Wednesday, February 29, 2012

இன்னுமா கடவுளே?

எத்தனைதான் இன்னும்வேண்டும் இறைவா- நீ
எடுத்தவரை போதும் என்ப தில்லையா
மொத்தமும்தான் கொள்ள வேண்டுமென்பதா - இவர்
முடியும்வரை கொள்வதென்ற சித்தமா
ரத்தமெல்லாம் கொட்டிகொட்டி ஆண்டவா - நாம்
ராப்பகலா அழுதுமின்னு மென்னடா
செத்த பாம்பை அடிப்பது போல் இன்னுமா - நாம்
சாகுமொரு இனம் அழிக்க எண்ணமா

வெற்றுடலம் தந்ததுவும் உன்செயல்- அதில்
வித்தெனவே தந்தஉயிர் உன்பொருள்
சுற்றிவரும் உலகிலெலாம் வாழ்பவர் - சுகம்
சொட்டுகின்ற இன்பவாழ்வு கொள்கையில்
சற்று மெமை ஈவிரக்க மின்றியே - இறை
சங்கரனே கொல்ல ஆடும்தாண்டவம்
சுற்றிப்பேய்கள் நின்று தோலைப் பிய்த்துமே - எமை
சித்திரவதை செய்வது போலாகுதே

என்னபாவம் செய்து விட்டோம் வாழ்விலே நாமும்
ஏது இந்த மண்ணில் கொண்டகுற்றமோ!
சின்னவராய் செந்தமிழைப் பேசியே - நாமும்
செய்யும்பிழை ஏது தினம் சாகிறோம்
மன்னவனாம் எங்கள் உயிர் காத்தவர் - தூய
மனமதிலே உத்தமராய் வாழ்ந்தவர்
உன்னதமாய் கொண்ட அவர் இலட்சியம் ஏன்
உதிரமதில் கரைய வைத்தாய் தெய்வமே!

நல்லவர்கள் என்பதுஇவ் வுலகிலே - ஏதும்
நனமையற்ற பிறவிஎன்னும் கொள்கையோ?
சொல்வதெலாம் சத்தியமென் றாகிடில் - இவர்
சுத்தமாக வாழும் தரம் இல்லையோ
 கல்மனது கொண்டு வெட்டிக் கொல்பவர் - தமைக்
காத்திடவே உன்மனது சொல்லுதோ
வல்லவனே நீயிருப்ப துண்மையோ - நம்
வாழ்வு என்ப தென்னபேயின் கையிலோ

மொத்தமாகக் தமிழினத்தைச் சுட்டுமே - பெரும்
மூர்க்கனாக பகையளிக்க நம்மையும்
கத்தியழும்குரல் இசைக்கு திருநடம் கொண்டு
காலெடுத்து ஆடுவது மேனடா
பித்தனென்று உன்னைச் சொன்னபோதிலும் - அன்று
பிள்ளை புத்திகாதில் சொன்ன போதிலும்
அத்தனாக அன்னை பாதி கொண்டதும் - உன்
புத்தி பாதியாகிப் போன ஏதுவோ?

கண்ணிரண்டும் கொண்டு எம்மைபாராய்யா - உன்
கனலெறித்தகண்ணை மூடு தேவையா
பெண்ணைப் பிள்ளை தாய் தனித்து சிறையிலே- போட்டு
பேசரும் வல்வினைமுடித்து கொல்கிறார்
எண்ணி மனங்கொண்டு அருள் தந்திடு - நீயும்
எம்மினத்தைக் காத்து உயிர் தந்திடு
வண்ணமெழும் வாழ்வுதனை வாழவும் - எம்
வளமிழந்த மண் செழிக்க வைத்திடு !

காதல் தேசமே!

வானில் குழைத்தநற் சந்தணத்தில் - இட்ட
  வட்டவடிவிலோர் குங்குமமாய்
வேனில் இளவெயில் சுட்டெரித்த - பின்னர்
 வீழ்ந்து சிவக்கின்ற மாலையிலே
தேனில்இழைந்த நற்பூ தழுவி - வந்த
  தென்றலே தேசம் நீ காணுவையோ?
ஆ..நில் அளவற்ற காதல்கொண்டேன் - அந்த
 ஆசையை ஊரெங்கும் சொல்லிவிடு

மேனி கருத்து மயங்குகிறேன் - எந்தன்
  மெய்யும்  துடித்திடக் காணுகிறேன்
ஏனிந்தக் கோல மெடுத்துவிட்டே - னிந்த
 ஏழை மனம்வாழ ஏது செய்வேன்
சா..நீயெனச் சொல்லிச் சத்துருக்கள் - எந்தன்
  தாயென் மொழிதனைக் கொல்லுகிறார்
ஆ.இனி என்னதான் காதலென்று - என
   தன்புடைத் தம்பியர் கேலிசெய்தார்

பூநெய்யின் மேலுற்ற வண்டெனவே - உயிர்
   போலும் மிகுந்தொரு பாசமுற்றேன்
வானில் பறக்கும்  பறவையென - எமை
   வந்து தழுவிடும் காற்றுனைப்போல்
தேன்நிலவோடும் சுதந்திரத்தை - எங்கள்
   தெள்ளு தமிழ் தேசம் கொள்ளவெனப்
போயின்னல் தீரப் புது உலகம் - செய்யப்
   பூமியின் மேல் வெகு காதலுற்றேன்

மானின் விடுதலை மக்கள் பெற - மயி
 லாடும் களிப்பினை நித்தம்கொள்ள
தாய்நீ தமிழே உன்செல்லமகன் - தமிழ்
  தாய்நில மீட்பினில் காதல்கொண்டேன்
நானிலத்தில் இந்தக் காதல்வென்று - அதில்
 நானும்  பிழைதிடக் கூடிடுமோ
வாநீ தோழா, தமித்தேச மண்ணை - எங்கள்
  வாழ்வு செழித்திடச் செய்குவையோ?!

மாநிக ரற்றநம் மண்ணினையே - மீட்டு
  மாளும்தமிழ் பெற்ற பிள்ளைகளை
ஏனின் னும்விட்டு இருந்தனையோ - தம்பி 
 எல்லாம் அழியமுன் காவல் கொள்ளு
தாநீ எமதீழ மண்ணையென - ஒரு
  தர்ம நிலைகொண்டு கேட்டிடுவோம்
போநீ யேதுமிலை என்றுசொன்னால் - பஞ்ச
  பாண்டவராய் நீதி பார்த்திடுவோம்.

Saturday, February 25, 2012

தொடரும் பயணங்கள்!!


(அன்று)

கடிதொரு பெருநடைஒளிதரு முடிவினை
காணாவென் றேநடந்தோம்
முடிவொரு சுகமென முனைவதில் ஒளிதரும்
மேன்மைதனை நினைந்தோம்
குடிமகன் தமிழ்நில குலமீழம் அழிவுற
கூடிநம் பகை எதிர்த்தோம்
முடிவினில் விடுதலை வருமென நினைந்துயர்
மேடுகள் மலை கடந்தோம்

சுடுநிலம் அடிதனில் சுடவலி சுகமென
சொல்லியே துயர் மறந்தோம்
படுவது பழியென பலதடை அருகெழ
பாதையில் நேர்நடந்தோம்
கொடுவிட அரவமும் இடிமழை புயலொடும்
குளிர் நதியிடை நடந்தோம்
குடுகுடு என விரைந் தெமதீழக் குறியினை
கண்டொளி பெறவிழைந்தோம்

வருவது ஒருபகை என எதிர் நிலைத்திட
வானொடு புவி சேர்ந்தே
ஒருபெரும் பிரளய மெனஎமை எதிர்கொள
ஏங்கி நினை வழிந்தோம்
தருமமும் இழிவுற தலைமுறை அழிந்திட
தமிழ்நில மழிவுறவும்
பொருமிய மனமுடன் புதையுறு குழிகளில்
பூக்களை விதை விதைத்தோம்

(இன்று):’

விதியது பிழைவிட விளைவது தவறென
வீறுட னெழுவதுடன்
கதியென நினைந்திட நடுநிலை தவறியோர்
காரணம் கூறெனவும்
சதியினை செயுமெவர் தனியறை சிறையிட
தகுமொரு பதில்வேண்டி
புதிதொரு வழியின்று நடப்பினும் முடிவினில்
பெறுவது விடுதலை காண்!

Friday, February 24, 2012

நானிருக்கும் மட்டும் !

நானிருக்கும் மட்டுந்தானே ஆட்டம் - நானொதுங்க
நாணமின்றிப் பேயணைக்கும் தேகம்
ஊனுயிர்த்த நாள்வரைக்கும் ஒட்டம் - ஊன்படுக்க
ஓடிவந்து நாயிழுத்துப் போகும்
பேனிருக்கும் சூடுதேகம் காணும் - மட்டுமின்றிப்
போய்க் குளிர்ந்தாக விட்டுஓடும்
ஏனிருக்கும் போது உள்ளநாட்டம் - இன்னல்செய்ய
இன்னொருத்தர் மேனிதன்னைத் தேடும்

சொல்லிருக்கும் மட்டும்தானே வாழ்வும் - சொல்லிழக்கச்
சுற்றிநிற்கும் கொல்விலங்கும் பாயும்
இல்லையொன்று கையிலென்றுகாணும் - போதுவந்து
ஏதும் எம்மைசீண்டும் பூனைதானும்
கல்லதென்று எண்ணுமுள்ளம் யாவும் - நல்லவரைக்
கட்டி வைத்த வேலிபோடும் வாழ்வும்
இல்லை யென்று ஆகிப்போகும் நேரம் - ஆகுமட்டும்
ஏங்கமுற்று ஏழை நெஞ்சம் வாடும்

உள்ள மெண்ணும் மட்டும்தானே இன்பம் - உள்ளதின்றி
ஒட்டித் தேகம்வீழ எங்கும்சூன்யம்
அள்ளும் இன்பரேகை கொண்டதாகம் - அந்தமாகி
அத்தனைக்கும் சூழ்இருட்டென் றாகும்
வெள்ளிக்காசும் அள்ளிக்கொண்டு போகும் - தன்மையேது
வீணலைந்து வாழ்வழிந்த நாளும்
கொள்ளி கொண்டு ஊர் எரித்துப் போடும் - கண்டதென்ன
கோடிகொண்டும் இல்லையென்றுஆகும்

செய்யஏது மில்லை வந்துநாளும் வன்மைதானும்
சீரழிக்க ஏழைமீது பாயும்
பொய் யெழுந்தஆசை உள்ளம் கொள்ளும் - பேய்களாகிப்
பிய்த்தெறிந்து சாந்தியென்று தூங்கும்
கையெழுந்து காக்க வென்று முந்தும் - மெய்விழுந்து
கட்டைமீது நாம்படுக்கத் தீயும்
பையெழுந்து பற்றியுண்டு தீய்க்கும் - பாசம்கொள்ளப்
பக்கம் யாருமின்றி, வெந்துபோகும்

வல்லதேசம் செய்வதெல்லாம் நீதி - ஆகுமன்றி
வாழ்த்தும் பொய்க்குப் பொன்முடிச்சுப் பாதி
மெல்ல யாரும் பேசினாலும் போகும்- மேடையேற்றி
மென்கழுத்தைச் சுற்றிக் கோடுபோடும்
அல்லதல்ல ஆளும்போது யாரும் - அன்புகொண்டு
ஆனதோ ரினித்தவாழ்வும் சாகும்
வெல்லவென்று என்னசெய்த போதும் -சொல்!விதிக்கு
விட்டுஓடித் தப்பலாமோ கேட்கும்

சில்லுடைந்த தேரென்றாகித் தேகம் - பாதைவிட்டுச்
சீரழிந்து போக ஊரும் கூடும்
நல்லதெண்ணி நாலுவார்த்தை கூறும் -அல்லதென்னில்
நாஒறுத்து வாயுமிழ்ந்து ஏசும்
எல்லையின்றி வான்விரிந்த அண்டம் - எண்ணமான
தெட்டும் தூரம் விட்டழிந்து போகும்
வல்லஎண்ணம் கொண்டுவாளை வீசும் _ வாழ்வுதானும்
வானம் காணு மட்டும் தானே நீசம்!

Thursday, February 9, 2012

விழிகாள் பொறுமின்!

நிறுத்திடு கால்கள், நீயும் நெருஞ்சிமுள் நிறைந்தபாதை
நேரிலேஉள்ளதாயின்
உறுத்திடும் இன்னல் யாவும் உனக்கல்ல கொள்வதெல்லாம்
உயிருக்கே ஆகுமென்ப
கறுத்திடும் பாதையென்றால்; கண்களின் தவறுமல்ல
காரிருள் தந்தவர்யார்
பொறுத்திடு நெஞ்சே நீயும் புவியின்சூழ் கருமை யாவும்
பொழுதது விடியப்போகும்

சரித்திரம் என்ன சொல்லும் சாட்சியம் என்னசொல்லும்
சற்றுநீ நின்று யோசி!
கருத்திலே சிந்தைகொண்டு கால்களே மெல்லப் பாதை
கருதி நீநடந்து செல்லு 
உருத்தெரி யாதஉள்ளம் ஒருதரம் இங்குகாட்டும்
மறுகணம் அங்குஎன்னும்
வருத்திடும் பாதைகண்டு வழிநட இருளென்றாயின்
 வருமொளி கண்டுசெல்லு!

கருத்தரி காலம் தொட்டு கால்களும் நெஞ்சும்  கண்ணும்
காதலர் ஆயின்பேதம்
இருப்பது உண்மையன்றோ இகமதில் இதுவும் வாழ்வின்
இடைஞ்சலென் றாகுமிங்கே
தெருத்தெரு வீதியெங்கும் திகழ்ந்திடும் குழிகளெல்லாம்
தெரிவதும் இல்லை மீண்டும்
இருள்செல்லத்  தீபம்கீழை ஏறிடும் வான்கறுப்பும்
ஏகிடப் பாதைதோன்றும்

கண்களே  பொறுமின் காலம் கனிந்திடும் கதிரின்உதயம்
கடுதியில் நேர்வதல்ல
விண்களை கூடும்வேளை வீரிடும் புள்ளினங்கள்
வியனுறும் வண்ணம் வானில்
தண்ணொளி தோன்றப்பூக்கும் தாமரை தலைவன்காணத்
தலையணை கசந்து மாந்தர்
மண்ணிலே காலை ஊன்ற மளமள என்றுஓசை
மானிட வாழ்வுஓங்க

மென்னொலி  கீதமூடே மலர்களும் பாதைவீழ
மன்னவன் போலநீயும்
மின்னலை ஒத்தவாறு மிளிர்வுடன் வேகமிட்டு
மேதினி எங்கும் செல்வாய்
தன்னிலை கொண்டுநீயும் தவித்திடல் நிறுத்துவாயித்
தளர்வது வேண்டேலிந்த
பொன்மொழி கேளாயென்றால் பேதையாய், நெஞ்சின்மாயை
புன்மொழி கேண்மின் தீதே?

Monday, February 6, 2012

சிரிப்பதும் அழுவதும் ஏன்??


நீலமுகிலோடும் வானிலெழுந்திடும்
நித்திய சூரியனே - நினைப்
போலும் ஒளியுடன் வாழும்மனிதரும்
பாரிலிருக் கையிலே
கால விதியிதோ மாலைமதி கெட்டு
காணும் பிறை யொளியாய்-பலர்
கோல மழிந் துயிர் கொள்ளும் துயருடன்
கூடியிருப்ப தென்ன?

மாலை மலர்ந்திடும் பூக்களும் உண்டதை
மேவி இருள் பரவும் - அதி
காலை மலர்களின் வாழ்வு ஒளிர்ந்திடும்
காணும் இரண்டுவிதம்
சாலை யோரம்மரம் கீழும் வாழ்ந்துவரும்
சந்ததி யொன்றிருக்கும் - பக்கம்
மேலு யரும்மாடி மெல்லிய பஞ்சணை
மீது துயில் சிலர்க்கும்

கானமிடும் நல்ல வானில் குருவிகள்
ஊர்வலம் செய்யழகும் அங்கு
கூனல் நிமிர்முகில் கூட்டங்கள் பஞ்சென
கோலமிடும் எழிலும்
தேனொளி மின்னிட வானிடை ஆயிரம்
தீபங்கள் வைத்தவளோ - மன
மானது ரம்மிய மாகக் களித்திட
மஞ்சள் நிலவு வைத்தாள்

ஆனதி வைசெய்த தேவியும் ஏனங்கு
அத்தனை கோபங்கொண்டு - பல
மான இடியுடன் பூமிஅதிர்ந்திட
மின்னலை கொண்டுவைத்தாள்
வானம் அழுவது போல மழையுடன்
வாரிப் புயலடித்து - பெரி
தான முரண்படும் பேய்மழை ஊதலும்
ஏனோ நிகழவிட்டாள்

பூவழுதால் இதழ்தேன்வழியும் அதைப்
பூவுலகே யறியும் - அலை
மேவுகடல் மீது மீனழுதால் அலை
யோடு கலந்துவிடும்
தாவும் முயல் என்றும் தாவியோடவேண்டும்
தப்பிப் பிழைப்பதற்கும் - விதி
யாவும் குறையின்றி சாதுவெனப் பிறந்
தாலும் துயர் இருக்கும்

பூவும் உதிர்ந்திடப் பொல்லாப் புயல்வந்து
பற்றிடத் தேவையில்லை - மலர்க்
காவும் மலைதொட்டு வீசும்தென்றல் தொட
வீழும் விதிமுடியும்
நோவும் அழுதிட நூறுதுன்பங்களும்
நெஞ்சில் குடியிருக்கும் -இதை
யாவும் அறிந்திடில் தோன்றும் எண்ணங்களில்
உண்மை நிலைதிகழும்

Sunday, February 5, 2012

பிடி சாபம்

கத்திய ஓலமும் கதறியகுரலும்
கண்வழிநீர் பெரு ஆறெனவே
முட்டிவழிந்திடச் செத்திடுவோமெனச்
சித்தம் கலங்கிச் சிதறியதும்
கொத்து கொத்தாய் பல குண்டுக ளாயிரம்
கொண்டுவந்தே பகை கொட்டியதும்
பட்டுவெடித்ததும் பாய்ந்துசிதைத்ததும்
பால்குடி பிஞ்சினர் மார்புதனை

வெட்டிக்கிழித்தவர் இரத்தம் அழிந்திடச்
செத்தவும் அதைப் பெத்தவளோ
தொட்டு எடுக்கவும் நேரமின்றித் திசை
விட்டுத் தலை தெறித்தோடியதும்
பட்டதும் ஓடி விழுந்ததும் சிறு
கையொடு கால்கள் இழந்ததுவும்
கொட்டி முழக்கிய போர்ப்பறையும்
சிறு பெண்டிர் கெடுத்தவர் தூக்கினிலே

கட்டியவிதமும் ஆடைகளின்றி
செத்தவர்தம்மை சீரழித்து
பெட்டியிலிட்டு சந்தி சிரித்து
பேயென ஆட்டம் ஆடியதும்
வெட்டியகுழியும் பதுங்கியமனிதர்
தப்பமுதல் அவர் தலையினிலே
கொட்டிய மணலும் நின்றவர் கண்கள்
கொட்டவிழிக்கப் புதைத்ததுவும்

எத்தனை கோரம் இட்டபகைவரின்
இழிசெயல் எண்ணித் துடிமனதில்
ரத்தம்கசிந் துயிர் நட்டநடுங்கியே
முற்றிலும்வேதனை பெருகுதடா
சொந்தம் இழந்துசு தந்திரம் விட்டுச்
சுற்றி முள்வேலியைக் கட்டிவைத்து
மந்தை விலங்கு கள்போலொருமானிட
வாழ்வு நமக்கொரு கேடோடா

விரிந்த குழல்முடி குடலெடுத்தேபின்
கோதி முடிப்பேன் என்றலறி
வரிந்திடு சபதத் திரௌ பதிகள்பலர்
வாழ்வுமுடிந்து போனாலும்
அருமலர்ப்பாதச் சிலம்பினை உடைத்து
மதுரையைக் கொழுத்திய கண்ணகிபோல்
பெரிதொரு சாபம் இட்டஇன் மறமகள்
பிணமென ஆகி புதைந்தாலும்

விட்ட கண்ணீருக்கு விலை கொடுப்பாரெமை
குத்திஅழித்திட்ட கொடியவர்கள்
இட்டவர் சபதமும் சாபங்களும் எழுந்
தெதிரிதலைகொள இடி விழுத்தும்
பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி

சக்தியே, காத்திடுவாய்

             
தெள்ளெனும் நீரினில் கல்லைஎறிபவர்
தேங்கிக் கிடக்கையிலே எந்தன்
உள்ளமது கொல்ல வெள்ளங் கரைபுரண்
டென்னை இழுக்குதம்மா
கள்ளமதுஇல்லை கால்கள் நடந்திட
காணும்பெரு விசையாய் - அலை
துள்ளித் துள்ளி திரை வெள்ளம் கடலெனத்
தள்ளி விழுத்துதம்மா

சொல்லின் பெரிதெனப் பன்னெரும் துன்பங்கள்
சுற்றிக் கிடக்குதம்மா- இந்த
வல்லமனதினை வாழ்வின் இழிமைகள்
வந்ததே யசைக்கு தம்மா
கொல்லு மனங்களின் கோடரி வீச்சுக்கள்
கொட்டு மிரத்தமின்றி - உள்ள
பல்லு முடைபட வீழ்த்தியதாய் எனைப்
பக்கமுருட்டுதம்மா

நில்லுஎன எந்தன் நெஞ்சைநிறுத்தியும்
நல்லதை கொள்ளுகிறேன் -அவை
கல்லில் கட்டிக் கடல் தள்ளிடினும் வந்து
காத்திடுங் கைகளம்மா
வெல்ல முடியுமா வேதனைஎன்றிட
வீசும்கயிறாய்  அன்பு- எனை
அல்லல் குளத்தினுள் ஆழ்ந்து விடமுன்னர்
ஆருயிர் காக்குதம்மா

அன்புதனை மனம் என்றும் மதித்திடும்
ஆனவழி சரிதான்- உண்டு
என்பதைக் காட்டிடில் எந்த இதயமும்
அந்த இறைவடிவாம்
தன்னிலை தானுணர்வென்பது சற்றுப்பின்
தாமதமே, பெரிதாய்- அதில்
முன்னுரிமை கொண்டு மோக இருள் வந்து
முற்றும் கறுத்துவிடும்

இணையக் கடலில் நீந்தி

        

அவள்;
காடுமாலை சுத்திவந்த காத்துப்பட்டுதோ -இல்லை
கண்டபேய்கள் மோகினி உன் கைபிடித்ததோ
நேத்துவந்த மூத்தமாமி கண்ணுபட்டுதோ -நீயும்
ராத்திரிக்கு நாலு தும்மல் போட்டதேனையா

அவன்:
காத்துமில்ல கருப்புமில்ல கண்ணு செல்லமே -ஒரு
கற்பனையும் தேவையில்லை கவலைகொள்ளாதே
நேத்துவலை வீசி நானும் இணையசாகரம் -மூழ்கி
நின்றதாலே தும்மல்   நாலு போட்டேன் கேளடி

அவள்;
ஆத்து மீனு சந்தையிலே அள்ளக் குவியுது -நீயும்
அலைஞ்சு வலை போட்டதாலே என்ன ஆச்சுது
நேத்து நீரில் நின்றதாலே நெத்தி சுடுகுது -கொஞ்ச
நேரம் சொல்லு கேக்க வேணும் நெஞ்சுதுடிக்குது

கூத்தடிச்சுக் குளிரில்நின்னு தேகம் கெட்டுது -நீயும்
கொண்டதூக்கம் ராத்திரிக்கு பாதிபோச்சுது
மாத்தி மாத்தி கணனி போட்டு காலம்போகுது -இந்த
மாமன் செய்யும் சேட்டைகாணக் கவலையாகுது

அவன்:
ஊத்து நீரு தண்ணி என்று உளறி வைக்காதே=-நானும்
ஓடிநீரில் நீந்தவில்லை உலக வலையிதோ
பாத்துநில்லு இண்டநெற்று போட்டுகாட்டுறேன் அடி
பாவி மீனுக் காகவில்லை பாட்டு எழுதுறேன்

பாட்டு நாலு எழுதி நெற்றில் போட்டு வைத்தேண்டி -இதோ
பாரு உந்தன் துன்பம்போகும் விட்டுத் தள்ளடி
நெட்டில் எந்தன் பாட்டு பாரு போட்டிருக்கடி -அது
நீயும் வந்து காண உந்தன் நெஞ்சில் மகிழ்வடி

வாழ்த்துஎன்று சொல்லி என்னை வானம் தூக்கியே -பல
வண்ண மாலை போட்டதாக தேவைதைகளே
பூத்த வெள்ளி தாரகைகள் கூட்டமுன்னிலே -என்னைப்
போகவிட்டு இன்பமிட்டார் பொறுக்குதில்லையே

(துள்ளி ஆடுகிறார்)

அவள்:(மனதுள்)
பாவி இந்தமனுசன் புத்தி பேதலிச்சுதோ ஒரு
பைத்தியமோ குழந்தையாகக் கூத்தடிக்குதே
ஆவி ஏதும் பட்டு நிலைமைஆகிப்போச்சுதோ நாளை
ஆனைமுகன் கோவில் போயி நூலுகட்டணும்

Saturday, February 4, 2012

பெண்ணெனும் சிலை சிற்பிகள் நாம்


கருவில் உருவைக்கொண்டே - அன்னை
கையில் தவழ்ந்து வந்தோம்
உருகும் அன்பைக் கண்டோம் - அவளின்
உள்ளத் துறைந் திட்டோம்
பருகும் உணவைத் தந்தவளோ - எமைப்
பாசங் கொண் டருகில்
கருணை வடிவாய் நின்றணைத்தாள் - இரு
கண்கள் எனக்காத்தாள்

அம்மா எனுமோர் தெய்வமகள் - அவள்
ஆண்டவன் மறுவடிவம்
நம்மை ஆக்கவும் உலகினிலே  - பின்
நலமாய் காத்திடவும்
வெம்மை கொண்டயல் தீமைவரின் - அதை
வெயிலா யெரித்திடவும்
அம்மை அருளால் முத்தொழிலும் - அவள்
அகிலம் கொள்ள வந்தாள்

பெண்ணாய் முதிர்வில் தாயாவாள் - அவள்
பெருமை கொண்டிடுவாள்
மண்ணில் தாயென ஆகும்வரை - அவள்
மங்கை சிறுவயதாள்
எண்ணிப்பார் எவள் சின்னவளும் - வளர்ந்
தொருநாள் தாயாவாள்
கண்ணை இமையாய் காத்திடுவோம் - எதிர்
காலத் தாய் இவளாம்!

விண்ணில் சுழலும் புவிவாழ்வில் - அவள்
வேட்கைப் பலியிடவும்
பெண்மை இழிமை செய்வதுவும்- அவள்
புனிதம் அழிப்பதுவும்
எண்ணித் தலைமுறை காத்திடுவோம் - அவ்
விம்சைசெயல் நிறுத்த
கண்ணீர் சிந்தாக் காத்திடவும் - இக்
கணமே திடம் கொள்வோம்

எம்மைப் படைத்த போதினிலும் அவள்
உணர்வில் மலராவாள்
வெம்மைச் சூரியன் ஆனவளோஎம்
முன்னே நிலவானாள்
பொம்மை கற்சிலை செய்துவிட - நாம்
பிடிக்கும்உளி வடிவம்
அம்மை இவளது வாழ்வுருவை நாம்
ஆக்கும் சிற்பிகளாம்

மண்ணைப் பிடித்திட வரும்பானை - போல்
மனங் கொள் உருவெடுப்பாள்
திண்ணம் கைகளில் உளிகொண்டே செயல்
தேர்ந்தே கலைவடித்தால்
எண்ணத் திருப்பது உருவாகும்திரு
மகளாய்..! எழிற்சிலையாய்!
வண்ண திருமகள் வாழ்வில் நாம் - பல
வளங்கள் உருவமைப்போம்

Thursday, February 2, 2012

சிரித்திடு மகளே

நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
.  நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
.  சொல்லும் சிரிப்பிதுவோ
 ஓலையிடை தென்னங்கீற்றி லொளிந்துநின்
      றோடும் மதி சிரிப்போ .விழி
போலும் கயல்துள்ளும் பொன்னெழில் நீரலை
.  போடும் நகைஒலியோ

வாழை மரங்களில் வந்துநீளும் குலை
.  வைத்த முன் பூவரிசை  -அதன்
ஏழைச் சிரிப்பினைக் கண்டனயோ - கனி
.    இன்சுவைப் புன்னகைத்தோ
கீழை வயல் மேடு கோபுரவீதியில்
       கூடி நின்றாடும் மந்தி வந்து
வீழபொலிந்த கனிஉண்டு ஆனந்தம்
      வேளை என்றாடியதோ


பச்சை வயல்வெளி  முற்றும் நிறைகதிர்
.   பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
.   சாய்ந்து சிரித்தனவோ - இடை
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
.   பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
.    தங்கும் சிரித்ததுவோ


கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
.  காணும் பசும் இலைகள் - நெடு
வானமதின் விழும்நீர் துளியில் பட்டு
      வாட்டம் கலைந்தபடி
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களும்
 .   தாங்கிச் சிரிசிரித்து  எழில்
ஆனதிந்தப் பெரும் பூமரச் சோலையும்
.         ஆனந்தக்கூத்திடுதோ


அத்தனை கொண்ட  சிரிப்பு மியற்கையின்
.    அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளென்
.    ரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
     பத்தரைப் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச்சிரித்திடு
    அற்புத பூமியிதே


Wednesday, February 1, 2012

இன்பம் எங்கே?


செங்கனிகள் தூங்குமிளஞ் சோலைதனில் தொங்கி
அங்குமிங்கென் றாடுங்கவி ஆற்றலுடை உள்ளம்
திங்கள்எழிற் பொன்வதனச் சேர்மறைகள் மொய்த்த
பங்கமுறும் வண்ணமிடும், பால்நிலவுங் கதிரோன்

செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பில் மின்ன
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணிப் போமோ

தங்குமதன் நெய்பிரியத் தாகமுற்ற தீபத்
தொங்குதிரி கொள்ளொளியின் தோற்றநிலை கொண்டே
வெந் தணலும் உண்ண,வரும் வீழ்புனலில் பட்ட
சந்தணத்தின் நிறமெடுத்த சாந்தரூப உள்ளம்

செங்குருதி குறுகுறுக்கச் சீறுமலை போலும்
பங்கயத்தின் இலைபடிந்த பொய்கையில் நீர்துள்ளி
அங்குமிங்கு ஆடுவதாய் அன்பு கொண்டவாழ்வை
தங்கமெனும் மனமெடுத்தல் தரணியிலே புதிதோ

சிந்தனைக்குள் சினமெழுந்து செந்துளிர்கள்போலும்
வெந்தபுண்ணில் வீழ்நயமாய் வேந்தனுடை வாளும்
தந்தசுகம் என்னருமை, தன்னில் மனம்பாடும்
விந்தைகொள விழிநிறைத்த வியனுலகின்  இன்பம்

*************************************



இதன் விளக்கம்:
 இன்பம் எங்கே?

செங்கனிகள் தூங்குமிளஞ் சோலைதனில் தொங்கி
அங்குமிங்கென் றாடுங்கவி ஆற்றலுடை உள்ளம்
திங்கள்எழிற் பொன்வதனச் சேர்மறைகள் மொய்த்த
பங்கமுறும் வண்ணமிடும், பால்நிலவுங் கதிரோன்

இந்தக் கவிக்கான  சிறு குறிப்புகள்>
சிவந்த கனிகள் தூங்கும் சோலை மரங்களில் (ஊஞ்சல்போல்)
அங்குமிங்கும் ஆடும்  குரங்குகள்  (கவி) போன்றும் ஆற்றலுடைய மன எண்ணமானது
(மனம் ஒரு குரங்கு) நிலவின்  முகத்தில் காணும் மறைகள் (கறுப்பு நிறம்)
போன்று
பங்கமுள்ள அல்லது களங்கமான நிலைகொண்டது. அதாவது  நிலவும் சூரியனும் அவை

செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பில் மின்னி
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணிப் போமோ

முறையே சூடும் குளிருக்கும்  உதாரணமானவை  ஒன்றுசேரும் நேரம் காணும்
தகதகப்புபோன்றுமின்னிக் கொள்வது  எமது மனமாகும்.(( இங்கு சூரியனும்
சந்திரனுமொன்று சேர்ந்தால் சூரிய கிரகணமாகும் (பொற்கணத்து)))

 அந்தநேரத்தில் தக தகக்கும் ஒளி கிடையாது. எனவே எதிர்மறையாக மனம் இருள்
கொண்டது என்பதை இகழ்ச்சியாக அப்படி புகழ்ந்தேன்.

அங்கொரு “வள்” ஓசையிடுவது நாய் . நாய் ஆனந்தமாக  குரைத்து ஊளையிடும்போது
சங்கொலிபோன்று  தோற்றுமென்னதால் (தவறென்றால்
மன்னிக்கவும்) )அப்படிப்பட்டஓசைக்கு மதி (சூரியனை மறைக்கும் நிலவானது)
பயந்து விலகி ஓடியா போகும்?  (இல்லை. )
நிலவைப் பார்த்து நாய் குரைத்தது என்பார்கள் பிரயோசனமில்லை

அதுபோல் மனதை  திருத்த முடியுமா என கொள்க

தங்குமதன் நெய்பிரியத் தாகமுற்ற தீபத்
தொங்குதிரி கொள்ளொளியின் தோற்றநிலை கொண்டே
வெந் தணலும் உண்ண,வரும் வீழ்புனலில் பட்ட
சந்தணத்தின் நிறமெடுத்த சாந்தரூப உள்ளம்

1. விளக்கில் தங்கியிருக்கும் நெய் எரிந்து முடிய திரியில் எண்ணெய்க்கான
தாகமுற்ற நிலைபோலவும் (அச்சமயம் எரிந்துகருகும் இருள்  கவ்வும்)
2. வெந்தணலில் எரிகின்ற ( தீ உண்ணும்) சந்தணக் கட்டையானது வரும்
வீழ்புனல் (மழை) பட்ட வுடன்  கரியாகிப்போகும் , அதுபோன்றும்---
கருமையானது உள்ளம். (சாந்த  ரூப உள்ளம் -- மீண்டும் இகழ்வுக்காய்
புகழ்ந்தேன்)

செங்குருதி குறுகுறுக்கச் சீறுமலை போலும்
பங்கயத்தின் இலைபடிந்த பொய்கையில் நீர்துள்ளி
அங்குமிங்கு ஆடுவதாய் அன்பு கொண்டவாழ்வை
தங்கமெனும் மனமெடுத்தல் தரணியிலே புதிதோ

உடலில் இளரத்தம் உள்ளபோது குறுகுறுப்பை துடிப்பை ஏற்படுத்தும் மனமானது
கடலலைபோல் சீறியெழுந்தாலும்.

உண்மையில் தாமரையின் இலை பொய்கையில் படிந்து கிடந்து ஒன்றாக வாழ்ந்தும்,
பொய்கையின் நீர் துள்ளி ஏறினால் இலை  தள்ளி விழுத்திவிடும். அது போன்று
அன்பு கொண்ட (அன்பற்ற)  உள்ளங்கள் வாழும் இந்த உலகானது ஒன்றும்
அதிசயமில்லை

சிந்தனைக்குள் சினமெழுந்து செந்துளிர்கள்போலும்
வெந்தபுண்ணில் வீழ்நயமாய் வேந்தனுடை வாளும்
தந்தசுகம் என்னருமை, தன்னில் மனம்பாடும்
விந்தைகொள விழிநிறைத்த வியனுலகின்  இன்பம்!

அப்படிப்பட்ட உள்ளங்கள் கோபமுற்றபோது தீபோலும்  நிறங்கொண்டு சிவந்து
முளைக்கும் தளிர்களாகவும்  ஏற்கனவே காணும் புண்ணில் அரசன் கைகொண்ட வாள்
பதம்பார்க்கும் போது (வெட்டும்போது) ஏற்படும் வேதனையைஉண்டாக்குவதாலும் -
(இகழ்வுக்காக ’தந்த சுகம் என்னருமை’ என்றேன்) இந்த உலகம் எவ்வளவு இன்பமாக
உள்ளது!  (பெரும் நரகம் என்று பொருள் கொள்க)

சக்தி ! சக்தி!! சக்தி!!!


திருநட மிடுமென் னறிவெனுங் கருவில்
உருவமின் றிருப்பவளே
இருளெனு மாயை இதுவரை கண்டேன்
தருமொளி பெரிதுனதே
வருமிடர்கொண்டே பகையுற யிரும்பில்
துருவென உருவழிந்தேன்
பெருமளவாக இருமன துழலும்
செருகினி லெனையிழந்தேன்

ஒருமையில் மனமும் உள்ளொளி தானும்
தருசுடர் எனவருவாய்
எருதினில் ஏறும்  தருமனும் உயிரை
வெருகிடப் பெற முதலாய்
மருவியென் அறிவை தருவதில் குறையை
ஒருபொழு தினிகுறையாய்
சருகெனக் கருக முதலலுரு மாற்று
தருவினில் கனியெனதாய்

உருவினி லன்பும் பெருமையு மறிவும்
வருமுன திருமனதால்
தெருவினில் வீழும் சொரி பனியாக
உருகிட முதலறிவாய்
மருகிடு மனதில் மாற்றமுந் தந்து
மெருகினை யுடைமனதாய்
அருகினில் வருவாய் ஒருதென தாயாய்
இரு எனை வழிநடத்தாய்

அருவியு மாழி இருதிசை செல்லும்
ஒருங்கிடு மதிலிணையும்
பருவமும் கொள்ளக் கருமுகில் மின்னும்
பெருமழை புவியணுகும்
முருகெனும் தமிழும் அரும்பொரு ளிசைய
தரும்வித மெனைதெரிவாய்!
இருமனக் குருவாய் கருமமும் நிறைவாய்
பெருகிட அருள்புரிவாய்!

நானும் ஒருவன்

மகா வல்ல அறிஞர் குழுவுக்குள் இடம்கிடைத்தபோது...

அழகான சபையொன்று கண்டேன் - அங்கு
அசைந்தாடும் மலர் போலும் இதயங்கள் கண்டேன்
குழலோசை குயில்பாடுங் கீதம் - இளங்
குளிர்மாலைக் காற்றோ டெழுந்தோடக் கண்டேன்

கிளிபோற் குரல்கொண்டு நானும் - அங்கு
கீக்கி என்றே கத்திப் பாட்டிசைத்தாலும்
களிகொண்டு பெருநெஞ்சம் வாழ்த்தும் - யான்
கதைகூறிக் கவியென்று வதைசெய்தபோதும்

சரிபாதி நிகர்தானும் இல்லை -நான்
சரிகம பதநி அறிந்தவன் இல்லை
வரைமீறி கவிசெய்யு மென்னை - அங்கு
வாஎன்று வழிதந்த இவர்கொண்ட மேன்மை

வளைந் தோடுநதி பாதை கொள்ளும் - எங்கும்
வளையாத நதிமோதித் துளியாகி வீழும்
களைநீங்கப் பயிரோடி ஓங்கும் - எம்
கலைகொண்ட உளம்தானும் மகிழ்வொன்றே காணும்

சினங்கொண்ட வெயிலோடி வீழும் - மீண்டும்
செந்தமிழ் பொன்மதி வானிலே தோன்றும்
மனங்களில் நாமெறிந்தாடும் - நல்ல
மலர்கொண்ட கணைநெஞ்சில் மணம் தந்துபோகும்

மகிழ்வாக மனமின்று துள்ளி - ஒரு
மாற்றான அனுபவம் கொள்ளுதேயள்ளி
புகழோடு வழிகாட்டல் சொல்லி - என்னைப்
புடம்போடச் செய்தவர்க் கொருகோடிநன்றி

காற்றோடு மலர்கொண்ட வாசம் - நற்
கனியோடு சுவை கொண்ட காதலும் நீரின்
ஊற்றோடு குளிர் கொண்ட நேசம் - இவை
உளதானவரை நானும்ஓய்வெனக் கொள்ளேன்

ஆர்ப்பரித் தெழுமாழி அலைகள் - ஆக
ஆயிரம் உணர்வுகள் அகம்மீது உண்டு
நீர்த்துளி வீழுதல் போலே - என்
நெஞ்சத்தின் எண்ணங்கள் நிச்சயம்வீழும்


பிரியாத வரமொன்று வேண்டும் (புதிது)



மலர்மீ திருந்து மணம்வேறு சென்று
பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீ திருந்து உயிரான சந்தம்
பிரியாத வரமொன்று வேண்டும்

அலையோடுதழுவி குளிரான தென்றல்
அசைந்தோடிப் பிரிகின்ற போதும்
கலைமீது கொண்ட எனதாசை என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

இருள் மேகங்கூடி இரவானதாகி
இடியோடு மழைவீழ்ந்த போதும்
அருளோடு தீபம் அணையாது என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

கடுநோயில் வீழ்ந்து கனவாகி வாழ்வும்
கடையென்று விதிசொல்லும் போதும்
தொடுவானும் மண்ணும் தெரிகின்றதாக
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

சுனைநீரும் என்றும் செழிவானபூவும்
சுழன்றோடும் மீனோடு வாழ்ந்தும்
வலைபோட மீனின் வாழ்வின்றிப் பூவாய்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

மலர்கின்ற காலை புதிதான வாழ்வை
மனதுள்ளே  நினைவென்று காணும்
வரமீந்து என்னை இதயங்கள் போற்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

தொலை வானிலுள்ள நிலவான தோர்நாள்
வரவானில் மறந்திட்ட போதும்
கலைவானில் கீதம் காற்றோடு  சேரப்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

தலைமீது மின்னல் இடிபோலத் துன்பம்
தனிவந்து  வீழ்கின்ற போதும்
உருவாகு மன்பை எதுவந்தும் தீண்டாப்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்

மலையான தொன்று வழிமீது நின்று
புகும்பாதை தடைசெய்யும் போதும்
உருவாகும் அன்பு அதைமீறி வெல்லும்
பிரியாதவரம் ஒன்று வேண்டும்

அவனா இவன்?



கள்ளும் உண்ணக் கண்கள் செம்மை காணும்வண்டாகி
உள்ளும் புறமும் உயிரின் பூக்கள் உதரம்தனைநோக்கி
வெள்ளம்போலே புரண்டு வீழ்ந்து விடியும் பொழுதினிலே
தெள்ளத்தெளியும் வண்டின் நிலையில் திரும்பிப் பார்க்கின்றான்

வெள்ளைமேகம் விடியற்காலை வீசும்தென்றலிடை
தள்ளி தூரக் காணும் பொய்கை தண்ணீர் அலைமோத
அள்ளிக் கல்லைப் போட்டே அழகு ஆகா எனஉள்ளம்
துள்ளித் திரிந்த திசையின் பக்கம் திரும்பிப் பார்க்கின்றான்

நள்ளிரவானால் கனவுக்காட்டில்  நடனமாடும் மனம்
தள்ளிச்சென்றே பூக்கள் என்றே தீயில் தள்ளியதோ
அள்ளிப் பருகும் மதுவும் அழகுப் பூவின்வடி வெல்லாம்
வெள்ளி பூவாய் கண்ணை மின்னும் விடியப் பொய்த்திடுமோ

(இன்று....)

அழகுப்பூக்கள் ஆடும்காற்றில் அதனை ரசிக்கின்றான்
இதழைத்தொட்டு ம்..ம் வேண்டாம் இயல்பைக் கைவிட்டான்
குழலில் சூடப் பூக்கள் கொய்யக் கொடுமை என்கின்றான்
தழலில் காய்ச்சும் பாலில் தோன்றும் ஆடை ரசிக்கின்றான்

அள்ளிப் பூசும் நெற்றிப் பட்டைஅழகாய் மேகங்கள்
புள்ளித் திலகம் போலும் காணப் புரவி, கதிரோட்டி
வெள்ளைத் தேரில் வெய்யோன் வந்தால் விடியுமதுபோலே
உள்ளத் திடையே ஒளியும் காண உதயம் பெறுகின்றான்.

கற்பனைக் கோட்டை

செந்தமிழ்க் கல்லெடுத் தற்புதமண்டபம்
சிந்தையில் கட்டிவைத்தேன் - அதில்
சுந்தர மென்னிழை சந்தங்கள் கொண்டெழில்
சித்திரம் கீறிவைத்தேன்
வந்திருந் தின்பமும் கொண்டிட மற்றவர்
வண்ணஒளி அமைத்தேன் - அதில்
எந்தன் மனதெழும் கற்பனைத் தீபங்கள்
எங்கும் எரிய வைத்தேன்

நந்தவனத்திற்சு கந்தமலர் கொய்து
நற்கவிநூல் இழைத்தேன் - நல்ல
சந்தணமும் நறும் பன்னீர் தெளித்தங்கு
சுந்தர வாசமிட்டேன்
செந்தூர வண்ணச்செ றிவெடுக்க அதில்
சிந்தனை தூபமிட்டேன் - ஒரு
தந்திரமுமல்ல தங்கமெனும் தமிழ்
தந்துஅழகு செய்தேன்

மந்தமுறமன தின்பம்பெற அவர்
மன்னவன் போல்மகிழ = இல்லை
மந்திரங்கள்,எது கையொடு மோனையும்
இட்டு அழகு செய்தேன்
சொந்த எழில்வண்ணக் கந்தருவ எழில்
செந்தமிழ் மாந்தருக்கு -அவர்
வந்திடும் வேளை நீராடிக் களித்திடப்
வட்டக் குளமமைத்தேன்

இந்தஎழில் இல்லம்கொஞ்சம் இருண்டதும்
இன்னொளி போய்விடலாம் - எனப்
பந்தங்களும் ஒளி தந்திடவே எங்கும்
பார்த்து எரியவிட்டேன்
அந்தியிலே  குளிர்பொய்கையில் நீந்திட
ஆடைஅணிகளுடன் - அகில்
சந்தணமும் உடன் செந்தணலும் வைத்தே
சற்று அமைதிகண்டேன்

வெந்திடும்போல் பசி உண்டுஎன்றால் அவர்
வேண்டிட முன்தரவே - மரப்
பொந்தினிலே நல்ல தேனடை கொண்டதில்
தேன்வடித்தும் எடுத்தேன்
பந்தியுடன் உண வுண்டு களித்திடப்
பாலொடு  பண்டங்களும் இன்னும்
முந்திரியும் கூட முக்கனிகள் சேர
முன்னே எடுத்து வைத்தேன்

இத்தனையும் செய்து எத்தனை மனங்கள்
எண்ணிடக்  காத்திருந்தேன் - நல்ல
புத்தம்புது வரவெண்ணி துயிலின்றி
பக்கமும் பார்த்து நின்றேன்
சத்தியமும் மன தைரியமும் கொண்டு
முற்றும் விழித்திருந்தேன் -ஆயின்
புத்தொளி வான்சுடர் தோன்றிடக்காலை
பொழுதென்று கண்டறிந்தேன்

செந்தமிழில் கரம் தந்து அன்புகொண்டு
சிந்தையி லொன்றுபட - நல்ல
பைந்தமிழே இனிதென்று படித்தொரு
பாமலர்ப் பூச்சொரிய
நந்தவனம் எனும் விந்தைதமிழினில்
நற்கவி மாலைகட்ட - எந்தன்
சிந்தையில் கட்டிய மண்டபவாசலை
முன்கதவின்றி வைத்தேன்

காத்திரு காற்றில் வருவேன்

தேனிற் குழைத்த தீங்கனியாய்
தேவி எந்தன் அருகிருந்தாய்
வானிற் குழைத்த ஓவியமாய்
வாழ்வை மறந்து ஏன்சென்றாய்

பச்சைப்பசுமைப் புல்வெளியும்
பனிநீர் தூங்கும் அதனிதழும்
இச்சையுடன் நீ பக்கமதில்
இருந்ததை எழுந்து கூறாதோ

கொத்துமலர்களின் தோட்டமென
கோடிநிலவுகள் கூட்டமென
நித்தம் அருகினில் நீ இருந்தாய்
நினைவுகள் மீண்டும் வாராதோ

வெற்றாய் விரியும் விண்ணில் நீ
விட்டுச் சென்றது எங்கே சொல்
உற்றே நோக்கும் உன்விழிகள்
உயரச் சென்றது உண்மையெனில்

பஞ்சு போன்றோர் வெண்மேகம்
பரந்தநீலப் பிரபஞ்சம்
விஞ்சும் எழில்வான் விரிதிசைகள்
எங்கும்நீயே நீயேதான்

சுட்டுத் தீய்க்கும் சூரியனும்
சுடர்போல் நினது விழிதன்னை
சுட்டி காட்டி எரிகிறதே
சோர்ந்தே தவிக்கு மென்மனதை

கட்டிக் காக்கமுடியவில்லை
காற்றும் தீண்டிச் செல்லுகையில்
பட்டுத் தழுவு முன்கர்ங்கள்
பனிநீர்விழவும் உன் தேகம்

தொட்டுக் காணு மின்பமென
தோன்றச் சிந்தை வாடுகிறேன்
வட்டச் சந்திரன் உன்வதனம்
வடிவம் காட்டி எனைக்கொல்லும்

சிட்டுக் குருவி ஜோடிகளும்
சேர்ந்தே கிளையில் கொஞ்சுவதும்
வெட்டிக் கொல்லும் வகையாக
வேதனை யாகிக் கொல்லுதம்மா

நின்னை பிரிந்து நானொருவன்
நித்திலம் வாழுதல் நேர்ந்திடுமோ
கண்ணை விழித்துக் காண்பவளே
காற்றில் வருவேன் காத்திரடி

சிரிப்பொலி

வானக் கதிர்சிரிக்கும் வண்ணமலர் புன்னகைக்கும்
வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைக் கதிர்சிரிக்கும் சிற்றோடை சிலுசிலுக்கும்
சேர்ந்துவளர்: செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானப் பறவைகளும் காற்றொலியில் சலசலக்கும்
காட்டினிலே வண்டுமலர் கண்டு சிலிர்க்கும
போனவனைக் காட்டினிலே போட்டெரித்து மீண்டவனும்
போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்

நீரோடும் நதி குதித்து நெளிந்து மெலச் சிரிசிரித்து
நளினமிடக் கரைஅலைகள் நர்த்தனமாடும்
பேரோடு பூமியிலே பேரரிய வீரமிட்டோன்
பெண்சுகத்தில் ஈனமிடப் பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே ஒருவனாகத் தனித்திருக்க
உண்மைவழி நின்றிடினும் சிரித்திடுங்  காலம்
யாரோடிச் சென்றிடினும் வாழ்வோடி முந்த அதைப்
போராட எண்ண விதி சிரித்திடும் நாளும்

தானோடிச் சுழல்வதுடன் தறிகெடவே ஓடும்புவி
தன்னுடைமை சொத்து என்று தத்துவம்பேசி
வீணாகத் தலைஎடுப்போன் விதிமுறைமை கண்டுநலம்
வாழென்று கூறிப் பேய்கள் போடும் எக்காளம்
தானமிடக் கண்டுலோபி தலைதிரும்பிச் சிரித்திடுவான்
தாவணிப்பெண் இருவர்கூடின் சிரித்திடக் கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவாழ்வின் விதியறிந்து நகைபுரிய
தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்