Sunday, January 8, 2012

கவியின்பம்



கவிஎன்ப தினிதாம் கவியெங்க ளுயிராம்
கவி எமது வாழ்வுக்குப் பொருளாம்
கவிஎங்க ளுணவாம் கவியெங்கள் கனவாம்
கவியோ நம்உணர்வுகாண் விழியாம்
கவிஎங்கள் சிறகாம் கவிஎங்க ளிறையாம்
கவிஎங்கள் குறைவற்ற நிதியாம்
கவிஎங்கள் மதுவாம் கவியின்ப மழையாம்
கவிஎங்கள் தமிழன்னை எழிலாம்!

கவிஎங்கள் கலையாம் கவிஎங்கள் துதியாம்
கவியின்பம் பொலிகின்ற நதியாம்
கவிஎங்கள் தேராம் கலையென்னும் உலகின்
கவினின்ப சுவையூறும் அமுதாம்
கவிமென்மை மலராம் கவிவீசுங் காற்றாம்
கவிஎங்கள் உயிர்கொண்ட மூச்சாம்
கவி எங்கள் துகிலாம் கவிசொல்லும்வகையில்
கவிந்திடும் சுகம்கூறின் பெரிதாம்

அவிழ்கின்ற மலரும் அதுதரும் மணமும்
அகிலத்தில் இருள் மாலைவேளை
கவிந்திடும் இன்பம் காண்பது போல்நற்
கவி தரும்சுகம் மிகப் பெரிதாம்
செவிகாணும் இன்பம் தேனெனச் சொல்லின்
குவிவான வில்லதன் வண்ணம்
தவிக்கின்ற சுனையின் தாமரை இதயம்
தாங்கியே பலஇன்பம் காணும்

No comments:

Post a Comment