Sunday, November 20, 2011

செயல்பட ஒன்று சேர்வோம்

வேலைப் பிடித்தவர் சாமிமுருகனை
வேண்டும்வரை தொழுவோம் - அவர்
காலைப்பிடித்திரு கண்களில் ஒற்றியே
காத்திட வா எழுவோம்
ஓலை பிடித்துநற் கூறும் தமிழ்மக்கள்
ஊரைப் பிடிப்பவனை - அவர்
வேலை விடுத்திட வீடு நடந்திட
வேண்டிய தாற்றிடுவோம்

கூலி கொடுத்திடக் கூடிநின் றாடித் தன்
கொள்கை பிழைத்தவரை - இனி
வேலி அமைத்தவர் வேறுபுறந்தன்னில்
வீற்றிரு என்றிடுவோம்
தோலில் சுரத்தினில் சத்துமில்லா தவர்
சுற்றி யிருக்கவைத்து - அவர்
போலி கணக்கதும் போடும்விடைகளும்
பொய்யெனக் காட்டிடுவோம்

வாடி இருப்பது நாமுமல்ல எங்கள்
வாழ்வுமல்ல எழுவோம் - இனிக்
கோடிஎனப்பல கூடிக்குரல்தந்து
கோவிலமைத் திடுவோம்
நாடித் தமிழன்னை நாற்புறம் காத்ததில்
நாட்டை வளர்த்திடுவோம் - அவர்
தேடித் திரிந்துநல் லுள்ளமெடுத்திடின்
தீங்கில்லை சேர்த்திடுவோம்

வீதிதனில் நின்று வேடிக்கை பார்த்திடும்
வேலையினி விடுவோம் - அவன்
கோதி உயிர்தன்னை கொன்று உடல்வெட்டக்
கூடிஎழுந் திடுவோம்
பாதிமனத்துடன் பையப்பைய நடை
போட்டு நகர்ந்திடிலோ - எங்கள்
நீதி நிலைத்திடும் நிம்மதி காத்திடும்
நேரம்தனை இழப்போம்

கோடிஎனக் காசு கொட்டிக் கொடுத்தாலும்
கொல்லும் உயிர்திரும்பா - அதை
தேடிநடந்தொரு ஏழு லகம் போயும்
எங்கும் பெறமுடியா
வாடி நிற்கும் பெண்ணே வாழ்வுமுழுவதும்
ஊதும்புகை அடுப்பின் - அயல்
கூடிக்கிடந்தது போதும்இனித் தமிழ்
கொள்கை தனைச் விளக்கு

சாடிப் பகைவரின் தந்திரம் சொல்லிடு
சாத்திரம் தானுரைத்து - இனி
ஓடிபிழைப்பது ஓர்வழி என்றவர்
ஊரை விட்டு அனுப்பு
பேடி இனத்தவர் பித்தரும் பொய்மையின்
பேரரும் காவலர்கள் - அவர்
தேடித்திரிவது தெற்கில் இருக்குது
திக்கினைக் காட்டிவிடு

No comments:

Post a Comment