Tuesday, October 19, 2010

உயிருக்கு விலை என்ன?

 
உயிருக்கு என்னவிலை முருகா - இந்த
 உலகத்தில் தமிழுக்கு விலையுண்டோ பொதுவா
தயிருக்கும் கீரைக்கும் விலையா -நம்
 தமிழ்சிந்தும் ஈழத்தின் உதிரத்துக் கில்லையா?
வயிரத்தின் திடம் கொண்ட தமிழன் - அவன்
 விலையற்று வெறுமைக்கு உயிர்விட்ட விதமா!
துயரத்தின் மடி தூங்க விதியா அவன்
 தோல் கொண்ட சதையென்ன இலவசப் பொருளா?

பயிருக்கு செடியுக்கும் நிலமாம்,- பற்றிப்
 படர்கின்ற கொடியுக்கும் இடமீந்த இறைவா!
பெயருக்கு தமிழ்மட்டு முயர்வாம் அது
 பிறந்திட்ட மண்ணிலே ஓரிடம் இல்லையா
கயிறுக்கு உயிர் கொள்ளும் எமனும் - ஓர்
 கணக்கின்றி உயிர்கொள்ள தரமற்ற பொருளா?
;`அயலுக்கு வாழ்கின்ற மொழிகள் - அவர்
 அனைவர்க்கும் பெருவாழ்வு அகதிக்கு நாமா?
`
வயிறுக்கு சோறற்ற வாழ்வா நாம்
 வழியற்று நிலமற்று திரியென்ற கேடா?
பெயருக்கு தமிழ் பென்னம் பெரிதா அதை
 பேசும்மெம் தமிழர்க்கு கதியற்ற நிலையா?
முயலுக்கும் ஒருவீடு இதமாய் -தமிழ்
 மூச்சுக்கு விரிகாடு வெறும்வெளி தானா?
செயலுக்கு என்னவோ முருகா - நாம்
 செய்ததோ பெரும்பாவம் தவறென்ன இறைவா!

புயலுக்கும் மழையுக்கும் நடுவே - மின்னும்
 பேரிடிக் காற்றுக்கும் தலைதந்த நிலையாய்
துயிலுக்கு ஓருவீடு இன்றி - அவன்
 துணிபோட்டு மரம்கீழே தூங்குதல் சரியா?
வயலுக்கும் பெருங்காணி தோட்டம் - சொந்த
 வாழ்வென் றிருந்தவர் வறுமைக்கு இரையா
 துயருக்கு முடிவேதும் இலையா நாம்
தூசாக தரம்கெட்டு அலைகின்ற விதியா ?

சுழல் பெரும் பந்தொன்று செய்தாய் - அதை
   சுற்றிடவைத்தேநீ உலகென்று தந்தாய்
 வளரென்று மானிடம்செய்தாய் - பல
    [வகையாக்கி அவர்பேச மொழீயீந்து நின்றாய்
பழம் பெரும்தமிழென்று சொன்னாய் -பெரும்
படை கொண்டு அசுரரை வென்றுதான் நின்றாய்
 அழகென்றே தமிழென்று பேசி தமிழ்
அளவற்ற வீரத்தின் அடையாளம்என்றாய்

நிலையின்று பாரடா முருகா உன்
  நீள்விழி பன்னிரண்டில்லையா இறைவா
சிலையென்று நின்றிடல் செய்யா - தெம்
 சிறுமைக்கு வரமீந்து செழித்திட உரம்தா
தலையிலே தமிழ்மீதுஏறிப் - பலர்
 தரணியில் சுகமாகச்செய் யும்சவாரி
நிலைமாறி நாமுயர வேண்டும் - அந்த
 நீசர் எம் அடிமீது தலைசாய்க்க வேண்டும்

No comments:

Post a Comment