Thursday, December 16, 2010

அழுவதும் ஏனம்மா?

கண்ணே கனியமுதே கனிமலரே வாடுவதேன்
வண்ணமுகம் சோர்ந்து வாயழுது கதறுவதேன்
பொன்னே நீயழுதால் பூக்கள்மனம் நோகுமடி
தண்ணீர் அலையடித்து தாங்காமல் ஆடுமடி

வாடுவதென் மலரென்றால் வையகமேஇருளாதோ
ஓடிஎரி வெயிலோனும் ஓங்குமலைஒளியானோ
பாடுவது குயிலென்றால் பைந்தமிழும் உருகாதோ
பனியுருகிக் குளிரெடுத்து படர்காற்றும் வீசாதோ

தேடுவது எதுவென்று திங்கள் வந்து கூறாதோ
தென்திசையின் காற்றெழுந்து சேதிசொல்லி ஓடாதோ
நாடுவது என்னவென்று நல்வார்த்தை கூறாயோ
நல்லதொரு வழிபிறந்து நானிலமும் வாழ்த்தாதோ

ஏடுவரும் கவிதனிலே இழைவதென்ன? எழுமுகிலே
ஓடுதொடு வெண்ணிலவை ஊறுங் கண்ணீர் துடைக்க
காடுவழிப் பாதையிலே காணும்முள் குத்தியதோ
பேடன்னம் சோர்ந்துநடை பிழைப்பதென்ன பேசாயோ

தேவரருள் கூடட்டும் திங்கள்மனம் பூக்கட்டும்
பாவமங்கு போகட்டும் பனித்தவிழி சிரிக்கட்டும்
பூமலர்ந்து பொங்கட்டும் புதியநதி துள்ளட்டும்
தாவுமயில் தோகைதனை தான்விரித்து ஆடட்டும்

இருள்மறைந்து ஒளிரட்டும் இன்பகீதம் இசைக்கட்டும்
கருமைதீயி லெரியட்டும் கனவுகளும் பலிக்கட்டும்
ஒருமை ஓங்கி உள்ளமதில் உற்ற அன்பு பெருகட்டும்
பரிதிபோல் ஒளிபிறந்து பாசவாழ்வு ஜொலிகட்டும்

Wednesday, December 15, 2010

அன்னையின் கண்ணீர்

வீசியகாற்று மொருகணம்நின்றுபின்
   வீசிவிரைந்து சென்றான்
வாசமெழும்மலர் தானும்மலர்ந்திடும்
   வண்ணம் மறந்துநின்றாள்
மேவியேவானில் எழுந்தவெய்யோன்
    கணம்வீசு மொளிமறந்தான்
தாவும்கடல்அலை கூடமறந்தொரு
     நாழிஉறைந் திருந்தாள்

பாடும்பறவைகள் கீதம்நிறுத்திஓர்
     சோகம்தன்னில் இழைய
வாடும்முளம்கொண்டு கோலமயில்தன்
     தோகைசுருட்டி வைக்க
ஏனென்றுஎண்ணி இங்குமங்கும்பார்க்க
     பேரிடிமின்ன லுடன்
வானிடிந்துதலை வீழ்ந்ததெனபெரும்
    கோலமெதிரில் கண்டேன்

பூசும்சந்தணமென் மேனியிலேவெறும்
     புழுதிபோர்த் திருக்க
பாசமொளிர்விழி மீதினிலேபெரும்
     நீர்வழிந்தோடி நிற்க
பேசும்செந்தமிழ்சொல் வாயினிலேஐயோ
      போதுமே துன்பமென
கூவித்துடித்தெங்கள் ஈழஅன்னைபடு
     வேதனையில் கிடந்தாள்

பாவிகள்செய்த கோலமதைகண்ணால் பார்க்க முடியவில்லை
தூய் தமிழ்மற வீரர்கள் பெற்றவள்மேனி துவண்டிருக்க
தாயவள் தங்க சிலம்பிடும் கால்களில் சங்கிலி கோர்த்து வைத்தே
பூவெனும் கைகள் பிணைத்தே விலங்கிட்டுப் பின்னிகிடந்தன காண்

பேயில் இழிந்த பிறவிகள் செய்ததோர் கோரம்கொடுமையினால்
வாழும்சுதந்திரம் தானிழந்து தலைவைக்கும் முடி இழந்து
நாவிற் துடித்துப் பதறுங் குரலெடுத்தாஆ..என் திருமகனே
பாவிகள்செய்யும் கொடுமைகள் எல்லையை மீறிய தென்றழுதாள்

நீதிஇழந்தோம் நினைவிழந்தோம் கொண்டநிம்மதி தானிழந்தோம்
பாதிமனிதஉயிர் இழந்தோம்எல்லை காத்தபடைஇழந்தோம்
தேசமிழந்தோம் திறையிழந்தோம் திக்குநாலு மிழந்தவராய்
வாழும்உரிமையும் வார்த்தையுமின்றி வஞ்சனையில் அழிந்தோம்

ஓவென்றழுதிட்டஈழ அன்னைமீண்டும் ஓர்பெருமூச்சு விட்டு
மாபெரும்வீர மைந்தர்கள்போயினர் மண்ணுள் விதையெனவே
மாவுலகும் ஒரு சேர எழுந்தொரு சாவினை புன்னகைத்து
தேனில்விஷமிட்டு தந்தார்சுதந்திர வாழ்வென்னும் எம்பசிக்கு

ஆவனசெய்தென்னை மீட்டிடாஎன்று அன்னைதுடித்துநின்றாள்
வேதனையில் மனமுள்ளேஅழுதிடத் தாயே தமிழன்னையே
மோசமிழைத்தவர் நான்கு திசையும் நிறைந்தனர் நம்மீழமோ
தேசமெங்கும் மொழிமாறித் திரிந்து சிங்ஈழம் என்றானதம்மா

பேர் பொறித்த தமிழ்வீதிப் பலகைகள் மாறிமொழி சொல்லுதே
தேரிருக்கும் திருக்கோவிலுக்குள் புத்தசாமி குடி போனதே
ஆலமரத்தடி ஆனைமுகத்தானும் அர்த்த நடு ராத்திரி
போதிமரத்தை பிடுங்கிநட்டுவைத்து போனஇடம் அறியோம்

தத்திநடக்கும் குழந்தை மணல் வீடு கட்டக் குழிபறித்தால்
புத்த சின்னமொன்று உள்ளேயிருக்குது தொன்மைபழமை என்றார்
கட்டியொரு கோவில் நட்டுமரம் அரசத்தனையும் புரிந்தே
அத்தைபாட்டி பூட்டன் சொத்துஎமதென்று பச்சைப்பொய் கூறுகிறார்

மெல்லத்தமிழ் இனி சாகுமென்றார் ஈழ மண்ணில்நடக்கிறதே
வெல்லத்திறனை யிழந்துவிட்டோம் எனவேதனையில் அழுதேன்
இல்லை மறந்திடு என்றும் அறம் வெல்லும் நீதி தழைத்து நிற்கும்
கல்லென உள்ளத்துறுதிகொள்ளு செய்யும்காரிய மாற்றிவிடு

நல்லன என்றும் நடந்துவரும் நல்லஅல்லனபாய்ந்துவரும்
செல்வதும்தீது சீறி மறைந்திட நீதிநிலைத்து நிற்கும்
கொல்லவல்ல தமிழ், கூட்டி உலகத்தின்முன்னே எனை நிறுத்து
நல்லவர் காதில் நடந்ததைக் கூறுநம் நாடு பிழைத்துவிடும்.

எல்லாம் சிவன்செயல் என்றுநினைத்து உன்கண்களயர்ந்து நின்றால்
வல்லவிதி நம்மை ஏய்த்துவிடும் இன்றே துள்ளி எழுந்திரடா
சொல்லு உலகமுன் நீதி எங்கேயென்று கைகள் உயர்த்து கத்து
எல்லைகடந்திடுமுன்னே எனதுயிர் வெல்ல வழிசெய் என்றாள்.

Tuesday, December 14, 2010

ஈழ அன்னை சீற்றம் கொண்டாள் (இது கனவா?)

என்னதொரு சத்தம் கேட்டுக் கண்விழிக்கின்றேன்
இதயமது படபடக்க துயில் கலைகின்றேன்
பின்னிலவு சாளரத்தின் உள் நுழைந்ததன்
பொன்னொளியை என்னருகே பிய்த்து வைத்ததும்
வெண்ணொளியில் பெண்ணொருத்தி வெளியினிலாட
வேல்விழியாள் அழகுரூப சுந்தரிதன்னை
தண்ணொளியில் துள்ளியாடும் தோற்றமும்கண்டே
தங்கமகள் யாரறியத் தாவி எழுந்தேன்

எட்டிநடைபோட்டுமுற்றம் ஏகியபோது
இளையவளோ கண்டுமௌனம் இழையவிருந்தாள்
தட்டியொரு தாளமிட்டு தென்றல் இசைக்க
தளிர்மலராள் கொடியசையும் தன்மையிலாடும்
வட்டமெனும் தோகைவிரித்தாடு மயிலாய்
வான்நிலவில் மின்னும் எழில் தன்னில் மறந்தேன்
கிட்டவந்து ஆடுமவள் கோலம்காணவே
கேள்வியின்றி யாரிவளோ காண விழைந்தேன்

சுற்றி யெங்கும் பூமலர்கள் சுந்தரவாசம்
சுழலும்விரி தென்றல்கொண்டு சென்றிடும் வேகம்
சற்று ஒளி சிதறக் கீழை சரிவெடு வானில்
சார்ந்துறைந்த நீள்படர்வெண் முகிலதின்கோலம்
வெற்று நீலக்கருமையூடு விரைகின்ற பறவை
விடியல்வேளை கண்டுமகிழ் வானது பொங்க
பொற்சிலையாள் பெண்ணிவளோ பொங்கிஆடிடும்
புதுமையேது என்றவளைப் பேசவிழைந்தேன்

தேன் மொழியாம் தேகமிசை தேர்ந்தவள் காணும்
தேர் அசையும் இடையில்வளை யாபதிபூண்டும்
நான்அகங்கள் நூறும் இன்னும்நாற்புற நூறும்
நல்மணிமே கலையுடனே நங்கையில்காணும்
பொன்னணிகள் கண்டிவளோ பூந்தமிழ்தேகம்
பொலிந்தவளாம் என்னபெயர் என்று வியந்தேன்
பின்னும் சடை கன்னங்கரு கூந்தல் விரித்த
பெண்ணவளோ அன்னைதமிழ் ஈழம் நானென்றாள்

வற்றிவாடிக் கண்கள் நீரும் வழிந்ததுபோலும்
வெண்ணிலாவை ஒத்தமுகம் இருண்டதுபோலும்
சுற்றி நின்ற தேகம் நோகச் செய்ததுபோலும்
சுந்தரியோ வாடி ஏதோ சொல்ல விழைந்தாள்
கற்றபாடம் போதும்அன்பு கண்ணிய மெல்லாம்
கடையிலென்னவிலை என்றோதும் இவ்புவிமீதில்
பெற்றபிள்ளை தாயை அப்பன் விட்டொழிந்தோமே
பேசரிய பொற்குலத்தைப் பாழடித்தோமே

நேர்மை பார்த்த நெஞ்சைக்கீறி நஞ்சுபோடவும்
நினைவிழந்து துடிதுடிக்க படமெடுக்கவும்
கூர்மை கொண்டகத்தியாலே குத்திஆடியும்
கொல்பவரைப் பாவமென்று கொல்ல அஞ்சினோம்
பார்வைதன்னில் குருடரென்று பாவிஎண்ணியே
பாலகரைத் தானும்விட்டு வைக்கவில்லையே
வார்த்தை பொங்க துடிதுடித்து வஞ்சியானவள்
வந்தகீத போர்ப்பறைக்குத் துள்ளிஆடினாள்


பகுதி 2

கொட்டிய மேளமும் சத்தமெழுந்திட
கோதைசுழன் றெழவே - ஒரு
வட்டம டித்துயிர் பட்டகொடுந்துயர்
வாடித் துடித்தலற...
தட்டிந டஞ்செயும் பொற்திரு பாதங்கள்
தாங்கி அனலெரிய - சினம்
சொட்டிச் சிவப்பென ரத்தங் கசிந்திட
சுற்றிநடம் பயின்றாள்...

விழிகள் தீயிட மொழிசொல்தேவதை
வேகு மனத்துடனே - பெரு
ஒளிகள் பொறிபடநிலமும் தடதட
வென்று அதிர்ந்திடவே...
மழைகொள் இடியென மனதும் துடித்திட
மங்கை குதித்தனள்காண் - கால்
தளதள வென்று சதங்கை கலீரிட
தாவி நடம் பயின்றாள்...

வீறொடு கோபமும் வீரமெ ழுந்திட
வேகச்சுழல் புயலாய் - பெரும்
நீறுஎ ரித்திட நேரும் விழிக்கனல்
நிலையொடு கொடும்பார்வை...
ஆறுகு தித்திடும் ஆகமணிக்கொடி
ஆடிச் சினத்திடவே - கொடும்
ஊறு விளைத்திட சீறும்புலிக்கெனும்
கோபமெடுத்திருந்தாள் ...

சித்தம் கொதித்தவள் செய்யு நடந்தனை
சுற்றி நின் றாடுகையில் - குரல்
கத்தி அழிந்துமே செத்திடு மோலங்கள்
காதினில் கேட்டதடா..
ரத்த வெறியெடு தீயகொடுஞ்செயல்
புத்தரைப் போற்றுபவர் - உடல்
குத்திஅழித்திடக் கொன்றிடு மெம்மவர்
கூக்குரல் நெடிதெழுவே

வைத்தநெ ருப்பினில் வெந்த இரும்பினை
வார்த்தது காதிலென - நெடும்
கத்தி எடுத்துக் கிழித்துபோல் நெஞ்சு
பட்ட பெரும்துயரோ..
பித்துப் பிடித்தவள் போல நின்றாடிட
ரத்தினச் செவ்விழியாள் - அவள்
வைத்தஅடி தனை வைத்தபடி ஒரு
கற்சிலையாய் உறைந்தாள்

சுற்றிஎ ழும்பிய தூசிஅடங்கிட
முத்தெனும் தேசமகள் - அவள்
முற்றிப் பெருத்தது இத்தருணம் இனி
முன்னே எழுந்திடென்றாள்...
சற்றுத் தயங்கிட என்னையழைத்தனள்
என்று மயங்கிவிட - தனல்
சுற்றிஅடர் பெருஞ்சூரியக் குஞ்செனச்
சோதி விரிந்ததடா..

இத்தனைகால மிழைத்த கொடுஞ்செயல்
அத்தனையும் பொறுத்தேன் - மனம்
செத்தவனாய்க் கிடந்தேன் தமிழா இனி
விட்டு எழுந்துவிடு...
புத்தனின் வம்சம் புரிந்திடுமத்தனை
குற்றம் கொலைநிறுத்த - ஒரு
சத்தியம் நீதி அறம் தனைமீளவும்
சற்று எழுப்பிவிடு..

கெட்டது பூமியும் கேடுபெருத்தது
கள்ளரும் காடையரும் - உயிர்
விட்டதுபோதும் விரைந்திடு எம்மினம்
வேகுது வெந்தணலில்...
கட்டிஉணர்வினை மற்ற இனம்தனை
காத்து இருந்ததெல்லாம் . அறம்
வெட்டிஅழித்திட பக்கதுணை இனி
வேண்டாம்விட்டுவிடு...

வல்லவன் மட்டு மெனப்புவி கொள்வது
வைத்த கொடும்வழக்கு - அவன்
நல்லவ னாகி நலிந்து சரிந்தது
நம்பிழை தான்உணரு..
கொல்லுமிக் கூட்ட மழித்திடு கூடிடு
சொல்லு தமிழ்மகற்கு - மறம்
இல்லையெனும்குறை தீர எழுந்திடு
ஏறிடுஆதவனே..

என்ன வியப்பொரு கண்ணைப் பறித்திடு
மின்னல் ஒளிக்குழம்பு - புகழ்
மன்னன் அவன் ஒளியூடு எழுந்தொரு
மாமலையாய் நடந்தான்..
பின்னை இருந்ததுபோதும் இனிப்பகை
வென்று முடித்து விடு - எழில்
அன்னை தமிழ் இவள்மண்ணின் உரித்திவள்
ஆணையிட்டேன் தொடர்வாய்..

சொன்ன கணத்தினில் மன்னன்கரம்தனில்
சின்னது விரலசைய - பெரும்
மின்னிவெடித்தொரு மேகமுடைந்தது
போலமுழக்கமுடன்..
என்னவியப்பது எழுந்துவிரைந்தது
இன்னொரு போர்செறிவு - படை
பின்னிஉடைத்தது பகைவர்நிலத்தினில்
புகைய பெரும் நெருப்பு...

வண்ண மத்தாப்புகள் வானில் பொழிந்தன
வாரி மழையெனவே - பெரும்
விண்ணு மதிர்ந்திட வேகமெடுத்தொரு
போரும் நடந்ததுவே..
கண்ணை விழித்தவள் என்னைக் குறித்துமே
கனவினை விட்டெழுந்து - கவின்
மண்ணினை மக்களை காத்திடு என்றனள்
மங்கை, விழித்தெழுந்தேன்..

Sunday, December 12, 2010

வரம் தராத வசந்தங்கள்

நெய்யூறும் விழிகொண்டு நெஞ்சக்கருமைதனில்
பொய்யூறும் பேச்சாலே புதுவண்ணஒளியேற்றி
ஓய்யாரம் கொள்ளுமுன் ஒடிந்தஇடை நளினம்
தெய்யென்று ஆடத்தான் தேவிமயக்கினையே

தேகம் அழைந்துகுளிர் தென்றல்வரும் பொய்கையிலே
ஏகம் நனைந்துடலை ஏற்றமிட மஞ்சள் வெயில்
தாகம் கொடுத்துமனம் தான் மறக்கச்செய்தவளே
மோகம் எடுக்கவைத்த முழுநிலவே எங்குசென்றாய்

பாவி எனைவிடுத்து பகல்நிலவாய் ஆனதென்ன
நீவி மனம்கிளர்ந்து நெஞ்சுரைத்த மெய்மாறி
தேவி நீசென்றதெங்கே தென்றல்தனும் அறியாதோ
கூவிவிழித் துன்னைக் கூப்பிடவும் கேளாதோ

வற்றும் குளத்தின் ஒரு வண்ணமலர் போலிருந்து
குற்றுயிரில் வாடுதெனக் கோகிலமே வாடுகின்றேன்
இற்றைவரை நீயும் எழுந்தருள வில்லையடீ
சற்றும் இரங்கிவரம் தாராத வசந்தம் நீ!

உனையிழந்த வாழ்வில் உடல்நீவும் தென்றலதும்
சுனை யெழுந்த நீரலையும் செவ்வான இளங் கதிரும்
தனை இழந்த பூவுமதிற் தாவும் சிறுவண்டினமும்
புனை கவியும் யாவுமொரு புண்ணாக நோகுதடீ

சொட்டும் மகிழ்வில்லை சூழ்நிறைசேர் இன்பங்கள்
கொட்டும் நச்சரவக் கொடுமையெனக் தோன்றுதடீ
வட்டவிழிக் கண்மலரே வானமதில் ஏறியிவன்
கிட்டஅடி வைத்துன்னை கட்டிவிடத் தோன்றுதடீ

பூவைக் பார்த்தழுதேன் புதுமலரைத் தாவென்றேன்
தாவும் காற்றிடமும் தலைமகளின் இடங்கேட்டேன்
பாவைமறைந்த இடம் பார்த்தவர் யார் எனக்கேட்டு
சாவை பிரித்த நிலம் தனில்வீழ்ந்து அழுதெழுதேன்

வந்திடெனக் கேட்டென்ன வரவில்லை யென்னுயிரே
எந்தநா ளிளகி மனம் எழுந்தருளி என்குடிசை
வந்திடுவாய்? எண்ணிஉயிர் வாழுமுடல் தான் நீங்கி
வெந்திடவும் செய்வாயோ வரம் தாரா வசந்தமே

வாழ்வில்நீயில்லாத வசந்தங்கள் உண்டோடி?
பாழும் துயர்வாழ்வில் பார்த்தநிலை போதுமடி
மீளும் நினவுகளில் மீண்டும் உனைகேட்டும்
வாழும் உலகெனக்கு வரம் தராத வசந்தங்களே

பெண்ணென்று எண்ணி...!

    1. பெண்ணொன்று கண்டேன் பகுதி 1
வெயிலடித்த வேதனையில் உடல்நொந்தே புவியாள்
இருளெடுத்து துகிலெனவே இடையுடுத்து தூங்க
அதையெடுத்துப் பார்க்கவென ஆசைகொண்ட நிலவன்
இருளுடையை ஒளிக்கரத்தால் எடுத்தொதுக்க எண்ண
                                                                                             ( தொடர...)

வீரம் விளைந்தவரே!

வீரம் எடுத்து விளைந்தவரே உங்கள்
தாகம்தணிக்க முடியலையே
பாரம் சுமக்கப் பிறந்தவரே இன்னும்’
பாவம் அழித்து முடியலையே
கோரம் நிறுத்த உதித்தவரே எங்கள்
கோலம் சிறக்க முடியலையே
ஈரம் துடைக்க விளைந்தவரே கண்ணில்
இரத்தம் வழியுது தாங்கலையே

விண்ணும் அதிரிட மின்னல் பொடிபட
சங்குமுழங்கிட செங்களமே
கண்ணும் எரிந்திடகாலும் வலித்திட
காடுவயல் நடைகொண்டதுமே
மண்ணும் பறந்திட மாண்டுஎதிரிகள்
மாமலையென்று குவிந்துவிழ
பண்ணுமுயர் பெருவீரம் விளைத்தனை
பாதியில் வீட்டுநீர் சென்றதெங்கே?

பேய்கள் துரத்திட ஓடுகின்றோம் காலும்
பின்னிவலியெழ காட்டினிலே
மாய இருள்வந்து மூடவிழி களும்
மங்கிச் செல்லும்வழி காணாமலே
பாய்ந்து குதறிடும்கோர விலங்குகள்
பக்க இருந்து பலிஎடுத்தும்
காயம் கிழித்துடல் நோகக் கதறினோம்
காக்க எவரையும் காணலையே

எம்மினம் காத்திட்ட உத்தமரே நம்மை
ஏங்கவிட்டு இடைசென்றவரே
செம்மனக் காவல்கொள் சிற்பிகளே தமிழ்
சேவகம் செய்திட்ட மாவீரரே
வெம்மை மிகுந்தது வேண்டும் உதவிகள்
வீரம் விளைந்திட வேண்டுமையா
நம்மில் உறுதியைத்தாரும் அதற்கென
நாடிவந்து எம்மில் சேருமையா

ஆண்ட மைந்தரே மீண்டும் ஆளுவோம்!

காற்றினி லாடிடும் தீபங்கள் கண்டேஎம் கண்கள் அழுகின்றது
தேற்றவும் வார்த்தை யில்லாதொரு நெஞ்சமும் தீயாய் எரிகிறது
நேற்றிருந்த பெருவாழ்வு சிதைந்தொரு நிர்மலம் ஆனதிங்கு
தோற்ற அறமும் நல் வாய்மையும் நீதியும் எங்குதான் போனதின்று?

கல்லறை சுற்றியே அன்னையரும் தங்கை கட்டியவள் மனைவி
வல்லவீரர் தம்மின் சொந்த உறவுகள்  வந்து விழுந் தழவே
வெல்ல வந்த விதி வேடிக்கை ஆக்கியே வீரர்தமை எதிர்த்து
கொல்ல விளைந்ததும் குற்றம் புரிந்ததும் கூடிஅழித்ததென்ன?

மண்ணைத் தொடுபவன் கையை எடுத்திட மைந்தர் குழுமிநின்றீர்
பெண்ணைத் தொடவரும் பித்தனைக் கண்டதும் பீதிகொண்டோட வைத்தீர்
எண்ண முதலெழுந் தோடிஇடர்களைந் தெத்தனை வண்ணமிட்டீர்
என்ன நடந்தது, ஏன்இது ஆனது,  யாரிடம் நீதி கேட்போம்?

மின்னு மொளிர்தேவ லோகமுறைந்திடு மாதி சிவனிடமா?
கன்ன மறைந்திடில் காட்டுகன்னம் என்ற தேவமகனிடமா?
பின்னிச் சுழன்றிடும் பூமியைக் காத்திடும் ஆதிசக்தியிடமா?
இன்னும் எவர் உண்டு என்னநடந்தது எங்குபோய் கேட்பதிது?

நீதி நேர்மையெனச் சொன்னவரோ அவர்நெஞ்சில் துரோகமிட்டு
ஓதி விடுத்த தோர் பேயெனவே மாறி ஓரவஞ்சம் புரிந்தார்
ஆவி துடித்தது அத்தனைமேனியும் ஆவெனவே அலறி
பீதிபிடித்துக் கதறித் துடிக்கையில் பித்தம் பிடித் தழித்தார்

காத்தவர் தம்மையும் காவல்புரி தோட்டக் காய்கனி பூவழித்தே
நீத்த வெறும் சாம்பல் காடுசுடலைக்கு நேர்நிக ராக்கி வைத்தார்
வேர்த்த மனதுடன் வெம்மைகொண்டே இங்கு வேண்டுகிறோம் விதியே
நேத்து நடந்தது மாற்றி நமக்கொரு நீதி கொடுத்திடுவாய்!

வெந்தழல் வீசிடும்மைந்தர் கனவுகள் வேண்டும்விடியல்பெற
சந்தனம்பூசிச் செழித்த உடல்தன்னின் சுந்தரஜோதி தன்னும்
வந்து எமதுடல் பற்றிஎழுந்தொரு வீரம் செறிய வேண்டும்
சிந்து படித்தொரு செந்தமிழின் பகை வென்று முடிக்கவேண்டும்

கண்ணிமை மூடித்  திறக்கமுன்னே கதிர் கண்டபனி யெனவே
மண்ணின் பெரும்பகை எண்ணியொழித்திட்ட மைந்தர்வலிமைகொண்டே
தண்ணிலவின் ஒளி மின்னுமிரவினில் தாயுட னன்னமுண்டு
அண்ணனும் தங்கையும் ஆழ்கடலின்யுத்தம் அள்ளியவீரம் தன்னும்

அத்தனையும் கொண்டு சொத்துப் பரம்பரை அன்னியர்கையிருந்து
மொத்தம் பறித்துமே ஈழமண்ணி லெங்கள் முத்திரை குத்திடுவோம்
நித்திய மைந்தரின் பாதைதன்னி லீழ நாட்டின் அரசமைத்து
பத்துத்தலைமுறை ஆண்டுகளித்திட உற்ற வழி வகுப்போம்

Thursday, December 9, 2010

நீதிக்கு முன் நிறுத்து!

ஓடித்திரிந்தவளும் உறங்கிடினும் உலகமதின்
மூடிக்கிடந்தவிழி மெல்லத்திறந்துவிட்டாள்
வாடிகிடந்துமிவள் வாழ்வழித்துவிட்டவரை
தேடிச்சிறையனுப்ப திடம் கொண்டெழுவாயோ.

பாடிபறந்தகுயில் பாட்டிசைத்து சோலைதனில்
கூடிகழித்திருக்க குரல்வளை நெரித்தவரை
தேடிப்பிடித்துலகில் தீயருக்கு விலங்கிட்டு
ஆடிகடன்முடிக்க ஆணையிட்டு நீ எழுவாய்!

பூஞ்சரமாய் விடுதலையை போற்றிமனமெழுவே
ஏன்சிரித்து வாழ்ந்தவளை இத்தனை கொடுமைசெய்தார்
தேன்சுவைத்த வாழ்வுதனை தேவமகளாம் இவளை
ஊனழித்து சிதைத்தவரை உள்ளேஅனுப்ப எழு!

வெட்டியவன் கைளினை விளங்காமல் போகஅவன்
கட்டிலில்படுக்க வைத்து கண்ணிரண்டு பொய்த்துவலி
பட்டுபெருந்துன்பம் பாவியவன் கதறியழும்
மட்டும் மனம்ஆறாது மகனே துடித்திடடா!

காதகப் பேய்களங்கு கடித்துக் குதறுவதாய்
மாதரைப் பிள்ளைகளை மதத்து வெறிபிடித்து
சேதமழித்துஅவரைச் செத்துவிடசெய்பவரை
நீதிக்கு முன்நிறுத்தி நெஞ்சம் அமைதிகொள்ளு!

Saturday, December 4, 2010

விடுதலை வேலியில் கதியால் போடு!

அடித்தீர் கடிக்கவரும் அரவந்தன்னை
    ஆவென்று அலறியது உலகப்பந்து
கடித்தே உடல்நஞ்சாய்க் கருகிவீழ
    கண்டும் கண்மூடிகிடந்ததன்று
துடித்தீர் நிலைகண்டு சோர்ந்தபோது
   சூரியனும் ஒளிதந்து உறுதியாச்சு
முடித்தார் பகல்தானும் இரவென்றாக
  முகில்மூடி ஈழமண் இருளுமாச்சு

கடுந்தோள் வலிகொண்டு களமுமாடி
   காற்றின் வலிகொண்டு தினமும்ஓடி
கொடுந்தேள் விளையாடும் காடுறங்கி
   கும்மிருட்டுவேளையில் குளிரும்தாங்கி
படுந்துன்பம் பட்டுயிரும் பாதிகெட்டு
    பாயில்லாத் தரைமீது படுத்துறங்கி
சுடும்படையும் சுடுவனையும் வழியிற்கண்டு
     சுழன்றுபகை முடித்து நிலங் காத்தீரன்றோ

பெற்ற துன்பம் பேசரிய கொடுமை என்றால்
   பிறந்திட்டவீரம் ஓர் பெருமையன்றோ
உற்ற துயர் அத்தைனையுமுடனே போகும்
   உரிமைபோர் ஓரடிமுன் வைக்கத்தானே
கற்றவரும் மற்றவரும் போற்றும் வண்ணம்
    கண்ணியமும் காத்தரசு கண்டீரன்றோ
விற்றவரெம் மினத்திடையே விலையாய்போக
    வீடிழந்து நாடிழந்து விரயம் ஆனோம்

புற்றிலெழும் ஈசலெனப்புறப்பட்டேஓர்
     பொழுதில்பலர் தலைசீவிப் பொட்டும்வைத்து
வெற்றி எனவந்தவரே வீரம் கண்டு
    விஷமாக சேலைகட்டி வீரங்கொன்றார்
சுற்றிவரும் வானத்தில்  கெட்டிக்காரச்
   சுடும்பறவை வட்டமிட்டு முட்டைபோட
பற்றிஎரி  தீவெடித்துப் பலதும் போக
   பாரெங்கும் கிலிஎடுத்துப் பாவம் கொண்டார்

எத்தனைதான் போனாலும் இறவாவீரம்
  இட்டபெருங்கனவெனும் லட்சியமாம்
வைத்ததனை எடுத்திடுவர் வினைகள் செய்தோர்
    வாங்காமல் போகவிட மாட்டோமன்றோ
சத்தியமும்வென்றிடட்டும் வெல்லவைப்போம்
   சாவினையும் தந்தவரோ மரணத்தேவி
கைத்தலமும் பற்றிடக் காண்போம் நீதிக்
   கரங்களிள் தொங்கிடவும் செய்வோம்பாரீர்

நித்திரையே கொண்டாலும் மைந்தர்கேளீர்
  நினைவெல்லாம் சுதந்திரத்தீயே கொண்டோம்
இத்தரையும் மீட்டிடுவோம் இன்பம் காண்போம்
   எடுத்த அடிமுன்வைத்து எல்லைபோட்டு
புத்தரும் கந்தவேள் சேர்ந்துவாழப்
   புறப்பட்ட கதைக்கொரு முடிவுகாண்போம்
வித்தகரே உம் வீரம் கொண்டே நாமும்
  விடுதலையாம் வேலிதனில் கதியால் நடுவோம்
.      

படையில்லாத ஊர் வேண்டும்!

இலைமீது தழுவி குளிரோடு இழைந்து
முகம்மீது படர்ந்தோடும் காற்றே - உன்னை
அலையாது நில்லு எனக்கூறி வேலி
தடைபோட்டு மறித்தாரும் இல்லை

கரைமீது மோதும் அலையாரே சொல்லீர்
கடல்மீது ஒருவேலி கட்டி
உருளாதே என்று ஒருநீதி கண்டு
தடுத்தாரும் எங்கணுமில்லை

மலைமீ தொழிந்து மறுநாளில் வந்து
உலகோட சுழன்றோடும் நிலவே
கருவானில் யாரும் கரம்நீட்டி உன்னை
சிறை போட்டு கொண்டதோ சொல்லு

ஒருபாவம் அறியா தமிழான என்னை
ஓடாதே என்று கால்கட்டி
பெருவேலி யிட்டு கடுங்காவல் செய்து
சிறையாக்கி வைத்ததேன் சொல்லு

விரிவானில் காற்றில் விரைந்தோடும் குருவி
எனவாகிப் பறந்தோட வேண்டும்
முகிலாகி வானில் மிகிழ்வோடு நீந்தும்
முழுதான சுதந்திரம் வேண்டும்

குழலூதி மலரில் குறுந்தேனை யுண்டு
புவிமிது உலவிடும் வண்டும்
கனிதேடி ஓடி மரந்தாவும் அணிலும்
காண்கின்ற அகிலமே வேண்டும்

ஒருநாடு வேண்டும் அதில்நாங்கள் மீண்டும்
குதித்தாடும் சுதந்திரம் வேண்டும்
தெருவீதி யெங்கும் செறிவான படைகள்
நிற்காத ஊரொன்று வேண்டும்

வயலோரம் சென்று கதிர்நீவி நின்று
பயமின்றி மகிழ்தாட வேண்டும்
இரவாகி வந்தும் எழிலான மங்கை
தனியாக அகம் திரும்பவேண்டும்

தருவார்கள் என்று தனிஈழ அரசு
அமைகின்ற திசைநோக்கி நின்றோம்
பெருவாழ்வு மீண்டும் வரும்ஆசை கொண்டு
விடியாதோ என் ஏங்கி நின்றோம்

உலைபோன அரிசி சோறாகி எங்கள்
இலைமீது விழுகின்ற வரையில்
உடலோடு ஒன்றாய் உயிர்சேர்ந்து நின்று
பிணமாகா விதிஒன்று வேண்டும்

Tuesday, November 30, 2010

மைந்தரே தாருங்கள்!

கடல் குளித்து முத்தெடுத்து கையிலிட்டோமே -அதைக்
    காலமெல்லாம் காத்துமனம் களித்திருந்தோமே
உடல் பறித்து உதிரமிட்டு உலகமெல்லாமே -எம்மை
     உரிமையற்ற இனமுமென்று ஒதுக்கிவைப்பதேன்
விடல் எடுத்த பருவமதில் விடுதலைக்கென்றே - நீங்கள்
      விரைந்துசெல்ல விதிமறித்து விலைகொடுத்ததோ
தடல் எடுத்து அடியடித்து மின்னும்வேளையில் - அந்த
      தருமத்துக்கும் பயமெடுத்து தவறு செய்ததோ

கரமெடுத்த தடியடிக்கு அழிவுகண்டதும் -அந்த
   கடவுளுக்கும் மனமெடுத்த அச்சம் பீதியோ
உரம்விடுத்து உண்மைகெட்டு உலகில் நீதியும் -ஒரு
   ஓரமாக நின்று எம்மை அழியவிட்டதோ
மரமறுத்து வீழுவதாய் மண்ணில் உம்மையே - பெரும்
   மலையறுத்து வீழ்த்தியன்றோ மடமை செய்தனர்
குரல்வளைக்கு கீறி எம்மைக் குரலெடுக்கவும் ஒரு
   கூவியழும் வலிமைகெட்டுக் கொன்றதேனையா

அருமை இந்தஉலகு வெறியும் கொண்டு ஆடுது - பல
   அரக்கமரம் விதைகளெல்லாம் வேரைஊன்றுது
செருக்கெடுத்து சிங்களமும் சேர்ந்துஆடுது -அங்கு
    சீனமண்ணும் இந்தியாவும் பங்குகேட்குது
பருத்துவரும் ஆசை ஈழம் பகிரலாகுது - இதைப்
    பார்த்துலகம் இருப்பதில்லை பகைமைகூடுது
சரித்திரமும் இருப்பதில்லை மாற்றம்கொண்டது -இனிச்
    சாதிப்பதோ எமதுகையில் சற்று விழித்திடு

உரமெனவே ஆனவரே உமது வீரமும் - இனி
  உறங்கியது போதுமதை உறவுக் கீந்திடும்
வரமெனவே தந்து எங்கள் வறுமை போக்கிடும் - எமது
   வாழ்வை வென்று ஓங்கிடணும் வழியை காட்டவும்
சரமெடுத்த வெடிவெடித்துத் தருமம் ஓங்கட்டும் -அது
   தலையெடுத்து மீண்டும்பாதை சரியென்றாகட்டும்
புறமெடுத்து எதிரிவந்த வழியிலோடட்டும் -இனிப்
   போதுமென்றே யெண்ணி நல்லபுத்தி சேரட்டும்

புன்னகைத்து ஈழஅன்னை பொலிவு காணட்டும் -அவள்
   புன்சிரிப்பில் எமது இனம் பொங்கிவளரட்டும்
என்னவைத்து உறுதிதன்னை மனமெடுத்தீரோ -அதை
    உள்ளமெங்கள் கொள்வதற்கு ஒருவழிசெய்வீர்
அன்னைதேசம் காக்கவேண்டும் அவசரம் கண்ணே -நீங்கள்
   ஆவதெல்லாம் உறுதி மனஆற்றல் நேர்மையும்
வன்மை கொண்டு நெஞ்சங்கண்ட வெற்றிதன்னையும் -எங்கள்
   வாழ்வில்காணும் வழியைச்சொல்லி தூங்கப்போங்களேன்
    

மைந்தர் புகழ் பாடுவேன்!

வெள்ளிமலை போலுயர்ந்தோர் வீரத் திருவுருவும்
விளை முரசமொடு சங்கதும்
துள்ளியெழு யென்றூதத் துடித்தேயெழும் சூறை
சுழல்வேகம் கொண்ட மைந்தர்
அள்ளியெடுஎன்றவனும் ஆணையிடஅள்ளுமவர்
அலைகடலின் ஆழிநடமாய்
கொள்ளியிட குறைவிரலும் மில்லையெனக் கதறியே
கூடியழசெய்த குலத்தீர்

வன்னியை அழித்ததோர் வஞ்சனையின் பேய்களெம்
வாழ்வதனைச் சீரழித்தும்
கன்னியர் பெண்கொடுமைக் கொலைவெறிஞர் கயவர்படை
காதகர் கள்ளர்தாமும்
இன்னும் எழில்கொண்டுநல் இன்பவாழ் வெய்தும்நிலை
இருந்திடக் கண்கள்மூடி
சின்னவரென் றேதும்வழி தெரியோமே அறியோமாய்
சிலையாகி நிற்பதாமோ?

சிறுமனது பெருங்கயமை சேர்ந்த குறுஞ்சிங்களத்தர்
செய்தமிழ் கொடுமையாவும்
பொறுக்குமோ என வெகுளப் புரண்ட மாகடலாகி
பிழைகொண்டோர் களமாடியும்
வெறுத்தவரை வீடேக வைத்தவரும் வெஞ்சினமே
விளையாடிப் பந்துமடித்து
குறுகுறெனப் படைகொண்டு குலைநடுங்க வைத்தவர்தம்
கூறுபுகழ் என்னுரைப்பேன்

மலைபோன்ற மைந்தர்திடம் மாமலைகள் கண்டிழிந்து
முகில் கொண்டு தனைமூடிடும்

கலைந்து பெரும் பகைஓடும் கார்த்திகையின் மைந்தர்தம்
கண்ணசைவில் மின்னல் பறக்கும்
அலைந்துவரு தென்றலொரு கணமிருந்து அதிசயித்து
அடஎன்று மருண் டோடிடும்
வளைந்தோடும் நதி நெஞ்சு நிமிர்ந்த இவர்நிலைகண்டு
வழிதிருத்தி நேர்ஓடிடும்


செழித்த திமிர்கண்டு சிறுகாளைபயந் தயல் ஒதுங்க
செல்வழியின் அதிர்வுகண்டு
வழிதன்னில் நின்ற மயில் வானமிடி யோசையென
வரும் மழைக்கு நடனமாடும்
பழித்ததொரு குரங்கோடி பார் இதுவே வீரமென
சிறுத்தை தனைக் கேலிபுரியும்
அழித்தபகை காணச்சுடர் ஆதவனும் நள்ளிரவில்
உதித்தவிதம் ஊரும்பசப்பும்

கொதித்தபால் தமிழ் பொங்கும் கோலமதில் நாணிவிட
குளிர்ந்திடும் காலத்தேவன்
விதித்தவிதி வீரரவர் நேர்மைகண்டு எதிரி தலை
விதி உந்தன்கையில் என்கும்
உதித்தகதிர் தலைவனின் ஒளிகண்டு தம்பியிவ
னென்று தன்கதிர்கள் என்னும்
கொதித்தகரம் கொண்டன்பில் அரவணைக்க புவியோடி
குளிர்வேண்டி சுழன்றுதப்பும்

இளையமல ராய்ஒடிந்த தெமதீர மைந்தர் துயில்
இல்லமாம் இனியசோலை
விளைவீரத் தவச்செல்வர் வீடுகளை தொட்டழித்து
வீரமென தட்டிமார்பும்
கோழைமனங் கொண்டவரை குறுநிலத்து களைநீக்கி
கொண்டாடி ஈழமமைக்கும்
நாளை எதிர்பார்த்திங்கு நாமெழுந்து வழிகண்டு
நடந்தோமே விடிவுபிறக்கும்

கண்டிடுவோம் ஒன்றாகக் காலமதின் கனிபழுக்கும்
காற்றெழழுந் தெங்கள் திசையில்
கொண்டோடும் ஈழரசின் கொள்கைதனை கூறஅதில்
கொண்டநிலை உலகமேற்கும்
அண்டமும் அகிலமதும் அதிசயிக்கும் ஓராட்சி
அமைந்திடும் மீண்டும் பிறக்கும்
வென்றிடும் தமிழீழத் தனியரசு விரைவாக
மைந்தரே நின்றுபாரும்.

Monday, November 29, 2010

நேரம் ஓடமுன் நீயோடு!

கொட்டும் விழிகளில் சொட்டும் கண்ணீர்
விட்டுப் போவது எப்போது
தட்டும் கைகளும் சட்டக் கதவினை
தட்டித் திறப்பது எப்போது
கட்டிக் காத்தோம் மண்ணைப் பகைவனும்
விட்டுப் போவது எப்போது
சொட்டும் குருதியும் நெஞ்சக் குழியினுள்
சுட்டுக் குமுறுது என்செய்வேன்

நெட்டுக் கிடையென நீயுங் குப்புற
நித்திரை கொள்வது முடிவாகி
விட்டுச் சடரென வேகம் கொண்டிட
விழிகள்திறப்பது எப்போது
தொட்டுப் படபட வென்று முடித்திடச்
தொகையா யுள்ளது பலவேலை
முட்டித் தலைவழி வெள்ளம் பரவியுன்
மூச்சுத் திணறிட முன்னோடு

கட்டிக் கல்லொடு கடலில் தள்ளிடக்
கயவனெழுந்திட முன்னாலே
எட்டிப் படபட என்று கொடுத்தவன்
எண்ணம் பொடிபடச் செய்யாயோ
வெட்டிக்கதைகளும் வீணில்பேச்சுகள்
விட்டே சேர்ந்திடு ஒன்றாக
விட்டுதமிழனும் வேற்றுக் கொள்கையில்
வினையாய் அழிவது வேண்டாமே

டக்டக் டக்கென நேரம் ஓடுது
தாவி விரைந்திடு, நீயோடு
திக்திக் திக்கென அன்பில் நெஞ்சமும்
சேர்ந்து துடித்திட விரைவோடு
தம்மம் சரணமும் கச்சாமித்தலை
தட்டிக் குதிபட பயந்தோட
இம்மை எல்லையில் மறுமைகாண்பது
இவனுக் கெப்படி காட்டாயோ


 

Sunday, November 28, 2010

வராத வசந்தங்கள்

வரமொன்று வேண்டினேன் பெண்ணே -நல்
வடிவே நல்வாடாத மலரே செந்தமிழே
உரம்கொண்டு நான்பாடி உயிரே - உன்னை
உலகெங்கும் இல்லாத உயர்வாழ்வு தந்து
பரவிடும் உயர்வான மங்கு -நீள்
பரந்தோடும் மேகமாம் பஞ்சென்ற தேரில்
விரைந்தோடி விளையாடச் செய்யும் -அந்த
விதமான உயரின்பம் விளைந்தாக வேண்டும்

மணம் கொண்டமலராகும் உந்தன் -மீது
மாறாத அன்பெனும் சுவைகொண்டுநானும்
குணம் கொண்ட வண்டாகக் கூடி - ஒரு
குறைவற்ற இன்பங்கள் பெறவேண்டும் ஆடி
பணமென்று பின்னோடும் பூமி - இதில்
பண்பான உள்ளங்கள் குறைவென்று ஆகி
வனம் கொண்ட விலங்கான வாழ்வில் - வேறு
வகையாக நான் மாறும் வாழ்நிலை வேண்டும்

திசையெங்கும் சுழன்றோடும் காற்றில் -நீயும்
திருமேனி சிறகுகள் கொண்டே பறந்து
அசைந்தோடி வலம்வந்து புவியில் - கண்ணே
அயர்வாக குளிரோடும் ஆற்றோரம் நிற்க
பிசைந்தாசை ருசியோடுஅமுதம் - நான்
பேசுந்தமிழ்கொண்டு பாவென்று ஊட்ட
இசைகொண்டு நீபாட நானும் - மாலை
இரவாகும்வரை நின்று இன்பங்கள்கண்டு

ஒளிந்தோடிப் பொழில்தன்னில் ஆடிஓர்
உணர்வோடு களித்தேநல் எழில் தன்னைநாடி
களிகொண்டு திரிந்தாட வேண்டும் - வாழ்வு
கனவாகிப் போகாமல் விடிந்தே எழுந்தால்
அழிகின்றவாழ்வாக வேலை - அடிமை
ஆகின்ற நிலைவீடு பிள்ளைகள், நூறு
பழி சொல்லும் மனையாட்டி கோவம் -இன்னும்
பக்கத்து அயல்விட்டுப் பாவங்களாக

கிலிகொண்டு வாழ்ந்திடும் கோலம் - ஒரு
கீழெண்ணம் பணம்வேட்டை கூடாதகூட்டம்
பலிகொண்டும் எவரையும் பார்க்கும் -ஓர்
பரிதாப நிலைகொண்ட வாழ்வதும் வேண்டாம்
நிலைமாற்ற வேண்டினேன் விதியே -அதை
நிச்சயம்மாற்றிடு நினையன்று கேட்டும்
வலிகொண்டுவாழ்கிறேன் இன்றும்- ஏன்
வாரா வசந்தங்கள் வாழ்வில் நிறைத்தாய்?

Thursday, November 25, 2010

தாகம் தீர்த்திடு!

கண்ணைக் கட்டி காட்டிலிட்டு காலடி மண்பறித்தார்
எண்ணச் சொல்லி சிறையினிலிட்டு இடத்தைக் கொள்ளுகிறார்
உண்ணச் சொல்லி நஞ்சைத் தொட்டு உதட்டில் பூசுகிறார்
அண்ணன்தானே அன்பாய்வாழென் றகிலம் சொல்லுதடா

பெண்ணைக் கொண்டு பிள்ளைகள்கொன்று பேயாய் ஆடுகையில்
மண்ணைக் கண்டு மௌனம் என்று மடமை கொள்ளுவதோ
விண்ணைக் கிழித்து வேகம் கொண்டு விரைந்த கதிரவனும்
உண்மை ஒளிர்ந்து உலகம் காண ஊன்றிநீ உழைக்காயோ

ஆடிய காலும் அமைதியென்றாகி ஆறிடும் மைந்தர்களே
தேடியஎண்ணம் சீர்பெறமுன்னே வேர் என ஆனவரே
வாடிய நாமும் வாழ்ந்திட இன்னும் விடுதலை கைகளிலே
கூடிடவில்லை கோவில் நம்ஈழம் கூத்திடுவோர் கையிலே

வானில் ஒளிர்ந்தே சூரியன் நின்றான் வந்தோர் இருள்முகிலோ
தானிலை கொண்டு தரணிமறைத்து தமிழும்அழித்ததடா!
ஏனிலை கெட்டு இதயமும்வாடி இறுகினர் மாந்தரிவர்
சூனியமில்லை சுடரெனும் ஆதவன்தேய்ந்து சிறுப்பதில்லை

மூடிய மேகமும் ஓடியபோது முன்னிலை கொண்டிடுமே
தேடி எழுந்தால் பகைமையும்  இலவம் பஞ்சென பறந்திடுமே
வாடியகண்ணும் மூடிய இருளும் வாழ்வில் நிலைத்திடுமா
ஓடி நடந்திடு உயர்தமிழ் ஈழம் ஏற்றிட உழைத்துவிடு

நாடு கடந்த ஈழப்பெரும் அர சாட்சியும் எழுகின்றது
தேடும் வழிசரி நேரென ஆகிட தீரமுடன்  நடந்து
கூடுஇழந்தொரு கோவிலெனும் நிலவீடுகளில் உறங்கும்
வாடுமலர்களின் வல்லமனம்கொண்ட  தாகம்நீ தீர்த்துவிடு

Wednesday, November 24, 2010

அழும்வரை சிரிப்பேன்!

மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்
      மகிழ்வென்ற நிறம்பூசிடும்
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்
       தித்திப்பை விழிகாட்டிடும்
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்
       வலிதந்து ரணமாக்கிடும்
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி
       எழில்போல உருமாற்றிடும்

பணமொன்றும் தீர்க்காது பட்டாடை,பல்லக்கு
     தலைதூக்கி எவராடினும்
பிணமென்று விதிசொல்லிப் பின்வாசல் வழிவந்தால்
     பேசாது உயிரோடிடும்
மணமென்றும் மனையென்றும் மக்கள்மற் றுறவென்று
       மறந்தேநம் விழிமூடிடும்
கணந்தன்னில் கரியாகிக் காற்றோடு புகையாகிக்
     கனவென்ற நிலையாகிடும்

களவாக எமன்வந்து கயிறானதெறிகின்ற
    கணந்தன்னில் எதுகூறினும்
விளையாது பயனேதும் விரைந்தோடி உயிர்சென்று
     விளையாட்டு முடிவாகிடும்
களையாது தினம்தோறும் கனவோடு உயிர்கொண்டு
    புவிமீது நடந்தோடினேன்
வளமான வாழ்வென்று வருந்தாமல் திமிரோடு
     பலநூறு பிழை யாற்றினேன்

எனையாளும் இறைவா நீ இதுகால வரைதானு
       மிரு என்றாய் புவிமீதிலே
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்
     வாழ்ந்தேனே அதுபோதுமே
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச
     தெரியாமல் அதில்மாண்டிடும்
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது
      நிழலாக்கி உயிரோடிடும்

அதுபோலும் விதி சொல்லி அகல்கின்றவரை நானும்
       மகிழ்வோடு கூத்தாடுவேன்
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்
      போலாகி ஒளிவீசுவேன்
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்
       அழகாகப் பறந்தோடுவேன்
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனபாடிப்
        போகும்வரை ஆடுவேன்.

Friday, November 19, 2010

ஏனிந்த வஞ்சனை?

சுற்றிவந்து தொட்டுப்போகும் காலைத் தென்றலே - உன்னை
கட்டிவைத்து கால்விலங்கு போட்டவர் உண்டோ
நெற்றிமீது பொட்டுபோன்ற வட்ட நிலாவே - உன்னை
நிற்கவைத்து வேலிபோட்டு விட்டதும் உண்டோ

சுற்றிமுள்ளுக் கம்பிபோட்டு கூடுகட்டியே - எம்மை
வைத்திருப்ப தென்ன வென்று தெரியவில்லையே
விட்டுஇதை வெளியில் சென்று கத்திகூவியே
நாமும்பெற்று விட்டோம் ஈழமென்று பாடவேண்டுமே

வண்ணப் பூவில் வந்திருக்கும் வண்டுமாமாவே
வாழ்க்கைஎன்ன வென்றுசற்று சொல்லி போங்களே
விண்ணின்மீது ஓடிச்செல்லும் வெள்ளி மேகமே
விட்டது யார் வெளியிலென்று சொல்லிதாங்களே

எட்டஉயர் வான்பறக்கும் சிட்டுக்குருவியே - உங்கள்
செட்டைதன்னை எங்குபெற்றீர் எனக்கும் தாங்களே
நட்டநடுவானில் நானும் பறந்து சுற்றுவேன் - இந்த
நரகவாழ்வை விட்டுநானும் மகிழ்ச்சி யாகுவேன்

கண்ணில்நீரைத் தள்ளிஏதும் கண்டது மில்லை
காலில்போட்ட சங்கிலியாய் விடுதலை இல்லை
மண்ணில்ஏது பாவம்செய்தேன் மனசு நோகுது
மாறிவேறு ஜென்மம் கொள்ள ஆசைபொங்குது

இடியிடித்து மழைபொழிந்தால் பூமிக்கு இன்பம்
இரவுமாறி பகல் எழுந்தால் பூக்களுக் கின்பம்
குடிகெடுத்து பார்ப்பதிந்த கயவருக் கின்பம்
விதிபிழைத்த எனக்குமட்டும் ஏன்இந்த துன்பம்

மதிசிறுத்த விலங்கைக்கூட அடைத்து வைப்பவர்
மாலைகாலை என்றுவெளியில் மேயச் செய்கிறார்
கதிசிறுத்த தமிழர்எம்மை அடைத்து வைத்ததும் அன்றி
காக்கிஉடை காவல்கொண்டு சுற்றி நிற்கிறார்

அழகுமலர் வாசம்கொண்டு ஆடி வந்திடும்
அச்சமின்றி வீசிவந்து அணையும் தென்றலே
பழகிவந்த உலகிலெங்கும் இறைவன் கண்டீரேல்
பார்த்துஇந்த பாலன்தந்த சேதி சொல்லுவீர்

கொடுமைபாவம் குற்றம்கொள்ளை செய்யும் கொடியவர்
கூடிஆடி இன்பவாழ்வு கொண்டு மகிழ்கிறார்
வறுமைநீதி தருமம்உண்மை பேசும் நல்லவர்
வாழ்வுமட்டும் நரகமாகிப் போனதென்னவோ?

விதியைஎழுதும் உனதுகைகள் எமது தலையினில்
விடை தெரியா கணக்கெழுதி விட்டதும் ஏனோ
பொதுமுறைமை மனிதம் நீதி விதிகள்இன்றியே
போனபோக்கில் உலகைசெய்து சுழலவிட்டாயோ

தமிழன்மேனி மற்றினங்கள் ஏறி மிதிக்கவே - வெகு
சொகுசுஎன்று எழுதிவைத்த தேனோ ஆண்டவா
அமிழ்துஎடுத்த போதுகண்டம் நின்ற நஞ்சுதான் - உன்
உடல்முழுக்க பரவிஇந்த மோசம் செய்ததோ

உதிர வைத்த மலர்களின் வேதனை!

காலை மலர்ந்திடும் பூவை மணந்தொரு
காற்றுஎழுந் தோடிப்போகும்
நீல வானவெளி நீந்துமொளிச்சிறு
தாரகைகள் விடைகூறும்
வேல்விழி மாதரோ வாசலிருந்து கை
கொண்டவளையல்குலுங்க
கோல வண்ணமிட்ட தானஅழகைப்
பொறாமைவிழி கொண்டுநோக்கி

கீழத்திசைஅடி வானும் சிவந்திட்ட
ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப் போலேதோ
கீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத் திசையினில்
புள்ளியென்றோர் பட்சிக் கூட்டம்
நீலம் சிவந்தது எப்படி என்றுதான்
காணப் பறந்ததைக் கண்டேன்

காரிருள் கட்டியணைக்கப் புவிமகள்
வாழ்விருண்டு போனதென்று
பேரொளி வான்சுடர் பொல்லாச் சினமெடுத்
தே யொளி கொண்டதைத்தேட
வாரியடித் தெழுந்தோடி இருள்வாசல்
மூலைக் கதவடி சந்து
ஆலமரத்தடி சோலை நிழலெங்கும்
நாடி அடைக்கலம்கோர

மெல்லஒளி விரிந்தேகும் பொழுதினில்
உள்ளம் களித்திட நானும்
செல்லுமிடம் அறியாமல் பசும் புல்லில்
சின்ன நடை கொண்டு சென்றேன்
வெள்ளை மலர்களின் கூட்டம் பசுந்தரை
வீழும் பனித்துளி தூங்கி
துள்ளும் கயல்விழி மங்கையின் புன்னகை
போல எழில் தரக்கண்டேன்

மாடுகள் பூட்டிய வண்டி மெல்லஅசைந்
தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக் கிளைசேர்ந்து கொஞ்சிப்பேசிக்
கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம் அணைந்திடும்
காலைக்குளிர் காற்றின் முத்தம்
கூவிடும் சேவலும்பின்னே குரைத்தோடும்
நாயதும்கண்டு நடந்தேன்

ஆகப் புதுமைக ளேதுமற்றஒரு
காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்து மண்மீது அடிபதித்
தோடிநடந் திட்டபோது
மேகம்மறை நிலவாக ஒளிகுன்றிக்
காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்து குவிந்திட்ட
ஏதிலிகள்இல்லம்கண்டேன்

கண்களில் நீருடன்காய்ந்த முகங்களில்
வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும்
சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப்
பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம
தென்னென்றுகூறுவீ ரென்றேன்


2..பறித்துப் போட்ட மலர்கள்

தமிழினி பேரெனதென்றாள் - தமிழ்
வாணி என்றோர் குரல் பின்னால்
கயல்விழி என்றாள் ஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி குமரி
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்

பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகிய செல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம் நீட்டிக் கொள்ளும்
பழமின்சுவை கொண்டு வந்தேன் - இனி
பண்டமுண்டுஉண்ண என்றேன்

குழல்சீவிப் பின்னலுமிட்டு - விழி
கொண்டநீர் முட்டி வழிந்து
அழுத கன்னக்கள் துடைத்து -ஊடே
அங்கொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற எண்ணமுமில்லை
வளமான வாழ்வழிந்தோமே -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்

பேச்சின்றி நான் சிலையாக- அந்தப்
பேதையோ இன்னமும் சொன்னாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த -பல
பொன்போல் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - செத்தே
ஆடும் பிணமென்று ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் வேதனை என்றாள்


3. துயரின் கொடுமை...

நீர்த்திரை பாய்ந்து விழிவழிய சிறு
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீற அமைதியுடன் அங்கே
வார்த்தை கனல்கொள்ள வாயுரைத்தாள்
பார்த்தவர் போற்றும்நல் வாழ்வுதனும் ஒரு
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த எங்கள்
கோபுர வாழ்வு குலைந்த தய்யோ

அன்னைபோன தெங்கு நானறியேன் வாடும்
அன்புதந்தை சிறைக் கூடறியேன்
பின்னை பிறந்திட்ட தங்கையவள் எங்கும்
உள்ளனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே இன்று
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம் இந்தப்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை

வீதியில் கொல்ல ஒருவன் வந்தால் அங்கு
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை அதைக்
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலை நேருமென்று உண்மை
நெஞ்சம் அறிந்தும் பொறுப்பதுவோ
பாதி கழுத்தினை வெட்டும்வரை ஒரு
பாவமில்லையென்று பேசுவதோ

எத்தனைபேர் ஒன்றாய் கத்திநின்றோம்- மனம்
ஏங்கிக்கதறி அலறி நின்றோம்
செத்துஅழிந்து சிதறவிட்டு வெறும்
சிற்பமென சிலையாகி நின்றார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ அவர்
மௌனம்கொலை துணைஆனதன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு பல
ஒன்றாயிணைந்து அழித்ததன்றோ

கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
கீழேகிடந்து துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ ஒரு
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் எழுந்து வந்து எங்கள்
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ

ஏன் உலகெங்களின் கண்ணீரையும் பல
ஏழைகதறிய கூக்குரலும்
வானில் கரைந்து அழியவிட்டு அன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு புள்ளி
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ புவி
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்

கூறி அழுதிட்டு நின்றவளாம் - அவள்
கோலமதைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள் -சிறு
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா- நல்ல
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறித்திடம் மனம் கொள்ளுஇனி -அந்த
தெய்வம் இருக்குது கேட்குமென்றேன்

நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும் அந்த
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்திலும் நீதி நெறி அன்பு
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த முழு
நானிலமும் உள்ளமட்டிலொரு
பூமியல்லஇது வேறு ஒன்று, வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்

கூறிவிடை பெற்று நான்திரும்பி கனம்
கொண்ட மனதுடன் வீதிவந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம் பெரும்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி பெரும்
பீதியெழும் சுழல்காற்றின் சத்தம்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில் இவை
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்

Thursday, November 18, 2010

ஏங்கவைத்த பொற்காலம் (நகைச்சுவையாக)

ஏங்கவைத்த பொற்காலம்  தலைப்பில் வேடிக்கை எண்ணி மாற்றி எழுதிப்பார்த்தது

பொன்னு வனத்திலோர் பாண்டி -அவன்
போயொரு நண்பனின் வீட்டினில் தேடி
நன்கவிநூல் ஒன்றைவாங்கி -அதை
நாலுநாள் என்றே இரவலும் கூறி
தன்னுடை இல்லமும் வந்தான் -அதைத்
தேடியோர் பக்கத்தில் பத்திரமாக்கி
பின்னர் படித்திட எண்ணி விட்டு
போய் முகம்நீரில் கழுவிடச்சென்றான்

கட்டிய வள் அதைக் கண்டாள் -எண்ணிக்
காரணமேது மறைத்திட வென்றே
எட்டி அதைக் கையில் தூக்கி -அதன்
இட்டபெயர் கண்டாள் பொற்காலமென்று
குட்டிக் கவிதைகள் கண்டே- அதைக்
கொண்டுபோய்த் திண்ணையில் நின்றுபடித்தாள்
சற்று மணித்துளி செல்ல பாண்டி
சத்தமிட்டே கூவ பொற்கவிநூலை

வைத்துவிட்டு உள்ளே சென்றாள் =அங்கு
வந்த பழம்நூலை விற்றிடும் பையன்
சத்தமில்லாமல் கைக்கொண்டு -கணம்
சந்து தெருவில் மறைந்தவ னானான்
பித்துப் பிடித்துக் கணவன் - கோபம்
பேச்சில் எழுந்திடக் கண்டு சிலிர்த்தாள்
வைத்தநூல் எங்கேடி போச்சு என்ற
வார்த்தை கேட்டுத் திரும்பி நடந்தாள்

அள்ளி வீசும் சினம் கண்டு -அவள்
ஆடிப் பயந்து திண்ணை திரும்ப
கொள்ளி அனல் சுட்டதாக வாய்
கொஞ்சமலறித் திகைத்துமே நின்றாள்
அஞ்சிக் கலங்கிட நின்றாள்- நெஞ்சை
ஏங்க வைத்த பொற்காலம் ஈதெங்கே
கொஞ்சம் அலறலைக் கேட்டு -அயல்
கூடி வந்தவனை ஏக்கத்தில் பார்த்து

அஞ்சுகம் நெஞ்சு துடிக்க -- ஏங்க, (என்னங்க)
வைத்த பொற்காலம தெங்கேதான்போச்சு
மிஞ்சி ஒருமுறைதாண்டி நம்மை
ஏங்க வைத்தபொற் காலம் வந்தேகும்
கெஞ்சி கூத்தாடியே வாங்கி நானும்
கொண்டு வந்தேன் பாரு உன்னையும்நம்பி
அஞ்சு வயதினில் இல்லை -இன்று
வந்த பொற்காலமும் போச்சடி என்றான்

Wednesday, November 17, 2010

கவலை மாற்று கண்ணா!

மொட்டாய் பூத்து மெல்லத்தோன்றி மண்ணில் வந்த கண்ணேயுன்
வட்டக்கண்கள் பார்த்தேன் அங்கு வாழும் சோகம் ஏனையா
தெட்டத் தெளியும்வானத் திங்கள் தோற்றும் வதனம் தீயாலே
பட்டுக்கருகும் பூவாய் சோர்ந்தாய் பாட்டுச் சொல்வேன் கேளாயோ!

பட்டும் பாயில் மெத்தை என்று பாரில்வந்தாய் கண்ணே கேள்
கொட்டிப்பனியும் கூதல் உண்டு கொஞ்சம் எண்ணிக் கொள்ளடா
மொட்டும் மலரும் பூக்கள் உள்ள மேதினியில் மெல்லவே
தொட்டுப்பேசும் தென்றல் உண்டு வெட்டும் வண்டும் உண்டடா!

கட்டில் மட்டும் வாழ்வு இல்லைக் காதல் கொண்ட நெஞ்சங்கள்
மட்டுமல்ல மண்ணில் இன்னும் மாயம் உண்டு மைந்தனே
சிட்டுக்குருவி பாடல் கேட்டுச்சிந்தை மயக்கம் கொள்ளாதே
முட்டிக் குதறும் காளை பின்னால் மெல்லச்சேரும் தள்ளாதே

வெட்டும் வாழும் குத்தும் ஈட்டி வைத்தே பலரும் நிற்பாரே
பொட்டும் வைத்து பூவைக்காதில் சுற்றி செல்வார் காண்பாயே
எட்டும் ரண்டும்பத்து என்று எண்ணிப் பாடம் சொன்னாலும்
வட்டம் ரண்டாய் எட்டைமாற்றி வார்த்தை பொய்யாய் செய்வாரே!

சொட்டுக் கண்ணீர் விட்டுக்கொள்ளச் சேர்த்துவை நீ பின்னாலே
விட்டுக்கொள்ளும் வேளை நூறு வாழ்வில்தோன்றும் வையமே
பட்டும் எண்ணம் சோராதே நீ பாதைகண்டு முன்னேறு
தட்டித்தூசாய் எண்ணித் துன்பம் தன்னை விட்டு ஈடேறு

சட்டம் உண்டு சதிகள் உண்டு சங்கதிகள் நூறுண்டு
திட்டமிட்டு வாழ்வை கொண்டு தீரத்துடன் முன்னேறு
வெட்டும் மின்னல் வீழுந்தலையில் வேண்டாமச்சம் என்றேயோர்
சுட்டிக் கவிதை சொன்னார் அங்கே சொல்லும் தீரம்கொள்வாயே

ஏன்? என்ன? ஏது?

வானம் பொழிந்து விளைந்துமென்ன -பூவின்
வாசமெழுந்து மலர்ந்துமென்ன -குயில்
கானம் இசைத்துமே கண்டதென்ன- நம்
காயும் நிலம் ஈரம் காணலையே

விண்ணில் நிலவு எறித்துமென்ன -குளிர்
வீசுந் தென்றல் உடல் நீவியென்ன -சிறு
தண்ணொளி பூமி தழுவியென்ன - எங்கள்
தர்மம் பிழைத்திடக் காணலியே

தேனைக் கடித்து இனித்துமென்ன -நல்ல
தீந்தமிழில்கவி சொல்லியென்ன -வட்டப்
பானை பிடிக்குமெம் மங்கையர்கள் அவர்
பாவம் விமோசனம் காணலையே

கோவிலைச் சுற்றி நடந்துமென்ன ஒரு
கோபுரம் கட்டி வணங்கியென்ன சிறு
பூவிலே மாலைகள் இட்டுமென்ன மண்ணுள்
போனவர் எண்ணம் பலிக்கலையே

ஆயுதம் தூக்கி எறிந்துமென்ன -பெரும்
ஆள்படை சேனைய ழிந்துமென்ன -ஒரு
காகிதம் சட்டம் கடும்விதிகள் -சொல்லி
காட்டியவர் நீதி காக்க வில்லை

வாழ்வைஅழித்தவர் கண்டதென்ன - எண்ணி
வஞ்சம் இழைத்தவர் கொண்டதென்ன -அவர்
ஆயுள் முடிந்து நடக்கையிலே - அள்ளி
அத்தனையும் கொண்டு போவதுண்டோ

கொண்ட உடையதும் சொந்தமில்லை அவர்
கூட உடலுமே செல்வதில்லை புகழ்
கண்ட பதவியும் காசுகளும், அவர்
கையிலெடுத்து விரைவதில்லை

கொன்று குவித்து உயிரெடுத்துத் - தம்
கூட்டம் பிழைத்திட ஆடுகிறார் அதில்
வென்று குவிப்பது சாபங்களும் அவர்
வீடு நிறைந்திடப் பாவங்களே!

மண்ணில் ஈதெங்கும் நடப்பதென்ன -ஒரு
மண்ணும் புரியல்லை மாதேவனே- இங்கு
கண்ணியம் காப்போர் கருகிவிட வெறும்
காதகர் வாழ்வதன் காரணம் ஏன்?

நிலவு தாங்குமா?

அந்த வானத்திலே ஓர் வெண்ணிலவு -அது
தேனொளி கொட்டியது-
அதன் வாழ்க்கையிலே ஒரு சோகமுண்டு
அது மேகத்தில் மூடியது
கண்மூடிநின்றேன் அதுமுட்டியது
என் மூச்சிலும் சுட்டதது
கலி காலத்திலே சில கட்டளைகள்
அதைத் தேயவும் வைக்கிறது


அது கோலத்திலே முழுவட்டநிலா மனம்
குழந்தையின் மென்மையது
ஒளி கொட்டுவதில் பெரு முழுநிலவு அது
கொண்டதுஇருள் உலகு
சில நேரத்திலே அது குறைநிலவு அது
தெய்வத்தின் கொடுமையது
எந்தக் காலத்திலே ஒருவிடிவுவரும் தீங்
கனவுகள் மறைவதற்கு

மன சோகத்திலும் ஒருஇன்பமுண்டு எனச்
சொல்பவர் பலருமுண்டு
வான் மேகத்திலே கார்முகிலெழுந்தால் இடி
மின்னலும் முழக்கமுண்டு
எம் தேகத்திலே ஓர்கிலியெழுந்து மனம்
திக்கென ஆவதுண்டு
அந்த தேன்நிலவானது தாங்கிடுமா -அது
மேகத்தின் பக்கமுண்டு

Tuesday, November 16, 2010

விதியே உன் விதி(முறை) என்ன?

விழிகள் நீரைவழியச் செய்த விதியே ஓடாதே - பல
மொழிகளுண்டு முடிவும்சொல்லு பதிலே கூறாயோ
அழியும் ஈழக்கதைகள் யாவும் ஆக்கும் விதி யாரே! -ஓர்
வழியைச் சொல்லி, நழுவிச் செல்லு! விதியே கூறாயோ!

தமிழைக் கொல்ல எவனும் சொன்னால் தகுமோ நீதானே -இவர்
உமிழக்குருதி உயிரைக் கொன்று ஓடிப் போனாயோ
வழமைக்கான விதிகள் போருக் கிலையே எதனாலே - பெரும்
அழிவைத்தந்தாய் அவருக்கேனோ அடிமை யானாயே

திமிரைக்கண்ட சிங்கத்தலையோன் செருக்கில் நின்றானே - நல்
அமிர்தப் பெண்ணாள் தமிழர்க் கன்னை துயரைச் செய்தானே
நிமிரத்தானே எண்ணிக்கொண்டோம் நிகழப்பெரிதான-  ஓர்
சமரைத்தந்து தமிழன் தலையைச் சரியச் செய்தாயே

எவரைக் கொன்று இன்பம் கண்டாய் இளையப் பருவத்தே - வெறும்
குமரைச் சின்னக் குழந்தை, பெண்கள், கிழவர் இவைதாமே
தவறைச்செய்தாய் தமிழர்க்கென்று காவல் கொண்டாரே -இவர்
மறையச்செய்ய மனமேகொண்டாய் மதுகொள் வெறியோனே

உயிரைகொல்ல ஒருநாள் நீயும் வருந்திக்கொள்வாயே -இவை
பயிரைவெட்டி களையைவிட்ட பாவச் செயலாமே
தயிரைக் கொட்டிப் பாலைகாண தானும் முயலாதே - எம்
தலையைவெட்டி போட்டாய் பின்னர் உயிரைத்தேடாதே

நிலையைப்பாரு வலையைபோட்டுமீனைகொண்டானோ - அவன்
குவளைக்குள்ளே போட்டேஅன்பில் கொண்டேன் என்பானே
உலையில்போட்டு குளிரைபோக்க உதவும் என்பானோ --பின்னே
உண்ணும் போது உண்மை கண்டு ஏது பயனாமோ?

மனுவுக் கொருநாள் மகனைக்கொல்ல விதியே சொன்னாயே தமிழ்
மகளோ டொருநாள் மனதில் நின்று மதுரை எரித்தாயே!
அனுமன் வாலில்தீயை வைத்து இலங்கை எரித்தாயே இந்த
அழகுத்தமிழர் ஊயிரைக் கொல்ல ஆசைஎதனாலே?

எழுதிக்கொள்ளு இடரைத்தாண்டி எழுவோம் முன்னாலே - சாவைத்
தழுவிக்கொண்ட வீரர் இன்னும் தரணிக் குரம்தானே
புழுதி குள்ளே விதைகள் மழையைக் கண்டே எழுமாமே நாம்
விழுவோம் எழுவோம் விழுந்தோ மிப்போஎழுமோர் முறைதானே!

Monday, November 15, 2010

உன்னை நீ மாற்று!


அன்பான உள்ளங்கள் கண்ணாடிபோலெதிர்
ஆழம் புரிந்துகொள்ளும்
முன்னாலிருப்பதை காட்டிவிடும்
முகத் திரைக்குள் ஊடுருவும்
பின்னால் நடப்பது ஏதறியோம் -சிலர்
பேச்சு மயக்கிவிடும்
தன்னால் நடப்பது யார் நிறுத்த இந்த
தாரணியில் முடியும்

கால்வைத்துப் போன திசையினிலே சில
கல்லுமிடித்துவிடும்
ஜில்லென்று மேனி துடிதுடித்து ஒரு
சொல்லும் பிறந்துவரும்
அல்லலுற்று மன மேடையிலே சில
ஆட்டங்கள் கண்டுவிடும்
வல்லென வாழும் அவ் வாழ்வுக்கல்லால்
பல நெஞ்சங்கள் ஏனோஅழும்?

வில்லைவளைத்தவன்முல்லை மலர்கணை
விட்டிடும் மன்மதனால்
எல்லையற்ற சுகம் எண்ணி மனதினில்
இன்பக் கனவுவரும்
கல்லும் கரைந்து கணம் தடுமாறிட
காட்டினில் தீஎரியும்
இல்லையென வாழ்வு ஆகி உயிர் துடித்
தேங்கிடும் நாளும்வரும்

தொல்லை தரும் இந்தவாழ்வு கசந்தொரு
தூர நினைவுவரும்
எல்லைகடந் தந்த வானில் கலந்திட
ஏனோமனம் இசைக்கும்
கல்லை இணைத்தொரு கடல்குதித்திட
காணும் இதயம் சொல்லும்
நல்லவர் நட்புமில்லாத மனம்தன்னை
நாடி இருள்மயக்கும்.

சொல்லும் இனியதோர் சுந்தரத்தேனிசை
செவியில் கேட்டுவிடு
செல்லசிறுவர் மழைலையிலே உந்தன்
சிந்தனையைச் சிதறு
நல்லதமிழ்கவி நாளும்படித்து ஒர்
வல்லமனது கொள்ளு
வாழ்வின் கசப்பினை மாற்று திடமுடன்
மற்றொரு பாதை செல்லு

Saturday, November 13, 2010

தமிழ் தந்த கவிமலர்!

மலரோடு மலர்மோதும் இதழ் நோவு பெறுமோ
மலர்கொண்ட இதழ்தன்னில் ஒருகாயம் வருமோ
அலர்கொள்ளு மிதழ்மென்மை அதுபோலு முள்ளம்
கலைவானில் எதிர்மோதும் களிப்பானதன்றோ

மதுவான தனையேந்தும் மலர்கொண்ட மென்மை
அதுபோல கலைதேர்ந்த உளம் கொண்ட தன்மை
எதுவாக இருந்தாலும் இவர்கொள்ளும்மேன்மை
அதுதானே  தமிழ்என்னும் மொழி கொண்ட பெருமை

கவியென்ப தழகான கலைவண்ணப் பூக்கள்
புவிமீது எழுகின்ற பொழில்நீரின் அலைகள்
குவிந்தாடும் மலர்போலக் கொண்டேபல்வண்ணம்
அவிழ்ந்தோடும் அலையாக அழகாக வளரும்

இரும்பான தழல்சேர எழிலான தொன்றாய்
கரும்பான நெரிந்தாலே கனிபோன்ற இனிதாய்
வருமாதல் போலெம்மை வளமாக்கும் கவியாய்
உருவாக்கும் தமிழன்னை உளம்வாழ்த்துகின்றேன்

ஏங்க வைத்த பொற்காலம்!

தூங்க மரநிழலும் தோய்ந்தோட மாமழையும்
தாங்கும் வாழ்வுதன்னில் தாமரையில் நீரெனவே
ஆங்கும் ஈங்கும் என அலைந்துதிரிந்து வாழ்வுக்
கேங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ!

பூங்கொத்துவிரியும் புள்ளினம் வான் பறக்கும்
ஓங்கும் எழில்கண்டு உள்ளம் தவித்துஅழும்
பூவாய்சிரித்திடவும் போய்வானில் பறந்திடவும்
ஏங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ

மாங்காய் கடித்தோடி மல்லிகையை கூந்தலிட்டு
தேங்காய்குரும்பைகட்டி தேரிழுத்து வாழ்ந்தஎம்மை
நான்காய் சுவரடைத்து நடுவீட்டில் சிறையிருத்தி
ஏங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ !

தங்கை தனியிடத்தில் தாயோ மறு சிறையில்
நாங்க இருளறையில் நடுஅண்ணன் கல்லறையில்
தேங்கி அழுதுமென்ன தெய்வம் வருவதில்லை
ஏங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ!

தென்னம்ர நிழலில் தென்றல் உரசிவர
வன்னிவயல்ஓரம் வளர்ந்தமுதிர் கதிரறுத்து
அன்னையுடன்சேர்ந்து அகமகிழ்ந்த நினைவெண்ணி
ஏங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ

கண்ணில்நீர்வழியக் கதறுகிறோம் சிறையிட்டு
பெண்மைஅழித்தெம்மை  பேயினங்கள் ருசிக்காணும்
மன்னன் கொடும்ஆட்சி மறைந்தெங்கள் வாழ்வுபெற
ஏங்கவைத்த பொற்காலம் இதுவன்றோ!

Friday, November 12, 2010

மன்னவனோ இவன்!

கோவிலோ கூடமோ மாளிகையோ -இது
 கொற்றவன் நிற்கவே மாடமதோ
மாவிலை கட்டிய தோரணமோ -இம்
 மன்னவன் சாயச் சிம் மாசனமோ
தேரிலே சுற்றிடும் ஆனந்தமோ -அது
  தென்றலேறி விளையாடிடுதோ
பூவிலே தொங்கும்பல் மாலைகளோ -இடை
  பூத்ததும் வானத்துத் தாரகையோ

ஏறியே ஓடத்தான் மேகங்களோ -இந்த
   ஏழையை சுற்றிநல் தேவர்களோ
கூறியே கொட்டினர் பூமழையோ -இவன்
    கொண்டது வாழ்வில்அரி தல்லவோ
பேறிலே நல்லதோர் பேறிதுவோ -அவன்
   பிரம்மனும் எண்ணாப் பெருங்கொடையோ
மாறியே கொள்ளும் பகலிரவோ -இம்
   மாற்றம்மென் வாழ்வில் பெருங்கனவோ

அன்பினில் இனிய செந்தமிழே -என்
   ஆவி கலந்திட்ட பொன்மகளே
என்பிலும் ஊடேஓர் தீஎரிதே -இதில்
     இன்ப நினைவும் பெருகிடுதே
பொன்னெனும் வெண்ணிலா பூத்திருக்க -அயல்
    பொய்கையில் நீரலை ஆர்ப்பரிக்க
சின்னஇசை பாடித் தென்றல்வர -அதில்
    செவ்விதழ் பூமணம் சேர்ந்துவர

மின்னும் வண்ணவெடி மத்தாப்பென என்
   மேனியும் இன்பமாம் பூச்சொரிய
கண்ணிலே ஆனந்த நீர் பெருக -இது
   கனவேயென் றென்மனம் கேலி செய்ய
தன்னிலே சொர்க்கம் தரைநழுவி..வந்து
   தாழுதே காலடி தாங்கிடுமோ
என்னிலேஅன்பு கொள் செந்தமிழே இனி
   இங்கிவன் உன்மடிப் பிள்ளையன்றோ!

Thursday, November 11, 2010

கவியும் தமிழும் நானும்

கவி என்ற தேரேறித் தமிழென்னும் உலகோடி
களிகாண மனமாகினேன்
செவி கொள்ள இனிதாகச் சிறிதேனும் பதமாக
செந்தமிழ் இசைபாடுவேன்
புவிவாழும் தமிழன்னை பொழுதேனும் மனம்கோணிப்
போகாமல் மொழி போற்றுவேன்
குவி வண்ண மலர்கொண்டு திருஅன்னை அடிபோற்றித்
தினம்தினம் துதி பாடுவேன்

கவிஎன்னும் சுவைவீணை உணர்வென்ற இழைதொட்டுக்
களிகொள்ள இசைமீட்டுவேன்
புவிமீது தமிழன்னை இருபாதம் அடிமீதில்
போயெந்தன் தலை சாத்தினேன்
குவி வானம் பொழிகின்ற மழைபோல இவன்நானும்
குளிர்கொண்ட கவி கொட்டுவேன்
செவிதன்னில் இனிதென்று செந்தமிழ்ச் செல்வியும்
சிலிர்த்திட உணர்வேற்றுவேன்

பழம்தேனும்,வெல்லமும் பாகும் கலந்து ஒரு
பாலிட்ட இன்ப சுவையில்
விழைந்தோர் கவிசெய்து வீரமகள் தேவியவள்
வேண்டுவரை ஊட்டி நிற்பேன்
குழைந்தமுது உண்டவளை கொண்டைக்கு மலர்சூட்டி
குமுத மலர்ப் பாதம்தன்னில்
தளை சந்தமணி சிலம்பு தான்கொண்டுஎழில்கூட்டி
சாமரையும் வீசியே நிற்பேன்

துள்ளியுமே ஓடிவரச் சுந்தரமாய் பாட்டினிலே
சொல்லாலே தாளமுமிட்டுத்
தெள்ளிசையைத் தென்றலென தேகம்தனை வருடியவள்
தீந்தமிழின் தாகம் தீர்ப்பேன்
புள்ளினமும் இசைபாடப் பூவண்டு சுதிசேர்க்கப்
பொன்மாலை இளவேனிலில்
அள்ளியொரு ஆயிரமாம் அழகான கவிசொல்லி
அழகென்றே தமிழ் பாடுவேன்

Wednesday, November 10, 2010

பிரிவென்னும் துயரம்!

நீ அழுதால் நான் வருவேன் அன்பெனும் தேரில் -என்
நினைவழுதால் யார்வருவார் நீயில்லை யாயின்
பூ அழுதால் தேன் வடியும் பூஇதழ் தன்னில் பகற்
பொழுதழுதால் இருள் பரவும் பூமியின்கண்ணில்

மீனழுதால் நீரறியு மாழ்கடல்தன்னில் அந்த
மேகமழை தான்முகிலின் ஊற்றிடும் கண்ணீர்
நானழுதால் நீயறிவாய் நாளதுதன்னில் -இன்று
நாளிலுயிர் வாடுகிறேன் நீயின்றி வீணில்

தாயழுது நான் பிறந்தேன் பூமியில் ஓர்நாள்- ஒரு
தரமழுது நிலம்விழுந்தேன் தரணியில் சேயாய்
வாயழுது சோர்ந்துவிட்டேன் வாழ்வினில் பூவாய் இனி
வார்த்தையின்றி அழுவது என் விதியடி பாவாய்

சேயழுதால் தாயெடுப்பாள் தீர்த்திடச் சோகம் அதை
சேர்த்தணைத்து கொஞ்சிடுவாள் சென்றிடும் கோபம்
நோய்பிடித்தால் தேகம்அழும் நொந்திடும் பாவம் - என்
நினைவழுது நேர்வது உன் நெஞ்சமே கூறும்

பாய்படுத்தால் ஊரழுது பார்க்குமே, காகம்- மாண்ட
பறவைக்காக சேர்ந்துஅழும் பெரிதொரு கூட்டம்
பாய் அலைகள் ஓடியழும் புரள்வது கடலில் - கரை
போயழுது திரும்பிவரும் தனிமையென் தவிப்பில்

தாமரைப்பூ நீரிலாடும் போலது நானும் - இங்கு
தவித்துமனம் ஆடுகிறேன் தாங்கியே நாளும்
நீமறைந்து நிற்பதென்ன நெஞ்சமே இன்னும் என்
நினைவிருக்க வந்துவிடு நிறம்கொள்ள வாழ்வும்

விறகடுக்கி தீயிலிட்டால் வேகுமே தேகம் -சிறு
விரல் நகமும் மிச்சமில்லை சாம்பலே ஆகும்
உறவிருக்கும் போதிலெனில் ஒன்றெனக் கூடு -இந்த
உலகமதில் எதுவும் இல்லை உயிர் சென்றபோது

நிறமழிந்து வெளிறிவிட்டால் உடலது வீணே அந்த
நினைவழிந்து பிரிந்துவிடும் உலகமே போமே
மறந்து உனைவாழ்த லுண்டோ மனமழ நிதமும் -நல்ல
மாற்றத்துக்கு வழியுமுண்டு மாறிடு மனமும்


 

Tuesday, November 2, 2010

உலகம் யாவும் அவளே சக்தி!

உருளும் உலகும் ஓடும்நதியும் ஓங்கிப்பெருகும் கடலும்
புரளும் அலையும் புயலும் பொழுதில்சிதறும் எரியும் மலையும்
கருவும் உயிரும் கனவும் உலகில்காணும் செயல்கள் யாவும்
பெருகும்வண்ணம் உளமே கொண்டாள் அவளே அன்னை சக்தி

தரையும் விண்ணும் தாவும்காற்றும் தாண்டி சென்றால்வானும்
விரையும் அண்டம் வெளியில் பந்தின் குவியல் எனவே சுழலும்
நிரையில் ஓடும் ஒளிவெண்படலத் துறையும் கோள்கள் பலவும்
வரையும் ஒழுங்கில் வார்த்தே செய்தாள் வடிவே அன்னைசக்தி

பனியும் குளிரும்பச்சை இலையும் படரும் கொடியும் தவழும்
கனிகொள் மரமும் காலம்காணும் கனிவேதாரும் வகையும்
தனிமை மனமும் தாங்காநெஞ்சும் தவிப்பும் தாகம்வெறுமை
மனிதம் கொள்ளும் நிலையும் செய்தாள் மங்கா தொளிரும் சக்தி

உயிரில்நின்றாள் ஊனில்சென்றாள் உதிரம் ஓடச்செய்தாள்
வயிறில் பசியும் வாழ்வில்வெறியும் வார்த்தே எம்மைச் செய்தாள்
பயிரில்செழுமை தந்தாள் ஆயின் பருவச் செழுமைதந்தே
உயிரில் தீயை எரியச்செய்தாள் இவளே அன்பின் சக்தி

விண்ணில் சக்தி, மண்ணில் சக்தி, வேகக் காற்றில்சக்தி
அண்டம் எங்கும சக்தி, சிதறும் அனலின் சீற்றம் சக்தி
எண்ணம் கொள்ளும் எதுவும் சக்தி இவளே எங்கும் சக்தி
கண்ணுங்காணா வானத் தொலைவில் காண்பாள்அவளே சக்தி

நானல்ல அவளே எல்லாம்!

கருவாய் உதிப்பாள் கணமே வளர்வாள் கவிதையென மலர்வாள்
தருவாள் மனதில் சுகமும்இதமும் தமிழாம் இவள் எழிலாள்
சிறுவாள் கொண்டே எதிரே நின்று சீறும்பகை முடித்து
பெருவாழ்வெய்த செய்வாய் என்றாள் பேசுந்தமிழ் எனக்கு

வருவாய் எந்தன் திருவே உருவே வாசல்தனைத் திறந்து
மருவாய் எனது மனதில் என்றும் மறையா தொளிவிளக்கு
உருவாய் உள்ளத் தெழுவாய் நடப்பாய் உள்ளம்தனில் இருந்து
பெரிதாய் நதியாய் பெருகித் தமிழாய் பொங்கிவழிந்தோடு

புகழும் பணமும் பொய்யா யுழலும் புவிதானோர் துரும்பு
நிகழும் வாழ்வில் நினையா தவளை இருப்பவனோ விரும்பு
இகழும் பொழுதும் ஏற்றும்பொழுது எண்ணாதெனது என்று
முகிழும்மனதின் தமிழாம் அவளே முழுதும் எனக் கருது

தமிழோஎந்தன் திறமையன்று தலைமேல் கனம் இறங்கு
அவளே வந்தாள் அருகேநின்றாள் அன்னைத் தமிழ்படித்து
குமிழ்வாய் உதிரும் குரலை எழுதாய் என்றாள் எனைக்குறித்து
கமழ்பூ மலராய்த் தமிழில் கனிந்தாள் கவிதைக் கிவள் பொறுப்பு

Saturday, October 23, 2010

அழுது புலம்பி !

 

எத்தனை நாளிந்த பொன்னெழிற் கட்டிலில்
         நித்திரை கொள்ளுவனோ
கத்தும் எருதேறும் காலன் வாசல்தனை
         தட்டும் வரைதானே
நித்தம் எழுந்து நான் நிற்பது பூமியா
       நிச்சயமா என்று கண்
கொட்டி விழித்து ஓர் பார்வை விட்டுபின்னர்
       கட்டிலை விட்டெழுவேன்

எப்ப எழுந்து  விழி திறக்க இது
    சொர்க்கம் என்றாகுதுவோ
சுற்றி நீள்பல்லொடு சூலம்பிடித்தோர் கை
      பற்றி இழுப்பனரோ
செய்த பிழையாவும் பட்டியலிட்டு எனை
   சுட்ட எண்ணெய் குளியல்
கத்தையான தொரு பாம்புகிடங்கினில்
     கட்டி இறக்கல் என

அத்தனையும் செய்து ஆனந்தமாய் ஆகா
    அற்புதம் என்று எமன்
கத்திக் குலுங்கி சிரிக்கும் நாளது
    பட்டென்று வந்திடுமோ
என்று மறுகி மனம் சலித்து இந்த
     மண்ணில் இருந்துவந்தேன்
எத்தனை நாள் இங்கு விட்டுவைப்பானென
      ஏதும் புரியவில்லை     

சத்தியமாக என் செத்திடும்நாள் குறி
  கேட்டும் தெரியவில்லை
சாத்திரம் சாதகம் ஜோதிடம் என்று
    பார்த்தும் பயனொன்றில்லை
இப்படியே பல எண்ணங்களோடு
    இங்கிவன் நான் இருக்க
குன்றுமலையென தோள் நிமிர்ந்த ஒரு
     மல்லன் என் தோழனவன்

நேற்றைக்குமுன்தினம் நீண்டுபடுத்தவன்
    மூச்சை நிறுத்திவிட்டான்
சொத்து பணம் வீடு கட்டியவள் பிள்ளை
     அத்தனையும் மறந்தான்
நித்திலம் விட்டுமறைவதுமானிடர்
   நிச்சயம் என்பதனால்
செத்த சினேகிதன் எண்ணி ஒருசொட்டு
  கண்ணீர் விழவேயில்லை

கண்டவரோ இவன் கல்நெஞ்சனென்று
   கணக்கிடலாம் அறியேன்
என் மனதோ நீ முந்திவிட்டாய்
    நான் பிந்திவருவேன் என்குது  
போவது ஓர் இடம் போவதும் திண்ணம்
    பார்ப்பது ஓர்படம்தான்
ரிக்கட் வரிசையில்நீ முந்தி நான்பிந்தி
    நிற்பதுபோல் இதுதான்

ஏனழுது புலம்பிக் கதறணும்
    வேடிக்கை யாகுமடா
போனவரை பார்த்து போக இருப்பவர்
    புலம்பி அழுவதோடா
ஆண்டவன் தந்ததை மீண்டுமெடுக்கிறான்
      என்றான் கவியரசன்
மீண்டும்தா என்று மிஞ்சியும் கெஞ்சியும்
      மீள்வது  அல்ல உயிர்

நீசம் மலிந்திட்ட பூமியை விட்டவர்
   செல்லும் இடம் தெரியா
ஆயினும் நிச்சயம் அங்கவர் காண்பது
     இவ்வுலகைவிட்டமேல்
போயின கண்டு புலம்பிஅழு தவர்
    மேனி விழுதல் விட்டு
ஆம் இவன் மீளா அமைதி கண்டான் என
     அஞ்சலி செய்து விடை கொடுப்போம்

Thursday, October 21, 2010

எழுந்து நில்லு! ஈழம் வெல்லு!

கொட்டியடி மேளம் கூவி எழுந்திடு
   தட்டடா கைகளிங்கு
பட்டவினைபோதும் பற்றியெழுந்தது
   நெஞ்சில் பெருந்தீயென்று
சுட்டவன்கொன்றவன் சுற்றித்திரிகிறான்
   வெட்டவெளியிலின்று
சொல்லு சுதந்திரம்கேட்டவன் வாழ்வதோ
   கூட்டில் குருவிஎன்று

வெட்டிக்குருதியைக் கொட்டச் சிரித்தவன்
   பட்டுத் துணியுடுத்து
கட்டிமாடிமனை காசு,பணமென
   கன்னியர் சூழ நின்று
பட்டம்பதவியைப் பார்த்திடநாமுமோ
   குட்டக்குட்டக் குனிந்து
சட்டியில் ஊற்றிய கஞ்சியை ஏந்திட 
   வெட்கமோ இல்லைச்சொல்லு

தட்டியெழுப்பிடு நீதிதேவன்தனை
   தூங்குவதேனோ என்று
கொட்டாவி விட்டுமே கூனிக்கிடந்தது
   இத்துடன் போதுமென்று
குட்டகுட்டக் குனிந்துவிட்டேனினிக்
    குப்புற வீழ்வேனென்று
எட்டஇருந்துபோதும் எமக்கொரு
   உற்றநீதி சொல்லென்று

வட்டக்குளநீரில் வாரிக்கல்லைஎறி
    சுற்றும் அலைகளங்கு
விட்டு இருந்திட நீரலை தூங்கிடும் 
    வையகம்போல இன்று
எட்டுதிசையிலும் எங்கள் நீதியெங்கே
    கத்து குழறு நின்று
சட்டக்கதவுகள் சற்றுதிறந்திடும்
   தட்டநம் கைகள் கொண்டு
 
வெஞ்சமர் விட்டால் விடிவு வருமென
    சொன்னவ ரெங்கேயின்று
கஞ்சர்கயவரை நம்பிஉலகமும்
     கைவிட்ட தெம்மையன்று
கொஞ்சிக்குலவிடும் சிங்களமும் தமிழ்
    ஒன்றாயிருங்கள் என்று
கூறியவர்தம்மை கூப்பிட்டுகேளடா
    எங்கே நடக்குதென்று
 
கன்னி உடலைக் கதறக்கிழித்தவன்
     கட்டிலில் தூங்குகிறான்
காக்கநினைத்தவன் யாக்கைவிடுத்துமே
    காற்றினில் நீந்துகிறான்
வன்னியழித்திட வந்தபடைமுழு
     மண்ணு மழிக்குமென்றோம்
வாயிலடித்து வயிற்றிலே குத்தி
     வா எம்மை காக்க என்றோம்
 
வெந்தபுண்ணில்சுடு வேலினைப் பாய்ச்சியே
     வேடிக்கை பார்த்தவரின்
வீட்டுகதவினைத் தட்டுவோம் இங்குதான்
     விட்ட பிழைகள் என்று
கந்தலுடுத்துமோர் கண்ணியம் காத்தவர்
    எங்கள் தமிழர் என்று
கட்டிய `ரை`யுடன் கோட்டுமணிந்தவர்
    சத்தியம் கெட்டாரென்று

சேற்றையள்ளி நறுஞ்சந்தணம் பூசென்று
     சொன்னவர் கையிலின்று
நாற்றமெடுத்திட மூக்கைப் பிடிக்கையில்
    நாம்விடக் கூடாதங்கு
காற்றில் எழுந்திடக் கத்திக் கதறியே
    கூத்திடு நீதிகேட்டு
ஈற்றில் வருவது எங்களீழம் என்று
     மாற்றி எழுதச்சொல்லு

Wednesday, October 20, 2010

புன்னகை மறந்த பூக்கள்!

சின்னப் பெண்ணே சித்திர நிலவே
சிரிப்பை மறந்தாயோ
சிந்தும் விழிகள் சொல்வது என்ன?
சோகம் சொல்லாயோ!
கன்ன மிரண்டும் கன்னிச் சிவந்தே
காணுவ தேனம்மா?
கயவர் செய்யும் கொடுமை கண்டு
கண்களின் தீயெரிதோ!

எத்தனை கொடுமை ஈழமண் மீது
இளைய மனங்களிலே
குத்திடும் ஈட்டிகள் கூரெழும் வாள்கள்
கீறும் வலி கொடிதே
முத்தம ளித்திடும் அன்னை யழித்து
மூர்க்கர் குதித்ததுவும்
ரத்தமி ழந்தவள் வெற்றுட லாகிய
வேளையும் மறப்பாளோ

கத்தி கிழித்தவர் கதறிய குரலும்
காணும் கிலே சங்களும்
பொத்தென வீழும் குண்டுகளு மதில்
பிய்த்திடும் தேகங்களும்
சித்தம் கலங்கிட திக்கது கெட்டு
சிதறிடும் மாந்தர்களும்
சத்தமெடுதவர் வெட்டிய வெறியும்
கக்கிய நஞ்சுகளும்

எத்தனை கண்டாள் இத்தனை யுமவள்
இதயம் தாங்கிடுமோ
சத்தியம் தோற்றபின் மிச்சமிருப்பது
சித்திரவதை விடுமோ
நித்திரையின்றியே நெஞ்சு துடித்திட
நீர்க்கதியாயிருந்து
எத்தனை இரவுகள் உத்தரித்தாளிந்த
சித்திரப் பொன்விளக்கு

இரத்தமும் கொலையும் இளையவள் நெஞ்சில்
இட்டவலி பெரிது
முத்தமும் அன்பும் முழுவதுமின்றி
முகமலர் வாடிடுது
கத்தியும் கேளாக் கடவுளின் இதயம்
காய்ந்து கடுத்திடுது
சத்திய அன்னையின் சற்று மிரங்காப்
செந்தமிழ்ப் பூக்களது

எண்ணெய் விடுத்துக் கண்ணீர் கொண்டு
ஏற்றிய தீபமது
கண்ணை இழந்தொரு ஓவியன் தீட்டிய
காரிருள் மேகமது
பொன்னை ஒதுக்கிப் புழுதியிற் செய்த
புதுவகை சிற்பமது
என்ன இருந்தும் இறைவனின் நெஞ்சு
இரும்பில் ஆக்கியது

என்று எழுந்துநல் லொளிபரவும் இந்த
இரவும் விடிவதற்கு
சென்றவர் வந்தே சினமெடுத்துப் பகை
வென்று முடிப்பதற்கு
அன்றுவரை நீ அழுதிட வேண்டும்
ஆகும் ஒருகணக்கு
தென்றல் வரும் ஒருசேதி சொல்லும் கதிர்
தீப்பிழம் பெழுவதற்கு!

Tuesday, October 19, 2010

ஏன் படைத்தான் எமை?


கண் படைத்தா னேன் அழுவதற்கா
கால் படைத்தா னதைத் தொழுவதற்கா
மண் படைத்தான் கீழ் விழுவதற்கா
.மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா

விண் படைத்தான் ஒளி வருவதற்கா
வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா
கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே
கடும்புயலாய் எம்மை வருத்திடவா
 
பூக்கள் செய்தானதைப் பறித்திடவா
பூவித ழேன்கைகள் பிரித்திடவா
..பூக்கள் வைத்தான்வண்டு குடித்திடவா
போதை கொண்டேமலர் வருத்திடவா
 
பாவை கொண்டாலெழில் பலிகொள்ளவா
பருவ உடல்தினம் வதைசெய்யவா
தேவை என்றாலின்பம் துய்த்திடவா
தேடியதும் அதைத் தீயிடவா
 
நாடு என்றால்அது நரகமதா
நரபலி தானவர் அறநெறியா
தேடு என்றால்ஒரு திரவியமா
தீதுசெய்தே வரும் பாவங்களா
 
அரசன் என்றால் அவன் அறிவுளனா
.ஆளைக்கொல்லும் ஒரு எமன்மகனா
சிரசு கொய்தே அவன் சிரிப்பதற்கா
சேவை என்றாலுயிர் குடிப்பதுவா
 
இனமழித்தால் அது இறைமை என்றா
இரத்தம் பட்டே செம்மைஅடைந்திடுமா
தினம்படுபொய் சொல்லத் திறமைஎன்றா
திருகு தாளம் சன நாயகமா
 
உலகமென்றால் அது உழலுவதா
உயிர்கள் என்றால்ஆடும் ஊஞ்சல்களா
கலகமென்றால் பெருங்காவியமா
கண்களில் நீரிடல் அரசாங்கமா
 
வெட்டுகிறான் எம்மை விரட்டுகிறான்
வேடிக்கை பார்ப்பது விரிஉலகா
கட்டுகிறான் கடல் வீசுகிறான்
கையறு நிலைகொண்ட கவினுலகா
 
எத்துணைநீசரை எதிர்த்து நின்றோம்
எடுத்தடி வைத்தவர் திகைக்க வைத்தோம்
நித்திலம்மீதினில்நேர்மைவெல்ல
நெஞ்சினை முன்னே நிமிர்த்திவந்தோம்

பூக்களைக் கொய்தனர் இடியிடிக்க
புதுவிஷம் வைத்தனர் துடிதுடிக்க
தீக்களை வைத்தனர் தெருமுழுக்க
தீய்ந்தது ஈழம் தேம்பியழ

ஒருவனை எதிர்த்தது உலகமெல்லாம்
ஒருநிரைசேர்ந்தது உண்மை கொல்ல
பெருகி யதோ பேரவலமல்ல
பேய்களின் பிடியின் ஆழங்களே

இறந்தது ஈழ தமிழனல்ல
இயற்கையின் தர்மதிருவுளமே
எரிந்தது தீயில் ஊர்களல்ல
இறையவன் கோவில் வாசல்களே

உயிருக்கு விலை என்ன?

 
உயிருக்கு என்னவிலை முருகா - இந்த
 உலகத்தில் தமிழுக்கு விலையுண்டோ பொதுவா
தயிருக்கும் கீரைக்கும் விலையா -நம்
 தமிழ்சிந்தும் ஈழத்தின் உதிரத்துக் கில்லையா?
வயிரத்தின் திடம் கொண்ட தமிழன் - அவன்
 விலையற்று வெறுமைக்கு உயிர்விட்ட விதமா!
துயரத்தின் மடி தூங்க விதியா அவன்
 தோல் கொண்ட சதையென்ன இலவசப் பொருளா?

பயிருக்கு செடியுக்கும் நிலமாம்,- பற்றிப்
 படர்கின்ற கொடியுக்கும் இடமீந்த இறைவா!
பெயருக்கு தமிழ்மட்டு முயர்வாம் அது
 பிறந்திட்ட மண்ணிலே ஓரிடம் இல்லையா
கயிறுக்கு உயிர் கொள்ளும் எமனும் - ஓர்
 கணக்கின்றி உயிர்கொள்ள தரமற்ற பொருளா?
;`அயலுக்கு வாழ்கின்ற மொழிகள் - அவர்
 அனைவர்க்கும் பெருவாழ்வு அகதிக்கு நாமா?
`
வயிறுக்கு சோறற்ற வாழ்வா நாம்
 வழியற்று நிலமற்று திரியென்ற கேடா?
பெயருக்கு தமிழ் பென்னம் பெரிதா அதை
 பேசும்மெம் தமிழர்க்கு கதியற்ற நிலையா?
முயலுக்கும் ஒருவீடு இதமாய் -தமிழ்
 மூச்சுக்கு விரிகாடு வெறும்வெளி தானா?
செயலுக்கு என்னவோ முருகா - நாம்
 செய்ததோ பெரும்பாவம் தவறென்ன இறைவா!

புயலுக்கும் மழையுக்கும் நடுவே - மின்னும்
 பேரிடிக் காற்றுக்கும் தலைதந்த நிலையாய்
துயிலுக்கு ஓருவீடு இன்றி - அவன்
 துணிபோட்டு மரம்கீழே தூங்குதல் சரியா?
வயலுக்கும் பெருங்காணி தோட்டம் - சொந்த
 வாழ்வென் றிருந்தவர் வறுமைக்கு இரையா
 துயருக்கு முடிவேதும் இலையா நாம்
தூசாக தரம்கெட்டு அலைகின்ற விதியா ?

சுழல் பெரும் பந்தொன்று செய்தாய் - அதை
   சுற்றிடவைத்தேநீ உலகென்று தந்தாய்
 வளரென்று மானிடம்செய்தாய் - பல
    [வகையாக்கி அவர்பேச மொழீயீந்து நின்றாய்
பழம் பெரும்தமிழென்று சொன்னாய் -பெரும்
படை கொண்டு அசுரரை வென்றுதான் நின்றாய்
 அழகென்றே தமிழென்று பேசி தமிழ்
அளவற்ற வீரத்தின் அடையாளம்என்றாய்

நிலையின்று பாரடா முருகா உன்
  நீள்விழி பன்னிரண்டில்லையா இறைவா
சிலையென்று நின்றிடல் செய்யா - தெம்
 சிறுமைக்கு வரமீந்து செழித்திட உரம்தா
தலையிலே தமிழ்மீதுஏறிப் - பலர்
 தரணியில் சுகமாகச்செய் யும்சவாரி
நிலைமாறி நாமுயர வேண்டும் - அந்த
 நீசர் எம் அடிமீது தலைசாய்க்க வேண்டும்

கண்டோம், ஆயின் கண்டிலோம்

வானம் பொழிந்து விளைந்துமென்ன -பூவின்
  வாசமெழுந்து மலர்ந்துமென்ன -குயில்
கானம் இசைத்துமே கண்டதென்ன -நம்
  காயும் நிலம் ஈரம் காணலையே
 
விண்ணில் நிலவு எறித்துமென்ன -குளிர்
  வீசுந் தென்றல் உடல் நீவியென்ன -சிறு
தண்ணொளி பூமி தழுவியென்ன - எங்கள்
  தர்மம் பிழைத்திடக் காணலியே


தேனைக் கடித்து இனித்துமென்ன -நல்ல
   தீந்தமிழில்கவி சொல்லியென்ன -வட்டப்
பானை பிடிக்குமெம் மங்கையர்கள் அவர்
   பாவம் விமோசனம் காணலையே

கோவிலைச் சுற்றி நடந்துமென்ன ஒரு
  கோபுரம் கட்டி வணங்கியென்ன சிறு
பூவிலே மாலைகள் இட்டுமென்ன மண்ணுள்
  போனவர் எண்ணம் பலிக்கலையே

ஆயுதம் தூக்கி எறிந்துமென்ன -பெரும்
  ஆள்படை சேனைய ழிந்துமென்ன -ஒரு
காகிதம் சட்டம் கடும்விதிகள் -சொல்லி
  காட்டியவர் நீதி காக்க வில்லை
 
வாழ்வைஅழித்தவர் கண்டதென்ன - எண்ணி
  வஞ்சம் இழைத்தவர் கொண்டதென்ன -அவர்
ஆயுள் முடிந்து நடக்கையிலே - அள்ளி
  அத்தனையும் கொண்டு போவதுண்டோ
 
கொண்ட உடையதும் சொந்தமில்லை அவர்
  கூட உடலுமே செல்வதில்லை புகழ்
கண்ட பதவியும் காசுகளும், அவர்
   கையிலெடுத்து விரைவதில்லை
 
கொன்று குவித்து உயிரெடுத்துத் - தம்
  கூட்டம் பிழைத்திட ஆடுகிறார் அதில்
வென்று குவிப்பது சாபங்களும் அவர்
  வீடு நிறைந்திடப் பாவங்களே!

மண்ணில் ஈதெங்கும் நடப்பதென்ன -ஒரு
  மண்ணும் புரியல்லை மாதேவனே- இங்கு
கண்ணியம் காப்போர் கருகிவிட வெறும்
   காதகர் வாழ்வதன் காரணம் ஏன்?

Saturday, October 16, 2010

தங்கைக்காக ஒரு பாடல்

கண்களில் நீரிடவைத்தவன் யாரோ
காதகனோ அவன் பேரெதுவோ
பெண்ணின் மனம்தனை பிய்த்து எறிந்தவன்
நீதியனோ அன்றி பாவிதானோ
மண்ணில் பெண்ணின் மனம்மெல்லக் கருகிடும்
பஞ்சளவே யதன் வன்மையதோ
எண்ணி மனம் கொள்ளும்வேதனை பாதையில்
கம்பளமோ இன்றிச் செந்தணலோ

தாமரை பூப்பது தண்ணீரிலே அது
தாழு மெழும் மதைத் தாங்குதம்மா
பூமரம்நிற்பது மண்மீதிலே அதை
மேவிஅலை வந்து தாங்காதம்மா
நாமும் நினத்துப் பிறக்கவில்லை இந்த
நாடுமெண்ணி நடந்ததில்லை
யாவும் நடப்பது நம்செயலா அது
யாரோ நடத்தும் வினோதமம்மா

பூவும் அழிந்திடும் வேளைவரை அது
புன்னகை பூக்கத் தவறவில்லை
யாவும் முடிந்தென ஆகும்வரை இங்கு
நாமும் சிரித்திட வேண்டுமம்மா
ஏன்மனம் வாடுது இன்பமுடன்கதை
சொல்லிமகிழ்ந்திட வேணுமடா
மானெனத் துள்ளி மயிலென ஆடியே
மாது நீ புன்னகை பூத்திடம்மா

மெல்லிளம் பூவாக நானிருந்தேன் எந்தன்
மேலே மிதித்தவர் ஆயிரமாம்\
கல்லெனவே மனம் ஆகியபின்னரே
காக்க முடிந்தது வாழ்விலம்மா
மென்மை யினிமையென் றாயிடினும் அது
மேதினியின் வெம்மை தாங்காதம்மா
வன்மை கலந்திட வாழ்ந்திடணும் இது
வையகம் கொண்ட விதியொன்றம்மா

ஈயைப் பிடித்திடும் பல்லியொன்று அதை
எட்டி மிதித்திடும் பூனையொன்று
நாயோ கலைத்திடும் பூனை என்று எங்கும்
நாட்டில் வல்ல இனம் வாழுதல்பார்
காயமே கொண்டு மனமழுது இந்தக்
காலத்தில் ஏதும் நடக்காதம்மா
பாயப் பதுங்கிட தேர்ந்திடு நீ ஆயின்
பாசம் மறந்திடக் கூடாதம்மா

கோழியின் குஞ்செழில் மென்மையென்றால் அதைக்
கொத்திட ஆயிரம் காகமுண்டு
வாழி புலியென தீரம்கொண்டே அந்த
வாழ்வில் பெரும்பங்கு மீதியுண்டு
நாளில் மனதுகள் தேறுவதேயில்லை
நாட்கள் கடந்திட வேண்டுமம்மா
வாழி நலமென வாழ்த்தலன்றி வேறு
வண்ணமறியாத ஏழையம்மா

Tuesday, October 12, 2010

கண் விழித்துக் கண்ட கனவு

மாலைப் பொழுதினில் ஓர்நாள் - மன
     தில் பல எண்ணங்கள் கொண்டு
சாலை வழிதனிற் சென்றேன் - நல்ல
     சங்கீதம் கொண்டு குருவிகள் பாட
சோலைமலர் மணம்வீச - நல்ல
     சுந்தரத் தென்றல் அதைஅள்ளிப் போக
வேலைமுடிந் தெங்கும் வீடு - செல்லும்
    வீறுகொண் டேகும் மனிதர்கள் கண்டேன்.

சீறிச் சினத்தவள் கன்னம் = போல
    சிவ்வென்று வண்ணம் எடுத் தடிவானம்
மாறிக் கிடந்தது வெய்யோன் - இந்த
     மண்ணில் கொடுமைகள் தன்கதிர் மீறி
தேறிக் கிடக்குதே யென்று - நொந்து
     மேலைக் கடலில் உயிர்விடும் நேரம்
பூரிப்பு டன்மனம் துள்ளி - புள்ளி
       மானைப் போலக் குதித்தது கண்டேன்.

அந்தி கருகிடும் நேரம் - இருள்
      ஆடி, அசைந்து புவி கொள்ளும் நேரம்
மந்த மயங்கியோர் இன்பம் - கள்ளை
       உண்டவன்போல உணர்வதைக் கண்டேன்
செந்தமிழில் இசைபாடி - பல
       தெய்வத் திருத்தலம் எங்கும் பண்ணோசை
முந்திஎழ, அந்தமேகம், - அதை
        முட்ட எழுந்தநற் கோபுரம் கண்டேன்

இத்தனையும் கொண்டு இன்பம் - நெஞ்சில்
          எட்டி அலைமோத என்வழி சென்றேன்
எத்தனையோ அழகாக - இந்த
          ஊரை உலகைப் படைத்தவன் செய்தான்
வித்தைகள் அன்றோ புரிந்தான் - என்று
           வீறுநடை கொண்டு ஏகிடும்போது
பத்தைசிறு மரக்காடு - அதன்
           பக்கத்தி லோர்சுடு காட்டினைக் கண்டேன்

நட்ட நடுவினில் வேகும் - மரக்
        கட்டையி னுள்ளே கிடந்தது தேகம்
சுட்டெரியும் தீயின் வாயில் - அந்த
        சுந்தர தேகம் எரிவது கண்டேன்
இந்த மனிதனும் நேற்று - இந்த
        இன்ப உலகினைக் கண்டுகளித்தான்.
இன்று அவன் வெறும் கூடு - அது
        மண்ணில் கலந்து மறைந்திடப் போகுது

அத்தனையும் வெறும் மாயை - இங்கு
      ஆடும் களிப்பு நடனங்கள் யாவும்
வித்தகன் ஆண்டன் மேடை - தனில்
       வேடிக்கைக்காக விளையாடும் பொம்மை
நித்திலம் என்பது இல்லை - இங்கு
       நிரந்தரம் என்பதுசற்றேனும் இல்லை
செத்து மடிந்திட சூழும் - இருள்
        மட்டும் நிரந்தரம் என்றெண்ணி நொந்தேன்

பொன்னென பூத்த இவ்வானம், - அதில்
         போகும்வெள்ளி மலைபோன்ற வெண்மேகம்,
விண்ணில் பறக்கும் குருவி, - இந்த
          வீதி,மரம், ஓடிச்செல்லும் மனிதர்
தண்ணீர்க் குளத்தின் அலைகள்,- ஆடும்
           அல்லி மலர், கயல்மீன்கள் இவைகள்
கண்மூடும் மட்டுமே தோன்றும் - வெறும்
          ஞாலக்கனவுகள் என்பதை கண்டேன்

மாலை முடிந்திருள் கவ்வ - நாம்
       பாயிற்படுத்து தூங்கிடக் காண்போம்
காலையில்மீண்டும் எழுந்து - நாம்
      கண்ணை விழித்திட இன்னொன்று காண்போம்
யாவும்கனவுகள் கண்டீர் - கண்
        மூடித்திறந்தென காண்பது ரண்டு.
 ஒன்று விழித்திடப் போகும் - இன்
        னொன்று விழிகளை மூடிடப்போகும்

Monday, October 11, 2010

நீல வானில் நீந்துவேன் !

நீலமேகமதில் ஆயிரம்தாரகை
     நீந்திட எங்குமொளிப் பிழம்பு
காலவெளி விண்ணின் மாயகுழம்பினில்
    காணும் சிவப்பொளி மஞ்சளுடன்
ஊதாக் கடும்நீலம் உள்ளதொரு அண்டம்
    உள்ளே வெளிதாண்டி ஓடுகிறேன்
காது ஓம் என்னுமோர் ரீங்கார ஓசையில்
   காற்றில்லா ஆழத்தில் நீந்துகிறேன்

சட்டென்று சத்தமோர் நட்சத்திரம் வெடித்
     தெங்கும் ஒளிச் சீற்ற மூடுருவ
வட்டக்குழம்பிலே பற்பலவண்ணத்
     துகள்கள் பரந்தென்னைச் சுற்றிவர
வெப்ப மெழுந்தென்னைச் சுட்டுவிடஒரு
    நீலக்கரும்குழி தானுறிஞ்ச
குப்புற வீழ்ந்து சுழன்றுதொலைகின்றேன்
    சட்டென்று கண்ணை விழித்துவிட்டேன்

காணும்பகற்கன வாலெழுந்து ஒரு
    கட்டிலில் சாய்ந்து முகில்களினை
வானில் குரங்காக வண்ணத்துப் பூச்சியாய்
    வட்ட முகமாய் வடிவெடுக்கும்
மீளப் பரந்து உருக்குலைந்துபஞ்சாய்
    மெல்லிய மேகம் பறந்துசெல்லும்
கோலம் ரசித்துகிடந்தேன் அடஆங்கே
    தேவதையொன் றெழில் வானில்வந்தாள்

அந்தோஅழகிய தேவதையே வெண்மை
    ஆடைகள் பூண்ட எழிலரசி
எந்தன் மனதினில் கேள்வி யொன்றுஇந்த
    மண்ணில் வந்து நானும் ஏன்பிறந்தேன்
எங்கேயிருந்து பிறந்து வந்தேன் மீண்டும்
    எங்குசென்றே அமைதி கொள்வேன்
அங்கே யிருப்பது என்ன இந்தப்பெரும்
    ஆழவிண்ணின் வெளிகண்டதென்ன

வானோ பிரபஞ்சமா யாக்கி விரித்ததில்
    வண்ணக் குழம்புகள் வைத்தது யார்
ஏனோ இதுமர்மமென்று இருப்பதன்
    காரணமென்ன அறிந்துளயோ
ஆவி துறந்ததும் அண்ட வெளியினில்
    நாம்போகு பாதையோர் பால்வெளியோ
தாவிப் பறந்துவான் கல்லிற் படாமலே
    தூரம் சென்றேநாம் உறங்குவமோ

சூரியன்கள் பலதாண்டி வெறுமையில்
    காற்றுமில்லாப் பெரும் சூனியத்தில்
சீறிவரும் ஒளிச் சீற்றங்கள் மத்தியில்
    செல்லும் இடம்வெகு தூரமாசொல்
நெல்லை விதைத்து கதிர்வளர்ப்போமது
    முற்றியதும் அன்னம் உண்பதற்கு
கல்லை யுடைத் தில்லம் கட்டுகிறோம்குளிர்
    காற்றும் விலங்கும் தவிர்ப்பதற்கு

ஆனசெய லெல்லாம்காரணத் தோடுதான்
    ஆயின் பிறந்திட்ட காரணமென்
மேனி எடுத்திந்தப் பூமியில் வந்ததால்
    யாருக்கென்ன பயன் என்று கேட்டேன்
வானில் தெரிந்திட்ட தேவதையோஒரு
    வண்ணத்தடியினைக் கையெடுத்தாள்
தேனில் குழைத்திட்ட மென்குரலாலொரு
    சேதி சொல்லியொரு கோடுபோட்டாள்

சின்ன மனிதனே உன்னைப் படைத்தவன்
    விண்ணில் பரந்தெங்கும் வாழுகிறான்
பொன்னில் நதியினில் பூவில் குழந்தையில்
    பூமியெங்கும் அவன் ஆளுகின்றான்
மின்னு மிடியையும் மேகத்து நீரையும்
    அள்ளி யெடுத்துப் பொழியவைத்தான்
இன்பமிழைத்து மகிழவைத்தான் பின்பு
    துன்ப மெதுவென்று கொள்ளவைத்தான்

கண்ணைவிழித்து கிடக்குமட்டுமொரு
    காரணமேதும் பெரிது இல்லை
கண்ணைமூடி உயிர் சென்றுவிட்டால் இந்தக்
    காயமழிந்திட ஆவது என்?
விண்ணின் திருமகள் வேடிக்கையாய்
    நகைசெய்து சுடரெழும் பூவிழிகள்
எண்ணிச்சிரித்திட ஈதுசொன்னள்அந்த
    இன்பக் குரல்மணிநாதமெழ

மண்ணில் விளைந்திட்ட உன்னுடல் மீண்டும்
    மண்ணுக்கென விட்டுஏகிடுவாய்
விண்ணில் பறந்து, உலவி விளையாடி
    வேண்டும்வரை சுகம் காணுகிறாய்
கண்ணில் தெரிகின்றகாட்சியெல்லாம் கடு
    வண்ணமலரின் வடிவங்களாம்
விண்ணின் பெரு வாண வேடிக்கை என்பது
    வேண்டும்வரை காணும் இன்பங்களாம்

மண்ணில் கொடுமைகள் செய்தவரோ பெரு
    மாயக் குழம்பினில் சிக்கவைத்து
கன்னிச் சிவந்திட வெப்பமிட்டுஅவர்
    காது கிழிந்திடச் சத்தமிட்டு
பொன்னைப் புடமிடச் செய்வது போலவர்
    பொல்லா மனதைப் புடமிடுவோம்
முன்னர் இழைத்திட்ட பாவங்கள் தீர்ந்திட
    மீண்டும்பிறந்திட செய்துகொள்வோம்

என்ன இழைத்துமே ஏது பயனவர்
    இத்தரை மீண்டதும் செய்வதெல்லாம்
கன்னமிடுதலும் பொய்கொலையும்ஓர்
    காரணமின்றிக் கொடுமைகளே
சொல்லச் சிறுதடி மீதிருந்துஒரு
    சின்னப்பொறி எழுந்தேபரவ
இல்லையென அவள் ஆகியிருந்தது
    வெள்ளைமுகிலும் விண்நீலமுமே!

மெல்லவிழிகளைமூடிநின்றேன் இந்த
    மேதினி மீது நடப்பதென்ன
சொல்லிய தேவதை உண்மையிலோ அல்ல
    சொப்பனமோ புரியவில்லை
தொல்லையிலா வாழ்வுக் கென்றேபல சில
    விஞ்ஞான ஆய்வில் கருவி கண்டோம்
செல்லை கணனியை சின்னத்திரை கண்டு
    இன்பமாக வாழ்வை மாற்றிவிட்டோம்

ஆயினும் எத்தனை பெற்றும் மனிதர்கள்
    அன்பினை மட்டு மிழந்துவிட்டார்
நாயினும் கேவல மாகச்சண்டை யிட்டு
    நாட்டைப் பிடித்திடக் கொல்லுகிறார்
யுத்தம் அரசுகள் செய்யும் கொலைகளை
    கேட்பதற்கு இங்கு யாருமில்லை
ரத்தம்துடித்து அடங்கும்வரை கையில்
    கத்தி எடுப்பவன் தானே இறை

எத்தனை நல்லவன் நேர்மைகொள்வோன்தமக்
    கிவ்வுலகில் நீண்ட ஆயுளில்லை
மொத்தத்தில் ஏது நடக்குது மானிட
    வாழ்வுதனில் என்று தோன்றவில்லை
நேர்மை நீதியற்ற வாழ்விதை விட்டுஅந்த
    நீண்ட வெளிதன்னில் நீந்துகிறேன்
மீளப்பிறந்திங்கு வாழப்பிடிப்பில்லை
    தேவதையே கொஞ்சம் நில்லுஎன்றேன்

சுற்றும் உலகே நின்று ஒருபதில் சொல்லு

நெடுந்தூரம் நாம்நடந்து வந்தோம் வழியில்
படுந்துயரோ கொஞ்சமல்ல பட்டோம்
வரும்தடைகள் அத்தனையும் வென்றோம் - எந்தப்
பெரும்புயலும் கொண்டுஎதிர் நின்றோம்

கடும்வெயிலில் வெந்துஉடல் நொந்தோம்- காலடியில்
கற்களும்கூர் முட்கள்பல கண்டோம்
நெடும்வழியின் முடிவுவரும் போது - அதில்
நேருமுயர் வாழ்வையெண்ணி நின்றோம்

வானில்வரும் சூரியனின் ஒளியில் நல்ல
வழியறிந்து வீறுநடை கொண்டோம்
மானிடத்துக் கானஅறம் நீதி - வாழ்வுரிமை
தானெடுக்க ஆசைமனம் கொண்டோம்

சேருமிடம் வந்தடைய இன்னும்- ஒரு
தூரமில்லைஎன் றிருந்த போதே
நூறுஇடி மேல்விழுந்த தென்ன-உலகே
பாதைமாறி நீ சுழன்றதென்ன/

வன்னியை பண் டாரவன்யன் ஆண்டான் - ஒரு
வடக்கினிலே சங்கிலியன் ஆண்டான்
இன்றுமொரு மன்னன்மண்ணை ஆண்டான் - இதை
ஏன் அழித்து மீண்டும் பழி கொண்டாய்

வைத்த குறை வானசோற்றுக் குள்ளே முழு
மொத்த பெரும் பூசணியை வைத்து
ஒன்றுமில்லை .மந்ரம் மகாவம்சம் தமிழ்
ஈழமில்லை அத்தனை நம்சொந்தம்

என்றொருவன் ஏய்க்கக் கண்ணைமூடி- ஆம்
இருண்டுவிட்டதென்றுலகே நீயும்
தந்தனத்தோம் என்று அவன் பாட - அந்த
தாளத்துக்கு சுற்றியதேன் உலகே

சிங்கம்வாழும் காட்டின் குகைகுள்ளே நீ
சேர்ந்துவாழு என்றுகுட்டி ஆட்டை
கட்டிவைத்து, ஒற்றையாட்சி தர்மம் பேசி
கற்பனையை காணச்சொல்லும் உலகே

தடிகரத்தில் ஏன்எடுத்தாய் என்பாய் எங்கள்
தலையெடுக்க வந்தவனின் கையில்
குடியிருக்கும் கொடியவாளைக் கண்டு நாமும்
குனிந்திருத்தல் ஆகுமா நீசொல்லு

கொடியகரம் கொண்டகொலை வாளை- நாங்கள்
கூர்மழுங்க வைக்கஎதிர் நின்றோம்
அடிஎடுத்து தீயர்களை வென்றோம் - ஆனால்
அகிலமே நீ நீதியல்லோ கொன்றாய்

கடிக்கவந்த பாம்பை ஒருகம்பால் அடித்து
விரட்டுவது பாவமென கூறி உயிர்
குடிப்பவனின் பக்கத்திலே நின்று - எங்கள்
குலமறுத்த தேன்உலகே கூறு

இடியிடித்து மின்னல் புயலாக- வானில்
இயந்திரங்கள் கொண்டு வெடி போட்டு
தலையறுத்து சிங்கம் வெறிஆட -அவர்க்கு
பரிசளித்து தங்கம் அள்ளித் தந்தாய்

குஞ்சு,குமர் கூனியகிழம் எல்லாம் -வரும்
குருத்தொடிய வெட்டிஅடி சாய்த்து
செங்குருதி குளம்குளித்து ஆடும் -அவர்
சிங்களத்துக் கென்றுஒரு நீதி

வெஞ்சமருக் கென்றுபுவி செய்த ஒரு
விதிமுறைக்கு மீறிஒரு பாதம்
கொஞ்சமும்பிள றாமல்வழி சென்ற - நம்
செந்தமிழுக் கோர்விதி இதுசரியா?


நாடுஉனக் கில்லைஎனச் சொல்லி - ஒருவன்
நாற்திசையும் கேட்கமுர சொலித்தான்
கூடுவிட்டு உயிர்பிரித்து கொன்றான் - அவன்
கூறியதன் அர்த்தமென்ன கூறு

உடலெடுத்து தமிழ்நிலத்தில் வாழும் ஓர்
உரிமை நமக் கில்லையா நீசொல்லு
கடல்கருத்த வானில்வெறும் காற்றில் ஆவியென
கலந்து வாழும் உரிமையே என்றாச்சு

அறமெடுத்து போர்புரிந்து நாமும் - தனியே
அரசமைத்து வாழுகின்ற வேளை
கரமெடுத்து கைக்குலுக்கி வேண்டாம் - போரை
இனிநிறுத்து கொலைகள் பாவம் என்றாய்

படுபொய்யை பாலைஅருந் தென்று -'கள்'ளை
பாத்திரத்தி லிட்டெமக்கு தந்தாய்
பருகுதல்போல் தலைகுனிந்த போது நீ
பாவிஎதிரி கையில்வாளைத் தந்தாய்

கொடியஎமன் கூட்டம் எம்மைக்கொன்று -நம்
குலத்தவரைக் கழுத்தறுக்கும் போதும்
குழிபறித்து இனம்புதைக்கும் போதும் உலகே
படம்பிடித்து பார்த்தும்மௌன மானாய்

பெரியபாவம் என்னசெய்து வந்தோம் - எமது
பேரவல சாவை படம் செய்து
அரும்பெருங்கண் காட்சி செய்ய,ஐ.நா -சுவரில்
அழகுக்கென்று அடுக்கவாஉள் வைத்தாய்?

கைஎடுத்த வாளும்உடல் கவசம்- தானும்
கடலின்மீது வீசிஎறிந் தாச்சு நம்
மெய்யிலுயிர் காக்கஇந்த மண்ணில் -நமக்
கென்னவழி மேதினியே கூறு

கவிபாட மறவேன்!

நானெழுந்து நடந்தாலுந் தமிழன்னை
      தாள்பணிந்தே நடப்பேன்
 கூன்விழுந்து கிடந்தாலும் இன்பத்தமிழ்க்
     கொஞ்சுகவி படிப்பேன்
வானெழுந்த வெயில்போயும் காலையிலே
      வந்து விடுவதைப்போல்
போனதுபோ லிருப்பேன் பின்னால்வந்து
    போற்றித் தமிழ்படிப்பேன்

தேனொழுகும் கனிக்காய் பெற்றவரைச்
        சுற்றிய ஐங்கரன்போல்
நானிலம் சுற்றுவதாய் சொல்லியிங்கே
       நல்லோரைச் சுற்றிடுவேன்
வானுறை தெய்வவலம் செய்யவெண்ணி
      கோவிலைத்தான் சுழல்வேன்
தேன்மலரைச் சுழன்றாடும் வண்டெனவே
      தீந்தமிழ் சுற்றிநிற்பேன்

மீனெழுந்து துள்ளும்மேலே மீண்டுமது
      நீரினில் தானேவிழும்
மின்னலிடு மேகம்செல்லும் மழைமீண்டும்
      மெல்லத் திரும்பிவரும்
என்னமன மெடுத்தாயினும் இன்தமிழ்
      சொல்லமறந் தொருகால்
மென்தமிழில் பணிசெய்ய மறந்திந்த
     மேனி கிடந்திடுமோ

கற்றிடுவேன் தமிழ்ச்சொல்லை எடுத்தெங்கு
       வைப்பதென அறிய
சொற்றமிழைக் கட்டும் வித்தகனாயொரு
      சுந்தரப் பாட்டிசைக்க
பெற்றவளை விட்டுப்போவ துவோபுத்தி
      கெட்டு மறுகுவனோ
சற்றும்அயரேன் சத்தம்செய்யே னென்று
     கத்திக்கத்திச் சொல்லுவேன்

Friday, September 24, 2010

வஞ்சித்தும் வாழுவதோ?

பாடவா பிறந்தேன் பறிபோன நிலம் கண்டு
வாடவா விளைந்தேன் வலியின்றி நிலைகெட்டு
ஓடவா இருந்தேன் முழுநாளும் மண்காத்து
தேடவே சுதந்திரமன்றோ பிறந்தேன்

வீழவா பிறந்தேன் வெறும்பாயில் நோயாகி
மாளவா கிடந்தேன் மனங்கொண்ட உரம்செத்து
தாழவா வந்தேன் தனியீழம், தன்னாட்சி
மீளவே உருவாக்க வென்றோ பிறந்தேன்

பணியவா வாழ்ந்தேன் பகையோடு சேர்ந்தாடிக்
குனியவா கொண்டேன் கூடாது தமிழ்மீது
இனி அவா கொண்டே இடர்நீக்கிப் போராடி
துணியவே யன்றோ பிறந்தேன்

பிறப்பே மறந்து பகைவனாம் எதிரியின்
சிறப்பே இரந்து செத்திடும் தமிழவன்
புறத்தே எழுகின்ற பெருவீர மழித்திடும்
குறைவான பிறவி கொள்ளலாமோ?

பகைவனின் கையில் பற்றியோர் கத்தியின்
வகையான பிடியாய்  வாழ்வதைப் பிறர்நோக்கி
நகையான உறவே!  நம்தமிழ் அழிந்திடில்
புகையாகப் போவதுன் வாழ்வே!

ஒன்றாக நின்றோம் ஒருசேரத் தமிழ் பாடி
வென்றே மகிழ்ந்தோம் விளையாடி மண்மீட்டுச்
சென்றே படைத்தோம் செந்தமிழ் ஈழமாம்
என்றோர் சரித்திரம் செயவா!

நஞ்சே எடுத்தோம் நல்லவர் அமுதிட்டு
வஞ்ச மிழைத்தோம் வாழ்வினைப் போக்கிட
அஞ்சிக்கிடப்போம் அடிபற்றி பகைபோடும்
கஞ்சி குடிப்போமென் றானதேனோ?

தமிழ்என்றுகூறத் தாழ்ந்த தலை நிமிராதோ
பழியென்றுகூறப் பாய்ந்து வாள் தூக்காயோ
அழிவென்று கூற அலறி நீ சீறாயோ
இழிவினைக் கண்டுமே இருப்பவன் தமிழோ?

Wednesday, September 22, 2010

கலவரமா இல்லை கொலைவரமா

வெட்டி யடித்தது மின்னல், நிலமதில்
வீசியது சூறைக்காற்று, மழையுடன்
கெட்டி மேளமிடு சத்தமென வானம்
கேட்டபெருமிடிசத்தம், முழங்கிட
வட்டச்சுழல்புயல் காற்றும் இழுவைக்கு
வந்து விழுந்த மரங்கள், இவைகளோ
குட்டி கலவரம் செய்யும் இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

மெட்டி யணிந்தொரு மங்கை, அவளினைத்
தொட்டிழுத்த மணவாளன், தாலிதனைக்
கட்டியவ ளிடும் கூச்சல், கண்டு கைகள்
கொட்டிச்சிரித்திடும் கூட்டம், சிறுசிறு
குட்டிகளாய் பெற்ற பிள்ளை. குமரிகள்
வட்டமிடும் பலகண்கள் இவைகளும்,
குட்டிக் கலவர மன்றோ இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

பெட்டி பெட்டியென ஆயிரமாய் பல
வெட்டி விழுந்த பிணங்கள், இவைதனில்
கொட்டிசிவந்த குருதி கண்கள் நீரை
விட்டிருக்கும் சிறுபிள்ளை, உடலினைக்
கட்டி யழும் பலபெண்கள் எங்கும்படை
சுட்டுச் செல்லும்பெருஞ் சத்தம், இவையொரு
குட்டிக்கலவரமென்றோ இயற்கையின்
கோலமென்று சொல்லலாமோ?

ஏறிவிழுந்த மனிதன் துடித்திட
இன்னும் மிதிக்கின்ற மாடு எழுந்திட
தூறிக் கொட்டும் பெருவானம் குளிர்ந்திட
துன்பமிடும் புயல்காற்று நடந்திட
மாறி இடித்திடும் கல்லு விரல்நுனி
மங்குமிருள் மறைபாதை நடுவினில்
சீறிநிற்கு மொருபாம்பு இவையெல்லாம்
சேர்ந்து வரலாமோ நாதா

பள்ளிசெல்லும் சிறுபிள்ளை இறந்திட
பக்கத்திலே விழும்குண்டு, அதிர்ந்திட
துள்ளி விழும்சடலங்கள், துடித்திடத்
துண்டு செய்யும் படைஆட்கள், தீயெடுத்து
கொள்ளியிட எரிஇல்லம், இடிந்திடக்
கூக்குரலிட்ட கணவன், சிரசினை
அள்ளிஎடுத்திடும் கோரம் தமிழர்க்கு
ஆனதும் ஏன் கணநாதா

புட்டவிக்க தின்று போட்ட அடிவாங்கி
பொய்யுரைத்த கவிசொல்லி மதிகெட்டு
சுட்டே யெரித்த நக் கீரன் பழி கொண்டே
செத்தஉடல் எரிசாம்பல் பூசியொரு
நட்ட நடுநிசி தட்டிஉடுக்கையை
நாட்டியமாடும் உனை நம்பி நாங்களும்
கெட்டதுபோதுமினி கொல்லும்நீசரை
கேட்க வாடா கணநாதா!

Tuesday, September 21, 2010

மேகமே ஏன் அழுதாய்?

வட்ட அலையெழுந்து வாவிதனில் கோலங்களை
இட்டு விளையாடி இருக்கும் ஒரு காலையிலே
நெட்டுயர்ந்தோர் ஆலமரம் நீளப்பரந்தகிளை
விட்டே யெழுந்துபுவி வேர்கொண்ட விழுதுகளாம்

அங்கோர் பொய்கைதனில் அலையெழுந்து துள்ளிவர
மங்கிமறைந்தோடும் மீனினங்கள் நீரொழிக்க
பூமுடித்த மங்கையைப் போல்புது அல்லிசூடி
பொய்கை யிளம்மங்கை புன்னகையால் சலசலத்தாள்

ஆலமரக்கிளையில் அமர்ந்து இருபுள்ளினக்கள்
சாலக்கதை பேசி தம்முள்ளே மகிழ்ந்திருக்க
நீலக்கருவானில் நீந்திவந்த மேகமொன்று
ஆழக்கவலை கொண்டு அழுதிட நீர் கொட்டியது.

முகிலே நீ எங்குச் என்றாய் முகம் வாடிப்போனதென்ன
அழுதே துடிப்பதற்கு அர்த்தமென்ன என்றே
பழகிதுணை கொண்ட வான்குருவி ஆண் கேட்க
நிழலைத்தரு முகிலோ நின்று கதை கூறியது

அய்யோ கொடுமைஇது ஆரறிவார் பாரினிலே’
வெய்யோர் வினை முடிக்க வீரத்தமிழ் சாகுதடா
ஔவை வளர்த்த தமிழ் அகத்தியர் காத்த தமிழ்
தெய்வத்திருநால்வர் தேவாரம் இசைத்த தமிழ்

செங்கண் திறந்தாலும் செருக்கழியா தெதிர் நின்று
பங்கம் உரைத்த தமிழ்பாவலரின் வழியினிலே
பொங்குபுற நானூற்றின் போர்வீரம் ஈதன்றோ
என்றே அதிசயித்த இனமொன்று அழியுதடா

வேங்கை போல்பெருவீரம் விளைந்த தமிழர்தனை
தூங்கவிட்டு கொல்லுகிறார் துடிக்க குழி போடுகிறார்
செங்குருதி வழிந்தோடிச் சிறுஆறாய் மாறுதடா
சீறியே எழுந்த இனம் சிதைக்குள்ளே தீயுதடா

தூர இருந்துதலை தெறித்தோடி வருகிறேன்
ஊரைக்கொழுத்தியவ்ர் உயிரோடுகுழிவெட்டி
தாழப்புதைக்கிறார் தலைவெட்டி பார்க்கின்றார்.
ஆழப் பிறந்தவரை அணிதிரண்டு முழு உலகும்

சேரக்கரம் பிடித்து திட்டமிட்டுசதிசெய்து
வாரிக்கால் விழுத்திஒரு வீரச்சிறுவன் தனை
ஈர்பத்து பயில்வான்கள் இழுத்தடித்து கொல்வதென
நேரற்ற செயலொன்று நிகழக் கண்டேன்நான்

ஊரே எரியுதடா உயிரேதும் மீதியில்லை
பேயே பயந்துதோடி பெரும்கோவில் புகுந்ததடா
என்ன கொடூரம் எடுத்துரைக்க வார்த்தையில்லை
அன்ன செயல்ஒன்று அகிலத்தில் கண்டதில்லை

மேகத்தின் சொல்கேட்டு மேனி நடுநடுங்க
நாகத்தின் நஞ்சைப் பாலிட்டு தின்றதென
ஆவி துடித்து அலறி மனம் பதைபதைக்க
ஆண் குருவி நோக்கி பெண் கூறலாயிற்று…

(குருவி)
அய்யோ கொடுமையிது ஆரறிவார் உலகினிலே
குய்யோ முறையோ என்றே தமிழர் கதறியழு
தெங்கள் உயிர் காத்திடுமென் றேழுலகும் கேட்டும்
பொங்கி எழுந்துலகத் தெருஎங்கும் போராடி

வெம்பிஅழுதும் என்? வினை முடித்துப் போனார்கள்
நம்பி ஓர் நாடுவரும் நாம்பிழைப்போம் என்றவரை
நாசப் பெருங் குண்டும் நச்சுவெடி சிதற இட்டு
மோசக் கொலைபுரிய மூச்சடக்கி நின்றாரே

நீதிக்கு வேண்டாம் நியாயம்தனும்வேண்டாம்
பாதி மனம் இரங்கிப் பாவி இவன் மானிடம்தான்
கொத்தாய் குலையாக் கொடுமைசெய்து உயிர்போக்கும்
எத்தேசம் அறியாப் பேரவலம் என்றிரங்கி

ஏனடா நாயே என்றொரு வார்த்தை கொன்றவனைக்
கேட்காமல் நெஞ்சிறுகி கிடந்ததேன் எமனுக்கு
கப்பந்தான் என்றிவரைக் காவு கொடுத்தாரோ?
ஒப்பந்தம் போட்டிந்த ஊர்அள்ளி கொடுத்தாரோ?

வல்லரசு நாடுகளில் வெள்ளம் புயலென்றால்
எல்லா உலகும் இணைந்து அழுவதுவும்
முள்ளிவாய்க்காலோ மொத்தஉயிர் பன்மடங்காய்
நாள் நேரம் திசைகுறித்து நாற்புறமும் அறிவித்து

சொல்லி உயிர் அழிக்கையிலே செய்கோள் பட‌மெடுத்து
ஐநாவின் உள்ளே அடுக்கி வைத்த‌தன்றி
உற்ற உயிர் காக்க ஒருசெயலும் செய்யாமல்
வாழா விருந்ததனால் வாழ்வழிந்து போனாரே

என்றழுதுகண்ணீரை இட்டிருக்க ஆண்குருவி
தன்சோடி தான் பார்த்து தலையோடு தலைசேர்த்து
நொந்தழுது கண்ணீரை நித்தம் விடுவதே
அந்தோ பரிதாபம் அரும்தமிழர் விதியாச்சு

இந்த நிலைவிட்டு இன்றுஅடி முன்வைத்தார்
மண்ணுக்குள் விதையாகி மறைந்தவரின் கனவுகளை
எண்ணிநிறைவேற்ற இவ்வுலகில் புலம்பெயர்ந்த
மண்ணின் தமிழீழ மக்கள் புறப்பட்டார்

போராட்டம் ஓயாது புழுதியெனப்போகாது
ஆறோடும் பாதையிலே அடித்து எதிர் நீச்சலிட்டோர்
நீரோடு சேர்ந்து இனி நீச்சல் அடித்திடுவர்
போய்சேரும்இடமோ சுதந்திர தாயகமே!

Monday, September 20, 2010

அழகான வெண்ணிலவே!

ஆயிரம் தாரகை பூத்த வானமதில்
நீந்திடும் வெண்ணிலவே
ஆடிஅசைந்து நீ போவதெங்கே
அழகான ஒளிநிலவே
ஓடிடும் வான்முகில் பக்கம்வர நீயும்
உள்ளே மறைவதென்ன
ஈழமண்ணில் தமிழ் கொல்லும்கொடுமையை
காணக்கண் கூசியதோ

கையில் குழல்வெடி கத்திஎன தமிழ்
கொல்ல பகைவர் செல்ல
மெய்யில் பயம் கொண்டு மேகம் எடுத்து நீ
உன்னை மறைத்தனையோ
விண்ணில் தலைதெறித்தோடுகிறாய்
அழகானதோர் வெண்ணிலவே
மண்ணில் தமிழர் கதியிழந்தோடிடும்
இன்னிலை தான் உனதோ

மெல்ல நீ தேய்ந்து மெலிந்து பிறையென
ஆவது ஏன் நிலவே
வாழ்வை இழந்துநாம் வாடுவதைக்கண்டு
தேகம் மெலிந்ததுவோ
அன்னை இழந்து தந்தையிழந்து
ஆயிரமாய் சிறுவர்
கண்ணீர் விட்டுமந்த தெய்வம் இரங்கிடக்
காணோம் என் செய்வதடி
 
பால் நிலவில் அன்று தாய் அமுதூட்டநீ
பார்த்து மகிழ்ந்திருந்தாய்
போலஇனி ஒருநாள் இந்தப் பூமியில்
மீண்டும் மலர்ந்திடுமோ?
தாயொரு கூட்டிலும் பிள்ளை தனியவும்
பாவி பிரித்து விட்டான்
நீயதை எண்ணி நெஞ்சம் துடித்தாயோ
நேற்று வரமறந்தாய்

பாயும் கருமுகில் பேயென பார் அங்கே
பக்கம் ஓடி வருது
ஆயினும் வந்தது போல மறுதிசை
ஓடி உனை விடுது
ஈழமண்ணை வந்து மூடும் இருள்முகில்
போக மறுப்பதென்ன
வாழும் மனிதரின் நாடு சுதந்திரம்
ஆட்சி பறித்ததென்ன

ஓடும் நிலவே நீ போய்வரும் வீதியில்
தேசம் இருந்ததென்றால்
வாடும் உறவுகள் காதில் ஒரு மொழி
கூறி ஒளி எறிவாய்
நாடும் உயிர்களும் காக்க எண்ணியிங்கு
நாமும் எழுந்து நின்றோம்
பாடுபடுவோம் பகைகொண்ட நாட்டினை
மீட்டு அரசமைப்போம்

கம்யூட்டர் என் காதலி

உன்னை நினைக்கையிலே மனதில்
ஓடிவரும் இன்பம்
என்ன சுகம் சொல்வேன் கணியே
என்மனத் தாரகையே
வண்ண வடிவெடுத்து எந்தன்
வாழ்வில் புதியதொரு
எண்ணம் குழைத்தவளே என்றும்
என்மலர்த் தாமரையே

உன்னைத்தொடும்போது என்றும்
துள்ளி மலர்ந்து நின்று
வண்ணத்திரை முகத்தில் ஒளியை
வந்திடச் செய்குகிறாய்
சொன்னதெல்லாம் கேட்டு அதனை
செய்து முடிக்கையிலே
உன்னதமாய் மலரும்  செய்கை
உள்ளம் கவருதடி

என்னதான் கேட்டாலும் உடனே
சொல்லி விளக்குகிறாய்
உன்அறிவென்பதென்ன என்றும்
ஊற்றெடுக்கும் நதியோ
வண்ணபடம் வரைந்தால் அழகு
வாரிக் கிடக்குதடி
பண்ணிசை பாடு என்றால் இனிமை
என் செவிக்கின்பமடி

கட்டுக்கடங்காத கதைகள்
எத்தனை சொல்லுகிறாய்
சுட்டி பயல்சிறுமி அவர்க்கும்
சித்திர காதை சொல்வாய்
பட்டுமுகம் உனதை முறைகள்
எத்தனை பார்த்தாலும்
விட்டு சலிப்பதில்லை அதுவே
எத்துணை விந்தையடி

நாட்டின் அரசியலை வீதி
நாற்புறமும் நடக்கும்
வீட்டில் தகராறு கொள்ளை
விருந்துசெய்யும்முறைகள்
சாத்திரம் சோதிடங்கள் எல்லாம்
சட்டென்று ஓடிவந்து
ஊரில் அறியமுன்னே சேதி
காதில் பகருகின்றாய்

எத்துணை வித்தகியாய் இருந்தும்
ஒன்றில் மட்டும் எனக்கு
உன்செயல் கண்டதிலே கோபம்
ஓடி வருகுதடி!
சின்னபயல் முதலா எவரும்
கள்ளத்தனம் புரிந்தால்
சொல்லிக்கொடுப்பதற்கு நாணம்
கொஞ்சமுமில்லையடி

கவிபாட வரம் தா !

கலை காணுமுலகோடு இனிவாழவேண்டும்
கவியான தெனதாசை மகளாக வேண்டும்
தலைவாரி குழல்நீவி தமிழ்மாலைசூட்டி
அவள் பாடுமெழில்கண்டு மனம் தூங்கவேண்டும்

மலைமீது நதிமீதும் அவளோடு சென்றே
இதுதானே அழகென்று இசைபாடவேண்டும்
அலையோடு குளிர்நீரிற் தலை நீட்டு மல்லி
அதன் மேவுமிதழாக இதமாக வேண்டும்

எவர் காணும் பொழுதேனும்  இவளா என்றள்ளித்
தமிழாம் என்கவிதூக்கி முகம் காணவேண்டும்
எழிலா நல்லிசையா அல்லதுகாணும் பொருளா
எதுதானும் உயர்வென்று நிறைகூறவேண்டும்

அழகான நகைசூடி அணியாடை வளைகள்
அலங்கார வகைசெய்து மகிழ்வாதல்போல
வளமான உவமை நல்லெது கையும்மோனை
இதனாலே எழில் செய்து உயர்வாக்கவேண்டும்

தளைசீர் கள்கொடியாக உருவாக்கி ஊஞ்சல்
தனில் ஏற்றி அவளை நான் தாலாட்டவேண்டும்
இமை கொட்டும் விண்மீன்கள் எவைமட்டுமுண்டோ
அது மட்டும் அளவாக கவி காணவேண்டும்

எதுதானும் உனதன்பின் அருளின்றி இறைவா
ஒருபோதும் உருவாகா மனதெண்ணும் கவிதை
எனவே உன் அடிதாழ்ந்து தலை வைத்து இரந்தேன்
கவிபாடி உலகெங்கும் வலம்செல்ல வரம்தா

Sunday, September 19, 2010

இங்கே வரும் கவிதைகள்

கவி இலக்கணம் தெரியாதவன் கவிதை என்று எழுதுகிறான். இவை எப்படி இருக்கும்? பார்க்கப்போவது நீங்கள். நீங்கள்தான் சொல்லவேண்டும். இதோ முதற்கவிதை



கவியேதும் அறியேன்
கவிகூற தமிழ் காணும் விதியேதும் அறியேன்
எனதாசை தமிழ்மீது பெருமாசை கொண்டேன்
மனமீது எழுகின்ற உணர்வேது சொல்வேன்

தமிழான தென்றல்
புவிமீது மனமென்னும் மலரான மென்மை
தனை நீவி எழுகின்ற உணர்வான இன்பம்
அதனாலே வருகின்ற மொழிதானே கவிதை

பலமான விதிகள்
அழகான கவியென்னும் சிலையாக்க உளிகள்
வளமான தமிழ்மாலை கோர்கின்ற தளைகள்
அழகான இசையோடு சேர்க்கின்ற தவைகள்

தமிழான அன்னை
கலைஞானம் அறியாத மகனான என்னை
பிறிதாக நினையாமல் ஒருசேர அன்பை
தருகின்ற நிலைபோதும் வேறொன்று இல்லை

எழுதென்று உள்ளம்
இருந்தாளும் தமிழன்னை மொழிகூறு வரையும்
எழுதாமல் என்தேசம் விழிமுன்னே கொள்ளும்
அழிவான துரையாமல் விழிமூடல் செய்யேன்.