Friday, November 19, 2010

உதிர வைத்த மலர்களின் வேதனை!

காலை மலர்ந்திடும் பூவை மணந்தொரு
காற்றுஎழுந் தோடிப்போகும்
நீல வானவெளி நீந்துமொளிச்சிறு
தாரகைகள் விடைகூறும்
வேல்விழி மாதரோ வாசலிருந்து கை
கொண்டவளையல்குலுங்க
கோல வண்ணமிட்ட தானஅழகைப்
பொறாமைவிழி கொண்டுநோக்கி

கீழத்திசைஅடி வானும் சிவந்திட்ட
ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப் போலேதோ
கீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத் திசையினில்
புள்ளியென்றோர் பட்சிக் கூட்டம்
நீலம் சிவந்தது எப்படி என்றுதான்
காணப் பறந்ததைக் கண்டேன்

காரிருள் கட்டியணைக்கப் புவிமகள்
வாழ்விருண்டு போனதென்று
பேரொளி வான்சுடர் பொல்லாச் சினமெடுத்
தே யொளி கொண்டதைத்தேட
வாரியடித் தெழுந்தோடி இருள்வாசல்
மூலைக் கதவடி சந்து
ஆலமரத்தடி சோலை நிழலெங்கும்
நாடி அடைக்கலம்கோர

மெல்லஒளி விரிந்தேகும் பொழுதினில்
உள்ளம் களித்திட நானும்
செல்லுமிடம் அறியாமல் பசும் புல்லில்
சின்ன நடை கொண்டு சென்றேன்
வெள்ளை மலர்களின் கூட்டம் பசுந்தரை
வீழும் பனித்துளி தூங்கி
துள்ளும் கயல்விழி மங்கையின் புன்னகை
போல எழில் தரக்கண்டேன்

மாடுகள் பூட்டிய வண்டி மெல்லஅசைந்
தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக் கிளைசேர்ந்து கொஞ்சிப்பேசிக்
கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம் அணைந்திடும்
காலைக்குளிர் காற்றின் முத்தம்
கூவிடும் சேவலும்பின்னே குரைத்தோடும்
நாயதும்கண்டு நடந்தேன்

ஆகப் புதுமைக ளேதுமற்றஒரு
காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்து மண்மீது அடிபதித்
தோடிநடந் திட்டபோது
மேகம்மறை நிலவாக ஒளிகுன்றிக்
காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்து குவிந்திட்ட
ஏதிலிகள்இல்லம்கண்டேன்

கண்களில் நீருடன்காய்ந்த முகங்களில்
வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும்
சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப்
பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம
தென்னென்றுகூறுவீ ரென்றேன்


2..பறித்துப் போட்ட மலர்கள்

தமிழினி பேரெனதென்றாள் - தமிழ்
வாணி என்றோர் குரல் பின்னால்
கயல்விழி என்றாள் ஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி குமரி
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்

பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகிய செல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம் நீட்டிக் கொள்ளும்
பழமின்சுவை கொண்டு வந்தேன் - இனி
பண்டமுண்டுஉண்ண என்றேன்

குழல்சீவிப் பின்னலுமிட்டு - விழி
கொண்டநீர் முட்டி வழிந்து
அழுத கன்னக்கள் துடைத்து -ஊடே
அங்கொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற எண்ணமுமில்லை
வளமான வாழ்வழிந்தோமே -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்

பேச்சின்றி நான் சிலையாக- அந்தப்
பேதையோ இன்னமும் சொன்னாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த -பல
பொன்போல் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - செத்தே
ஆடும் பிணமென்று ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் வேதனை என்றாள்


3. துயரின் கொடுமை...

நீர்த்திரை பாய்ந்து விழிவழிய சிறு
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீற அமைதியுடன் அங்கே
வார்த்தை கனல்கொள்ள வாயுரைத்தாள்
பார்த்தவர் போற்றும்நல் வாழ்வுதனும் ஒரு
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த எங்கள்
கோபுர வாழ்வு குலைந்த தய்யோ

அன்னைபோன தெங்கு நானறியேன் வாடும்
அன்புதந்தை சிறைக் கூடறியேன்
பின்னை பிறந்திட்ட தங்கையவள் எங்கும்
உள்ளனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே இன்று
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம் இந்தப்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை

வீதியில் கொல்ல ஒருவன் வந்தால் அங்கு
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை அதைக்
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலை நேருமென்று உண்மை
நெஞ்சம் அறிந்தும் பொறுப்பதுவோ
பாதி கழுத்தினை வெட்டும்வரை ஒரு
பாவமில்லையென்று பேசுவதோ

எத்தனைபேர் ஒன்றாய் கத்திநின்றோம்- மனம்
ஏங்கிக்கதறி அலறி நின்றோம்
செத்துஅழிந்து சிதறவிட்டு வெறும்
சிற்பமென சிலையாகி நின்றார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ அவர்
மௌனம்கொலை துணைஆனதன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு பல
ஒன்றாயிணைந்து அழித்ததன்றோ

கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
கீழேகிடந்து துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ ஒரு
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் எழுந்து வந்து எங்கள்
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ

ஏன் உலகெங்களின் கண்ணீரையும் பல
ஏழைகதறிய கூக்குரலும்
வானில் கரைந்து அழியவிட்டு அன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு புள்ளி
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ புவி
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்

கூறி அழுதிட்டு நின்றவளாம் - அவள்
கோலமதைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள் -சிறு
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா- நல்ல
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறித்திடம் மனம் கொள்ளுஇனி -அந்த
தெய்வம் இருக்குது கேட்குமென்றேன்

நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும் அந்த
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்திலும் நீதி நெறி அன்பு
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த முழு
நானிலமும் உள்ளமட்டிலொரு
பூமியல்லஇது வேறு ஒன்று, வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்

கூறிவிடை பெற்று நான்திரும்பி கனம்
கொண்ட மனதுடன் வீதிவந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம் பெரும்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி பெரும்
பீதியெழும் சுழல்காற்றின் சத்தம்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில் இவை
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்

No comments:

Post a Comment