Wednesday, September 28, 2011

பிரிந்தவர் மீண்டும் சேரும்போது1

இந்தமனம் செந்தணலில் வெந்ததுமில்லை துயர்
தந்தஎதைக் கண்டுவிழி சிந்தவுமில்லை
வந்தஒரு துன்பம்பெரி தென்பதுமில்லை -அதைத்
தந்தவிதி வந்துநிலை கொண்டதுமில்லை
சிந்தையிலே அன்புஒளி தந்ததினாலே உடன்
விந்தைமனம் முந்திமகிழ் வெய்திடவாழ்வே
சந்தணமும் வாசமதைத் கொண்டதுபோலே ஒரு
நந்தவன மாய்மலர்ந்தேன் சிந்தையினாலே

மந்தமென வந்துமுகில் நின்றதனாலே இருள்
தந்தநிலை வந்திடுமோ என்பதனாலே
பொந்தில்எரி பந்தமதை வைத்ததினாலே தீ
வெந்ததென காடெரிந்து கொண்டதுமாமோ
கந்தகமும் செந்தணலைக் கண்டதுபோலே மனம்
முந்திஎழ வண்ணவெடி சிந்தியவாறே
சுந்தரமாய் சந்திரவான் கண்டதினாலே அது
தந்ததென்ன சந்தமிடும் செந்தமிழ் பாவே

எந்தநிலை வந்துந்துயர் எந்தனின்மேலே ஒரு
குந்தகமும்செய்வதில்லை இந்தொருநாளே
மந்திரமோ தந்திரமோ சென்றது தானே இனித்
தந்தனனே பாடிடுவோம் மங்கலந்தானே
கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் துன்பதை, வென்றிடும்தானே ஒரு
மந்திரமும் தந்தைசெவி சொன்னவனாமே அச்
செந்தமிழின் காவலனை வந்தனம்செய்வேன்

எந்தநினை வின்றிஇனி சொந்தமென்றாகி- சுக
பந்தமெனப் பாசமுடன் அன்புகொண்டாலே
உந்தி மனம் முந்திநிலை ஒன்றுபட்டாலே - துயர்
வந்தவழி சென்றுவிடும் நன்றதுதானே
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு
பந்து சுவர் பட்டதென சென்றிடுமாமே
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே

இரண்டு பாதைகள்!

அழகான பூஞ்சோலை கண்டேன் - அங்கு
அசைந்தாடும் மலர்கண்டு இதயம் மகிழ்ந்தேன்
குழல்ஊதும் இனிதான கீதம் - இளங்
குளிர்மாலை காற்றினில் தரும்கோடி இன்பம்

குளமொன்று அலையோடக் கண்டேன்- அதில்
குமுதமொன் றிதழ்விரித் தெழில்கொள்ளக் கண்டேன்
இளமையென் கனவுகள் தோன்றி- அங்கு
இதுபோல சுகமெங்கும் இல்லென்று சொல்ல

மனம்மீது எண்ணங்கள் ஓடும் - அது
மறுபாதி உலகமொன் றுண்டென்றுகூறும்
கனங் கொண்ட காடென்றும் தோன்றும் - அதில்
கத்தும் விலங்கோடு முட்பாதை காணும்

இதுவோஅன் றதுவோநாம் அறியோம் - வாழ்வை
எதுவோ அளித்திட பெற்றதாய்க் கொண்டோம்
மதுவோடு மலர்கொள்ள ஒருவர் - இன்னும்
அதுவின்றி முள்ளோடு வலிகொள்ள ஒருவர்

இதுவாழ்வில் இரண்டாக உண்டு - என்
இதயத்தில் சிந்தனை எழுந்தோட நின்றேன்
எதுவென்ற வாழ்வான போதும் - அலை
எதிரேறி நீந்திடில் கவனம் நீ கொள்ளு

வளைந்தோடும் நதிபாதை போகும் - என்றும்
வளையாத நதிமோதித் துளியாகிச் சிதையும்
களைநீங்கப் பயிரோடி வளரும் - எம்
கவலை களைந்தாலே உளம்உரம் காணும்

சினம்கொண்ட வெயிலோடி வீழும் - மீண்டும்
சிங்காரவானிலே வெண்மதி தோன்றும்
குணம் கொண்ட வாழ்வதும் வாரும் - அது
கொண்டிடும் மட்டும் பொறுமையும் வேண்டும்

மனம் மென்மை யென்றிடக் காணும் - அதில்
மற்றவர் செய்கைகள் முள்ளெனக் குத்தும்
இனம்கண்டு தொலைதூரம் நிற்கும் - ஓர்
எளிதான முறைகாண மகிழ்வேதான் மிஞ்சும்

முடிசூடா மன்னன் !

என்ன தவம் செய்தோம் சக்தி -ஆகா
இத்தனை அன்புடன் உள்ளம்படைத்தாய்
மின்னலின்றி ஒளிவெள்ளம் ஒரு
மேகமின்றிக் கொட்டும் தூறலும்கண்டேன்
பொன்னை நிகர்த்தன அல்ல - மனம்
பூவெனும் தன்மைக்கு ஈடென்றுமல்ல
பென்னம் பெரி ததைவிட - இந்தப்
பூமியி லேயிதை வெல்வ தொன்றல்ல

மன்னவன், பொன்முடியில்லை - இவர்
மாசறு வேந்தன், ஓர்மந்திரி யில்லை
பன்னரும் கொத்தளம் கூடம் - பெரும்
பண்டகசாலை படைகளுமில்லை
இன்னிசைக் கூத்தனர் இல்லை - மன்னர்
இச்சைகொள் அந்தபுரங்களும் இல்லை
பொன்குவை கொள் திறைசேரி - அதில்
பூட்டி வைக்கும் முத்துரத்தின மில்லை

கன்னியர் கூடிநின்றாடும் - குளிர்
காற்றெழும் சோலையும் நந்தவனங்கள்
தன்னகம் கொண்டவரில்லை - ஆயின்
தந்த கவிதைக்கு ஒர்குறைவில்லை
நன்னிளம் தென்றலும் வீசும் - அதில்
நாடிமனம் கொள்ள பொன்நிழல்போலும்,
இன்பமெழும் விளையாடும் - அதில்
உள்ளபொருள் மனமேற் றொளிகாணும்

பென்னம்பெரு வலு உள்ளோன் - கவி
பேசரும் நாவலர் தம்மிலோர் முன்னோன்
உண்மையென்னும் முடிசூடி - இவர்
உள்ளங்கள் ஆண்டிடும் உன்னத ஆட்சி
எண்ணம் அரண்மனை யாகும் - அதில்
எததனை சாளரம் அற்புதமாடம்
பண்ணொடு கீதம் இசைக்கும் -அதில்
பற்பல ராகமெழுந்து மயக்கும்

ஆளும் பலமன தேசம் - அதில்
ஆற்றல் தனும் கொட்டி கொள்குவையாகும்
நாளும் புகழுடன் வாழும் - அசைந்
தாடி நடந்திடும் வாழ்வென்னும் தேரும்
வாழும் பல்நூறெனும் ஆண்டு - அதில்
வண்ணமலரென இன்பங்கள் கொண்டு
நாளும் வரும் சுடர்வானில் - அதன்
நல்லொளிபோல் நலம்கொண்டிட வாழி!

நரகத்தில் உழலுவதோ?

தேரேறு என்கிறான் தேவன் - நானுந்
தெரியாத வன்போலத் திரும்பியே நின்றேன்
பூவாரி எறிகிறான் என்னைப் - பார்த்துப்
புன்னகை பூத்துமே கைகொண்டு காட்டி
போயேறு என்கிறான் வானில் - அங்கு
பூத்ததோர் வெள்ளியை புதிதாகக் காட்டி
ஏதேது என்றதைக் கேட்க - ஆகா
இனியுந்தன் வாழ்வங்கு இன்பமேயென்றான்

நீரூறு விழிகளைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
விளையாடி வேடிக்கை செய்தும் சிரித்தான்
நோயுறு தேகமும் நொந்து - இங்கு
நிற்கவும் முடியாது போனதே என்றால்
காயமே பொய்யாடா என்று - கை
காட்டியவ் வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை என்றால்
பாயிலே கிடஎன்று என்னைத் - தள்ளிப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தரணியில் வாழ்வோர்க்கு எதிரியோ, என்றேன்
பேயிலும் இழிவென்ற பிறவி இந்த
பிணமோ இக்குருதியில் பேராசை கொண்டாய்

நாளிலே மணம்கொண்டு வீசும் - அது
நாற்றமும் வீசிட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - உடல்
தீயிலே போட்டிட சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினைதானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதைநீ மேகம் வந்தால் - அங்கு
தீயாக மாறிநீ திகழலாம் என்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமா யறியேன்
கொல்வது என்றுதான் வந்தால் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தேதென்று கொண்டாய்
இல்லைவே றிதுதானே நரகம் - காண்
இதுவே உன்மழலையின் சொல்லான நகரம்

கொள்வது எல்லாமே துன்பம் - வான்
கொட்டிடும் மழையிலே கொடிபோலும் மின்னல்
உள்ளதோர் அளவேயுன் இன்பம் -அதில்
ஊதி யடிக்கின்ற புயல் போலும் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடேநீவாழும் -இந்த
உலகவாழ் வினிதென்று எண்ணுதல் ஏனோ

நில் இன்னும் சிறுகாலம் வாழ்வேன் - என்
நெஞ்சினி லாசையும் நிற்குது என்றேன்
நல்லதென் கூற்றினை கேளாய் -பின்
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
அல்லலும் துன்பமும் கொள்ள -உனக்
கத்தனைஆசையா, அற்புதம் மனிதா!
நல்லதோர் புவி செய்ய நீவிர் அதை
நரகமென் றாக்கிந லிந்தின்பங் கண்டீர்

வெல்ல எழு! துயர் சொல்ல எழு!

தொட்டு துணிந்தவர் வெட்டிக் களித்திடப்
பட்டுத் துடிப்பதுவோ - துளி
சொட்டக் குருதியும் பட்டநிலம்விட்டு
எட்டி நடந்திடவோ
வெட்ட வெளிதெரு வீசும் பிணங்களில்
தட்டுத் தடக்கிடவோ - இதை
விட்டுப்பெண்ணும் நெஞ்சில் குத்திக்கதறிட
எத்தனை நாளின்னுமோ

முத்தி விசர்பிடித் துச்சி மரத்தினில்
பித்தம் பிடித்தவரும் - நின்று
நித்தமும் பெண்வர பொத்தென வீழ்ந்தவர்
நெஞ்சைக் கிழிப்பதுவும்
கத்திக் குரலிட்டுக் காடுறை பேயெனச்
சித்த மிழப்பதுவும் - இவை
உத்தம புத்தனும் போதி மரத்திடை
ஓதிய போதனையோ

குட்டிப் புழுதன்னும் தொட்டவர் கையினில்
கொட்டும் மயிர்கள் குத்தும் - அவை
பட்டுக் கடித்திட ரத்தச் சிவப்பிடும்
மொத்தம்வலி எடுக்கும்
கொட்டி விஷமதைப் புற்றுக் கறையானும்
கொள்ளி எறும்பதுவும் - அதை
முட்டி விட்டால்முழு மூச்சுடனே உயிர்
விட்டும் எதிர்த்து நிற்கும்

எட்டு அடிவளர் எம்மவர் இன்றுமே
தொட்டுக் கெடுத்தவனை - புது
பட்டுவிரிப்புடன் பஞ்சணைதூங்கிட
பாதம் பிடித்திருப்பர்
கட்டிய கைகளும் காலும்பிணைத்திட
சுட்டுக் கொல்லுமவனை - உள்ள
சட்டம் நெருங்கிட விட்டுவிடாதவர்
ஒட்டி உதவிசெய்வர்

சட்டம் குருடதன் கண்ணில் கருந்துணி
கட்டிவிட்ட துலகு - கரம்
தொட்டுமே அந்தகர் சொல்லென யானையை
விட்டது போலிருக்கு
முற்று மிருட்டறை மூடிக் கருமைக்குள்
கட்டியெமை யிருத்தி - தனி
தொட்டிவர் நீதியைச் சொல்லென கேட்டிட
சுத்தம் எது இருக்கு?

புற்றில் கரம்விடு, பூக்கள் பறித்திடப்
பெற்றிடு இன்பமென்றார் - இல்லை
சுற்றி உடல்பற்றிக் கொத்தும் அரவமென்
றெத்தனை நாளுரைத்தோம்
சுற்றிக் கழுத்தினில் ஒற்றைக் கயிறிட்டுச்
தூக்கிடும்போதினிலே - இன்று
முற்றும் பிழையிது மூச்சுதிணறுது
விட்டுவிடு என்கிறார்

செத்தவர் மீண்டும் சிதை பிரித்தே உயிர்
பெற்ரிட லேதுமுண்டோ - ஒரு
கொத்திப் பிரித்துடல் கொள்ளியிட்டபின்பு
கூடென ஏதுமுண்டோ
சத்தியத்தின் கண்கள் நித்திரை அல்ல, ஓர்
நித்திரபோல் நடித்தால்
எத்தனை நேரம் எழுப்பினும் தூக்கத்தை
விட்டுஎழுந்திடுமோ

தட்டி முதுகினில் வந்து சுதந்திரம்
தந்திடும் பூமியில்லை - இவன்
சட்டமதித் தெங்கள் தாயின் நிலம்தன்னை
விட்டேகப் போவதில்லை
முற்றும் உலகிது மெல்லத் திரும்பிட
இத்தனை செய்தயடா - அட
அற்புதம் தம்பிநீ அத்தனைவீறுடன்
ஆர்ப்பரித் தின்னும் எழு

பொங்கு மனத்திடை பொங்கும் கடலென
வெஞ்சினம் கொண்டுஎழு -அன்று
பொங்கி யெழுந்த எம்பெண்களின் சாபங்கள்
போய்ப் பகை வெல்ல எழு
பொங்கி வழிந்த குருதியைப்போல் நீயும்
பொங்கியெழு! புவியோர்
பங்கு எமதீழ மண்ணில் உரிமையை
பங்கிடும் மட்டும் எழு!

Sunday, September 11, 2011

என் வாழ்வு ஏனோ ?

[ என்.. என்று தொடக்கமிட்டு ஏதாவது ஒரு தலைப்பில் (என் வாழ்வு, என் நண்பன், என்ன என்ன இப்படி எதுவாகவும் இருக்கலாம் என்று) நடந்த கவியரங்கத்திற்கு எழுதியது

என் வாழவு ஏனோ

என்னென்று சொல்லாது ஏனோஇவ்வுலகிலே
என்அன்னை என்னயீந்தாள்
என்செய்வ தறியாது கண்கள்நீர் சொரியவே
என்வாழ்வை யிங்குகண்டேன்
என்நன்று என்அன்று என்னொன்றும் தெரியாமல்
என்னவோ வாழ்ந்திருந்தேன்
என்னெண்ணி என்னையும் இறைவன் படைத்தனன்
என்பதும் ஏதுமறியேன்

என்னவன் என்னிவன் என்நண்பன் அல்லவன்
எதையுமே அறிய அல்லேன்
என்மனம் வெண்பளிங் கென்றிடும் அண்மையில்
உள்ளதன் வண்ணங் கொண்டேன்
என்னவள் என்றொரு சின்னவள் வந்திட
என்வாழ்வு பங்கு கொண்டேன்
என்நலம் தன்னலம் இருவரும் கொண்டிட
எண்ணிலே மூவர் கண்டேன்

என்னது என்னது இன்பங்கள் கோடியாம்
என்றுளம் ஆவல் கொண்டேன்
என்மனம் என்னது எண்ணுவ தாற்றியே
என்புடல் கூசி நின்றேன்
என்னவோ ஆகியும் என்னமோ கூறியும்
என்மதி கெட்டலைந்தேன்
என்மன வானிலே என்மதி தேய்ந்திட
ஏனோ இருளில் நின்றேன்

என்னதான் வாழ்ந்தனன் இத்தனைகாலமும்
இன்பமாய் வாழ்ந்திருந்தும்
என்னதாய்ச் செய்தனன் என்னொரு பிள்ளை! ஆ..
இவனென்ற சொல்லுங் கேட்டேன்
என்விதி இங்கிவன் என்னுடன் சேர்ந்தனன்
என்பதும் கண்டிருந்தேன்
என்னருள்தேவிநீ என்னுடை வாழ்வெனும்
இதைநீயும் ஏன் படைத்தாய்?

நீயோடித் தீரம் கொள்!

தென்றல் அலையுது திங்களலையுது
தீபமலையுதடி
தீந்தமிழ் பேசிடும் மாந்தர் அலைவது
என்னை முறைமையடி
கன்று அலையுது காணும் குருவிகள்
காகம் அலையுதடி
கன்னித் தமிழ்மற காவிய வீரரைக்
காலம் அலைப்பதோடி

கொன்று குவித்திடக் கோழைகளாய் மனம்
வெந்து அலைவதின்றி
குற்றமிழைத்தவர் கொன்றவர் தம்மைநீ
விட்டுக் கலைத்திடடி
நின்றுயர்ஆல மரமென்ப தாய்த்தமிழ்
கொண்ட உறுதியெல்லாம்
இன்றில்லை யென்றது கண்டுமே உள்ளமும்
பொங்கி அலைகொள்ளடி

எத்தனை துன்பங்கள் இன்று, எமதிடை
நிற்கின்ற பேய்களெல்லாம்
புத்தமதக் கொள்கை போட்டுப் புடமிட்ட
சத்திய ரூபரடி
ஒத்து மகிழ்வுடன் ஒன்றாக வாழெனச்
சத்தமிட்ட உலகை
அத்தனை பேரையும் முன்னே அழைத்திது
எப்படிக் கேட்டிடடி

பேயாகஓடிப் பிணங்கொள்ள வந்தவர்
பேயரின் தம்பிகளை
நீயாக ஓட்டிக் கலைத்திடு  நெஞ்சிலே
நேர்மைத் துடிப்பெடடி
போயோடித் துன்பமும் பெண்நலம் காத்திடப்
பின்னிற்ற லாகாதடி
நீயோடித் துள்ளி எழுந்து நட இது
நின்னுடை தேசமடி

தாயோடியுள்ளம் தவித்திடக் காண்அதைத்
தானும்நீ காத்துவிடு
பூவோடு பொன்னாய் பிறந்தவர் பிள்ளைகள்
பூமியில் வாழ்வுகொடு
கோவோட மன்னனின் கூடாரம்விட்டுமே
கூறாமல் ஓடவிடு
நீயோடிசெய்திடு நெஞ்சிற்தீரமெடு
எம்தமிழ் தேசம்வெல்லு!

-கிரிகாசன்

Thursday, September 8, 2011

போரும் வாழ்வும்!


கத்தி எடுத்தவன் வெட்டவந்தால் - நாமும்
கண்கள்மூடித் தவம் செய்வதுவோ
வித்தை யேதுமுண்டோ வெட்டுபவன்- தன்னை
வேடிக்கை செய்துவிரட்ட லுண்டோ
சொத்துசுகம் யாவும் விட்டிடலாம் - ஆயின்
சொந்த உயிரையும் விட்டிடவோ
செத்துமடிவது இன்பமென்று - அவன்
தெய்வமென்று கையும் கும்பிடவோ

சத்தியம் தர்மமும் கொண்டவர்கள் - குரு
ஷேத்திரம் போர்க்கள பாண்டவ்ர்கள்
நித்திலம் எங்கிலும் பாரதப்போர் - கதை
நீதியென்று ஏற்றுக் கொண்டதன்றோ
கத்தியே நீதியும் கேட்டவளாம் - அந்தக்
காரிகை திரௌபதி ஆடையினை
ஒத்தவ கையினில் நீக்கிவிட - எஙகள்
ஊரிலெத் தனை துச் சாதனன்கள்

சித்தம் தவறிய ரத்தவெறியர் - தாம்
சத்தியம் காந்தீயம் பார்ப்பதுண்டோ
கத்தும் விலங்குக்கு கற்பூரவாசனை
காட்டிவைத்தால் உதை விட்டிடுமோ
அத்தனைபேரும் அருச்சுனாய் எண்ணி
அம்பினை கீழேயும் வைப்பதில்லை
புத்தரும் யுத்தம்பின் ஞானம்கண்டார் இன்று
பேய்களன்றோ எம்மைச் சுற்றி நின்றார்

நாடுமில்லை ஒரு வீடுமில்லை
ஒரு நாலடி ஐந்தடி மண்ணுமில்லை
காடுதானே உங்கள் சொந்தம் என்றார் - அந்தக்
கௌரவர்கள் ஆகா எத்தனைமேல்
வீடுமில்லை அந்தக்காடுமில்லை பெரு
வான்வெளியில் தனி ஆவியென
ஒடிப்பற விளையாடுஎன்று எமை
ஓங்கிவெட்டி இவர் கொல்லுகிறார்

வைத்தியம் செய்யநோய் முற்றிவிட்டால் அதை
வெட்டிப்பிரிப்பது குற்றமில்லை
சத்திரசிகிச்சை செய்வதுதான் உயிர்
தப்புமென்றால் அது பாவமில்லை
பெத்தவள் உயிரை காப்பதுவா இல்லை
பிள்ளை உயிர்தனை காப்பதுவா
வைத்தியர் கூட தருணமதில் ஒரு
வன்மை மனம்கொள்வ தாகிடுவார்

கொத்தவரும் பாம்பைக் கொல்லுவது பாவம்
கொண்ட தடியினை போடுஎன்றார்
சுத்தமாகக் கையில் ஏதுமில்லை இன்று
கொல்பவர் கூத்தாடிக் கொல்லுகிறார்
சத்தியம் பேசிய நாட்டிலெல்லாம் இன்று
சின்னத்திரை படம் ஓடுகிறார்
கொத்திய வெட்டிய கோலமெல்லாம் படம்
கொண்டு வெள்ளித்திரை காட்டுகிறரர்

இப்போதேவை வெறும் காட்சியல்ல இந்த
ஏழைகளுக்கெனத் தீர்வுஒன்று
தப்போ சரிதானோ விட்டுவிடு இன்று
தர்மம் அதை துயில் விட்டெழுப்பு
எப்போ நடுவினில் வந்துநின்று எமை
வெட்டுவர் கையில் விலங்கையிட
தொப்பெனவோர் திரைநாயகனாய் ஒரு
தேசம் துணிந்து குதித்திடுமோ

Tuesday, September 6, 2011

மூவர் உயிர்காக்க தீயில் தீய்ந்தவள்!

தீதாகிப் புன்மைகொண்ட பூமியென்றே நீயும்
தீயாகிப்போக மனம் கொண்டதென்ன
நீயாகிப்போக என்ன நேர்ந்ததம்மா- உன்
நினைவெங்கும் தீஎழுந்த காரணமா
தூதாகித் தேவரிடம் சென்றனையோ -எமன்
தோன்றாது வழிநிறுத்த தொழுதனையோ
வாதாடி வெல்லவழி இல்லையென - மூவர்
வாழவென நீஉயிரை தந்ததென்ன ?

ஆளுபவன் நீதிகொடும் ஆட்சியென்று - அதை
அழித்தவளாம் கண்ணகிக்கு தங்கையம்மா
நீளுலகில் நீதிகேட்க நீயிருந்தால் - எம்
நெஞ்சினிலே இன்னுமுரம் காணுமம்மா
வாழ்வழிந்து போகஎன்ன வைத்துவோ உன்
வயதினிலே வானழைத்து கொண்டதுவோ
பாழுமுயிர் போனபின்பு வருவதில்லை - இந்தப்
பாரினிலே வீழ்ந்த உடல் எழுவதில்லை

தேவை எங்கள் விடுதலையைக் கேட்பதற்கு ஒன்று
சேருமிளம் சந்ததியின் வீரஒலி
சாவைவிடுத் தொன்றுபட்டுச் சாதிப்பதே உனைச்
சார்ந்திருக்கும் கடமையென்று கொள்மகளே
கூவியெழ நீதிகேட்க குரல் கொடுங்கள் -விட்டு
கூடியழ வைப்பதெல்லாம் கைவிடுங்கள்
வீரமுடன் நீதுடித்துப் பொங்கியெழு அந்த
வேகுமுடல் நீசர்களை வெல்லவம்மா

முப்புரங்கள் தீயிலிட்டான் முக்கண்ணவன்- அனல்
மூளத்தீயை தீவில் இட்டான் அனுமன், ஒரு
கைப்பிடித்த சிலம்புடனே கண்ணகியோ ஆளும்
காவலனின் குற்றம் கண்டு ஊரெரித்தாள்
முப்படைகள் கண்டு தமிழ்ஈழ மண்ணை- அன்று
மேதினியில் சேர்ந்தரசு மூட்டியதீ
இப்பொழுதும் எரியுதம்மா ஈழமண்ணில் அது
ஏன் எரித்துவிட்டதுவோ உன்னைவீணில்!

Monday, September 5, 2011

நாமே கொல்வதா?

நீ நினைத்து தீயுமிட்ட தேன்மகளே நெஞ்சிலென்ன
தீசெழித்து ஆனதென்ன கோலம்
பூஎடுத்துப் போடஎம்மை நீ விதித்துப் போனதென்ன
பூமியிது செய்துவிட்ட பாவம்
மூவருக்கும் போட்டவிதி மாறுமென்று காணமுன்பு
நீமுடிச்சு போட்டதென்ன முந்தி
சாவெடுக்கச் சொன்னவர்யார் சத்தியமோ நித்திலமோ
சற்றும்காக்கவில்லை அந்தச்செந்தீ

பேய்கனக்க வாழுமெங்கள் பூமியைப்பார் வீதியெங்கும்
நோய்பிடித்த ராஜபுத்த சோரம்
தாயிருக்கப் பெண்ணை வைத்து தாகமிட்ட காமுகர்க்கு
தன்னுடலைப் பலிகொடுக்கும் கோரம்
சேய்பிரித்துக் கொல்லுவதும் சின்னவர்கள் நீக்குவதும்
சொல்லி இனம் சுத்தமாக்குங் காலை
தேய்நிலவாய் வாடுகிறோம் தேகங்காக்க ஓடுகிறோம்
தேவதையே நீஎரித்த தேனோ?

மாவினிலே பிஞ்சிருக்க மனது கொள்ளு மோபறிக்க
மாந்தரிலும் பிஞ்சு என்பர் நாளை
மேவியுயர் வாழ்வெடுத்து மேதினியில் ஆற்றல்கொள்வர்
மேனியொன்று தேவைஎன்ப தாலே
தீயெடுத்துத் தேகமிடத் தேவையில்லை உன்நினைவில்
தீயர்தமை நோக்கி எழு, காலை
நீமிதித்த தீயெனவே நெஞ்சிற்தீமை கண்டுதுடி
நீபழுக்கும் மட்டும்காணும் வாழ்வை

கோவலனைக் கொன்றவனே குற்றமென்று தானழிந்தான்
கேள்விகேட்ட கண்ணகியு மல்ல
காவலனும் வாலினிலே தீயைவைக்க நாடெரித்தான்
தானெரிக்க வில்லைராம தூதன்
சாவதெனில் தீமைதுயர் சார்ந்திருக்கும் துன்பங்களே
சற்றும்மறந் துன்னைஅழிக் காதே
பாவமதைத் தேடியழி பாசஉணர் வோடுகழி
பலமெடுத்து வெல்லுஉந்தன் வாழ்வை

செய்த குற்றமென்ன?



திங்கள் வரும் வானமதில் செய்துவிட்ட குற்றமென்ன
தேடிமுகில் மூடுகின்றதே!
மங்குஒளி தீபமது மனமெடுத்த குற்றமென்ன
மாலையிளந் தென்றல் ஊதுதே
பொங்குநதி செய்ததொரு குற்றமென்ன போகுமிடம்
பாதையெங்கும் கல்லும்முள்ளுமே
அங்கும்வளைந் தேநெளிந்து அதுநடக்கப் பாறையொன்று
அதைவிழுத்தி மகிழுகின்றதே!

செங்கமலம் வாழ்வினிலே செய்தவொருகுற்றமென்ன
சீண்டும் அலை ஆடுஎன்குதே
அங்கு படர் தாமரையின் அலைமிதக்கும் இலைவெறுத்து
ஏறியநீர் விட்டு ஓடுதே
தங்கம் எழில்தந்தபோதும் தன்னகத்தே கொண்டதென்ன
தீயழிக்க தேகம் வெந்ததே
எங்கணும்நற் சோலைதன்னில் உள்ளபூக்கள் செய்ததென்ன
ஓர்தினத்தில் காய்ந்து வீழுதே

பெண்மையெனும் மென்மைசெய்த குற்றமென்ன பூமியிலே
மேனியது போதையாகவே
கண்ணியமே அற்றவர்கள் கண்டுஅதன் தூய்மைகொல்லக்
காப்பதற்கு யாருமில்லையே
சின்னவர்கள் வாழும்தமிழ் ஈழமண்ணில் செய்ததென்ன
யாருமற்ற நாதியாகவே
மென்னுடலை ஆயிரமாய் மேதினியில் யாரும்விழி
கொள்ளமுதல் பூமிதின்குதே?

அள்ளி உடல் கொள்ளிவைத்து ஆவெனவே அலறியவர்
ஆனந்தமாய் துள்ளி ஆடுறார்
நள்ளிரவுப் பேயென்றாகி நங்கையர்கள் பெண்ணவர்முன்
நாயிலும்கீழ் இழிவு செய்கிறார்
எள்ளி நகையாடி இவர் என்னசெய்தும் பூமிகண்டு
என்னசெய்தார் தூங்குகிறார் ஏன்?
வள்ளிமணவாளனே சொல்! வாழ்வில்தமிழ் ஈழமக்கள்
செய்தபெருங் குற்றமென்ன சொல்!

Thursday, September 1, 2011

உணர்வுகள்

நீரோடும் நிலவோடும் நின்றுவெண் முகிலோடும்
நெஞ்சத்தில் எண்ணமோடும்
தேரோடும் தென்றலும் திசையெங்கும் பறந்தோடும்
தேடியே கண்கள் ஓடும்
பாரோடும் பரந்தஇப் பூமியின் இடமெங்கும்
பலரோடிச் சென்றுவாழும்
வேரோடும் உறவுகள் விளையாடும் விதியதும்
வேடிக்கையாகும் வாழ்வும்

ஏரோடும் வயல்கூடி எதிரோடும் காற்றோடு
எழுகின்ற இன்பம் யாவும்
பேரோடு வாழ்ந்திடும் பெருச்செல்வ வாழ்வினில்
பிறையாகத் தேய்ந்து போகும்
சேறோடும் மண்ணோடும் உழுதோடி பின்னாலே
சேர்ந்துண வுண்டுவாழும்
நோயோடிப் போகின்ற நிம்மதி வாழ்வினை
நினைந்தேங்கும் நெஞ்சே நாளும்

யாரோடிக் கேட்டாலும் விதியோடிச் செய்கின்ற
விளையாட்டு வேறுஆகும்
நீர்க்கூடி எழுகின்ற அலையாக ஊருக்குள்
நின்றதை அள்ளியோடும்
வேரோடு புயலுக்கு விழுகின்ற மரமாக
வீழ்த்தியே உறவுகொல்லும்
பேயாடி நடமாடிச் சிதைக்கின்ற பொருளாக
பூவுடல் கொன்று பார்க்கும்

நானோடி நடக்கின்ற நல்லதோர் பாதையில்
நாலுபேர் தூக்கிஒடும்
நாளோடி வரும்வரை நானாடி நடக்கின்ற
நாளது இன்பமாகும்
பாவோடும் பாஎண்ணும் மனதோடும் வாழ்வது
பலமான உணர்வு கொள்ளும்
பாலொடு பனியோடு பார்வையை கொள்வது
பாவி இவன் உள்ளமாகும்

மேலோடும் மதியோட முகிலோடி மறைத்திடக்
காற்றோடி ஒளியை மீட்கும்
சேலோடும் நீர்ச்சுனை சேற்றோடு தாமரை
திகழ்ந்தாலும் தூய்மைகாணும்
வேலோடு விளையாடும் முருகனின் தமிழோடு
விளையாடி நாளும்போகும்
காலோட முடியாது காடோடும் உடல்காணும்
காலமே உண்மை சொல்லும்