Sunday, March 17, 2013

சிரித்திரு மகளே


நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
. நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
. சொல்லும் சிரிப்பிதுவோ
ஓலையிடை தென்னங்கீற்றினூடு நிலா
. ஓடிச் சிரித்ததுவோ-மழை
போலும் இளந்தூறல்காண வண்ண வான
. வில்லும் சிரித்ததுவோ

வாழை மரங்களில் வந்துநீளும் குலை
. வைத்த முன் பூவரிசை -அது
தோழமை கொண்டு சிரித்தனவோ- கனி
. தேனைக் குழைத்தனவோ
கீழை வயற்கரை கோபுரவீதியில்
. கூடும் மந்தியினமும் - வந்து
வீழப் பொலிந்த கனிஉண்டு ஆனந்த
. வேளை என்றாடியதோ

பச்சை வயல்வெளி முற்றும் நிறைகதிர்
. பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
. சாய்ந்தே சிரித்தனவோ
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
. பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
. தங்கும் சிரித்ததுவோ

கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
. காணும் பசும் இலைகள் - நெடு
வானமழை விழும்நீர் துளி கொஞ்சிட
. வெட்கிச் சிரித்தனவோ
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களைத்
. தாங்கிச் சிலுசிலிர்த்து - எழி
லான சிறுஓடை மீதுமலர் தூவி
. ஆனந்த மென்கிறதோ

வெள்ளை மணல் மீது வந்துகடலலை
. வீழ்ந்து சிரித்தனவோ -கயல்
துள்ளிக் குளத்திடை தாமரைப்பூ இதழ்
. தொட்டுச்சிரித்ததுவோ
வெள்ளிப் பனி உச்சி ஏறும்கதிர்கண்டு
. வீழ்ந்து சிரித்ததுவோ -சுகம்
அள்ளித்தரும் இளம்தென்றல் சிலிர்ப்பிட
. ஆரத் தழுவியதோ

அத்தனை காணும் சிரிப்பு மியற்கையின்
. அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளோ
. இரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
. பட்டெழில் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச் சிரித்திடு
. அற்புத பூமியிதே

தாகம்


ஒற்றுமை என்பது வெற்றித்திருமகள்
   நெற்றியிலிட்ட திலகம் - தமிழ்ப்
பற்றினைக் கொண்டெழு ஒன்றெனச் சேர்ந்திடு
   கிட்டிடும் வாழ்வி லுதயம் - உயர்
நற்றமிழோ உந்தன் நாவில் புரளினும்
    இரத்தத்திலே கொண்டவீரம் - அதை
விற்றிடவோ விலைபேசிடவோ உந்தன்
    சொத்தில்லை பாரம்பரியம்

வேற்றுமை விட்டணி செல்வாய் அதுவுந்தன்
    வா  ழ்வினுக்கோர் அத்திவாரம் -இன்னும்
சுற்றி மனங்கொண்ட செந்தீ  எழுந்துயிர்
     கொள்ளும் சுதந்திர தாகம் - வெறும்
புற்றினில் சீறிடும் பாம்பின் விசம்விடப்
     பொல்லாவெறியரின் மோகம் - இனி
முற்றும் எனத்துயர் கொள்வதை கண்டிட
     முன்னெழுந்தார் இவர் வீரம்

பற்றிஎரியும் அடிவயிற்றி லெழும்
     பாசமிகுந் திவர்போலும் - பல
கற்றிடும் மாணவர் உள்ளம் கண்டதீயும்
      காற்றினிலே பெரிதாகும் - தீயைப்
பெற்றிடும் செந்தமிழ் செல்வங்களேஇனி
      முற்று மெரிந்திடும் நீசம் - நீவிர்
ஏற்றிடும் தியாகத்தின் தீயும் சுதந்திரம்
      வெற்றிவரை தொடரட்டும்


செங்குருதி சிந்தப் பெண்களுயிரைக்
     குடித்தவன் பஞ்சணை மீதும் - அவன்
தங்கமுடி தலைகொண்டர சாளவும்
     தாழ்ந்து நலிவதோ நாமும் - இனி
சங்கு ஒலித்திடப் பொங்கியெழுந்தவர்
     சந்தண மார்பெடு தீரம்   கண்ணே
பொங்குமிதற்கொரு பாதைவிடு இது
     புத்தொளி காணுமோர் தாகம்

புகழ்போதை

           

புகழ்போதை தனைவெல்லப் புவிமீதிலே
  புதிதாக எது உண்டு சபைஏறியே
நிகழ்கின்ற எதுதானும் தனைமீறியே
  நேரும் வினோதங்கள் கலைமேவியே
அகழ்கின்ற குழியாவும் அவர்மேனியே
  அடங்குமென் றறியாமல் சில பேருமே
திகழ்கின்ற விதிவந்து மனம்கொள்ளவே
  தெரிந்தாலும்குழி தோண்டும் வழியாகுமே

அலைகின்ற திரையேறி அவன் நீந்தினான்
 அழகென்று அலைகண்டு அதனுற் புகுந்தான்
தலைமூழ்க அலையோங்கி வரும்போதினில்
   தனதுயிரின் நிலைகண்டு கரைவேண்டினான்
நிலைகெட்டுத் தடுமாறி அதில்நீந்தவே
    நேரமதில் உருண்டோடும் விதியானது
குலைகின்ற பொழுதெண்ணிக் குறைவாக்குமோ
    கொடிதெண்ணித் தடையிட்டு உயிர்நீக்குமோ

கதியும்பிழைத் துயிர்கொள்ளப் புயல்வீசுமோ
  கைதந்து உயிர்காத்துக் கரைசேர்க்குமோ
நதிகொண்டபூவாக நலிந்தோடியும்
 நிலைகெட்டு விழும்போது நினைந்தேயவன்
புதிதெண்ணி வரும்போது பகைமிஞ்சுமோ
  பொழுதென்ப இருளோடு புகை மிஞ்சுமோ
அதிசீலஒளித் தீயே அருகோடுவா
   அகிலத்தில் அவன்கொள்ளும் அமைதியும்தா

(வேறு)

அண்டம்பொறி பறந்தோட அனல்சிதறி வெடியதிர
ஆக்குவாய் சக்திதேவி
முண்டம்தலை யென்றிணைய முகம்செய்து தமிழ்கொண்டு
மூச்சினையும் ஊதிவைத்தாய்
கண்டம் கடல்கடந்துவந்து கடுங்குளிரி லுழலகலை
யுணர்வுகொண் டெழெவும் வைத்தாய்
தண்டமெது தருவதெனில் தந்தமகு டம்விழவுன்
தகித்திடும் தீயில் இடுவாய்

குண்டெனுருள் கோளங்களும் கூட்டமைத்துக் கோடியெனக்
குதித்தோடச் செய்ததாயே
வண்டெனச்சொல் மதுவார்த்து வாழ்வில்புகழ் போதைதனை
வழிகாட்டி விட்டதேனோ
செண்டினொடு மலராட செய்தவளே கருவண்டு
தீண்டிவிடத் தெருவில்பூவாய்
மண்ணொடுமண் ணாகஎனை மாறிவிடச் செய்ததுவும்
மகிழ்வானால் மறுப்புமுண்டோ

பிச்சையிவன் உடலீந்து பிச்சையென உயிர்வைத்துப்
பிச்சையெனும் வாழ்வீந்த தாய்
இச்சைதனைக் கொண்டெழுந்தும் இயல்பில்கவி பாடிப்புவி
இரந்துதிரி என்றதெவரோ
பச்சையுடல் மீதுயிரைப் படைத்திட்ட தேவி யுனைப்
பாடிவலம் வாஎன்பதால்
அச்சமில்லை என்றவனை அணை என்று கூறியதேன்
அணையல்ல அணையென்பதோ?


காலத்தை வென்றவன்

கலையென்ன மனம்மீது கலைந்தோடவோ
கவியின்பத் தமிழ்நாவிற் கசப்பாகுமோ
இலைஎன்ப தொருசொந்தம் எனவாகுமோ
இதைக் கண்டு விழிமூடி இருஎன்பதோ
மலையென்ற மனம்கொண்ட திடமானது
மண்னாகி உருமாறி மறைந்தோடுமோ
தலையெங்கும் தடுமாற்றம் தலைதூக்குமோ
தவிப்பான தெனைக்கூடித் தரைவீழ்த்துமோ

இடர்வந்து வழிமீது இருந்தாடுமோ
இடம்விட்டு இருள்காணும் திசை செல்லவோ
சுடர் கொண்ட மணிதீபம் புயல் கொள்ளவோ
சுடுமென்று ஒளிகாவா திருள் நிற்பதோ
படர்கின்ற துயர் கண்டு பணிந்தோடவோ
பழகும் நற்துணைகொண்டு விரைந்தேறவோ
அடர்வானில் விரிமேகம் ஒளிமூடுமோ
அடடா என் விதியென்று சுடர் தூங்குமோ

இறைதேவி எனயாளும் ஒளிதீபமே
எனதாசை தமிழோடு இன்னும்வாழவே
கறைபூச எனதன்பு மனம்மீதிலே
கருதாது பகையின்றி உயிர்மேவியே
உறைவாய்நீ உயரன்பில் எனையாளவா
உளம்மீது கொளுமின்பத் தமிழ்மீண்டும்தா
மறை வானில் பெரிதான ஒளி தீபமே
மனப்பூத்துத் தமிழ்பாடும் மறுவாழ்வுதா!

பொங்கல் வராதோ?

         

பொங்கலும் உண்டேன் இனிக்கவில்லை - சில
பூவள்ளிப் போட்டேன் மணக்கவில்லை
தெங்கின் அருகிடை தோன்றும்கதிர் - இன்று
தேசு கொண்டுவீசக் காணவில்லை
செங்கரும்புண்ணச் சுவைக்கவில்லை - ஒளி
சோதி விளக்கேற்ற நிற்கவில்லை
மங்கும் பொழுதென்னும் தீரவில்லை - சில
மேகம் மறைக்குது வெய்யிலில்லை

வண்ண மலர் காலை பூக்கவில்லை = அதில்
வாசமெழக் காத்தேன் வீசவில்லை
கொண்டு வரும் தென்றல் கூடவில்லை  - இன்று
கூவும் சேவல் குரல் கேட்கவில்லை
மண்ணில் உதயத்தைக் காணவில்லை - கோவில்
மங்கல ஓசை மணிகளில்லை
பண்பாடு மீண்டும் தளைத்ததொரு - பொங்கல்
பாரில் விளைந்திட ஏதுசெய்வேன்

பாயும் சுருட்டியுள் வைக்கவில்லை - இந்தப்
பாழும் தூக்கம் விழி நீங்கவில்லை
தேயும் நிலாவென்ற தென்பு நிலை - எந்தத்
திக்கிலும் பாதை தெரியவில்லை
நேயம் நேர்மை எங்கள் பக்கமில்லை - எந்த
நீதியும் ஓசை மணிகளில்லை
காயும் வயலிடைநீருமில்லை - என்ன
காரணமோ பதர் நெல்லுமில்லை

கண்கள் விழித்து கடிதெழுந்து - உடல்
காணும் சோம்பல்தனும் மெய்முறித்தே
எண்ணத்தில் தீயிட்டுப் பானைவைத்தும் - அதில்
ஒற்றுமைச் சர்க்கரை ஊற்றிவைத்து
மண்ணையும் மாகதிர் வெய்யவனை - எண்ணி
மங்கலபாடல் முழங்கியொரு
வண்ணப் புதுபொங்கல் செய்வதெப்போ - அதை
வாயில் வைத்துசுவை கொள்வதெப்போ ?

அரசனா? ஆண்டியா?

ஆண்டுபோய் ஆண்டொன்று சேரும் - இந்த
ஆனந்த வான் வண்ணமாகும்
மூண்டு தீ வானிடைஓடும் - அது
மூவர்ணமாய் ஒளிபூக்கும்
ஆண்டவன் ஆளுவன் யாரும் - என்ன
ஆனாலும்ஆணவம் மங்கா
தீண்டும் வாள் தேகங்கள் கேட்கும் - அது
தித்திப்பை இரத்தத்தில் காணும்

ஆண்டிகள் போல்மொழி மேன்மை - இனம்
அங்கென்றும் இங்கொன்றும் ஓடும்
வேண்டிப் பிழைப்பதை நாடும் - ராஜ
வீரம் சலித்த தென்றோடும்
ஆண்ட பரம்பரை மீண்டும் - ஆளும்
ஆசைகுன்றிச் சோம்பல் கொள்ளும்
வேண்டா மென்றெதள்ளி ஓடும் - என்ன
வேதனையில் இன்பங் கொள்ளும்

ஆண்டவன் என்செய்யக் கூடும் - அந்த
ஆறாம் எண்ணம் கெட்டதாகும்
மீண்டுமிவர் சக்தி மேன்மை - பெற
மேதினியில் வாழ்வுமிஞ்சும்
தீண்டாது புத்தியை மூடி - இது
தேவை யில்லை என்றுவீசி
வேண்டா தென்றே கூனிநின்றால் - என்ன
வேதனைதான் மீதியன்றோ

தோண்டப் பொருள்வரு மென்றும் - பொன்
தோட்டதில் காய்கொள்ளும் என்றும்
நோண்டிக் கூரைதனைப் பிய்த்தே - ஒரு
நாளில் கொட்டும்பணம் என்றும்
ஆண்டாண்டு எண்ணிக் களித்து ஆவர்
ஆயுள் முடியும் வரைக்கும்
பூண்டாகிப் புல்லாகி தேய்ந்தும் இவர்
புத்தி கெட்ட வாழ்வே மிஞ்சும்


**********

Thursday, March 14, 2013

காதல் வெறுப்பு

நீர்வார்த்து நீரினிடை நெளிந்தோடவும்
  நீந்துகயல் நெளியலையும் உருவாக்கினாள்
பார் செய்து பரந்தவெண் பனிமலைகளும், 
   பட்ட கதிரா லு
ருகி வீழும்நதி
நேர் நிற்க வெயிலோடு நிழல் மரங்களும்

   நீள் வானம் நீந்துமெழில் மேகங்களும்
சீர்ஆக்கி உலகமைத்து சிலமாந்தரும்
  செய்தவரை வாழென்றே சிரித்துநின்றாள்


யாராக்கி மனிதமதில் அறிவையீந்து
  ஆணாக்கிப் பெண்ணாக்கி அவர்சேரவும
பேராக்கி அன்னையொடு  பிள்ளையென்றும்
  பெற்றவரில் தந்தையும் உருவாக்கினாள்
கூராக்கி மனங்கொள்ள உணர்வீந்தவள்
  குருதி தசைஎன்புடனே கூட்டி வைத்தாள்
தேராக்கி வாழ்வுதனை தினமோடென
  தேகமதில் உணர்வோடு உயிரையீந்தாள்


விண்ணாக்கி விண்ணிறைந்த கோள்களாக்கி
  விளையாடி அசைக்கின்ற \சக்தி தேவி
ஆண்காணப் பெண்ணழகு, அன்பினோடு
  அறிவீந்தும் அதைமீற உணர்வு தந்து

கண்ணாக்கி கன்னியிடம் காதலெனும்
  கருவாக்கிப் பொருளாக்கிக் கனவாக்கியும்
மண்ணாகப் போகுமுடல் மதன் வீசிடும்

   மலர்க்கணைபட் டுள்ளமும் மயங்கவைத்தாள்

வானாக்கி வெளியாக்கி விண்மீன்களும்
  வண்ணமதி விளையாட வழிசெய்தவள்
தேனாக்கி தேன்மலரில் சுவையாக்கியும் 
  செய்தபின்னே தேவையென வண்டாக்கினாள்
தானாக்கி மனித உடல் தன்னிலிச்சை
   தனையாக்கி குலமாக்க விதியும் செய்தாள்
ஏனாக்கிவைத்த இந்த இயற்கை யீர்ப்பை
   இழிவென்று இயம்பி இதைத் தள்ளலாமோ


இறைநோக்கம், இருவர் மனம் ஒன்றாகுதல்
  இளைமைதனும் தாய்மையின் ஏதுவானால்
கறைகொண்ட உணர்வென்று கருதலாமோ
  காதல் பெருந் தவறென்று தள்ளலாமோ
குறை காணின் இறைதானும் குறைசெய்யுமோ
  குற்றமவள் குணமென்று விதிசெய்வதோ
நிறைவற்ற எண்ணமென விரல்நீட்டினால்
  நீயென்று தீயள்ளி பொசுக்கிடாதோ


ஆதலினால் காதலினைச் செய்வீரென
  அகிலமதில் யானுரைக்க வில்லையையா
காதலென்ப குற்றமெனக் கருதவேண்டாம்
  கருணையுடன் நோக்குங்கள் காதலர்களை
பாதகமே யில்லாது பறந்து வானில்

   பறவைபோ லிருவரையும் மிதக்கவைத்து
நாதயிசை மாலையணி தோளாராக்கி

   நல்லதொரு வாழ்வீந்து மகிழுவீரே!

Tuesday, March 12, 2013

வாழும் வாழ்வு !


நல்ல மனங்களிள் அன்புக் கோவில்கட்டி
ஆண்டவன் வாழுகிறான் - அவன்
சொல்லி வழி நடந்தின்பம் பெறுவதை
என்றுமே கொள்ளுகிறான்
எல்லை வகுத்தவர் அல்லல்தனை நீக்கி
ஓங்கிடச் செய்யுமவன் - மனம்
கல்லை நிகர்த்தவர் கொள்ளும் இதயங்கள்
மெல்ல உருக்கிடுவார்

கண்ணைத் திறக்கினும் காணுபவை வெறும்
காட்சி கனவுகளே -  இந்த
மண்ணில் நடந்திடும் மாய விநோதங்கள்
மர்மக் கதை யெனவே
எண்ண மென்பதென்ன  எத்தனை பேய்களின்
இன்பச் சுடுகாடு  - நெற்றி
கண்ணனவன் நட மாடிக்கழிக் கும்வெண்
சாம்பல் கொள்ளும்மேடு

அள்ளிக் கொண்டுசெல்ல ஏதுமில்லை நாமும்
அந்த மென்றாகையிலே - ஒரு
வெள்ளிக் கதிரொளி ,வெற்றிடம், சூழிருள்
வேறொன் றிருப்ப தில்லை - யாவும்
துள்ளித் திரிகின்ற பொன்னெழில்வாழ்வினில்
தேடும் பொன்செல்வங்களும் - பதில்
அள்ளியெடுத்திட வந்துவிழுவது
ஆகத்துயர் அழிவே

தொல்லை தரும்விதி கொண்டவாழ்வுமிது
தூய்மையில் மாயைகளாம் - நாமும்
இல்லைஎனப் புவி நீங்கிய பின்னரே
உண்மையைக் காண்பதுண்டோ
சொல்லிலே தன்னலம் எண்ணும் மனம்விலங்
குள்ளபெருங் காடு -  இவை
அல்லதென்றாகியும் மற்றவர்  போற்றுவர்
ஆகா எழில் வாழ்வு

மங்கல ரூபி

மங்கல ரூபசு கந்தினி மாதே மலைமகளே
சங்கு முழங்கிய தாலும் பெரும்புகழ் தந்தவளே
செங்குல மீது சொரிந்தகுறை தன்னைச் சீர்செயவே
எங்கும் மொளிர்ந்திடு வண்ண முயர்சுடர் ஏற்றிவிடு

இங்கு குளிர்தர இன்பமெனும் முகில் வந்திடுவாய்
சங்கரனின் கொடுவெங் கதிரில் மனம் கொண்டுமொரு
பொங்கி நடம் செயப் புன்மை யழிந்திடச் செய்ததென
பங்கம் விளைத்தவன் பாதம் வணங்கிடச் செய்துவிடு

சிங்கம் தனிற் தினம் எங்கும் புகுந்திடச் செய்பவளே
எங்கள் உளம் வரை வந்து பிழைகளும் கொல்பவளே
 தங்கமெனும் மனம் கொண்டெமை வெல்லும் சங்கரியே
இங்கிவர் ஏழை உளந்தனைக் காத்திட வருவாயோ

மங்கு மிருள் எனும் மாயை மறைந்திடக் காணுவதாய்
கங்கை கொளும்பெரு வெள்ளமதில் பழி கழுவியொரு
எங்கும் நிறை ந்திட ஊதிய சங்கு மொலித்துவர
மங்கல மாயிவன் கண்களிலே சக்தி தந்து விடு

சோர்வு வேண்டாம்

(வேலைதேடிக் களைத்துச் சோர்ந்த மகனுக்கு தந்தை கூறுவதாக...)

காலமோடிச் செல்லும்போது
.....காணும் வாழ்வில் மாற்றமுண்டு
.....கண்ணில்நீரும் கொண்டதேனோ மகனே
நீலவானிற் தேயுஞ் சந்திரன்
.....நேரம்வந்த போதுமீண்டும்
.....நேர்வளர்ந்து வட்டமாகும் முகமே
கோலமுந்தன் சின்ன உள்ளம்
.....கொண்டதென்ன? பூவும்வாடிக்
.....கீழ்விழுந்தபோது காணும்சோர்வும்
நாலும் நன்மை தீமை என்று
.....நாமும் கொண்டவாழ்விலின்று
.....நீயுமெண்ணிக்  கீழ்கிடப்பதேது

காகம் ஓடும் மேகமீதில்
.....காலைவேலை செய்வென்று
.....காததூரம் செல்வதுண்டோ கூறு
தாகமென்று  கீழிறங்கித்
.....தாவென்றெங்கும் காசுகொண்டு
.....தண்ணீர்கேட்டுத் திரிவதுண்டோகூறு
ஆக இந்தமனிதன்வாழ
.....ஆனசட்டம் நீதியேதும்
.....ஆண்டவன் வகுத்தல்லப் பாரு
தேகம்சாக வெட்டிகொல்லும்
.....தீய நெஞ்ச மாந்தர்தானே
.....தேவைஎன்று சட்டம் போட்டதுண்டு

தான்சுழன்றே ஓடும்பூமி
.....தன்னில் வாழ்வு பொய்யின்போர்வை
.....நீயும்கொண்ட துக்கம்விட்டுநில்லு
ஏன் பயந்து கைகள்கட்டி
.....இங்கும் அங்கும் ஓடியாடி
.....இம்சை கொள்ளும் வாழ்வை விட்டுதள்ளு
நான் என்றெண்ணி ஏர்பிடித்து
.....நல்லபூமி நெல்விதைத்து
.....நாட்டில் ஏற்றம் கொள்ளும் வேலைபாரு

Monday, March 11, 2013

புகழ்

உளமலர் விரிந்தொளி பெறுகுது பெறுகுது
உவமையும் எதுவில்லையே
தளம்பிடுங் குளஅலை தவித்திடு மழகுடன்
திகழ்வது மனவுணர்வே
மளமள வெனவரு மழையெனும் புகழ்மொழி
மகிழ்வினைத் தரசுகமே
விழவிழ மலர்களில் வழிநெடு நடையிடும்
விதமெனச் சிலிர்த்திடுமே

குளஅலை களில்முகம் தெரிந்திடும் வகைமனம்
குதித்திடும் புகழ்ச்சியிலே
நிழலது முகில்வர நிலமிடை அழிந்திடும்
நிலை யெனப் புகழ் கெடுமே
இளமன திடை வரும் கனவுகள் என இவை
இருந்திடும் வாழ்வெனிலும்
அழவென வருவது தொகைதொகை மகிழ்வென
அடைவது சிறிதல்லவோ

புகழ் தரும் உணர்வுகள் பெரிதுவ கையுமெழ
புரிவது புதுச் சுகமே
நிகழ்வது சரியெனில் நெறியெழும் புகழ்பெரு
நிலவெனும் குளிர் சுகமே
பகலவன் ஒளியென பரவிடும் இருள்மறை
பனிவிடும் புல்லெனவே
அகமிடை -இருளற அதியுயர் தகவுற
அடைவது பெருமகிழ்வே

மழைதரு முகிலென மனமதில் கனமெழ
மதுவென இனித்திடிலும்
உளதினி மையில்பொலி வுறயுத விடுமிதில்
உருகிடும் மனம்பெரிதே
துளையிடு குழலிடை நுழைவளி இசைஇடும்
நிகரென வரும் புகழோ
வளர்ம்தி முகமதில் வரும்மகிழ் வுறப்புகழ்
தனையெடு மருந்தெனவே

Friday, March 8, 2013

மறுக்காதே தாயே!

          
களிமிகு புவியிடை கருவென வுயிர்தரு
கருணையே வருவாயோ
அளிபல அமுதெனு மருஞ்சுவை தமிழிசை
அகமெழ வருளாயோ
துளிபல உதிர்வெடு கடுமழை எனமனம்
தமிழ்பொழிந் திடத்தாயே
எளிதென மனமுயர் இசைகவி பலவெழும்
இதயமும் தாராயோ

புவியசைந் திடுமதைப் பு[ரிந்திடும் உணர்வினைப்
பொழுதுளம் இழந்தாலும்
செவியினி தமிழ்சொலும் .திறமெடு தகமையைச்
சிறுமதி புரியாது
கவினுறு மலர்தன்னும் கனிபிழி சுவைமது
கொளும்நிலை மறந்தாகி
ரவியெழ ஒளிவரத் தனைமறந் தொழுகிடும்
இனிமலரென வெனைச்செய்

குழிவிழ குறுகிட குவயலம் தனிலுள
கொடுமைகள் எதுகொளினும்
அழியென கவிமனம் அடங்கிட புரிசெயல்
அரிதெனும் பெருங்கேடாம்
பொழிலுடை எழில்மலர் பிடுங்கியே தரையிடும்
பிழைதனைப் போற்றாது
தொழிலதை விடுஅருந் துயர்களை மனமெடு
துணையிரு தமிழ்த்தாயே

மொழிசொல மனதினில் முழுதென உயிர்திட
மொடுநிலை வளர்ந்தோங்க
கழிஎன குறியிடுங் கணிதமென் றுயிர்கொளும்
கடமையும் சரியாமோ
ஒழிஎன முடிவினை உயரெனக் கருதிடல்
ஒருமுறை விடுதாயே
பழிஎனப் பழமையின் தவறெதும் நினைந்திவன்
பயில்கலை மறுக்காதே

ஏங்குதோ உள்ளம்

நில்லாது ஆறோடும் நில்லாதே என்றதனை
சொல்லாத போதுமது சுற்றியோடும்
செல்லாத இடமெங்கும் சுற்றிவரும் பூங்காற்று
சேறோடு சாக்கடையின் நாற்றம்கொள்ளும்
கல்லாத மதிபோலும் கர்வமெனும் விஷம்பூசிக்
காடையரின் அரசோங்கும் கண்கள் தோண்டி
கொல்லாது கொல்பவரும் கூடியமை இராச்சியத்தில்
இல்லாத பதவிக்கு ஏங்கும் நெஞ்சம்

வெல்லாது அறம்தேய, விடியாது இருள்சூழ
விளக்கொன்றாய் புயல்காற்றில் வைதததீபம்
செல்லாத காசுக்கு  சென்றுமனம் தடுமாறும்
சீரான பொய்மைக்கு சிரசும்தாளும்
வல்லாதி வல்லரென வம்சங்கள் என்று மகா
வாள்கொண்டு அகிம்சைதனை வளர்போம் என்றால்
இல்லாத நாற்காலி அறிந்துமோர் நிழலான
இருக்குமா சனத்திற்கு ஏங்கும் உள்ளம்

பல்லாதி மன்னர்களில் பசுவுக்கு நீதிசொல்ல
பிள்ளை தனைத்தேரிட்டும் பாசம்கொண்டு
முல்லைக்குத் தேரீந்தோன் மூதாட்டி ஔவைக்கு
மேலும்வாழ் வென்றெண்ணி தானும் கொண்ட
நெல்லிக்கனி யீந்தவரும் நீதிதனைக் காணுமென
நிகழ்த்திநல் கதைபடித்தும் நெஞ்சம்தன்னை
இல்லாது நீதிக்கு இழுக்கேற்று நாற்காலி
இருந்தாலே போதுமென இச்சை கொண்டார்

நெல்லுயர கோனுயர்வன் நீதிபல நெறிகளையும்
நிச்சமாய் இவர்கற்ற நெறிகளாயின்
கல்லாலே மாங்காயைக்  கனியென்றுஅடிப்பவர்செங்
கோல்கொண்டு சிரசுதனை குறித்துவீசி
நில்லாது கழுத்திருந்து  நீக்குஎன ஆட்சிவிதி
நேரெழுதி தமிழ்சாய்த்து நிற்போர்பக்கம்
பொல்லாத ஆசையுடன் புறத்தோடி இரந்தவரை
போடுவரோ எலும்பென்று பார்த்தல் நன்றோ

Thursday, March 7, 2013

எது காக்குமோ?

எழில்கொண்ட மலைமோதி யழுகின்ற முகிலேசொல்
   ஏனிந்தக் கொடுந் துன்பமோ
பொழில் நீந்துமலை நீயும் குலைந்தாயே யெதனாலலே
  போவென்று விதி சொன்னதோ
மொழி பேசுந் தமிழாநீ யழிகின்ற தேனோஉன்
  மனமொன்றத் திறனில்லையோ
பழிவந்தே யெமையாளும் பலரொன்று சேர்ந்திங்கு
   பலமோடு வழி காணீரேல்

தெளிவான பெருவானிற் திகழ்கின்ற மதிகூட
    தெரியாது பிறை யாகலாம்
வளிகொள்ள இணைகின்ற நறுவாச மலர்தானும்
   வடிவின்றி நிலம் வீழலாம்
களிகூடித் திரிகின்ற ஒளிவானின் முகிலோடி
  கதியின்றித் தொலைபோகலாம்
எளியோரி னுயிரோடு விளையாடு மிவந்தன்னை
    எதுவந்து தனதென்குமோ

பெரிதாகிப் பிளவாகி நிலமான பிரிந்தோடி
    வருவாயென் மகனென்னுமோ  
தெரியாத இரவோடு எழுமாழி உருண்டோடி
     தவழாயென் மடியென்குமோ
சரியாத மலையுச்சி சரமாரி தீபொங்கி
  சடசடத் துதிர் வாயிலோ
புரியாத தொருகுற்றம் பிறிதென்று யினியில்லை
  புகுவா யென்மகன் என்னுமோ
 
ஒருநாளில் கனவோடு  உறவாடும் மன எண்ணம்
   உயிர்கொண்ட தெனமாறுமோ
திருநாளும் பகலாகித் தெரிகின்ற ஒளிபோலத்
  தேயாமல்  நிலவோடுமோ
அருகாமை கொடியொன்று அலைந்தாடிமகிழ்வோடு
   அடடா என்றொலி கூட்டுமோ
பெருகாதோ ஒன்றாகிப் பிறந்தோமே அழகென்று
  புதிதாய்நல் வழிகாண்பமோ

கருகாதோ அருகாதோ கறை கொண்ட தினம்மாறிக்
    கரும்பெனும் வாழ்வாகுமோ
வருமாமோ மகிழ்வோடு வளைசங்கின் துளையூடே
    விளைகின்ற ஒலி கேட்குமோ
உருமாறிக் கருமாறி உலகத்தில்  வாழ்வேங்கும்
    இளையோரை யினி காப்பமோ
பெருமாரி இரவோடு பிரளயம் செய் தாயே,
    புகு நாட்டில் புரள் தீமைகொல்!

Thursday, February 14, 2013

என்நாடு போல வருமா?

பனிதூங்கு மிலையாடப் படர்காற்றில் குளிர்மேவப்
பெரும்போர்வை கொளும் நாடிதே
இனிதான தமிழோசை எழுங்காலைப் பொழுதெங்கே
இடி மேகம் இசைகீதமே
குனிந்தெங்கள் நடைமாறிக் குணம் மாறிக் குரல்மாறி
கொளவென்று விதிகூறுதே
இனியென்று மனதாசை இன்பங்கள் பொலிகின்ற
எழில்நாட்டைக் கண்காண்பதோ

கனிதூங்கு மாவின்கிளி கலகலத் தோடு மணில்
கிளை தூங்கி மந்தி யாடும்
நுனி தாங்கி நெல்முதிர நிலம் நோக்கு வயற்கதிரும்
நிமிர் வானம் தொடுமாலயம்,
புனை பானை நிரைக ளயல் புதுவாழை கனியழகும்
பேச்சினொலி தமிழ்நயந்து
நனைந்தாடு தாமரைகள் நங்கை மதிமுகம்போலும்
நளினமிவை காண்பதெப்போ

இலைமீது தனைமோதி எழுந்தோடி வருங்காற்று
இன்பவரு டலின்போதையும்
கலைவண்ண நடமாடும் கண்கவருந் தோகையொடு
காயும் புகை யிலைவாசமும்
அலையோடு குளக்காற்று ஆலமரத்தடி, கோவில்
அயலுள்ள பெட்டிக்கடையும்
இலையென்ற வாழ்வாகி இருந்திங்கே என்பாடு
எனதாகு மேமாற்றமே

பனை உரசல் சர்ரென்று பழம்வீழ அணிலோட
பயந்தோடும் குருவி கூச்சல்
தனியாகக் குயிலொன்று தருமீது துணையின்றித்
தருமோசை துயர் கீதமும்
மனையோடு ஒருவேம்பு மாதுளையும் கமுகென்று
மனம் பொங்கு மெழிற்காட்சிகள்
இவைகாணா தொருவாழ்வும் இருந்தென்னபோயென்ன
எனமனது அலைந்தோடுதே

நீள்சாலை நிலம்கீழே நெடிதோடும் வண்டிகளும்
நிழல் மரங்கள் அற்றபாதை
தோள் மாறித் திடமற்ற துணிவழிந்த கோலமுடன்
தோல்வி மனம் தொய்ந்ததான
வாழ்வுணர்வு என்றாகி வண்ணங் கரு காக்கைநிறம்
வகையேனோ தோலென்றெண்ணி
நாளென்ன பொழுதென்ன நலமாயி னுளம்காணும்
நலிவு மிகுந்தேங்கும் வாழ்வே!

Tuesday, February 12, 2013

எழு தமிழா

அழுவது சிறுமைநில் எழுவது பெருமைகொள்
அணியெனத் திரள் மனிதா
தொழுவதுஇழிமையும் துவள்வது பழமையென்
றுணர்வெடு நட தமிழா
அழிவது இவரல்ல அகந்தையி னுறைவிடம்
அவரெனக் குறிசொல்லடா
கழிவது உயிர், இது கலங்கிடும் பொழுதல்ல
கரமெடு பதில் கேளடா

பழிவர உ ரிதல்ல படைகொண்ட துயிர்வாழப்
பழங்கதை யெடுத்துரைடா
உளிகொண்டு பொழிவதில் உருவரும் சிலையெனில்
எடு உளி படை தமிழா
தெளிவில்லை மனங்களின் எனில் இவர்பிடியினில்
திணறென ஒருவிதியா
களிகொண்டு புவியதும் கலகமே பயனெனக்
கருதிடில் சரியென்பதா

வழியொன்று மிதைவிட வருமெனத் திடமிலை
வளை மதியொடு உலகை
புளிந்தெடு மனதில் புதுவைகை உணர்வுற
பொறி உனதிற மையினை
துளிதனும் எமதுயர் தெரிபவர் எவருளர்
தனதொருசுகமு மெண்ணி
அழகுறும் உலகது இருந்திடவருவது
ஒளியெனக் கொளல்மடமை

மொழியதும் இனமதும் அழியென எழுபவன்
மதிபிறல் தரமுடையோன்
கழி யுயிரெனக்கொலை  வெறியுடன் குடிகளைக்
கெடுப்பவன் எதிரியொன்றே
பழிகொள்ள எழுநட பருவத்திற் பயிரிடப்
பழயவைமற ஒருதாய்
வழிவரும் தமிழனைவிழி வழிஒழுகுதல்
வெகுண்டெழு நிறுத்துவதாய்

நல்லமுதம்


சொல்லத்தெரியவில்லை - இந்த
. சுந்தர ரூபபொற் சிங்காரக் கோட்டையில்
. சொர்க்க மிருக்கும்நிலை
மெல்லவிரியு மெல்லை - எந்தன்
. மேகம்மறை நிலவான மனந்தனில்
. மீண்டு மொளிக் கலவை
நல்ல மலர்கள்தனை - இந்த
. நானிலம் மீதிற்சொரி கிறதே,யெழில்
. நந்தவனத் தினிடை
செல்லப் பிறந்த இசை - அன்புச்
. சிந்தனை வானத்து தென்றலெடுத் தென்னில்
. தந்தது போதை தனை

கல்லு முருகும் கலை - இந்தக்
. கன்னித் தமிழ்நிலாக் கற்பனை விண்ணிலே
. காயுமொளிக் குளுமை
வெல்லம் குழைத்தினிமை  - அதை
. வேரிற் பழுத்த பலாவின் கனிச்சுளை
. வெட்டி குழைத்தமுதை
நல்லினித் தேன்கலந்தே - அது
. நாவிலினித்திடப் போதுமோவென்றிட
. நாலாறு கற்கண்டினை
மெல்ல இட்டுக் கலந்தே - இந்த
. மேன்மை யொளிக் கதிர் மிஞ்சும் அவைதனில்
. மென்றிடத் தந்த நிலை!

Sunday, February 10, 2013

கவிதைச் சோலை

பொழிலலை தளும்பிய பொழிதினி லிதழுடை
புதுமலரென மனமும்
எழிலுற அலைதென்ற லிளமல ரழைந்தென
இதமுட னெவர்முதுகும்
வழிசெலும் பொழுதிடை வருடிய சுகமெழ
விழி கிறங்கிய வகையும்
மொழிதமிழ் கவிதைகள் முழுதெனப் புனைகவி
மிகுமிட மிதுவெனவோ

கருவிடை யுயிர்தரு கடவுளு மருள்சொரி
கலைபயி லறிவகமோ
குருவிடை பயிலெனக் குறுஅறி வுடனிரு
கலைமகன் அறிவெழுமோ
தருபலகனிகளும் தலைநிலம் விழுதென
திகழ்பெருந் தருவிதுவோ
பெருமள கவிதரு புலமையில் இணைதொலை
பலகையும் இதுவெனவோ

மெருகிடக் கலைமகள் வருவளோ கமலவெண்
மலர்தனும் இதிலுளதோ
முருகெனு மிளையவன் முதுமைகொ ளறிவினன்
மகிழ்வுற எழுஞ்சபையோ
பருகிட மதுவிழும் பலவண்ண நறுமணம்
படர்விழை மலர்வனமோ
வருபவ ரெவர்தனும் வளமுறத் தகமையை
வழங்கிடு மரசவையோ

அறிவினிற் பலமின்னு மகமிடை கருகொளும்
அதிசயத் திருவிடமோ
பிறிதில்லை மலையிடை பெருகிடு மருவியின்
புனலுதிர் பரவசமோ
பொறியெழ அனலுடை பெருவெளிகொதி யழல்
பரவிய வலிமையதோ
அறமெழ மனதினில் அழகுறுங் கவிபொலி
அமுதளி சுரபியிதோ

சக்தியே ஆணையிடு

கண்கள்பாதி போனதென்ன காட்சிமங்குதே - இந்தக்
 காயமென்ன செய்தபாவம் காணும் துன்பமே
எண்ணமிங்கு மேகமிட்டு என்னைதூக்குதே - அங்கு
  ஏகும்பாதை வானின்  தோன்றி ஏறு என்குதே
கிண்ணமிட்ட பாலும் பொங்கி கீழே ஊற்றுதே - அந்த
   கேணி நீரும் வற்ற மீனின் மூச்சுமுட்டுதே
அண்டவானில் ஆதவன்கள் அள்ளிவீசினாய் - சக்தி
  ஆசைகொண்ட நெஞ்சம் வாழ ஆணைகூட்டுவாய்

வண்ணமிட்ட சித்திரங்கள் வாழ்வு வேண்டுதே  -சுற்றி
  வற்றும் நீரைகண்டு பூக்கள் வாடிச் சோர்வதேன்
மண்ணில் சுட்ட பாத்திரத்தை ஏந்தி நிற்கிறேன் - என்னை
   மன்னன் என்று பேரும் வைத்து மாலைசூடவா
வண்ணமிட்ட பூக்களாலே வாசல் தோரணம் - உள்ளே
   வைத்த பானை  அன்னமின்றி கொண்டகாரணம்
உண்மை நெஞ்சில் அன்னைநீயு மெண்ணும் நீதியும் - விட்டு
   ஓரம்வைத்துப் பார்ப்பதென்ன உள்ளே வைத்திடு

திண்ணையோரம் வந்தொருவன் காத்திருக்கிறான் - கையில்
   தேவையென்று பாசமென் கயிற்றைக் கொள்கிறான்              
கண்ணை மூடித் தூங்குமட்டும் காவல்நிற்கிறான் - போகும்
   காலம் என்னும் பாதைசெல்ல என்னை கேட்கிறான்
அன்னை சக்தி கண்கள்விட்டு உள்ளம் காண்கிறேன் - அவள்
  ஆக்கும் சக்தி ஈந்த அன்பில் வீறுகொள்கிறேன்               
                                                
எண்ணமெங்கும் சக்திதீபம் ஏந்திநிற்கிறேன்- இங்கு
  என்னயல்ல என்னையீந்த தாயென்றாகிறேன்

தொட்டுத்தொட்டுத் தூரிக்கையால் வண்ணம்பூசென - நல்ல
   தூய தமிழ்சொல் கொடுத்து தூண்டி விட்டவள்
கட்டியெனைப்  போட்டுவிட்டுக் காண்பதென்னவோ - இனி
   கால் விலங்கும் அன்பு கொண்ட காவல் என்பதோ
எட்டிநடை போடுமெந்தன் கால் நிறுத்தியே - எண்ண
   இறக்கை தந்து எல்லையற்ற வான்பறக்கவே
வட்டமிட்டு தேடும்வண்டு பூவின் காண்பதாய் - புவி
    வாழு மென்னை தீந்தமிழில் வாசமிட்டதேன்

அன்னைமீது சத்தியத்தின் ஆணை வேண்டினேன் . மேனி
  ஆலையில் கரும்புபோல  ஆகப் போகமுன்
நின்மனம் அருள் புரிந்து என்னைக் காத்திடு - எந்தன்
   நிழல்பிரிந்து  கொள்ள முன்நிறுத்தி வைத்திடு
தன்னை மீறி ஓடும் காற்று உள்நிறுத்திடு - நல்ல
   தாயின் அன்பு உள்ளத்தோடு என்னைப் பார்த்திடு
பொன்னையல்ல பூமியல்ல பொழுது வேண்டினேன் - வாழப்
   போகும்நாளும் புதிது கொள்ள விதியும் வேண்டினேன்

Saturday, February 9, 2013

காதலைத்தேடும் உள்ளம்

நானும்தான் எண்ணி நடக்கிறேன் நெஞ்சமோ
நாணமின்றி நடந்தே
தேனும்தான் என்றொரு சேதிசொல்லி யென்னைத்
தீயினுள் தள்ளுவதேன்
வானும்தான் ஏறிக் கடக்க நினைக்கிறேன்
வாலொன்று தான் முளைத்து
வீணும்தான் தொற்று கிளகளில் துள்ளென
வானர மாக்குவதேன்

நானும்தான் கெட்டே யுழன்று வறுமையில்
நாற்றம் எடுக்கையிலும்
ஏனும்தான் உண்ணும் உணவில் அறுசுவை
ஊற்றடி யென்கிறதே
மீனும்தான் போல்விழி மாதர் நிலாமுகம்
மோகம் விளைப்பது ஏன்
தானும்தான் எண்ணித் தலைவியை சேரெனத்
தாகம் மெடுக்கிறதே

மானம்தான் என்றெண்ணிமங்கை மறந்தங்கு
மாலையில் சோலைவர
மேனகையோ இவள் முன்னே நடமிட
மௌனம் கலைக்கிறதே
மானும்தான் துள்ளுது மாது இவள்கண்டு
மாமனம் துள்ளுவதேன்
ஊனும்தான் எண்ணி உருகுவதேன் இந்த
உள்ளம் துடிப்பது ஏன்

ஏனோதான் எந்தனின் எண்ணம் நிறைமனம்
இரட்டை இறகுகட்டி
தானும்தான் எட்டா இடமெங்கும் தாவிட
தாகம் எடுப்பது ஏன்
காணும்தா னென்றிரு கண்களைமூடிக்
கலைஎன்று காத்திருக்க
காணும்தன் சொப்பனம் கற்பனையில்ஒரு
காதலென் றாவதுமேன்

நீரும்தான் பற்றி நெருப் பெழுதே அது
நின்றிட ஏதுசெய்வேன்
கூரும்தான் கெட்டது கொண்ட வாளைவீச
கால்களில் வீழுவதேன்
யாரும்தான் சொல்லத் தெரியாவிடை கொண்டு
ஏனோ வினவுதலேன்
பாரும்தன் என்றிடக் கொண்டவள் சக்தியைப்
பார்த்திதைக் கேட்டனன் ஏன்?

Thursday, January 24, 2013

சிரிப்பொலி (புதிது)


வானெழுந்த வெயில் சிரிக்கும் .  வண்ணமலர் புன்னகைக்கும்
.  வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைவயற் கதிர்சிரிக்கும்   சிற்றோடை கிளுகிளுக்கும்
.  சேர்ந்துவளர் செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானகத்துப் புள்ளினங்கள் .  காற்றொலியில் கூச்சலிடும்
.  காட்டினிலே வண்டுமலர் கண்டு சிரிக்கும்
மானமிழந் தோனைஉயர் .  மாபுகழோன் கேலிசெய்ய
.  மாறும்விதி மாற்றிவிட்டு வீழ்ந்து சிரிக்கும்

தேன்குடித்து மந்தியினம் .  துள்ளி இளித்தாடிவிழும்
.  துயருறுவோன் வாழ்வுகண்டு துறவி சிரிப்பான்
போனவனைக் காட்டினிலே . போட்டெரித்து மீண்டவனும்
, போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்
மான்விழியில் மைந்தர்குலம் .  மருள்வுகண்டு சிரித்திருக்க
.  மங்கையவள் மனதிலென்ன எண்ணி நகைப்பாள்
கூன்விழுந்த பாட்டிமனம் .  குமரியெழில் பார்திளமை                                  
.  கொண்டதிமிர் எண்ணி நிலைகண்டு சிரிப்பாள்

நீரோடும் நதி குதித்து . நெளிந்து மெல வளைந்துசெல்ல
.  நளினமுடன் கரைஅலைகள் நாளும் சிரிக்கும்
பேரோடு பூமியிலே .  பேரரிய வீரமிட்டோன்
.  பெண்மொழிக்கு தோற்றுவிடப் பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே .  ஒருவனாகத் தனித்திருக்க
.  உண்மைவழி நின்றிடினும்  உலகம் சிரிக்கும்
யாரோடிச் சென்றிடினும் .  வாழ்வோடி முந்த அதைப்
.  போராட எண்ண விதி புன்னகை பூக்கும்

தானோடிச் சுற்றுலகு .  தாங்கும்சிறு மானிடனோ
.  தன்னுடைமை பூமிஎன தரணி சிரிக்கும்
வீணாகத் உயிரெடுத்து .  வீதியிலே சாகுமினம்
  வெறிபிடித்த நிலைமை கண்டு பேய்கள் சிரிக்கும்
தானமிடும் குணமகனைத் .  தரமறுப்போன் கேலிசெய்ய
.  தாவணிப்பெண் இருவர்கூடச் சிரிப்பொலி கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவரும் .  விதியறிந்து நகைபுரிய
.  தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்

கண்டதும் காணாததும்

ஒன்று சேர்!
(ஒருவன்)
தேனூற்றும் மலர் கண்டேன் திங்கள் கண்டேன்
தினந்தோறும் வாசமிடும் தென்றல் கொண்டேன்
வானேறும் வெயில் கண்டேன் வானில்தூரம்
வளைந்தோடும் பறவைகளின் கூட்டம்கண்டேன்
தானூற்றி வீழ்ந்தருவி தெறிக்கக் கண்டேன்
தரைமீது விளையாடும் மானைக் கண்டேன்
பூநாற்றம் கொண்ட மலர்ச் சோலையெங்கும்
புதுமை யெழில் பொன்நிலவில் மின்னக் கண்டேன்

(இன்னொருவன்)
பன்சிலிர்த்த உணர்வோங்கும் மனங்கள் காணேன்
பனிதூங்கும் குளிர்வண்ணப் பேச்சைக் காணேன்
தென்னைதொடு இளங்காற்றின் சுகத்தைக்காணேன்
தித்திக்கும் செங்கரும்பில் இனிப்பைக் காணேன்
என்னசுகம் இதுவோஎன் றேங்கக் காணேன்
இசைக்கு மோர் இருள் வண்ணக் குயிலைக் காணேன்
அன்னஅசை செந்தமிழின் அழைக்கு மோசை
அடடா அங்கில்லை முழு நிசப்தங் கண்டேன்

(மூன்றாமவன்)
மின்னுகின்ற விண்மீன்கள் துடிப்பைக்கண்டேன்
மேகமெலாம் கலைந்தோடி அஞ்சக் கண்டேன்
செந்தணலும் நீர்பட்டு தணியக் கண்டேன்
சேதிசொலும் முரசங்கள் உறங்கக் கண்டேன்
சந்தமின்றி சொற்கவிதை சரங்கள் போலும்
சற்றுமிழையா மனிதர்வாழ்வைக் கண்டேன்
மன்னர் பரி வாரங்களும் மறையக் கண்டேன்
மாதவளின் புன்னகையில் துயரைக் கண்டேன்

(பொது)
சொன்னநிலை மாற்றிடவே சிந்தை கொள்வீர்
சோதிபலங் கொண்டுகிழக் கெழுதல் காண்பீர்
பொன்னிறத்து கதிர் வயலில் பொலியக்காண்பீர்
புதுவெள்ளம் பிரவகித்துப் புரளக் காண்பீர்
தென்னைமர இளங்கிளிகள்  சோலையெங்கும்
தாவியெழுந் தோடிமகிழ்வாடக் காணீர்
என்னவென மாந்தர் மனம் வியந்தேயின்பம்
ஏற்றமுறும் வாழ்வுதனை எடுக்கக் காண்பீர்

விண்ணிறைந்து தாரகைகள் விழிக்கக் காண்பீர்
வெண்ணிலவு முழுவட்டம் விளங்கக் காண்பீர்
கண்ணெதிரில் பொன்மணிகள் குவிதல் காண்பீர்
கனவிலன்றி பகைபணிந்து போகக் காண்பீர்
பெண்கள் மலர் தூவிஎழில் போற்றக் காண்பீர்
பெரும் உயர்வில் கொடிஒன்று பறக்கக் காண்பீர்
மண்ணிலெழில் நல்வளங்கள் மீளக் காண்பீர்
மாசற்ற வாழ்வு கொள்ள மாந்தர் சேர்வீர் !

வாழ் வும் தமிழும்


கடித்தேன் இனித்தேன் கனிகள் சுவைத்தேன்
கனிந்தேன் உள்ளம் களிப்புற்றேன்
படித்தேன் பலதும் பழத்தேன் தமிழைப்
பருகும் கள்ளுண் வண்டானேன்
குடித்தேன் கவிதை குளித்தேன் தமிழாம்
குலவும் தென்றல் குளிர்மேவத்
துடித்தேன் இதயம் தொலைத்தேன் தமிழின்
தொன்மை படைப்பில் இழந்திட்டேன்

அடித்தேன் அழித்தேன் எனவேஇல்லா
அழகிற் தென்னை அருகில்தேன்
வடித்தே ஒளிரும் வண்ணநிலாவின்
வகையாய் பிறைபோல் வளர்ந்திட்டேன்
வெடித்தேன் முகிழ்ந்தேன் மலர்ந்தேன் என்னும்
விடியல் பூவில் விளையும்தேன்
விடத்தேன் சுவைதான் எடுத்தேன் இயல்போ
எனத்தான் வியந்தேன் இணைந்திட்டேன்

குடித்தேன் குடமாய் கவிதை யின்பம்
கொள்ளா தேனோ சலிப்பற்றேன்
அடித்தேன் இனிப்பாம் கரும்பில் காணும்
அருந்தேன் தமிழும் அதையொத்தேன்
குடித்தேன் பழமை குடைந்தேன் தமிழில்
குவித்தேன் இன்பங் கொண்டேன்காண்
நெடிதென் வாழ்வில் நிகழ்வும் கடிதென்
நேரும் வரையும் நிலைத்திட்டேன்

கடந்தேன் வாழ்வில் தடைகள் பலதும்
களித்தேன் என்றும் சொல்லற்றேன்
நடந்தேன் பாதைநலிந்தேன் விழுந்தேன்
நாளும் துயரைச் சந்தித்தேன்
அழுதேன் தொழுதேன் இறைவா என்றேன்
அரைதேன் நிலவைஅணிந்தோன் கை
எடுத்தோன் மழுவை இழிந்தேன் என்னை
இழந்தேன் உயிரும் எனவாகா

செடித்தேன் மலராய் சிரித்தேன் நெகிழ்ந்தேன்
சிவந்தேன் இதழும் விரித்தேனாய்
கொடுத்தேன் வாழ்வில் கொள்ளையின்பம்
கொள்ளா செய்தாய் கொடுஎன்றேன்
அலைந்தேன் ஆழி அலைகள் எனவே
அவலம்கொண்டேன் ஆனாலும்
நிலைத்தேன் நினைத்தேன் நிகழும்துன்பம்
நிகழா சக்தி காவென்றேன்

குலைந்தே கொள்ளா தேனோ அண்டம்
கோடி எழுந்தீச் சூரியனும்
விழுந்தே அணையாதென்னே விந்தை
விளைத்தார் யாரோ விளைவெண்ணி
எழுந்தேன் சக்தி என்றே நாளும்
எண்ணித்தான் கால் எடுத்திட்டேன்
கலைந்தே துன்பம் கவிதைபாடும்
கலையும் கொண்டே காண்கின்றேன்

Saturday, January 19, 2013

கண்ணீர்

நான் என்பதேனிங்கு வந்துது - இந்த
நாளில் ஏன் பூமியைக் கண்டது
தானே எதை யெண்ணி வாடுது - அது
தண்ணீரில் மீனென ஆகுது
வானெண்ணி நீரிடை துள்ளுது - அலை
வாரிக் கரையினில் போடுது
தானோ அலை விட்டுப்போகுது - மீனும்
தண்ணீரை எண்ணித் தவிக்குது

வானரமாய் உள்ளம் ஆகுதோ - அது
வாலைவிட்டு ஆப் பிழுத்ததோ
கூனென்பதா யுள்ளம் நோகுமோ - அது
கொள்கையில் கொப்புகள் தாவுமோ
தேனெனத் தின்னப் பிடிக்குதோ - இல்லை
தின்னத் திகட்டிக் கசக்குமோ
ஏன் இன்று எட்டாப்பழமிதோ - வாழ்வு
இப்படியும் புளிக்குமோ

வான்நிறைந்த விண்ணின் மீன்களாம் -அவை
வந்து ஜொலித்திடக் காத்திட
கானக மின்மினி யாவதேன் - அதைக்
கண்ட மனம் ஏங்கலாவதேன்
மானின் விழிகொண்டு காணவா - உளம்
மல்லிகையாய் வாடிப் போகவா
தானெனத் தந்தன ஆடவா - இல்லை
தந்ததை மீண்டும் கொண்டோடுமா

மேன்மையில் என்னைப் படுத்துமோ - இல்லை
மேனியைத் தள்ளி கிடத்துமோ
ஊனுடையுள்ள உணர்வுகள் - என்னை
ஊர்வலம் கொண்டு நடத்துமோ
வானவில்லின் நிறம்கொள்ளுமோ - அன்றி
வாசலில் குப்புற வீழ்த்துமோ
ஆனவிதி சொல்வதென்னடா - அந்த
ஆனை மிதிக்குமோர் புல்லடா

வீணென்ப தெல்லை கடக்குது - அது
வீழ்த்திட மண்ணிடை தேயுது
காணெனக் கூறிக் கலங்குது - அதன்
காட்சியெல்லாம் கண் மறைக்குது
பெண்ணெனின் பேயும் இரங்குமோ - விலை
பேசிப் பொய்தன்னையும் விற்குமோ
பூணும் பொன்னாடையும் போகட்டும் - மீண்டும்
புன்னகை யைஇதழ் காணட்டும்

Friday, January 18, 2013

வண்ண மழை

ஒற்றைத் தாளில் கப்பல்செய்து ஓடும்நீரில் விட்டவன்
உற்றதா முள்ளாசை கண்டு ஓங்கியோர் புறத்தினில்
பெற்றவள் விடுத்தகிள்ளு பாவியெந்தன்மேனியில்
உற்றதோர் கடுத்தநோவு எண்ணியோ நீஆண்டவா

சொற்றுணை எனத்தொடங்கி சோதியாம் நல்வானவன்
உற்றதாம் சிறப்பையெண்ணி ஓதியுன்னைப் போற்றிட
கற்றுனைத் துதித்தல்கண்டு காகிதம் மறுப்பினும்
உற்ற அன்பினாலே வண்ணம் ஊற்றும் மேக மாக்கினாய்

முற்றமும் பொழிந்தநீரில் மேகம் வண்ணம் பற்பல
அற்புதம் நிறத்திலூற்றும் ஆனவிந்தை காண்கிறேன்
நெற்பயிர் விளைச்சலோடு நீண்டபுல் முளைத்திடும்
புற்தரை விரிப்பிலெங்கும் பெய்யும் வண்ண மானதே

நெஞ்சிலே கடுங்குரோத நீசரெங்கள் நாட்டினில்
கொஞ்சியே குலாவும் அன்னை கொண்ட மஞ்சள் குங்குமம்
வெஞ்சினத் தினாலே மேனி வெட்டிமண் புதைத்திட
கெஞ்சியும் அழித்தபாவம் மஞ்சள் நீரைக்கொட்டுதோ

அஞ்சியே துடித்தபோது ஆணவத்தி லோடவர்
வஞ்சியர் வளர்ந்த பிள்ளை வாலிபத்து மேனிகள்
நஞ்சிலே இழைத்த குண்டு நீலமாக்கி கொன்றதை
பஞ்சுமேகம் கண்டு நீலம் பெய்மழைக்கு தந்ததோ

கண்கள்தோண்டி கைமுறித்துக் காலுடைத்துக் கொன்றிட
மண்ணிலே சொரிந்த ரத்தம் மேலெழுந்து கொண்டதால்
விண்ணிடை கருத்தமேகம் வையகத்தில் கொட்டவும்
தண்மை கொள்மழை சிவந்த தானவண்ணம் கொண்டதோ

அச்சமின்றி உச்சிமீது வானின் ஊர்தி கொட்டினும்
துச்சமாய் மதித்துவாழ்சு தந்திரத்தை வேண்டியோர்
பச்சைமேனி கள்கிழித்துப் பாவம் செய்த காதகர்
இச்சகத்தில் வாழ்அநீதி எண்ணிப் பச்சை கொட்டுதோ

என்னவெண்ணி வான்மழைக்கு இந்தவண்ணம் வந்ததோ
அன்னைபூமி விட்டுச்சற்று அந்தப்பக்கம் கொட்டுதே
இன்னலைத் தரும்நிலைக்கு இட்டஎச் சரிக்கையோ
மின்னல் வானம் மெச்சியின்பம் மஞ்சள் நீலமானதோ

Wednesday, January 16, 2013

இயற்கையி லுள்ளம்

எழில் கொஞ்சும் இசையொன்று  எழுகின்றதே
இதுகாவின் குயில் பாடுமொலி யல்லவே
பொழிலாடும் அலையென்றே உணர்வாகுதே
புரியாத மழையொன்று பொழிகின்றதோ
தழலான உளவெம்மை தணிகின்றதே
தரைமீது நிலவொன்று தவழ்கின்றதோ
அழகோபொன் னொளியாஅல் லதுதாரகை
அதுமின்னும்  இய்ல்பாக மனம்கொள்வதேன்

நெளிந்தாடும் அலைகொண்ட நீரோட்டமோ
நிகழ்வான வில்லொன்றின் நிறமூட்டமோ
குளித்தாடும் மலர்கொண்ட குளிர்தேக்கமோ
குவிந்தாலும் பனிகொண்ட  நிறவெண்மையோ
அளித்தாலும் குறையாத அமுதானதோ
அருஞ்செல்வம் குவிகின்ற திறைசேரியோ.
தெளிந்தோடு முகிலற்ற பகல் வானமோ
தினம் தேய்ந்து வளர்திங்கள் முழுதானதோ

ஒளிவானின் வழிதோன்று மொருகாலையில்
உருகாத பனிதன்னும் நிறை காற்றினில்
அழியாத மெருகோடு அருகாமையில்
அழகான மயிலென்று விரிதோகையில்
பொழிகின்ற முகில்கண்டு நடம் கொள்ளுதோ
பொதுவாக  வலம்போகும் தெருவீதியில்
நெளிகின்ற நளினத்தின் அசைகாற்றுமே
நிகழ்வுக்கு இவள் கொண்ட அசைகற்குமே

வலை கொண்ட மீனென்றால் விழிதுஞ்சுமே
வளர்கின்ற பிறை யென்னில் வெகுதூரமே
அலைந்தோடும் நதியென்றால் விழும்பாவமே
அனல் வீசும் ஒளிர்வென்னில் சுடும்நோகுமே
மலைமீது எழும்காற்றின் குளிரானதே
மனம் போதை யுறச்செய்யு தெனில்போர்வையும்
நிலைகொள்ளச் செயும்பாவம் இவனல்லவோ
நெடும்வானில் முகில்மூடும் நிலவல்லவோ

காக்கையரே காக்கையரே


காலையிலே கண்விழிக்கக் காரிருளும் போகமுன்னே
கா..காவெனக் கரையும் கருங் காகமே
சோலையிலே பூமலர்ந்து தூவும்பனி  நீர்வழிந்து
சொல்லு நலம் உள்ளனவோ சேதியென்?
மேலைத்தெரு கோவிலடி மேட்டு வயல்காடுழுது
மாலையி`லே வீடுவந்த மாந்தரும்
ஓலையிலே கூரையென உள்ளசிறு குடிசையிலே
உள்ளனரோ இல்லனரோ கண்டுசொல்

கூவும் வெளிர் சங்கொலியில் கொட்டும்மொரு முரசொலிக்கக்
கொல்ல வந்தபகை நடந்த தறிவையோ
ஏவுகின்ற தொன்றெனவே எத்தர்பகை கூடிவந்து
எல்லை பற்றி நின்றனராம் உண்மையோ
சாவுவரும் மேனிவிழும் சத்திரங்கள் வீடுடையும்
சந்தணப் பொன்மேனி புவி தின்றிடும்
காவுகொண்ட வாழ்விழந்து கண்டவரை போதுமென்றோம்
காணுகின்ற சேதி நெஞ்சு வேகுதே

மாதர்தமைச் சீரழித்து மானபங்கம் செய்தழித்து
மங்கையரின் மேனிதொட்டு ஆடுறார்
மீதமுள்ள பூமியெலாம் மேன்மைகுலச் செந்தமிழர்
மேவியெங்கும் வாழ்ந்தும்ஒன்றும் காணனே
சாதமென்று வேகவைக்க சற்றுநேரம் போகவதில்
சோறு வெந்து அத்தனையும் ஒன்றெனும்
பேதம்கொண்டு பூவுலகில் பெண்ணிழிமை செய்தவரின்
பார்த்த வரை உள்ளம் வேக வில்லையேன்

வாழும் வழி நாமறியோம் வந்துலகில் தோற்றியதென்
வாயழுது  உணர்விழிந்து வாழ்வதா
பாழுமிந்தப் பூமிதனில் பைந்தமிழின் தொன்மையுமென்
பார்த்துயிரைக் காக்க மறந்துள்ளதேன்
ஆள ஒருநாடு விடு அழகியஊர் தேவையில்லை
ஆக மனைகுடிசைதனும் போகட்டும்
சூழுலகில் வாழ்தமிழும் சோதரிகள் இழிமைகொள்ளச்
சோர்ந்துலகில் காணுவதேன் கேட்டுவா

நிலை மாறும்

காடுமலை யெங்கும் ஓடும்நதிக்கொரு
காரணம் தேவையில்லை - அது
தேடும்பொருளெது தேவை கடல் ஏனோ
துள்ளி அலையும்நிலை
நீடுவெளி நீலவானத்திலே நிலா
தேயும் வளரும் தொல்லை - அதை
ஓடுமுகில் மறைத் தாலுமுள்ளே நின்றும்
ஓங்கு மொளிசெறிவை

கேடு கெட்டே அல்லல் கொண்டா லன்புதனும்
கெட்டுஅழிவதில்லை அதைக்
கோடு கிழித்தெவர் கூட்டில் அடைப்பினும்
கொள்ளன்பு தேய்வதில்லை
வீடுஇருக்கையில் வெட்ட வெளிவைத்த
வெள்ளியிற் செய்தசிலை என்ன
பாடுபட்டும் உள்ளம் பாசம் கொழிக்கையில்
 பாரம் எடுப்பதில்லை

நாடுசெழித்திட நாலும்தெரிந்தவர்
நல்லர சோச்சுகையில் - அங்கு
வாடுமுயிர்களாய்  வாழ்வுமுண்டோ அவர்
வாசம் உலர்வதில்லை
மூடுமந் திரங்கள் தேவையில்லை  இந்த
மோட்சம் இறைவன்கொடை -அதைப்
போடுஎன வீசிப் புன்னகைத்தால் அதைப்
போல மடைமையில்லை

ஆடும்வரை யாடும் அப்பன் நடமிட
ஆகிடும் வாழ்வழிவைப் - படும்
பாடு கொண்டும் விழி பார்க்கும்வேளை
சார்த்த பாரதிபோலுருவை
ஊடு நிறுத்தியே ஆடவைத்தவிதி
உண்மை மறைத்த நிலை ஒரு
பீடு கொள்ள முகில் போர்த்தநிலவெனப் 
போனது போல்நிலைமை

ஏடுஎடுத்தவன் என்னஎழுதியும்
இட்ட விதியின் வேலை - அது
சாடுஎனச் சொல்லி சோகம் பொழியினும்,
சேரும்மனதில் சுவை
சூடுகொண்டேகாலைதோன்று வெயில்வரச்
சூழுமிருள் மனதை - விட்டு
ஓடும்வகை செய்யும் உள்ளம் கொண்டதெல்லாம்
ஒரிரவென்ற நிலை

Saturday, January 12, 2013

வேண்டுதல்

தாம்தோம் தத்தோம் தத்தித்தோம்
தாவிடு வானரம் ஒத்திட்டேன்
தீம்தோம் தித்தோம் திக்கெட்டும்
தீமைகளால் மனம் பொய்த்திட்டேன்
பாம்பைப் போலும் கொத்திட்டேன்
பாலதில் நஞ்சும் சொட்டிட்டேன்
வேம்பின் காயை வெட்டித்தான்
விருந்தில் தேனுள் வைத்திட்டேன்

மாயக் கற்பனை கொண்டிட்டேன்
மாலைகள் பிய்த்தும் வீசிட்டேன்
தேயும் நிலவாய் தேய்ந்திட்டேன்
தீயில் விரலைச் சுட்டிட்டேன்
ஆய கலைகள் கற்றிட்டேன்
ஆனால் ஏட்டைத் தீயிட்டேன்
போயோர்  முத்தை சேற்றிட்டேன்
புறமும்பேசிப் பொய்யிட்டேன்

வேண்டும் வரையில் வெட்கித்தேன்
விடியல் அறியா தூங்கிட்டேன்
ஆண்டே இன்பம் தேர்ந்தக்கால்
அழிவே எண்ணிக் காத்திட்டேன்
அன்பில் உன்னை தண்டித்தேன்
அதனா லுள்ளம் சோர்ந்திட்டேன்
வெண்தண் இறையே நொந்திட்டேன்
விளையாடித்தான் வாழ்ந்திட்டேன்

காலைமலரைப் பிய்த்திட்டேன்
கானம் பாடக் கத்திட்டேன்
பாலில் உப்பைக் கொட்டிடேன்
பாமரன் வாக்கைப் பழியிட்டேன்
வேலை இன்றி சுற்றிட்டேன்
வீட்டில் மனைய வைதிட்டேன்
தோலில் கரியைப் பூசிட்டேன்
தெள்ளென் நீரில் தோய்ந்திட்டேன்

இறைவா என்னை மன்னிப்பீர்
இகமும் வாழ்வில் இன்பத்தை
குறையா தருவாய் கொண்டேன்நான்
கோபம் சினமென் றாகாமல்
மறையா துலகின் மன்னிப்பை
மலராம் உதயச் சூரியனாய்
உறையா துள்ளம் உருகித்தா
ஒர்நாள் பொழுதில் மலராதோ

பாவம் நீக்கப் பூசித்தேன்
பரமே சிவனே போற்றிட்டேன்
ஏவல் செய்தேன் இவன்மீது
இறையே சக்தி இரங்காயோ
தூவல்மழையில் நின்றிட்டேன்
தேகம் குளிர ஆடிட்டேன்
ஆவது ஏது அன்புள்ளம்
அணையா தீபம் காப்பாயோ

தமிழன் வீரம்

  
கடலலையும் ஓங்கியெழும்   காண் தமிழின் வீரம்
குடல்பிசைய வயிறலறும்  கொடும் பகையும் ஓடும்
திடமுடனே தமிழர் எழும்  தீரம்பெரு வானம்
தடையுடைத்துப் பாயப்பகை  தீபடும் பஞ்சாகும்
விடநினைந்து பயமெழுந்து  விரைந்து பகையோடும்
விரும்பிவிடு தலைநடந்தோர் வெற்றிவாகை சூடும்
புடமுமிட்ட தமிழர்மறம்  புனிதமெனக் காணும்
புரட்டும் பழிபொய் புனைந்த பகை யெதிர்த்த தமிழர்

கால்கள் நடை கொள்ளஒலி  கருமுகிலின் உறுமல்
காரிருளில் மின்னல் தரும்  கைசுழல்வாள் கூர்கள்
வீல் எனவேஅழும்குழந்தை  வீறு கொண்டு நிமிரும்
வெள்ளிநிலா முற்றமதில்  வீழ்ந்து நிலம் கொஞ்சும்
பால்குடித்த தமிழ்மழலை  பயமிழந்து தீரம்
பருகியவன் போலெழுந்து  பார்த்தெதையோ உறுமும்
மேல் பறந்த புள்ளினங்கள்  மேதினியில் வீரம்
மேன்மை கொள்ளும் செந்தமிழர்  மண்ணி தென்று பாடும்

வீதியெல்லாம் தோரணங்கள்  வெற்றிதனைக் கூறும்
விடியலிலே வந்தவர்கள்  வேகம்தனைக் காற்றும்
பாதிதனும் தானறியாப்  பண்புதனைப் பாடும்
பனியெழுந்து புகழ்பரந்த  விதம் பரந்து தோற்கும்
மோதிவரும் மேகமெல்லாம்  முகம் கறுத்து  கோணி
மின்னல் இடி விட்டுத் தமிழ்  மண்ணில் மழை தூவும்
சேதி கேட்டுப் பூமரத்தில்  சிறுகுரங்கு தாவி
சிலுசிலுத்த மலருதிர்த்து  செந்தமிழைப் போற்றும்

ஆக இவைகொண்டதெல்லாம்  அறம்மிகுந்த காலம்
அன்னைபூமி நேர்மை திறன்  அகமெடுத்த நேரம்
போக யிவை நஞ்செழுந்து  போட்டவைகள் யாவும்
பச்சைமஞ்சள் செந்நிறத்தில்  பெய்மழைகள் ஆகும்
தேகமதில் தீரமுள்ளோர்   தலையெடுத்த வீரம்
தேவையில்லைக் கோழைகளும்  தீமைசெய்து வெல்லும்
பாகமிது காலமெனப்  பச்சை வண்ணப் பூமி
பார்த்திருக்க செந்நிறத்தில் பாவமழை தூவும்

சக்தியின் வேண்டுதல்


 வேண்டும் வேண்டும் வரம்வேண்டும் - உயிர்
வீணையில் நாதம் எழவேண்டும்
ஆண்டும் ஆண்டும் பலவேண்டும் தமிழ்
ஆண்டே பலமுறும் நிலைவேண்டும்

மீண்டும் மீண்டும் பெருவாழ்வாய் - இம்
மேதினி வாழ்வில் பலங்கொண்டே
தாண்டும் தாண்டும் உரம் வேண்டும் என்
தலைவி நீயதைத் தரவேண்டும்

நீண்டும் நீண்டும் மகிழ்வோடு - நான்
நெஞ்சம் கனிவாய் தமிழ்பாடி
தூண்டும் தூண்டும் உணர்வோடு - கவி
தூவும் மலர்கள் தொகை வேண்டும்

பூண்டும் பூண்டும் பலவேடம் - இப்
பொழுதில் புவியில் கூத்தாடி
தோண்டும் தோண்டும் இன்பங்கள் - பெருந்
தொகையாம் எனவே பெறவேண்டும்

தீண்டும் தீண்டும் பொருள் யாவும் - அடை
தேனாய் வழியச் சுவைகொண்டு
நாண்டும் நாண்டும் தொகை வேண்டும் - என
நாளும் கேட்டும் குரல்வேண்டும்

மாண்டும் மாண்டும் புவிமீதில் - உயிர்
மீண்டும் பிறக்கும் செயலாகக்
கூண்டும் கூண்டிற் கிளியாகும் - இக்
கோலம் மாறும் வரம்வேண்டும்

மூண்டும் மூண்டும் பெருந்தீயாய் - பகை
மோசம் செய்தும் ஒருதீவில்
யாண்டும் யாண்டும் செய் தீமை - தனை
யாவும் நீக்கும் வரம்வேண்டும்

சீண்டும் சீண்டும் சினம் மேவி- என்
சிந்தை கெட்டுச் சிதறாமல்
வேண்டும் வேண்டும் நின்பாதம் - தலை
வைத்தே தூங்கும் மகிழ்வோடும்

டாண்டும் டாண்டும் எனவோடிப் - பெரும்
அண்டம் பாய்ந்து சுழல்கோள் கொள்
நீண்டும் பெருத்த உயர்வானின் - பொருள்
நீயே என்னுள் வரவேண்டும்

**********************

ஆற்றாமை (தலைவி)



உள்ளம் கலங்குதடி தோழி - மன
ஓசை அழிந்த திந்த நாழி
கள்ளம் ஏதறியேன் மோதல் - தனைக்
காலம் வளர்த்தடி கேள்நீ
வெள்ளம் வரும்பொழுதுமேனோ - அதன்
வேகம் புரியவில்லைத் தோழி
அள்ளும் போதுமதை யறியேன் -விதி
ஆழிகலந்திடவே தெளிந்தேன்


துள்ளும் இளமையடி குற்றம் - என்னை
தேடு துணை எனவே பற்றும்
எள்ளிநகைப்பதென்ன இன்று - அதன்
எண்ணம் அறிவளில்லை என்றும்
கிள்ளிச் சிவக்கும் இருகன்னம் - அதில்
கொட்டும் துளிகள் இதழ்கொள்ளும்
மெல்லச் சுவைக்குதடி உவர்ப்பு - இனி
மேலோ எனதுநிலை தவிப்பு

தள்ளும் நினைவுகளும் சென்றே - எனைத்
தனிமை நிலையில் விடவேண்டும்
வெள்ளி முளைக்கு வரைவிடடி - கதிர்
வேகமெடுத்து வரும் உதயம்
புள்ளின்இனங்க ளெழுமோசை - இளம்
பூக்கள் மலரும் அதிலோடி
கள்ளைச் சுவைக்கும் கருவண்டு - இவை
காணச் சகிக்கவில்லை தோழி

எள்ளி நகைப் பதுண்டோ தோழி - என
தெண்ணம் விளைத்த செயல் மீறி
கொள்ளியெனச் சுடுதே தோழி - இந்தக்
குற்றம் எதுவிலகுக்கும் சொல்நீ
பள்ளிச் சிறுமியென ஆனேன் - வெறும்
பாதி மெலிந்து உடல்நொந்தேன்
அள்ளிகொடுப்பரென வந்தால் - அவர்
அன்பைத் தெரியவில்லைத் தோழி

கள்ளிச் செடியிருக்கு தோழி - அதை
காலம் அளித்த கொடை போநீ
நள்ளி ராவில் வரும் தென்றல் - ஒரு
நஞ்சாய் மனதிழைந்து ஓடி
உள்ளம் அழித்ததடி தோழி - இந்த
உலகில் இருப்பின் இவள்பாவி
வள்ளம் திசை திரும்பி ஓடின் - அதன்
வாழ்வும் நிலைப்பதுண்டோ பார்நீ

*********

எங்கே சுதந்திரம்?


காலை புலர்ந்திடக் காட்சி  விரியுது
காணும் புவியொளி ஞானப்பெண்ணே
ஞால முழுதிலும் நன்மை பரந்தின்ப
நாளும் விடியுமோ சொல்லுபெண்ணே
கோலஞ் சிவந்திடக் கீழ்த்திசை வானிடை
கூடிப் பறந்திடும் புள்ளி னங்கள்
கால காலமெனக் கொள்ளும் சுதந்திரம்
கையில் கிடைக்குமோ சின்னப்பெண்ணே

ஆலமர நிழல் ஆடிவருந் தென்றல்
அல்லிசெந் தாமரை நீர்க்குளத்தின்
சீலமொடு மேவு சிற்றலை நீர், கயல்
சேரடிவானத்து வெண்முகில்கள்
நீலவானவெளி நீந்திடும் போததில்
நித்திய இன்ப சுதந்திரத்தை
சாலச் சிறந்துடன் கொள்வது போற்றமிழ்
சற்றும் கொள்ளாதேனோ ஞானப்பெண்ணே

கோலமும் தீயவர் கொள்கை பரந்தது
கூறடி ஏனிது செல்லபெண்ணே
தூலமென்றே துயர் தூரப் பறந்திடத்
தோன்றும் விடிவெங்கே கூறுபெண்ணே
ஆலமென் றாகிய வாழ்வு சிறக்குமோ
அச்சமின்றி உயிர் சின்னபெண்ணே
மூலவிதி கெட்டு வாழும்நிலையற்று
முன்னே சுதந்திரம் கொள்வதெப்போ

வாசலில் வஞ்சகம்வந்து இருப்பதோ
வாழ்வின் கனவுகள் நீரெழுத்தோ
மோசமென்றே நிலை முற்றும் எழுந்தது
மூடு கதவினைச் செல்லபெண்ணே
தேசம் இருளுறத் தெய்வம் மறந்தது                                                                           
தேவையென் னாவது  கூறுபெண்ணே
வாச மெழுமன அன்பினை காவவும்
வீசுந்தென்றல் வரவேண்டும் பெண்ணே

காகங் கரையுது சேதி வருகுது
காணத் திடமெடு சின்னப் பெண்ணே
மேகம் குவிந்திட மின்னலிடியெழும்
மேனி நடுங்கிட ஆக்கும்பெண்ணே
பூகம்பமா யுந்தன் வாழ்வு பொழிந்திடும்
தீமழை காணவும் நெஞ்சு நொந்தே
தேசம் நினைந்துள்ளம் தீயின் விரலிட்ட
தாகப் படும்பாடு சொல்லுபெண்ணே

பூவிதழ் காணவும் பொன்னெனும் காலையில்
‘புத்துணர் வாகிடும் நாள்மலர்ந்தே
நாவில் சுதந்திர கீதமிசைத்திட
நாட்டில் குழுமிய மாந்த ரூடே
கோவில் தெய்வமெழக் கொண்டகுடிமனை
கூடித் திரண்டவர் அச்சம்விட்டே
தாவிக் குழந்தைகள் சத்தமிட அன்புத்
தாய்நில பூமடி கொள்வதெப்போ?

***********

புகழ்

உளமலர் விரிந்தொளி பெறுகுது பெறுகுது
உவமையும் எதுவில்லையே
தளம்பிடுங் குளஅலை தவித்திடு மழகுடன்
திகழ்வது மனவுணர்வே
மளமள வெனவரு மழையெனும் புகழ்மொழி
மகிழ்வினைத் தரசுகமே
விழவிழ மலர்களில்  வழிநெடு நடையிடும்
விதமெனச் சிலிர்த்திடுமே

குளஅலை களில்முகம் தெரிந்திடும் வகைமனம்
குதித்திடும் புகழ்ச்சியிலே
நிழலது முகில்வர நிலமிடை அழிந்திடும்
நிலை யெனப் புகழ் கெடுமே
இளமன திடை வரும் நினவுகள் பலஎழும்
இவையெது கனவுகளோ
அழவென வருவது தொகைதொகை மகிழ்வென
அடைவது சிறிதல்லவோ

புகழ் தரும்  உணர்வுகள்  பெரிதுவ கையுமெழ
புரிவது புதுச் சுகமே  
நிகழ்வது சரியெனில் நெறியெழும் புகழ்பெரு
நெருப்பென எழும் மகிழ்வே
பகலவன் ஒளியென பரவிடும் இருள்மறை
பனிவிடும் புல்லெனவே
அகமிடை -இருளற அதியுயர் தகவுற
அடைவது பெருமகிழ்வே

மழைதரு முகிலென மனமதில் கனமெழ
மதுவென இனித்திடிலும்
உளதினி மையில்பொலி வுறமதி யுதவிட
உருவெடு திறன் பெரிதே
துளையிடு குழலிடை  நுழைவளி இசைஇடும்
நிகரெனும்  இன்னிசையோ
வளர்ம்தி முகமதில் வரும்மகிழ் வுறப்புகழ்
தனையெடு மருந்தெனவே

****************

Monday, January 7, 2013

மரணம் கொடியதா?

காணப் பிறந்திட்டோம்
.  கானகத்தை கடல்நீரைக்
.  கடுமழையும் கண்டுணர்ந்தோம்
பேணச் சிறந்தவராய்
.  பிள்ளையென நாள்வளர்ந்து
.  பேதமை கொண்டுலகிணைந்தோம்
பூணப் பொன்னணிகலனும்
. புத்தாடை ரத்தினங்கள்
. புதுவாசம் தரும் மலர்கள்
வீணென் றுடுத்தியதில்
. விளைவென்ன கண்டோமோர்
. விதிவந்து கொள்ளப் போமாம்

வாழப் பிறந்தழுதோம்
.  வாழ்ந்தழுதோம் வாழ்விழந்து
.  வீழமுன் கூடியழுதோம்
ஆழக் கொடும்வாழ்வில்
. ஆசைகொண்டு மன்பிற்காய்
. ஆறாது ஏங்கியழுதோம்
கூழைக் குடித்தழுதோம்
. கோலப் பொற்கிண்ணத்தில்
.  கொண்டமது வுண்டு அழுதோம்
நாளில் நேற்றழுதோம்
. இன்றழுதோம் நாளையினி
. நாம் படுக்க யார் அழுவார்காண்

எய்த உடல் எமதல்ல
.  இருக்குமுயிர் காற்றாகும்
.  எல்லாமே இரவல்வாங்கி
பொய்யில் உடல்போர்த்து
.  பூவும் துகில்கொண்டு
.  புனல்சொரியும் துளைமறைத்து
தெய்யத்தோ மென்றாடி
.  திக்கெட்டும் தொலையோடித்
.  திரிந்திடத் தெய்வமிடையில்
பொய்யைக் கொள் மெய்யைத்தா
. பூவுலகே என்றிடவும்
. மெய்வீழப் பொய்விட்டோடும்

செயல்போகச் சிந்தைகெடச்
.  சுடுமுடலும் எமதல்ல
.  சொந்தமே யல்ல அல்ல
வியப்பேநா மென்றாலென்
.  விழிகண்டு மொழிபேசி
.  விளைந்த உணர்வொன்றே நாமும்
பயத்தோடு இச்சை,சுகம்
.  பசி நாணம். பெருங்கோபம்
.  பட்டதுயர் இவையே மிச்சம்
மயக்கமிடுங் கனவுணர்வும்
.  மழைவானின் வில்லாகி
.  மறைய நிஜம் சூனியமன்றோ!

Friday, January 4, 2013

புத்தாண்டே புரிவாயா?


கடுமன மிடையெழு கருணையி னொளி
  குறைவுறக் கயமையில் கரமெடு பழி
விடுநின துயிரெனத் தரைவிழப் பொறி
  விளைவுறச் செயுமனம் விரைந்துநீ ஒழி
படுநிலமிடை எனப் பறித்துயிர் வெளி
   பறமுகி லொடுஎனப் புரிபவர் இனி
தடுநில மிடைமலர் தரணியில் ஒளி
   தகைமிகு வழமுற வருடமே அளி

விடமுள அரவமென் றுருபெறச் சிலர்
  விடுதலை எனிலெது விரைதுடி யுடல்
படவலி யுறச்சிதை பிரியதை யழி
  கடதுன துலகமும் கரம்விடு தனி
நடயினி விடுதலை நரகமே வழி
  நவஉல கமுமெம துமைநமன் வழி
இடமது பெறவிடின் இலகெனும் வழி
 எனுங் கயவரைஒழி அவரொழி ஒழி

”தரு”வதும் நிலைகொள்ள இடமுள்ள புவி
  தமிழெனில் இலையிடம் தவறிடு அழி
எருவெனப் புதையிடு வெனக்கொளும் வெறி
  இதமென உலவிடும் இவர்மன மழி
கருவொடு தறிதமிழ் கருகிடு மினி
  கடமையு முனதென சொலுமொரு விதி
மருகிட புதுவழி புதிதெனும் ஒளி
  மறுபடி உயிர்கொள்ள` வருடமே அளி

இருபதி னருகினி லிதனரை வர
  இழைந்திடு சிவனவர் விழிதொகை சக
தருவிடை வருடமும் தணல்பிரி வெடி 
  தெருவினில் பெரிதெனும் படபட ஒலி
இருளுற இரவெனில் பன்னிரண்டு மணி
   இதனிடை வரும்புது வருடமு மினி
தருமமும் தழைவுறத் தமிழ் பெரும் ஒளி
  தருமெழில் விழுமியம் பெறவழி புரி

**************