மலரோடு மலர்மோதும் இதழ் நோவு பெறுமோ
மலர்கொண்ட இதழ்தன்னில் ஒருகாயம் வருமோ
அலர்கொள்ளு மிதழ்மென்மை அதுபோலு முள்ளம்
கலைவானில் எதிர்மோதும் களிப்பானதன்றோ
மதுவான தனையேந்தும் மலர்கொண்ட மென்மை
அதுபோல கலைதேர்ந்த உளம் கொண்ட தன்மை
எதுவாக இருந்தாலும் இவர்கொள்ளும்மேன்மை
அதுதானே தமிழ்என்னும் மொழி கொண்ட பெருமை
கவியென்ப தழகான கலைவண்ணப் பூக்கள்
புவிமீது எழுகின்ற பொழில்நீரின் அலைகள்
குவிந்தாடும் மலர்போலக் கொண்டேபல்வண்ணம்
அவிழ்ந்தோடும் அலையாக அழகாக வளரும்
இரும்பான தழல்சேர எழிலான தொன்றாய்
கரும்பான நெரிந்தாலே கனிபோன்ற இனிதாய்
வருமாதல் போலெம்மை வளமாக்கும் கவியாய்
உருவாக்கும் தமிழன்னை உளம்வாழ்த்துகின்றேன்
No comments:
Post a Comment