Tuesday, March 29, 2011

பிரியாத வரமொன்று வேண்டும்

மலர்மீ திருந்து மணம்வேறு சென்று
பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீ திருந்து உணர்வென்னும் தாகம்
பிரியாத வரமொன்று வேண்டும்

அலைமீ திருந்து குளிரான தென்றல்
அசைந்தோடி பிரிகின்ற போதும்
கலைமீது கொண்ட எனதாசை என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

தொலை வானிலுள்ள நிலவான தொருநாள்
வரவானில் மறந்திட்ட போதும்
விதையான மைந்தர் மனஉறுதி யென்னை
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்

தலைமீது மின்னல் இடியாகி துன்பம்
ஒருதாகி விழுகின்ற போதும்
உருவாகுமீழம் எனும்ஆசை நெஞ்சில்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்

மலையான தொன்று வழிமீது நின்று
புகும்பாதை தடைசெய்யும் போதும்
உருவாகும் ஈழ எனசேரும் மக்கள்
பிரியாதவரம் ஒன்று வேண்டும்

Thursday, March 24, 2011

வானில் கண்ட விந்தை !

மானம் எங்கள் சொத்துஎன்று மனதில்கொள்ளடி-இந்த
மண்ணுமெங்கள் சொந்தமென்று உறுதிகொள்ளடி
தேனும் பூவின்சொந்தமென்று சேர்ந்து பாடடி - ஈழ
தேசமெங்கள் சொத்துஎன்று திண்மைகூறடி

வானமெங்கள் சொந்தம்மென்று வார்த்தை பேசடி- ஈழ
வானஎல்லைக் காற்றுமெங்கள் வாழும் மூச்சடி
தானதர்மம் போட ஈழம் தட்டில்சாதமோ -எங்கள்
தாயின்நாடு சத்திரமோ தர்மசாலையோ

வானமுள்ளே வந்துபோக விட்டதாரடி -குண்டு
வாரிமக்கள் மீதுபோட வைத்த தாரடி
ஈனமுள்ள தேசம்ஒன்று ஈதின்காரணி- அந்த
எத்தர்செய்த வேலை விக்கி லீக்சிலே படி

தெய்வம்காண கோவில்செல்லதீபம் போனது அங்கு
தேடும் கோவிற் தெய்வமில்லை பேய்கள் ஆடுது
பொய்யுமான வேஷமிட்டு போலியாகவே அவர்
போடும் மொரு கொள்கைதானும் இப்படியாமே

”நாடிச்சென்று நன்மைசெய்தல் போலவே நடி -இந்த
நானிலத்தைஏய்த்த பின்னர் நச்சுக்குண்டடி
காந்திஎன்ன புத்தரென்ன விட்டுத் தள்ளடி -அவர்
காலம்போச்சு கத்திபேசும் கையில் கொள்ளடி

நீதிஎன்றும் பார்ப்பதில்லை நீள்கருந்துணி -அதன்
நெற்றியோடு கண்கள் மூடி நிற்குதாமடி
பாதியாக ஈழமக்கள் வெட்டிப்போடடி -மேனி
பார்த்தெடுத்து நீதிதேவன் தட்டில்போடடி”


சத்தியமும் கண்ணியமும் கட்டுப்பாடுமே இனி
காற்றிலே கரைந்திடட்டும் கண்ணைமூடென
அத்தனையும் நீதிகெட்டு ஆடிமுடித்தார் அவர்
ஆன பதில் சொல்லுமொரு காலமும் வரும்

வான்புலிகள் செய்ததந்த வீரம் பாரடி -அவர்
வைத்தகுறி பொய்த்ததில்லை போட்ட புள்ளடி
சேனைபடை போர்விமானம் சிதறியோடவே அவர்
செய்த தீரவீரம் தானும் திரும்புமோ இனி

கோடிஎன்று வானில்வந்து கொட்டுவர்குண்டு -பகை
கொட்டுவது குண்டுஅல்ல கோழைகள் நெஞ்சு
ஓடிவேங்கை வானில்வீரர் போடுவர் இரண்டு -இந்த
உலகமெல்லாம் வாய் பிளந்து பயந்தது பின்பு

நீலவிண்ணும் நீள்கடலும் நின்றமண்ணிலும் -நாம்
நீண்டகாலம் கண்ட ஆட்சி நிலைமையில்அஞ்சி
ஆழவென்று ஈழமகன் எண்ணினாலுமே -இந்த
அகிலமெல்லாம், அவன்குடைக்குள் அடங்குமோவென

நிலம்பறித்தார் நெஞ்சினிலே வஞ்சமிழைத்தார் -ஒரு
குலமழித்தார் கோவில்மனை குடிகள்அழித்தார்
நிலமிழந்தோர் நாமும் இனி எழுந்திடல்வேண்டும் -வரும்
நீதிப் போரில் வென்று வானில் பறந்திடவேணும்

Sunday, March 20, 2011

சலசலப்பு

சலசல வென்று சலங்கை குலுங்க
கலகல வென்று குலுங்கி நகைத்து
தளதள வென்றுடல் தாங்கிய கன்னி
மழைபொழி நீரிடை மகிழ்ந்து குதித்தாள்

விழவிழ நீர்த்துளி வியன்தரு உடலில்
பளபள வென்றுமே பருவம் மினுங்க
மளமள வென்றிடை மனதினில் ஏக்கம்
விளைவிளை என்று விளைந்திட அவனோ

எழஎழ நெஞ்சினில் இச்சையும்பெருகி
குளுகுளுவென்றுமே குலவிடத் தேகம்
அழகெழு மயிலென ஆடிடும் அவளை
தொழுதெனும் வேண்டத் தோன்றிட அவனோ

சளசள வென்றுமே நீரிடைபாதம்
வழவழ வென்றுமெ வழுக நடந்து
பழமெழு நிறமும் பனியென விழியும்
விளையிள வதனத் திருமகள்பார்த்தே

துளிதுளி யாகவே அச்சமும் விலக
களிகளி என்றுமே காத்திடும் மனது
பிழிபிழி என்றுமே பிழிந்துள்ளம் உந்த
கிளைகிளை தோறும் தாவிடும் மந்தி

கொளும் உணர்வோடு கொடியிடைமகளை
சிலைகலை ஓவியச் சித்திரப் பாவை
குலைகுலை வகையாய் கனிகளின் கூட்டம்
பலபல கொண்டவள் பக்கம ணைந்து

விலையிலை உனதே விந்தைகொள் அழகு
அலைமகள்எழிலும் அஞ்சிய நடையும்
வலைகளை வீசும் விழிகளும் கண்டேன்
நிலைகுலைவாகி நெஞ்சமி ழந்தேன்

அலையுலைந்தாடும் ஓடமும்போல
வலைவிழுந் துளலும் விழிகயல்போலே
பலதுயர் தந்தாய் பாவையே நீக்க
இலதொரு வழிதான் இணைவது ஒன்றே

நலமெனக்கூறி நனி இதழ்தேனே
சலசலப்பின்றி சம்மதம்தாராய்
பொலபொல வென்றே கொட்டிடபணமும்
அளவில எந்தன் அகமுண்டுவாராய்

சொலுமவன் இதனைச்சொல்வதும் இன்றி
பிழைபிழையாகவே சிந்தனை முடிவாய்
வலதொரு கையால் வஞ்சியை அணைக்க
விளைந்திட அவளோ விலகியே சற்று

கடுகடு உரமும் காதலும் கண்ணில்
விடுவிடு என்றே வேகமும் கொண்டோன்
திடுதிடு வென்றுமே தேர்திடமுன்னே
நடுதொரு நிலையை நினைவது இலையோ

தொடுதொடு என்றெனைத் தொட்டுமே தாலி
குடுகுடு என்றுமே கொட்டிட மேளம்
சுடுசுடு தீயதும் எரிந்திட முன்னே
விடுவிடு என்றுமே விரைந்தவர் கட்டி

இடுமென தன்பை ஏற்றவர் அந்தோ
சிடுசிடு என்றுமே சினந்திட எம்மை
கொடுகொலை வாளுடன் நெருங்குவர் காண்க
விடுவர்உன் னுயிரெனில் வருகபின் என்றாள்

Friday, March 18, 2011

கடலை ஆளுவோம்! 2

அன்றோஒருநாள் அம்மாஅருகே அன்பில் திளைத்திருந்தேன்
நின்றே பெய்யுமழையின் வெள்ளம் நிலம் மீதோடக்கண்டேன்
தென்றல்வீசிச் சாரலடித்தே தூவானம் நனைக்க
ஒன்றாய் இரண்டாய் ஒற்றைகிழித்து ஓடம்செய்துவிட்டேன்

எட்டுகப்பல் நீரில்ஓட்டி எண்ணிப் பெருமைகொண்டேன்
கிட்டும் இன்பம் காகிதக் கப்பல் கவிழா வரைகண்டேன்
விட்டே குளமும் வாய்க்கால் என்று விந்தை உணர்வு கொண்டேன்
தட்டிக்கேட்கும் தலைவன்வந்து தமிழால் ஆளும்வரை

வெட்டிகிழித்து விரைந்தேஓடும் வெற்றிப்படகுகளை
விட்டுக்கடலில் விளையாடித்தான் வேங்கை புன்னகைத்தான்
சுட்டுவெடித்துப் பகைவர்கப்பல் தூள்தூள் என்றாகி
கட்டுக் குலைந்து கடலில்மூழ்கக் கண்டேன் வீரமதை

திசைகள் எட்டும் திரைகடலோடி திரிந்தார் வீரமது
அசைவில் புயலும் அடியில் இடியும் ஆனதுகண்டேனே
விசையோ டுலவும் படகில் தமிழன் வெற்றிக்களிப்புடனே
இசையும் கொடியும் எழுந்தேஆடத் திரிந்தான் தலைநிமிர்ந்தே

நெய்தல் குமரர் நிம்மதிகண்டு நீரில்மீன் கொண்டு
தையல்தம்மின் கண்ணில் அன்பும் காதல் தனைக்கண்டு
வெய்யில்காயும் மீனைப்போலே வெளியே காய்ந்தாலும்
கையில்காசும் களிப்பும்சுகமும் கண்டார் வாழ்வினிலே

கொள்ளிப்பேயாய் வந்தார் விதியும்கொண்டே வெறியாடி
அள்ளிச்செல்லும் வெள்ளம்ஆக அத்தனையும் இழந்தோம்
தெள்ளதெளியும் நீரைபோலே திகழும் வாழ்வுடைந்து
கள்ளிக்காடாய் கட்டை சுடுமோர் காடென்றாச்சுதடா

நீலஒளிவெண் மேகத்தோடு நின்றே வானோடி
ஆழப்பரந்த அலைகள்மீதும் அலைந்தேகடலோடி
காலாட்படைகள் கட்டு உடைத்து கயவர் பந்தாடி
காலாகால வரலா றொன்றில் தலைவர் தானிருந்தார்

சொல்லத்திறனும் பெருமைகொண்டே சுகமாய் ஆகிறதே
இல்லா திந்த உணர்வு எங்கள் இழிமைகொண்டோராம்
கல்லாய் நெஞ்சைக் கொண்டே எம்மைக்காட்டிக் கொடுத்தாரே
வல்லமையின்றி வாழ்வைக்கெடுத்தே வாழ்ந்தார் பயனென்ன

மெல்லத்தெரிதல் காணாய் இன்றோ வானில் விடிவெள்ளி !
கொல்லக்கண்டவர் மெல்லஎழுந்தே கூறும் மனம்கொண்டார்
வண்ணத்திரையில் மானும் மயிலும் வந்தே சதிராட
கண்ணால்கண்டே கவலைவிட்டுக் கடமை மறக்காதே

உரிமைப்போரை உலகத்தெங்கும் ஒன்றாய் கைக்கொள்ளு
தெரியும்பாதை திடமாய்காலைத் துணிந்தே வைத்துவிடு
விரியும் ஈழம் வெகுநாளில்லை வேகம்கொண்டுஎழு
திரையும்கடலில் விரையும் கப்பல் மீண்டும் கடலுனது

கடலை ஆளுவோம்! 1

வளைகடலும் பெரும் அலையும் வாய்திறந்துபேசுமொரு
வார்த்தை கூறும் சக்தியிருந்தால்
நுளைகுழியுள் விரையும்நண்டு நின்றுகதை கூறும்எங்கள்
நிமலரிவர் கொண்ட புகழ்தான்
அளையு மணல் உருள்திரையும் அழுதுமனம்கதறும்அந்த
ஆழ்கடலின் வேங்கைப் படைதான்
மழையுமிடி மின்னலென மாகடலில் வாழ்ந்தவர்கள்
மாறிநின்ற தெங்கே என்றுதான்

படையெடுத்து வந்தபகை பாய்ந்துவந்தபோதவரின்
பலமுடைத்து ஓடவைத்ததை
நடைபிழைத்து நகருமந்த நண்டு கேலிசெய்யுதென்று
நகைநகைத்து அலைஉருண்டிடும்
இடைநிறுத்தி இடர்கொடுத்து எதிரி வென்றமைந்தரவர்
ஏற்றம் கண்டு பெருமை கொண்டுமே
உடைத் தழிந்த கப்பல் டோரா உள்ளெடுத்தஆழிதன்னை
ஓவென்றூதிக் காற்று போற்றுமே

படபடக்க வெடியினோசை பளபளக்க அலைகிழித்து
பறந்த வேங்கைமைந்தர் கப்பலும்
துடிதுடித்து இளைமையோடு துணிவெடுத்த தலைமையோடு
தோன்றுமெழில் என்னசொல்லுவேன்
கடலிலொரு கப்பல்விட்ட தமிழன் என்று பெருமை சொன்ன
காலம் அயல் அன்றிருந்தது
கடலிலொரு போர்தொடுத்து கடற்படைதான் ஆட்சிசெய்த
காவலனின் பெருமை பெரியது

தரையடித்துவீழுமலை தலையடித்துகதறுவதாய்
தவிப்பெடுத்தபோது தென்றலோ
விரைவெடுத்து ஓடுமென்னை விடஎடுத்த வேகமுடன்
வினைமுடித்த வீரம்பேசுமே
வரைவிடுத்து எல்லையற்ற வகையெடுத்த படகெடுத்து
வளைவெடுத்து மைந்தர் ஓடவே
புரையெடுத்து கிறுகிறுத்து புலன்விடுத்துஅதிசயித்து
போர்தொடுத்த பகை வியக்குமே

மறமெடுத்த வீரர்தம்மின் உரமெடுத்த தோள்வலிமை,
மனமெடுத்த வலிமை ரண்டிலே
திறமெடுத்த தேதுஎன்று எதையெடுத்துக்கூற அங்கு
இலட்சியமே வலிமை கண்டது
புறமெடுத்துஓடச் சிங்கக் கொடிபிடித்த படகுகளை
அடிஅடித்து ஓடவைக்கவே
அறமெடுத்த நிலையைவிட்டு அயல்கிடக்கும்நாடு அச்சம்
அகமெடுத்து பிழைவிடுத்தது

உலகெடுத்த விதியுடைத்து படையெடுத்து வந்தவரோ
உடமைதோல்வி என்று கண்டதும்
தலைகடுத்து விசர்பிடித்துக் கிலியெடுத்து வியர்வைகொண்டு
தரமும்கெட்டவேலை செய்ததே
இமயம் தொட்டுக் குமரிவரை எமதுஎன்றுஆண்டதமிழ்
இறைமை கொண்ட கடல்பரப்பையே
சமயமிது இழந்துவிட்ட சரித்திரத்தில் தமிழ்படித்த
சபலமுள்ள அரசும் உள்ளது


மறைவெடுத்தஎங்கள்மன்னன் மறுபடிக்கு வந்துஎங்கள்
மாநிலத்தைஆழும் நாள் எப்போ?
கறைபிடித்த காலமிது கருகிவிட்ட வாழ்வுஇது
கண்மறைந்து போவதுமெப்போ?
துறைமுகத்தில் எங்கள்கொடி தடதடன்று காற்றிலாடி
திமிரெடுத்து நேர்பறப்பதை
இறை, எனக்கு வரமுமீந்து எமனெடுத்து எறிகயிற்றை
இடைநிறுத்தி ஈழம்காட்டுவாய்

கண்ணீர்ப் பூக்கள்

ஈழத்தில் ஒரு சிறுமியின் குரலாக....

தேயும்நிலவே காரணமென்ன தேனாய் ஒளிதந்தாய்
தேகம்கொல்லும் பாவியர் உன்னைத் தீண்டியதுண்டோசொல்
பாயும்முகிலே பஞ்சென வானில் பறந்தே போவாயே
பாதகர் கொடுமை கண்டடி வானில் பயந்தேகிடந்தாயோ
சாயும்வானில் தூரக் காணும் புள்ளிப் பறவைகளே
சற்றே நில்லும் சாவைகண்டு சஞ்சலம் கொண்டீரோ
வாயும் கதறிக்கூடும் கருமை வண்ணக் காக்கையரே
வாழ்வை நோகச் செய்தார் யாரோ ஈழத்தெதிரிகளோ

காலை பூத்தாய் மலரேஉன்னைக் காயச் செய்தவரார்
கயவர்கைகள் உன்னைத் தொட்டுக் கருகச் செய்தாரோ
சோலைவீசும் தென்றல் நேற்று சுகமாய் மலர்வாசம்
சுகந்தம்தந்தாய் இரத்தம்போற்தலை சுற்றும் வாசனை ஏன்
மாலை வந்தால் இரவேஉன்னை மகிழ்ந்தே விளக்கேற்றி
மலர்கள்கொண்டு இறைவன் தொழுது மனதில் களிகொண்டோம்
காலன்போலே வந்தார் கயவர் கடவுள் காக்காமல்
கருமைஇரவாய் காலம்முழுதும் கருகச் செய்தார் ஏன்?

நானும் நேற்று நல்லோர் வாழ்வைக் கொண்டே வாழ்ந்திட்டேன்
நாடும் வாழ்வும் நாமும்கூட நலமே கண்டோமே
தேனும் பாலும் உண்டேதாயின் தோளில் தூங்கித்தான்
திங்களுன்னைக் காட்டி அன்னை தின்னச் செய்தாளே
மானும் எந்தன் துள்ளல் கண்டால் மகிழ்வில்விளையாடும்
மரத்தில் குயிலும் மகிழ்வில் எந்தன் குரலில்கவிபாடும்
தானும் மகிழும் தாயும்தந்தை தாவிஅன்பைத்தான்
தழுவிக்கொண்டார் இன்றோ நானும் தனியே நிற்கின்றேன்

வெள்ளை வானில் தந்தைசென்றார் விடிந்தால் வருவேனே
வேண்டாம் துயரம் என்றார் மீண்டும் விடியல் வரவில்லை
கள்ளர் போல வந்தார் எம்மைக் காக்கும்படையென்று
கதறிக் கேட்டும் அம்மா வைத்தான் கடத்திச் சென்றாரே
உள்ளம்உருகக் கையைகூப்பி உயிரைத் தாவென்று
உதவக்கேட்டும் சிலைதான் கண்டோம் ஒன்றும் வரவில்லை
அள்ளிக்காசும் பொன்னும் தாவென் றவர்கள் வேண்டுகிறார்
வெள்ளிக்காசு வேண்டிநீயும் வாளா திருந்தாயோ

வெள்ளம் வந்தால் எங்கள் வீட்டின் உள்ளேநிற்கிறது
வீசும்காற்று கூரைபிய்த்து விளையாட்டென்கிறது
பள்ளிக்கூடம் அகதிக்கான படுக்கைவீடாச்சு
பனியும் குளிரும் போர்வை என்று பழகிப் போயாச்சு
கொல்லும் கரடி சிங்கம் காணப் பயமே போயாச்சு
கொலைஞர் மட்டும்வந்தால் நெஞ்சு திக் திக் என்கிறது
செல்லும் பாதை தெரியாதெங்கள் மனமோகோணுவதேன்
செத்தாலென்ன பின்னால் வாழ்வு சுகமென்றேங்குகிறேன்

Wednesday, March 16, 2011

பெண்ணின் உயர்வு எதில் உண்டு (ஈழப்பெண்)


நீரோடும்விழிகாய்ந்து நிம்மதி வேண்டின் நெஞ்சம்
ஊரோடு ஒன்றுபடும் ஒற்றுமை வேண்டும்
நேரோடும் பாதையிலே நீவிரைந்தே எங்கள்தமிழ்
நேசமெனும் தாயகத்தை வென்றிட வேண்டும்

தேரேறும் தெய்வமெனத்  தேசமதைக் காதலித்தே
தேன்தமிழர் வாழ்வுகாக்கத் துணிந்திட வேண்டும்
வேரோடும் மரமானால் வெட்டவரும் கத்தியின்மேல்
விலையாகிப் பிடியாகா விதிகொள்ளல் வேண்டும்

போராடும் களந்தன்னில் புறமோடி வீழ்ந்ததெனில்
பாலோடும் இடமிழப்பேன்  பாராய்  என்றாள்
மார்போடு வீரமெழும் மறம்மகளாம் தாயினைபோல்
மகன் அருந்தும் பாலில்வீரம் இருந்திட வேண்டும்

அன்புடனே தமிழ்வீரர் அரசபழங் கதைகள்கூறி
அவர்கண்டவாழ்வின் அறம்   அறிவிடவேண்டும்
பண்டாரவன்னியனும் படைகொண்டஎல்லளான்
பகைதன்னைஎதிர்கொண்ட விதம்சொலவேண்டும்

மானத்தை விட்டவனை மனிதநடைப் பிணமென்று
மகனவனைத் தினமோதி மாற்றிட வேண்டும்
தானுந்தன்  உடல்மீது தளைந்தோங்கும் மதவீரம்
தாய் தமிழைக் காக்கவென்றே கூறிடவேண்டும்

இத்தனையும்சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எந்தன்மகன் இல்லையென இகழ்ந்திடவேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முடிவுசெய்யணும்

ஈனம்கொள் மனதுடனே எதிரி வர  வழிகாட்டும்
இனம்கொல்லும்தமிழனவன் இழிபிறப்பேயென்று
மானமெனும் உடைகளைந்து மதிகெட்ட பிணமாகி
மறைகாட்டு பேயெனவே மகனைக்கூறணும்

தாயென்றும் அவன்கொண்ட தங்கையவர் தாமுமொரு
தலைவி எனும் வாழ்விணைந்த தலைமகள்தானும்
நோயென்னும் மனமெடுத்தாய் நில்லாதே போ எனவே
பேயலைந்ததாய் தெருவில் போக்கிடவேண்டும்

பாயொன்றில்துணையிருந்து பாசமுறும் மனைவிதனும்
சீயென்று சினந்தவனை சிறுமை செய்யோணும்
காயம்தொழு நோயதனைக் கண்டவனாய் கைவிடுது
நாய் புசிக்கும்தட்டில் நறுஞ் சோறிடவேண்டும்

மாமியொரு  மருமகளோ மச்சாளோ  மகளவளோ
மங்கையராம் அத்தனையும் சேர்ந்திடவேணும்
பாவியவன் தான்திருந்தி பாதை வழிநேரில் வரப்
பார்த்து மனம் மாற்றிவிடு பைந்தமிழ் வெல்லும்

ஆயிரமா யுயிர் அழியும் ஆக இவன்ஒருவனாலே
ஆக்குவதும் அழித்திடவும் அன்னையால் முடியும்
சேயுயர்வு கொள்வதற்கு சிறுவயதில் பிஞ்சினிலே
தாயிருந்து நெஞ்சினிலே உரமிட வேண்டும்

துரோகமனம் கொண்டவர்கள் தூயவராய் நின்றிருந்தால்
தோல்வியென்ற தில்லை ஈழம் தோன்றியிருக்கும்
யாரோஇவர் நச்சுமனம் கொண்டவராய் இல்லையெனில்
நாடுயர வாழ்வுயர்ந்து பெண்வளம் உயரும்

Tuesday, March 15, 2011

மங்கையர் பாடல் (காதில் வந்த கீதம்)

பயம்திரண்டு துணிவு என்றுமாறும் - நல்ல
பனிதிரண்டு திடமும் கொண்டு படகையும் மோதும்
நயமிழந்த தென்றல் புயல் ஆகும் - நாமும்
நல்லறிவு சக்தி கொள்ள நாடதும் ஓங்கும்

தீயெழுந்து ஓடிவந்த போதும் - ஒரு
திண்மை கொண்டு மோதிவிடும் தீரமும் வேண்டும்
மாயவலைபோல் விழுந்து மூடும் - நம்
மனதெடுக்கும் உறுதி கூர்கொள் வாளென கீறும்

பெண்ணுயர்வு வேண்டின் நல்ல வார்த்தை - நாமும்
பேசி உள்ளஅன்பு கொண்டு வாழ்ந்திட வேணும்
அன்னை யென்றுகொண்ட குணம் ஆற்றல - நாமும்
அத்தனையும் கொண்டுவாழ்வில் உயர்ந்திட வேணும்

பெண்கள்வெறும் பிள்ளை பெற்றுக்கொள்ள - இந்த
பேருலகில் வந்த தென்ற எண்ணம் மாறணும்
மண்ணில் இவள் இன்றிவாழ்வு ஏது - என்று
மாலையிட்ட மன்னவரும் எண்ணிடவேண்டும்

வெட்டுமிடி வீழ்ந்திடினும் வேகோம் - கையை
விட்டெடுத்து மின்னல் கொண்டு பந்துகள் செய்வோம்
கொட்டி மழை பெருகினாலும் தாழோம் - அங்கு
கீழ்விழுந்து நீந்தியோடி கரையினைச் சேர்வோம்

தட்டிடுவோம் கைகள் தனைச் சேர்த்து - பெண்கள்
தாண்டாதோர் இடருமில்லை காதலும் சேர்த்து
கட்டிடுவோம் வாழ்வில் இன்ப வீடு - ஒளி
காட்டிடுவோம் அன்பு என்ற தீபமும் கொண்டு

பெட்டியிலே பாம்பு என்று கூனி - நாமும்
பேதைமையில் ஊரறியாப் பெண்ணென வாழா
எட்டிடுவோம் இமயங்களைத் தாண்டி! - நாமும்
இத்தரையும் ஆண்டிடுவோம் என்று நிரூபி!

ஆகுமோ? ஆகலாமோ?

கங்கை குதித்தோடிக் கடலோடு சேர்ந்திடலாம்
மங்கை மனம்நாடி மன்னவனைக் கூடிடலாம்
தங்கம் பெண்விரும்பித் தன்கழுத்தில் சேர்த்திடலாம்
சிங்கமுடன் புலியைச் சேர்ந்துவாழ் என்பதுவோ?

தெங்கி னிளநீரும் சேர்வழுவல் உண்டிடலாம்
நொங்கு விழமுக்கண் நோண்டிருசி கண்டிடலாம்
தொங்கும் கனிவாழை தோலுரித்து உண்டிடலாம்
சங்கத்தமிழ் இனத்தைச் சிங்களமும் தின்பதுவோ

மங்கு மிருள்சூழ மறைந்தகதிர் தூங்கிடலாம்
எங்கும் மானிடனே இரவென் றுறங்கிடலாம்
வெங்கண் சினம்கொண்டேவினைபேசி எம்குலத்தை
சிங்கத்திமிர் அழிக்கப் சீறாமல் தூங்குவதோ

செங்கதிரோன் உச்சிவரத் தீயாய் எரிந்திடலாம்
பொங்கி வெடித்தமலை புகைவந்து எரிந்திடலாம்
சங்குதனும் வெண்மைதரச் சற்றே எரிந்திடலாம்
எங்களது இனங்கொன்று எரிக்கநாம் விட்டிடவோ

பொங்கும் அலை கடலில் புரண்டுவிழுந்திடலாம்
எங்கோ மலையிருந்து எழுந்த நதி விழுந்திடலாம்
மங்கு மிருள் மாலை மலர்கள் துவண்டிடலாம்
தங்கத் தமிழீழத் தாய்க்குலமும் துவளுவதோ

கொட்டும் நஞ்சரவம் கொத்தவந்து சீறிடலாம்
பட்டுவிடக் கைகள் பத்தினியும் சீறிடலாம்
கிட்ட எலிஓடக் கிழப்பூனை சீறிடலாம்
வெட்ட உடல்வீழ வெங்குருதி சீறுவதோ

தொட்டில்படுத்த பிள்ளை தோன்றும்பசிக் கழலாம்
விட்ட கனி நாள்போக விழுந்து அழுகிடலாம்
பட்டதொரு காதலுக்கு பாவையுமே அழுதிடலாம்
சுட்டொழிக்க நாமோ சும்மா அழுதிடவோ

ஒன்றாகச் சேர்வதற்கு உள்ளவையோ பிரிவினைகள்
தின்றுமுடிக்கவுண்டு தோன்றுகின்ற துயரங்கள்
நின்றுமனம் சீறுவதோ நீசர்தம் செயலெண்ணி
வென்று முடிப்பதுவே வேலைஇனி எழுந்திடடா

துவண்டுவிழுவதுவோ துயர்செய்யும் அரசபடை
கவிழ்ந்து விழுவதுவோ கயவர்தம் ஆட்சிமுறை
அவிழ்ந்து கருகுவது அன்னியவன் கொடுமாட்சி
புகழ்ந்து எழுமெங்கள் புதியதொரு தமிழரசு

Sunday, March 13, 2011

அனல் பூக்களாய் இரு!

கண்ணே அன்புகனியே- உந்தன்
கைகள் வீசம்மா
கால்கள் இரண்டும் சோர்ந்தேநிற்கக்
காணுவ தென்னம்மா?
மண்ணில் வீழ்ந்து மனமும்வாட
மறுகுவதேனம்மா
மன்னனமகளே மகிழ்வேகொள்ளு
மலர்கள் பார்ப்போம் வா!

தோட்டத்தில்...

அழகுமலர்கள் பூத்து காணும்தோட்டம் பாரடி -என்றும்
அவைக ளின்பமாக தோன்றும் காட்சிகாணடி
மெழுகுபோலு மிதழ்கள் கொண்ட மென்மைபாரடி -தொட்டு
மெல்ல வீசும்காற்றில் வாசம் மிதக்கும்பாரடி

வண்ணப்பூக்கள் பூத்து வாசம் வீசிநிற்குது -அவை
வட்டமாக சுற்றி காணு மொட்டு அவிழுது
கண்ணில்காண காலைநேரம் களிப்புமாகுது -அது
காற்றிலாடி மெல்லமெல்லக் கதைகள்பேசுது


வெள்ளை மஞ்சள் நீல வண்ணபூக்கள் பாரடி- பாதை
வீதியோரம் வேலிமீது வைத்ததாரடி
உள்ளவிதங்கள் வேறுவேறு உண்டு ஆயினும் -அவை
ஒன்றுசேர்ந்து வாசம்வீசும் உணர்வு ஒன்றடி

அள்ளி இன்பம் தந்து காற்றில் ஆடிநின்றிடும் -எந்த
அல்லல் தீமை செய்யும் பூக்கள் அங்கு இல்லையாம்
கள்ளமற்ற மென்மை கொண்ட உள்ளமாகவே -அங்கு
கண்ண சைப்பதாக ஆடிக்காற்றில் நிற்குதே

என்ன வண்ண மென்னும்பேத மில்லைப் பாரடி -தீய
எத்தராக ஒன்றை ஒன்று ஏய்ப்பதில்லையே
கன்னத்தோடு கன்னம்சேர்த்துகதைகள் கூறியே -நல்ல
கட்டுமலர்கள் கூட்டமாகக் காணுமின்பமே

நீயும் அந்தப் பூக்கள்போல நெஞ்சம்கொண்டிடு -என்றும்
நித்தம்காலை புத்தம் புதிய வாழ்வென்றெண்ணிடு
பேயும் பாயும்கொல் விலங்கு போல மாந்தரும் -இந்த
பாவம்கொண்ட பூமிகாண்பர் பார்த்துநடந்திடு

பூக்கள் போல உள்ளம்கொண்டபோதும் கண்மணி -பாரு
பொய் புரட்டுதீமை கொள்ளை செய்யும்தீயவர்
நீக்கமின்றி பூமியெங்கும் நிற்கக் காண்கிறோம் - வாழ்வில்
நீயும் அந்த நீசருக்கு நெஞ்சம் இறுகிடு

பூக்கள்போலப் பேச்சில்பார்வை மென்மையாகவும் கெட்ட
புல்லர் காணும் போது தீயைப்போல வன்மையும்
ஆக்கிஉன்னைஅழிவு செய்யுமகிலம் மீதிலே -நின்று
அனலைக் கக்கும்பூக்கள் போல ஆகி வாழ்ந்திடு

Thursday, March 10, 2011

காதல் கயவர்



காதல்கவிதை தனியான பக்கத்திலுண்டு

விரும்புபவர்கள் செல்ல காதலின் ஓசை 

http://kathalkuyil.blogspot.com/





பூவைக்காண மோகம் கொண்டு போகும் தென்றலே
 போதை கொண்டு கூடிஆசை போன பின்னரே
தேவையில்லை என்றுவிட்டுத்  தள்ளிச்சென்றதேன்
 தீயில்வெந்த தாகப் பூவும் தீய்ந்து வாடுதே

ஓடிவானில் நீந்திப்போகும் ஒற்றைமேகமே
  உண்மை காதல் கொண்டுநீயும் வெண்ணிலாவையே
தேடிவந்து முத்தமிட்டதென்றே எண்ணினேன்
  தென்றல்போல நீயும் விட்டுத் தூரச் சென்றதேன்

நீரிலாடும் ஆம்பல்மீது நின்றுதேனையே
  நீயும் உண்டுஇன்பம்காணல் நேர்ந்த பின்னரே
சேரும் எண்ணம்நீங்கி நீயும் செல்வதேனடா
  சில்லென்றூதும் வண்டே நீயும் செய்வதென்னடா

காலைவந்து வானெழுந்த காதலாதவன்
கோலம் போடும் நீரலைகள் கொண்டதாமரை
மேலெழுந்த பூமுகத்தை வாடசெய்யவதேன்
மாலைதன்னில் போயொழிந்து மோசம் செய்வதேன்

காலம் சொல்லும்நீதி எங்கும் கயமைதானடா
 காவல் செய்ய யாரும்,இல்லை கண்ணீர்தானடா
ஞாலமெங்கும் நேர்மை காக்க யாருமில்லையா
 யாரைநானும் குற்றம் சொல்ல யாவும் தெய்வமா

பூவில் வண்டில் புள்ளி னத்தில் போயும் மக்களில்
தாவி ஒன்றோடொன்றில் இன்பம் தேட வைத்ததேன்
தூவி நெஞ்சில் காதல் என்னும் தூபமிட்டவன்
தேவி,பெண்மை தோல்வி என்றால் தீமை காண்பதேன்


காதல்கவிதை தனியான பக்கத்திலுண்டு

விரும்புபவர்கள் செல்ல காதலின் ஓசை 

http://kathalkuyil.blogspot.com/

புத்தாண்டுக் கொண்டாட்டம்


தெள்ளுத் தமிழ்வாழும் தீம்பொழில் கொள்ளொரு
     தேனிசைநாட்டினிலே
அள்ளிமதுரமென் றாசைகொள்ளத்தமிழ்
    அன்புகொள் வீட்டினிலே
நள்ளிரவிலொரு கள்ளனைப் போல்வரும்
    நங்கை புதுவரவை
கொள்ளி யெடுத்துக்கொண் டோடினான் சின்னவன்
   கொண்டாடவாம் வெளியே

சட்டுசடுவெனத் துப்பாக்கி போலொரு
    சத்தம் நிறைந்திருக்க
கிட்டப் போகாதேடா ஓடுஒடுவென்று
    கத்தி குளறிநிற்க
விட்ட புகைதனில் மூச்சுத் திணறிட
    விரைந்து மூக்கழுத்த
சொட்டுவிழிகளில் நீர்தளும்பப் புதுச்
    சுந்தரி ஆண்டு வந்தாள்

விண்ணி லதிர்ந்தன வேடிக்கையாய் பல
    வண்ண மலர்வெடிகள்
எண்ணம் நிறைந்திடக் கண்னைகவர்ந்திடும்
   இன்ப ஒளிச்சிதறல்
மண்ணில் நம்மாந்தரும் எண்ணியஎண்ணங்கள்
    மற்றும் சுதந்திரங்கள்
கண்களின் முன்னே  வெடித்துத்சிதறின
  போலும் சிதறினவாம்

பொன்னெனும் நாளினில் பூமிவருமெங்கள்
    புத்தம் புதுவரவே!
இன்பமெனஎண்ணி ஏழைமகிழ்ந் திடு
   மெங்கள் புதிய ஆண்டே
என்னவிழைத்திட எண்ணமெடுத்தனை
   இந்த உலகமதை
உன்னதமாக்கிடவா  உள்ளவரின்
   உயிரை வாங்கிடவா?

தேருதல் வந்திட தேசம் மகிழ்ந்திடும்
   தென்றலும் பாட்டிசைக்கும்
மாறுதல் கொண்டிட ஆளுபவர் இடம்
  மாறிப் புதுமைகொள்ளும்
ஆறுதல் என்பது ஏழைக்கில்லை அது
   ஆட்சியில் கொள்ளையிடும்
கூறுகள் போட்டுப் பிரிக்குமொருசில
  கூட்டத்துக்கே மகிழ்வு

பத்துகள் போய்ப்பதி னொன்றுவருகுது
     பாரினில் மாறுதல்கள்
எத்தனைதான் நிகழ்ந்திடுமோ இது  
   எங்களுக் கானதில்லை
சொத்துக்களும் அந்ததேசத்தை ஆண்டிடும்
    சிங்கம் கழுகுகளும்
மொத்தமும் என்னது உன்னது என்றிட
   மொய்யெழுதும் வரைபு

புத்தாண்டே நீயுமே போய்வரும்மாறுதல்
    புதிய வாழ்விடுமா
எத்தனின் மைந்தர்கள் இட்டசதிகளை 
   ஏந்திழை கொன்றதுமாய்
நித்தம் அடைந்திடும் நீசக்கொலைகளை
   நின்றிடச் செய்துவிடு
இத்தரை மீதினில் உன்வரவை எங்கள்
   உள்ளத்தில் போற்றிடுவோம்

கையெடுப்போம் உந்தன்கால்விழுவோமெங்கள்
  கன்னத்தில் போட்டிடுவோம்
மெய்யுருட்டிப் பெருந் தேரிழுத்து உன்னை
   தெய்வமெனத் தொழுவோம்
பொய்யை விரட்டியோர் பாதைவகுத் திந்தப்
  பாவிகளை உலகில்
உய்துவிடவென வெங்கள்ஈழ மமைத்திட
   ஓர்வழி செய்துவிடு!

Monday, March 7, 2011

நாடுகடந்த தமிழீழ அரசு

தட்டியடி  மேளம்இன்று தங்கமே தங்கம் - எமை
சுற்றியெழும் பகைகள்தீர தங்கமே தங்கம்
வெட்டியடி மின்னல்என தங்கமே தங்கம் - தாளம்
தட்டியடி வெற்றி யென்று தங்கமே தங்கம்
சுற்றிஇருள் மேகம்எல்லாம் தங்கமே தங்கம் - இனி
சுழன்றடிக்கும் காற்றில்ஓடும் தங்கமே தங்கம்
பற்றிஎழுந் தார்புவியில் தங்கமே தங்கம் - இனி
பக்குவமாய் பழம்கனியும் தங்கமே தங்கம்

நாடுகடந் தோர்அரசு தங்கமே தங்கம் - நம்
வாழ்வில்ஒரு விடிவுதரும் தங்கமே தங்கம்
மூடுமிருள் தேடும்கடல் பாய்மரத் தோணி - கரை
சேரக்கலங் கரைவிளக் காய் ஆனது தங்கம்
பாடுபடு தோள்கொடடி தங்கமே தங்கம் - உன்
பங்குமெமக் கவசியம்தான் தங்கமே தங்கம்
நாடுஎண்ணி கல்லறையில் தூங்குவோர் நெஞ்சம் இனி
நல்லமைதி காணவழி வந்ததே தங்கம்

வெற்றியுடன் கண்டிடுவோம் தமிழவர் ஈழம் - அதை
வெல்வதற்கு அமர்ந்ததொரு அரசியல் மன்றம்
நற்றமிழர் செய்தவைக்கு தங்கமே தங்கம் - நாம்
தட்டிடுவோம் கை வலிக்க தங்கமே தங்கம்
பற்றியெழும் சுதந்திரத்தீ எங்களின் நெஞ்சில் - அதை
பகைவர் கண்டு நடுங்கவேண்டும் தங்கமே தங்கம்
நெற்றிக் கண்ணைத் திறந்துவீட்டோம் தங்கமே தங்கம் -இனி
நீறு பூத்து அழிவதெல்லாம் எதிரியின் பக்கம்

தீயமனம் கொண்டவர்கள் வாழ்வது மில்லை - என்றும்
தோல்விபெற்று நீதிசெத்துப் போவதுமில்லை
மாயஇருள் ஓடிமறைத்தா லுமோர் உண்மை - மீண்டும்
மாலைஇருள் காலைபோக தெரிவது திண்மை
வானில்உள்ள சூரியனை மறைத்திடும் மேகம - இருள்
வந்ததுபோல் ஓடிவிடும் கலைந்திடமேகம்
ஈழம்என்ப தினிஒருநாள் மலர்திடும் வேளை - நம்
இன்னல்தீர்ந்து பெற்றிடுவோம் சுதந்திரவாழ்வை

காலம்இனிக் கேள்விகேட்கும் தங்கமே தங்கம் - அந்த
கயவர்பதில் சொல்லவேண்டும் தங்கமே தங்கம்,
ஊழிவினை தேகம்கொள்ள ஒருவன் மாளுறான் - இனி
உள்ளவர்தாம் ஒவ்வொருத்தர் ஆகப்போகிறார்
நாளும்பொழு தாகநம்ம நிலமை மாறிடும் - ஈழ
நாடு எங்கள் கைகளிலே வந்து சேர்திடும்
தாழுவது எதிரிகொடி சிங்கமே தங்கம் - இனி
தலை நிமிர்ந்து பறக்கும் கொடி செந்தமிழ் ஈழம்

Thursday, March 3, 2011

சிவனே உனைத் தொழுதேன்....! கவிதை

கணமும் உன்னை நினயாதுள்ளம்
இருந்தேனே யாயின்
பிணமாய் வாழ்ந்தே னென்றே எண்ணும்
பித்தம் கொண்டேனே
மணமாய் வீசும் மலர்கள் தூவி
மனதால் நிதம்போற்றி
குணமாய் வாழக் கும்பிட்டே உன்
கோவில் வந்தேனே

இறைவா நீயோ தணலாய் நாமும்
எரியும் வேளைதான்
நிறைவாய் உறையும் பனியாய் நிற்கும்
நிலையைக் கொண்டாயோ
உறைவாய் எங்கும் உள்ளாய் ஈசா
உமையின் பாகோனே
விரைவாய் எம்மை காப்பாய் என்று
வேண்டிக்கொண்டோமே

முறையாய் கல்லுள் காணும் தேரைக்
கொருவாய் யுணவைத்தான்
தருவாய் நீயும் என்றே பகர்வார்
தரணிக் கறிஞோரே
உருவாய் அருவாய் நின்றாய் நீயோ
ஈழத்தோர் மட்டும்
திரிவாய் பிணமாய் எரிவாய் கரியாய்
தெருவில் என்றாயே

உருகாய் என்றே உருகிக் கேட்டும்
உருகா நின்றாயே
பெருவாய் கொண்டே பேயாய் சிங்கப்
பிறவிக் குரியோனாம்
கருவாய் உள்ளோர் தொட்டு, கூனிக்
கிழமாய் போனோரும்
திருவாய் மொழியிற்தமிழர் என்றால்
தலையைக் கொய்தானே

உமையோ கூந்தல் வாரும்போது
உள்ளம் கிளர்ந்தாயே
இமையாள் கூந்தல் இனிதே வாசம்
இயல்பே என்றாயே
எமையோ தீயில் அள்ளிபோட்டு
எரியும் போதோநீ
சுமையாய் லட்சம் கூந்தல் கருக
சிலையாய் நின்றாயே

பிழையாய் கவியை குற்றம்
கண்டபுலவர் நக்கீரன்
அழலாய் எரியச் செய்தே நீயும்
அவனைக் கொன்றாயே
பிழையாய் தமிழர் கோரக்கொலையை
பெரிதாய் செய்தோனும்
குளமா யுதிரம் கொட்டக் கொல்ல
குளிரக் கிடந்தாயே

எதுநாம் செய்தோ மிறைவா உன்னை
இதயம் நம்பித்தான்
கதியாய் கைகள் கூப்பித் தொழுதோம்
கதறிக் கேட்டோமே
சதியா செய்தாள் கங்கை உந்தன்
சடையில் கொண்டாயே
நதியாய் கண்ணை மூடிபாய்ந்து
நாட்டுக் குழைத்தாளோ

விதியோ நாமும் வீரம்கொண்டு
வேங்கை போலத்தான்
எதிரிக் கிணையாய் இன்னும் மேலா
யேற்றம் கண்டோமே
புதிதாய் முழுதாய் படைகள் மூன்றும்
கொண்டே தமிழீழம்
மதியும் மறமும் கொண்டோர் தலைவன்
முடிகொண் டாண்டானே

வெல்லக் கிடையா வீரமென்றே
வியந்தே அஞ்சித்தான்
கொல்லக்கூடா நஞ்சைபோட்டுக்
கொன்றார் புவியோரே
மெல்லக் கடலை அமுதம் வேண்டி
மேலோர் கடையத்தான்
கொல்லும் நஞ்சு திரளத் தின்றே
குலமே காத்தாயே

எம்மை தமிழைக் கொல்லநச்சுக்
குண்டைபோட்டாரே
அம்மை மடிமேல் கொண்டோன்
கண்டும் அசையாதிருந்தாயே
வெம்மைக் குரிய நஞ்சை வாயில்
கொள்ளக் கேட்டோமா
நம்மைக் கொல்லும் நஞ்சுகுண்டை
பஞ்சுசென் றாக்காதேன்

வஞ்சங் கொண்டு யாகம்செய்து
வாழ்வில் உன்னைத்தான்
அஞ்சும்புலியை ஆக்கிச் சிவனே
அழியென்றதை ஏவ
மிஞ்சும் கோபம் கொண்டே தோலை
மேனிக் குடுத்தாயோ
வஞ்சம் மாறா தின்றும் வேங்கை
கொன்றே நின்றாயோ

அஞ்சும் அறிவும் கெட்டே ஈசா
அழிவைச் செய்தாயே
பஞ்சம் என்றால் ஆக்கும்காக்கும்
பிரம்மன் திருமாலும்
மஞ்சம்கண்டு தூக்கம்கொண்டார்
மதுவாம் அமுதுண்டோ
கொஞ்சம்கூட காவாதெம்மை
கொல்லக் கிடந்தாரே!

சிவனே நீயோ எம்மைக் காவல்
செய்யும் மனதின்றி
சிவனே என்று இருந்தாலென்ன
சிறிதாய் மனம்கொண்டு
அவனேஒருவன் அகிலம் அஞ்ச
அவனிக் கொளியாக
பவனி வந்தான் பகலின்வெம்மைக்
கதிரோன் வாரானோ

Wednesday, March 2, 2011

கண்ணுறங்காய் கண்மணியே!_(ஈழ அன்னை)

ஆராரோ ஆரிவரோ ஆசைமகன் கண்ணுறங்காய்
ஆரமுதே முத்தேயென் அன்பே நீ கண்வளராய்
நீருறும் சின்னவிழி நித்திரைக்கு வாடுதடா
நெஞ்சோடும் சோகமுந்தன் நீள்விழியில் தோன்றுதடா

 
சீரேறும் சின்னமுதே சித்திரமே வாடுவதேன்
தேரேறிப் போனதந்தை தேடிவர வில்லையென்றோ
ஊரைக்கெடுத்தவர்கள் ஊரைவிட்டு ஓடும்வரை
உத்தமர்கள்போனவரோ ஊர்திரும்ப போவதில்லை

ஆறோடு சென்ற மரம் அலையேறி வந்தில்லை
நீரோடு சென்ற இலை நேரெதிர்த்து வந்ததில்லை
வாரியடித்த புயல் வாழும் பூவை விட்டதில்லை
ஊரில் புகுந்தபகை உயிரைவிட்டுசென்றதில்லை

வேரைப் பறித்தமரம் வீழ்ந்தபின் னெழுவதில்லை
ஊரைப் பகைத்த இனம் ஒன்றும் விடப்போவதில்லை
நீரை இறைத்ததென நெஞ்சை வெட்டி செங்குருதி
கோரக் கொலையும்செய்யக் கொப்புளித்துஓடுதடா

ஆராரோஆரிவரோ ஆரடித்து நீயழுதாய்
பேராழிமுத்தேஎன் பேசும்கிளிபொற்குடமே
தேசமழியுதென்றா தேன்மலரே நீயழுதாய்
திக்குப் பரந்ததமிழ் தேயுதென்றோ நீயழுதாய்

ஊரும் அழிக்கையிலே உற்ற தமிழ்ச் சொந்தமெலாம்
பாரில் பரந்திருந்தும் பாசமில்லை என்ற ழுதாய்
வீராதி வீரனென வித்தகனே நீவளராய்
நீயாளுங் காலம்வரும் நெஞ்சிலுரம் கொண்டுவிடு

ஒன்றாக ஊரைவெட்டி உன்மத்தம் கொண்டுபகை
தென்நாட் டசுரரெல்லாம் தீந்தமிழைக் கொல்லுகிறார்
தேன்நாடு பொற்தமிழம் தென்றல்பிண வாடைகண்டும்
ஊனுருகித் தான்கொதித்து ஓடிவரவில்லையடா

மேல்நாட்டில் தானிருந்து மெட்டியொலிபார்த்தமாமன்
மானாட்டம் பார்த்தபின்பு மண்ணை மறந்த தென்ன
தேனோடும் நாட்டினிலே தெருவோடிப் பிச்சைகொள்ள
வானோடும் கப்பலிலே வந்தெவரும் காக்கவில்லை

கண்ணே கனியமுதே கட்டழகே கண்ணுறங்காய்
மண்ணே தொலையுதென மன்னவனே எண்ணினையோ
நீரோடும் கண்ணிரண்டில் நித்திரையும் விட்டதேனோ
நெஞ்சோடு கொண்டதுயர் நிம்மதியைச் சுட்டதுவோ

நீயழுது என்னபயன் நித்திரையை கொள்ளுகண்ணே
நீயெழுந்து கேட்கும்வரை நேருவது ஏதுமில்லை
ஆரமுதே அன்பேஎன் ஆசை மணிரத்தினமே
தீரமுடன் நீவளர்ந்து தேசம்காக்க வேணுமடா

பாராளும் பாவிகளோ பந்தடிக்க எம்தலையா?
ஊரோடு உள்ளதெல்லாம் கொள்ளியிட்டு கொன்றிடவா?
நேரோடும் வாழ்விலெம்மை நீசமனம் ஏய்த்ததடா
நீவளர்ந்துகேளுகண்ணே நெஞ்சிலிதை வைத்துவிடு

ஊரு முறங்கையிலே உத்தமனே கண்ணுறங்காய்
பேரழிவு காத்திருக்கு பின்னரெழ வேணுமடா
நித்திரையில் நீவளர்ந்து நெஞ்சினுரம்கொண்டிடடா
இத்தரையில் உன்னையெண்ணி ஈழம்காத்து நிற்குதடா