் கலைஞானி
.  செயலொத்த தொழில்தன்னை
.  செயும்சக்தி திறன்காண வேண்டும்
அலைந்தெங்கும் புதிர்கண்டு
.  அதன்பயன் அறிந்தங்கு
.  எழில்கொண்ட வானத்தில் நின்றே
உலைகொண்ட தீயோடு
.  உருவஞ்செய் பிரம்மனின்
.  உயர்சக்தி எவைகாண வேண்டும்

அலைமீது விழிதூங்கும்
.  அருஞ்செல்வம் தருமன்னை
.  அவள்கொண்ட மணவாளன் காணும்
நிலையென்ன காப்பவன்
.  எதையிங்கு காத்தனன்
.  நலம்கண்டு நான் கொள்ள வேண்டும்
தலைகொய்தே உயிர்வாங்கி
.  தருமத்தின் தேவனாம்
.  எமனுக்கு இடம்காட்டும் தேவன்
விலைகொண்ட உயிருக்கு
.  வகையுண்டோ வாழ்வுக்கு
.  வழியென்ன என வார்த்தை கேட்டும்

ஒலிவானில் ’ஓம்’மெனும்
.  ஓங்கார இசையோடு
.  உருண்டிடும் கோளங்கள்மீது
கிலிகொள்ளும் வெடியென்ன
.  கிளம்பிடும் புகையென்ன
.  கிழக்கென்ன மேற்கென்ன கண்டும்
வலிகொண்டு இழுத்தோடும்
.  வகையென்ன காந்தங்கள்
.  வரிசைக்கு வைத்தென்ன சக்தி
மலிவென்று இத்தனை
.  மாபெரும் அண்டத்தில்
.  மனம்கொண்டு இயல் செய்ததெல்லாம்

குலைந்திடா வண்ணமோர்
.  குறையின்றிச் செய்துமிக்
.  கோளமாம் புவிதன்னை மட்டும்
இலையொன்றும் விதியென
.  இவரெண்ணி அவரெண்ணி
.  இட்டதே சட்டமென்றாக்கி
புலைஉண்டு  பெண்தொட்டு
.  புலன்கெட்டுப் பகைகொண்டு
.  பித்தனென்றாடி அழிக்கும்
நிலைகொள்ள விட்டவள்
.  நிம்மதிகண்டதென்
.  நினைவென்ன நான் காணவேண்டும்

Saturday, September 15, 2012

எரித்தாயோ

நிலையழிந்து குலமழிந்து நெஞ்சம்தீய்ந்து
நில்லென்று விட்டதென் நிமலா இன்னும்
கலையழிந்து கல்வியொடு கனவும்தேய
கருணையினைக் காட்டாது நின்றதேனோ
குலையழிந்து வாழைகளின் கூட்டம் வீழ்ந்து
கொள்ளென்றும் வாழையடி வாழையாக
தலையழிந்து தலைமுறையும் தனயனோடு
தங்கைகுலம் அழியவரம் தந்ததேனோ

மலை விழுந்து மரம்விழுந்து மண்ணும்போக
மதியணிபொன் மேனியரே செய்ததேனோ
இலைவிழுந்து கனிவிழுந்து இருந்த பிஞ்சும்
இல்லையெனச் செய்தனையே எதனைவிட்டாய்
உலை வைத்து அரிசியதில் வேகும்பொது
உடைத்தென்ன கலயத்தை உண்மைகூறும்
சிலையெழுந்த சேகரனே சிரிக்க வேண்டாம்
சினந்தெழ நம்நாடு திரி புரமா சொல்லாய்

வலையெறிந்து மீன்பிடிக்க வந்ததேவே
வாரிஇழுத் தெடுக்க  உடன் வந்ததென்ன
விலையுமிலா முத்தோடு வெள்ளிதங்கம்
விளை சங்கு வைரமென வேண்டுமாமோ
கொலை பழியினோடு நீ செய்ததென்ன
கொடிய மழை புயலழிவா இல்லையில்லை
தலைபிளறத் தரைதணலென் றாக்கியன்றோ
தரணியழி சங்காரத் தாண்டவம் காண்

நிலை தவறி ஓடுமிவ் வுலகினின்று
நீசெய்த தென்னவோ நிறுத்துமய்யா
குலை நடுங்க உடல்துடிக்கக் குரலும்கத்தி
கோலமதைக் கொண்டீந்து சென்றதேனோ
தலை வெடித்து சிதறென்று தந்தசாபம்
தமிழருக்கு இன்னமுண்டு தணியவில்லை
மலை மகளுக் கரை மேனி இழந்த பாகா
மர்மத்தைசொல் செய்தகுற்றமென்ன

கண்கள்தனும் பிடுங்கி நாம் களித்ததில்லை
கன்னியரை கீழ்மைகொண் டழித்தைல்லை
பெண்கெடுத்தும் பாவங்கள் புரிந்ததில்லை
பிறன்மனையைச் சீரழித்து மகிழ்ந்ததில்லை
கண்மணிகள் கடுந்துன்பம் கொள்ளவென்று
கரம்கொண்ட சாட்டையால் முதுகுவீங்க
எண்ணியடி தரவில்லை ஏன் இறைவா
இத்தனையும் எம்மிடத்தில் நடப்பதேனோ

விண்ணிருந்து செய்வதென்ன வினைகள்தானோ
வெள்ளைமனம் கொல்லும்செயல் வீணேயேனோ
எண்ணமதில் கொண்டதென்ன இன்னுமெங்கள்
இருள்சூழும் வாழ்வுக்கு மன்னிப்பில்லை
தண்ணிலவில் தீகொட்டித் தகிக்கவைத்தாய்
தலைமாறிச் சூரியனைத் தணிய வைத்தாய்
வெண்ணையிலே நஞ்செழுந்த விருந்தும் கண்டு
விமலா என்விழி மூன்றும் மூடிக்கொண்டாய்?
 

நான் இல்லைஅவள்

சலங்கையொலி நாதமெழும்
...சலசலென ஓசையிடும்
...சத்தமெழக் கால்கள் துள்ளிடும்
இலங்குமொரு திங்களொளி
...இரவிலெழில் போதைதரும்
...இரவல் தரச் சுடர் இருந்திடும்
நலங்கொழித்து மேனியதும்
...நகையணியும் மெருகுறவும்
...நடை பழக உயிர் நயந்திடும்
துலங்குகவி மாலைகளும்
...தோரணங்கள் ஆகுமெழில்
...தேவியவள் அருளேயன்றோ

குலம் செழித்து வளருமதில்
...குழந்தைகளின் சலசலப்பு
...கொடுத்ததெது தாயவள் உதரம்
நிலம்கொழித்தவயல்நிறைந்து
...நிற்கும்கதிர் தலைகுனிந்து
...நிலையேது வரம்பதனாலும்
பலம்மெடுத்து படைநடத்தி
...பகை யழித்த அரசன்புகழ்
...பாதை கண்ட வீரன் பங்கே
புலம்புதமிழ் பொலியுதெனில்
...புகழ்மலர்கள் சொரியுதெனில்
...பூஜை அவள் திருவடிக்கன்றோ

சிலசமயம் ஒளி இலங்க
...சிலசமயம்புயல் முழங்க
...சிலசமயம் மதி மயங்கிடும்
உலகமெனும் கோள்சுழலும் 
...உதயமொடு மாலைவரும்
...உவகையொடு உள்ளம் துள்ளிடும்
கலகம்வரும் காட்சிகளில்
...கனவும்வரும் களிப்புமெழும்
...காலமது வானவில்லெனும்
வலமுளது இடதுஎனும்
...வழமை விதி மாற்றமிடும்
...வாழ்வதவள் விதிவகுத்ததே!

அலைகளெழும் மனதுகொளும்
...அழகுணர்வு மழைபொழியும்
...அதில் நனையும் வேளைஇன்பமே!
கலையொளியும் மதுமதியும்
...கருமிருளில் வரும் பொழுதும்
...கனவுகளில் மகிழ்வு கொள்ளுமே
தலைவி யவள்:தருவதிலே
...தளிரெழுமோர் தருவளரும்
...தர்மமெனத் தகுதி உயரினும்
விலையிலதோர் பொருளெனவும்
...வேண்டியுளம் கொள்பெருமை
.. விளைத்தவளே முழுதுமல்லவோ
******************

ஞாபகங்கள்

சுனையொன்றில் கயல்துள்ளி சுழன்றுவீழும்
சிறு அலையில் வீழ்ந்தஇலை சேர்ந்துபோகும்
பனைவிம்பம் நீரலையில் பாம்பென்றாடும்
படர்காற்றும் பனிக்கூதல் பெற்றுவீசும்
வனைந்தகழி மண்பானை வரிசைகாணும்
வந்திருந்து குருவியிசை வாழ்த்துப்பாடும்
நனைந்த மழைக்கிலவமரம் நின்றபஞ்சும்
நடுவானில் உலர்ந்தபின் எழுந்துபோகும்

மனையிருந்து பெண்ணின்குரல் மகனைத்தேட
மடியிருந்து வளர்ந்தவனும் மறுத்தும் ஓட
சினை முதிர்ந்த பசுஒன்று சினந்து கத்தும்
சின்னதொரு காகம்முது கிருந்து கோதும்
முனை எழுதும் ஏர்கொண்டு முதுகில்வைத்தே
முழுவயலும் உழுமெருது மெல்லச்செல்லும்
புனைந்தெழிலை பூண்டமகள் கஞ்சிவைத்து
புகை மணக்கும் அழகினொடு போகக்காண்பாள்

கனி விழவும் காலுதைக்கும் கழுதையொன்றால்
கடுமணலும் சிதற ஒருகல் லெழுந்து
தனியிருந்த குருவியயல் தவரிவீழ
தலை போனதென்றலறி திமிறியெழுந்து
நிலமகளை முத்தமிட  நெருங்கும் வான
நீலமதில் கூச்சலிட்டு  நெடுக ஓடும்
இனியென்ன செய்வதென இழந்தவாழ்வை
எண்ணியொரு இரந்துண்ணும் உருவம்போகும்


வரியெழுந்த குதிரை யொன்றுவயலில் காணும்
வரும் மழைக்கு முகில் கூடி வானில்நிற்கும்
சரிந்த பனைஒன்றில் குயிலிருந்து பாடும்
சந்தமென நடை போடும்வண்டிமாடும்
எரிந்த உடல் சுடலையொன்று இருந்தமௌனம்
இதனருகே போகுமிளம் பெண்ணின்நெஞ்சம்
விரித்த விழி வேண்டாத விளைவுக் கஞ்சும்
விரைந்த கால் நிறுத்த அயல் குரங்குபாயும்

நரி துரத்தமுயலொன்று நடுவில் ஓடும்
நாகமொன்று வளைந்தோட ஆந்தைகத்தும்
பருந்தொன்று குஞ்சைக் குறி வைத்து வீழும்
பறந்து தாய்க் கோழிபயம் விட்டுத்தாக்கும்
கறந்தபசு கன்றினுக்கு கிடந்தபாலைக்
கொள்ளென்று கூட்டிமனம் கசந்து கத்தும்
மறந்த தமிழ்ப்பாடல்தனை மனனம் செய்யும்
மரத்தடியில் மாணவனு மருகில் குருவும்

துணிவிழந்து பயந்துமொரு துரத்தும் நாயும்
தொல்லையிது என்றோடும் தனித்தமாடும்
பணிவிழந்து பெற்றவனைப் பழித்த மகனும்
பக்கத்தி லறிவுரைகள் பகரும் பெண்ணும்
மணியொலிக்க வேதஒலி மந்திரங்கள்
மாசற்ற இறை கூட்டும் மனிதர் வேண்டல்
புனித ஒளி புண்ணியங்கள் பொலிந்துவாழும்
பொறிகளென எழும் நினைவு புதுமை யன்றொ

Tuesday, September 11, 2012

விடுதலைப் பாடல்

பொங்கி யெழுங்கடி பொங்கிஎழு  இனிப்
போதும் பொறுத்தது பொங்கியெழு
எங்களினம் மொழி காக்க இனித் தமிழ்
ஏற்ற மடைந்திடப் பொங்கியெழு

சங்குமுழங்கிடக் கேட்குது பார் அங்கு
சந்தியிலே கொடி ஏற்றினர் காண்
பொங்க முழக்கிய ஓசை முரசமொலி
பின்னே யெழுந்தது பொங்கியெழு !

இல்லமெங்கும் உணர்வோடிக் கொதிக்குது
எத்தனை வேகம் இதை வந்து பார்
வெல்லவென ஒளி வானில் எழுந்தது
வீரியம் கொண்டனர் பொங்கியெழு

சொல்லப் பெருந்தொகை மாந்தரெனப்  பல
செந்தமிழர் குலம் வந்தது காண்
வல்லவராய்த் திரண்டோடி எதிர்கொள்ளும்
வாழ்வில் துயர்நீக்கப் பொங்கியெழு

மெல்லத் திரும்புது எங்கள் இனித்தமிழ்
மேன்மைக் குலத்துடை வாழ்வதுகாண்
கல்லை கரைத்தனை கச்சிதமாய் இனிக்
காலமெமதடி பொங்கியெழு

அல்ல லிழைத்த அரண்மனையில் அவர்
ஆட்டம் ஒழிந்திடக் கொள்ளையரும்
பல்லுல கும்பழி செய்தவரு மெங்கள்
பைந்தமி ழர்முன்னே மண்டி யிட்டார்

சொல்லை யிழந்தவர் பேச்சிழந்து பணி
செய்தலெனப் பல பொய்யுரைத்து
நல்லவர் கண்களை ஏய்த்தவர்கள் இன்று
நாணிக் குனிந்தனர் பொங்கியெழு

நெல்லைவிதைத்தவர் நெல்லறுப்பர் -கடும்
சொல்லை விதைப்பவர் சீரழிவர்
நல்ல விதைத்தவர் நாமல்லவோ - இதை
நானிலம் கண்டிடப் பொங்கியெழு

வீரத்தமிழே !

பொங்கிஎழு தமிழேநீ பொய்கையெழில் அலையாக
புரண்டது போதும் இன்றே
தொங்கிவிழும் பேரருவி தூவும்மழை வெள்ளமெனத்
துடித்தெழு பொங்கிஓடு
கங்குல் இருள் கண் மறையக் காற்றோடப் பூமலரக்
காணும்சுகம் தந்ததமிழே
செந்தணலைச் சிந்து,மலர் தேன்தமிழின் தாழ்வெண்ணிச்
சிவந்ததுநீ கொட்டுஅனலே

தங்கமென மின்னுமெழிற் தமிழேயுன் அழகெல்லாம்
தணி கொஞ்சம் இறக்கி வைத்து
பொங்கியெழு சூரியனின்  பொன்வெள்ளி கதிராகு
புன்மைகளை எரிக்கவென்று
மங்குமொளி மாலைசுகம் மந்த மாருதம் வீசி
மயக்கியது போதும் தமிழே
பங்குஎடு கொண்டதனை வென்றதிவன் இன்றுஎன
பாடுதோள் வாகை சூடு!

வென்றுவிட நீ நடக்கும்  பாதைகளில் எங்கணுமே
வீரமழை தூறல்வேண்டும்
தென்றல் புயலாகிவிடத் திடுதிடென் றதிர்ந்து மலை
தீ உமிழ்ந் தாடவேண்டும்
நின்ற இடம் ஓளிதோன்றி நெஞ்சினனல் பந்தாகி
நீசமதில் தீயவேண்டும்
இன்று விடு உன்விசும்பல் எழுஇடியும் வீழ இடர்
இல்லையென ஆகவேண்டும்

மந்திசில மரந்தாவ மாவிற் கிளி இருந்தாட
மயில்கள் கீழ் நடனமாட
நந்தவனத் தென்றலெழ நறுமணமு மெங்கும்வர
நங்கையர்கள் கூடிஆட
சந்திரனும் வீசஒளி சுந்தரர் கள்ளிசைபாடி
சோதிஎன வாழ்வு மோங்க
சிந்தைகளித் தின்பமென செந்தமிழர் குதிபோட
செய்தமிழே செய்தல்வேண்டும்

****************************